Thursday, September 27, 2012

திரும்பிப்பார்-1


 (ஹி..ஹி...இப்படித்தான் திரும்பி பார்க்கணுமாம்)


 மண்,மக்கள்,மொழி,கலாச்சாரம்,மதம் ,அரசியல் இவற்றினடிப்படையில் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை திரும்பிப்பார்க்கலாம் என ஒரு ஆசை, நான் திரும்பிப்பார்த்ததை உங்களுடனும் பகிரவே இப்பதிவு , எத்தனைப்பதிவுகள் போகும் என தெரியாது, எனவே நேரம் இருக்கும் போதெல்லாம் தொடர்வேன், மேலும் காலவரிசைப்படி இல்லாமல் ஒரு நான் லீனியராகவே இருக்கும், கி.மு 3000 ஆண்டினைப்பேசிவிட்டு அப்படியே சமகால நிகழ்வுக்கோ,அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வுக்கோ தாவிவிடுவேன், எனவே நீங்களாகவே கால வரிசையை ஆங்காங்கே தொடர்பு படுத்திக்கொள்ளவும்.

குழப்புமே என நினைக்கலாம், ஆனால் தொடர்ச்சியாக கால வரிசையில் சொல்லும் போது சில ஒத்த நிகழ்வுகள் வேறு காலத்தில் நடந்திருந்தாலும் ஒப்பிட முடியாது, மேலும் ஒரே மாதிரியான நிகழ்வுகளே ஒரு பதிவு முழுவதுமாக பேசும் நிலை வரும், எனக்கும் ரேண்டமாக நிகழ்வுகளை பிடித்து போவது சுவையாக இருக்கும்(ஹி...ஹி நான் எப்போதும் அங்கு கொஞ்சம்,இங்கு கொஞ்சம் என மாற்றி மாற்றித்தான் படிப்பேன்)

முன்னுரை போதும் திரும்பிப்பார்ப்பதை ஆரம்பிப்போம்.



மானிடவியல்,வரலாறு ஆகியவற்றை படிக்கும் அனைவரின் கண்ணிலும் அடிக்கடி சிக்கும் ஒரு சொற்றொடர் "ஆசியா மைனர் பகுதி" என்பதாகும், காரணம் மனித குல நாகரீகம் ,இனக்குழு இந்த பகுதியில் இருந்து தான் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்றோ அல்லது இவ்வழியே தான் மேலை உலகம் கீழை உலகினை தொடர்பு கொண்டது என்றோ, மனித இனப்பரவலின் மையம் என்றோ ஏசியா மைனர் நிலப்பரப்பினையே பெரும்பான்மை அறிஞர்கள் சுட்டுவார்கள்.

இதற்கு மாற்று கருத்தும் உண்டு, ஏசியா மைனருக்கே இன்னொரு இடத்தில் இருந்து தான் மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது. அதனை பின்னால் காணலாம்.

ஏசியா மைனர் என்ற பெயரிடலே ரோமனிய/கிரேக்க நாகரீகம் வளர்ந்த பின் தான் துவங்கியது. ஏன் எனில் ரோமானிய /கிரேக்க வரலாறு,புவியியல் வல்லுனர்கள் தான் முதன் முதலில் உலக வரைபடம், நாடுகளுக்கு பெயர் வைப்பது என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.

இலத்தின் மொழியில் தான் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ,மக்கள்,மொழி எல்லாம் பெயர் சூட்டப்பட்டு முதன் முதலில் ஒரு ஆவணப்படுத்தலாக துவங்கியது.எனவே வட்டார மொழி,நாட்டில் வேறு பெயர் இருந்தாலும் இலத்தின் வழக்கே பயன்ப்பாட்டில் உள்ளது.

ஏசியா மினாரெஸ்  என இலத்தினில் பெயரிடப்பட்டது, மினாரெஸ்= பூதம் , ஆனால் வழக்கில் மைனர் என்றால் சிறிய ,இளைய என்பதால் , பிற்காலத்தில் ஏசியா மைனர் என்றால் சின்ன ஏசியா ,ஏசியாவிற்கு முன்னால் உள்ள பகுதி என குறிக்கப்பயன்ப்பட்டது.

இலத்தின் வழக்கில் தந்தையை மேக்சிமஸ் என்றும் மகனை மைனர் என்றும் சேர்த்து ஒரே பெயரிம் அழைப்பது உண்டு.

அகஸ்டஸ் மேஜரின் மகனை அகஸ்டஸ் மைனர் என்பார்கள், பின்னாளில் அரசன் ஆனதும் தனிப்பெயர் சூட்டிக்கொள்வார்கள்.

இவ்விடம் இப்போது உள்ள துருக்கியியின் ஆசிய பகுதியாகும்,இது கருங்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடையே உள்ள தீபகற்ப நிலமாகும்.

இதனை அனடோலியா என்றும் சொல்வார்கள், அப்படி ஒரு தேசமிருந்தது,அதோடு

 Bithynia ,Cappadocia,Galatia,Phrygia,Pontus,Aeolia, Aeolis ,Lycia,Lydia,Ionia, ஆகிய நாடுகளும் மற்றும்,Ephesus,Ilion, Ilium, Troy ஆக்கிய நகரங்களும் இருந்தன.

பிற்காலத்தில் ஒட்டமான் ஆட்சியாளர்கள் வீழ்ந்த பின் இளம்துருக்கியர்கள் கேமல் அட்டாதுர்க் தலைமையில் புரட்சி செய்து , சுதந்திர மற்றும் குடியரசு துருக்கியை ஒருங்கினைந்து இப்போது உள்ள வடிவில் உருவாக்கினார்கள்
-------------
கஜினி முகமதின் படை எடுப்பு:

காலிபா அல்-வாலித் பின் அப்துல் மாலிக்கால் கசன்நாவி (இதுவே கஜினி ,கசன்வாடி எனப்பட்டது)பிரதேசத்திற்கு முகமது பின் காசிம் ஆளுநராக நியமிக்கப்பட்டு ,இஸ்லாமிய தேசத்தினை விரிவு படுத்த ஆணையிடப்பட்டார். இன்றைய பாக்கிஸ்தானில் உள்ள Daibul, Raor, Uch and Multan ஆகிய பகுதிகளை வென்று காலிபாவிடம் நல்ல பெயரை வாங்கினார். அல்-வாலித் இறப்புக்கு பின் அல்-சுலைமான் பின் அப்துல் மாலிக் காலீபாவாக வந்தார். அந்த நேரத்தில் முகமது பின் காசிம் சிந்த் மாகணத்தில் உள்ள தாகிர் என்னும் பிரதேசத்தின் மீது படை எடுத்து வென்றார்,அம்மன்னனின் இரண்டு பெண்களையும் கைப்பற்றி வந்தார்.

(முகமது பின் காசிம்)

கலிபா சுலைமான் அப்பெண்களை கன்னித்தன்மையுடன் தனக்கு அனுப்புமாறு கட்டளையிட்டார். முகமது பின் காசிமும் வடை போச்சே என வருந்தினாலும் ராவோடு ராவாக அப்பெண்களை மஜாக் செய்து விட்டு ,காலிபாவிற்கு அன்பளிப்பாக அனுப்பினார், காலிபா லேசுப்பட்டவரா கன்னித்தன்மையுடன் இருக்காங்களான்னு சோதனை செய்து இல்லைனு கண்டுப்பிடிச்சு , பெண்களை விசாரிச்சார், எல்லாம் காசிம் செய்த வேலைன்னு சொன்னதும்,காசிமை புடிச்சு வர சொல்லி வெட்டிட்டார் ..தலையை தான்.

காலிபா  என்பவர்கள் இறைத்தூதாரின் வழி வந்தவர்கள் செய்யுற புனித வேலை இதானா?

