Friday, November 22, 2013

பெயரும் பின்புலமும்-1

(நம்மளையும் ஊரு பேருலாம் படிச்சு காட்ட சொல்வானோ? ...ஹி...ஹி)


"WARNING": A "சுயவிளம்பரம்" AHEAD OF U!

என்னை எழுத வைக்கும் தெய்வங்களான ,உயிரினும் இனிய அன்பு நெஞ்சங்களே,

இத்தனை நாளாக எவ்வளவோ மொக்கை பதிவுகளை முழம் முழமாக ,சரம் ,சரமாக எழுதி சல்லடை கண்ணாக உங்கள் நெஞ்சமும் புண்ணாக செய்து வந்தப்போதிலும்  , சற்றும் அயராது அவற்றைப்படித்து பின்னூட்டமிட்டு ,அடியேனை அன்புடன் ஊக்கப்படுத்தி வந்துள்ளீர்கள், உங்கள் பேராதரவுடன் வெற்றிகரமாக இன்று 256 ஆவது பதிவு எனும்  "மைல் /கிலோமீட்டர் கல்லினை" எட்டியுள்ளேன்,  மேலும் வழக்கமாக சராசரியாக 300-400 அடிகள் மட்டுமே ஒவ்வொரு பதிவுக்கும் கிடைக்கும், ஆனால் இதற்கு முன்னர் வெளியிட்ட "255' ஆவது பதிவான "கற்றது தமிழ்-6" எனும் பதிவிட்ட அன்றே ஒரே நாளில் "966" அடிகள்(ஹிட்ஸ்) போட்டு குபீர் என உச்சத்தில் தூக்கி வைத்து எமது பதிவை பெருமை படுத்தவும் செய்தீர்கள்,  ஆதாரமில்லாமல் அடுப்பு பற்ற வைக்கும் பழக்கமில்லை என்பதால் ,இதோ ஆதாரங்கள்,

படம்-1




படம்-2



இன்றளவில் எமது வலைப்பதிவிற்கு ஒட்டு மொத்த அடிகளாக (hits)"199,556" என்ற அரிய இலக்கினை அடையவும் செய்துள்ளீர்கள், ஒப்பாரும் இல்லாமல் மிக்காரும் இல்லாமல் ,மொக்கையிலும் கடைந்தெடுத்த மொக்கைகளாக  எத்தனையோ பதிவுகளை போட்டு வந்தப்போதிலும் அடியேனுக்கு ஆக்கமும்,ஊக்கமும்,அன்பும்,ஆதரவும் அள்ளி அள்ளி தந்து போஷித்த உங்களுக்கு நன்றி சொல்ல தமிழ் ,ஆங்கிலம், மலாய், சீன மான்டரின், தகலுகா, ஸ்வாகிலி,செல்டிக் ,ஸ்பானிஷ் என எந்த மொழியிலும் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை,,ஆயினும்  வேறு வழி எதுவும் புலப்படாத காரணத்தினால் எனக்கு தெரிஞ்ச தமிழிலேயே  நன்றி சொல்லிவிடுகிறேன் ,"டேங்க்ஸ்"

ஹி...ஹி வழக்கமாக எல்லாரும் 100,200,500,1000 ஆவது பதிவுகளை தான்  அல்பத்தனமாக "மைல் கல்" என  சொல்லி பெருமை பட்டுப்பாங்க,நாம அம்மாம்  பெரிய சாதனை எல்லாம் செய்ய வாய்ப்பில்லை, வருங்காலத்தில அப்படிலாம் சாதனை செய்யுற வரைக்கும் பொழைச்சிக்கிடப்போமானும் தெரியாது,மேலும் இந்த 256,(or)342 போன்ற எண்கள் எல்லாம் என்னப்பாவம் பண்ணிச்சுனு அதை எல்லாம் குறிப்பிட்டு மக்கள் கொண்டாடுவதில்லையேனும் தோன்றியது, அதான் சும்மா "ஒரு மொக்கை +சுய விளம்பரம்"  ஆக எழுதி அவ்வெண்களையும் சிறப்பித்தாயிற்று ,எல்லா நாளும் நல்ல நாளே ,எல்லா எண்களும் சிறப்பான எண்களே, நல்லோர்க்கில்லை நாளும் கோளும்!

