Monday, October 29, 2012

திரும்பிப்பார்-3:ரோசெட்டா கல்வெட்டு(Rosetta Stone)

(hi...hi கிளியோபட்ரா படம் கிடைக்கலை,அதான்  நம்ம ஊரு கிளியோபட்ரா )

 நெப்போலியனின் எகிப்து படை எடுப்பு:

பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபாட்(Napoleon Bonaparte,1769-1821 ) , 1797 ஆம் ஆண்டு டிசம்பரில் இத்தாலியை வென்று விட்டு அடுத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினை முடக்கும் திட்டம் தீட்டினார், அதன் முதல் படியாக இந்தியாவை கைப்பற்றுவது என்றும் அதற்கு முதலில் எகிப்து வரை உள்ள பகுதியை பிடிக்க வேண்டும், இந்தியாவுக்கான வணிக பாதையை அப்போது தான் முடக்கி ,இங்கிலாந்தை மடக்க முடியும் என திட்டமிட்டார்.



ஏப்ரல் 19,1798 ஆம் ஆண்டு 300 கப்பல்களில் 21 பட்டாலியன் படை வீரர்களோடு ,கடற்படைக்கு அட்மிரல் புரேய்ஸ் மற்றும் நெப்போலியன் தலைமையில் பிரஞ்சு படை தனது எகிப்திய படை எடுப்பை துவங்கியது, வழியில் Toulon, Marseilles, Genoa, Ajaccio, and Civita Vecchia மற்றும் மால்டாவை கைப்பற்றி ,இங்கிலாந்து கடற்படையை வென்று ஜூலை ஒன்றாம் தேதி அலெக்ஸாண்ரியா அருகில் மாரபுட் என்ற இடத்தில் தரை இறங்கியது படை.

எகிப்தை ஆண்ட மாமுலேக் அரசாட்சியின் படை ,முராத் பே தலைமையில் ஜூலை 21 அன்று பிரஞ்சு படையுடன் ,பிரமிட் அருகே சண்டையிட்டு தோல்வி அடையவே ,எகிப்து நெப்போலியன் வசம் ஆனது. ஜூலை 24 இல் கெய்ரோவில் தனது அதிகாரப்பூர்வ ஆளுகைக்கு கொண்டு வந்தார்.


எகிப்தின் மீதான வெறும் படை எடுப்பாக மட்டும் திட்டமிடாமல் ,எகிப்தின் புராதன வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த நெப்போலியன்ன் ,படை எடுப்பின் போது தன்னுடன் 167 பேர் கொண்ட அறிஞர் குழுவையும் அழைத்து சென்றார். அக்குழுவில் அறிவியலாளர், பொறியாளர்,அச்சுக்கலை நிபுணர்,புவியியலாளர்,விலங்கியல், தாவரவியல்,ஓவியர், சிற்பி,கணித நிபுணர், பொருளாளர்,பத்திரிக்கையாளர் ஆகியோர் இருந்தனர்.

# எகிப்தைக் கைப்பற்றியதும், மேற்கொண்ட குழுவினரை கொண்டு ,எகிப்து அறிவியல் கழகம் என்ற ஒன்ற நிறுவினார். அவர்கள் எகிப்து குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டனர்.

# இரண்டு அச்சு இயந்திரங்களும் கொண்டு சென்று அப்போது கிடைத்த நூல்களை உடனே மொழிப்பெயர்த்து புத்தகமாக வெளியிட்டார், குரானின் மொழிப்பெயர்ப்பு முதலில் ஒரு பகுதியாக அப்போது தான் அச்சானது.

# எகிப்தின் முதல் செய்தித்தாள் "the Courrier de l'Egypte'" 1798 இல் துவங்கப்பட்டது.

# எகிப்தின், வரலாறு,கலை,இலக்கியம் ஆகியவற்றை தொகுத்து "“Description de l’Egypte,” என்ற பெயரில் நூலாக வெளியிடும் பணி துவங்கியது, இப்பணி பின்னர் நெப்போலியன் போரில் தோல்வியுற்ற பின்னரும் தொடர்ந்து 1809 இல் நூல்களாக வெளியிடப்பட்டது.

