Monday, May 29, 2006

மெய் தேடல்!



நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில்

நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்

மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்


நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்

நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்

நித்திரையை தேடினேன் நீயில்லாமல்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடங்களில்

திக்கெட்டு திசையும் தேடினேன்

தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!

மீண்டும் துவங்கியது தேடல்

என்னுள்ளே எதையோ தேடினேன்

எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!



Sunday, May 28, 2006

பார்க்க...ரசிக்க

சூப்பர் ஸ்டார் தொண்டர் செல்வன் அவர்களுக்காக இந்த படங்கள்,பார்க்க...ரசிக்க










காத்திருத்தலே தொழிலாய்....




உயிர் பிரிந்த பின்னும்

சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!

உதிர்ந்த பின்னும்

மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல !

கனவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!

காற்றில் வரைந்த ஓவியத்தை

கண்களில் சுமந்து நின்றேன்!

ஓவியம் உயிராகி வருமென

காத்திருந்தேன்...

காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !

Wednesday, May 24, 2006

சிப்பிக்குள் முத்து!



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

விடியலை நோக்கி



இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்

இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?

யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்

சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!

உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என

இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

போய் வா தென்றலே...



போய் வா தென்றலே...

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!

Saturday, May 20, 2006

எதையும் நினைக்கவில்லை...



பிரிவென்று நினைக்கவில்லை பிரிந்த பின்னும்

வலி என்று நினைக்கவில்லை வலித்த பின்னும்

வாழ்க்கை என்று நினைக்கவில்லை தொலைத்த பின்னும்

உண்மை என்று நினைக்கவில்லை உதறிய பின்னும்

உயிர் என்று நினைக்கவில்லை இழந்த பின்னும்.

உறக்கம் என்று நினைக்கவில்லை உறங்கிய பின்னும்

விடியல் என்று நினைக்கவில்லை விடிந்த பின்னும்

மலர் என்று நினைக்கவில்லை மலர்ந்த பின்னும்

மனம் என்று நினைக்கவில்லை உடைந்த பின்னும்

தாகம் என்று நினைக்கவில்லை தவித்த பின்னும்

தீ என்று நினைக்கவில்லை தீண்டிய பின்னும்

தேவை என்று நினைக்கவில்லை இதயம் தொலைந்த பின்னும்

தேடல் என்று நினைக்கவில்லை தேடியலைந்த பின்னும்

எதையும் நினைக்கவில்லை என்னையே மறந்த பின்பு!

Thursday, May 18, 2006

என்னவானேன் நான்...

நீ பிரிந்த தருணம் முதல்...

கண்ணீர் இல்லா கண்கள் ஆனேன்

தண்ணீர் இல்லா தடாகம் ஆனேன்

உணர்வு இல்லா உருவம் ஆனேன்

வேர் இல்லா மரம் ஆனேன்

வேகம் இல்லா காற்று ஆனேன்

தோகை இல்லா மயில் ஆனேன்

தூக்கம் இல்லா துயரம் ஆனேன்

ராகம் இல்லா பாடல் ஆனேன்

மேகம் இல்லா வானம் ஆனேன்

நிலவு இல்லா இரவு ஆனேன்

நிச்சயமில்லா கனவு ஆனேன்

இத்தனையும் ஆன பின்னும்

இறவாது இருக்கின்றேன் மண்மீது

மீண்டும் சந்திப்போம் என்றாவது என்று!

Monday, May 15, 2006

பின்னூட்டம் குறித்தான வலைப்பதிவரின் மனோ நிலை!

தருமி என்பவரின் வலைப்பதிவில் "நாமும் தமிழும், ஆங்கிலமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன்,சரி பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின, இவர் எதற்காக யார்ப் படிப்பதற்காக வலைப்பதிவு போடுகிறார்? இவரது கருத்துகள் அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்தது என்று மறு மொழி இட இத்தனை கட்டுப்பாடுகள்.எல்லாரும் பின்னூட்டம் இட அனுமதித்தால் ஆபாசமாக திட்டி சிலர் இடுகிறார்கள் அதை தவிர்க்க என்றால்.அதற்கு தானே கமெண்ட்ஸ் மாடரேஷன் உள்ளதே. அதனையும் மீறி ஆபாச பின்னூட்டம் வர வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதனை எளிதில் நீக்க முடியுமே.எனக்கு எதற்கு வீண் வேலை நான் இப்படி தான் செய்வேன் என்றால் அத்தனை பயம் இருப்பவர் ஏன் இங்கே வந்து அவர் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.பேசாமல் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பாக பக்கத்து வீட்டுக்காரர் உடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாமே!