இந்த மொக்கைய படிக்கவா இம்பூட்டு தூரம் வந்தோம்,எதாவது "கருத்தா "சொல்லுய்யானு நீங்க சொல்லுறது கேட்குது , சரி உங்களுக்காக ,உங்க ஆசைக்காகவே கருத்தா , சில ஊர்களின் இன்னாள் மற்றும் முன்னால் பெயர்களை பட்டியலிடுகிறேன் ,படித்து இன்புறுங்கள்!

அக்காலத்தில் சில ஊர்களை மட்டும் தொகுத்து,இன்னாள்,முன்னால் ஊர்ப்பெயர்கள் என ஒருப்பதிவிட்டிருந்தேன்,அதன் பின்னூட்டத்தில் பலரும் மேலும் சில ஊர்களின் முன்னால் பெயர்களை அளித்திருந்தார்கள், அவற்றையும் சேர்த்து ,இன்னும் சில ஊர்களின் பெயர்களையும் தொகுத்து வழங்கியுள்ளேன்.

அப்பழைய பதிவினை படிக்க சுட்டியை அமுக்கவும்,


ஊர்பெயர்கள்-1



இந்நாள் -    முன்னால்

#மதுரை - திருவாலவாய் (ஆலவாய்)

மருத மரங்கள் அதிகம் கொண்ட இடம் என்பதால் மருத வனம் என்ற பெயரும் உண்டு,அதுவே மருதை ,மதுரை ஆயிற்று என்கிறார்கள்.

# திருநெல்வேலி - வேணு வனம்.

மூங்கில் காடுகள் நிறைந்த பகுதி என்பதால் ,வேணு வனம் என்ற பெயர் உண்டு.

#சீர்காழி - பிரமாபுரம்

#மயிலாடுதுறை - மாயுரம், மாயவரம்

ஆற்றில் இறங்க படிகள் உள்ள இடத்தினை துறை என்பார்கள்,அத்துறையில் மயிலாடும் என்பதால் மயிலாடுதுறை என்றப்பெயர் என்கிறார்கள்.
இன்னொரு காரணம் மொழியியல் அடிப்படையில் நானே கண்டுப்பிடிச்சது,

மயிலம் என்றால் பால்வெண்மை,பழுப்புவெண்மை நிறம் ஆகும், மயிலக்காளை என்பது பழுப்புகலந்த வெள்ளை மாட்டினைக்குறிக்கும்.

மயிலம் +ஆடு = பழுப்பு நிற ஆடுகள் = செம்மறியாட்டினை குறிக்கும். எனவே செம்மறியாடுகள் கூட்டமாக தண்ணீர் அருந்திய ஆற்றந்துறையாகவும் இருக்கலாம். ஏன் எனில் அருகிலே ஆடுதுறை என இன்னொரு ஊரும் உள்ளது. அங்கு விவசாய ஆராய்ச்சி நிலையமும் உள்ளது,அவ்வூரில் இருந்து வெளியாகும் பயிர் வகைகளுக்கு "ADT-1,ADT-2 என்பதாக பெயர் வைப்பார்கள்.

மேலும் அந்த பக்கமெல்லாம் மயில்களின் நடமாட்டமும் இல்லை.

#வைத்தீஸ்வரன் கோயில் - புள்ளிருக்கு வேளூர்

#காஞ்சிபுரம் - கச்சி ஏகம்பம்

#விருத்தாசலம் - திருமுதுகுன்றம்,பழமலை.

#திருவெண்காடு - ஸ்வேதாரண்யம் (ஸ்வேத - வெண்மை, ஆரண்யம் - காடு)

#லால்குடி = திருதவத்துறை

பெண்ணாடம் - பெண்ணாடகம் .