# நெப்போலியன் தான் எகிப்தின் முழுமையான மேப்பினை வரைய செய்தார், ஆனால் அது பிற்காலத்தில் தான் வெளியிடப்பட்டது.

நெப்போலியன் எகிப்தின் மீது படை எடுத்து ஆக்ரமித்த நேரத்திலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளிலும் கவனம் செலுத்தியது அவர் ஒரு அறிப்பூர்வமான ஆளுமை என்பதற்கு சான்று எனலாம். இத்தனைக்கும் நெப்போலியனின் ஆளுமையின் கீழ் எகிப்து இருந்தது கி.பி 1798-1801 வரையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இந்த இடத்தில் நம் நாட்டு ஆட்சியாளர்கள் ,கலை,இலக்கியம்,வரலாற்றில் காட்டும் ஆர்வத்தினை நினைத்தால் ரத்தக்கண்ணீர் தான் வரும்.

மதுரையில் சரித்திர புகழ் பெற்ற சமண குகைகள்,கோயில்கள் இருக்கும் மலையை கல்குவாரி, கிரானைட் என வெட்டி எடுத்து அழிப்பதை ஊக்குவிப்பவர்கள் நம்ம ஆட்சியாளர்கள்!

ரொசெட்டா கல்வெட்டு கண்டுபிடிப்பு:



ரோசெட்டா(Rosetta) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ,எகிப்தின் நைல் நதியின் மேற்கு கரையில், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் ஆகும். அலெக்சாண்ட்ரியாவில் இருந்து 35 மைல் தொலைவில் உள்ளது. இத்துறைமுகத்தின் எகிப்திய பெயர் அல் ரஷீத். ரஷீத் என்பதை ரோசெட்டா என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார்கள்.

கி.பி 1798 இல் பிரஞ்சு படை அங்கு முகாமிட்டிருந்த போது ஒரு பழையக்கோட்டையை இடித்து பெரிதாக கட்டி ராணுவ முகாம் அமைக்க முயன்றார்கள். இதனை கேப்டன் Pierre François Xavier Bouchard  என்ற ராணுவ பொறியாளர் தலைமையிலான அணி செய்தது.



அப்போது ஒரு சுவற்றினை இடிக்கும் போது ஒரு பெரிய கல் பலகை சுவற்றில் பதியப்பட்டிருப்பதை வீரர்கள் கேப்டனிடம் சொல்லவே ,கல்லைப்பார்வையிட்ட கேப்டன் இது சாதாரணக்கல் போல இல்லை , ஏதோ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கிறது, எனவே முக்கியமானதாக இருக்கும் என தனியே எடுத்து சுத்தப்படுத்தி பார்த்துள்ளார், புரியாத மொழியில் இருக்கவும், கண்டிப்பாக பழமையான ஒரு கல்வெட்டாக இருக்கலாம், என அவரது மேல் அதிகாரி ஜெனரல்  Jacques-François Menou,விடம் தெரிவித்தார், அவரும் இதனைப்பார்த்துவிட்டு என்னவென்று புரியாவிட்டாலும் ,பழம்பொருள் என புரிந்து கொண்டு ,அதனை அவரது சொந்தப்பொருளாக வைத்துக்கொண்டார்.

இராணுவ பணியின் போது ,அவர்கள் கண்டெடுக்கும் பொருட்கள் அரசுக்கு சொந்தமானவையாக அளிக்கப்பட வேண்டும்,ஆனால் ஜெனரல் யாருக்கும் தெரிவிக்காமல் அவரே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்,ஏன் எனில் பிற்காலத்தில் அரிய கலைப்பொருள் என விற்கலாம் என ஒரு எண்ணமாக இருக்கலாம்.

ஜெனரல் ரோசெட்டா கல்வெட்டினை அரசுக்கு அளிக்கவில்லை என்பதை யாரோ சிலர் நெப்போலியனுக்கு மொட்டைக்கடிதாசி எழுதி சொல்லிவிடவே, நெப்போலியன்  ஜெனரலை விசாரித்து உடனே கல்லை எகிப்திய அறிவியல் கழகத்துக்கு எடுத்து வர வேண்டும் என சொல்லி , தொல்லியல் அறிஞர்கள் குழுவினரை ஆராய சொன்னார்.

