Monday, January 21, 2008

கோயிலும் உண்டியலும் தேவையா?

கோயில் உண்டியல்களில் காசுப்போடாதீர்கள் என்று இரண்டுப்பாகமாக ஒரு தொடர்ப் பதிவினை கண்ணபிரான் ரவி ஷங்கர் போட்டிருந்தார், அதில் கோவில்களை அரசுப்பார்த்துக்கொள்வதால் சீரழிகிறது, எனவே தனி நிர்வாக்குழு ஒன்றினை ஏற்படுத்தி அவர்கள் வசம் நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் அதுவரைக்கும் கோவில் உண்டியலில் காசு போடக்கூடாது என்று சொல்லி இருந்தார்.

மேலோட்டமாகப்பார்த்தால் ஏதோ புரட்சிகரமான சீர் திருத்தம் கொண்டு வரும் ஆசையில் சொன்னது போல தெரிந்தாலும் , பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்.

இந்து அறநிலையத்துறை என்பது பெயரளவில் முதலில் உருவாக்கப்பட்டது 1926 இல் , பின்னர் பல மாற்றங்களுடன் வளர்ந்து இன்றைய நிலையில் உள்ளது. இதில் 1991 இல் ஒரு சட்ட திருத்தம் போட்டு தன்னார்வலர்களை கொண்ட மாவட்ட கமிட்டி உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் செயல் பாடு அத்தனை திருப்திகரமாக இல்லாததால் 96 இல் அது களைப்பட்டு, மீண்டும் ஆணையர்கள், அலுவலர்கள் வசம் முழு பொறுப்பும் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு வேறு வேலை இல்லையா , ஏன் கோவிலை போய் கவனிக்கணும்? காரணம் அக்காலத்தில் கோவில்கள் அனைவருக்கும் உரியதாக இல்லாதிருந்தது, ஒரு சாராரின் கட்டுப்பாட்டில் இயங்குவது, சாதிய வேறுப்பாடுகளை அப்படியே காப்பது என செய்து பெரும்பாண்மை மக்களை வஞ்சித்தமையால் தான் அரசு கோவில்களின் நிர்வாகத்தில் உள் புக வேண்டியது ஆயிற்று.

ஆலயங்களில் பாகுபாடு இருப்பதை நீக்க ஆலய பிரவேசம் எல்லாம் செய்ய வேண்டியது ஆச்சு. போராடித்தான் இப்போதிருக்கும் நிலையைப்பெற்றோம்.இன்று வரையில் அனைவரும் அர்ச்சர்கள் ஆகும் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை, பெயரளவில் தான் இருக்கு.

இப்பொழுது மட்டும் பெரிதாக மாற்றம் வந்துவிட்டதா இன்னமும் கண்ட தேவியில் தேரோடினால் ஊரடங்கு உத்தரவு, ஒரு சாரருக்கு அனுமதி மறுப்புதேர் வடம் தொடக்கூட முடியாது எனத் தொடர்கிறதே எனலாம். ஆனால் அரசின் கையில் இருப்பதால் குறைந்த பட்சம் போராடி , நீதி மன்றம் மூலம் அனுமதி வாங்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு குழுவின் வசம் அளித்து விட்டால் என்னாவாகும், அவர்கள் வைத்ததே சட்டம் என்று அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள்.

ஏன் ஒரு காலத்தில் முழுக்க தனியார் வங்கிகளாக இருந்ததை அரசுடைமாக்கியது, காரணம் பாமரனுக்கும் வங்கியின் பலன் அப்போது இருந்தவர்கள் தறவில்லை, அவர்களுக்கும் பலன் கிடைக்க அரசே வங்கிகளை எடுத்து நடத்தியது, சீர் திருத்தம் செய்தது, அது போல சமூக நீதி கிடைக்க அரசே கோவில்களை எடுத்து நடத்தி மக்களுக்கு குறைந்தப்பட்ச சம உரிமை அளீப்பது சிலர் கண்களை உறுத்துகிறது.

இரா.முருகப்பன் என்பவர் தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு கோவில் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு அளிக்க மறுத்த சம்பவம் பற்றி பதிவு ஒன்றினை போட்டுள்ளார் , அதைப்படித்தால் தெரிய வரும் , தனிக்குழுக்களிடம் கோவில் போனால் என்னாகும் என்று. அக்கோவில் செங்குந்தர் இனத்தவரால் நிர்வாகிக்கப்பட்டு வருவது, ஏன் தரவில்லை என்று கேட்டதுக்கு எங்கள் சமூகத்தவரால் நடத்தப்படுவது நாங்கள் நினைப்பவர்களுக்கு தான் வாடகைக்கு தர முடியும் எங்கள் விருப்பம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது கண்ணபிரான் சொல்வது போன்று செய்தாலும் காலப்போக்கில் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதிகளிடம் கோவில் நிர்வாகம் மாட்டிக்கொண்டு , பின்னர் பரம்பரை தர்மகர்த்தா என்று கோவிலே ஒரு சிலர் கைக்கு போய்விடும்.

அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கும் போதே ஆரியமாயைகள் தான் கோவில்களில் அதிகம் தலை விரித்தாடுகிறது என்பது வெட்ட வெளிச்சம்.

பழனிக்கோவிலை உதாரணம் காட்டி அது சீர்க்கெட அரசின் மெத்தனம் காரணம் என்றார், ஆனால் அரசினை ஆட்டிவைக்கும் சிலரின் கைங்கரியத்தால் அக்கோவிலை ஆரிய சக்திகள் ஆக்ரமித்தை அவர் ஏன் சொல்லவில்லை.

