Tuesday, April 16, 2013

அஃதே,இஃதே-7


(ஹி...ஹி, பார்த்து பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன்...)

Play Back Singer!

தமிழ் திரையிசையில் மென்சோகம் கொண்ட குரலில் காதல் ரசம் சொட்ட பாடக்கூடிய பாடகராக கண்டசாலா விளங்கிவந்தார், அவரது அடியொற்றி அதே வகையில் பாடல்களை பாடி தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ,பி.பி.ஶ்ரீனிவாஸ் ஆவார், ஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர்கள் கண்டசாலாவிற்கு மாற்றாக ,அவரை அப்படியே நகல் எடுத்தார்ப்போல பாடவைத்தாலும், பின்னாளில் தனது தனித்துவத்தினை தக்க வைத்துக்கொண்டவர்.

பல நடிகர்களுக்கு பின்னணி பாடியிருந்தாலும் காதல்மன்னன்"சாம்பார்" ஜெமினிக்கு பாடும் போது அட்சசுத்தமாக குரல் பொருந்தும்,காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மையுடன் இருந்ததாகும்.

டி.எம்.எஸ் போன்றோரின் அசுர ஆதிக்கத்தின் முன் பிபி.எஸின் ஆதிக்கம் செல்லுபடியாகாத சூழலில் அரிதாகவே பாடும் சூழல், ஆனால் அப்படியும் பெரும்பாலான காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளார், பிற்காலத்தில் பி.பி.எஸ் குரலின் இளம்  நகலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இளமையாக வரவே திரைப்பட வாய்ப்புகள் குறைந்து,ஓரம் கட்டப்பட்டார் என்றே சொல்லலாம். இது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு சங்கதி.




குரல் தளர்ந்து, திரைப்பட வாய்ப்புகள் குறைந்த காலக்கட்டத்தில் "கஸல் பாடல்களில் தனது கவனத்தினை திருப்பினார், பாபர் வம்சாவழியில் ,கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர் -2 என்பவர் ஆவார், இவரது காலத்தில் பிரிட்டீஷார் இந்தியாவை முழுவதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள், பகதூர் ஷார்-2 வெறும் பொம்மையாக தில்லி செங்கோட்டையில் அமர்ந்தார், அப்படி இருக்கும் காலத்தில் சும்மா இல்லை, உருது,பாரசீக மொழிகளில் நல்ல ஞானமுடையவர்,எனவே அரசவை கவிஞர்களை வைத்து கவியரங்கம், கசல் பாடல்கள் எழுதுவதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார், 1857 இல் சிப்பாய் கலகம் நடந்த போது, பகதூர் ஷா ஜாப்பரை இந்திய அரசராக சிப்பாய்கள் அறிவித்து ,அவரது தலைமையின் கீழே போராடினார்கள். சிப்பாய் கலகம் அடக்கப்பட்டதும் , பகதூர் ஷாவை கைது செய்த பிரிட்டீஷார், கண்களை குருடாக்கி ரங்கூனுக்கு நாடுக்கடத்தி சிறையிலடைத்துவிட்டார்கள் ,அங்கு சிறையிலே காலமானார்.

பகதூர் ஷா ஜாபர்-2 எழுதிய பல கசல் பாடல்கள் சிப்பாய் கலகத்தின் போது அழிக்கப்பட்டுவிட்டது, ஆனாலும் எஞ்சிய பாடல்கள் பின்னாளில் தொகுக்கப்பட்டு பலராலும் பாடப்பெற்றது,அவர் எழுதிய பாடல்களில்  சில அரிய ,அது வரையில் யாரும் பாடியிராத கசல் பாடல்களை சேகரித்து, பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடி ஒரு கசல் ஆல்பமாக வெளியிட்டார்.