யாருக்கும் அதில் உள்ள மொழியை படிக்க தெரியவில்லை, ஹியரோ கிளைப்சிலும் மேலும் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது என்ற அளவில் தான் அறியமுடிந்தது என சொல்லவே நெப்போலியனே நேராக சென்று ரோசெட்டா கல்வெட்டினைப்பார்வையிட்டு ,அது மிகப்பழமையான மொழியில் எழுதப்பட்டிருப்பதை உணர்ந்து, இதனை மொழிப்பெயர்த்தால் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என  முடிவு செய்தார்.

அக்காலக்கட்டத்தில் எகிப்தின் பிரமிடுகளிலும், பல கல்வெட்டுகளிலும் ஹியரோ கிளைப்ஸ் கண்டுப்பிடிக்கட்டிருந்தாலும் யாருக்கும் அதனை மொழிப்பெயர்க்க தெரியாது, குத்து மதிப்பாக சித்திர எழுத்துக்கள் என சொல்லி ஆளாளுக்கு ஒரு கருத்தினை யூகமாக சொல்லிக்கொண்டு வந்த காலம்.

ரோசெட்டா கல்வெட்டினை பல பிரதிகள் எடுத்து உலகமெங்கும் உள்ள மொழியியல் வல்லுநர்களுக்கு அனுப்பி ,ஆராய சொல்லலாம் என நெப்போலியன் முடிவு செய்து, கல்வெட்டுக்களில் இருந்து பிரதி எடுப்பதில் வல்லவர்களாக சிட்டிசன் மார்செல் ,மற்றும் கேலன்ட் என்ற இருவரை பாரிசில் இருந்து வரவழைத்தார்.

கல்லினை நன்கு சுத்தப்படுத்திவிட்டு அதன் மீது அச்சு மையினை பூசி ,மேலே காகிதத்தினை பரப்பி , ரப்பர் ரோலர்களை உருட்டி கல்வெட்டின் எழுத்துகளை காகிதத்தில் பிரதி எடுத்தார்கள். மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் கல்வெட்டினை ஒத்த மாதிரிகளையும் உருவாக்கினார்கள்.

இது போன்று எடுத்த பிரதிகள் ஐரோப்பா முழுவதும் அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் பிரஞ்சு படை வாட்டர் லூ போரில் தோல்வியுறவே ,மீண்டும் இங்கிலாந்து எகிப்தினை கைப்பற்றியது. போர் விவரங்கள் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

போரின் முடிவில் நெப்போலியனுக்கும், இங்கிலாந்திற்கும் ஒரு உடன் படிக்கை உருவானது, அதன் படி எகிப்தில் இருந்து எடுக்கப்பட்ட புரதான பொருட்கள் அனைத்தையும் இங்கிலாந்து வசம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்து கப்பற் படையின் ஹெச்.எம்.எஸ்.அட்மிரல், மற்றும் ஹெச்.எம்.எஸ். மெட்ராஸ் ஆகிய கப்பல்களில் ஏற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் லண்டனுக்கு போகவில்லை ,ஏன் எனில் மீண்டும் பிரஞ்சு ஜெனரல் மானோயு ,கல்வெட்டினை அவர் வீட்டுக்கு எடுத்துப்போய் ,அவருக்கே சொந்தம் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நெப்போலியனுடன் போட்ட ஒப்பந்தம் தன்னைக்கட்டுப்படுத்தாது என்பது அவரது வாதம், ஆனாலும் இங்கிலாந்து அரசு விடுவதாயில்லை, மேஜர் ஜெனரல் டர்னர் என்பவரை அனுப்பி மிரட்டி வாங்கிவிட்டது, பின்னர் ரோசெட்டா கல்வெட்டு மட்டும் ஹெச்.எம்.எஸ்.எஜிப்தியனில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு இப்போது ரோசெட்டா கல்வெட்டு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியுசியத்தில் உள்ளது.
---------

ரோசெட்டா கல்வெட்டு மொழி பெயர்ப்பு:

காலம்: தாலமி -5 என்ற மன்னர் காலம் சுமார் கி.மு 196.