பழனி கோவிலை முதலில் நிர்மாணித்து செயல் படுத்தியது புலிப்பாணி சித்தர் ஆவார், அவர் ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்தது தான் நவப்பாஷாண சிலை(போகர் ச்செய்தார் அவருக்கு புலிப்பாணி சித்தர் உதவினார் என்றும் சொல்வார்கள், ஆனால் வழிப்பாட்டு உரிமை இவர் குடும்பத்தார் வசம் அப்போது) அக்கோயிலில் காலம் காலமாக பூஜை செய்யும் உரிமைப்பெற்றவர்கள் புலிப்பாணி சித்தர் வழி வந்தவர்களே. அங்கே அப்போதெல்லாம் பிராமண அர்ச்சர்கள் கிடையாது.

பிற்காலத்தில் புலிப்பாணி சித்தர் குடும்பத்தில் வாரிசு சண்டை, யார் நேரடி வாரிசு என்றெல்லாம் கிளம்பியது. அதனால் வழக்கும் போட்டார்கள் ,சைக்கில் கேப்பில் ஆட்டோ ஓட்டியக்கதையாக அக்குடும்பத்தில் இருப்பவர்கள் இரு தரப்பும் பூஜை செய்ய தடை விதித்து, அர்ச்சகர்களை உள் இறக்கியது அரசு என்றாலும் அதன் பின்னால் இருந்த சக்திகள் வேறு என்பது புரிந்திருக்கும்.

சிலை பலஹீனப்பட யார்க்காரணம் அர்ச்சர்கள் தானே. இதே அர்ச்சர்களை கண்டித்தால் வேறுக்கதையை கிளப்பி திசை திருப்புவார்கள்.ஆனாலும் அரசு நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு இப்போது உண்டு, இதுவே தனிக்குழுவிடம் போனால் இன்னும் மோசம் ஆகவே வாய்ப்புள்ளது.

தனியாக ஒரு கூட்டத்தினால் மட்டும் சொந்தம் கொண்டாடப்பட்டு நிர்வாகிக்கபடும் ஒரு கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில், அங்கு என்ன நிலை. ஏன் அவர்கள் மக்களுக்கு பெரிதாக சேவை செய்யவில்லை.

அக்கோவிலை முழுக்க பங்கு போட்டு திண்பது தீட்சிதர்கள் தான்.உண்மையில் அக்கோவிலின் உரிமையும் சோழர்கள் வழி வந்த ஒரு ஜமீந்தாருக்கு(நடராஜபுரம்) தான் சொந்தம் ஆனால் காலப்போக்கில் அவரால் கோவிலின் செலவுகளை கவனிக்க முடியாமல் அக்காலத்தில் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கையில் விட்டு ஒதுங்கிக்கொண்டார் அல்லது ஓரம் கட்டப்பட்டார். இப்பொழுதும் இது குறித்து வழக்குள்ளது.கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் பக்தி பழங்களான தீட்சிதர்கள் என்ன மேம்பாட்டினை செய்தார்கள்.

பொன்னம்பலத்தில் தேவாரம் பாடத்தடை விதித்தவர்கள் தான் இந்த தீட்சிதர்கள், அவர்களும் பாட மாட்டார்கள், பாடவரும் சிவாச்சார்யார்களையும் விட மாட்டார்கள். கோவிலுக்கு வெளியில் பிரகாரத்தில் பாடலாம் ஆனால் கர்ப்பக்கிரகத்தில் பாடக்கூடாது என்று இவர்கள் சொல்லக்காரணம் என்ன,கோயில் குறித்தான அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறோம் என்ற ஆணவம் தானே. இதுக்குறித்தும் வழக்கு நடைப்பெறுகிறது.

இக்கோவில் அரசின் கைவசம் இருந்தால் இப்படி மறுக்கவே முடியாது.

ஒரு தீட்சிதர் குடும்ப்பத்தில் உள்ள திருமணமான ஆண்களுக்கு கோவில் வருமானத்தில் பங்கு உண்டு என்று விதி அப்போது இருந்ததால் திருமணம் செய்து கோவில் பங்கினை வாங்க வழக்கொழிந்து போன பால்ய விவாகத்தை இன்றும் செய்து வருகிறார்கள்.மணமானால் கோவிலில் பூஜையும் செய்யலாம் அதில் கிடைக்கும் வருமானமும் வரும். இப்படி சுய தேவைகளுக்காக செயல்படும் இவர்களைப்போன்றவர்கள் எல்லாம் குழு அமைத்து அனைத்து கோயில்களையும் பார்த்துக்கொள்ள சொல்லனுமாம், பார்த்துகொள்வார்களா, பங்கு போட்டுக்கொள்வார்களா?

ஆர்ய மாயைக்கு சற்றும் சளைக்காமல் தான் இங்கிருக்கும் பூர்வீக தமிழர்களின் வசம் இருக்கும் கோவில் நிர்வாகங்களும் சீர்க்கெட்டுள்ளது. மதுரை ஆதீனம் மிகப்பெரியது அதன் வசம் பல சிவாலாயங்கள் உள்ளது ஆனால் என்னப்பயன் எல்லாம் வீணாகத்தான் போகிறது. ஆதீனமும் ஒரு தனியார் நிர்வாக அமைப்பு தானே அவர்கள் என்ன மேம்பட வைத்தார்கள். அரசியல் பேட்டி தருவது, நடிகைகளின் ஆட்டத்தினைப்பார்ப்பது என்று "விசேஷ ஆன்மீக சேவை"செய்கிறார்.

நங்க நல்லூரில் இருக்கும் தனியார் வசம் இருக்கும் கோவிலில் பக்தர்களிடம் அதிக விலைக்கு பூஜைப்பொருட்கள் எல்லாம் விற்க வைத்து நிர்வாகம் கொள்ளை அடிப்பதாக ஒரு பதிவர் கூட பதிவிட்டார்.

