Sunday, January 12, 2014

ஆட்டையப் போடுறது!


( பலப்பேரு புக்கையே ஆட்டைய போட்டுறாங்க...அவ்வ்வ்!)


தற்போதெல்லாம் திரைப்படங்கள் வெளியான அன்றே அப்படத்தின் மூலம் எது என "மூலாதாரத்தில்" இருந்து தோண்டியெடுத்து வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள் வலைமகன்கள், இதெல்லாம் இணையமெனப்படும் வஸ்து பாமரனுக்கும் சல்லீசாக கிடைக்க ஆரம்பித்ததன் விளைவாகும். இதனால் பல போலி அறிவுசீவிகளுக்கு தான் பெருமிழப்பு எனலாம்.

இது போன்ற ஆட்டைய போடும் சமாச்சாரங்கள் எல்லாம் தற்கால கண்டுப்பிடிப்பல்ல, தமிழ்ச்சூழலுக்கு திரைப்படமென  ஒரு சமாச்சாரம் அறிமுகம் ஆனக்காலந்தொட்டே "ஆட்டைய போடும் கலாச்சாரம்" துவங்கிவிட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது,பல அயல்நாட்டுபடங்களை அப்படியே தமிழாக்கம் செய்து புத்தம் புதியபடமாக எடுப்பது,ஆங்கில நாவல்களை சுட்டு எடுப்பது என்று ஆரம்பித்தார்கள் அப்படியே கொஞ்சம் முன்னேறி தமிழில் வெளியான படைப்புகளையும் பதம் பார்த்துள்ளார்கள், சில சமயமங்களில் எழுத்தாளரை அழைத்து "ஸ்டோரி டிஸ்கஷன்" செய்து கதைய உருவிட்டு அனுப்பவும் செய்துள்ளார்கள், ஹி...ஹி பெரியவா  செய்தால் பெருமாள் செய்தாப்போலனு இக்கால டயரடக்கர்களும் அதே வழியை இன்னும் பின்ப்பற்றுகிறார்கள் என்பது தான் வேதனையான வேடிக்கை!!!

தமிழ்திரையுலகில் இப்படி உருவியெடுக்கும்(நோ டபுள்மீனிங்க்) வேலையை முதன் முதலில் கி.பி 1936 இல் தான் ஆரம்பித்தார்கள் என சொல்கிறார்கள், அப்போதைய புகழ்மிகு தமிழியக்குனரான அமெரிக்க ரிடர்ன் இயக்குனர் எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு திரைப்படம்மெடுப்பதற்காக கதை வேண்டுமெனகேட்டதால் , தயாரிப்புதரப்பு ,சிட்டி.சுந்தரராஜன் என்ற எழுத்தாளரை அழைத்து பேசியது,எழுத்தாளரும் அதுவரை வெளியாகாத புதிய கதை ஒன்றினை "பத்மா சாகசம்" எனப்பெயரிட்டு எழுதியளித்துள்ளார்.

கதைக்கு என சன்மானம் எதுவும் அளிக்கவில்லை,படம் தயாரிக்கும்போது கொடுப்பார்களாயிருக்கும் ,இப்போ தானே "டிஸ்கஷனே" நடக்குது அதுக்குள்ள "பணம் பற்றி"வாயத்தொறந்தால் வாய்ப்பளிக்காமல் போயிட்டால் என்ன செய்வது என எழுத்தாளரும் அப்போதைக்கு எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.

ஆனால் சிலநாட்களுக்கு பிறகு எழுத்தாளருக்கு தெரிவிக்கப்படாமலும் ,சன்மானம் அளிக்காமலும் படத்தயாரிப்பினை துவக்கிவிட்டார்கள்,இதனை தினமணியில் ஆசிரியர்/எழுதிக்கொண்டிருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் என்ற நண்பர் மூலம் அறிந்த, சிட்டி.சுந்தரராஜன் தனது படைப்பினை ஆட்டைய போட்டார்கள் என நிருபிக்க வழியில்லை என்பதால் மாற்று வழியாக அவரது கதையை தினமணியில் "பத்மா சாகசம்" என்ற தொடர்கதையாக வெளியிட செய்துவிட்டார்,திரைப்படம் வெளியாகும் முன்னரே கதை அச்சு ஊடகத்தில் வெளியானதால் "கதைக்கான" காப்புரிமை தானாகவே எழுத்தாளருக்கு வந்துவிடும்,எனவே சன்மானம் அளிக்காமல் ஏமாற்ற முடியாது.  ஆனால் பத்திரிக்கையில் வெளியான கதைக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பில்லாமல் போயிற்று,அதே வேளையில் வேறு சில காரணங்களால் படமும் பாதியிலேயே நின்றுப்போனது,இவ்வாறாக 1936 இல் முதல் ஆட்டையப்போடும் வேலை பாதியிலேயே தோல்வியடைந்துள்ளது அவ்வ்!

ஆனால் இக்கால திரைப்படைப்பாளிகள் "தொழில்முறை நேர்த்தியுடன்" ஆட்டையப்போடுவதில் விற்பன்னர்கள், எனவே வெற்றிகரமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இதில் வேறு "என்னைப்போல யாருக்கு படமெடுக்க தெரியும்" என்றவெட்டி பந்தாவுக்கும் குறைச்சலில்லை, இவனுங்களுக்கு மட்டும் வாயில்லைனா நாய் கவ்விட்டு போயிடும் :-))

தற்போதெல்லாம் ஒருவர் எழுதிய கதையை வெளியிடாமலே காப்புரிமை பெறலாம், அப்படி செய்ய மெனக்கெட முடியாது எனில் ஏதேனும் ஒரு ஊடகத்தில் வெளியானாலே காப்புரிமையின் கீழ் வந்துவிடும் ,ஏதேனும் ஒரு ஊடகம் என்பதில் "வலைப்பதிவுகளும்" அடக்கம்,எனவே வலைப்பதிவில் எழுதியதையும் அனுமதியில்லாமல் எடுத்தாள முடியாது- கூடாது,ஆனால் வலைப்பதிவர்கள் பலரே ஆட்டை மன்னர்கள் என்பது தான் மாபெரும் சோகம் அவ்வ்!

