Monday, June 18, 2012

பயோடீசல்-2: புங்க எண்ணை(Pongamia pinnatta oil)


பயோ டீசல் என்ற தலைப்பில் முன்னர் தாவர எண்ணையை எப்படி பயோடீசலாக மாற்றுவது உள்ளிட்டவற்றை பார்த்தோம் ,இனி அடுத்து வரும் பதிவுகளில் மேலும் சிலமாற்று எரிப்பொருட்களின் மூலப்பொருட்களையும் அதன் பயன்களையும் பார்க்கலாம்.

இப்பதிவோடு தொடர்புடைய மாற்று எரிப்பொருள் முந்தைய பதிவைக்காண அழுத்தவும்



அந்த வரிசையில் இப்பதிவில் புங்கை மரத்தின் "எரிப்பொருள்" திறனையும், அதற்கு பிரகாசமான ஆற்றல் மரம்(energy tree or oil tree) ஆகும் தகுதி இருப்பதையும் காணலாம்.

வழக்கமாக பயோ டீசல் என்றால் அதற்கான மூலமாக ஜெட்ரோபாவையே நம் நாட்டில் பரிந்துரைப்பார்கள். சில இடங்களில் பயிரிடப்பட்டும் பரிசோதிக்கப்பட்டது. ஜெட்ரோபா எண்ணைக்கு பயோடீசல் ஆக மாற்றும் தகுதி இருந்தும் ,இந்தியாவில் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை எனலாம். காரணம் அதனை பயிரிடவும் அதிக முயற்சியும், ஆற்றலும்,நீரும் தேவைப்படுவதே.

உற்பத்தி இலக்கில்லாமல் மானாவாரி சாகுபடி செய்யும் போது பரவாயில்லை ,ஆனால் ஆண்டுக்கு இத்தனை டன் என உற்பத்தி இலக்குடன் பயிரிட்டால் மற்ற வணிக பயிர் அளவுக்கு உழைப்பை கொடுக்க வேண்டும், மேலும் நீர்ப்பாசனம் ,உரம் என செலவும் செய்ய வேண்டும்.

அதிக உழைப்பு, நீர் தேவை,உரம் , இல்லாமல் வறட்சியிலும் வளரக்கூடிய தாவர எண்ணை தரக்கூடிய ஒரு தாவரம் தான் புங்கை மரம் எனப்படும் புங்கேமியா பின்னேட்டா மரம் ஆகும்.

புங்கை மரம்:

பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica

அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata

பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று.

பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும்.

கோடையில் மிக சிறிதளவே இலையுதிரும் ,பசுமை மாறா மரம், 3-4 நான்கு ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய மிதமான கடின மரம்(semi hard wood) ஆகும்.


இதன் விதைகளில் 25-40% எண்ணை இருப்பதே இதனை முக்கியமான மாற்று எரிபொருள் மரமாக கருதக்காரணம். ஏற்கனவே இதன் எண்ணை சோப்பு, விளக்கெரிக்க, பெயிண்ட்கள், ஆயுர்வேத மருந்து,இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியனத் தயாரிக்க பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது. கசப்பு தன்மை கொண்ட எண்ணை என்பதால் சமையலுக்கு பயன்ப்படுத்துவதில்லை.

இம்மரம் இந்தியா முழுவதும் சாலையோரங்களிலும், பொது நிலங்களிலும்,வாய்க்கால்,வரப்பு என தானாகவே வளர்ந்து இருப்பதைக்காணலாம்.

நிழல் தரக்கூடிய, எளிதில் அதிக பராமரிப்பு இன்றி வளரக்கூடிய மரம் என்பதால் நெடுஞ்சாலைத்துறையினராலும் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ளது.


மரம் வளர்க்க பெரிய அளவில் பராமரிப்பு தேவை இல்லை, இலைகள் கசப்பு தன்மை கொண்டவை என்பதால் கால்நடைகளும் அதிகம் மேயாது.

வறட்சி தாங்கவல்லவை எனவே குறைவான நீரை மரக்கன்று நடும் காலத்தில் வாரம் ஒரு முறை என சுமார் ஆறு மாதங்கள் பாய்ச்சினால் போதும் , வேர் நன்கு ஊன்றியதும் ,மரமே தனக்கான தண்ணீர் தேவையை பார்த்துக்கொள்ளும்.