தருமி இப்போது வேண்டுமானால் நான்கு பேருக்கு நன்கு தெரிந்தவராக இருந்து தேடி வந்து சிலர் பின்னுட்டம் இட்டு செல்லலாம். இவரின் துவக்க காலத்தில் ஒரு பின்னூட்டமாவது வராதா என்று காத்திருந்தவராக தான் இருக்க வேண்டும்.

இதனை தருமி என்ற தனி நபரை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை.இங்கே வலைப்பதிவு செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மனோ நிலையை ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டே சொல்கிறேன்.சரி நீ ஏன் அவசியம் பின்னூட்டம் இட்டு தான் ஆக வேண்டுமா. அப்படி மறு மொழி கூறி தான் ஆக வேண்டுமெனில் நீ தைரியமாக மின்னஞ்சல் முகவரி தர வேண்டியது தானே என்று கேட்கலாம்.ஒரு வலைப்பதிவைப் படித்து அதை எழுதியவர்க்கு மறு மொழி சொல்வது ஒரு ஊக்கம் அளிக்கும் சேவை.அதனை செய்ய முன் வருபவர்க்கு ஏன் கட்டுப்பாடுகள் என்பது தான் என் வினா? மின்னஞ்சல் முகவரி தர முடியவில்லை என்றால் வேறு வேலைப் பார்த்து கொண்டு போகலாமே என்றும் கேட்கலாம்.எல்லோர்ப் பார்வையிலும் படும் வண்ணம் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டியில் வெளியிட்டப் பின் மாற்று கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.அது பாரப்பட்சம் இன்றி அளிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு வலைப்பதிவு துவக்க வங்கி கணக்கு எண் தர வேண்டும் என்று சொன்னால் எத்தனை பேர் முன் வருவார்கள்.இலவசம் என்பதால் தானே ஆள் ஆளுக்கு வந்து கருத்து கந்தசாமிகளாய் மாறி தங்கள் வெந்ததும் வேகாததுமான கருத்துகளை அள்ளி இறைக்கிறார்கள்.இல்லை எல்லா வலைப்பதிவும் ஒரு தேர்வு குழு பரிசீலித்து அதன் பின்னரே வெளியிடப்படும் என்றால் எத்தனை தேறும்? இணையத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல வாய்ப்பளிக்க தான் இலவசமாய் பிளாக்குகள் உள்ளது.அப்புறம் என்ன தனியே ஒரு கருத்து சொல்வதில் பாகுபாடு!

பின்னூட்டமாக சொல்ல நினைத்ததை இங்கே நானே ஒரு வலைப்பதிவாக வெளியிட்டுள்ளேன்.இது எந்த தனி நபரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது அல்ல.முதலில் தங்கள் எழுத்துகளை யாரேனும் படித்தால் போதும் என்று இருந்து காலப்போக்கில் வலைப்பதிவு வெளியிடுவோரிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றத்தை சுட்டிக் காட்டவே.எனது வலைப்பதிவில் மறுமொழியிட எந்த வகைக் கட்டுபாடும் விதிக்கவில்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்!


வணக்கம் தருமி!

//1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)//

கலாய்த்தல் என்று சொல்வது நடைமுறையில் இருந்தாலும் .. சரியான சொற்பதம் கலாசுதல் தான்.இது ஒரு தூய தமிழ்ச்சொல்.சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அகராதில் உள்ளது.

"கலாசுதல் என்றால் உரக்க சத்தமிட்டு பேசுவது ,பெரும்பாலும் பொருள் அற்ற பேச்சு என்று போட்டுளார்கள். மிகவும் பொருத்தமான வார்த்தை தான்.சென்னையில் பெரும்பாலும் சாதாரண வாய் சண்டைக்கு கூட "போடாங்கோ டுபுக்கு தட்டுனா தாரந்துருவ... எங்க ஏரியா பக்கம் வந்துருவியா நீ மவனே செத்த" என்று "ஓவரா சவுண்டு" வேறு விடுவாங்க அதை நம்ம கைல ராங்க் காட்டினான் நல்ல கலாசிடேன்னு பெருமையா சொல்லிப்பாங்க! இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்திற்காக தேடி எடுத்தேன்.தற்போது தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. நம்ம ஆராய்ச்சிய வெளிக்காட்டிக்க ஒரு வாய்ப்பா போச்சு (எப்படி நம்ம வெட்டி ஆராய்ச்சி!??)