முகமது பின் காசிம் 17 வயதிலேயே ஆளுநராக நியமிக்கப்பட்டு , பாரசீகத்தின் சில பகுதிகள், மேலும்,.சிந்த், பஞ்சாப் என சில பகுதிகளை வென்று இஸ்லாமியா விரிவாக்கத்தினை சிறப்பாக செய்த ஒரு படைத்தளபதி ,இத்தனைக்கும் வயது 17 தான், அவரை கைது செய்து தலையை துண்டிக்கும் போது 21 வயது தான்.ஆனால் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனக்கு கன்னிப்பெண்களை அனுப்பவில்லை என்று கலிபா சுலைமான் , காசிமை கொன்றார். இது தான் புனித மார்க்கத்தின் அடிப்படை :-))

பின்னர் அப்போது அடிமையாக இருந்த துருக்கியை பூர்வீகமாக கொண்ட அல்பத்கின் இனக்குழுவினை சேர்ந்த சுப்குத்கின் என்பவரை கசநாவி பகுதி ஆட்சியாளராக நியமித்து ,இஸ்லாமை பரப்பவேண்டும், அவருக்கு நேர்மையுடன் நடந்து கொள்ளவும் ஆணையிட்டார் காலிபா. அல்பத்கின் வம்சத்தில் சுப்குத்கிந்-3 என்பவர் (977-97) கசனாவி பிரதேசத்தின் மூன்றாவது அரசராக ஆட்சிக்கு வந்தார், அவரது முதல் மகன் தான் கஜினி முகமது.
தனது தேசத்தினை விரிவுப்படுத்த சுப்குத்கின் பெஷாவரை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த ஜாட் மன்னர் ஜயபாலன் மீது படை எடுத்தார் ஆனால் அப்போரில் ஜயபாலன் வெற்றி பெற்றார். மீண்டும் படை எடுக்க நினைத்தாலும் அதற்குள் சுப்குத்கின் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் , சாகும் தருவாயில் கஜினி மீது நம்பிக்கையில்லாததால் அவரது தம்பி இஸ்மாயிலை அரசனாக்கிவிட்டு இறந்ததார்.
(கஜினி முகமது)

கஜினி பின் படை திரட்டி தம்பியை கொன்றுவிட்டே ஆட்சியில் அமர்ந்தார். முன்னர் அவரது தந்தை ஜயபாலனுடன் போரிட்டப்போது அவருக்கு உதவியாக போரில் கலந்து கொண்ட கஜினிக்கு ஜெயபாலனுடன் ஏற்பட்ட தோல்வி உறுத்திக்கொண்டே இருந்ததால் பழி வாங்க மீண்டும் போரிட முடிவு செய்தார்.

பெஷாவர் படை எடுப்பு:

1001 இல் ஜெயபாலன் மீது படை எடுத்து பெஷாவருக்கு சென்றார், கடுமையாக நடைப்பெற்றப்போரில் 15,000 வீரர்களை கொன்று ஜயபாலனையும்,அரச குடும்பத்தினர் 15 பேரையும் கைது செய்து கூடவே  5,00,000 பெஷாவர் மக்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு கஜினிக்கு சென்றார்.

பின்னர் மன்னர் ஜயபாலனின் உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி 2,50,000 தினார்கள் மீட்பு தொகையாக கொடுத்து மன்னரை மீட்டு சென்றார்கள். நாடு இழந்து ,தோல்வியுடன் வாழ விரும்பாத ஜயபாலன் , தீக்குளித்து தன்னை மாய்த்து கொண்டார், இது அக்கால ஜாட்,ராஜ்புத்திர அரச வழக்கம், தங்களுக்கு இழிவு ஏற்பட்டதாக கருதினால் உயிர் துறந்துவிடுவார்கள்.

தமிழ் மன்னர்களும் போரில் வீரமரணம் அடையாமல் , இழிவு ஏற்பட்டால் வடக்கிருந்து உயிர் துறப்பார்கள்.

வடக்கிருத்தல் என்றால் என்ன?

வடக்கு திசை நோக்கி அமர்ந்து , அவர்கள் முன்னால் அவர்கள் உடை வாளினை  கூர் முனை கழுத்தினை நோக்கி இருக்குமாறு நட்டுவிட்டு, அன்னம், தண்ணீர் தவிர்த்து உண்ணா நோன்பு இருப்பார்கள் , பசி,தாகத்தால் உடல் தளர்வுற்று சாயும் போது ,வாள் கழுத்தில் பாய்ந்து இறப்பார்கள்.

சங்க கால தமிழ் மன்னன் ,சோழன் கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறர்.


வெண்ணிகுயத்தி எனும் சங்ககால பெண்பாற் புலவர் பாடிய அப்பாடல்,

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."


இதன் மூலம் சங்கால தமிழ் மன்னர்கள் உயிரினும் மேலாய் மானத்தினை கருதியது புலப்படும்.


ஆனந்த பாலன் மீது படை எடுப்பு;



(கஜினி முகமதின் தர்பார்)

கி,மு 1008 இல் ஜயபாலனின் மகன் ஆனந்த பாலன் படைகளை உருவாக்கி , பெஷாவரை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார், இதனைக்கேள்விப்பட்டு கஜினி பெஷாவர் மீது படை எடுத்தார்.

இம்முறை ஆனந்த பாலனுக்கு உதவியாக குவாலியர், கன்னூஜ், கோக்ராஸ்,உஜ்ஜயின்,ஆஜ்மீர்,டெல்லி மன்னர்களும் வந்தார்கள், வந்தார்களே ஒழிய யாரிடையேயும் ஒற்றுமையே இல்லை, போருக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இருந்து, யாருக்கு முக்கியத்துவம் என்பது வரையில் கவுரப்பிரச்சினை எழுந்து ஒற்றுமையின்றி இருந்தார்கள்.

படை எடுத்து வந்த கஜினிக்கு இம்முறை ஆச்சர்யம் நிறைய படைபலத்துடன் ஆனந்த பாலன் இருப்பதை பார்த்து சண்டையை துவக்க தயங்கி ,படையுடன் எல்லையில் முகாமிட்டு நிற்கவேண்டியதாயிற்று. இரு தரப்பும் போரிட தயங்கி, யாராவது முதலில் ஆரம்பிக்கட்டும் என நினைக்க ,அப்படியே 40 நாட்கள் போயிற்று, அதற்குள் ஆனந்த பாலன் முகாமில் கோஷ்டி சண்டை ஏற்பட்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரிய நினைத்தார்கள், இடையில் மற்றவர்களின் பேச்சினைக்கேட்காமல் கோக்ராஸ் படைகள் கஜினி மீது தாக்குதலை துவக்கி போரிட ஆரம்பித்துவிட்டார்கள், கோக்ராஸ் ஆரம்பத்தில் கடுமையாக போரிட்டு 5000 கஜினி வீரர்களை கொல்லவும் செய்தார்கள், பின்னர் மற்ற மன்னர்களும் களத்தில் குதிக்க கஜினி படை பலமாக அடிவாங்க துவங்கியது, அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த பாலன் அமர்ந்திருந்த யானையின் மீது அம்பு தாக்கி காயமுற ,யானை திமிறிக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் போர்க்களத்தினை விட்டு ஓடிவிட்டது, இதனை பார்த்த மற்ற மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் குழப்பம் வரவே பல வீரர்களும் போர்க்களத்தினை விட்டு பின் வாங்கலாயினர். இதனை பயன்ப்படுத்திக்கொண்டு ,கஜினி மீண்டும் உற்சாகத்துடன் போரிட்டு எஞ்சியவர்களை தோற்கடித்து போரினை வென்றான்.

இப்போரில் சரணடைந்த சுமார் 20,000 இந்து போர் வீரர்கள் வெட்டிக்கொள்ளப்பட்டார்கள். பெஷாவர் மீண்டும் கஜினி முகமதின் ஆட்சிக்கு கீழ் வந்தது.

இப்போருக்கு பின்னர் தான் இந்து மன்னர்களிடம் ஒற்றுமை இல்லை, எளிதாக தோற்கடிக்கலாம் என புரிந்து கொண்ட கஜினி மற்ற சிறிய தேசங்களையும் தனித்தனியாக படை எடுக்கவும் , மேலும் தனது படை எடுப்பு முறையும் மாற்றிக்கொண்டு படை எடுக்கலான்.

இந்தியாவில் குளிர்காலத்தில் மன்னர்களும், மக்களும் அவ்வளவாக விழிப்புடன் இருப்பதில்லை, என்பதையும் , அவர்களுக்கு விழித்துக்கொண்டு படை திரட்ட வாய்ப்பில்லாமல் திடீர் என தாக்க வேண்டும் என்றும் புரிந்துக்கொண்டான். இந்தியாவில் படை எடுத்து போரிட்டாலும் சூரியன் மறைந்த பின் போரிட மாட்டார்கள் இது ஒரு போர் மரபு. ஆனால் கஜினி மாலை வேலைகளிலும்,இரவிலும் திடீர் என தாக்குதல் நடத்துவதுண்டு. போர் குறித்த எம்முன்னறிவிப்பும் இல்லாமல் இரவில் திடீர் என படையுடன் நகருக்குள் நுழைந்து தாக்கும் உத்தியாலேயே 17 முறை இந்திய பகுதிகள் தாக்குதல் நடத்த முடிந்தது.