அரசு நிர்வாகம் மோசமாக இருந்தாலும் வாக்குகளை நினைத்தாவது ஒரு எல்லைக்குள் இருப்பார்கள், மேலும் சட்டப்படி கேள்விக்கேட்கலாம், தனியார் நிர்வாகக்குழு எனில் சர்வாதிகாரப்போக்கு தான் அதிகரிக்கும்.

இப்படி மக்கள் நம்பும் ஒரு விஷயத்தை அவர்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து ஆள் ஆளுக்கு பிழைப்பு நடத்தத்தான் பார்க்கிறார்கள். இப்படி இருக்கும் ஒரு அமைப்பு தேவையா, கோவிலும் வேண்டாம் உண்டியலும் வேண்டாம் என்று விட்டொழிக்கலாமே! மனக்கோவில் கண்ட பூசலார் என்ற நாயன்மாரே இருந்திருக்கிறார் எனவே மக்கள் மனதில் கோவில் கட்டி வழிப்பட்டாலே போதுமே!
-------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சம்பந்தப்பட்டப்பதிவுகள் தெரியாததால் சுட்டி இணைக்கவில்லை, விரைவில் செய்யப்படும்.

62 comments:

கோவி.கண்ணன் said...

//மேலோட்டமாகப்பார்த்தால் ஏதோ புரட்சிகரமான சீர் திருத்தம் கொண்டு வரும் ஆசையில் சொன்னது போல தெரிந்தாலும் , பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்.//

உங்கள் இடுகையின் மற்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். மேற்கண்டதை ஏற்க முடியாது, கண்ணபிரான் எழுத்துக்கு கண் காது மூக்கு எல்லாம் வைக்கிறீர்கள், அவர் அது போன்ற சிந்தனையில் எழுதுபவர் இல்லை. பழனியை உதாரணமாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் அங்கு அப்பட்டமாக கொள்ளையடிப்பது வெள்ளிடை மலையாக பலருக்கும் தெரிவதால் தான். அவர் தம் மற்ற பதிவுகளில் எங்கும் தீட்சிதர்களின் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்தவரும் அல்லர். மாறாக மாற்றுக் கருத்துக்களை அவ்வப்போது சொல்லியும் வந்திருக்கிறார்.
:(

வவ்வால் said...

கோவி,

நன்றி!

தனி நிர்வாகக்குழு , அரசின் தலையீடு இல்லாமல் என்பது முன்னர் நிலவி வந்த பரம்பரை தர்ம கர்த்தா, சாதிய ஆதிக்கத்திற்கே காலப்போக்கில் வழி வகுக்கும் அதனை சரியான தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதன் நோக்கம் இது தான் என்று எனக்க்கு படுவதால் சொல்கிறேன், இதனைக்கண் காது மூக்கு என்றால் எப்படி?

அரசின் நிர்வாகத்தில் இருக்கும் ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம் என்பதற்கு வேறு வழிகளா இல்லை.

நான் பழனியை மட்டும் முன் வைத்து சொல்லவில்லையே, தனியான நிர்வாக குழுவிடம் இருக்கும் கோவில்களில் மோசமான செயல் பாட்டையும் சொல்லியுள்ளேன்.

Anonymous said...

//சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்.//

இதுக்கு மேல யோசிக்கவே மாட்டீங்களா?

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வாழ்த்துகள் வவ்வால்!

இந்த ஒப்பீடு மற்றும் இந்து அறநிலையத்துறையை தூக்கி விட்டு கோயில்களை தர்மகர்த்தா (அ) அறங்காவலர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதின் நோக்கத்தை தெள்ள தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்!

கோவி!
கண்ணபிரான் ரவிசங்கர் சொன்னார் அதற்க்கான மறுப்பு என்பதை விட கொஞ்சம் அதையும் தாண்டி பாருங்கள்.

சிங்கையில் முருகன் கோயில் இருக்கிறது. அது தனியார் நிர்வாகத்தில் இருக்கிறது. அந்த கோயிலை வைத்து சாதீயத்தை கட்டி காப்பாற்றி வருகிறார்களா இல்லையா?

பெரும்பாலும் இந்துத்துவா பேசுகிற நபர்கள் கோயில் நிர்வாகத்தை நோக்கியே இருப்பதன் நோக்கமென்ன?

கோவி.கண்ணன் said...

//கோவி!
கண்ணபிரான் ரவிசங்கர் சொன்னார் அதற்க்கான மறுப்பு என்பதை விட கொஞ்சம் அதையும் தாண்டி பாருங்கள்.

சிங்கையில் முருகன் கோயில் இருக்கிறது. அது தனியார் நிர்வாகத்தில் இருக்கிறது. அந்த கோயிலை வைத்து சாதீயத்தை கட்டி காப்பாற்றி வருகிறார்களா இல்லையா?

பெரும்பாலும் இந்துத்துவா பேசுகிற நபர்கள் கோயில் நிர்வாகத்தை நோக்கியே இருப்பதன் நோக்கமென்ன?//

தனியார் கோவில் சிங்கை மட்டுமல்ல, தமிழகத்தில் கூட சாதியை கட்டிக்காக்கவே இருக்கிறது என்பதில் மாற்று கருத்து அல்ல. பக்தியாளர்கள் அவர்களுக்கு தெரிந்த வகையில் பிரச்சனைகளை களைய யோசனை சொல்வதை இந்துத்துவ வாக பார்க்க வேண்டாம். கண்ணபிரான் எழுதியது புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். நான் அவ்வாறு கருதவில்லை. வெளியில் இருந்து பகுத்தறிவு பேசுபவர்களுக்கும், ஆத்திகர்களாக இருந்து தூய்மை படுத்த நினைப்பவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர்களால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்து சொல்ல முடியாது, கோவிலில் மற்றவர்கள் பார்பது பார்பனீயம் என்றால் அவர்கள் அங்கு இறைவனையும் தனியாக பார்கிறார்கள். அதன் தொடர்பில் தான் கருத்துரைக்க முடியும். நீங்கள் அவர் ஒரு நாத்திகவாதி போன்று கருத்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அது தவறு !