Thursday, May 11, 2006

சோனியா இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி

சோனியா ரேபரேய்லி(உ.பி) தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி(உறுதி செய்ய பட்ட ஒன்று)

தேர்தல் வெற்றி

தேர்தல்2006 வெற்றி -மு.கருணநிதி(சேப்பாக்கம்),
நாகநாதன்(திருவல்லிகேணி),
கு.பிச்சாண்டி(திருவண்ணாமலை)

என் கனவும் நீயடி!



உன் நினைவு என்னுள் ஊர்கையில்

தேகம் எங்கும் தீயின் தீண்டல்கள்

தொலைந்து போன எனது நினைவுகளை

தேடிப் பார்த்து களைக்கிறேன்

தொலைவில் செல்லும் உனது நிழலை

தொடர்கிறேன் தொடாமலே!

இருளில் ஒளியை தேடினேன்

ஒளியில் இருளை காண்கிறேன் !

காலம் கடந்து நிற்கிறேன்

கரையில் அலையாய் அடிக்கிறேன்!

கடந்து விடவே துடிக்கிறேன் !

கடக்க மறந்து தவிக்கிறேன்!

கானல் நீரை குடிக்கிறேன்!

கண்கள் திறந்தே காண்கிறேன் கனவு

கலைந்த பின்னும் தொடருமென் கனவு!

என் கனவு என்ன தேடினேன்

என் கனவும் நீயென கண்டு கொண்டேனடி!

Wednesday, May 10, 2006

அந்தி மழை!



கோடை மழை அந்தியில் பொழிகிறது

வரண்ட நிலத்தில் நீர்த் தாரைகள்

ஓடி மறைகிறது புழுதி வாசனையை கிளப்பி!

வெளிறிய வானவில்லில் மிச்சமிருக்கும் வர்ணத்தை போல

என்னுள் ஒட்டிகிடக்கும் உன்னுடைய நினைவுகள்

முளை விடும் விதை என முகிழ்த்து

விருட்சம் என வளர்ந்து விட்டது

வானவில் மறையும் முன்னே!

விலகி சென்ற பிறகும் விலக மறுக்கும் நினைவுகள்

துடுப்பற்ற படகைப் போல

நீரோட்டத்தின் திசையில் செல்கிறது நதியில்!

நாணல்கள் மட்டும் கரையோரம்!

மீட்சி!


கனவு வெள்ளத்தில் மூழ்கி

ஸ்வாசம் இழந்தேன்!

உன் நினைவு துளிகளே

மீட்டெடுத்தது என் மூச்சை!

Friday, May 05, 2006

நீங்காத நினைவுகள்!

அன்பர்களே கவிதைக்கு பொய் அழகு இதை நான் கவிதை என்று சொல்வது உ(எ)னக்கு அழகானு கேட்காம ..திரைப்படம் பார்க்கும் போது வரும் பாடல் காட்சிகளுக்கு எல்லாம் கதாநாயகியின் நாபிகமல தரிசனத்தை தியாகம் செய்து புகை பிடிக்க போவது போல் போகாமல் தம் கட்டி படிக்கவும் இந்தக் கவிதையை!

நீங்காத நினைவுகள்!


சிலந்தி பின்னும் வலையென

என் மனகுகையெங்கும் நினைவு வலைகள்

முடிவற்று படர்கின்றது

முன்னிரவில் தேய்பிறை நிலவொளியில்

தேங்கிய மழை நீரில்

நான் கண்ட உன் பிம்பம்

நாள் தோறும் வளர் பிறையென வளர்கிறது

நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்துவிட்ட

நீங்காத நினைவுகள் முடிவற்று நீள்கிறது

தூக்கமற்ற இரவுகளின் நினைவோடை கனவுகளில்!

Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?

Wednesday, May 03, 2006

மழை மேகம்!


காரம் சாரமாக எழுத "மேட்டர்" ஒன்னும் சிக்க வில்லை(அரசியல் மட்டும் தான் சூடா இருக்கு அத தான் ஆள் ஆளுக்கு ஏற்கனவே கொத்து பரோட்டா போடுராங்களே அப்புறம் இந்த வவ்வால் எதுக்குன்றேன்!) அது வரைக்கும் சும்மா நேரம் போக மீண்டும் ஒரு கவித !

மழை மேகம்!

