Saturday, February 22, 2014

சினிமாவுக்கு எனிமா!


(நம்ம வவ்வால் ஒரு தடவை சொன்னா..100 தடவை சொன்னா மாதிரி...ஹி..ஹி!)


சமீபத்திய சென்னை பெருநகராட்சி மாமன்ற நிதிநிலை அறிக்கை சமர்ப்பின் போது, மாமன்றத்தலைவர் சைதை.துரைசாமி அவர்கள் பல திட்டங்களை அறிவித்தார் ,ஆனால் அவற்றை எல்லாம் ஊடகங்களும் சாமனியர்களும் பெரிதும் கவனிக்கவில்லை ,அதே சமயம் சென்னை மாநகரில் "அம்மா திரையரங்கம்" என மலிவு கட்டண திரையரங்குகள் அமைக்கப்படும் என ஒரு மாபெரும் புரட்சித்திட்டத்தினை அறிவித்ததையே அனைவரும் ,வாயில நொரைதள்ளும் அளவுக்கு விவாதித்து மகிழ்கிறார்கள்( நொரை தள்ளப்பதிவு எழுதிட்டு பேசுறப்பேச்சப்பாரு அவ்வ்)

இணைய வெளியிலோ, அய்யய்யோ  ச்சொல்லவே வேண்டாம் ,முகநூல்,பிளஸ், துவித்தர் ,பழம்பஞ்சாங்கமான பிலாக்கர்னு எல்லா இடத்திலும் "இணைய சமூக போராளிகள்" பிரிக்கட்டி பிரிச்சு அடிச்சுட்டு இருக்காங்க!

நாட்டில ஆயிரம் பிரச்சினை ஓடுது ,கூவத்துல சாக்கடை ஓடுது ,அதுல கொசு மேயுது, அதைப்பற்றிலாம் எழுத நமக்கு முடியலை ,இந்த லட்சணத்துல இதைப்பத்தி எழுதனுமானு விரக்தி வெரட்டியடிக்க ,வழக்கம் போல மாட்டு சாணத்தில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு எழுதி "நான் ரொம்ப நல்லவன்" எனக்காட்டிக்கலாமானு மனசுல ஒரு நமைச்சல்.ஏற்கனவே புள்ளிவிவர அறிக்கை போல எழுதுற "கவர்ச்சியா" எழுதனும்னு பெரியவங்களால அறிவுரைக்கப்பட்டும் இன்னுமா திருந்தாம இருக்கணும் ,அவ்வப்போது "கவர்ச்சியா" எழுதி நாமளும் பதிவேண்டானு காட்டிக்கலாமேனு , அம்மா திரையரங்க திட்டத்தினை அலசிக்காயப்போடலாமே என இப்பதிவு.

புரட்சித்தலைவினு பட்டம் போட்டுக்கிறிங்களே ,என்ன புரட்சி செய்தீர்கள்னு யாராவது கேட்டுட்டாங்களானு தெரியலை ,சமீப காலமாக அறிவிக்கப்படுவன எல்லாமே புரட்சிகரமாகவே இருக்கின்றன ,பாவம் என்னை போன்ற அப்பிராணிகளுக்கு தான் மிரட்சியில முழுப்பிதுங்குது அவ்வ்!

இனிமே எவனாச்சும் அம்மையாரைப்பார்த்து "என்ன புரட்சி பண்ணினிங்கனு" நாக்கு மேல பல்லு போட்டு சொல்லுவான் ,சொன்னான் வாயில வெத்தலைப்பாக்கு போட வச்சிட மாட்டாங்க ரெத்தத்தின் ரெத்தங்கள் அவ்வ்!

இம்மாபெரும் புரட்சிகர சோசலிச முற்போக்கு திட்டத்தினை ஆதியோடு அந்தமாக அலசி ,பொருளாதார ரீதியாக சாத்தியமா என வரலாறு,புவியியல் ,புள்ளியியல் ஆதாரங்களோடு காண்போம் வாரீர்,வாரீர்!

