Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts

Sunday, July 01, 2012

மருதநாயகம் பிள்ளை aka khan sahib "yusuf khan"-1

(ஹி..ஹி ராஜா,ராணி படம் ஒன்னும் கிடைக்கலை...)


முன்னோட்டம்:

மருதநாயகம் என்கிற கான்சாகிப் முகம்மது யூசப் கான் , இந்திய வரலாற்றில் ஹைதர் அலிக்கு அடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சிரமம் கொடுத்த வீரன் , முன்னால் நண்பன் என ஆங்கில அதிகாரிகளாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டுள்ள ஒரு வீரன். அப்படிப்பட்டவனது அக்கால ஒரு ஓவியம் கூட கிடையாது என சொல்கிறார்கள், இப்போதுள்ள ஓவியங்கள் எல்லாம் பிற்காலத்தில் வறையப்பட்டவையே.ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்து எதிரியாக மாறி பின்னர் அவரது 39 ஆம் வயதிலேயே துரோகப்பட்டம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி எறியப்பட்ட சோக வரலாறு உடையவன்.

இளமைக்காலம்:

இனிமேல் யூசப் கான் என்றே அழைப்போம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள பனையூரில் சைவ வேளாள குடும்பத்தில் கி.பி 1725 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சரியான ஆண்டு தெரியாது, பெற்றோர் பெயரும் தெரியாது, அவரது இளமைக்காலம் பற்றிய விவரம் எதுவுமில்லை என வ்ரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இளம் வயதில் படிக்காமல் சண்டியர் தனம் செய்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஊர் சுற்றியதால் ஊரார் பொது தண்டனைக்கொடுத்து அதனால் ஊரை விட்டு ஓடியதாகவும், அவரே கோபித்துக்கொண்டு புதுவைக்கு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு தான் இஸ்லாம் மதத்தினை தழுவி " முகமது யூசப் கான்" எனப்பெயர் மாற்றிக்கொண்டார்.அப்போது மாஷா (அ) மெர்சியா என்ற போர்த்துக்கீசிய-இந்திய பெண்ணை மணந்துக்கொண்டார்.

புதுவையில் ,படகு ஓட்டுதல், தையல் தொழில், சித்த மருத்துவர் என எண்ணம் போல வேலை செய்து காலம் ஓட்டியிருக்கிறார், பின்னர் புதுவையின் அப்போதைய கவர்னர் மான்சியே ஜாக்கஸ் லா என்பவர் வீட்டில் பணியாளராக சேர்ந்து சில காலம்(3 ஆண்டுகள்) பணிப்புரிந்துள்ளார்.

யூசுப் கான் புதுவையில் வேலை செய்துக்கொண்டிருக்கட்டும், அதற்கிடையே தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் ,பகைமைகள், போட்டிகள், இவற்றினை வைத்து வெள்ளையைர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததை எல்லாம் சுருக்கமாக பார்க்கலாம். அப்போது தான் கான் சாகிப் எப்படி அரசியல் மற்றும் ஆட்சியில் முன்னேறி ஒரு வீரனாக பரிணாமம் அடைந்து , வீரனாகவே சதியால் வீழ்ந்தான் என்பது புலப்படும்.

தென்னிந்திய ஆட்சி சூழல்.
(எஞ்சியுள்ள கோட்டையின் பகுதி)

மதுரை நாயக்கர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மறைவுக்கு ,பின் அவரது இளம் விதவை மனைவி "ராணி மீனாக்‌ஷி" வாரிசு இல்லாமையால் தத்து எடுத்த புத்திரன் சார்பாக ஆள்வதற்கு முன் வந்தார்.அவருக்கு போட்டியாக தத்து புத்திரனின் தந்தை "வங்காரு(பங்காரு) திருமலை நாயக்கர் அரசாட்சி உரிமைக்கோரி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

மதுரை நாயக்கர்களுக்கு கீழ் 32 பாளையங்கள் இருந்தன அவர்களிடையே மறவர் பாளையம், தெலுகு நாயக்கர் பாளையம் என பிரிவினையும் ,சண்டையும் காலம் காலமாக ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலிக்குட்பட்ட களக்காட்டிற்கு உரிமை கோரி ஒரு சண்டையிட்டு வந்தது.

எனவே தென் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையும் சண்டையும் வழக்கமான ஒன்றாக இருந்த காலம் அது.

அப்போதைய காலக்கட்டத்தில் மதுரை நாயக்கர்கள் ,ஆர்காட் நாவாப்பிற்கும், நவாப் ஹைதராபாத் நிஜாமுக்கும், நிஜாம் தில்லி சுல்தானுக்கும் வரி செலுத்தக்கட்டுப்பட்டவர்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள்,மற்றும் உறவின் முறைகள்:

ஆர்காட் நாவப்: முகம்மது அன்வருதீன் அலிகான், ,அவர் மகன்கள் முகமது அலிகான் வாலாஜா, மாபூஸ் கான்,அப்துல் ரஹீம் ஆகியோர்.