 பெண்ணாடகம் என்றால் பெண்ணை அடகு வைத்தவர் என்று பொருள், அங்கு இருந்து சிவனடியார் சிவனுக்கு சேவை செய்ய அவர் மனைவியை அடகு வைத்தாராம்.

# திருச்சி - சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி.




திரு + சிரா + பள்ளி

திரு = மரியாதை

சிரா என்னும் சமண துறவி அங்கே வாழ்ந்தாரம்,
பள்ளி = வசித்தல் ,அல்லது சமண மடலாயம் அமைத்து நடத்திவந்துள்ளார்.

எனவே திருச்சிராப்பள்ளி என்றப் பெயர் வந்ததாம்!

மற்றொரு கதை,

ராவணன் மகன் திரிஷுர் என்ற 3 தலை உடையவன் சிவன் மீது அங்கு இருந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது.

சிராப்பள்ளி எனக்கூறும் ஒரு தேவாரப்பாடல்,

நன்றுடை யானை தீயதில் லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாகமுடையானைச்
சென்றடையாத திருவுடை யானை சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே.

#உறையூர்- உறந்தையூர்.

உறையூர் 'சூரவாதித்த சோழனால்' உருவாக்கப்பட்டது. உறந்தை, வாசபுரி, கோழியூர் ,முக்கீச்சுரம் என்னும் பெயர்களும் இதற்குண்டு.

சோழர்காலம் தொட்டு தலைநகராக,பெருநகராக விளங்கியது,அப்பொழுது திருச்சியெல்லாம் வெறும் மலைக்காடாகவே இருந்தது பின்னாளில் திருச்சி வளர்ந்து, உறையூர் அதன் ஒரு சிறுப்பகுதியாகிவிட்டது.

# குளித்தலை - குழித்தண்டலையூர்.

தண்டலை என்றால் சோலை எனப்பொருள்,காவிரி ஆற்றங்கரையோரம், சற்றே பள்ளமான இடத்தில் உள்ள சோலைகள் சூழ்ந்த ஊர் எனும் பொருள்பட "குழித்தண்டலையூர்" எனப்பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் குழித்தலையாகி, இப்போது குளித்தலை என்றாகியுள்ளது.

திருவாரூர் - ஆரூர் அல்லது ஆருக்காடு.

ஆர் என்றால் அத்திமரம், நிறைய அத்திமரங்கள் சூழ இருந்த ஊர் என்பதால் ஆருர் எனப்பட்டு ,சைவ சமயக்குறவர்களால் பாடல் பெற்ற தலம் என்பதால் ,திருவாருர் ஆயிற்று.

வட ஆர்க்காடு,தென் ஆர்க்காடு என்பதும் அத்திமரங்களால் சூட்டப்பட்ட பெயரே.

# பழவேற்காடு - பழவேலங்காடு.

மிக பழமையான அல்லது முதிர்ந்த கருவேல மரங்கள் கொண்ட காடு என்ற பொருளில் பெயரிடப்பட்டது.

பின்னர் டச்சுக்காரர்கள்(ஆங்கிலேயர்கள்) "புலிக்காடு" எனப்பெயர் வைத்துவிட்டார்கள், ஒரு வேளை அக்காலத்தில் அங்கு புலிகளும் நடமாடி இருக்கலாம்.

சென்னை கோடம்பாக்கத்திற்கே புலியூர் என்ற பெயர் உண்டு.

#சீவலப்பேரி- ஶ்ரீவல்லபப் பேரேரி.

பாண்டிய மன்னன் மாறன் ஶ்ரீவல்லபன் என்பவர் பாசனத்திற்காக பெரும் ஏரியை வெட்டினாராம், பெரிய ஏரியை பேரேரி என்பார்கள், மன்னன் பெயரால் ஶ்ரீவல்லப்பபேரேரி என அவ்வூருக்கும் பெயராயிற்று. காலப்போக்கில் ஶ்ரீவல்லபன் -சீவல்லபன் - சீவலம் என ஆக்கி சீவலப்பேரி என புழங்க ஆரம்பித்தது.

