Monday, April 30, 2012

காங் மக்களவை உறுப்பினரின் விஷம பேட்டி!



புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!

இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த பேட்டியில் தான் அப்படி சொல்லி இருக்கிறார், ஆஹா காங்கிரஸ் இப்படி ஒரு குழுவை அனுப்பியதே இது போல கதைகளை அவிழ்த்து விடத்தானா? இது தெரிஞ்சு தான் அம்மையாரும் பின் கடைசி நேரத்தில் அய்யாவும் கழண்டுக்கொண்டார்களா என நினைக்க தோன்றுகிறது.

ஏன் எனில் காங்கிரஸ் போதைக்கு தமிழக கட்சிகளும் ஊறுகாயாக தான் இத்தனை நாளும் இருந்து வருகிறார்கள் ஆனால் இம்முறை என்னமோ சூதனமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.

மேலும் அப்பேட்டியில் இலங்கை அரசுக்கு புனரமைப்பு செய்ய இது வரையில் 25 ஆயிரம் கோடிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார் அடப்பாவிகளா அவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை ரகசியமாக கொடுத்தார்களா? மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு 580 கோடிகள் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இதெல்லாம் ஏன் எம்.பிக்கள் விவாதிப்பதே இல்லை என எனது பட்ஜெட் பம்மாத்து என்ற பதிவில் சுட்டிக்கேட்டு இருந்தேன்.

அதாவது சிறிய தொகையாகத்தான் ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது ஆனால் இவரோ 25 ஆயிரம் கோடி என்கிறார் அப்படியானால் பட்ஜெட்டில் சொல்லாமல் இரகசியமாக பணம் கொடுத்து வருகிறார்கள் என்று ஆகிறது ,சிலர்  இப்படி சொல்லலாம் ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த தொகையாக இருக்கலாம் என்று ஆனால் 2009 இல் தான் போர் உக்கிரமாகி முடிந்தது புனரமைப்பு எல்லாம் பின்னர் துவங்கியது அப்படி எனில் இந்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த தொகை என்றல்லவா ஆகிறது.

பட்ஜெட் அறிக்கை உண்மை என்றால் காங்.எம்பி சொன்ன தொகை பொய்யானது அவர் காங்கிரஸ் அரசு புனரமைப்புக்கு நிதிக்கொடுத்தது என்பதை பெரிது படுத்த சொன்னதாகிறது. எம்.பி சொன்னது உண்மை எனில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் பொய் சொல்லி நாடாளுமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றியதாக ஆகிறது. ஏன் எனில் ஆண்டுக்கு 500 கோடி என கொடுத்தால் 25 ஆயிரம் கோடி உதவி தொகை கொடுக்க 50 ஆண்டுகள் ஆகும். எது உண்மையோ தெரியாது இவர்களை நம்பிய மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருவது மட்டுமே கலப்படமில்லாத அக்மார்க் உண்மை :-))

இந்திய மக்களின் வரி வருவாயை இஷ்டம் போல செலவு செய்துள்ளது தெரிகிறது, அட புனரமைப்புக்கு தானே கொடுத்து இருக்கு காங்கிரஸ் அதை போய் குறை சொல்லலாமா என்றெல்லாம் அல்லக்கைகள் கேட்கலாம் அடப்பதருகளா இலங்கையில் என்ன புனரமைப்பு செய்து இருக்காங்க அப்போ அதையாவது காட்டுங்க, அந்த எம்.பியே சொல்லி இருக்கிறார் இது வரைக்கும் அங்கே 500 வீடு தான் கட்டிக்கொடுத்து இருக்காங்க அதை ஏன் எனக்கேட்டு விட்டு வந்திருக்கிறோம்னு என்ன கொடுமை சார் இது 25 ஆயிரம் கோடி பணம் வாங்கி அதில் 500 வீடு தான் கட்டி இருக்கு இலங்கை அரசு அப்போ மீதிப்பணம் என்னாச்சு? அதை எல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறார்கள் யாரும்?