பெஷாவர் என்பது கஜினியின் அண்டை நாடு என்பதாலும் இந்திய பகுதிக்கு நுழைய தேவையான வழி என்பதாலும் அதனை பிடிக்க ஆர்வம் காட்டினான். ஆனால் மற்ற படை எடுப்புகளின் போது ஒரு குறிப்பிட்ட நகரை குறிவைத்து தாக்கி கொள்ளை அடித்துவிட்டு , அடிமைகளாக மக்களையும் பிடித்து கொண்டு உடனே நாடு திரும்பிவிடுவது வழக்கம். இந்திய மண்ணில் அதிக பட்சமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் அவன் படை இருக்காது.காரணம் மற்ற நாட்டில் இருந்து உதவிக்கு படை வந்து பெரிய சண்டையானால் சமாளிப்பது கடினம் என்பதாலே.

கஜினி படை எடுத்த முறை இந்திய போர் முறைகளுக்கு மாறானது ,

#இந்திய மன்னர்கள் போர் புரிய போகிறார்கள் என்றால் முன்னரே யுத்த அறிவிப்பு செய்து தகவல் கொடுப்பார்கள்,

#மேலும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலே போர் நடக்கும். போர் களத்தில் சரணடைந்தவர்களை கொல்ல மாட்டார்கள்.

#போருக்கு சம்பந்தமில்லாத அப்பாவி பொது மக்களை துன்புறுத்த மாட்டார்கள்.

#பெண்களை தொடக்கூட மாட்டார்கள்.முதியவர்கள், குழந்தைகள்  ஆகியோருக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்.
-------------------------------------------------------------
சங்ககால போர் மரபு:

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

முதலில் ஓலை அனுப்பி எச்சரித்தல்,

பின் வெட்சிப்பூச்சூடி பகைவரின் ஆநிறை,ஆடுகள் என கவர்வர்.

எதிரி மன்னன் பதில் அளிப்பதாயின் ,

கரந்தை பூச்சூடி ஆநிரைகளை மீட்க போரிடுவர்.

வஞ்சி பூச்சூடி படை எடுத்து செல்வர்.

காஞ்சி பூச்சூடி எதிரிகள் நாட்டுக்கு வராமல் தடுப்பர்.

நொச்சி பூச்சூடி கோட்டையை காப்பார்கள்.

உழிஞை பூச்சூடி கோட்டையை முற்றுகை இடுவார்கள்.

தும்பைப்பூச்சூடி இரு தரப்பும் போர்க்களத்தில் ஒருவருக்கு ஒருவர் மோதுவார்கள்.

வாகைப்பூச்சூடி வென்றவர்கள் களிப்பார்கள்.

இதுவே அக்கால தமிழ் மன்னர்கள் போர் மரபு ஆகும்.
------------------------------------------------------

ஆனால் கஜினி  படை எடுப்பின் போது கொள்ளை அடிப்பதுடன் முடிந்தவரையில் எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனைப்பேரை கொண்டு விடுவது வழக்கம்.

ஊரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமைகளாக கைப்பற்றுவது வழக்கம்.

பின்னர் எஞ்சியவர்களை அடிமைகளாக ,அவனது நாட்டுக்கு கைப்பற்றி சென்றுவிடுவார்.

ஒரு அடிமையின் விலை அப்போது 10 தினார்களாம், ஒவ்வொரு முறை படை எடுப்பின் போதும் அடிமைகளை விற்ற வகையிலே சில லட்சம் தினார்கள் வருமானம் கிடைப்பதுண்டாம்.இப்படி ஏகப்பட்ட இந்துக்களை அடிமைகளாக ஆப்கானிஸ்தான், கசநாவி பகுதிகளில் விற்றதால் அப்பகுதிகளே இந்தியாவின் ஒரு நகரம் போல விளங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

மற்ற படை எடுப்புகளை அடுத்து காணலாம்.

திரும்பிப்பார்த்தல் தொடரும்...

-----------
பின்குறிப்பு;

தகவல், படங்கள் உதவி,

கூகிள் ,கூகிள் புக்ஸ், விக்கி, ஆர்க்கியாலஜி ஆன் லைன், ஹிஸ்டரி ஆப் இந்துஸ்தான் -அலெக்ஸாண்டர் டோவ். மேலும் பல இணைய தளங்கள்.நன்றி!
-------------


Tuesday, September 18, 2012

KKNP-கூடங்குளம் அணு உலை அரசியல்.



அணு சக்தி வேண்டுமா? வேண்டாமா ? என்றக்கேள்விக்கான விடையை கண்டறிவது கடினம் இல்லை ஆனால் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பதிலை சொல்வதில் தான் உண்மையான சவாலே இருக்கிறது.

சென்னையில் இருப்பவர், கூடங்குளத்தில் இருப்பவர், தினந்தந்தி படித்தவர், இந்து, டெக்கான் குரோனிக்கல் போன்றவற்றை வாசித்தவர்,சன் ,ஸ்டார் ,பிபிசி என தொலைக்காட்சி பார்ப்பவர்கள், அடுத்தவர்கள் பேசியதை ஐந்து நிமிடம் செவிமடுத்தே ஞானம் பெற்றவர்கள், வலைப்பதிவில் எழுதியவர்கள், எழுதியதைப்படித்தவர்கள், படிக்காமலே நல்ல பகிர்வு ,த.ம.9 என பின்னூட்டியவர்கள் , என சகலருக்கும் அணு உலைக்குறித்தான அறிவு தலையை குலுக்கினால் பொல பொலவென கொட்டும் அளவுக்கு பெருகிய சூழலில் ,நானும் கொஞ்சம் கொட்டலாம்னு பார்க்கிறேன் :-))



இந்திய அணு சக்திக்கான முதல் அடி 1944 இல் ஹோமி பாபா, ஜாம்ஷெட்ஜி டாடா கூட்டணியில் துவங்கி , 1956 இல் ஒரு செயல்படும் ஆய்வு அணு உலையை ,ஆசியாவிலேயே முதல் நாடாக இந்தியா தான் அமைத்தது என்ற பெருமையும் பெற்று பல ஆண்டுகள் ஓடியாச்சு.

இப்போது மொத்தம் 20 அணு உலைகள் செயல் பாட்டில் உள்ளன, 4780 மெ.வாட் மின் உற்பத்தி நடந்து கொண்டுள்ளது.அணு சக்தி உற்பத்திக்கு ரஷ்யா தான் நமக்கு அதிகம் உதவிக்கொண்டிருப்பதாக பெரும்பாலும் ஒரு நம்பிக்கை நிலைவுகிறது, ஆனால் கூடங்குளம் திட்டத்திற்கு முன்னர் ரஷ்யா நமக்கு செய்த அணு சக்தி உதவி என்பது ஒரு அணுசக்தி நீர்மூழ்கி வடிவமைக்க உதவியது மட்டுமே. மேலும் சின்ன சின்ன உதவிகள் மட்டுமே.

பெருமளவில் நமக்கு இது வரையில் உதவிய நாடுகளைப்பார்ப்போம்.

9 அணு உலைகளும்,அதற்கான எரி பொருளையும் அளித்தது கனடா,

2 அணு உலைகளும் ,எரி பொருளும் ஃபிரான்ஸ் அளித்துள்ளது.

2 அணு உலைகளும் எரி பொருளும் அளித்தது அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் ஆக்கும்.

மீதம் 7 அணு உலைகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தினை வைத்தும் ,இந்திய தொழில் நுட்ப்பத்தினை வைத்துமே செய்துள்ளோம்.

அப்போ ரஷ்யா என்ன தான் செய்தது? நமக்கு யுரேனியம் தேவைப்படும் போது கொடுத்தது, மேலும் யுரேனியம் என்ரிச்மெண்ட், புளுட்டோனியம் பிரிக்க என கொஞ்சம் சொல்லிக்கொடுத்துள்ளது.

கூடங்குளம் அணு உலைத்திட்டமே ரஷ்யா நமக்கு அளித்த மிகப்பெரிய அணு உலை தொழில்நுட்பம்.

அப்போ இத்தனை நாளும் அமெரிக்க நிர்பந்தம் , அதனால் மேலை நாடுகள் தடை என்று சொல்வதெல்லாம், என்ன?