# அம்மா திரையரங்க திட்டம் நடைமுறையில் சாத்தியமா?

சாத்தியமே!

# பொருளாதார ரீதியாக லாபமளிக்க கூடியதா?

லாபகரமான திட்டமே!

# இதனால் சமூகத்துக்கு பலன் உண்டா?

உண்டு!

# அப்படியானால் மக்களுக்கு அவசியமான திட்டம் தானே என்றால்,

இல்லை என்பேன்!

ஏனெனில் திரைப்படத்துறையினை முட்டுக்கொடுத்து காக்கும் சூழல் இல்லை, மேலும் இதனை விட அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு இருக்கின்றன ,அவற்றின் மீது கவனம் செலுத்தலாம் என்பேன்.


இப்போ பொதுவா அரசே திரைத்தொழிலில் பங்குப்பெற்று நடத்துவதன் முன்,பின் வரலாற்றினைப்பார்ப்போம்.

# அரசுக்கு திரையரங்கம் நடத்துவது தான் வேலையா ,இந்த கொடுமைய எல்லாம் அம்மையார் மட்டும் தான் செய்வாங்கனு சில,பலர் நினைக்கலாம்,ஆனால் அரசே திரையரங்குகள் மற்றும் கலையரங்குகளை நடத்துவது ஆதி காலம் தொட்டே இருக்கிறது.

பல நாடுகளிலும் அரசே படத்தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன, இதற்கு ஆரம்பப்புள்ளி திரைப்படங்களின் ஆதி மூலமான ஃபிரான்ஸ் நாடு ஆகும்.

பிரான்ஸை சேர்ந்த, Auguste and Louis Lumière சகோதரர்கள் கி.பி 1895 இல் "உணவு இடைவேளை" என்ற  முதல் சலனப்படத்தினை திரையிட்டதில் இருந்து "திரைப்பட தயாரிப்பில்" பிரான்சின் பங்கு துவங்குகிறது.

ஆரம்பத்தில் உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்கள் பிரான்சில் தான் தயாரிக்கப்பட்டன, பல தயாரிப்பு நிறுவனங்களும் துவங்கின,உலக அளவில் திரையிடப்பட்டன. லூமியர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களே இந்தியாவிலும் பார்க்கப்பட்டது,அப்படி திரையிடப்பட்ட ஒரு படத்தினை "தாதா சாகேப் பால்கே" பார்க்க நேரிட்டதால் தான் இந்திய சினிமா துறையும் உருவானது.

*(எச்சரிக்கை: பால்கே வரலாற்று பதிவு கிடப்பில் இருக்கு ,எந்நேரமும் வரலாம் அவ்வ்)

ஆனால் அமெரிக்காவும் படத்தயாரிப்பில் குதித்து பெருமளவில் தயாரிக்க ஆரம்பித்ததும் ,பிரஞ்சு படத்தயாரிப்புகளுக்கான உலக சந்தை சுருங்கியது,உள்நாட்டு சந்தையிலும் அமெரிக்க படங்கள் ஆதிக்கம் செலுத்தவே ,பிரஞ்சு தயாரிப்பாளர்கள் ,திரையரங்குகள் ஆகியன நெருக்கடியில் சிக்கின. எனவே 1911 ஆம் ஆண்டு ,பிரான்சில் 7 அயல்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கண்டிப்பாக ஒரு பிரஞ்சு படத்தினை திரையிட வேண்டும் என தியேட்டர்களுக்கு கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளது.

அப்படியும் பிரஞ்சு படத்தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் தவிக்கவே, படத்தயாரிப்பினை ஊக்குவிக்க ,அரசே கடனுதவி அளித்தது மேலும்  Georges Méliès என்பவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தினை பிரஞ்சு அரசே வாங்கி படத்தயாரிப்பிலும் ஈடுபடலாயிற்று.