இந்த காப்புரிமை சட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஓட்டை என்னவெனில் "உள்ளடக்கத்திற்கு" மட்டுமே கற்பனை உழைப்பின் அளவுகோளின் படி காப்புரிமை உண்டாம், படைப்பின் தலைப்புக்கு காப்புரிமை இல்லை!!!

 ஒரு புகழ்ப்பெற்ற எழுத்தாளர் எழுதிய கதையினை  ஆட்டையப்போட்டால் தான் காப்புரிமையின் கீழ் வழக்கு போடலாம்,அக்கதையின் தலைப்பினை சுட்டு திரைப்படமாக எடுத்தால் காப்புரிமை கோரமுடியாது.

pkp.pic.
Image and video hosting by TinyPic

உதாரணமாக பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற ஒரு எழுத்தாளர் "தொட்டால் தொடரும்" என்றப்பெயரில் ஒரு கதை எழுதியிருக்காருனு வச்சுப்போம், "தொட்டால் தொடரும்" நாவல் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சு என்பதால் அதற்கு காப்புரிமை இயல்பாகவே இருக்கு எனவே அக்கதைய ஆட்டைய போட்டால் வழக்கு தொடரலாம்,அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் பெருசா இழப்பீடுலாம் கிடைச்சிடாது என்பது தான் நம்ம நாட்டின் நிலை, இதற்கும் எடுத்துக்காட்டாக ஒரு உண்மை வழக்கும் இருக்கு, என்.ஆர். தாசன் என்ற எழுத்தாளர் எழுதி தீபம் இதழில் வெளியான "வெறும் மண்" என்ற நாடகத்தின் மறுபிரதியாகவே அக்காலத்தில்வெற்றிகரமாக ஓடிய கே.பாலச்சந்தரின் "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் இருந்தது,எனவே திரைப்படத்தின் மூலக்கதை  உரிமையாளரான என்.ஆர்.தாசன் ,இயக்குனர் பாலச்சந்தர் மீது கதை உரிமைக்காக வழக்கு தொடர்ந்ததில் ,10 ஆண்டுகள் இழத்தடிப்புக்கு பின் ,கதை திருட்டு நடைப்பெற்றதை  நீதி மன்றம் உறுதி செய்து வெறும் 1,000 ரூ தான் கே.பாலச்சந்தருக்கு அபராதம் விதித்ததாம் அவ்வ்!

கதைய ஆட்டைய போட்டதற்கு வழக்கு தொடர்ந்தால் பெயரளவிலாவது இழப்பீடு கிடைக்கும்,ஆனால் தலைப்பினை ஆட்டைய போட்டால் ஒன்னியும் பண்ணமுடியாது என்பதால் சர்வசாதாரணமாக பலரும் தலைப்புகளை சுட்டு கொண்டுதானிருக்கிறார்கள், அதாவது "தொட்டால் தொடரும்" என நாவலின் தலைப்பினை மட்டும் ஆட்டைய போட்டால் காப்புரிமை சட்டத்தின் படி வழக்கெல்லாம் போடமுடியாது! காப்புரிமை சட்டம் இம்புட்டு சோப்ளாங்கியாக இருந்தால் நம்ம படைப்பின் தலைப்பு நமக்கு சொந்தமில்லையா? அப்ப என்னதான் செய்ய என சிண்டை பிச்சுக்கிறிங்களா? ஹி...ஹி யாமிருக்க பயமேன்! அதற்கும் ஒரு வழி சொல்கிறேன்,

காப்புரிமை சட்டத்தின் படி "ஒரு புத்தகத்தின் தலைப்புக்கு" தான் காப்புரிமை கோரமுடியாது ஆனால் இரண்டுப்புத்தகத்தின் தலைப்புக்கு காப்புரிமை கோரமுடியும், அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக ஒரே தலைப்பில் வெளியாகும் புத்தகத்தொடர்களின் தலைப்புகளுக்கு "காப்புரிமை" செல்லும்!

ஹாரிப்பாட்டர் என்றப்பெயரில் தொடராக புத்தகங்கள் வெளியானதால் அப்பெயரை வேறு யாரும் பயன்ப்படுத்த முடியாது,மேலும் டிரேட்மார்க் ஆகவும் பதிவு செய்துள்ளார்கள். இந்தியில் ஹரிபுத்தர் என ஒரு திரைப்படத்தினை எடுக்க இருந்தார்கள், ஒரிஜினல் ஹாரிப்பாட்டர் தயாரிப்பாளர்கள் ,எங்க படம் டைட்டில் போலவே இருக்குனு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வந்தன,அப்புறம் படமே உருவாகாமல் ஏனோ நின்னுப்போச்சு.

எனவே இழப்பீடு கிடைக்குதோ இல்லையோ ,ஒருவரின் படைப்பின் தலைப்புக்கும் காப்புரிமை கிடைக்க வேண்டும் எனில் "பாகங்களாக" புத்தகங்களை வெளியிட்டாலே போதுமானது,ஏற்கனவே வெளியான தொட்டால் தொடரும் நாவல் போன்றவற்றிற்கு கூட இரண்டாம் பாகம் வெளியிட்டால் தலைப்பின் மீது காப்புரிமை கிடைத்துவிடும் ,எனவே பழைய படைப்பின் தலைப்பு போயிடுமோ என்றெல்லாம் யாரும் அச்சப்படத்தேவையில்லை.

இதே போல இன்னொரு வகையிலும் தலைப்புக்கு காப்புரிமை பெறலாம், தலைப்பினை வணிக முத்திரையாக/சின்னமாக (டிரேட் மார்க்) பதிவு செய்துக்கொள்வது.இதனை மேல் நாட்டில் சகஜமாக செய்கிறார்கள், ஸ்பைடர்மேன், பேட் மேன்,சூப்பர்மேன் ஆகிய பெயர்கள்,உடை,லோகோ எல்லாமே "டிரேட்மார்க்" ஆக  மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டவை. படத்தின் டைட்டில் ஓடும் போது இதற்கான அறிவிப்பினை போடுவதை பலர் கண்டிருக்க கூடும்.