மேலும் சொல்லுகிறார் இனிமேல் கொடுக்கும் உதவிப்பணத்தை மக்களுக்கே நேரடியாக காங்கிரஸ் அரசு கொடுக்குமாம் அதான் எக்கச்சக்கமாக ராசபக்சேவுக்கு கொடுத்துட்டிங்களே அது என்னாச்சு என கேட்காமல் இனிமேல் கொடுப்போம் என்றால் இது வரைக்கும் கொடுத்தப்பணம் கோவிந்தா ஆச்சு அதைப்பற்றி ஒன்றும் கேட்கவோ செய்யவோ முடியாது என்று ஒப்புக்கொள்வது போல அல்லவா இருக்கு?

இந்தியா கொடுத்த 25 ஆயிரம் கோடி பணம் இலங்கை அரசுக்கு இராணுவ செலவுகளுக்கு தான் பயன்ப்பட்டிருக்க வேண்டும் , நம் நாட்டிடம் பணம் வாங்கி நமது உறவுகளை அழித்து இருக்கிறது இலங்கை அந்த உண்மையை போகிறப்போக்கில் மறைத்து விட்டு அரசியல் செய்கிறது மத்திய அரசு இவர்களை நம்பி ஆட்சியில் உட்கார வைத்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள் .

7.2 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டுக்கு பட்ஜெட் போடவே சுமார் ஒரு லட்சம் கோடி போதும் அப்படி இருக்கும் போது சுமார் 20 லட்சம் தமிழ் மக்களுக்கு புனரம்மைப்பு செய்ய இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி கொடுத்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம் ஆனால் 500 வீடுகள் தான் கட்டி இருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதைக்கேட்டுவிட்டு அப்படியே வர எதற்கு ஒரு குழு ,ஏன் இந்தியா தான் கொடுத்த தொகைக்கு கணக்கு கேட்க கூடாது?

20 லட்சம் மக்களுக்கு தலா நபருக்கு 125000 என 25 ஆயிரம் கோடியை பிரித்துக்கொடுக்க முடியும் அப்படி கொடுத்திருந்தால் அவர்களே சொந்தமாக ஏதேனும் செய்திருப்பார்கள் .ஆனால் எதுவுமே உருப்படியாக நடக்காமல் ராச பக்சேவுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்  மொய் எழுதிவிட்டார்கள்! உலகிலேயே மிக பெரிய மொய் இதுவாக்க தான் இருக்கும் :-))

கேட்கலாம் ஆனால் காங்கிரஸ் அரசு கேட்காது ஏன் எனில் கொடுக்கும் போதே இராச பக்சே பணத்தை வாங்கி என்ன செய்வார் என தெரிந்தே தானே கொடுத்தது இன அழித்தொழிப்புக்கு ஒரு ஜனநாயக நாடே பண உதவி செய்திருக்கிறது ஆனால் அதற்கு பெயர் புனரமைப்பு நிதி. இதை எல்லாம் ஏன் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரவில்லை, இலங்கை பிரசினைக்காக ,தமிழர்களுக்காக கூட பேச வேண்டாம் ,இந்திய மக்களின் பணம் இப்படி அநியாயமாக செலவு ஆகி இருப்பதை கூடவா கேட்க கூடாது? எல்லா எம்.பிக்களுக்குமே கேள்விக்கேட்க உரிமை இருக்கிறது, ஏன் அது கடமையும் கூட அரசு ஒழுங்காக செயல் படுகிறதா எனக்கண்காணிக்க , கேள்விக்கேட்க தானே மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்புகிறார்கள்.

 தமிழகத்தினை சேர்ந்த காங்  எம்.பி ஒருவர்  காங்கிரஸ் அரசு செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் போல அறிந்தோ அறியாமலோ சொல்லி ஒப்புக்கொள்கிறார், மேலும் புலம் பெயர் தமிழர்கள் தான் இலங்கையில் அமைதி ஏற்படாமல் தடுக்கிறார்கள் என விஷமத்தனமாக பேட்டிக்கொடுக்கிறார் ,ஆனால் இதனை தமிழக ஈழ ஆதரவு அரசியல்கட்சிகளும் பெரிதாக கண்டுக்கொண்டார் போல தெரியவில்லை, பதிவுலக அறிவு ஜீவிகள் ,இனமான காவலர்கள் எது எதுக்கோ அறச்சீற்றம் காட்டி பொங்கி பொங்கி பதிவ போடுபவர்கள் இதற்கு  பெரிதாக ரியாக்ட் செய்தார் போல தெரியவில்லை. என்ன கொடுமை சார் இது!