வேர்கள் ஆழத்தில் மட்டும் அல்லாமல் பக்க வாட்டிலும் வலைப்போல பரவும் தன்மை கொண்டவை என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் ,மண் பாதுகாப்பிற்காகவும் நடப்படும் ஒரு மரம்.

மேலும் வேர் முடிச்சுகள் வளி மண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துவதால் ஊட்ட சத்து இல்லாத நிலமும் வளமடையும், எனவே மரங்களுக்கு இடையே ஊடு பயிர் செய்தால் நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும்.

இதனால் இந்திய வேளாண் துறை மற்றும் பயனற்ற நில அபிவிருத்தி கழகம்(National Wasteland Development Board) ஆகியவை நில வளப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பல இடங்களில் புங்கை மரத்தினை நட்டும் வருகிறார்கள்.

நிலப்பரப்பு கையிருப்பு:

அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பயிரிட தகுதியற்ற ஊட்டச்சத்தில்லாத,வறண்ட ,தரிசு நிலத்தின் அளவு சுமார் 38.4 மில்லியன் ஹெக்டேர் முதல் 187 மில்லியன் ஹெக்டேர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கணக்கு கூட துல்லியமாக எடுக்கமாட்டாங்க போல. வறுமைக்கோட்டுக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்காங்க கேட்டாலும் சரியான கணக்கு இல்லைனு சொல்லுறவங்க தானே :-))

National Wasteland Development Board இன் கணக்குப்படி 123 மில்லியன் ஹெக்டேர் நிலம் பயனற்றது. எனவே நம் நாட்டில் நிறைய இடம் காலியாக சும்மா கிடக்கிறது என்பது புலனாகிறது.

எனவே பயோ டீசலுக்கு மரம் வளர்க்க இடம் இல்லைனு சொல்ல முடியாது முயற்சி எடுத்து வளர்த்தால் ஏகப்பட்ட அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம், மேலும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இவ்வளவு பயனற்ற/தரிசு நிலங்களும் இந்தியாவில் 19 மாநிலங்களில் 146 மாவட்டங்களில் பரவி கிடக்கிறது. அதிக பயனற்ற நிலப்பரப்பில் ஆந்திரா முதலிடத்திலும் பின்னர் வரிசையாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ,மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த தேசிய பயனற்ற நிலப்பரப்பில் 83% நிலம் இருக்கிறது.

தற்போதைய புங்க மர சாகுபடி நிலை:

மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்த்து பயோ டீசலுக்காக புங்கை மரம் வளர்க்க திட்டமிடலாம், இது வரை சிறிய அளவிலே அரசு புங்க மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது,அதுவும் மண் அரிப்பை தடுக்கவும்,சாலையோர நிழல் மரம் அமைக்கவும் மட்டுமே.

பெருமளவில் முறையாக யாரும் புங்க விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிக்க முயலவில்லை. சில தன்னார்வ மற்றும் சுற்று சூழல் அமைப்புகள் மட்டும் சிறிய அளவில் விதைகளை சேகரித்து பயோ டீசல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்தியாவில் பயனற்ற இடங்கள் எல்லாம் அரசின் பொறுப்பில் உள்ளதால் அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நில குத்தகைக்கு எடுத்து புங்க மரம் பயிரிட முயற்சித்து வருகிறார்கள்.

Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு இந்தியாவில் 20 மில்லியன் புங்க மரத்தினை 45,000 விவசாயிகள் மூலம் நட்டுள்ளது. மத்திய அரசின் உதவியாக வேலைக்கு உணவு என விவசாயிகளுக்கு 5,000 டன் அரிசி வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டா, கேமரூனிலும் குத்தகை அடிப்படையில் புங்க மரம் பயிரிட்டுள்ளார்கள்.

பயிரிடும் முறை:

வழக்கம் போல விதைகளினை நாற்றாங்காலில் நட்டு வரும் மரக்கன்றையும் பயன்ப்படுத்தலாம் அல்லது ஒட்டுக்கன்றையும் பயன் படுத்தலாம்.