# ஆட்டைக்கு மரியாதை!

இது போன்ற ஆட்டையப்போடும் வேலைகளை சின்னவர்,பெரியவர் வித்தியாசமில்லாமல் கலையுலகில் பலரும் செய்துக்கொண்டு தானுள்ளார்கள்,ஆனால் பல சம்பவங்கள் அதிகம் அறியப்படாமலே போய்விடுகிறது, அப்படியான இரு சம்பவங்கள் அதுவும் ஒரே படைப்பாளிக்கு நேர்ந்திருக்கிறது என்றால் நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என அனிச்சையாக சந்தேகப்ப்படவே தோன்றுகிறது!

திருப்பூரை சேர்ந்த சுப்ரபாரதி மணியன்(ஆர்.பி.சுப்பிரமணியன்) என்ற எழுத்தாளர் சாகித்ய அகதமி விருது உட்பட பலவிருதுகளை வென்றவர் ஆவார்.சுமார் 25ஆண்டுகளுக்கு முன்னர் தீபம் இதழில் வெளியான அவரின் "கவுண்டர் கிளப்" என்ற குறுநாவலின் அடிப்படையிலே பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "முதல்மரியாதை" திரைப்படம் இருப்பதாக கருதிய எழுத்தாளர் ,வழக்கறிஞர் நோட்டீசை இயக்குனர் பாரதிராஜாவுக்கு அனுப்பினாராம், இரு முறை நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டதாம்,மூன்றாவது முறை சுப்ரபாரதிமணியன் என்பவருக்காக ஏன் ஆர்.பி.சுப்ரமணியன் ஆகிய நீங்கள் வழக்கு போடவேண்டும், உங்களுக்கும் அக்கதைக்கும் என்ன சம்பந்தம் என பதில் நோட்டீசு வந்துச்சாம் அவ்வ்!

அப்பொழுது தான் "அபூர்வ ராகங்கள்" படவிவகாரத்தில் அனுபவப்பட்ட எழுத்தாளர் "என்.ஆர்.தாசனை" சந்தித்துள்ளார் சுப்ரபாரதி மணியன், வழக்கு தொடர்ந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் வாய்தாவிலே ஓடும் அப்படியும் விடாமல் வழக்கு நடத்தினால் ஆயிரம் ரூவாத்தான் இழப்பீடு என சொன்னதும், வழக்கவே வேண்டாம்டா சாமினு கை கழுவிட்டாராம்!

# காஞ்சீவரப்"பட்டு".

ஒரு முறை அறியாமல் சிக்கிய எழுத்தாளர் அதோடு சும்மா இல்லை பின்னர் இன்னொரு முறை தெரிந்தே ஒரு சினிமாக்காரருக்கு கதை எழுதிக்கொடுத்துட்டு ஏமாந்திருக்கார், அதோடு இல்லாமல் மூன்றாவதாகவும் ஒரு கதைய இன்னொரு இயக்குனரிடம் கொடுத்திருக்காராம் அவ்வ்.

ஒரு முறை அவரை சந்திக்க வந்த ஒரு புகழ்ப்பெற்ற "ஒளிஓவிய" ஒளிப்பதிவாளர் ,எழுத்தாளரின் "சாயத்திரை" என்ற  நாவல் நன்றாக உள்ளதாகவும் அதனை அவரே திரைப்படமாக்க விரும்புவதாகவும் சொல்லவே , ஒளி ஓவியருடன் சென்னைக்கு சென்று "சாயத்திரைக்கு" திரைக்கதை அமைக்க முயன்றுள்ளார், இறுதியில் சாயத்திரைக்கதை சினிமாவுக்கு ஏற்ப எளிதாக இல்லை,வேற கதை சொல்லுங்க எனகேட்கவும் இன்னொரு புதிய கதையினை "பட்டு" என்ற பெயரில் முழுமையாக திரைக்கதையாக்கி அளித்துள்ளார், கதை பிரமாதம் படமாக்கிடலாம் என ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியவர் ,பின்னர் அப்படியே விட்டுவிட்டு வேறுசில படங்களில் பிசியாகிவிட்டாராம், சில ஆண்டுகளுக்கு பின்னர் எழுத்தாளர் "காஞ்சிவரம்" என்ற தேசிய விருது வென்ற படத்தினை பார்த்திருக்கிறார், அப்படத்தின் கதை கிட்டத்தட்ட முன்னர் ஒளிஓவியரிடம் அளித்த "பட்டு" கதையாம், விசாரித்த போது ஓளி ஓவியர் பலரிடமும் "பட்டு" திரைக்கதையினை அளித்து படமாக்க உதவ கேட்டிருந்தாராம், அவர்களில் யாரோ "களவாடி" இருக்கலாம் என சொல்லிவிட்டார்களாம்!

மேற்படி இரு சம்பவங்கள் குறித்தும் சுப்ரபாரதி மணியன்,தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

சுட்டி:

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html


இப்படிலாம் ஆட்டைய போட்டால்  படைப்பாளிக்கு என்ன தான் மரியாதை அவனுக்கு படைப்பூக்கம் எப்படி வரும்னு "ரொம்ப நல்லவங்க" எல்லாம் வருத்தப்படக்கூடும், அவர்களுக்கு ஏதோ என்னால் ஆன ஒரு சின்ன ஆலோசனை என்னவெனில்,

# அச்சு ஊடகமோ அல்லது மின் ஊடகமோ ஏதோ ஒன்றில் வெளியாக செய்துவிட வேண்டும்,குறைந்த பட்சம் நமது படைப்பு என அடையாளங்காட்ட உதவும்.

