Friday, April 20, 2012

என்ன கொடுமை சார் இது!-5





ஜோசியம் பார்க்கலையோ ..ஜோசியம்!

ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வருவான்னு ஜோஸ்யம் சொல்வாங்க சில மரத்தடி கிளி ஜோதிடர்கள், கல்யாணம், காதுகுத்து, வியாபாரம் செய்ய எல்லாம் ஜோதிடம் பார்க்கிறாங்க. செவ்வாய் வக்கிரமா பார்க்கிறான் ,புதன் உக்கிரமா பார்க்கிறான் புண்ணாக்கு வியாபாரம் செய்தா பின்னிடலாம்னு துணிக்கடை வச்சிருக்கிறவர் பையனுக்கு தொழில் தொடங்க ஆலோசனை சொல்லும் ஜோதிட சிகாமணிகளும் நாட்டில நிறைய இருக்காங்க.

அதை எல்லாம் அலேக்கா தூக்கி சாப்பிடுவது போல என்ன ஜாதகர் என்ன ஷேர் வாங்கலாம், ஜோதிட முறையில் பங்கு வணிகத்தில் பணம் அல்ல பங்கு வணிக ஜோதிடம்னு சுவாமி ஓம்கார்னு ஒருத்தர் கிளம்பிட்டார் .அடப்பாவிங்களா வெள்ளைக்காரன் கஷ்டப்பட்டு கணினி ,மென்பொருள்னு கண்டுப்பிடிச்சா அதை வச்சு நோகாம ஜோசியம் பார்க்க கிளம்பிடுறிங்களே ...என்ன கொடுமை சார் இது!

*****
சென்னை - ஊட்டி வழி கும்பகோணம்!


சென்னையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டது தாங்க அது.

சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம், நடத்துனரை விசாரித்தேன் ,அப்படி போக சொல்லி உத்தரவாம். யாருக்காவது ஒரே பஸ் டிக்கெட்டில் தமிழ் நாட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் அணுகவும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தினை.

ஊட்டிக்கு டிக்கெட் வாங்குறவன் முழுசா ஊட்டிப்போய் சேர்வாங்கிறிங்க :-))

என்ன கொடுமை சார் இது!

*****
ஓ.கே.ஓகே.(விமர்சனமல்ல)

கையில காசு மித மிஞ்சி இருந்தா எல்லாம் படம் எடுக்க கிளம்பிடுறாங்க, படத்துக்கு கதை சொல்ல வரவங்க கொஞ்சம் குஷிப்படுத்துவோம் அப்போ தான் தயாரிப்பாளார் மசிவார்னு , தயாரிப்பாளரப்பார்த்து "சார் உங்கள ஒரு சைடுக்கா பார்த்தா தல போல இருக்கிங்க இன்னொரு சைடுக்கா பார்த்த தளபதி போல இருக்கிங்கனு " சரவண பவன் சர்வர் போல இருக்கிற தயாரிப்பாளர உசுப்பேத்தி விட்டுட்டு போயிடுறாங்க.

பலப்பேரு இந்த காக்காப்பிடிக்கு எல்லாம் அசராம தயாரிப்ப மட்டும் பார்ப்போம்னு ஆசைக்கு அணைப்போட்டு விடுவார்கள்.சிலப்பேரு தூண்டிலில் சிக்கி எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன் டூயட் பாட நாம செலவு செய்றது, நாமளும் டூயட் பாடிப்பார்ப்போம்னு அரிதாரம் பூசி ஹீரோவாக அவதாரம் பூசிக்கொண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள், அவங்களுக்கு மட்டுமா சூனியம் பார்க்கிறவங்களும் சேர்த்துள்ள பயப்புள்ளைகள் சூன்யம் வைக்குதுங்க :-))

போலீஸ் டி.சி பொண்ணை தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கும் பையன் ஓ.கே செய்து ஓ.கே சொல்ல வைப்பது தான் ஓ.கே.ஒகே எனும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தோட ஒன் லைன் கதை , சுருக்கமா சொன்னாலும் அவ்வளவு தான் விரிவா சொன்னாலும் அவ்வளவு தான் கதை.

ஒரு கல்லும் ,கண்ணாடியும் உடையாம மோதிக்கொண்டால் காதலாம்,
 குண்டு துளைக்காத கண்ணாடியா இருந்தா கல்லாவது கடப்பாரையாவது.