ஒட்டுக்கன்று:(grafting)

இளம் மரக்கன்றினை எடுத்துக்கொண்டு அதன் மேல் புற தண்டில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு அதில் செங்குத்தாக பிளவினை ஆங்கில V வடிவில் உருவாக்கவும். இப்படி செய்யப்படும் அடிப்பாகத்திற்கு ரூட் ஸ்டாக் (root stock)என்று பெயர்.

பின்னர் ஏற்கனவே நன்கு முற்றிய ,விளைச்சல் தரும் புங்க மரத்தின் சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பாகத்தினை உளி/ஆப்பு போல சீவி விடவும்,இந்த மேல் பாகத்திற்கு சியான் (scion)என்று பெயர்.


பின்னர் மேல் பாகத்தினை V வடிவ பிளவில் செறுகி ,இதற்கென விற்கப்ப்படும் துணிப்பட்டை / பாலித்தீன் டேப் கொண்டு சுற்றிக்கட்டி விட வேண்டும்.(பழைய துணிகளையும் கிழித்துப்பயன்ப்படுத்தலாம்)

இப்படி செய்வதன் மூலம் இளமரக்கன்றுக்கு முதிர்ந்த மரக்கன்றின் முதிர்ச்சியும், காய்ப்பு திறனும் கிடைக்கும். எனவே விரைவில் காய்க்க துவங்கும்.

இப்படியான ஒட்டு முறைக்கு "grafting"என்று பெயர், இம்முறையில் தான் ஒட்டு மாங்காய், பலா மரக்கன்று என பல மரக்கன்றுகள் ,பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடவு:(planting)

தொழு உரம் இட்டு உழுத நிலத்தினை 4 மீட்டர் இடைவெளியில் பாத்திகளாக பிரித்துக்கொள்ளவும் அல்லது சம தரையிலும் அமைக்கலாம்.

எப்படி இருப்பினும், நான்குக்கு நான்கு மீட்டர் என்ற இடைவெளியில் சுமார் இரண்டு அடி ஆழம்,அகலம்,நீளம் என்ற அளவில் பள்ளம் வெட்டிக்கொண்டு வழக்கமான முறையில் 1:3 என தொழு உரம் ,மண்,மணல் கலந்த கலவையினை நிரப்பி மரக்கன்றினை நட வேண்டும்.


spacing:

இடைவெளி: 4 மீ X4 மீ

குழி ஆழம்: 2 X2X2 அடி.

இப்படி அமைத்தால் ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 250 மரக்கன்றுகள் நடலாம்.

இடைப்பட்ட பகுதிகளில் ஊடு பயிராக மண்ணின் வளத்திற்கும், நீரின் அளவுக்கும் ஏற்ப எந்த பயிரினையும் சாகுபடி செய்யலாம்.ஊடு பயிராக சீதா,நெல்லி,சப்போட்டா போன்ற பழ மரங்களும் நடலாம்.கிடைக்கும் நீராதாரம் பொறுத்தே.

மரக்கன்று நடும் போது தான் செலவு கொஞ்சம் ஆகும் பின்னர் அதிகம் பராமரிப்பு தேவை இல்லை.

செலவு:(cost of cultivation)

முதல் ஆண்டு:

நிலத்தயாரிப்பு மற்றும் மரக்கன்று நட=7246 ரூ

பராமரிப்பு, பாசனம்=2,400 ரூ

இரண்டாம் ஆண்டு= 1410 ரூ

மூன்றாம் ஆண்டு=1,383 ரூ

மொத்தம்= 12,439 ரூ

முதல் ஆண்டு மட்டுமே பராமரிப்பு ,நீர்ப்பாசனம் என கொஞ்சம் செலவு வைக்கும் பின்னர் வெகு சொற்பமே.

மூன்றாம் ஆண்டு முதல் காய்ப்பு துவங்கிவிடும்,5-6 ஆண்டுகளில் முழு திறனில் காய்க்க துவங்கிடும்.

உற்பத்தி மற்றும் வருமானம்:(economics of cultivation ,yield &income)

ஒரு மரம் ஆரம்பத்தில் குறைவாக காய்க்க துவங்கினாலும் முதிர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப சராசரியாக 90 கி.கி அளவுக்கு விதைகள் கொடுக்கும்.