#அதான் படைப்புகள் வெளியானால் தான் ஆட்டைய போடுறாங்களே எனவே வெளியிடாமலே காப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்குமொரு வழி இருக்கு,

ரெஜிஸ்ட்ரார் ஆப் காப்பிரைட்ஸ் என ஒருவர் இருக்கிறார்,அவர் தான் இந்திய அளவில் அனைத்து கற்பனை படைப்புகளுக்கும் காப்புரிமை வழங்கும் வேலையை செய்கிறார்,

அவருக்கு ஒரு விண்ணப்பத்துடன் கற்பனை படைப்பாக்கங்களின் வகைக்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட கட்டணத்தினை வரைவோலையாலையாக இணைத்து அதனுடன் நமது  படைப்பின் இரு பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும், நமது/தங்களது படைப்பு "சுத்தமான அக்மார்க் " சுய உருவாக்கமா என ஆய்வு செய்துவிட்டு ,மேற்கண்ட படைப்புக்கு காப்புரிமை அளிக்கப்பட இருக்கிறது என ஒரு அறிவிப்பும் வெளியிடுவார்கள்,30 நாட்களுக்குள் எதிர்ப்பு அல்லது மறுப்பு வரவில்லை எனில் விண்ணப்பித்தவருக்கு காப்புரிமை அளிக்கப்படும், ஒரு பிரதியினை மூடி முத்திரையிட்டு பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு ,இன்னொரு பிரதியில் "காபி ரைட் புரெக்டெட்" என முத்திரையிட்டு நமக்கு அனுப்பிவிடுவார்கள்,அதுவே நமக்கான ஆவணம் மேலும் முத்திரையிடப்பட்ட பிரதியை காட்டி "வணிக பேரங்கள்" பேசுவதும் எளிதானது மற்றும் பாதுகாப்பானதும் ஆகும்.

fee pic.

cp1


For fee detailes visit to,

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx


# என்ன வகையான "கற்பனை படைப்புகளுக்கு" காப்புரிமை கோரலாம்?

ஒலிப்பதிவு, ஒளி&ஒலி பதிவு, விரிவுரை காணொளிப்பதிவு, திரைப்படம்,ஓவியம்,சிற்பம்,எழுத்திலக்கியமென அனைத்திற்கும் காப்புரிமை கோரலாம்.

ஆனால் ஒரு வாக்கியம், சொற்றொடர், ஒரு எண்ணம்(ஐடியா), கண்டுப்பிடிப்பு போன்றவற்றிற்கு காப்புரிமை அலுவலத்தில் கோரமுடியாது, அவற்றினை பேடட்ண்ட் அலுவகலத்தில் அல்லது டிரேட் மார்க் அலுவலகத்தில் பதிவு செய்ய முயல வேண்டும்.

#ஒரு முறை காப்புரிமை செய்யப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு காப்புரிமை இருக்கும்,அதன் பின்னர் புதுப்பிக்க வேண்டும்.

#அதிக பட்சம் 75 ஆண்டுகள் வரையே காப்புரிமையினை ஒருவர் தக்க வைத்துக்கொள்ள முடியும்,அதன் பின்னர் காப்புரிமை தானாகவே நீங்கிவிடும்.

# உலக காப்புரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி , கி.பி 1923க்கு முன்னால் உருவான அனைத்து படைப்புகளுக்குமான காப்புரிமை நீக்கப்பட்டாயிற்று,எனவே அக்கால படைப்புகள் எல்லாம் "திற மூல படைப்புகள்" ஆகிவிட்டன.

எனவே தான் இன்டெர்நெட் ஆர்கைவ்ஸ், கூகிள் போன்றவை பல பழைய நூல்களை பிடிஎஃப் வடிவில் மென்னூல்களாக மாற்றி இலவசமாக அளிக்கின்றன.

#  படைப்பாளிஒருவர் நேரடியாகவோ அல்லது ஒரு பிரதிநிதி வழியாகவோ காப்புரிமையினை பெற விண்ணப்பிக்கலாம், தற்சமயம் இணைய தளம்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்,

மேலும் விவரங்களுக்கு,

http://copyright.gov.in

மேற்கண்ட தளத்தில் ,அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கமானகையேடு, மற்றும் காப்பி ரைட் சட்டம் மற்றும் திருத்தம் ஆகியன இலவசமாக தரவிறக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

கேட்பது உரிமை,கொடுப்பது கடமை!

ஹி...ஹி எதாவது பஞ்சு டயலாக் சொல்லி முடிச்சாத்தான் ஒரு ஃபினிஷிங்க்  டச் கிடைக்கும்னு ...அது...!
-----------------------------

பின்குறிப்பு:

# பொது மக்கள்,படைப்பாளிகள் மற்றும் சமூகத்தினர் நலங்கருதி விழிப்புணர்விற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

# பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் பிழை திருத்தம் செய்யப்படும் அதுகாறும் பிழைகளுக்கு பொருத்தருள்க!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://copyright.gov.in/frmFAQ.aspx

# http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_14.html

http://rpsubrabharathimanian.blogspot.in/2009/09/blog-post_1247.html

# http://madrasmusings.com/Vol%2021%20No%206/early-modern-tamil-novels.html

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------------------

21 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தங்களது தமிழ் புத்தாண்டு தொடர்பான கட்டுரையை எனது முக நூலில் மீள் பதிவு செய்திருக்கிறேன். நன்றி!
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!.
-தோழன் மபா.

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

செம மேட்டர்.

உதாரணம் சொல்றேன் பேர்வழியின்னு கேபிளாரை வேற பொறாண்டி வச்சிருக்கீங்க...

வவ்வால் said...

தோழர்.மாபா,

வாங்க,நன்றி!

நம்ம பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
----------------------

பிரபா,

வாரும்,நன்றி!

ஏதோ நம்மாலான தகவல் சேவைனு செய்கிறோம்,அதைப்போய் பொறாண்டியதாக சொன்னால் எப்பூடி, அடியேன் பயந்த சுபாவம்,பரமசாது "பல்க்"ஆ யாரையாவது பார்த்தாக்கூட பயந்துடுவேன் ஆமாம்!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமை வவ்வால்.

"இன்று போய் நாளை வா" என்கிற அருமையான படத்தை recent ஆ மறுபடியும் எடுத்து, comedy என்கிற பெயரில் கொலையா கொன்னாங்களே, இதுக்கெல்லாம் copyright செல்லாதா?
பாக்கியராஜ் பொலம்பி தள்ளினத youtube ல பார்த்தேன்.

Anonymous said...

Happy Pongal Vavvaal.

Unknown said...

என்ன காப்பி ரைட்டு டீ ரைட்டுனுகிட்டு...