அமெரிக்க ஒரு பக்கம் சில நிபந்தனைகளை சொன்னாலும் மறுபக்கம் நமக்கு வேலை நடந்து கொண்டு தான் இருந்தது.ஏன் எனில் நமக்கு அணு உலையை விற்ற நாடுகளே அவை, அவற்றிடம் யுரேனியம் வாங்கினால் அவர்களுக்கு தான் லாபம், ஆனால் அணு ஆயுதம் தயாரித்ததால் சில நாட்களுக்கு மிரட்டிவிட்டு மீண்டும் வியாபாரம் செய்து கொண்டே இருந்தார்கள் என்பதே உண்மை.

இந்தியா ஏன் அடுத்தவர்களிடம் யுரேனியம் வாங்க , வளைந்து, நெளிய வேண்டும் என சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பிக்க ரஷ்ய உதவியை நாடியது, உதவியும் கிடைத்தது, சும்மா உதவ முடியுமா வியாபாரம் பேசினார்கள் , அதன் விளைவே கூடங்குளம்.(1986 இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்றாலும்,அதற்கான பேச்சு வார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைப்பெற்றே வந்தது என்பதனை நினைவில் கொள்ளவும்)

அமெரிக்காவின் நிலை என்னவெனில் ,இந்தியா அணு உலை,அணு குண்டு என்ன வேண்டுமானாலும் தயாரிக்கட்டும்,ஆனால் இந்தியா அந்த தொழில்நுட்பத்தினை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் ஏற்கனவெ இந்தியா இரானுக்கு உதவ போவதாக பேச்சு கிளம்பியதே.

இந்த கட்டுப்பாட்டிற்கு ஒத்துக்கொண்டிருந்தால் நமக்கு ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ், வெஸ்டிங் ஹவுஸ் , கனடா, ஃபிரான்ஸ் எல்லாம் வழக்கம் போல உதவி செய்திருப்பார்கள்.

இந்தியாவோ இத்தனை கோடி செலவு செய்து அணு உலை எல்லாம் கட்டுறோம், அதை வச்சு வியாபாரமும் செய்யலாம்னு ஆசைப்படுகிறது.

இப்போது நாம் பயன்படுத்தும் அணு உலைகள் எல்லாம் மேற்கத்திய வடிவமைப்புகள், கன நீர் பயன்பாடுள்ள அணு உலைகள், மேலும் இதனை மறுவடிவமைப்பு செய்து விற்க அனுமதியில்லை. அதனை விட எல்லாமே 500 மெ.வாட் திறனுக்கு கீழானவை, இதனை வணிக ரீதியாக இந்தியா தயாரித்து விற்க நினைத்தாலும் பெரும்பாலான நாடுகள் வாங்காது.

நமக்கு பயன்ப்படுத்த, தயாரிக்க, விற்பனை செய்ய என முழு உரிமையோட அணு உலையும் ,தொழில்நுட்பமும் தேவை, யாரு கொடுப்பா? ரஷ்ய அண்ணாத்தை மட்டும் தான் கொடுப்பாரு.

ரஷ்யாவிடம் பேரம் பேசியதில் , அப்படி கொடுக்கணும் என்றால் இன்னும் சில நிபந்தனைகளும் போடப்பட்டது அவை என்னவென ஆரம்பத்தில் தெரியவில்லை, முதல் கட்டமாக 3 பில்லியன் டாலர் அளவுக்கு அணு உலையினை விற்கப்போடப்பட்ட ஒப்பந்ததில் 2 பில்லியனை கடன் எனவும் அதுவும் சுலப தவணைகளில், 12% ஆண்டு வட்டி மட்டுமே. ஒரு பில்லியன் மட்டும் முதலில் பணமாக தவணைகளில் கொடுத்தால் போதும் என்ற கவர்ச்சியான வியாபாரம் என்பதால் இந்தியாவும் அதி ஆர்வம் காட்டியது, ஆனால் ரஷ்யாவில் பொருளாதாரம் சரிந்ததால் கடனுக்கு விற்க முடியாத நிலை, காசு கேட்டால் இந்தியாவால் கொடுக்க முடியாத நிலை,இப்படித்தான் இத்திட்டம் தூங்க தொடங்கியது, மேலும் ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைகளின் போதும் ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் கூடுதலாக வாங்க நிர்பந்திக்கவும் பட்டோம், ஆரம்பத்தில் மிக் விமானம், துப்பாக்கி ,பிற ஆயுதங்கள், சுகோய் போர் விமானம், பீரங்கிகள், எனப்போய் கடைசியில் பழைய விமானம் தாங்கி கப்பல் குர்ஷ்கோவ் என நம் தலையில் கட்டியது ,


குர்ஷ்கோவ் என்ற விமானந்தாங்கி கப்பல் ,ரஷ்ய கடற்படையில் இருந்து ஓய்வுப்பெற்ற ஒன்று, அது கயலான்கடை சரக்கு, ஆனால் இந்தியா தொழில்நுட்பத்தோடு அணு உலை கேட்டதும் அதனையும் விற்றுவிட்டது,அக்கப்பலை பழுப்பார்த்து , புதிப்பித்து தர என 1.8 billion dollar கொடுத்தோம் , ஏன் இந்தியாவுக்கு வேற வழியே இல்லையா எனலாம், கடனுக்கு ரஷ்யாவை விட்டால் யாரு தருவா, அதுவும் சுலப தவணை, மேலும் நாம் வாங்கியப்பொருட்களுக்கு பாதிக்கு மேல் கோதுமையாக கொடுத்து கழித்தாயிற்று, அதாவது உணவுக்கு ஆயுதம்,அணு உலை என ஒரு பண்டமாற்று திட்டம்.

மிக் விமானங்கள் அடிக்கடி விபத்தானாலும் அதனையே மீண்டும் புதுப்பித்து ஓட்டிக்கொண்டிருக்க காரணம் , கோதுமையோ, சக்கரையோ, கொடுத்து கொஞ்சம் பணமும் கொடுத்தால் விமான உதிரிப்பாகம், விமானம் என எல்லாமே ரஷ்யா கொடுப்பதால் தான்.

உணவுக்காக ரஷ்யா ,ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்க தயார், மற்ற நாடுகள் அப்படி செய்யாது என்பதாலே இந்தியா பல எதிர்ப்புகளுக்கிடையேயும் வாங்கத்தயாராக உள்ளது.

இது வரை இந்தியாவில் உள்ள அணு உலைகள் எல்லாம் கன நீர் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டவை, அவற்றை மீண்டும் தயாரித்து விற்கவும் முடியாது.

ரஷ்யா கொடுப்பது இலகு நீர் அணு உலை, மேலும் முழு தொழில்நுட்ப உரிமையும் நமக்கு கொடுக்கப்பட்டு விடும், எனவே இந்தியா அணு சக்தி நாடாக மட்டுமில்லை, அணு சக்தி வியாபார நாடாகவும் மாறிவிடும். இதனை ஏற்கனவே அணு சக்தியில் வல்லரசாக உள்ள நாடுகள் விரும்பவில்லை எனவே தான் மேலை நாடுகளில் இருந்து பலத்த கூச்சலும் அதிக அழுத்தமும் கொடுக்கப்படுகிறது.

இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது NPT, NSG என பல ஒப்பந்தங்களை,அவற்றில் கை எழுத்திடவில்லை எனில் யுரேனியம் இறக்குமதி செய்ய முடியாது. இந்தியாவில் யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டாலும் நமது தேவைக்கு உற்பத்தி இல்லை. எனவே வெளிநாடுகளை குறிப்பாக ஃபிரான்ஸ்,ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டும், அவையோ அமெரிக்கா சொல்வதை கேட்கும் நாடுகள்.எனவே தான் 1.2.3 ஒப்பந்தம் எல்லாம் போட்டு தாஜா செய்யப்பட்டது.

பிரான்ஸை குளிர்விக்க பிரான்ஸின் அரேவா அணுசக்தி நிறுவனத்துடன் 2008 இல் ஒரு ஒப்பந்தம் போட்டு ஜெய்தாப்பூரில் வேலை ஆரம்பிக்க பார்த்து அதுவும் பிரச்சினையில் இருக்கிறது.

இந்தியா காலா காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலே பிரச்சினை இருந்திருக்காது, அல்லது சொந்தமாக யுரேனியம் என்ரிச்மெண்ட் செய்தே தேவையை பூர்த்தி செய்திருக்கணும். இதெல்லாம் செய்ய முடியாதுன்னா அணு உலையே வேண்டாம்னு சும்மா இருந்திருக்கணும், ஆனால் ஆடி அசைந்து வேலை செய்து எல்லாப்பக்கமும் சிக்கலாக்கிக்கொண்டாச்சு.ஒரு 2000 மெகா வாட் அணு உலை அமைக்க 5-7 ஆண்டுகளே மற்ற நாடுகளில் பொதுவாக ஆகும்.