படம் முழுக்க மயிலாப்பூர் சபா நாடகம் போல வாய் வலிக்க பேஷிண்டே இருக்கா ஷந்தானம் அண்ட் அவரோட அல்லக்கையா நடிக்கும் உதயநிதி.ஹீரோவ அல்லக்கைனு சொல்ல்லிட்டேன்னு மொறைக்காதேள் படம் பார்த்தா நோக்கும் அப்டிதாண்ணா தோனும் :-))

படம் முழுக்க ரெண்டுப்பேரும் மெட்ராஸ் ஐ வந்தவாள் போல கருப்புக்கண்ணாடியோடவே அலையுறாங்க ,டைட்டில்ல கண்ணாடினு வர்றதே அதுக்காகவோ?

படத்தில ஷந்தானம் மயிலாப்பூர் பார்த்தான்னு ஷொல்லிண்டு இப்படித்தான் ஏதோ பாஷைல படம் பூரா பேஷிண்டு இருக்கார்.இரண்டரை மணி நேர படத்தில ரெண்டே முக்கால் மணி நேரம் பேசுறார்ப்பா .அதெல்லாம் காமெடி வஜனம்னு சொல்றா அப்படி ஷொன்னா தான் தெரியுது காமெடினே.

லொள்ளு சபானு பழைய சினிமாவ எல்லாம் ஷந்தானம் தொலைக்காட்சில கலாய்ச்சுண்டு இருப்பார் முன்ன அப்போ மீந்து போன பழைய ஸ்கிரிப்ட் ஆ இயக்குனர்க்கிட்டே கொடுத்து இருப்பார் போல.

கிளைமாக்ஸில உதயநிதி விடுற பீட்டர ஷந்தானம் மொழிப்பெயர்ச்சி செய்வார் ,இதெல்லாம் பெண்ணின் மனதை தொட்டு படத்தில விவேக் டீம் செய்தது.கொஞ்ச காலமா கவுண்டரை இமிடேட் செய்தார் , இப்போ விவேக் எல்லாம் ஓய்ஞ்சுட்டதால அவரையும் இமிடேட் செய்ய ஆரம்பிச்சுட்டார்.இப்படியே போனால் ஷந்தானம் வந்த வேகத்தில காணாமல் போக வேண்டியது தான்.

ஒரே கதைய அடுத்தடுத்து படமெடுத்தாலும் படம் ஓடுதுனா இயக்குனர் மேல குற்றமா என்ன எடுத்தாலும் பார்ப்போம்னு போகிற மக்கள் மேல குற்றமானு சாலமன் பாப்பையா,திண்டுக்கல் லியோனி வச்சு பட்டி மன்றம் தான் போடனும்.

தாத்தா பிறந்த நாள் என்றால் உண்டியல் வச்சு நிதி திரட்டுவார், பேரன் ஹீரோவா நடிச்சு நிதிதிரட்டுறார், படம் ஓடும் எல்லா ஏரியாவிலும் கட்சிப்பிரமுகர்களே மொத்தமா டிக்கெட் வாங்கிடுறாங்க, எப்படியும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு தான் எல்லா தியேட்டர்லயும், படத்தின் உண்மை நிலவரம் இரண்டாவது வாரத்துக்கு பிறகே தெரியும்.

கலைக்குடும்பத்தின் கலையார்வத்துக்கு கலை தொண்டு செய்தே கழக உடன்பிறப்புகள்  கடன்காரர்கள் ஆகிடுவாங்க போல இருக்கே.

என்ன கொடுமை சார் இது!

*****
என்னமா சிந்திக்கிறாங்க!

இந்த சமாச்சாரம் ரொம்ப நாளுக்கு முன்னரே எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், எப்படிலாம் ஒத்த சிந்தனை வேலை செய்யுதுனு உதாரணம் காட்ட இதை விட நல்ல உதாரணம் கிடைக்காது என்பதால் பயன்ப்படுத்திக்கொண்டேன் , சும்மா பார்த்து எஞ்சாய் செய்யுங்க!

அந்தக்காலம்:



இது இந்தக்காலம்:



(ஹி..ஹி கவுண்டமணி,கார்த்திக் ஆபிஸ் காமெடி கிடைக்கலை ,படம் இது தான் ,கிடைச்சா சொல்லுங்க போடலாம்)
*****

இராசதந்திரம்:

தமிழ் தாத்தா தனது தொண்டரடிப்பொடிகளுடன் ஞானசன்னிதியில் அரசியல் மந்திராலோசனையில் இருக்கிறார்.

பேருந்துக்கட்டணத்தினை உயர்த்தியது மக்கள் விரோத போக்குனு அறிக்கை விட்டு போராட்டம் நடத்தலாமாய்யா?