திரையுலகில் புகழின் உச்சியில் இருக்கும் போது என்ன செய்தாலும் ,ஆஹா ,ஓஹோ என தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், லைம் லைட் இழந்த பின் கண்டுக்க ஆளே இருக்காது,காலம் போனப்பின் பாடியதாலோ என்னமோ  கசல் ஆல்பம் வெகுவாக எடுபடவில்லை,மேலும் அப்பொழுது தான் கணினி, சிடி என நுழைய ஆரம்பித்த காலம், ஆடியோ கேசட்டில் போட்டது எடுபடவில்லை,ஆனால் கள்ளத்தனமாக சிடிக்கள் நன்றாகவே போனது, அதனால் அவருக்கு ஒரு பலனும் இல்லை.
அதற்கு பின்னரும் பல காலம் கசல் ஆல்பம் போட முயன்றார், மேலும் அவரே கசல் பாடல்களும் எழுதுவார், எப்பொழுதும் பல வண்ணப்பேனாக்களும் பேப்பருமாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம், மேலும் நிறைய கவிதைகள் என எழுதிக்கொண்டேயிருப்பார், கவிதைகள் ,கசல் பாடல்கள் என எழுதும் போது ஒவ்வொரு "மூட்"கும் ஒரு வண்ணம், இசை அடிக்குறிப்புக்கு ஒரு வண்ணம் என எழுதுவாராம், மேலும் யார் மாட்டினாலும் நியுமராலஜி, பெயர் ஆராய்ச்சி என செய்வாராம்.

கசல் ஆல்பம் போட வேண்டும்,கவிதை நூல் வெளியிட வேண்டும் என சொல்லிக்கொண்டேயிருப்பாராம், ஆனால் மீண்டும் அதெல்லாம் செய்ய வாய்ப்பு கிடைத்ததா என தெரியவில்லை. நேற்று பிரியாவிடைப்பெற்று சென்றுவிட்டார். நல்லதொரு பாடகரை நமது சமூகம் சரியாக அங்கிகரிக்கவில்லையோ என்ற கேள்வி மட்டும் அவரின் பாடல்களை கேட்கும் போது காற்றுவெளியில் தொக்கி நிற்கிறது.



வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார், தமிழ்திரையிசைப்பாடல்கள் ஒலிக்கும் காலம் வரையில் "Play Back Singer"=PBS என தனித்து நிலைத்திருக்கும்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்!

(ஒலிப்பதிவு & இசைத்துறையில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பிபிஎஸுடன் பழகியவர்,அவரோடு முன்னர் பேசியப்போது அறிந்து கொண்டவற்றை பகிர்ந்துள்ளேன், என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என அடிக்கடி சொல்வார், நடக்காமலே போயிற்று)

----------------------

எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிடிச்சு!





மேற்கண்ட மேப் பிரிட்டீஷார் ஆண்ட காலத்தில் சென்னை ,மெட்ராசா இருந்த போது  கி.பி 1893  இல் உருவாக்கப்பட்டது. அதில் பார்த்தால் சைதாப்பேட்டைக்கும் நுங்கம்பாக்கத்திற்கும் இடையே "லாங் டேங்" என குறிப்பிட்டு இளநீல வண்ணத்தில் ஒரு பகுதி தெரியும்,அது வேறு ஒன்றும் இல்லை அக்காலத்தில் அப்பகுதியில் இருந்த ஏரி ஆகும்.

ஆம் அக்காலத்தில் அவ்வளவு பெரிய ஏரி சென்னை நகருக்குள்ளே இருந்துள்ளது , இப்போது அந்த இடமெல்லாம் வீடுகளாகி ,தார் சாலைகள் போட்டு வாகனங்கள் ஓடுது :-((

இப்பொழுதும் மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் "லேக் வியூ ரோட்" என இருப்பதற்கு காரணமே அந்த லாங் லேக் தான், இப்போ ரோடு இருக்கு ஏரி இல்லை.

இந்த ஏரிக்கு அடையார் ஆற்றின் மூலம் தண்ணீர் வரத்து நடைபெறும் இடையில் ஒரு வாய்க்கால் ஓடுமாம், அதன் மூலம் தான் லாங்க் டேங்கும் ,அடையாறும் இணைந்திருந்தது,இக்கால்வாய் சைதாப்பேட்டையை இரண்டாக பிரித்துவிடுவதால் சைதாப்பேட்டையின் ஒருப்பகுதியினர் அக்காலத்தில் மவுண்ட் ரோட்டிற்கு  வர முடியாதாம், . இப்படி மக்கள் கஷ்டப்படுகிறார்களே என ஒரு வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப்பாலம் அமைத்து கொடுத்திருக்கார், அவருக்கு ஒரு மார்பளவு சிலையும் கல்வெட்டும் மக்களே அமைத்திருக்கிறார்கள், அந்த சிலை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் டீச்சர்ஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள மின்வாரிய அலுவலக கட்டிடத்தின் ஓரமாக இன்றும் இருக்காம்.