இவ்விடத்தே ஜியார்ஜெஸ் மெலைஸ் பற்றி சிறிது நினைவு கூர்வோம்,இல்லையெனில் ,திரை ஆர்வலன் என நினைத்துக்கொள்வதில் பொருளேயில்லை, தேவையில்லாத கதை என நினைப்பவர்கள் ஒரு லாங்க் ஜம்ப் அடித்து அடுத்தப்பகுதிக்கு தாவவும்!

Georges Méliès என்பவர் அக்காலத்தில் மேஜிக் நிபுணராக இருந்து ,திரைப்படத்துறையில் இயக்கம்,நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளிலும் பிரான்சில் கலக்கியவர். இன்றும் பயன்ப்படுத்தப்படும் பல திரை சிறப்பு நுணுக்கங்கள் இவராலேயே உருவாக்கப்பட்டவையே. அதனாலே "திரைப்பட சிறப்புக்காட்சிகளின் தந்தை" என அழைக்கப்படுகிறார். எடிட்டிங்கில் பேரலல் கட், ஜம்ப் கட் எல்லாம் இவரால் கையாளப்பட்ட உத்திகளே!

உலகின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படமும் இவர் தான் எடுத்தாராம், ஒரு அம்மணி உடைமாற்றுவது தான் மொத்த படமே, படம் முடிச்சதும் அம்மணியையே கண்ணாலம் கட்டிக்கினார் அவ்வ்!(ஹி...ஹி இப்படி ஒரு படம் எடுத்து ...எடுத்து அடப்போங்கப்பா)

கி.பி 1900 ஆம் ஆண்டில் ,மவுனப்படக்காலத்திலேயே , இவர் ஒருவரே ஏழுத்தோற்றங்களில் ஒரே காட்சியாக தோன்றி "சப்தவதாரம்" எடுத்து சாதித்தவர். தொழில்நுட்பம் வளர்ந்தக்காலத்தில் கூட தசவதாரம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக பில்ட் அப் தான் நம்ம ஊரில் கொடுக்கிறாங்க அவ்வ்!

மேலும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கைகளால் வண்ணம் தீட்டியே கி.பி 1902 இல் வண்ணப்படங்களையும் எடுத்துள்ளார்.

சப்தவதாரம்- The One-Man Band 




வண்ணப்படம்- A Trip to the Moon 



---------------------------------------------------

பிரஞ்சு மொழியில் பல உலக சிறப்புப்பெற்ற கலைத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் ,அரசு தயாரிப்பில் தான் உருவான, பிரஞ்சு புதிய அலை சினிமா பிறப்பதற்கும்.அரசின் இம்முயற்சியே காரணமாகும்.

கி.பி 1946 முதல் the Centre national du cinéma et de l'image animée (CNC) என்ற அமைப்பின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் பிரஞ்சு அரசு ஈடுபட்டு வருகிறது,மேலும் உலக சினிமா நிதி என்ற ஒன்றினை உருவாக்கி பல்வேறு நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் உலக படங்களையும் தயாரிக்கிறது.

குறிப்பு:

உலகத்திலேயே இந்தியர்களுக்கு சினிமா மோகம் அதிகம்,அதிலும் தமிழனுக்கு வெறீயே அதிகம்னு பொதுவா பேச்சுண்டு, ஆனால் அதையெல்லாம் அசால்ட்டா பிரெஞ்சுக்காரங்க தூக்கியடிக்கிறாங்க,

உலகத்திலேயே திரையரங்க வருவாயில் மூன்றாவது இடம் பிரான்ஸ் தான் , முன்னால அமெரிக்காவும்,அடுத்து இந்தியாவும் இருக்கு.