கர்நாடிக் நவாப் ஆக தோஸ்த் அலிகான்,அவரது மகன் சப்தர் அலிகான்,மருமகன் சந்தா சாகிப் ,ஆர்காட் நவாப்பிற்கு கீழ் ஆட்சியில் இருந்தார்.

சந்தா சாஹிப் ,அவரது மகன் ரசா அலிகான்,

(மேற்கண்ட பெயர்கள் பெயர்கள் அடிக்கடி புழங்கும் என்பதால் பட்டியலிட்டுள்ளேன்)

டெல்லி சுல்தான் வலுவிழந்ததால் ஹைதராபாத் நிஜாம் "நிஜாம் உல் முல்க்" தன்னாட்சிப்பெற்றவராக செயல்ப்பட ஆரம்பித்தார் ,அதே போல ஆர்காட் நவாப்பும் தன்னாட்சிப்பெற்றவர்களாக செயல்பட்டார். ஆர்காட் நவாப் போலவே கர்நாடிக் நவாப் என மைசூர் மையமாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்கள்.

இந்த உறவினர்களான இரண்டு நவாப்புகளுக்கிடையேயும் பகை உண்டு ஆனால் நேரடியாக மோதாமல் ,காலத்திற்கு காத்திருந்தார்கள், இவர்கள் இருவரையும் அடக்க நிஜாம் காலம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கிழக்கிந்திய கம்பெனி இறங்கியிருந்த காலம் அது.

இப்படியான குழப்பமான தென்னிந்திய அரசியல் சூழலில் , கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு அஸ்திவாரத்தினை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் இராபர்ட் கிளைவ், அவரின் அப்போதைய வெற்றியில் பெரும் பங்கு வகித்தது வேறு யாரும் அல்ல கான் சாகிப் யூசப் கானே ஆகும்.ஆனால் வரலாற்றில் இராபட் கிளைவிற்கு கிடைத்த புகழும் பெருமையும் கான்சாகிப்பிற்கு கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். வெகு சில நூல்களும் ஆவணங்களுமே கான் சாகிப்பினைப்பற்றி அறிய கிடைக்கிறது.

கான் சாகிப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பின்னர் காணலாம்.

தொடரும்.

------
பின் குறிப்பு:

கீழ்கண்ட நூல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்நூல்களை தரவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை, ஆனால் கூகிள் புக் போன்றவற்றில் படிக்கலாம். History of Tinnevelly by R.Caldwell நூலினை பதிவில் பிடிஎப் ஆக இணைத்துள்ளேன் ,பொறுமை உள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம் :-))

#History of Tinnevelly by R.Caldwell (Bishop Robert Caldwell)

#Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill

#கான் சாகிப் சண்டை- நா.வானமாமலை, வெளியீடு மதுரைக்காமராஜர் பல்கலை.

#தகவல் மற்றும் படங்கள், கூகிள்,மற்றும் கூகிள் புக்,நன்றி!
------------------------
History of Tinnevelly by R.Caldwell :


-------

-----------
பிற்சேர்க்கை:-

எனது சில சரித்திர (தரித்திரம்?)பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பினை ,இணைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் படித்து பாருங்கள், ஆனால் அங்கே போய் பின்னூட்டம் போட்டு என்னையை அலையவிடாதிங்க ராசா...எதா இருந்தாலும் இங்கணக்குள்ள பேசித்தீர்த்துப்போம் :-))

# செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!









*****

Friday, February 08, 2008

வள்ளல் பாரி வேள் வரலாறு!

யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு.

யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,தாமதத்திற்கு மன்னிக்கவும், பலப்புத்தகங்களிலும் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் போட்டுள்ளார்கள்,இப்பொழுது ஓரளவு சுருக்கமாக சொல்லும் அளவுக்கு தான் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவற்றை மட்டும் இப்போது சொல்கிறேன், மேலதிக தகவல்கள் கிடைத்ததும் பின்னர் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் பாரிப்பற்றி மேலதிக தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கவும் பதிவில் சேர்த்துவிடலாம்.

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே ...நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.

முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.

அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.

அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.

நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.

இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.

மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.

காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

மற்றொரு மகளுக்கு என்னவாயிற்று என்பது சரி வர தெரியவில்லை, அவ்வையார் அப்பெண்ணுக்கு ஒரு குறு நில மன்னனுடன் மணம் முடித்தார் என்றும் சொல்கிறார்கள்.

பின்குறிப்பு:

பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

Thursday, February 07, 2008

ஜோதா அக்பர்

செல்லுலாய்ட் ஜோதா பாய்
ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா ராய் பச்சன்* (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) அக்பராக ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புகளை தூண்டும் படமாக பேசப்படுகிறது.