உங்கள் கருத்தில் அபாயம் இருக்கிறது என்று அவருக்கு மாற்றுப் பார்வையைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் அவர் உள்நோக்கதுடன் தான் எழுதினார் என்று குற்றமாக சொல்வது தவறு.

சுரேகா.. said...

உங்கள் ஆழ்ந்த பார்வையில் அதிசயிக்கிறேன்.

அதுவும், சிதம்பரம் தீட்சிதர்கள் அடிக்கும் லூட்டியும், கொள்ளையும்...அப்பப்பா..!

நல்ல பதிப்பு !

முரளிகண்ணன் said...

nice

வடுவூர் குமார் said...

மனதில் கோவில் கட்டி வழிப்பட்டாலே போதுமே!
கட்டிக்கிட்டு இருக்கேன். :-)

கோவை சிபி said...

சிறு கோவில்களில்(வ்ருமானத்தில்) கூட பல ஒழுங்குமுறையை கொண்டுவந்தது இ.அ.துறை அலுவலர்களால்தான்.ஒரு காலத்தில் கோவை மாவட்டத்தின் பிரபல சிவன்மலை,சென்னிமலை கோவில் பூசாரிகளாக இருந்த பண்டார சாதி இப்போது வெளியே துரத்தப்பட்டு ஆரியமாயை புகுந்ததும் நீங்கள் கூறியபடிதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மனக்கோவில் கண்ட மாசிலார் என்ற நாயன்மாரே இருந்திருக்கிறார் எனவே மக்கள் மனதில் கோவில் கட்டி வழிப்பட்டாலே போதுமே//

மனக் கோவில் கண்ட நாயன்மார் பேரு மாசிலார் இல்லீங்க வவ்வால்! அவர் பெயர் பூசலார்!

காடவர்கோன் எழுப்பிய கற்றளி ஆலயத்தின் குடமுழுக்கை ஒரு நாள் தள்ளி வைத்து விட்டு, பூசலாரின் மனக்கோவில் குடமுழுக்கை முன்னின்று ஏற்றான் இறைவன்.

நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பு இடையறாத
பூசலார் பொன்தாள் போற்றி
என்பது திருத்தொண்டர் புராணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆலயம், சீர்திருத்தம் என்னும் குறிச்சொற்களை அடியேன் பதிவில் கண்டு வவ்வால் ஒரு மர்மப் புன்னகை பூத்திருந்தார்! :-)
ஆனால் இங்கு நான் அப்படிச் செய்யப் போவதில்லை! காரணம் என்ன தெரியுமா? என் பதிவின் கருத்தாக்கத்தை இன்னும் உயர்த்திக் கொண்டு போய் இருக்கீங்க! நன்றி!

நிர்வாகம் கைமாறினால் ஏற்படும் இன்ன பிற அபாயங்களை நன்கு சொல்லி இருக்கீங்க! என் பதிவில் இதே போல் பின்னூட்டங்களில் சிலர் சொல்லி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லி இருந்தனர். ஒரு மாற்றம் என்றும் வரும் போது அதன் பக்க விளைவுக்கும் சேர்த்துத் தான் திட்டமிட வேண்டும்.

பதிவை நீங்கள் முழுமையாக வாசித்தீர்களா தெரியவில்லை! நான் ஆலய நிர்வாகத்தைத் தொழில்முறை சார்ந்த (professional) ஒரு தன்னாட்சி நிறுவனம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தேன்!

ஒரு குறிப்பிட்ட சமூகமோ, இன்ன பிற குழுவோ/சங்கத்திடமோ கொடுக்கச் சொல்லவே இல்லை! அதை விட தற்கொலை முயற்சி வேறொன்றும் இல்லை!

தன்னாட்சி நிறுவனம் என்பது ISRO போல என்று சொல்லி இருந்தேனே!
மேலும் இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே என்று சொல்லி இருந்தேனே! நீங்க பாக்கலையா? அரசுத் தலையீடு இருக்கவே கூடாது என்று சொல்லவில்லையே!

//காரணம் பாமரனுக்கும் வங்கியின் பலன் அப்போது இருந்தவர்கள் தறவில்லை, அவர்களுக்கும் பலன் கிடைக்க அரசே வங்கிகளை எடுத்து நடத்தியது, சீர் திருத்தம் செய்தது//

மிகவும் சரி.
வங்கிகளை அரசுத் துறையே ஏற்று நடத்துகிறதா? இல்லை அரசின் தணிக்கைக்கு உட்பட்ட தன்னாட்சி நிர்வாகம் நடத்துகிறதா?
இன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் எல்லாம் அரசு ஊழியர்களா? இல்லையே!

அதைத் தான் நானும் குறிப்பிட்டு இருந்தேன்! தன்னாட்சி நிறுவனம் என்றால் ஏதோ பரம்பரைத் தர்மகர்த்தா, நாலு சாதி சங்கத் தலைவர்கள் என்று நீங்கள் தான் தவறாக எண்ணிக் கொண்டீர்கள்!
It is only a professional corporate body! தக்க நிர்வாக மேலாண்மை நிபுணர்கள் கொண்ட ஒரு நிறுவனம் என்று தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்!

//காலப்போக்கில் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதிகளிடம் கோவில் நிர்வாகம் மாட்டிக்கொண்டு , பின்னர் பரம்பரை தர்மகர்த்தா என்று கோவிலே ஒரு சிலர் கைக்கு போய்விடும்//

தன்னாட்சி நிறுவனங்கள் பல! IIM, ISRO என்று இவர்களிடம் நிர்வாகம் மாட்டிக் கொண்டு ஆதிக்க சக்திகளிடம் போய் விட்டதா என்ன?
தன்னாட்சி Professional Organizations-இடம் நிர்வாகம் இருப்பது அரசுக்கும் ஒரு வகையில் நல்லது தான்! சீர்திருத்தங்கள் ஒழுங்காகக் சென்றடையும்! ஆதிக்க சக்திகள் வாக்கு வங்கி காட்டி அரசைப் பயமுறுத்த முடியாது!