மூன்றாவது இடம் தானேனு நினைக்கலாம் அங்கே தான் இருக்கு மேட்டர், அமெரிக்கா பெரிய நாடு, மக்கள் தொகை நம்ம அளவுக்கு இல்லைனாலும் 32 கோடி இருக்கு,மேலும் நிறைய தியேட்டர் அதோடு  உலக அளவில் மார்க்கெட் உள்ளவர்கள்.

இந்தியா பெரிய நாடு ,அதிக மக்கள் நிறைய பேர் படம் பார்க்கிறாங்க,எனவே இரண்டாம் இடம்.

ஆனால் வெறும் 5.9 (6.58 crores-2013)கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சில் 5,465 தியேட்டர்கள் இருக்கு(தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 7 கோடி ,1,150 தியேட்டர்களே உள்ளன), மேலும் ஒரு மாநகர பகுதியில் உலகிலேயே மிக அதிக தியேட்டர்கள் கொண்ட நகரம் பாரிஸ் தான்!!!

இனிமே எவனாது தமிழனுக்கு சினிமா வெறினு சொன்னால் "ப்ரெஞ்ச் ஃப்ரை" செய்துடணும் :-))


# அதே காலக்கட்டத்தில் இங்கிலாந்திலும் படத்தயாரிப்பில் நெருக்கடியான சூழல் உருவாகவே ,இங்கிலாந்து அரசும்,1925 இல் அயல்நாட்டு படங்களுக்கு கட்டுப்பாடு,உள்நாட்டு தயாரிப்புக்கு வரிச்சலுகை என வழங்கியது, இங்கிலாந்து சினிமாட்டோகிராபி சட்டம் என ஒன்றினையும் போட்டுள்ளது.

பின்னர் மீண்டும் 1949 இல் "the National Film Finance Corporation (NFFC)" என்ற அமைப்பினை உருவாக்கி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும் கட்டண வசூலில் 50% தயாரிப்பாளருக்கு கட்டாயம் பங்கு தர வேண்டும் என சட்டமும் இயற்றியது.

# ஐக்கிய அரசநாடுகளின் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் திரைப்படத்துறையினை மேலும் விரிவாக்க வேண்டும் என திட்டமிட்டு, கி.பி. 1960 இல் பேருந்துகளை "நகரும் திரையரங்குகளாக"(movi bus) வடிவைமத்து ,நகரில் உலாவ விட்டது.

(மூவி பஸ் குழு)

(டிக்கெட் வாங்க(சினிமாவுக்குதேன்) காத்திருக்கும் சீமான்கள்)

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்,அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் புரொஜெக்ஷன், வண்ணத்தொலைக்காட்சியெல்லாம் இல்லை, வழக்கமான சினிமா புரொஜெக்டரையே பேருந்துக்குள் வைத்து இயக்கினார்கள்!

( அக்கால மூவி பஸ் உட்புறம்,அப்பவே ஒருத்தன் தூங்குறான்யா)

ஆம்னி பஸ்ஸில் டிவிடில படம் போடுறதுக்கு பெரியார் சுழியே ,இங்கிலாந்தில தான் போட்டிருக்காங்க :-))

தற்பொழுது ஐக்கிய அரசநாடுகள் அரசு இத்தகைய "சினிமா பேருந்துகளை" இயக்குவதில்லை, ஆனால் அதே பழைய சினிமா பேருந்துகளை சில திரையார்வலர்கள் விலைக்கு வாங்கி ,செப்பனிட்டு டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்,சர்ரவுண்டு சவுண்டில் இன்றும் லண்டனில் இயக்கி வருகிறார்கள்.

(தற்கால டிஜிட்டல் மூவி பஸ்)

# திரைப்படங்களுக்கு முன்னரே நாடகங்களை அரங்கேற்ற என அரசே 'நாடக அரங்கங்களையும்" கட்டியுள்ளது.

கி.பி 1879 இல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அரங்கேற்ற என " தி ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டர்" என ஒரு நாடக அரங்கினை சிலர் ஒன்று சேர்ந்து உருவாக்கினர், பின்னர் 1939  இல் ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர் என அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.