இந்த சர்ச்சைகள் உண்மையில் கேள்விக்கேட்கும் நோக்கில் எழுப்பப்படுகிறதா இல்லை படத்தை விளம்பரப்படுத்த அடிக்கப்படும் கூத்தா என்றும் எனக்கு சந்தேகம்(வழக்கம் போல)

அப்படி என்ன சர்ச்சை என்றுப்பார்ப்போம்,

ஒரு சாரார் ஜோதா பாய் என்ற பெண்ணே சரித்திரத்தில் இல்லை , அபுல் பசல், பதாயுனி, நிசாமுதின் பக்ஷி ஆகியோரின் அக்பர் வரலாற்றில் இப்படிப்பட்ட பெயரே குறிப்பிட வில்லை என்கிறார்கள்.

இன்னொரு சாரார் ஜோதா பாய் இருந்தார் ஆனால் அவர் அக்பரின் மனைவி அல்ல , அக்பருக்கு மொத்தம் 34 மனைவிகள் என்று வரலாற்றில் தெளிவாக பெயர்களோடு இருக்கு, அதில் ஒருவர் பெயர் கூட ஜோதா பாய் இல்லை. ஆனால் ஜெஹான்கீரின் (சலிம்) மனைவி பெயர் ஜோதா பாய் , எனவே தவறாக அக்பரின் மனைவி என்று சொல்கிறார்கள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக , தற்போதைய ராஜ்புதான ஜோத்பூர் அரச குடும்பம் , ஜோதா பாய் உண்மையான ஒருவரே, அவருக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது என்கிறார்கள்.

ஜோதா பாய் என்ற பெயர் வரக்காரணமே அவர் ஜோத்பூர் இளவரசி என்பதால் தான்.

எது எப்படியோ இலவசமாக படத்திற்கு விளம்பரம் கிடைத்து விட்டது.சரி நாமும் நம்ம பங்குக்கு வரலாற்றை தோண்டிப்பார்ப்போம் என்று பார்த்ததில்,

ஹிமாயுன் , ஷேர்ஷா சூரியிடம் போரில் தோல்வி அடைந்து தலைமறைவாக சுற்றியக்காலத்தில் ஹமீதா பானு என்ற பெண் மீது காதல் கொண்டு மணந்து கொண்டார், நாடோடி வாழ்க்கையின் போது இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் என்றாலும் கிரேட் என்ற பொருள் தான், ஆனால் அவரை அக்பர் தி கிரேட் என்று சொல்வார்கள்(டபுள் கிரேட் போல).

அக்பரின் முதல் திருமணம் கொஞ்சம் விசித்திரமானது, அக்பர் ஆட்சியைப்பிட்க்க உதவியாக இருந்த பைராம் கான் என்ற அக்பரின் மாமா, இறந்ததும் அவரது மனைவியையே மணந்துக்கொண்டார், ஹிமாயுன் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதக்காலக்கட்டத்தில் பிறந்த அக்பரை வளர்த்ததே பைராம் கான் , அவர் மனைவி தான், எனவே அவர் வளர்ப்பு தாய் போன்றவராக கருதப்படவேண்டும், அக்பரை விட பல வயது மூத்தவர், அக்பருக்கு அப்போ 16 வயது தான் இருக்கும்.

அதன் பின்னர் பல திருமணங்கள் செய்துக்கொண்டார் அக்பர், , பலவும் போரில் வென்ற ராஜ்யங்களை தன் வசம் நிரந்தரமாக வைத்திருக்க செய்யப்பட்டதே.

ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசியை மணந்து அவருக்கு மரியம் ஸமானி என்று பெயர் வைத்துக்கொண்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜெஹான்கீர் என்ற சலிம்.

அக்பர் 34 திருமணங்கள் செய்துக்கொண்டதால் , கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார் போலும் அதன் பின்னர் போரை தவிர்க்க திருமணம் செய்ய நேரிட்டப்போது 12 வயதான சலிமுக்கு செய்து வைத்துவிட்டார், அப்படியான ஒன்று ஜோத்பூர் ராஜபுதான அரசர் ஆன உதய் சிங்கின் மகள் ஜோதா பாய்யுடன் ஆன திருமணம். அது மட்டுமல்லாமல் ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள் மான் பாயுடனும் சலிமுக்கு திருமணம் நடந்தது.

இப்படித்தான் நான் படித்த புத்தகத்திலும் இருக்கு, ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனால் படக்குழுவினர் மொஹல்- இ- அசாமில் கூட அக்பரின் மனைவியாக ஜோதாபாய் கதாபாத்திரம் உள்ளது. இப்படமே மொகல் -இ- ஆசாம் அடிப்படையில் மாற்றி எடுக்கப்படுவது தான் என்று சொல்கிறது.

எது உண்மைனே தெரியவில்லை, ஒரே குப்பாச்சு குழப்பாச்சு செய்றாங்கப்பா!சரி படம் வந்தா அய்ஷ்வர்யா ராய் பச்சன் *எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))

பின்குறிப்பு: கல்வெட்டு சொல்லிய திருத்தத்திற்கு ஏற்ப * அய்ஷ்வர்யா "ராய் "பச்சன் என மாற்றப்பட்டுள்ளது!

Tuesday, August 21, 2007

சென்னைக்கு பிறந்த நாள்! - Madras day


நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.

அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 - உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.