அந்த கால்வாயை எல்லாம் மண்ணள்ளி போட்டு மூடியாச்சு,எனவே மரப்பாலத்துக்கும் வேலையில்லாம போய் யாரோ அடுப்பெரிக்க மரப்பாலத்தினை எடுத்து போயிருக்க கூடும்.

இப்பொழுது சைதையில் அடையாற்றின் மீது உள்ள மறைமலை அடிகள் பாலத்தினை முதலில் கட்டியது, பீட்டர் ஸ்கான் என்ற ஆர்மீனிய வியாபாரியாகும், அவர் சொந்த செலவில் மக்களுக்கு கட்டியுள்ளார், அதுவே பின்னாளில் விரிவாக கட்டப்பட்டு மர்மலாங் பிரிட்ஜ் எனப்பெயரிடப்பட்டு ,அப்புறம் மறைமலை அடிகள் பாலம் என தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள், குளங்கள் என அக்காலத்தில் இருந்துள்ளன, ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் எல்லாம் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது.

மேலும் நம்ம மக்கள் ஏரிக்கரையில் காலைக்கடன் கழிப்பது, ஏரியில் குப்பைகளை கொட்டுவது என சகலவிதத்திலும் மாசுப்படுத்துவதை தொடர்ந்ததால் ,மழைக்காலங்களில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகி மலேரியா,காலரா போன்ற நோய்கள் ஆண்டு தோறும் தாக்கவே ,இதற்கு என்ன காரணம் என வெள்ளையர்கள் ஆய்வு செய்து, நகரப்பகுதிக்குள் நிறைய நீர் நிலைகள் இருக்கு அதனால் தான் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது,என சொல்லி பல குளங்களை மண் அள்ளி போட்டு மூடவும் செய்தார்களாம்.

சுதந்திரம் அடைந்த பின் வந்த நம்ம ஆட்சியாளர்களும் எதாவது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் ஏதேனும் குளத்தினையோ ஏரியையோ தான் தூர்த்து மூடினார்கள். இதனால் நகரப்பகுதிக்கள் நீர் நிலைகள் என்பதேயில்லாமல் போய்விட்டது.

தரமணி,மயிலாப்பூர் பகுதிகளில் பறக்கும் ரயில் போகும் பாதையில் சாக்கடை போல கால்வாய் இருப்பதை காணலாம், அதன் பெயர் தான் பக்கிங் ஹாம் கால்வாய், இந்த கால்வாய் அப்போது  செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருந்து , இப்போது உள்ள கல்பாக்கம் அருகில் உள்ள சட்ராஸ் எனப்படும் சதுரங்கப்பட்டினம் வரையில் ஓடியது. இதில் படகுகள்  மூலம் பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வார்கள்.

சட்ராஸ் என்ற ஊர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார துறைமுகம் ஆகும், வெள்ளையர்  வருமுன்னரே சட்ராசுக்கு போர்ச்சுகீசியர் வந்து வேலைய ஆரம்பிச்சுட்டாங்க, அவங்களை பார்த்து தான் பின்னர் வெள்ளையர் வந்து போட்டிக்கு மெட்ராசை ஆரம்பிச்சாங்க :-))

தெற்கில் பங்கிங்காம் கால்வாய் போல வட மெட்ராசிலும் ஒரு கால்வாய் ஓடியது, Coehrane river or North river என அழைக்கப்பட்டது,அது புலிகாட் ஏரியில் இருந்து ஆரம்பிச்சு , ராய புரம்,பேசின் பிரிட்ஜ்,சென்ட்ரல், தற்போதுள்ள மெடிக்கல் காலேஜ் வழியாக ஓடி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அருகே கூவத்துடன் சேரும், தீவுத்திடல் அருகே பக்கிங் ஹாம் கால்வாயுடன் இணைப்பு உருவாகும்.