வவ்வால்...
நீங்கள் கொடுத்த ஒவ்வொரு எடுத்துக்காட்டும் - சிதம்பர நிர்வாகம், திருமண மண்டபம், நங்கநல்லூர் - இவை எல்லாம் தவறான உதாரணங்கள்! அவை எல்லாம் ஆங்காங்கு லோக்கல் குழுக்கள்.

ஆங்காங்கு லோக்கல் குழுக்களிடம் நிர்வாகத்தைக் கொடுக்க நான் சொல்லவே இல்லை! அனைத்து ஆலயங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு Professionally Managed தன்னாட்சி நிறுவனம் என்று தான் சொல்லி இருந்தேன்! எதற்கும் பதிவை இன்னொரு முறை வாசித்து விடுங்கள்!
http://madhavipanthal.blogspot.com/2008/01/2008-part-2.html

மணியன் said...

கோவியார் சொல்வதுடன் நானும் உடன்படுகிறேன்; கண்ணபிரானின் சிந்தனையில் உள்நோக்கம் காணும் வகையில் இதுவரை அவர் பதிந்ததில்லை.

அவர் ஒரு கருத்தை கூறினார்; அதற்கு மாற்று காண்பதோ மேம்படுத்துவதோ உங்கள் உரிமை. நிர்வாகம் என்பது யார் நடத்தினாலும் குறை காண்பது எளிது. ஒரு அடுக்கக பராமரிப்பிற்கான குழுவே அடிதடியில் ஈடுபடும்போது பலகோடி/இலக்கம் பணமும் ஆபரணங்களும் புழலும் கோவில்களில் நேர்மையான நிர்வாகத்தை அரசுத்துறையானாலும் தனியார்வசமாக இருந்தாலும் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல் அரசுத்துறையில் இருந்தால் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பிடிப்பாவது இருக்கும்.

தனியார் துறையில் இருந்தாலும் அரசு கொள்கையளவில் கட்டுப்படுத்துவது இயலும். சிதம்பரம் கோவிலைக் கட்டுக்கு கொண்டுவருவது மக்களாட்சிக்கு முடியும். மக்களின் புரிந்துணர்வு விதிகளை மாற்ற உடன்படும்வரை, வாக்குவங்கிகளைக் கணக்கிடும் அரசுகளால் செயல்படுத்த முடியாது. அந்த புரிந்துணர்வை ஏற்படுத்த எந்த இயக்கமும் முயல்வதாகத் தெரியவில்லை.வங்கிகளை ஓரிரவில் அரசுடைமையாக்கிய அரசால் கோவில்களை அரசுடைமையாக்க முடியாதா ? ஜல்லிக்கட்டிற்கு எழுந்த இயல்பான மக்கள் எழுச்சி போல சிதம்பரத்தில் தமிழில் பாடுவதற்கும் எழுந்தால் உச்சநீதிமன்றங்கள் தீர்ப்பை மாற்றி எழுதும்.

பணமே ஊழலுக்கு வித்து எனும் ஆங்கில சொலவடையை பின்பற்றி கோவில்களில் பணம் புழங்காமல் இருக்கச் செய்வதே நலம் பயப்பது. கோவில் பராமரிப்பு அரசின் பால் அமைந்து விரும்பும் மக்கள் அரசிற்கு நன்கொடை கொடுக்கச் செய்யலாம். உண்டியல்கள் எடுத்துவிட்டால் கறுப்புபண புழக்கமும் குறையும்.விழாக்கள் மேலாண்மையை அரசு மேற்பார்வையில் ஒரு ஆன்மீக குழுவிடம் கொடுக்கலாம். அந்த குழு சாதி சார்பற்றதாக அமைக்கலாம்.அந்தவகையில் உங்கள் பதிவு ரவிசங்கரின் கருத்தை முன்னெடுத்துச் செல்வதாகவே உணர்கிறேன்.

மனமே கோவிலாவது உடல் தளர்ந்த, கூட்டத்தைத் தவிர்க்கும,் எங்களுக்கானது :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்//

அட, அப்படியா?
ஏதோ உள் நீரோட்டம், தேரோட்டம்-னு எல்லாம் சொல்றீங்களே! இருங்க இன்னொரு தபா நான் எழுதியதையே படிச்சிட்டு வாரேன்! :-)

//சமூக நீதி கிடைக்க அரசே கோவில்களை எடுத்து நடத்தி மக்களுக்கு குறைந்தப்பட்ச சம உரிமை அளீப்பது சிலர் கண்களை உறுத்துகிறது//

சமூக நீதியையும் சம உரிமையும் இன்னும் தீவிரமாச் செயல்படுத்தணும் தான் சொல்லி இருக்கேன்!

சிறப்புத் தரிசனம்-னு எத்தனை ஏழை மக்களைத் தள்ளு முள்ளு செய்யறீங்க! பல ஆலயங்களில் சிறப்பு வரிசை, பொது வரிசை இரண்டும் கலப்பது கூட இல்லை! ஏன்? இது என்ன குறைந்தபட்ச சம உரிமை? இது மட்டும் யார் கண்களையும் உறுத்தவில்லையே!

ஆலயத்தில் சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!ஆலயத்தில் பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா? - இதைத் தான் கேட்டிருந்தேன்! இது தான் சாதீய மேலாண்மையை நிறுவும் உள் நீரோட்டம்-னு பாக்குறீங்க போல! நான் என்னத்த சொல்ல! :-(

//பழனிக்கோவிலை....ஆரிய சக்திகள் ஆக்ரமித்தை அவர் ஏன் சொல்லவில்லை//

அர்ச்சகர்கள் தெரிந்தே அபிஷேகக் கொள்ளைக்குத் துணை போவதைச் சொல்லி இருந்தேன்! இன்னும் விரித்துச் சொல்ல அது பழனிக் கோவில் பற்றிய பதிவு அல்ல!