வானம் எங்கும் வெண்மேகங்கள்

என் தலைக்கு மேலே கடந்து செல்கின்றன

தினம் தோறும் மழை வருவதில்லை

வீதி எங்கும் பல வண்ண உடைகளில்

பெண்கள் மறைகிறார்கள்

என் பார்வையை விட்டு

மனதில் பதியவில்லை எவர் முகமும்!

மழைமேகம் வர கூடும்

மனதில் பதிந்த முகம் வருமா?

கோடை வெயிலில் ஆவியாகிவிட்டது என் வினா!

தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை



ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)

நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........

படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)


பிரிவும்...சந்திப்பும்

அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில்


அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்

ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ

அல்லது நீ யாரோ நான் யாரோ என்று

வேறு திசை நோக்கி பயணிப்போமா?

பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...

மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..

காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை

கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்

உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்

பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!

ஆப்கான் படு கொலை- சொல்பேச்சு கேளாமையின் விளைவே





ஆப்கானில், ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பொறியாளர் ஒருவரை தலிபான் தீவட்டிகள் தலை துண்டித்து கொன்று தஙகள் ரத்த வேட்கையை தீர்த்து கொண்டுள்ளார்கள்.இது ஒரு சோகம் என்றால் அந்த மாண்டு போன பொறியாளர் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் விசாக பட்டினதில் வளைத்து போட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்.அந்த பெண்ணை மணந்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே சாட்சியாக உள்ளது.தினத்தந்தி பாஷையில் சொல்வதானால் கள்ளக் காதலி ஆகிவிடுவார் அப்பெண்.

சட்ட ரீதியான மனைவிக்கு தான் அனைத்து பொருளாதார உதவிகளும் போய் சேரும்...இப்பெண்ணின் கதி என்ன (எந்த வெள்ளி திரையிலும் காண முடியாது இதன் கிளைமாக்சை)

என் மனதில் சில கேள்விகள் சுட்டெரிக்கின்றன........

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள் இது போன்று கடத்த பட்டனர் அப்போதே ஆப்கான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை செய்ய போக வேண்டாம் என அரசால் அறிவுறுத்த பட்டது ...அதை எல்லாம் காதில் வாங்காமல் செல்லும் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது ..கூடுதல் பணம் கிடைக்கும் எனில் நரகலையும் தின்ன போவார்களா...இவர்களுக்காக பரிதாப படுவதே கேலி கூத்தாகிறது.அறிவுரைகளை மதியாமல் செல்லும் இவர்களை என்னவென்பது?

ஒரு மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி இருக்கிறார் இதனால் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்
இப்படி பட்ட பணத்தாசை மிக்க ,வாழ்வியல் தர்மதிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க கூட மனம் விரும்ப மறுக்கின்றது.இதுபோன்ற படித்த முட்டாள்களை என்ன செய்வது ? இவர்களை நினைத்து இரக்க படுவதா எரிச்சல் படுவதா?(இதை படித்து என் மீது எரிச்சல் பட வேண்டாம் வெயில் காலம் பாருஙக! கொஞ்சம் கூலா இருங்க)

Tuesday, May 02, 2006

நானும் வந்துவிட்டேன்!

எல்லாம் பிலாக்...பிலாக்னு பினாத்துராங்களே அப்படி என்ன தான் இருக்குனு எட்டி பார்க்க வந்தேன் .தமிழ் வலை பதிவுகளை படித்த வரையில் எனக்கு தோன்றிய நிதர்சனம் என்னவென்றால் பெரும்பாலும் குழு மன பாண்மையோடு தான் அனேக வலை பதிவாளர்கள் செயல் படுவதாக எனது சிற்றறிவுக்கு எட்டியது ... சரி விடுரா விடுரா உனக்கும் ஒரு குழுவ செட் பண்ணிட்டா இந்த ஏக்கம் எல்லாம் போய்டும்னு தோனுது ... சீக்கிரமே நானும் ஒரு குழுவ எனக்குனு சேர்த்து கிட்டு மனம் வீசும் வலைப் பூக்களை என் பங்க்கு கொஞ்சம் நாறவைப்போம்னு ஒரு விபரீத ஆசை வந்து போச்சு (யாரோ வினாச காலெ விபரித புத்தினு சொல்ராங்க !) சரி வெகு விரைவில் கொஞ்சம் சரக்கு தேத்தி கிட்டு முடுக்கா வரேன் மக்களே! அது வரைக்கும் ஆசுவாச படுதிக்கோங்க என்னடா பிளாக்கு வந்த சோதனைனு.......... வருகிரேன் விரைவில்......