கல்வெட்டின் இயல்பு:

உயரம்: 114.4 செ.மீ.

அகலம்:72.3 .செ.மீ

தடிமன்:27.9 செ.மீ.

எடை: 760 கிலோ கிராம்.

மேற்புறம் சிறிது உடைந்திருந்தது.

இக்கல்வெட்டில் ஒரே செய்தி மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்ததே இதன் முக்கியத்துவம் அதிகரிக்க காரணம்.

ஏன் எனில் அது வரையில் எகிப்திய ஹியரோ கிளைப்ஸை யாரும் சரியாக மொழிப்பெயர்த்ததே இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்த மொழி என்பதால் அதனை அறிந்தவர்களே இல்லை, எனவே எப்படி படிப்பது என தெரியவில்லை, இக்கல்வெட்டில் ஹியரோகிளைப்ஸ் உடன் மேலும் இரண்டு மொழிகள் பயன்ப்படுத்தப்பட்டிருப்பதால் ஏதேனும் ஒரு மொழியை டி சைபர் செய்தால் அதனை வைத்து ஹியரோ கிளைப்ஸ் மொழியை டி சைபர் செய்ய முடியும்.



கல்வெட்டில் இருந்த மொழிகள்:

மேற்புறம் ஹியரோ கிளைப்சில் (hieroglyphs )எழுதப்பட்டிருந்தது. ஹியரோ கிளைப்ஸ் என்பதற்கு கடவுளின் மொழி எனப்பொருள். எகிப்தில் அக்கால மத துறவிகளின் தொடர்பு மொழி.

அடுத்த பாகம் , டெமோடிக் எனப்படும் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இது எகிப்திய மக்கள் பேசும் மொழியாக அப்போது இருந்தது. பின்னாளில் இதில் இருந்தே எகிப்திய காப்டிக் மொழி உருவானது.

கீழ் பாகத்தில் , பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. கிரேக்க மொழி அக்கால எகிப்தில் அரச மொழியாக இருந்தது. அரசனும்,அதிகாரிகளும் கிரேக்கத்தில் உத்தரவுகள் இடுவது வழக்கம்.

ஒரே கல்வெட்டில் மூன்று மொழிகளில் எழுதபட காரணம் அனைத்து மக்களுக்கும் அச்செய்தி சென்றடைய வேண்டும் என்பதே.

இதற்கு முன்னர் பிரமிடுகளில் காணப்பட்ட ஹியரோ கிளைப்ஸ்(hieroglyphs ) எல்லாம் தனியாக எழுதப்பட்டவை என்பதால் ,யாராலும் சரியாக மொழி பெயர்க்க முடியவில்லை, இக்கல்வெட்டில் டெமொடிக், மற்றும் பண்டைய கிரெக்கமும் பயன்ப்படுத்தப்பட்டிருந்ததால் அதனை மொழிப்பெயர்த்து, அதன் மூலம் ஹியரோ கிளைப்சை மொழிப்பெயர்த்தால், அம்மொழி எப்படி எழுதப்பயன்ப்படுகிறது என்ற ரகசியம் கட்டுடைக்கப்படும் என ஆய்வாளர்கள் முயற்சி செய்தார்கள்.



# பிரஞ்ச் மொழி வல்லுனர்கள் ,Jean-Joseph Marcel and Remi Raige ,ஆகியோர் தான் ஹியரோ கிளைப்ஸுக்கு அடுத்துள்ள மொழி டெமோடிக் எனப்படும் ஹெர்டிக் மொழி, ஹியரோ கிளைப்சின் சுருங்கிய வடிவம் என அறிவித்தார்கள்.