அணுசக்தி அழிவு சக்தி வேண்டாம் என கிளம்பும் எதிர்ப்புகள், மற்றும் ஊடக பிரச்சாரங்களில் பெரும்பாலும் அணுசக்தி வியாபார நாடுகளின் கையே பின்னால் இருக்கும் என்பது பொதுவான ஒரு நியதி.

செல் போன் தயாரிக்கும் சாம்சங்க் நிறுவனம் தென் கொரியாவில் ஒரு முக்கியமான அணு சக்தி நிறுவனம், அவர்கள், அமெரிக்க, ரஷ்ய நுட்பம் எல்லாம் காப்பி அடிச்சு, தென் கொரியாவில் அணு உலையும் கட்டி இருக்காங்க ,இப்போ அதன் அடிப்படையில் அணு உலை விற்பனையும் செய்றாங்க, UAE இல் ஒரு அணு உலை அமைக்க ஒப்பந்தமும் போட்டுள்ளார்கள்.அமெரிக்கா ஒன்னுமே சொல்லக்காணோம் :-))

காரணம் தென் கொரியா அமெரிக்காவின் நட்பு வளையத்தில் இருக்கு, மேலும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு விற்பனை செய்யாது.வட கொரியா அணு ஆயுத சோதனை செய்யப்போகுதுன்னு சும்மாவே கொதிக்கும் அமெரிக்கா, தென் கொரியா அணு உலைக்கட்டியதை ஒன்றுமே சொல்லவில்லை, இதெல்லாம் நடந்து ரொம்ப நாளாச்சு,ஆனாலும் உலக அளவில் அணுசக்திக்கு எதிரா எதிர்ப்பு கிளம்பினால் பின்னாடி அமெரிக்கா இருக்கும் என்பது எழுதப்படாத விதி.

அணுசக்தி பயன்பாடு மற்றும் விற்பனை என்பது அமெரிக்க வழிக்காட்டுதலின் படி இருக்க வேண்டும் என்பதே பெரியண்ணனின் ஆசை, அதற்கு எதிராக போனால் ஆப்பு தான்.

இந்தியா அணு ஆயுதத்திற்காக தான் அணு உலை மீது ஆர்வம் காட்டுதுண்ணு சொல்கிறார்கள், ஆனால் இப்போது சுமார் 4320 டன் யுரேனியம் ஆண்டுக்கு செலவழிக்குது அதன் மூலம் கிடைக்கும் புளுட்டோனியத்தினையே முழுசா பிரிச்சு எடுக்க வசதியில்லை, எனவே பெரும்பாலான ஃப்யூல் ராட்கள் சும்மா பாதுகாக்கப்பட்டே வருது.

அணுசக்தி ஆபத்தானது தான் ஆனால் அதனை யாரோ ஒரு சில அணு வியாபாரிகள் சொல்வதால் எதிர்ப்பது சரியல்ல. அதுவும் 99% வேலை முடிந்த திட்டத்தினை எல்லாம் அரசு கைவிடுவது சாத்தியமில்லாதது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியா உரிய காலத்தில் முழு முதலீட்டையும் செய்திருந்தால் கூடங்குளம் திட்டம் 2000 இலேயே செயல்பட ஆரம்பித்திருக்கும். புதுசா 2011 இல் போராட கிளம்பியவர்களுக்கு பிம்பிளிக்கு பிளாக்கி தான் :-))

வெள்ளம் வந்த பின் அணையை மூடினால் நிற்குமா?
*******
#கடந்த ஆண்டு கூடன் குளம் அணு உலை குறித்து ஒரு மாற்றுப்பார்வை என ஒரு பதிவிட்டிருந்தேன் அதனை இங்கு காணலாம்.


# உலகில் மிக பாதுகாப்பான அணு உலை வடிவமைப்பு என்பதே இல்லை, மிக சிறிய அளவில் கதிர்வீச்சு கசிவு இருக்கவே செய்யும்,மேலும், பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் கையாண்டு ,விபத்தினை தவிர்க்க முடியும் என்பதனை விளக்கும் ஒரு பதிவு.


ஹி...ஹி எவ்ளோ நடு நிலைமையா எல்லாவற்றையும் சொல்லி இருக்கேன்னு என்னை யாரும் பாராட்ட வேண்டாம் ,திட்டாமல் இருந்தாலே போதும் :-))
----------
பின் குறிப்பு:

படங்கள்,தகவல் உதவி,

கூகிள்,விக்கி, DAE,NPCIL, இணைய தளங்கள்,நன்றி!
-----------------

Sunday, September 16, 2012

கற்றது தமிழ்-3


ஆலோசனை(aalochaya)

வட மொழி சொல், consider, advise,counsel எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அறிவுரைத்தல்,அறிவுறுத்தல்,எடுத்துரைத்தல்,

ஆச்சர்யம்(aashcharyam)

வடமொழி சொல், -surprise எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்:

வியப்பு,திகைப்பு,

அபிப்பிராயம்(abhipraaya)

வடமொழிச்சொல், -opinion எனப்பொருள் வரும்,

இணையான தமிழ்ச்சொல்:

கருத்து, கூற்று,கணிப்பு,

அலங்காரம்.

alangkar -alankrita- என வடமொழிச்சொல்லில் இருந்து உருவானது ,decorated எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

ஒப்பனை,அழகூட்டிய,

மேக்-அப்: ஒப்பனை, அழகுக்கலை ,

அலட்சியம்(alakshmaana)


வடமொழி சொல், disregard எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

கவனமின்மை, கவனியாமை,பொருட்படுத்தாமை, பொருட்டில்லை,புறந்தள்ளல்.

அல்பம்(alpam)

வடமொழிச்சொல் ,small எனப்பொருள்.

இணையான தமிழ் சொல்:

சிறிய, குறைவான, அல்பாக நடந்துக்கொள்வது என்றால் சின்னத்தனமா, வடிவேல் பாஷையில் சொன்னால் "சின்னப்புள்ளத்தனமா" :-))

தகுதிக்கு குறைவாக , கீழ்த்தரமாக நடந்துக்கொள்வது என சொல்லலாம்.

அங்கம்(angam)

வட மொழிச்சொல், body எனப்பொருள்:

இணையான தமிழ்ச்சொல்:

உடல்,உறுப்பு,அவயம், பகுதி,

அங்கன் என்றால் கவனிப்பு என்றும் பொருள் உண்டு, அங்கன்வாடி என வடமொழியில் சிறார் பள்ளியை சொல்லக்காரணம், குழந்தைகள் கண்காணிப்பகம்,காப்பகம் என்ற பொருளில் தான்.

அங்காடி என்ற சொல்லுக்கு திறந்த வெளியில் வியாபாரம் செய்வதே பின்னர் பொதுவாக கட்டிடத்தில் வியாபாரம் செய்தாலும் "கடை" எனத்தமிழில் பொருள் கொள்ளப்பட்டது., ஆனால் அங்காடி என்ற சொல் தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கனடா, துளு ஆகிய திராவிட மொழியிலும், மராத்தியிலும் உள்ளது.

கேரளாவில் உள்ள கொச்சினின் இயற்பெயர் கொச்சங்காடி அதாவது "சின்னக்கடை" அக்காலத்தில் கடல் வழி வாணிபம் அங்கு சிறிய அளவில் நடக்க ஆரம்பித்த போது வைத்த பெயர்.பின்னாளில் மருவி கொச்சின் ஆயிற்று. இப்பொழும் ,அங்கு அங்காடி என்ற பெயரில் சிறிய கிராமம் உள்ளது.

(ஹி...ஹி ...கொச்சின் குயினு)

கர்நாடகாவிலும் அங்காடி என்ற பெயரில் கிராமம் உள்ளதாம்.

மராத்தி தவிர மற்ற மொழிகளில் கடை என்ற பொருள் உள்ளது, மராத்தியில் மேல் அங்கி என்று பொருள். எனவே அங்காடி தமிழ் சொல் ஆக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது.

அநாதை(anaatha)

வடமொழி சொல், no help,no patron உதவிக்கு ,அல்லது கவனிக்க யாரும் இல்லாதவர் எனப்பொருள்.