இவ்வூரில் உள்ள பெருமால் கோயிலால் தென் திருமாலிருஞ்சோலை என்ற பெயரும் உண்டு.

# கயத்தார் - கோதண்டராம நதி, முக்கூடல்.

பெயர் காரணத்திற்கான ஒரு புராணத்தின் படி, சிரிராமர் வனவாசத்தின் போது அவ்வழியே செல்கையில் சீதைக்கு தண்ணீர் தாகம் ஏற்படவே ,வில்லின் முனையால் தரையில் ஊன்றி நீர் வர செய்தாராம்,அப்படி உருவான  அந்த ஆற்றுக்கு கோதண்டராம நதி எனப்பெயர்.

# இன்னொரு பெயர்க்காரணம், கயம் என்றால் ஆழமான நீரூற்று ,அந்நீரூற்றில் இருந்து உற்பத்தியாகும் ஆறு என சொல்ல கயத்தாறு எனப்பெயர் சூட்டப்பட்டது,அவ்வாற்றின் கறையோரம் உள்ள ஊர் கயத்தார் என அழைக்கப்பட்டுள்ளது.

பொதிகை மலையில் இருது உற்பத்தியாகும் சித்ரா நதி,தாமிரபரணி மற்றும் கயத்தாறு ஆகியவை ஒன்று சேரும் இடம் என்பதால் "முக்கூடல்" எனவும் பெயர் ,முக்கூடல் பள்ளு என ஒரு சிற்றிலக்கியம் கூட பாடப்பட்டுள்ளது.

# பெரம்பலூர்- பெரும்புலியூர்.

நிறைய புலிகள் அக்காலத்தில் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.

# திண்டிவனம்- திந்திருணி வனம்.

திந்திருணீ என்றால் புளிய மரம், நிறைய புளிய மரங்கள் காடாக இருந்தமையால் ,புளியங்காடு என்ற பொருளில் திந்திருணி வனம் என பெயரிடப்பட்டது.

# அரங்கண்ட நல்லூர்- அறையணி நல்லூர்.

அறை என்றால் பாறை, அதன் அருகே உள்ள(அணி) நல்ல ஊர் எனும் பெயரில் அறையணி நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது.

# திருவள்ளூர்-திரு எவ்வுள்ளூர்.

எவ்வுள்ளூர் என்ற பெயர், ,திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் இவ்வூரில் உள்ள பெருமாளை பாடியதால் திருஎவ்வுள்ளூர் என அழைக்கப்பட்டு , பின்னர் திரிந்து திருவள்ளூர் ஆகிற்று.

#ஊட்டி - உதகைமண்டலம் - ஒத்தைக்கல் மந்தை.

தோடர்கள் மாடு மேய்க்கும் இடம் , ஒற்றை பெரும்பாறை இருக்கும் இடத்தில் மந்தையாக மாட்டினை மேய்த்து வாழ்ந்ததால், அவ்விடம் ஒற்றை கல் மந்தை என அழைக்கப்பட்டது.  வெள்ளையர்கள் அதனை ஒட்டகமண்ட் என அழைத்து ஊட்டி ஆகி ,பின்னர் உதகை மண்டலம் ஆகிவிட்டது.

# கோயம்பேடு - கோசை நகர்.




சிரிராமரு, சீதை மீது சந்தேகம் கொண்டு அனுப்பிவிட்டதால் வால்மீகி ஆதரவில் அங்கு தங்கி இருந்தார்களாம், லவ -குசா என்ற இரட்டையரின் பெயரால் "லவ-குச புரி" என்றும்,பின்னர்  குசன் பெயரால் அவ்விடம் குசன் நகர் என்றழைக்கப்பட்டு ,கோசை நகர் ஆகியதாம், திருப்புகழில் "கோசை நகர் "எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாம்.இன்றும் அங்கு ஒரு  ராமர் கோவில் உள்ளதாம்.