# பின்னர் 1802 இல் பிரஞ்சு மொழியியல் வல்லுனர் A.I. Sylvestre de Sacy  டெமோடிக் மொழிப்பகுதியை ஆய்வு செய்து சில சொற்களை மட்டும் இனங்கண்டு மொழிப்பெயர்த்தார்.

# அதன் பின்னர்  சுவீடனை சேர்ந்த வல்லுனர் J.D. Åkerblad  ஆய்வு செய்து சில சொற்களை வகைப்படுத்தி என்ன வகையில் எழுத்துகள், ஒலிக்குறிப்புகள் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது எனப்பட்டியலிட்டார்.

ஆனால் யாரும் முழுதாக மொழிப்பெயர்க்க இயலவில்லை. ஆனால் அகெர்ப்லாட் தயாரித்த சிறு அகராதி போன்ற அட்டவணை பின்னால் ஆய்வு செய்தவர்களுக்கு எப்படி அணுக வேண்டும் என உதவியது.

 Thomas  Young (1773-1829):



இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ்  யங்க் என்பவர் இளம் வயதிலேயே மொழி ஆய்வில் சிறந்து விளங்கினார், எகிப்திய மொழியினை மொழிப்பெயர்ப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , மற்றவர்களால் முடியாமல் விட்ட வேலையை முடிக்க முயன்றார். அக்கர்ப்லாட் தயாரித்த அகராதியை அடிப்படையாக வைத்து மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

பலரும்  தவறாக மொழிப்பெயர்க்க காரணம், ஹியரோ கிளைப்ஸ் என்பது ஐடியோகிராம் எனப்படும் சித்திர எழுத்துக்கள், ஒவ்வொன்றும் ஒரு குறியீடு ,அதன் மூலம் ஒரு பொருள் ,அல்லது சொல்லே முழுதாக உருவாக்கப்படும் என நம்பினார்கள். ஹியரோகிளைப்சின் அடுத்த வடிவம் டெமோடிக் என்பதால் அதுவும் அப்படியான குறியீடு மொழி என்றே ஆய்வு செய்தார்கள்.

அவை எல்லாம் எழுத்தின் வடிவம் , ஒலிக்குறிப்புகள் என அணுகவில்லை. தாமசுக்கு இதில் சந்தேகம் என்றாலும் யூகத்தின் அடிப்படையில் ஓரளவுக்கு வெற்றிகரமாக மொழிப்பெயர்த்தது அவர் தான். முதன் முதலில் இக்கல்வெட்டில் டாலமி, கிளியோபட்ரா, பெர்னிஸ் ஆகியப்பெயர்கள் இருக்கிறதென அறிவித்தார் , அவருக்கு இதில் உள்ள எழுத்துக்கள் வெறும் குறியீட்டின் அலகுகள் அல்ல அனைத்தும் ஒலியுடன் கூடிய எழுத்து என சந்தேகம், ஆனால் அக்கால புகழ்ப்பெற்ற ஆய்வாளர்கள் எகிப்திய மொழி ஒலிக்குறியீடு இல்லாத ,எழுத்து இல்லாத சித்திர வகை எழுத்து, என உறுதியாக சொல்லி வந்தார்கள்.

****************

கிளியோபட்ரா என்பதன் ஹியரோ கிளைப்ஸ் வடிவம்.

கிளியோ- அன்பு, பட்ரா- தந்தை, தந்தை மீது அன்புள்ளவள் என்ற காரணப்பெயரே சூட்டபட்டிருந்தது.

எகிப்திய வராலற்றில் பல கிளியோபட்ராக்கள் உண்டு, ஷேக்ஸ்பியர் எல்லாம் எழுதி வர்ணித்த கிளியோபட்ரா-7 ஆவார், அவரது தாயாரின் பெயரும் கிளியோபட்ரா தான் ,அவர் மூன்றாவது கிளியோபட்ரா எனப்பட்டார். மற்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.
******************

எனவே பெரும்பான்மை கருத்துக்கு எதிராக சொல்ல விரும்பாமல் , பாதியிலேயே ஆய்வினை நிறுத்திக்கொண்டார்.மேலும் அவர் பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில் டாலமி என்றால் இது கிளியோபட்ராவாக இருக்கும் என்பது போல  மொழிப்பெயர்த்தார், அவரால் கடைசி வரையில் சித்திரம்,எழுத்து ஆகியவற்றுக்கிடையே ஒரு தர்க்க ரீதியான தொடர்பினை கொடுக்கவோ, ஒரு முறையான அமைப்பினை உருவாக்கவோ முடியவில்லை.