ம்ம்க்கும் தலைவரே கடந்த பல ஆண்டுகளாக பேருந்துக்கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவே நஷ்டம் போக்குவரத்துக்கழகத்தினை மூட வேண்டிய நிலையில் கொண்டுவந்து விட்டதே நீங்க தான்னு அம்மையார் கவுண்டர் அறிக்கை விடுவாங்க...

யோவ் அந்தம்மா விடுதோ இல்லையோ நீயே போட்டுக்கொடுப்பய்யா.

ம்ம் பால் விலை ஏத்துனாங்களே அதை கண்டிச்சு அறிக்கை விடலாமே ...

அதுக்கும் அதே தான் நீங்க கடந்த காலங்களில் விலை ஏற்றவில்லை பால்வளத்துறை நட்டம், சரி செய்தேன் பதில் வரும் ...தலைவரே...

யோவ் என்னைய்யா எந்த பக்கம் போனாலும் கேட்டப்போடுறிங்க...இப்படியே போனால் நாம எதிர்க்கட்சியா அரசியல் கடமையே செய்ய முடியாது போல இருக்கே...

ஹி...ஹி தலைவரே நமக்கு  எதுக்கு அந்த கவலை ,எதிர்க்கட்சி இப்போ கறுப்பு எம்ஜிஆர் கட்சி தானே ...நமக்கு பிரச்சினை இல்லை... கவலைய விடுங்க...

யோவ் உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாய்யா எதிர்க்கட்சியா கூட உட்கார விடாமல் அடிச்சு துவைச்சுட்டாங்க மக்கள் அந்த கவலை கொஞ்சமாச்சும் இருக்காய்யா உனக்கு ..உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு நான் எப்படி அரசியல் நடத்தி ..என் லட்சியத்தியத்தை நிறைவேற்றுவேன்.

(மனசுக்குள்.. உங்க லட்சியம் உங்க மகன தலைவராக்கிப்பார்க்கிறது தானே நடத்துங்க யாரு வேணாம் சொன்னா) ஹி..ஹி இப்படி செய்தா என்ன தலைவரே...

எப்படிய்யா?

கடுமையான மின் வெட்டு, கூடவே வரலாறு காணாத மின் கட்டண உயர்வு என காரசாரமா அடுக்கு மொழில கண்டிச்சு ஒரு அறிக்கை விடுங்க தலைவரே ...அந்தம்மா ஆடிப்போயிரும்ல...

போய்யா நீயும் உன் ஆலோசனையும், கடந்த காலத்தில் மின் உற்பத்தியே செய்யவில்லை, மின்வாரியத்துக்கு 500000 கோடி கடன்னு ரிவிட்டா அடிக்கும்யா ....

என்ன தலைவரே நீங்களே இப்படி பேச ஆரம்பிச்சுட்டிங்க....

உங்களை எல்லாம் நம்பி பயனில்லை, நான் அண்ணாவுக்கு பின்னால் நின்றும் ,காமராஜருக்கு முன்னால் நின்றும் அரசியல் செய்தவன் ,எப்போது ,எப்படி அரசியல் செய்யனும்னு தெரியும்,

தனி ஈழம் அமைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவி செய்யணும் ஒரு அறிக்கை விடப்போறேன் , 1980 இல் இருந்து கழகம் விட்ட அறிக்கைகளின் தேதி,கிழமை எல்லாம் பட்டியல் போட்டு பத்து பக்கத்துக்கு அறிக்கையை விட்டா ச்சும்மா அதிரும்ல...

தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், இப்போ மட்டும் அம்மையார் பதிலுக்கு கவுண்டர் கொடுக்க மாட்டாங்களா?

எப்படிய்யா முடியும் .... நம்மை அரசியல் செய்ய விடாம முடக்க மட்டுமே ஈழப்பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்வாங்க ,தனி ஈழம்னு எந்த காலத்திலும் அம்மையார் பேச்சுக்கு கூட பேச மாட்டாங்க,அப்படியே சந்தர்ப்பவசமா அவங்களும் தனி ஈழம் பற்றி அறிக்கை விட்டா ,நாம தான் முன்னாடி அறிக்கை விட்டோம்னு சொல்லிக்கலாம்ல எப்பூடி!

ஆஹா தலைவரே பிரமாதம் அசத்திட்டிங்க, இதுவல்லவோ இராசதந்திரம்... என கோரஸ்சாக தொண்டரடிப்பொடிகள் கூவுகிறார்கள்!

என்ன கொடுமை சார் இது!