ஒரு ஏக்கருக்கு 250 மரம் எனில்

250X90=22,500 கிலோ விதைகள் கிடைக்கும்.

இது ஒரு சராசரி அளவு , நிலத்தின் தன்மை, பாசனம் பொறுத்து உற்பத்தி கூடவோ ,குறையவோ செய்யலாம்.எப்படிப்பார்த்தாலும் அதிக செலவில்லாமல் 10,000 கிலோவுக்கு குறையாமல் விதைகள் கிடைக்க வாய்ப்புண்டு.

25-40 % எண்ணை பிழி திறன் உள்ளது ,குறைந்த பட்சம் 25% என வைத்துக்கொண்டாலும் ஒரு கிலோ விதைக்கு கால் லிட்டர் எண்ணை கிடைக்கும்.

எனவே குறைந்த பட்சம் 10,000 கிலோ விதை எனக்கொண்டாலும் 2,500 லிட்டர் எண்ணை ஒரு ஏக்கரில் கிடைக்கும்.

ஒரு லிட்டர் எண்ணை 30 ரூ என வைத்தாலும்
2,500X30=75,000 ரூ

வறண்ட, வளம் இல்லாத நிலத்தில் 75,000 ரூ ஒரு ஏக்கருக்கு வருமானம் கிடைப்பது பெரிய காரியம் அல்லவா.மேலும் ஊடு பயிர் வருமானமும் உள்ளது.மேலும் எண்ணை பிரித்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு சிறந்த இயற்கை உரம் ஆகும்.

இதில் விதை சேகரிப்பு ஆட்கூலி, எண்ணை ஆட்டும் செலவு சேர்க்கப்படவில்லை. ஆனாலும் வேலை வாய்ப்பு அற்ற சூழலில் குறைவான முதலீட்டில் வருமானம் ஈட்ட நல்ல வழி புங்க மரம் வளர்ப்பு. இந்த விதைகளில் இருந்து எண்ணை எடுத்து பயன்ப்படுத்த அரசு முன்வந்தால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமடையும்.

வீடியோ:


ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புங்கமர வளர்ப்பு திட்டம்.


புங்க எண்ணை இயல்பு:(pongamia oil nature)

ஜெட்ரோபா எண்ணைப்போல டிஸ்டில்லேஷன் அல்லது டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்யாமல் அப்படியே புங்க எண்ணையை டீசல் எந்திரங்களில் பயன்ப்படுத்த முடியும் ,சிறிது கரி படியும் என்பதால் 20% வரைக்கும் பெட்ரோலிய டீசலில் கலந்து பயன்ப்படுத்துகிறார்கள்

ஏன் எனில் இதன் இயல்பிற்கும் ,பெட்ரோலிய டீசல் இயல்பிற்கும் மிகச்சிறிய அளவிலே வித்தியாசம் உள்ளது.

புங்க எண்ணை இயல்பு:(அடைப்புக்குள் டீசலின் இயல்பு)

விஸ்காசிட்டி= 5.51(3.60)

அடர்த்தி =0.917(0.841)

பிளாஷ் பாயிண்ட் வெப்பம்= 110(80)

டிஸ்டில்லேஷன் வெப்பம்= 285-295(350)

கந்தக உமிழ்வு= 0.13-0.16(1.0)

சீட்டேன் மதிப்பு=51(47.8)

மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்து அறிய பெறுவது என்னவெனில்

டீசலை விட விஸ்கோசிட்டி, அடர்த்தி, ஃப்ளாஷ் பாயிண்ட் சற்றே கூடுதலாக இருப்பது ஒரு பின்னடைவு எனவே தனியாக பயன்ப்படுத்துவதை விட டீசலுடன் கலந்து பயன்ப்படுத்துவது சிறப்பான பலனை தரும்.

எப்படி எனில் இதன் சீட்டேன் மதிப்பு(ஆக்டேன் மதிப்பு போன்றது)அதிகமாகவும், கந்த உமிழ்வு குறைவாகவும் உள்ளது .

கந்தகம் சூழலை மாசுப்படுத்தும் என்பதாலேயே தற்போது பிரிமியம் டீசலில் கந்தமில்லாத வகை விற்கிறார்கள்.