(ஷேக்ஸ்பியர் நாடக கொட்டாய்)

அக்காலக்கட்டத்தில் ,பெர்னாட் ஷா முதலான எழுத்தாளர்கள் மற்றும் நாடக ஆர்வலர்கள் ஒன்று கூடி அரசே ஒரு நாடக அரங்கினை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,அதன் பலனாக  கி.பி 1948 இல் லண்டன் கவுண்டி கவுன்சில் ,தேம்ஸ் நதிக்கரையோரம் இடம் ஒதுக்கி தந்தது. பின்னர் கி.பி 1949 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி ,நிதி ஒதுக்கி "தி ராயல் நேஷனல் தியேட்டர்" என ஒன்றினை நாடக அரங்கேற்றங்களுக்காக கட்டினார்கள்.

(நேஷனல் நாடகக்கொட்டாய்)

இந்த நாடக அரங்கம் இன்றளவும் பல மாற்றங்களுடன் இயங்கி வருகிறது , இதற்கென ஆண்டு தோறும் ஆகும் செலவில் 28% மாநியமாக இங்கிலாந்து அரசு அளிக்கிறது, மேற்கொண்டு நிதி நன்கொடைகள் மற்றும் கட்டணத்தின் மூலம் சரிக்கட்டப்படுகிறது.

நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப, அரங்கில் நடைப்பெறும் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு சினிமா தியேட்டர்களின் திரையில் செயற்கைக்கோள் மூலமும் ஒளிப்பரப்பப்படுகிறது.

தமிழகத்தின் நிலை:


நம் நாட்டில்  தமிழ்நாடு என மொழி வாரியாக மாநிலமாகாத அக்காலத்தில், சென்னை மாகாண ஆட்சி மன்ற செயல்பாடுகள் ,அரசினர் தோட்டம் எனப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் இருந்த "பழைய கவர்னர் மாளிகையில்" தான் கூடியது ,பின்னர் இடத்தேவை கருதி ஒரு புதியக்கட்டிடமும் கட்டப்பட்டது, இந்தியா குடியரசாக ஆன பின்னர் செயல் பட்ட தமிழக சட்ட மன்றம் அப்புதியக்கட்டிடத்தில் தான் கி.பி 1952-57 வரையில் செயல்ப்பட்டது.

மேற்கண்ட சட்டமன்ற வரலாறு எதுக்குனு குழம்பலாம், விசயமிருக்கு,இன்று அம்மா திரையங்கத்தினை நக்கலடிக்கும் கழக சொம்புகள் ஒன்றினை  வசதியாக மறந்து விட்டார்கள், சென்னையில் முதல் அரசு திரையரங்கினை  1974 இல் உருவாக்கியது வேறு யாருமல்ல சாட்சாத் மஞ்சத்துண்டு அய்யா அவர்களே :-))



ஆமாம் அப்பழைய சட்டமன்ற வளாகத்தினை  கி.பி 1974 இல் மேம்படுத்தி , 1039 நபர்கள் அமரும் வகையில் திரையரங்காகவும், மாலையில் நாடக அரங்காகவும் செயல்படும் வகையில் மாற்றி கட்டி,அதற்கு கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவாக "கலைவாணர் அரங்கம்" எனப்பெயரிட்டார்கள். எனவே சென்னையில் முன்னரே அரசால் திரையரங்கம் நடத்தப்பட்டுள்ளது  என்பது தெளிவாகும்.

லாபகரமாக இயங்கியதா என்ற கேள்விக்குள் எல்லாம் போகத்தேவையிலை ,கலைவாணர் அரங்கு 2009 வரையில் சிறப்பாகவே இயங்கியது, மாலையில் பி.சி சர்க்கார் மேஜிக் ஷோ, நாடகம் போன்றவை நடக்கும்,பகல் வேலையில் இரு காட்சிகள் மட்டும் ஆங்கிலம்,தமிழ் என ஏதேனும் திரைப்படங்களை மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள்.