நாதன் என்றால் தலைவன், அ-நாத என்றால் தலைவனாக யாரும் இல்லை, இதன் பொருள் ஒரு குடும்பம், குழுவில் இல்லாமல் தனித்து விடப்பட்டவர் என்பதாகும்.

எனவே தமிழில்,

திக்கற்றோர், தனி மனிதன், தனிக்கட்டை, உதவியற்றவன், உற்றார் இல்லாதவன், சொந்தமில்லாதவன், பற்றற்றவன், எனலாம்.

அகதி:

வட மொழி, நிலையில்லா எனப்பொருள்.

கதி- நிலை, பதம்,நேரம்,வேகம் எனப்பல பொருள் உண்டு.

அ என்றால் இல்லை, எனவே அகதி என்றால் நிலையான இடம்,அல்லது இடைப்பட்ட ஒரு நிலையில் இருப்பது.

இணையான தமிழ்ச்சொல்:

நாடோடி, புலம்பெயர்ந்தோர்,நிலையற்றவர் எனலாம்.

அதோகதி.

வட மொழிச்சொல், descend எனப்பொருள்.

அதோ என்றால் சரிதல், இறங்குதல்,கதி என்றால் நிலை,

இணையான தமிழ்ச்சொல்:

வீழ்தல், வீழ்ச்சியடைதல், இறங்குமுகம்,கீழான நிலையை அடைதல்.,நலிவுறுதல் எனலாம்.

வேலைப்போச்சுன்னா உன் கதி அதோகதி என சொல்வதுண்டு, அப்படியானால் இப்போது இருக்கும் நிலை-வசதி ,எல்லாம் இழக்க நேரிடும், கீழான ,எளிய வாழ்க்கைக்கு போக வேண்டி வரும் என சொல்வதாகும்.

நிர்க்கதி:

வடமொழி, நிர் என்றால் இல்லை, அழித்தல் , கதி- நிலை, எனவே கதியில்லை எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

வேறு வழியில்லை, நிலையில்லை, கையறு நிலை, பற்றற்ற நிலை,எங்கே போவது என்ன செய்வது அறியா நிலை என்பதை சுருக்கமாக "செய்வதறியா நிலை" எனலாம்.


அனுபவம்(anubhava)

வடமொழிச்சொல், experience எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:

அனுபவசாலி- பயிற்சிப்பெற்றவர்,தேர்ச்சியுள்ளவர், பழக்கமுடையவர்,
பயிற்சி, அறிவு எனவும் பொருள் கொள்ளலாம்.

அனுமதி(anumathi)

வடமொழிச்சொல், permission எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்:
அழைப்பு ,அழைத்தல்,நுழைவு,கடவு,உள்நுழை, என சொல்லலாம்.

அனுசரணை(aNusaranai)

வடமொழிச்சொல், adjust,acompany, எனப்பொருள்,

இணையான தமிழ்ச்சொல்,

அனுசரணை= இசைவு, அனுசரிப்பு- இசைந்து போதல், ஒற்றுப்போதல், சேர்ந்தியங்கல்.ஒருங்கிணைந்து செய்தல்,கூட்டாக இருத்தல்,ஒற்றுமையாக இருத்தல்.

அநியாயம்(anyaayena)

வடமொழிச்சொல் -illegal எனப்பொருள்.

இணையான தமிழ்ச்சொல்,

சட்டத்திற்கு புறம்பான,முறையற்ற,பண்பற்ற, முறைகேடாக, வழமைக்கு மாறாக, என சொல்லலாம்.

அக்கிரமம்(akrama)

வட மொழிச்சொல்- illegal,unlawful எனப்பொருள் தரும் சொல்லே.

இணையான தமிழ்ச்சொல்,

முறைகேடு,சட்டத்திற்கு மாறாக,விருப்பமில்லா, விருப்பத்திற்கு மாறாக,வரம்பு மீறிய, வரிசையின்றி,ஒழுங்கின்றி, ஒழுங்குமீறிய என சொல்லலாம்.

கிரமம்- வரிசை, அக்ரமம்- வரிசையின்மை.

akrama-sakrama bill என கர்நாடக மாநிலத்தில் ,பெங்களூரு மாநகர வளர்ச்சி குழுமம் ஒரு சட்டம் இயற்றி எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது,அதாவது அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் சட்டம்.

நீதி:

வடமொழி சொல்லே , ஜஸ்டீஸ் எனப்பொருள்.

நீதி,.நீதிமான் என்றெல்லாம் வட மொழியில் உண்டு.

தமிழில் , ஒழுக்கம், ஒழுகலாறு, மாண்பு,சட்டம்,வழக்கு,என சொல்லலாம்.

நீதி மன்றம்- வழக்காடு மன்றம்.

அட்வகேட்- வழக்குறைஞர்,

லாயர்- வழக்கறிஞர்.

மரியாதை:

மர்யாதா என்ற வட மொழி சொல்.

இணையான தமிழ்ச்சொல்:

கொள்கை, நேர்மை, மாண்பு, ஒழுக்கம் என சொல்லலாம்.

இதிகாச நாயகன் ராமனுக்கு மர்யாத புருஷோத்தம ராமா எனப்பட்டப்பெயர் உண்டு.

தெலுகில் மரியாத ராமண்ணா கதைகள் என , தெனாலி ராமன் போல கதாபாத்திரத்தின் அடிப்படையில் கதைகள் உள்ளது.


--------------------

அறிவுக்கடல் என்ற பதிவர் சில "மெட்ராஸ் பாஷை" சொற்களுக்கும் விளக்கம் கேட்டார், தெரிந்த வரையில் ஒரு விளக்கம் தருகிறேன்.

இஸ்த்துகினு:

இழுத்துக்கொண்டு என்ற பொருள், இழு என்பது தமிழ் சொல் தான் என்ற போதிலும், இசு என்பதும் தமிழ் தான். இசுத்தல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் தரும்.

பிசு ,பிசுத்தல் ஒட்டுதல், பிசுக்குதல் என்றால்அழுத்தி வெளியேற்றல் என பொருள் தரும் தமிழ் சொற்கள் உள்ளதை கவனிக்கவும்.

ஜகா வாங்குதல்:

ஜகா என்ற வட மொழிச்சொல்லுக்கு விழிப்பு, என ஒரு பொருள் இருக்கிறது.

எனவே ஜகாவாகிட்டான் ,அதாவது விழித்துக்கொண்டான் என்ற பொருளில் சொல்லப்பட்டு பின்னர் மருவி இருக்கலாம்.

ஒருவரை ஒரு வேலைக்காக கூட வர சொல்லி அழைத்து கடைசி நேரத்தில் வரவில்லை என சொல்லும் போது பெரும்பாலும் திடீர்னு ஜகா வாங்கிட்டான் என சொல்வதுண்டு அல்லவா.

ஏன் எனில் இந்த வேலைக்காக இவன் கூட நாம போன நமக்கு என்னப்பயன் அல்லது பிரச்சினை வரலாம் என கடைசி நேரத்தில் ஒரு விழிப்பு வந்து விலகுவதனால் அப்படி சொல்வது பொருத்தமே.

ஜகச்ஜால கில்லாடி என சொல்வதும் இதனால் தான்,

ஜகா -விழிப்பு, ஜாலம் -வித்தை, அதாவது பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நம் முன்னால் ,நமக்கு தெரியாமல் செய்வது, மேஜீக் செய்வபவர்கள் நம் கண் முன்னால் நம்மை ஏமாற்றுவது போல.

இதனை வழக்கத்தில் எளிமையாக கண்கட்டு வித்தை என்பார்கள், விழிப்புடன் இருக்கும் போதே கண்ணை கட்டியது போல செய்வது...

ஆகா இப்பவே கண்ணக்கட்டுதே அவ்வ்வ் :-))

அப்படின்னும் சொல்லலாம்!

உஷார்:

உஷா- என்றால் வட மொழியில் விடியல், உஷாஸ் என்பவர் விடியலின் தேவதை, உஷத் காலம் என அதிகாலையை சொல்வது வழக்கம்.

உஷார் என்றால் விழித்துக்கொள், விழிப்பாக இரு எனப்பொருள்.

அக்காலத்தில் கோட்டையை காப்பவர்கள் சுற்றிலும் காவலுக்கு இருப்பார்கள் ,அவர்கள் தூங்காமல் இருக்க மணிக்கொரு ஒருத்தார் பாரா உஷார்னு சொல்லிக்கொண்டு ஒரு ரவுண்டு போவது வழக்கமாம். அதாவது காவல் காப்பவர்கள் விழிப்புடன் இருக்கணும், தூங்கிட்டு இருந்தாலும் முழித்துக்குவாங்க :-))

ராத்ரி- வடமொழி,
இரவு -தமிழ்
அர்த்ஹராத்ரி- நள்ளிரவு.