கொஞ்சம் காசும் மூளையும் இருந்தால்.. எல்லா காப்பி ரைட்டையும் ஒன்னும் இல்லாம பண்ணீடுவாங்க...

அது சரி வவ்வால் அவர்களே...

அனுஷ்கா தம்மன்னானு லஷ்மி மேனன்னு பலர் வந்தும் இன்னம் .. ஆன்டி அசின் படத்தயே வெளியிடுறீங்களே?

அப்புரம் தேவியர் இல்லம் பக்கம் வருவது இல்லையா?

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

# ஒரு திரைப்படத்தின் காப்புரிமை இயல்பாக படத்தயாரிப்பாளருக்கு தான், குறிப்பாக எழுதி வாங்கவில்லை எனில் இயக்குனருக்கு உரிமை இல்லை!

# பாக்கியராஜ் இயக்குனர் மட்டுமே,அவரிடம் காப்புரிமை இருந்திருந்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டே "லட்டு"படத்தை முடக்கி இருக்கலாம், அந்தளவுக்கு ஒன்னும் விவரம் தெரியாதவரா பாக்கியராஜ், சும்மா தான் தானே இயக்குனர் என்னையும் கவனிக்க வேண்டாமா என பிரச்சினைய கிளப்பிவிடுறாரோ என்னமோ?

கஜினி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளருக்கு தெரிவித்து அனுமதி வாங்காமலே இந்தியில் இயக்கியதால், தயாரிப்பாளர் சேலம்.சந்திரசேகர் ,வழக்கு போட்டு இழப்பீடு வாங்கியுள்ளார்.

---------------------------

#வினோத் குமார்,

வாங்க,நன்றி!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

காசும்,மூளையும் யாருக்கு இருக்கோ அவங்களுக்கு சாதகமா சட்டத்தை "வளைக்க முடியும்" :-))

#என்னது ஆண்டியா ...இதெல்லாம் ரொம்ப ஓவரு, ஹி...ஹி மலபார் கிளிக்கு வயசானாலும் மனசை கொத்தும்யா :-))

# தொட்டாச்சிணுங்கி ரகத்தினரை எல்லாம் கண்டுக்கொள்வதில்லை, மூக்கால் அழுபவர்களிடம் எதுக்கு சவகாசம்னு அந்தப்பக்கமெல்லாம் போறதில்லை!

சிவானந்தம் said...

வவ்வால், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு பதிவும் ஏதாவது ஒரு வில்லங்க ஆராய்ச்சியா இருக்கே.. வித்தியாசமா இருக்கணும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். (தமிழ்ப் புத்தாண்டை சொல்லலை. ஆங்கிலப் புத்தாண்டைத்தான் கொஞ்சம் லேட்டா சொல்றேன். ). காப்பிரைட் மற்றும் பேட்டன்ட் பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சுவாரசியமாகவும் துணைத் தகவல்களுடனும் என்னால் எழுதி இருக்க முடியாது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வவ்வால்ஜி ஒரு சந்தேகம். Translaator gadget வச்சுருக்கீங்களே எதுக்கு?

Anonymous said...

ஏன்யா ஏன் ஏன் ஏன் ஏன் .... தொடாமலே தொடருவாயோ அவ் அவ்

aravi said...

Voval
Wish you happy pongal....
Expecting interesting article from you about current politics +alliance. I’m sure it will be interesting and informative.

aravi said...

Voval
Wish you happy pongal....
Expecting interesting article from you about current politics +alliance. I’m sure it will be interesting and informative.

வவ்வால் said...

சிவானந்தம்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி ரூம்ல உட்கார்ந்து தான் யோசிக்கிறேன் ஆனா அந்த ரூம் வேற ரூம் ஹி...ஹி பாத்ரூம்(அதான் கழிவறை அவ்வ்)

கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கணநேரத்தில் கபாலத்தில் உதிக்கும் சிந்தனைகளை கபால்னு புடிச்சு பதிவாக்கிடுறது தான்!!!

ஏதோ சும்மா வெட்டியா இருக்க நேரத்தில எதாவது பயனுள்ள(யாருக்கோ) வகையில செய்யலாம்னு பதிவுல கிறுக்கி வைக்கிறோம்,அதுக்கு போய் இப்படிலாம் இன்வெஸ்டிகேட் செய்றீங்களேஅவ்வ்!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

---------------------

முரளிஜி,

வாங்க,நன்றி!

//புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். (தமிழ்ப் புத்தாண்டை சொல்லலை. ஆங்கிலப் புத்தாண்டைத்தான் கொஞ்சம் லேட்டா சொல்றேன். ). //

ஹி...ஹி சரியான நேரம் தான், நீங்க சொன்னது தை-1 ,தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துதான்,ஏன் யாருக்கோ பயந்துக்கிட்டு,ஆங்கில புத்தாண்டுனு சொல்லுறிங்க,அதெல்லாம் பயப்படாதிங்க,அதான் நானிருக்கேன்ல,பார்த்துக்கிறேன்(உன்னைய நினைச்சா தான் அந்த பயமேனு மைண்ட் வாய்சில சொல்லுறது கேட்குது அவ்வ்)

# //காப்பிரைட் மற்றும் பேட்டன்ட் பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சுவாரசியமாகவும் துணைத் தகவல்களுடனும் என்னால் எழுதி இருக்க முடியாது//

நீங்களும் எழுதுங்க,உங்க பாணியில் இருக்கும், நான் சிலவற்றை சுருக்கனும்னு விட்டுடேன், இன்னும் நிறைய இருக்கு சொல்ல.

#//ஒரு சந்தேகம். Translaator gadget வச்சுருக்கீங்களே எதுக்கு? //

மொழிப்பெயர்க்க தான்!

ஹி...ஹி நாம ஒரு சர்வதேசப்பதிவரல்லோ, நெறைய வெளிநாட்டுக்காரங்களாம் படிக்கிறாங்க,அவங்க மொழிப்பெயர்த்து படிச்சுக்க தான் (ஆனால் கூகிள்மொழிப்பெயர்ப்புகொடூரமா இருக்கும்)

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

---------------------------------

அனானி ராசா,

வாரும்,நன்றி!

ஏன்யா இந்த கொலவெறி?