நானே பல முறை பார்த்துள்ளேன்,முதல் வகுப்பு கட்டணமே 10 அல்லது 12 ரூ என இருக்கும், பெரும்பாலும் பல இடங்களில் ஓடி முடித்த திரைப்படங்கள் அல்லது உலக திரைப்பட வரிசையில் வந்த படங்களை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை  வாங்கி திரையிடும், சில சமயங்களில் "கிளாசிக்கான ஸீன்" படங்களும் காணக்கிடைக்கும் ஹி...ஹி!

(இடிப்பட்ட கலைவாணர்)

இத்தகைய பாரம்பரியமிகு கலையரங்கை 2009 இல் புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என இடித்து தள்ளியதும் ,மாண்புமிகு மஞ்சத்துண்டு அவர்களே, மேலும் புதிதாக ஒரு கலையரங்கு கட்டி கலைவாணர் பெயரே வைப்பேன் என வாக்குறுதியளித்தார் , அவசரமாக அரைகுறையாக தலைமைச்செயலகத்தினை கட்டி திறந்தாரே ஒழிய "கலையரங்கை கட்ட மறந்துவிட்டார்" அவ்வ்!

சென்னையில் மட்டுமல்ல திருச்சியில் கூட மாநகராட்சியின் சார்பில் "கலையரங்கம்" என்ற தியேட்டர் கட்டப்பட்டு ,இன்றளவும் இயங்கி வருகிறது,தற்சமயம் நீண்டக்கால குத்தகைக்கு விடப்பட்டு ,டிடிஎஸ், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் "கதிர் வேலன் காதலை" மக்களுக்கு காட்டி மகிழ்வித்து வருகிறது!



இது போன்று நெய்வேலி நகரியத்தில் ,  மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ,பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் "அமராவதி" என்ற திரையரங்கம் நடத்தப்பட்டது, தற்சமயம் செயல்பாட்டில் இல்லை.

எனவே அரசு எந்திரங்களின் சார்பாக திரையரங்குகள் கட்டி நிர்வாகிப்பது ஒன்றும் வழக்கில் இல்லாத செயல் அல்ல.

கம்யூனிச நாடுகளில் எல்லாம் வழக்கமாகவே திரைப்படத்தயாரிப்பு,விநியோகம், திரையிடல் என அனைத்தையும் அரசே செய்யும்(முன்னாள் சோவியத் யூனியன்) ,அவர்களை உதாரணம் காட்டக்கூடாது என்றே ஜனநாயக நாடுகளை சொல்லியுள்ளேன்.

#  இந்திய அளவில் ,திரைப்படங்களின் வளர்ச்சிக்காக தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (NFDC formerly Film Finance Corporation)என ஒன்று நிறுவப்பட்டு , பல படங்களை அரசின் நிதியில் தயாரிக்கப்படுகின்றன.



ஜி.வி.அய்யரின் மகாபாரதம்(முதல் சமஸ்கிருத மொழிப்படம்) , மேலும் சலீம் லாங்டே பீ மாத் ரோ ,மீரா நாயரின் மிர்ச்சி மசலா,சலாம் பாம்பே,மம்முட்டி நடித்த "பாபா சாகெப் அம்பேத்கார்" ,டிரெயின் டு பாகிஸ்தான், ஷபனா அஸ்மி நடித்த தாராவிபோன்ற விருது வென்றப்படங்கள் எல்லாம் NFDC ஆல் தயாரிக்கப்பட்டவையே.