இதன் மூலம் புலிகாட்டில் இருந்து சட்ராஸ் வரைக்கும் படகில் பயணிகளும்,பொருட்களும் கொண்டு செல்வார்கள். புலிகாட் பகுதியை ஏன் இப்படி இணைத்தார்கள் என்றால் அங்கு டச்சுக்கோட்டை மற்றும் துறைமுகம் இருந்தது, போர்ச்சுக்கீசியர்களுக்கு அடுத்து ,வந்து வியாபாரம் ஆரம்பித்தார்கள், எல்லாருக்கும் கடசியா வந்த கொள்ளைக்காரன் தான்  வெள்ளைக்காரன்,ஆனால் அவன் தான் ரொம்ப நாளு ஆட்டி வச்சிருக்கான் :-))

இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் ஒருக்காலத்தில் சென்னை நீர் வளத்தோடு சிறந்து விளங்கிச்சு என்பதை நினைவுறுத்தவே.

இப்போ தண்ணீருக்காக வீராணம் ,தெலுங்கு கங்கா, கடல் நீர் குடி நீர் ஆக்குதல் பகீரத பிரயத்தனம் செய்கிறோம்.அக்காலத்தில் கொஞ்சம் பொறுப்புடன் மக்களை கண்டித்து "லாங் டேங்" போன்றவற்றை காத்திருந்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே வந்திருக்காது.

மேலும் நீர் நிலை என்பது  நிலத்தடி நீர் சேமிப்புக்கு ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ஒரு அடி நீர் தரைக்கு மேல் நிற்கிறது என்றால் 60 அடி நீர் அதற்கு கீழே சேமிக்கப்பட்டிருக்கும்,என தேசிய நீர்வள ஆய்வுத்துறையின் அறிக்கை சொல்கிறது. இதனால் தான் ஆற்றுப்படுகையில் சிறிது பள்ளம் தோண்டினாலும் நீர் சுரக்கிறது. நிலத்தடி நீர் சேமிக்க நீர் நிலைகள் மிக அவசியம் ,சென்னை நகரிலோ எல்லாம் வீடுகளாகவும், தார் சாலைகளாகவும் ஆகிவிட்டதால் மழைபெய்தால் எல்லாம் கடலுக்கு ஓடிவிடும்,நிலத்தடி நீர் சேகரிப்பு என்பதே இல்லை, இதனால் போர் போட்டாலும் நீர் கிடைக்காது. இருக்கும் கொஞ்ச நஞ்ச நீரையும் உறிஞ்சி விட்டதால், கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராகிவிட்டது.

அப்பொழுது மெட்ராசப்பட்டினத்தில் பல சிறிய காடுகளும் இருந்துள்ளன.

தற்போது உள்ள ஸிம்சனுக்கு எதிர்ப்புரம் செல்லும் பகுதி(பயன்ப்படுத்தாத தலைமைசெயலகம்) முழுவதும் நரிமேடு என்ற காடாக இருந்துள்ளது.அங்கு நரிகள் அதிகம் உலாவுமாம்.

மேலும் மவுண்ட் ரோட்டிற்கும்,திருவல்லிக்கேணிக்கும் இடையே காடு, தேனாம் பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையில் காடு இருந்துள்ளது.

நந்தனத்தில் தான் விவசாய கல்லூரி முதலில் துவங்கப்பட்டுள்ளது, அதை அங்கிருந்து தூக்கிட்டு அதில் எஞ்சிய பகுதியில் இப்பொழுது கோழிஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு வரைக்கும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் விடப்பட்டதாக மேப்பில் இருக்கு, இப்போ ரயிலும் காணோம், காடும் காணோம்.

இப்பொழுது ஐ.ஐடி உள்ள இடம், வன உயிரியல் பூங்காகவா இருந்துள்ளது, இந்தியாவிலேயே முதல் வன உயிரியல் பூங்கா அது தான், பின்னாளில் ஐ.ஐடி,கேன்சர் ஆஸ்பத்திரி எல்லாம் கட்டிட்டு ,வன உயிரியல் பூங்காவை சில்ரன்ஸ் பார்க் ஆக்கிட்டாங்க :-))

அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வனஉயிரியல் பூங்கா தான் வண்டலூரில் இருப்பது, போகிறப்போக்கைப்பார்த்தால் வண்டலூரிலும் ஒரு ஐ.டி பார்க் ஆரம்பித்துவிட்டு ,திண்டி வனத்தில் வனயிரியல் பூங்கா திறந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை,இந்தியா வல்லரசாக  தடையாக கேவலம் சில விலங்குகள் இருக்க விடுவோமா :-))

இப்போ இருக்கும் கே.கே.நகர்,அசோக் நகர்,அண்ணா நகர் எல்லாம் அக்காலத்தில் காடுகளே, இதை எல்லாம் சுதந்திரம் அடைந்த பின்னர் நம்ம ஆட்சியாளர்கள் தான் வீடுகளாக்கினர்.