மேலும் சீட்டேன் (cetene)மதிப்பு என்பது எஞ்சின் சிலிண்டரில் கம்ப்ரெஷன் ரேஷியோ கணக்கின் படி எஞ்சினை வடிவமைக்க உதவுவது. கம்ப்ரஷன் ரேஷியோ அதிகம் இருந்தால் அதிக திறனுள்ள எஞ்சினை வடிவமைக்கலாம். அதிக கம்ப்ரஷன் ரேஷியோ உள்ள எஞ்சினில் அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிப்பொருளை பயன்ப்படுத்த வேண்டும்.

டீசலை விட ,புங்க எண்ணையின் சீட்டேன் மதிப்பு கூடுதலாக இருப்பதால் கலந்து பயன்ப்படுத்தும் போது அதிக ஆற்றல் கிடைக்கும்.

சீட்டேன் மதிப்பு என்பதும் ஆக்டேன்(octane) மதிப்பு என்பதும் ஒன்று தான்.இந்தியாவில் தான் ஆக்டேன் மதிப்பை எல்லாம் எண்ணை நிறுவனங்கள் வெளியில் சொல்வதில்லை. வெளிநாட்டில் ஆக்டேன் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் பங்கில் கலர் கோட் வைத்திருப்பர்கள்,அதிக ஆக்டேன் மதிப்புள்ள எரிபொருள் அதிக விலை. அதிக வேகமும் ,திறனும் உள்ள வாகனத்திற்கு அதிக ஆக்டேன் எரிப்பொருளை தான் நிரப்ப வேண்டும், குறைவான ஆக்டேன் எரிபொருளை நிரப்பினால் எஞ்சின் சேதமடையும்.

இந்தியாவில் ஆக்டேன் எண்ணை வெளியில் சொல்லாமல் பிரிமியம், ஸ்பீட் என்ற பெயரில் கூடுதல் விலையில் விற்கிறார்கள் ஆனால் அவற்றின் ஆக்டேன் எண்ணும் மிக குறைவே.

புங்கை மரம் சாகுபடி பலன்கள்:

#தரிசு நிலப்பயன்ப்படு உயரும், நிலம் வளமடையும்.

#மண் அரிப்பு தடுக்கப்படும்.

#ஊரக வேலை வாய்ப்பு & பொருளாதாரம் பெருகும்.

#விதைகள் மட்டுமே சேகரித்துப் பயன்ப்படுத்தப்படுவதால் மரங்களின் அடர்த்தி அதிகமாகும் ,அதிக கரியமில வாயு(co2) கிரகிக்கப்பட்டு ,புவி வெப்பமாதல் குறையும்.

#பெரிய அளவில் புங்க மரம் பயிரிடும் போது அதனை வைத்து கார்பன் கிரெடிட் டிரேடிங்க் மூலமும் வருமானம் ஈட்டலாம்.

# சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத பசுமை எரிப்பொருள் கிடைக்கும்.

#அன்னிய செலவாணி சேமிப்பாகும்.


புங்க எண்ணையின் மகத்துவம் அறிந்து அமெரிக்க எரிசக்தி துறை புங்க விதைகளை இறக்குமதி செய்து ஆய்வு செய்துள்ளது, இப்போது அமெரிக்காவிலும் பயிரிட ஆலோசனைகள், முன்னோடி(pilot project) திட்டங்கள் போட்டுள்ளதாக செய்தி.

எனவே மெத்தனமாக செயல்படும் நமது அரசு எந்திரம் சோம்பல் களைந்து புங்க மரம் வளர்ப்பினை ஊக்குவித்தாலே பல தன்னார்வ அமைப்புகள், மகளீர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் புங்க மர வளர்ப்பில் ஈடுபடுவார்கள். இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதாரம் பெருகும். இப்பொழுதும் புங்க மரம் நடும் திட்டம் இருக்கு அது பெயரளவிலே எனவே இதற்கான முயற்சியை முழு வீச்சில் மத்திய ,மாநில அரசுகள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம், செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

-----------------------------------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

விக்கி ,கூகிள், agbiotek., icrisat(hydrabad),யூடுயூப், இணைய தளங்கள்,நன்றி!

*****