Saturday, February 02, 2013

வில்லங்க ரூபம்!

(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights"  எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி" என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------