குசம் - கோரைப்புல். சீதை குளிக்க சென்றப்போது ,லவனை பார்த்துக்கொள்ள சொல்லி ,வால்மீகியிடம் விட்டு சென்றார்களாம், ஆனால் திடீர் என லவன் காணமால் போய்விட்டதால், சீதை வந்துக்கேட்டால் என்ன செய்வது என அச்சமுற்று , ஒரு கோரைப்புள்ளை கிள்ளிப்போட்டு மந்திரம் சொல்லி "லவன்" போன்ற ஒரு சிறுவனை உருவாக்கினாராம், ஆனால் சீதை திரும்ப வருகையில் ,விளையாட போயிருந்த உண்மையான லவனும் திரும்பிவிடவே .இரண்டு சிறுவர்களைக்கண்டு , "கோன் ஹை" என சீதாப்பிராட்டி வினவவே ,நடந்தக்கதையை சொல்லி மன்னிப்பு கேட்டாராம் வால்மீகி. சரி போனது போகட்டும் இருவருமே எனது பிள்ளைகளாக இருக்கட்டும் என  சொல்லி, கோரை- குசம் இல் இருந்து உருவான சிறுவன் என்பதால் "குசன்" எனப்பெயரிட்டார்களாம்.

சீதை,வால்மீகிலாம்  மெட்ராச பட்டிணத்துக்கு வந்திருப்பாங்களானு அறிவுப்பூர்வமாக கேள்விக்கேட்கலாம், என்ன செய்ய ஊருக்கு பெயர்க்காரணம்னு இப்படிய்யாப்பட்ட கதைகளை தானே சொல்லுறாங்க அவ்வ்.

கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் முன் அவ்விடம் எல்லாம் கோரைப்புல் அடர்ந்து காணப்படும், ஒரு வேளை கோரைக்காடு என்பதில் இருந்து கூட கோசை நகர் எனப்பெயர் வந்திருக்கலாம்.

இது மட்டுமில்லாமல் இன்னும் பல "இராமாயண தொடர்பில்" ஊர்ப்பெயர்கள் சென்னையை சுற்றி இருக்கு.

# நந்தம்பாக்கம்- நந்தவனபுரம் அல்லது நந்தவனப்பாக்கம்

பிருகு முனிவர் அங்கே ஒரு நந்தவனம் அமைத்து  அதில் குடில் கட்டி வாழ்ந்தாராம், சிரிராமரு வனவாசம் வந்திருந்த போது சிறிது காலம் ,பிருகு முனிவர் ஆசிரமத்திலும் தங்கி சிரமபரிகாரம் செய்ததாக புராணம்.

நந்தவனம் இருந்தமையால் ,நந்தவனப்பாக்கம்.- நந்தம்பாக்கம்.

சிரிராமர் நினைவாக அருகில் இருந்த ஊருக்கு "ராமாபுரம்" எனப்பெயரிட்டார்களாம், தற்போது .ராமாவரம் என அழைக்கப்படுகிறது,அங்கு தான் "கலியுக ராமர்" எம்சிஆர் வாழ்ந்தார் என்ற அழியாப்புகழும் பெற்ற திருத்தலம் ஆகும்!

# திருவான்மியூர்- திரு வால்மீகி நகர்.

வால்மீகி ராமாயணம் எழுதினப்பிறகு டயர்டாகி களைப்பார இன்பச்சுற்றுலா ஒன்னு கிளம்பி தென்னிந்தியாவுக்கு வந்தாரம்,அப்போ கடற்காத்து வாங்குறாப்போல , கிழற்குகடற்கரையோரமா கொஞ்ச காலம் "SUNBATH" எடுத்துக்கொண்டு "BAY WATCH" செய்தபடி தங்கி இருந்த இடம் தான் இன்றைய திருவான்மியூர்.