தாலமி என்பதன் ஹியரோகிளைப்ஸ் வடிவம்.

இதன் பின்னால் ஒரு அரசியலும் உள்ளதாக சொல்வார்கள். ஹியரொ கிளைப்ஸ் என்ற மொழி வடிவம் , மொழிகளிலேயே மிகவும் பழமையானது சுமார் 4000-3000 ஆண்டுகள் ,கிருத்துக்கு முன்னால். எனவே அப்பொழுதே ஃபொனடிக்குடன் ஒரு மொழி உருவாகி இருந்தது என்றால் அது வரையில் மிகப்பழையான பண்பட்ட மொழி இலத்தின் என சொல்லப்பட்டு வந்தது அடிபடும், ஆங்கிலம் ,ஆங்கிலோ-சாக்சான் எனப்படும் இலத்தின் வழி உருவானது.

எகிப்திய மொழி ஒலி,எழுத்து உடைய பண்பட்ட மொழி என நிறுவப்பட்டால், எகிப்திய கலாச்சாரமும் பேசப்படும், அது வரையில் எகிப்திய மக்களை நாகரீகம் இல்லாதவர்கள், அடிமை வியாபாரம், நரபலி கொடுப்பவர்கள், கற்கால மக்கள் என ஆங்கில அறிஞர்கள் எழுதி வந்தார்கள்.

பிரமிடு ,இன்ன பிற பிரமாண்ட கட்டுமானங்கள் எல்லாம் பார்த்த பின்னும் எகிப்திய மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என 18 ஆம் நூற்றாண்டிலும் வெள்ளைக்காரர்கள் சொல்லி வந்தார்கள் என்றால் என்ன சொல்வது.

இத்தகைய எண்ணங்களே ரோசெட்டா கல்வெட்டினை முழுமையாக மொழிப்பெயர்க்க தடையாக உருவாகி வந்தது எனலாம்.

Jean François Champollion:



அதே கால கட்டத்தில் , ஆங்கிலேயர்கள் மொழிப்பெயர்த்தாலும் முழுமையான உண்மையை வெளியிடாமல் மறைத்து விடுவார்கள் என பிரஞ்சு மொழி ஆய்வாளர் கேம்போலியன் என்பவரும் தனியே ஆய்வு செய்து வந்தார்.

ஹியரொ ஹிளைப்பிசில் உள்ள வட்டுக்களில்( cartouche)உள்ளே சில சித்திரக்குறியீடுகள் தனித்து காட்டப்பட்டிருப்பதை ஏன் என ஆய்வு செய்தார், அப்பொழுது தான் அவற்றில் முக்கியமான பெயர்களை குறிப்பாக வெளிப்படுத்த நீள்வட்டு வடிவத்துனுள் பொறிப்பதை உணர்ந்தார், அவற்றையும் , டெமோடிக் மொழியில் இருப்பதை ஒப்பிட்டு சிறிது சிறிதாக  புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஹியரொ கிளைப்சில் ஒரு நீண்ட சொல்லினை இரண்டு ,முன்று சித்திரங்களின் மூலமும் சொல்கிறார்கள் அதே சமயம் ஒரு சித்திரம் ஒரு எழுத்தாகவும் பயன் படுத்தப்படுவதை புரிந்து கொண்டார்.


ஒப்பிட்டு மொழிப்பெயர்த்தல்.

சித்திர எழுத்து அதே சமயம் தேவைப்பட்டால் அது ஒலிக்குறியீடாகவும் ,எழுத்தாகவும் பயன்படும் மொழி என்ற சிக்கலை உடைத்தார்.