//ஆதீனமும் ஒரு தனியார் நிர்வாக அமைப்பு தானே அவர்கள் என்ன மேம்பட வைத்தார்கள். அரசியல் பேட்டி தருவது, நடிகைகளின் ஆட்டத்தினைப் பார்ப்பது என்று "விசேஷ ஆன்மீக சேவை" செய்கிறார்//

ஆரிய மாயையோ, வேறு மாயையோ - எதுவாகினும் மாயை ஒழிய வேண்டும்!
அதுக்கு மக்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது என் முதல் பதிவு!
நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது இரண்டாம் பதிவு!
இதில் நீங்க எந்த "மறைமுக" நீரோட்டத்தையும் பார்த்துக் கொள்ளலாம்! :-)

பூசலார் கட்டிய மனக் கோயிலில் பூசலார் மட்டுமே வழிபட முடியும்!
ஏழை விவசாயியோ, இல்லை எளிய பாமரனோ உள்ளே சென்று வழிபட முடியாதுங்க!
அப்படி இருந்தால் மத்த 62 நாயன்மார்களும் கோவில் கோவிலாப் போக வேண்டிய அவசியமே இல்லையே! எல்லாரும் பூசலார் கோயிலுக்கே ஓடியாந்திருக்கலாமே!

நாவுக்கரசர் போன்ற இறையாளர்கள் கோயில் சீர்திருத்தங்கள் செய்து போனார்கள்! அப்படிக் கோயில்களில் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் தான், பூசலார் போன்ற அடியார்களை இன்னும் உருவாக்கின!

ஒரு கோயிலுக்குச் சென்று வந்தால், பின்னர் பல மனக் கோயில்கள் உருவாகணும்! அதுக்குத் தான் ஆலயங்கள் தேவை!
அப்படி இல்லாத ஆலயங்கள் மாறித் தான் ஆகணும்!


கோயிலும் உண்டியலும் தேவையா என்றால்...
கோயில் - ஆம் தேவை!
உண்டியல் - தேவை இல்லை!
அம்புட்டுத் தான்!

Anonymous said...

///தன்னாட்சி நிறுவனங்கள் பல! IIM, ISRO என்று இவர்களிடம் நிர்வாகம் மாட்டிக் கொண்டு ஆதிக்க சக்திகளிடம் போய் விட்டதா என்ன?///

ரவிஷங்கரின் இந்த கேள்விக்கு பதில் : ஆம்...

சென்னை ஐ.ஐ.டியில் உயர்சாதியினர் / பார்ப்பணர்கள் எண்ணிக்கை 90 % ஆகும். தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம் மட்டுமே...என்று சமீபத்தில் எங்கோ படித்ததாக நியாபகம். இதுக்கு என்ன சொல்லப்போறார் ?

TBCD said...

வவ்ஸ்,

பதிவர்களைப் பற்றிய பார்வையயை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பதிவின் நோக்கத்தை வைத்து எழுதுகிறேன். கொஞ்சம் பெரிசாப் போச்சு. (என் பதிவிலும், போட்டு வைக்கிறேன்.)

திடிரென்று சாமி இல்லை, கோவிலும் இல்லை என்றுச் சொல்ல முடியாது என்றேத் தோனுகிறது. ஆனால், இன்னும் பழைய பானியில் கோவில் நடத்துவதில் அதைத் வைத்து கோவிந்தா போடும் கும்பலைத் தான் முன்னேற்றும், மக்களுக்கு ஒன்னும் நடக்கப் போறதில்லை.

எனக்குப் புரியாத ஒன்று, கோவிலில் அர்ச்சகர் என்ற ஒருவர் ஏன் வேண்டும். அட மணியடிப்பதை, இயந்திரமயமாக்கி விட்டாச்சு. (கோவையில் தான் செய்கிறார்களாம்..), தீப ஆரதனை செய்வதை இயந்திரமயமாக்க முடியாதா. பட்டர், குருக்களை விட, நல்ல கோர்வையாக, ஆரம் மாற்றாமல் தீப ஆராதனை இயந்திரம் செய்ய முடியும். கற்பூரத்திலிருந்து, நிறைய கோவில்களில், விளக்கிற்கு மாறிக் கொண்டு வரும் போது, அர்ச்சகர் இல்லாமல் கோவில் இருந்தால் என்ன தவறு.

எல்லாரும், அர்ச்சகர் ஆகலாம், என்றுச் சொல்லி, அதை நிறைவேற விடாமல் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தி, நிறைவேறாமலே பண்ணினாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை. மற்றைய மதங்களில் அவரவர் சொல்லி வணங்கும் போது, இங்கும் மட்டும் அதையும் அவட் சோர்ஸ் செய்து, தமிழன் அழிந்துப் போனது போதாதா. அப்படி வணங்க வேண்டும் என்றால், இப்போது மனதுக்குள்ளே போடும் அப்பளிக்கோஷன்களோடு, சிறப்பான, தமிழ் வாழ்த்துப் பாடல்களையும் பாடி வேண்டுங்களேன். தமிழும் வளரும். ஆட்டுக்கு புல்லு பறிச்சாமாதிரியும் ஆச்சு, தம்பிக்குப் பொண்னுப் பார்த்தா மாதிரியும் ஆச்சு.

சும்மா, கோவிலுக்குப் போய், அவர்(ன்) சொல்லுற, ஒன்னும் விளங்காத மந்திரத்தை தெய்வீக தன்மையுடையது என்று எண்ணி இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறனும். சாமீ, சாமீ என்று அழைக்க வைத்து, நிலையயை தக்கவைத்துக் கொள்ளும் கூட்டத்துக்கு ஆப்பு அடிக்க வேண்டாமா.