நாம பாட்டுக்கு ஏதோ "ஒரு ஓரமா சர்வதேச அளவில்" (தன்னடக்கம் எனக்கு அதிகம்...ஹி...ஹி!)எழுதிக்கிட்டு இருக்கோம்,அதை போய் உள்ளூர் கும்பலோட கோத்துவிட பார்க்கிறீர் அவ்வ்!

ஹி...ஹி நாமதொடராமலே தொடுவோம்ல!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

-------------------------------

அரவிந்தன் அரங்கநாதன்,

வாங்க,நன்றி!

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

அரசியல் நிலவரம் மற்றும் ஆம் ஆத்மியின் கலவரம் எல்லாம் அவதானித்து ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சு இருக்கேன், சீக்கிரம் பதிவிடுகிறேன்! இன்ட்ரெஸ்டிங்கா இருக்கானு நீங்க தான் சொல்லனும்.

பால கணேஷ் said...

டியர் வவ்வால்... என்னுடைய (சற்றே தாமதமான) மகிழ்வான புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கு! இநத காப்பிரைட் விஷயத்தில் வாத்யார் பாடின ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...’ என்ற வரிதான் எனக்கு ஞாபகம் வருது. ஆனாலும் காப்பிரைட் சட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் விளக்கிய விதம் சிறப்பு. மிகவே பயனுள்ளது. நான் சொல்ல விரும்பும் மூன்று விஷயங்கள்:
1. ‘கையாலாகாதவன்தான் அப்பன் பேரை கைத்தடியா உபயோகிப்பான்’ அப்படின்னு கமலோட ‘குரு’ படத்துல ஒரு டைலாக் வரும். அதுமாதிரி... சொந்தமா எதையும் உருவாக்கத் துப்பில்லாதவன்தான் ‘சுடு’வான். அந்த மாதிரி ஆசாமிகளுக்காக அனுதாபம்தான் படணும்!
2. இணையத்திலேயே பல ‘சுடுதல்’ மன்னர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் இணையத்தில் எழுதும் நாம் நிச்சயம் வருந்தியேயாக வேண்டும்.
3. பட்டுக்கோட்டை பிரபாகர் தலைப்பு வைப்பதில் வல்லவர். கொலை கொலையாம் முந்திரிக்கா, வல்லமை தாராயோ, தொட்டால் தொடரும் என அவரின் பல அழகான தலைப்புகள் திரைத்துறையினரால் சுடப்பட்டிருக்கின்றன. பி.கே.பி. மட்டுமல்ல, கேபிளாரும் என் நட்பு வட்டத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக வாதிட விரும்பவில்லை. ஆயினும் இந்த ‘சுடுதல்’ என்பது எனக்கு எப்போதும் வருத்தத்தை அளிக்கும் விஷயம்தான்.

வவ்வால் said...

அன்பின் "பால கணேஷர்",

வாங்க,நன்றி!

தங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள், எப்ப சொன்னாலும் வாழ்த்து என்பது வாழ்த்தே ஆகும்!

# திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது வாஸ்தவமே,ஆனால் திருடர்கள் திருடினோமா பொழப்பை பார்த்தமானு போயிடனும்,அதைவிட்டுப்புட்டு லோகாதாய வாழ்வியல் அறங்களை பற்றி உபதேசம் செய்ய கிளம்பும் போது தான் "அடங்கொய்யாலேனு " விமர்சிக்க தோனுது :-))

# // ‘கையாலாகாதவன்தான் அப்பன் பேரை கைத்தடியா உபயோகிப்பான்’ அப்படின்னு கமலோட ‘குரு’ படத்துல ஒரு டைலாக் வரும். அதுமாதிரி... சொந்தமா எதையும் உருவாக்கத் துப்பில்லாதவன்தான் ‘சுடு’வான். அந்த மாதிரி ஆசாமிகளுக்காக அனுதாபம்தான் படணும்!//

இதுக்கு மேல எதுவும் பேசவே முடியாது :-))

# //இணையத்திலேயே பல ‘சுடுதல்’ மன்னர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் இணையத்தில் எழுதும் நாம் நிச்சயம் வருந்தியேயாக வேண்டும்.//

வருந்தும் நிலை ஏற்பட்டது கவலைக்கிடமான சூழலாகும்,மாற்றம் வரும் என எதிர்ப்பார்ப்போம்.

#//பட்டுக்கோட்டை பிரபாகர் தலைப்பு வைப்பதில் வல்லவர். கொலை கொலையாம் முந்திரிக்கா, வல்லமை தாராயோ, தொட்டால் தொடரும் என அவரின் பல அழகான தலைப்புகள் திரைத்துறையினரால் சுடப்பட்டிருக்கின்றன.//

குறைந்த பட்சம் தார்மீக ரீதியாக டைட்டில் கிரடிட்டில் நன்றியாவது தெரிவிக்கலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கணேஷ் சார்! வல்லமை தாராயோ பாரதியார் பாட்டு வரி ஆச்சே!
"தொட்டுவிட தொட்டுவிடத் தொடரும்" தான் சற்று மாறி தொட்டால் தொடரும் ஆகி விட்டதோ?

வவ்வால் said...

முரளி,

பால கணேஷரை மடக்கிடனும் முடிவோட இருக்கீங்களா அவ்வ்!

அதப்பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல,எனவே நானே ஆஜர் ஆகிடுறேன்,

வல்லமை தாராயோ என்பது பாரதியார் பாடலில் இடையில் வரும் சொல்லே, இப்படிப்பல பாடல்களின் இடையில் வரும் வரி,பல்லவினு எடுத்து தலைப்பா வச்சிருக்காங்க.

பாடலின் ,கவிதையின் தலைப்பா அல்லது நூலின் தலைப்பாக இருக்கும் போது தான் அதிகப்பட்ச அடையாளம் உருவாகும்.

கொலை கொலையா முந்திரிக்கா என்பது கூட சிறுவர் பாடலின் வரி தான்.

#அவள் வருவாளா - நேருக்கு நேர் படப்பாடல் "அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா" பாடலிலிருந்து,

#நேருக்கு நேர்- நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் பாட்டில இருந்து...