செப்டெம்பர் 22,1827 ஆம் ஆண்டு ,முதலில் ராம்சே-1 என்ற பெயரை நீள்வட்டில் இருந்து சரியாக மொழிப்பெயர்த்துவிட்டு ,சகோதரரை தேடி  ஓடிச்சென்று பார்த்து சந்தோஷத்தில் " கிடைச்சாச்சு" (“Je tiens l’affaire!” (“I’ve got it!”) எனக்கூவிக்கொண்டு மயங்கிவிழுந்து விட்டாராம், அதன் பின்னர் 5 நாட்கள் நினைவில்லாமல் படுக்கையில் கிடந்துள்ளார். காரணம் சரியாக சாப்பிடாமல்,தூங்காமல் ஆய்வு செய்த அழுத்தம், மற்றும் பலவீனமே ஆகும்.

இதன் மூலம் ஹியரோ கிளைப்சிற்கு என ஒரு இலக்கணம், அகராதி, நிலையான மொழி பெயர்ப்பு முறை என மீண்டும் கட்டமைத்தார் இதனால் , ஹியரோ கிளைப்ஸ் மொழியின் தந்தை எனவும் புகழப்பட்டார்.

ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிக்குறியீடு கொண்ட எழுத்து என நிருபித்து அதனைப்பட்டியலிட்டுள்ளார்.

எப்படி வட மொழியில் ச,ஷ , க,ஹ என வேறுபட்ட ஒலியுடன் எழுத்துகள் உள்ளதோ அப்படியே எகிப்திய மொழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட, ஸ்,கே, என எழுத்துக்கள் உள்ளது.

கேம்போலியன் சிறப்பாக மொழிப்பெயர்த்து அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தாலும் ,ஆங்கிலேயர்கள் ரொம்ப காலம் புறணிப்பேசிக்கொண்டு தவறு என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள், அதிலும் தாமஸ் யங்க், நான் அப்போவே எல்லாம் செய்துவிட்டேன், ஆனால் அதை முழுசா வெளியிடவில்லை, கேம்போலின் காப்பி அடிச்சுட்டார்னு பொலம்பிக்கிட்டே தான் இருந்தார்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில ஒப்பீடு:

ஆங்கிலம் இலத்தின் மூலம் என்பதால் இலத்தின் அடிப்படையிலே அணுக வேண்டிய மொழி, கிரேக்கர்களும், ரோமானியர்களும், எழுத்து மற்றும் ஓவியம் என்பதை இரு வேறு கலைகளாக பிரித்து அணுகினார்கள்.

ஆனால் எகிப்திய மக்கள் எழுத்து, ஓவியம் ,சிற்பம் அனைத்தும் ஒரே கலை வடிவம் என அணுகினார்கள். ஒருங்கிணைந்த கலை. வரைவது போல எழுதுவார்கள், எழுதுவது போல சிற்பம் செதுக்குவார்கள் எனலாம்.

இப்படிலாம் இருக்குமா என நினைக்கலாம், இருக்கும் சீன மொழி, ஜப்பானிய மொழி சித்திர எழுத்துக்களே, எழுதுவது சீனத்திலும், ஜப்பானிலும் சித்திரக்கலையே.

மொழியின் எழுத்து வடிவம் ஓவியத்தில் இருந்தே உருவானது, ஓவியம் எழுத்து எனப்பிரிவது இலத்தின், பிரியாமல் இருப்பது எகிப்திய ஹியரொ கிளைப்ஸ்,ஜப்பானிய,சீன மொழிகள் எனலாம்.

ஹியரோ கிளைப்ஸ்-ஆங்கில எழுத்துகள்:



இந்த சுட்டியில் ஆங்கில, எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் மொழிமாற்ற வசதியுள்ளது ,நீங்களும் ஆங்கிலத்தினை எகிப்திய கியரோ கிளைப்சுக்கு மொழி பெயர்க்கலாம், எகிப்துக்கும் மொழி மாற்றலாம்.

ஆங்கில சொற்களுக்கான எகிப்திய அகராதியும் உள்ளது.