எங்க ஊரிலே, கோவிலுக்குப் போனா, பக்கத்திலே, பொட்டிக் கடை வைத்திருப்பவர் தான் வந்து கோவிலை திறந்து, தேங்காய் உடைத்து, வாழைப்பழம் சாமிக்கு வைத்து, சிறப்புச் செய்வார். ஆச்சர்யம் ஆனால், உன்மை, அந்த தெய்வங்களும் ஆரிய தெய்வங்களே. கோவில் ஒன்றும், ஆகமப்படியெல்லாம் கட்டப் படவில்லை. 15 வருசம் ஆச்சு, இன்னும் எந்த தெய்வமும், தெய்வக் குற்றம் சொல்லி அந்தப் பக்கம் ஒதுங்கவில்லை.

சாமி கும்பிடுவது என்பது, குடும்பத்தலைவர் சொல்லி வணங்குவார், சாமி, பொங்கல் வைக்கிறோம். அண்ணன் தம்பி, பங்காளி, அக்கா, தங்கை குடும்பத்தை எல்லாம், நீ தான் காப்பாத்த வேனும், என்று மனமுருகி வேண்டுவார்கள். அம்புட்டுத் தான். ஆடம்பரமில்லாத கோவில் தான். பணம் சேரவில்லை. ஒரு கூட்டமும் அதை ஆக்ரமிக்க போட்டிப் போடவில்லை. கருவறை என்ற ஒன்றேக் கிடையாது. இருந்தாத் தானே, நீ வராதே, நீ வா பிரச்சனை.

கோவிலில், காசுப் போட்டால், சாமி மனம் குளிரும் என்றுக் அழகாக கட்டமைத்து, காசுப் பிடுங்கிகளை வெளியேற்றுங்கள் என்பதே, என் வாதம்.

வவ்வால் said...

அனானி,
//இதுக்கு மேல யோசிக்கவே மாட்டீங்களா?//

இதுக்கு மேலே நீங்க மாறவே மாட்டிங்களா, அது என்னங்கடா மக்கள் பணத்திலே மக்களா சேர்ந்து கட்டியக்கோவிலை ஆள்வதற்கு மட்டும் வறிங்க , கேட்டா யோசிக்க சொல்விங்க , நாங்க எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சாச்சு, இனிமேலும் சுரண்டிப்பிழைக்க முடியாதுங்கோ!
------------------------------
பாரி அரசு
நன்றி!
//பெரும்பாலும் இந்துத்துவா பேசுகிற நபர்கள் கோயில் நிர்வாகத்தை நோக்கியே இருப்பதன் நோக்கமென்ன?//

எங்கே சில்லறை இருக்கோ அங்கே போவது தானே வழக்கம். நோகாமல் நோம்பு கும்பிடலாம்ல!
--------------------------------
கோவி,
நன்றி!

//உங்கள் கருத்தில் அபாயம் இருக்கிறது என்று அவருக்கு மாற்றுப் பார்வையைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் அவர் உள்நோக்கதுடன் தான் எழுதினார் என்று குற்றமாக சொல்வது தவறு.//

குற்றமாக சொல்லும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் சொல்ல நேரிட்டது. எத்தனையோ கோவில் சார்ந்த அனியாயங்கள் நடந்து வருகிறது, அவை எல்லாம் தனி குழுக்கள் வசம் இருப்பது தெரிந்தும் , அப்படி ஒன்றை சிறப்பான மாற்று வழியாக சொல்ல முடிகிறதே எப்படி அது?

மேலும்,

ஆலயங்களில் சாதிய வேறுபாடுகள் ஒழிந்துவிட்டது என்றும் பண வேறுபாடு தான் இருக்கிறது என்று சொல்லி , தீராத நோயாக இருக்கும் ஆலயங்களில் இருக்கும் சாதிய வேறு பாட்டை பின்னுக்கு தள்ளுவதேன்.

கற்ப கிரகங்கள் ஆகமப்படிக்கட்டியது அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் செல்ல ஆசைப்படக்கூடாது என்றும் பிற்போக்காக சொல்லி இருக்கிறார்.

இவற்றை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வதாம்?
-----------------------------------

சுரேகா,
நன்றி!

சிதம்பரம் போல பல இடங்களிலும் உண்டு. ஆனால் நன்கு தெரிந்த இடம் அது.இதை எல்லாம் மாற்ற மக்கள் மனம் வைக்க வேண்டும்.
--------------------
முரளிக்கண்ணன்,
நன்றி!
-------------------------
குமார்,
நன்றி,
சீக்கிரம் மனக்கோவில் கட்டுங்க, அதிலாவது தேவாரம் பாடி மகிழலாம்.
------------------------------
கோவை சிபி,
நன்றி,

நீங்கள் சொன்னது போல பலக்கோவில்களிலும் நடந்து இருக்கு, அரசின் கையில் இருக்கும் போதே இப்படி செய்பவர்கள் தனி குழுக்களிடம் போனால் என்னவாகும் ?
------------------------------

கண்ணபிரான் ரவிஷங்கர்,
நன்றி,
//மனக் கோவில் கண்ட நாயன்மார் பேரு மாசிலார் இல்லீங்க வவ்வால்! அவர் பெயர் பூசலார்!//

தப்பாகப்போட்டு விட்டேன் மன்னிக்கவும், திருத்தியற்கு நன்றி!

மனக்கோவில் கண்ட மாசிலார் பூசலார் என்று படித்தேன், "ம" விற்கு "மா" என்று அப்படியே எழுதி விட்டேன்!