பேஜார் (bezar,bezaar):

கோவம்,டென்ஷன் ஆவது, பேஜார் பார்ட்டி என்றால் எதற்கெடுத்தாலும் கோவமாவது, பேஜாராகீது என்றால் டென்ஷனா இருக்கு என சொல்வது.

அதே சமயம் பேஜார் என்பதற்கு இன்னொரு பொருள் விலை மாது, பஜாரி என்று சொல்வது பேஜார் என்பதில் இருந்து வந்ததே.

நாஸ்த்தி:

ஆஸ்தி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம், சொத்து ,அல்லது பொருள் இருப்பது, நாஸ்தி என்றால் எதுவும் இல்லை, இதில் இருந்து தான் நாஸ்த்திகம் -நாத்திகம் என்ற சொல் வந்தது ,அதாவது கடவுள் இல்லை என்பது.

நாஸ்தி பண்ணிடுவேன் என்றால் அழித்துவிடுவேன் என்பது.

கலீஜ் பார்ட்டி:

கலீஜ் என்ற அரபிய சொல்லுக்கு வளைகுடா, கடற்புறம் எனப்பொருள், சவுதி அரேபியாவில் கலீஜ் டைம்ஸ் என ஒரு செய்தித்தாள் உண்டு.அங்கு இருக்கும் ஊருக்கும் கல்லீஜ் எனப்பெயர்.

அப்போது முகலாயர்கள் இந்தியாவுக்கு நாடுப்பிடிக்க வந்தப்போது அவர்களை கலீஜ் நபர்கள் எனக்குறித்து இருக்கலாம்,மேலும் முரட்டுத்தனமானவர்களாக வேறு இருந்ததால் அப்படி இருப்பவர்களை எல்லாம் கலீஜ் என சொல்வது வழக்கமாக இருக்கலாம்.

இப்போது அழுக்கா, முரட்டுத்தனமா நடந்துக்கொள்பவர்களை கலீஜ் பார்ட்டி என சென்னை தமிழில் அழைக்கப்படுகிறார்கள்.

பாடாவதி பார்ட்டி:

பாடத்தெரியாத ஆள் என பொருள் அல்ல, படா- பெரிய, அவதி - தொல்லை, இம்சை,

பாடாவதி என்றால் பெரிய தொல்லையான ஆள் :-))

இன்னும் நிறைய சொற்கள் உண்டு படிப்படியாக பட்டியலிடுகிறேன்.

பின்னூட்டத்தில் உங்களுக்கு பொருள் தெரியவேண்டிய சொற்கள், குறிப்பிட்டால் முடிந்த வரையில் தேடி பொருள் கூறுவேன், மற்றும் தெரிந்த மாற்று சொற்களை கூறினால் அடுத்து வரும் இடுகையில் பயன்ப்படுத்திக்கொள்வேன்.நன்றி!

--------------
பின் குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி:

கூகிள், விக்கி,தமிழ் இணையப்பல்கலை, மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,அகரமுதலி,மேலும் பல இணைய தளங்கள்,நன்றி!
***************

Friday, September 14, 2012

அஃதே,இஃதே-3



யார் சிந்தனையாளர்கள்?

சென்னையில் நடந்த அன்ன தான விழாவில் ஒருவர் பேசியதாவது, மற்ற ஜாதினருக்கு தானம் அளிப்பதை விட பிராமணர்களுக்கு தானம் அளிப்பது மிகவும் சிறந்தது எனப்பேசினார், அதற்கு விவேகானந்த அய்யா அவர்கள், இக்கருத்தில் நல்லதும் உண்டு ,தீயதும் உண்டு. நாட்டில் உள்ள எல்லா பண்பாடுகளும் பிராமணர்களிடையே நடைமுறையில் உள்ளன,நாட்டின் சிந்தனையாளர்களாகவும் அவர்களே உள்ளனர்,அவர்களை சிந்தனையாளர்களாக ஆக்குகின்ற வாழ்க்கை வழியை அடைத்துவிட்டால் நம்ம் நாடு முழுவதும் பெரும் துன்பத்துக்குள்ளாகும் என சொன்னார்.

விவேகானந்த அய்யாவின் கூற்றினை கட்டுடைத்து பார்த்தால்,

# பிராமணர்களுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்??!!

# அவர்களை சிந்தனையாளர்களாக உருவாக்க அவர்களுக்கு நிறைய தானம் செய்ய வேண்டும் .

அல்லது தானம் கொடுத்து சொகுசாக வாழ வைத்தால் சிந்திக்க மாட்டாங்கன்னு சேம் சைட் கோல் அடிக்கிறாரா?

# பிராமண சிந்தனைகள் ஊற்றெடுக்கவில்லை எனில் நாட்டுக்கு பெரிய துன்பம் உண்டாகிடும்.

பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.

ஹி..ஹி எதையவாது படிப்போமேனு தேடினப்போ எப்போவோ வாங்கி சும்மா கிடந்த , விவேகானந்தரின் " கொழும்பு முதல் அல்மோரா வரை" என்ற பயணக்கட்டுரை நூல் கிடைச்சது, கொஞ்சம் பக்கங்கள் மானாவாரியா படிச்சதில் சிக்கினது தான் மேற்கண்டது.

500 பக்கமுள்ள இந்நூல் வெறும் 38 ரூவா தான் அதனாலேயே இந்நூலை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். மலிவான விலையில் விற்க காரணம் இராமகிருஷ்ண மட வெளியீடும், அதற்கு டீ.வி.எஸ் குழுமத்தின் சுந்தரம் நிதிநிறுவனத்தின் பண உதவியும் ஒரு காரணம்.

---------------
"பாசி"ட்டிவ் எனர்ஜி.



ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிர் வேதியல் அறிஞர் " Pierre Calleja" என்பவர் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்கு எரிய வைக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

இவ்வகையான பாசியை தண்ணீர் கொண்ட கலத்தில் வைத்து பகலில் வெயில் படும் படி வைத்துவிட்டால் காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் , கதிரவனின் ஆற்றலை ஈர்த்து மின்சாரமாக மாற்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமித்து வைத்துவிடும், பின்னர் இரவில் தெருவிளக்கினை ஒளியூட்டலாம். இதன் மூலம் நகரத்தில் வாகன போக்குவரத்தினால் உருவாகும் கரியமில வாயு குறைவதோடு, மின்சாரம் தயாரிக்கும் போது உருவாகும் கரியமில வாயு இன்ன பிற வாயுக்களும் உற்பத்தியாவது குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.


இத்திட்டங்கள் எல்லாம் ஆய்வு நிலையில் வெற்றிகரமாக இயங்குகின்றன, வணிக ரீதியில் விலை குறைவாக தயாரிக்க முடிந்தால் பெருமளவு மின் தேவையை இயற்கையாக பெறலாம் ,மேலும் அபாயமான அணு உலைகள் கட்டுவதும் தேவைப்படாது.

மேலும் பாசிகள் மூலம் பெருமளவில் மின்சாரம் தயாரிக்கவும் உலக அளவில் சோதனைகள் நடந்துக்கொண்டுள்ளன, நம் நாட்டில் வழமை போல நிலக்கரி, அணு உலை என தீரா ஆர்வத்துடன் வேலை நடக்கிறது :-))

தேவையே கண்டுப்பிடிப்பின் தாய்! நம் தேவைகள் புதிய தீங்கில்லா மாற்று எரிசக்திகளை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்திற்கு நல்லது.

------------------------

சந்தையில் புதுசு:மின் வெட்டில் மின்னும் விளக்கு.

மேற்கண்ட படத்தில் உள்ள லெட் விளக்கு ஒரு சீனத்தயாரிப்பாகும், இதில் ஒரு சிறிய ,மின்கலமும்,மின்னேற்றியும் உள்ளது ,வழக்கமான மின் விளக்குகளை பொறுத்துவது போல "தாங்கியில்"(ஹோல்டரில்" ),மாட்டலாம். தானாக மின்னேற்றம் ஆக்கிவிடும், மின்வெட்டு ஆகும் போது சேமித்த மின்சாரம் மூலம் தானாகவே எரியும், சுமார் 3 மணி நேரம் வரையில் ஒளி கொடுக்கும். விலை 150 ரூவிலிருந்து இருக்கிறது,படத்தில் இருப்பது 150 ரூ, அடுத்து 200, 250 என கூடுதல் ஒளிரும் திறனுடன் விளக்குகள் இருக்கிறது.