# ஜில்லா - ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதய நீயும் கேட்டியா பாட்டில இருந்து

# என் ராசாவின் மனசில - என் ராசாவின் மனசில இந்த ராசாத்தி நெனப்பு தான் பாட்டில இருந்து,

# அம்மன் கோயில் கிழக்காலே - அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே தூக்கணாங்குருவியெல்லாம் கூவுதடி -சகலகல வல்லவன் படப்பாட்டில இருந்து.

# கண்ணெதிரே தோன்றினாள் - கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள் பாட்டில இருந்து.

# தூங்காதே தம்பி தூங்காதே- தூங்காதே தம்பி தூங்காதே ,தூங்கிவிட்டு சோம்பேறி என்ற பெயர் வாங்காதே பாட்டில இருந்து ...

இப்படி பாட்டுல வராப்போல நிறைய இருக்கு,அதெல்லாம் "ஒரு படைப்பின் தலைப்பா" கருத இடமில்லை,ஆனால் மெனக்கெட்டு தலைப்பா வச்சதை எடுத்து தலைப்பா வைக்கும் போது தான் " நம்ம தலைப்பு" போல இருக்கேனு நினைக்க தோனும்!

# லாரிகள்/வேன் பின்னால் எல்லாம் "தொடாமல் தொடர்க"னு எழுதி இருக்கும்,அதில இருந்து "தொட்டால் தொடரும்" உருவாகி இருக்கலாம்.

லாரி பேட்டரியில "தினமும் என்னைக்கவனி" என எழுதி வச்சிருப்பாங்க, அதை தலைப்பா வச்சு முன்னர் ராம்கி நடிச்சு "தினமும் என்னைக் கவனி"னுஒரு படம் கூட வந்துச்சு.

இப்படி பல உதாரணங்கள் இருக்கு, கூடிய விரைவில் யாராவது ஆட்டோ பின்னால எழுதி இருக்க "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே" பிரசவத்திற்கு இலவசம்னு" எல்லாம் படமெடுக்க போறாங்க அவ்வ்!

Amudhavan said...

தலைப்புகள் வைப்பதில் கவித்துவம் மிகுந்த தலைப்புகள் வைத்தவர் முதலில் நா.பாதான்.மிக அழகிய தலைப்புகள் வைப்பார்.கூடவே பாரதியார் பாடல்வரிகளைத் தலைப்புகளாய் வைக்கத்தொடங்கியவரும் அவர்தான்.அவருடைய ஒரு சிறுகதையின் தலைப்பு;'மேகம் மூடிய அந்த மலைகளுக்குப் பின்னால்...'
பின்னர் பிரசித்திபெற்ற சொல்லாடல்களைக் கொஞ்சம் மாற்றிப்போட்டு தலைப்பு வைக்கத் துவங்கியவர் சுஜாதா. இலையுதிர் காலம் என்பதைக் 'கொலையுதிர் காலம்' என்று மாற்றி முதன்முதல் தலைப்பு வைத்தவர் அவர்தான். இதனைப் பிறகு நிறைய செய்தவர் புஷ்பா தங்கதுரை. அவருடைய நிறைய மாத நாவல்கள் இம்மாதிரியான பெயர்களைத் தாங்கிவந்தன. அந்த நாட்களில் மாதநாவல்கள் எழுதிய நிறையப்பேர் இதனை அப்படியே பின்பற்றத் துவங்கினர். பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாமே இவர்களைத் தொடர்ந்தவர்தாம்.
'ஆட்டையைப் போடுவது.....' அப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான். தமது சிறுகதை ஒன்று திருடப்பட்டதாக அகிலன் அவர்களே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர்ந்த சம்பவங்கள் எல்லாம் இருக்கின்றன.
இந்த விஷயத்தில் நானே அடி வாங்கியவன்தான். என்னுடைய இரண்டு மாத நாவல்கள் திரைப்படங்களால் வஞ்சனை இல்லாமல் திருடப்பட்டன.கேஸ், கோர்ட் என்று அலைவதற்கு விருப்பமில்லாமல் விட்டுவிட்டேன்.
அதைவிட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் நடந்தது.

என்னுடைய 'கங்கையெல்லாம் கோலமிட்டு' நாவல் சாவி இதழில் புகழ்பெற்ற தொடர்கதையாக வந்த ஒன்று. முதல் அத்தியாயத்தில் வந்த அதே கதையை அப்படியே தழுவி(என்னுடைய கதையில் மேனேஜர்-ஸ்டெனோ என்று வரும் பாத்திரங்கள் அவர் கதையில் டாக்டர்-நர்ஸ் என்று உருமாறியிருந்தது) குமுதத்தில் பிரபல பெண் நாவலாசிரியர் ஒருவர் தொடர்கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் வந்ததும் அதிர்ந்துபோய் குமுதம் பால்யூவிடம் தெரிவித்தேன். அவர் எஸ்ஏபிக்குச் சொல்ல, எஸ்ஏபி என்னுடைய நூலை வரவழைத்து ஒரே இரவில் படித்துமுடித்துவிட்டு உடனடியாக அந்தத் தொடர்கதையை நிறுத்தச் சொல்லிவிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் அந்த அம்மையாரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டோம்.நான் வணக்கம் தெரிவித்தபோது அந்த அம்மையார் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்(வேடிக்கைப் பாருங்கள் நான்தான் அவர்மீது கோபப்படவேண்டும், அவர் படுகிறாராம்!)
ஆக, இப்படியெல்லாம் அவ்வப்போது நிறைய நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

உங்களிடம் இருந்து சுவையான ஒரு பின்புலத்தகவல் வரும் என எதிர்ப்பார்த்திருந்தேன்,ஆனால் கூடவே அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் உங்கள் படைப்புகளே சுடப்பட்டதையும் சொல்லி இருக்கீங்க,ஆனாலும் நீங்க "ரொம்ம்ப்ப்ப நல்லவ்வர்ர்ர்" எல்லாத்தையும் தாங்கிட்டு ,சகஜமா கடந்து வந்துட்டிங்களே!