மரியாதைக்கு திரு சேர்த்து "திருவால்மீகி நகர்" என அழைக்கப்பட்டு இன்று திருவான்மியூர் ஆகிடுச்சாம், இன்றும் அங்கே வால்மீகி நகர்னு ஒரு நகர் வேற இருக்கு.

(வால்மீகி கெஸ்ட் அவுஸ்@ நடு ரோடு. படம் தி இந்து)

கிழக்கு கடற்கரைச்சாலையில், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே ,நடு ரோட்டில் "வால்மீகிக்கு" ஒரு கோயிலும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் போது கூட அக்கோயிலை இடிக்க முடியலை, யாருமே அக்கோயிலை இடிக்க முன்வரலையாம், சாமியார் சாபம் விட்ருவாருன்னு பயப்படுறாங்களாம் அவ்வ்!

தகவல் மூலம்,

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/whats-in-a-name/article5048779.ece
----------------------------------------------

#பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல்.

தாங்கல் என்றால் குளம் அல்லது ஏரியை குறிக்குமாம், பல்லவர்கள் வெட்டிய ஏரி/குளத்தின் பெயரால் அவ்விடத்துக்கு பல்லவன் தாங்கல் எனப்பெயரிடப்பட்டு பின்னர்  பழவந்தாங்கல் எனப்பெயர்  திரிப்புற்றது.

இவ்வாறே ஐயப்ப நாயக்கர் என்பவர் வெட்டிய குளத்தால் ,அய்யப்பந்தாங்கல் என்ற பெயரும்  உருவாயிற்று.

# திரிசூலம் - திருச்சுரம்.

சுரம் என்றால் காடு, அக்காட்டில் பிருகு முனிவர் தவம் இருந்தாராம்,எனவே திருச்சுரம் என அழைக்கப்பட்டு ,திரிந்து திரிசூலம் ஆகிற்று. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த திரிசூலம் படத்துக்கும் ,இவ்விடத்தின் பெயருக்கும் தொடர்பில்லை அவ்வ்!

கிண்டியில் தான் யாகம் செய்தாராம், யாகத்தீயை கிண்டும் கோலை போட்ட இடம் தான் கிண்டி என்றப்பெயரில் அழைக்கப்படுகிறதாம் அவ்வ்!

# பெரிய மேடு-  பெருமேடு.

சென்னையில் அக்காலத்தில் மேடும்,பள்ளமுமாக இருந்ததாம், பெரிய மேடு இருந்த இடத்தில் இருந்த மண்ணை எல்லாம் வெட்டி வசிப்பிடம் ஆக்கியது வெள்ளையர்கள் காலத்தில் தானாம்.

அப்படி வெட்டி அப்புறப்படுத்திய மண்ணை ஒரு பள்ளமான இடத்தில் கொட்டி சமப்படுத்தி வசிப்பிடம் ஆக்கிய இடமே ,"மண்ணடி" ஆகும்,அதாவது மண்ணடிச்சு மேடாக்கி இருக்காங்க!

மண்ணடி என்பதற்கு இன்னொரு பெயர்க்காரணமும் சொல்கிறார்கள், பெரிய மண்மேட்டிற்கு கீழ் - அடியில் இருந்த இடம், மலையடிவாரம் என்பது போல,மண்ணடிவாரம் - மண்ணடி எனப்பெயர் வந்ததாம்.

# சூளை - செங்கல் சூளைகள் அமைத்திருந்த இடம், இங்கு தான் பெரிய செங்கல் சூளை அமைத்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான செங்கற்கள் தயாரிக்கப்பட்டது.

தொடரும்...
---------------------------------------------

பின்குறிப்பு:

# மக்களே உங்களுக்கும் ஏதேனும் ஊரின் பெயர்க்காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்,பின்னர் அவற்றையும் தொகுத்துவிடலாம்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# History of city of madras by C.S.Srinivasachari.M.A

# ஊரும் பேரும் -ரா.பி.சேது(பிள்ளை)

மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள் நன்றி!
---------------------------------------------------------