சுட்டி: http://hieroglyphs.net/0301/cgi/lookup.pl?ty=en&ch=a&cs=0

ரோசெட்டா கல்வெட்டில் உள்ள செய்தி:

எகிப்திய மன்னன் தாலமி-5(Ptolemy V Epiphanes (205-180 BC)  என்பவர் , இளம்சிறார் என்பதால் அவருக்கு பதிலாக அவர் தாயார் ஆட்சி செய்து வந்தார், எனவே 13 ஆம் வயதில் மன்னராக மூடிச்சூட்டிக்கொள்வதையே அக்கல்வெட்டில் அறிவித்து இருக்கிறார்.

தாலமியின் சகோதரி தான் கிளியோபட்ரா-7 .தாலமி -5 முடிசூட்டிக்கொள்வதுடன் தன்னை புனிதராகவும்(priest) அறிவிக்கும் நாள் அது. எகிப்திய மன்னராக முடிசூட்டிக்கொள்பவர்கள் முறைப்படி  புனிதராக ,மத குருக்கள் மூலம் அறிவிக்க பட வேண்டும். அதன் பின்னர் மன்னரும் ஒரு கடவுள் ஆகிவிடுவார்.

மன்னருக்கு கோவிலில் சிலை வைக்கப்படும், மேலும் தனிக்கோவிலும் கட்டப்படும், அப்படி வைக்கப்படும் சிலைக்கருகில் ,அவர் புனிதர் ஆனதை அறிவிக்க வைக்கும் கல்வெட்டே ரோசெட்டா கல்வெட்டு.

அதனால் தான் அப்பொழுது எகிப்தில் பயன்பாட்டில் இருந்த மும்மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தாலமி-5 மன்னராக முடி சூடியதும் ,எகிப்திய பாரம்பரியப்படி சகோதரி கிளியோபட்ராவை மணந்து கொண்டார்.

கிளியோபட்ரா தாலமியை விட வயதில் மூத்தவர் என்பதால் , அவரை டம்மியாக்கி விட்டு தானே ஆட்சி பொறுப்பினை எடுத்துக்கொண்டார்,, இதனால் சகோதரன்/கணவன் தாலமிக்கும் ,கிளியோபட்ராவுக்கும் சண்டை வந்து ,அதில் ரோமானிய சக்ரவர்த்தி ஜூலியஸ் சீசர் மத்தியஸ்தம் செய்து , பின்னர் கிளியோபாட்ராவை காதலித்தது,சீசருக்கு பின்னர் ஆண்டனி ,கிளியோபட்ரா காதல் என ஷேக்ஸ்பியர் இலக்கியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரோசெட்டா கல்வெட்டு மொழிபெயர்க்கப்படவில்லை எனில் கிளியோபாட்ரா என்ற எகிப்திய இளவரசி  ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என்றே சொல்லப்பட்டிருக்கும்.ரோசெட்டா கல்வெட்டின் மூலம் தான் மற்ற ஹியரோ கிளைப்ஸ் கல்வெட்டுகள் மொழிப்பெயர்க்கப்பட்டு , தாலமி,கிளியோபட்ரா, நெப்ரட்டி, சீசர், ஆண்டணி இன்ன பிற வரலாற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன, இல்லை என்றால் மேற்கண்ட சம்பவங்களும் ,பெயர்களும் எல்லாம் கற்பனையே உயிருடனோ அல்லது இறந்தவர்களையே குறிக்கவில்லை என்ற டிஸ்கி ஆகி இருக்கும் :-))

திரும்பிப்பார்த்தல் தொடரும்....

-------------
பின் குறிப்பு:

# சில பிழைகள் இருக்கலாம், கிடைத்த மூலங்களில் இருந்து முடிந்த வரை சரிப்பார்த்து வெளியிட்டுள்ளேன்.

# பிழை திருத்தம் செய்யவில்லை, அங்கே சந்திப்பிழை, இங்கே எழுத்துப்பிழை என சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், பின்னர் பிழை திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி:

BBC,sacred-texts.com,WIRED.COM,HISTORY-BIBLE,napoleon-series.org,WIKI,இணைய தளங்கள்,நன்றி!

********************