"தீபம்"நா.பா. அவர்கள் தான் இதுக்குலாம் முன்னோடியா? அவரது சிலக்கதைகள், நாவல்கள் படித்துள்ளேன்,

"மேகம் மூடிய அந்த மலைகளுக்குப் பின்னால்...'" இது போன்ற சில தலைப்புகளைப்பார்க்கும் போது ...எதுக்கு பெருசா வைக்கிறாங்க, சின்னதா சுஜாதா போல வைக்கலாம்னு அப்ப நினைச்சதுண்டு. சுஜாதாக்கூட இதே போல "கரையெல்லாம் செண்பகப்பூ" என ஒரு கதைக்கு பேரு வச்சிருக்கார்.

தமிழ்வாணனின் ஒரு நாவலின்பெயர் "மணிமொழி என்னை மறந்துவிடு" என இருக்கும் :-))

சுஜாதாவின் ,தலைப்புகள் எல்லாம் கேட்சியாக தான் இருக்கும்,மாத நாவல்களுக்கு (பல்ப் ஃபிக்‌ஷன்) ஏற்றவை. நான் ரொம்ப நாளா, புஷ்பா தங்கதுரை தான் சீனியர்,அவர் தான் இப்படியான தலைப்புகளை ஆரம்பிச்சு வச்சிருப்பார்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அவ்வ்வ்!

90களின் மத்தியில் சுஜாதா அவர்களை நேராப்பார்க்கும் போது தான் "என்ன இவ்ளோ வயசானவரா"னு நினைச்சேன் அவ்வ்!

ரெண்டா உடைஞ்சிடுவாரோனு நினைக்கும் அளவுக்கு தளர்ந்து,வளைந்து இருந்தார்.

#ஆனால் அக்காலத்தில் தலைப்புகள் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும், அப்பவே .லா.சா.ரா எல்லாம் கருடன்,குருதிப்புனல் என சின்னதாவும் வச்சிருக்கார்.கல்கியும் அலையோசை,பார்த்திபன் கனவு,கள்வனின் காதலினு,சின்னதா வச்சிருக்கார்.

# // என்னுடைய இரண்டு மாத நாவல்கள் திரைப்படங்களால் வஞ்சனை இல்லாமல் திருடப்பட்டன.கேஸ், கோர்ட் என்று அலைவதற்கு விருப்பமில்லாமல் விட்டுவிட்டேன்.
அதைவிட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் நடந்தது.//

இது ரொம்ப அநியாயம், ஆனால் பலரும் வழக்கு இழுத்தடிக்கும் யார் அலைவதுனு பயந்து விட்டுறாங்க,அதையே எல்லாம் சாதகமாக எடுத்துக்கிறாங்க, உங்க அனுபவத்தை பதிவா எழுதுங்க, பலருக்கும் பயன்ப்படும், ஏற்கனவே எழுதியிருந்தால் சுட்டி தரவும்.

# //'கங்கையெல்லாம் கோலமிட்டு' நாவல் சாவி இதழில் புகழ்பெற்ற தொடர்கதையாக வந்த ஒன்று. முதல் அத்தியாயத்தில் வந்த அதே கதையை அப்படியே தழுவி(என்னுடைய கதையில் மேனேஜர்-ஸ்டெனோ என்று வரும் பாத்திரங்கள் அவர் கதையில் டாக்டர்-நர்ஸ் என்று உருமாறியிருந்தது) குமுதத்தில் பிரபல பெண் நாவலாசிரியர் ஒருவர் தொடர்கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார். //

இது திரையுலகினர் செய்ததை விட மோசமா இருக்கே அவ்வ்.நல்ல வேளை எஸ்.ஏ.பி உடனடியாக தீர்வுகண்டார்.

அந்த" நல்ல "எழுத்தாளர் யார்னு கண்டுப்பிடிக்கிறேன் :-))

//நானும் அந்த அம்மையாரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டோம்.நான் வணக்கம் தெரிவித்தபோது அந்த அம்மையார் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்(வேடிக்கைப் பாருங்கள் நான்தான் அவர்மீது கோபப்படவேண்டும், அவர் படுகிறாராம்!)//

வடிவேல் காமெடியில,தராசு,படிக்கல் எல்லாம் திருடுக்கொடுத்தவன் ,அய்யோ 5000 ரூவாப்பொருள் ஆச்சேனு பொலம்புவான்,என்னது 5000மா...படுபாவி 500 ரூவாக்கொடுத்து ஏமாத்திட்டானேனு வடிவேல் பொலம்புவார், திருடுக்கொடுத்தவன் என்னோட ரியாக்‌ஷன இவன் காட்டுறானேனு பொலம்புவான் அவ்வ்!

அது மாரி தான் ,நீங்க காட்டவேண்டிய ரியாக்‌ஷனை ,நாவலாசிரியை காட்டியிருக்காங்க அவ்வ்!

திருடுனவங்களுக்கு தான் ரோஷம் அதிகமா இருக்கு ,என்ன கொடுமை அவ்வ்!

Amudhavan said...


\\90களின் மத்தியில் சுஜாதா அவர்களை நேராப்பார்க்கும் போது தான் "என்ன இவ்ளோ வயசானவரா"னு நினைச்சேன் அவ்வ்!

ரெண்டா உடைஞ்சிடுவாரோனு நினைக்கும் அளவுக்கு தளர்ந்து,வளைந்து இருந்தார்.\\

சுஜாதாவுக்கு இதய ஆப்பரேஷன் ஆகின்றவரைக்கும் நன்றாகத்தான் இருந்தார். என்னவொன்று, அளவுக்கு மீறிய உயரம் என்பதால் எப்போதுமே கொஞ்சம் கூன் போட்டிருப்பார்.சென்னையில் உடம்புக்கு முடியாமல்போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்தபிறகுதான் மிகவும் தளர்ந்து போய்விட்டார்.

\\ஆனால் அக்காலத்தில் தலைப்புகள் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும்\\

தலைப்புகள் பற்றி ஒருமுறை நடிகை லக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த கமெண்ட்; "இந்தத் தலைப்பை சினிமாவில் வைத்தால் படித்து முடிப்பதற்குள் இண்டர்வெல் வந்துவிடும்"
'அந்த' எழுத்தாளர் யார்னு கண்டுபிடியுங்க!