இப்பொழுது பிசியாக இருக்கும் நூறடி ரோடு ஒரு காலத்தில் சென்னை -கொல்கத்தா பைபாஸ் சாலையாகும், பின்னர் அந்த ரோடே நகர சாலையாகிவிடவே, இரும்புலியூர் -மதுரவாயல் பைபாஸ் போட்டாங்க, இப்போ அதுவும் பிசியாகிட்டு இருக்கு,எனவே இப்போ முடிச்சூர் வழியா ஒரு பைபாஸ் சாலை போட்டுக்கிடு இருக்காங்க, கூடுவான்சேரிக்கிட்டே ஏரினா நேரா கொண்டு போய் தடாவில இறக்கிடுவாங்கனு நினைக்கிறேன் :-))

நகர வளர்ச்சி என்றப்பெயரில் நகரத்தின் ஜீவனை அழித்துக்கொண்டிருக்கிறோம்,ஆனாலும் எப்படியாவது ஒரு இடம் சொந்தமாக்கிடனும்னு அனைவருக்கும் ஆசையும் இருக்கு.

நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு , தண்ணீர் இல்லைனு தண்ணீர் லாரி பின்னாடி ஓடுகிறோம், காடுகளை எல்லாம் அழித்துவிட்டு ,சுற்று சூழல் காக்க வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள்னு விளம்பரம் செய்கிறோம்.

நவீன பொருளாதார சார் உலகில் சுற்று சூழலை அழிப்பதில் தனி நபர்களை விட அரசே பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.
------------

கன்னி வெடி!

பெண்களின் கண்ணுக்கு பயங்கரமான சக்தி இருக்குனு ,பல கவிஞர்கள் "ரா"வா கவிதை எல்லாம் சொல்லுவாங்க, வாள் எடுத்து போனாலும் முனை உடைஞ்சிருமாம், உன் விழியும் என் வாளும் சந்தித்தால் எனை வெல்லும்னு மண்டிப்போட்டுறுவாங்க:-))

பொண்ணுங்க கண்ணுக்கே அம்புட்டு பவர்னா ,"gun" எடுத்தா, அதுவும் இது மாதிரி இரட்டை கோபுர துப்பாக்கி எடுத்தா, எதிர்க்க எவனுக்கு தெகிரியம் இருக்கும் :-))



மறைஞ்சி நின்னு சுடுற கொடுற வில்லன் கூட்டம் கூட நெஞ்ச நிமித்திக்கிட்டு நேரா வந்து சண்டைப்போடுவான்ல! குண்டு தொளைச்சாளும் இத மாதிரி "குண்டு" தான் தொளைக்கணும் :-))

இணையத்தில் இந்த போஸ்டரை பார்த்த பின்னாலே ராத்திரியானா என் கெனாவுல ஒரே துப்பாக்கி சுடுற சத்தமா கேட்குது, அதான் முடிவு பண்ணிட்டேன் படம் எப்போ வந்தாலும் மொத நாளு மொத ஷோ பார்த்துப்பிடுறதுனு :-))

அடே கோடம்பாக்கம் டைரடக்கருங்களே, ஒலகப்படம் எடுக்கிறேன்னு சேப்பா இருக்க பொண்ணுக்கு வண்டி மசிய எடுத்து பூசி கருப்பாக்கி கண்ணை பதம் பாக்கும் பாவிகளே இனிமேலாச்சும் உங்க கற்பனைய நல்லவிதமா காட்டி,இப்படிலாம் படம் எடுக்க கூடாதா?

அதிரடி ஆக்‌ஷன் சண்டைப்படங்களுக்கு அழகூட்டும் இது மாதிரியான புதிய படைப்புகளை கலை ஆர்வத்துடன் வரவேற்பதில் அடியேனுக்கு என்றுமே அலாதி ஆர்வமுண்டு என்பதாலே இந்த பிட்டை போட்டுள்ளேன் என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

-----------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி ,கூகிள், யூடியூப்,ரூட்ஸ்வெப், இணைய தளங்கள்.

History of the city of Madras,Rao Sahib.C.S.Srinivasachari.M.A

நன்றி!
---------------------------