எப்படி இருக்கிறது சோதனை செய்ய ஒன்றை வாங்கினேன் , நன்றாகவே இருக்கிறது ,இன்னும் இரண்டு வாங்கி மாட்டலாம் எனப்பார்க்கிறேன். தலை கீழ் மின்மாற்றி சேமகலம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒன்று எனலாம்.

மக்களுக்கு பயனுள்ள பொருட்களை எளிமைப்படுத்தி புதிய வகையில் மலிவாக கொடுப்பதில் சீனர்கள் எப்போதும் முந்திக்கொள்கிறார்கள், நல்ல மூளைக்காரர்கள் தான்!

---------------------

பாட்டொன்று கேட்டேன்!

ஹி... ஹி... மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் பாடல் காணொளி.சூப்பர் ஸ்டாருக்கு நடனம் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் வருவதை வச்சு அழகாக பாடல் காட்சிகளில் நடித்து , நடனமாட தெரியவில்லை என்ற குறையே தெரியாமல் பாடலை ஹிட் ஆக்கிவிடுவார்(அதான்யா நடிப்பு), அப்படியான எப்போதும் பசுமையான ஒரு பாடல் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து.


-----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், யூடியூப், டிஜிடெய்லி ,இணைய தளங்கள் ,நன்றி!
************

Friday, September 07, 2012

கற்றது தமிழ்-2



தமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு.

இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்களோ தங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம், மேம்படுத்தப்படும். நன்றி!

பரவாயில்லை.

இச்சொல் பர்வா நஹி என்ற வட மொழி சொல்லில் இருந்து உருவானது.

பர்வா = கேர் (care), நஹி (nahi)=இல்லை,

பர்வா நஹி என்றால் ஐ டோண்ட் கேர்(i don't care) அல்லது நோ பிராப்ளம் (no problem, no mention)என சொல்வதாகும்.

அதனை அப்படியே தமிழ்ப்படுத்தி பரவாயில்லை என்றாக்கிவிட்டார்கள்.(தெலுங்கில் பர்வாலேது)

பரவாயில்லைக்கு இணைச்சொல் ,

கவலையில்லை,

பொருட்படுத்தவில்லை .

என சொல்லலாம்.

புத்தி.

புத்தி ( buddhi)என்பதும் வடமொழி இதற்கு ஞானம் என வடமொழியில் பொருள்,

buddhi-> buddha->buddhar ->.buddham

புத்தியுடையவர் புத்தர், அதாவது ஞானம் பெற்றவர், ஞானத்தினை உள்ளடக்கமாககொண்ட ஒன்று புத்தகம்.

புத்தியினை புகட்டும் செயல் போதித்தல் இதன் பெயர்ச்சொல் போதை , அதாவது ஞானம். போதி தருமர் , ஏழாம் அறிவெல்லாம் நினைவுக்கு வருமே.

புத்திக்கு இணையான தமிழ்ச்சொல் அறிவு,

ஞானம் என்பது அறிவு என்றாலும் அதில் உச்ச நிலை ஆகும் எனவே அதனை அறிவொளி எனலாம்.

எனவே

#புத்தி (knowledge)- அறிவு

#ஞானம் (wisdom)- அறிவொளி.

* முன்னர் தமிழக துவக்கப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு அறிவொளி இயக்கம் என்றே பெயரிடப்பட்டிருந்தது, பின்னர் மத்திய அரசின் நிதியுடன் "சர்வ சிக்‌ஷா அபியான்" என மாற்றம் பெற்றது.

*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.

#போதித்தல்(educate)- கற்பித்தல்

#புத்தகம்(book)- நூல்

---------------

ஐஸ் கிரீம்(ice cream):



ஐஸ்கிரீம் என்பது பால்,சர்க்கரை , மற்றும் சுவையூட்டி இவற்றினை காற்று ,நீர் கலந்த கூழ்ம (colloidal emulsion)வடிவில் உறைவித்து தயாரிப்பது ஆகும். எனவே இதனை ,

உறைகூழ் அல்லது

பனிக்கூழ் அல்லது

குளிர் கூழ் எனலாம்

முதன் முதலில் பனிக்கூழினை உண்ணக்கூடிய கூம்பு வடிவ ரொட்டியில் (cone icecream) வைத்து கொடுத்தது Charles Menches / Arnold Fomachou ஆவார்கள் ,அமெரிக்காவில் கி.பி 1904 இல் World's Fair in St. Louis. இது நிகழ்வுற்றது.
-------------

#சம்பவம் வடமொழி.

நிகழ்வு தமிழ்.

# மனிதன் வடமொழி ,

மனுஷ் , மனுஷன்,- மனிதன்

எனவே சரியான தமிழ் சொல்

மாந்தர்,மாந்தன்.

எடுத்துக்காட்டு:

தொட்டனைத் தூறு மணற்கேணி "மாந்தர்க்கு "
கற்றனைத் தூறும் அறிவு

# நபர் -அரபி,

தமிழ்ச்சொல் - ஆள், அல்லது ஒரு நபர்=ஒருவர்/ஒருவன், சில நபர்= சிலர்


#personality- ஆளுமை.

# பிரபலம் வடமொழி,

இணையான தமிழ்ச்சொல்.

புகழ்ப்பெற்றவர், புகழாளர்,

பிரபல பதிவர் என சொல்லாமல் புகழ்ப்பெற்ற பதிவர் எனலாம் :-))

#சந்தேகம் வடமொழி,

அய்யம் ,அய்யுறுவு என்பதே தமிழ்.

#சந்தோஷம் வடமொழி ,

இணையான தமிழ்ச்சொற்கள்:

மகிழ்ச்சி , குதூகலம்*,களிப்பு, உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவுவகை எனலாம்,

*களிப்பு என்பதில் இருந்து குதூகளம் என வந்திருக்கலாம் என நினைக்கிறேன், சார்வாகன் கூறியப்படி குதூகலம் என மாற்றியுள்ளேன், சரியான சொல்லினை மீண்டும் சரிப்பார்க்க வேண்டும்.

# சந்திரன் வடமொழி,

நிலா, திங்கள், மதி என்பன தமிழ்.

# சூரியன் வடமொழி,

கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.

# அம்மாவாசை ,வட மொழி , அமாவாஸ்ய என்பதில் இருந்து மருவிய சொல்,

நேரடியாக மொழிப்பெயர்த்தால் முதல் வளர் நிலவு நாள் என வரும், இதனை "இருட்மதி நாள்"(நிலவற்ற நாள்) என சொல்லலாம் என நினைக்கிறேன்.

*மதியிலி நாள், ஆக்கம் சார்வாகன்.(மதியிலி நாள் என்றால் முட்டாள் தினம்-ஏப்ரல்-1 என நினைத்துவிட்டால் என்ன செய்வது?)

மேலும் புதுப்பிறை நாள் எனவும் அழைக்கலாம் என நினைக்கிறேன்.

சரியான சொல்லினை தெரிந்தவர்கள் கூறலாம்.
---------------
வலைப்பதிவர் சொல்லகராதி:

பெரும்பாலோருக்கு வலைப்பதிவில் பயன்ப்படுத்தும் வலைப்பதிவு சார்ந்த இணையான தமிழ் சொற்கள் தெரிந்திருக்கும் ஆனாலும் மீண்டும் நினைவுறுத்த எனக்கு தெரிந்த சில சொற்களை தொகுத்துள்ளேன்.

Blog - வலைப்பூ, வலைப்பதிவு

web address-உரல்

link-சுட்டி, தொடுப்பு

comment- மறுமொழி,பின்னூட்டம்,

comment moderation-மறுமொழி மட்டுறுத்தல்

followers-பின் தொடர்பவர்கள்

follow up- பின் தொடர

up load- தரவேற்றம்.

down load-தரவிறக்கம்.

search engine-தேடு பொறி.

mouse-எலிக்குட்டி ,சுட்டுவான்.

keyboard-தட்டச்சுப்பலகை.

hard disk-வன் தட்டு/வட்டு, இறுவட்டு.

dvd-குறுவட்டு.

computer monitor- காட்சி திரை,கணினி திரை.

central processing unit(cpu)- நடுவண் செயல் அலகு,நடுவண் இயங்கலகு,செயலி.

தொடரும்...
----------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தமிழ் விக்‌ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகர முதலி தளங்கள்,நன்றி!
-------------