தமிழிலும் பல படங்கள் NFDC நிதியில் தயாரிக்கப்பட்டுள்ளன, பாலு மகேந்திராவின்(காலம் சென்ற) வீடு,சந்தியாராகம் , மகேந்திரனின் "சாசனம்", ஹரிஹரனின் "ஏழாவது மனிதன்" கே.எஸ்.சேதுமாதவன்(கேரளா)இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடித்த "மறுபக்கம்"போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் புதுமுக இயக்குனர்கள், பிரபல இயக்குனர்கள் என அனைவருக்கும் NFDC நிதியளித்து உதவியது ,சமீபகாலமாக புதுமுக இயக்குனர்களுக்கு படம் தயாரிக்க நிதியளிப்பதில்லை( தற்காலிகமாக அனைத்து படத்தயாரிப்பினையும் நிறுத்தியுள்ளார்கள்). தற்சமயம் இணையத்தில் கட்டண சேவையாக படங்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

அரசின் நிதியில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் எனில் திரையரங்குகளும் கட்டலாம் தானே!

# பொருளாதார சாத்தியம்.


திரையரங்குகளை அரசே நடத்தினால் அவற்றிற்கு நல்ல திரைப்படங்கள் கிடைப்பது கடினம் மேலும்  பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் விநியோக விலை அதிகம் அவற்றினை வாங்கி மலிவாக திரையிட்டால் நட்டம் வரும் என்கிறார்கள்.

ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது ,இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படுகின்றது, இதனை சரி கட்டும் விதமாக , வரிவிலக்கு பெற்ற படங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை "திரைப்பட *பிரதி" தயாரிப்பு செலவின் விலைக்கு மட்டுமே அரசிற்கு விற்க வேண்டும் என சட்டம் போடலாம்.

* பிரதி தயாரிப்பு செலவு தற்போது டிஜிட்டல் DCP க்கு சுமார் 50 ஆயிரங்கள் மட்டுமே

இப்படி செய்வது அரசே ,அதிகார துஷ்பிரயோகம் செய்யும் செயல் என நினைக்கலாம், அப்படியல்ல வழக்கமாக தேசிய விருது வென்ற படங்களின் ஒரு பிரதியை,படப்பிரதியிட ஆகும் செலவுக்கே தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்க வேண்டும் என விதி இருக்கு.

அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்வார்கள், தூர்தர்ஷனிலும் ஒளிப்பரப்பிக்கொள்வார்கள். விருது கிடைக்குது எனில் படப்பிரதி விலைக்கு விற்கும் தயாரிப்பாளர்கள் ,வரி விலக்கு கிடைக்க,படப்பிரதியின் விலைக்கு கொடுக்க கூடாதா?

இது நம்ம நாட்டில மட்டும் இல்லை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு படம் அனுப்பினாலும் இப்படி ஒரு பிரதியை கொடுக்கணும், அவர்கள் அவற்றை எல்லாம் ஆஸ்கார் பெஸ்ட் மூவி கலெக்‌ஷன்" என டிவிடி போட்டு விற்றுக்கொள்வார்கள் அவ்வ்!

மேலும், ஆஸ்கார் நாமினேஷன் செய்யும் போது தயாரிப்பாளர் சுமார் 200 டிவிடி பிரிண்டுகளும் இலவசமாக அளிக்கனும், அதெல்லாம் ஜூரிகள் பார்க்கவாம்!

பல கோடி ரூபாய்கள்  மதிப்பில் கேளிக்கை வரிச்சலுகை கொடுக்கும் அரசுக்கு பதில் கைமாறாக இதனைக்கருதி தயாரிப்பாளர்கள் செய்யலாம்,செய்வார்கள்! அம்மையார் உத்தரவு இட்டால் மீற முடியுமா,இல்லை மீறித்தான் படமெடுக்க முடியுமா!!!

# மேலும் பல எண்ணற்ற சிறு,குறு முதலீட்டு திரைப்படங்களுக்கு அரங்கம் கிடைப்பதேயில்லை எனவே அவர்களுக்கும் பெரும்பயனாக இருக்கும்.

# தற்பொழுதெல்லாம் குறும்படம் தயாரிப்பவர்களும் ,மெனக்கெட்டு பிரிவியூ தியேட்டர்களை அதிக வாடகைக்கு பிடித்து திரையிட்டு காட்டுகிறார்கள், அவர்களுக்கு மலிவான கட்டணத்தில் திரையிட அனுமதியளிக்கலாம். இது திரைக்கலையினை வளர்க்க உதவும்.

# சென்னையில் மட்டும் சில திரையரங்குகள் அமைப்பதை விட தமிழகம் முழுவதுமே மாவட்டம் தோறும் சில அரங்குகள் அமைத்து விட்டு ,சென்னையில் ஒரு மத்திய திரைப்பட ஒளிப்பரப்பு சேவை வழங்கியை நிறுவி அனைத்து அரங்குகளிலும் ,செயற்கை கோள் மூலம் திரையிட செய்யலாம்,எனவே ஒன்றிரண்டு டிஜிட்டல் பிரிண்ட் கிடைத்தாலே பல அரங்குகளில் திரையிட்டு ,குறைவான செலவில் அதிக வருவாய் திரட்ட முடியும்.

# ஒவ்வொரு திரையரங்க வளாகத்திலும் ,கடைகள்,உணவங்கள் அமைக்க இடம் ஒதுக்கி வாடகைக்கு விடலாம்,எனவே நிரந்தர வருவாய் நிச்சயம்.

இவ்வாறு பல்வேறு வருவாய் வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்ப்படுத்தினால் அரசின் திரையரங்க திட்டத்தின் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும், இயக்குதல் ,பராமரிப்பு செலவீனங்களை சமாளிக்கவும் இயலும்,நட்டம் தவிர்க்கப்படும்.

மலிவுக்கட்டண திரையரங்குகள் உருவானால் ,தற்போதுள்ள திரையரங்குகள் அடிக்கும் கட்டண கொள்ளைக்கு சாவு மணியாக அமையும், மொக்கைப்படத்துக்கெல்லாம் 100 ரூக்கு மேல் அழும் மக்களுக்கு பெரிதும் உதவும்.

சேவை மற்றும் தொழில் துறை ஆகியவற்றை எல்லாம் அரசே நடத்துவது என்பது பொதுவுடமை சித்தாந்தம் ஆகும் .அம்மா குடிநீர்,உணவகம், அம்மா திரையரங்கம் என பல பொதுவுடைமை வணிக நிறுவனங்கள் அரசால் துவக்கப்படுவதை பார்த்தால் வருங்காலத்தில் , தமிழ்நாடு சோசலிச அரசாக மாறினாலும் ஆச்சர்யமில்லை, எல்லாம் செவப்புத்துண்டு கட்சிக்காரங்களோட வச்சிருக்க கூட்டணி சவகாச தோஷமோ என்னவோ!!!

ஒரு உற்சாக குறிப்பு:

பதிவை கவர்ச்சிகரமாக எழுதனும்னு நினைச்சாலும் ,அப்படி ஒரு அசாம்பாவிதம் நம்ம எழுத்துல நடக்கவேயில்லையேனு ஒரே ஃபீலிங்ஸ், எனவே, ஹி...ஹி இன்னொரு படம் போட்டுக்கிறேன் !

(என்னப்பார்வை உந்தன் பார்வை...ஹி..ஹி)

-------------------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://en.wikipedia.org/wiki/Royal_National_Theatre

#http://en.wikipedia.org/wiki/Shakespeare_Memorial_Theatre

#http://www.nationaltheatre.org.uk/support-us/why-support-the-national-theatre/national-theatre-live-digital-innovation

# http://www.cnc.fr/web/en/missions

#  http://www.nfdcindia.com/

# http://stats.uis.unesco.org/unesco/TableViewer/tableView.aspx

மற்றும் விக்கி,யூ டியூப், கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------------