//It is only a professional corporate body! தக்க நிர்வாக மேலாண்மை நிபுணர்கள் கொண்ட ஒரு நிறுவனம் என்று தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்!//

* நீங்கள் ஆரம்பத்தில் சொல்லும் போது இப்படித்தான் இருக்கும், கொஞ்ச காலம் ஆனால் தெரியும் எப்படியாவது செப்படி வித்தை செய்து குறிப்பிட்டவர்கள் அந்த கார்ப்பரேட் பாடியை ஆக்ரமித்து விடுவார்கள்.

சென்னையில் லா சாட்டளின் என்று ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளியில் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மட்டும் இருந்தார் ஒருவர் ஆனால் இப்பொழுது அவரது புகழ்ப்பெற்ற மகன் காலத்தில் திறமைசாலியான அவரது மகன் மற்றவர்களை விரட்டிவிட்டு முழுப்பள்ளியையும் அவர் வசம் கொண்டு விட்டார். அந்த புகழ்ப்பெற்ற மகன் "சோ" ராம சாமி!

கூடாரத்தில் ஒட்டகம் தலையை விட்டக்கதையாகி விடும்!

* isro, iim, iit, ஆகியவற்றில் என்னவாயிற்று என்று நான் சொல்ல நினைத்ததை செந்தழல் ரவி சொல்லி இருக்கிறார் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணி இடங்களை அங்கே நிரப்பாமலே வைத்திருக்கிறார்கள், மத்திய அரசின் நிர்வாக கமிட்டி ஏன் இப்படி என்று கேட்டும் செய்ய மறுத்திருக்கிறார்கள்.அப்படித்தான் இங்கும் ஆகும்.

//
ஆங்காங்கு லோக்கல் குழுக்களிடம் நிர்வாகத்தைக் கொடுக்க நான் சொல்லவே இல்லை! அனைத்து ஆலயங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு Professionally Managed தன்னாட்சி நிறுவனம்//

* 91 இல் மாவட்ட அளவில் இப்படி ஒரு கமிட்டி வைத்து அரசு முயற்சித்தது என்றும் இப்பதிவில் சொல்லி இருக்கிறேன் , நீங்களும் இப்பதிவை முழுசாக படிக்கவும். அப்பொழுது கோவில் நிர்வாக அதிகாரி, ஆணையர் எல்லாம் அதிகாரம் இழந்தார்கள். அவர்கள் கடைசியில் கணக்கினை தணிக்கை செய்ய மட்டுமே இருந்தார்கள் அப்போது.ஆனாலும் என்னவாயிற்று பலன் இல்லையே.

* professional body என்றால் அவர்களின் புரொபஷனலிசத்தை எதை வைத்து தீர்மானிப்பார்கள். பணம், உயர் வகுப்பை சேர்ந்தவராக இருப்பது, சமஸ்கிருதம் தெரிந்து இருப்பது, பக்திமானாக இருப்பது(இதில் போலிகளை எப்படி இனம் காண்பது) என்றா இல்லை பல்கலை பட்டங்கள் வைத்தா?


*நீங்கள் சொன்னது போல கோவில்களில் சாதியம் களையப்படவில்லை.

அரசின் கையில் இருக்கும் போதே சாதிய வேறுபாடுகளை களைய முடியவில்லை எனில் தனியார் நிர்வாகக்குழுவிடம் போனால் நிலைமை இன்னும் மோசம் ஆகும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

* பணம் என்று பக்தர்களை பிரித்தாலும் அப்பணத்தை கொடுத்தாலும் சாதியம் பார்க்கும் கொடுமை இருக்கிறது.

5000 மோ என்னவோ கொடுத்தால் சிதம்பரம் கோவிலில் பொன்னம்பலம் உள் சென்று தரிசிக்கலாம், ஆனால் ஒரு சிவாச்சாரியர் தேவாரம் பாட அங்கே சென்றால் , ஆகமம் கூடாது என்கிறார்கள் ஏன்? அதே பணத்தை கொடுத்து விட்டு பாட வேண்டும் என்றால் விடுவார்களா?

//ூசலார் கட்டிய மனக் கோயிலில் பூசலார் மட்டுமே வழிபட முடியும்!
ஏழை விவசாயியோ, இல்லை எளிய பாமரனோ உள்ளே சென்று வழிபட முடியாதுங்க! //

*ஆளுக்கொரு மனக்கோவில் கட்டிய பிறகு ஏன் அடுத்தவர் கோவிலுக்கு போகனும்!
-----------------------------
மணியன்,
நன்றி!
//நீங்கள் சொல்வதுபோல் அரசுத்துறையில் இருந்தால் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற பிடிப்பாவது இருக்கும்.//

அதே அதே!

//விழாக்கள் மேலாண்மையை அரசு மேற்பார்வையில் ஒரு ஆன்மீக குழுவிடம் கொடுக்கலாம். அந்த குழு சாதி சார்பற்றதாக அமைக்கலாம்.//

இப்பொழுதும் கோவிலில் நடைபெறும் பல விழாக்களும், கும்பாபிஷேகம் போன்றவையும் ஒரு உள்ளூர் தனி குழுவின் தலைமையில் தான் செய்யப்படுகிறது.கோவில் நிர்வாக அதிகாரியும் ஒரு உறுப்பினராக அதில் இருப்பார், அரசு மேற்பார்வை செய்கிறது.

//மனமே கோவிலாவது உடல் தளர்ந்த, கூட்டத்தைத் தவிர்க்கும,் எங்களுக்கானது :))//

நான் ஆலயங்கள் ஏன் வேண்டாம் என்கிறேன் அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதால் தான்!

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமை வேண்டும், அது போதுமே!

--------------
செந்தழல் ரவி,
நன்றி!
நன்றாக சொன்னீர்கள் , அரசு நிர்வாகத்தில் இருக்கும் அமைப்பிலேயே எப்படிலாம் வித்தைக்காட்டுகிறார்கள் அவர்கள், தனிக்குழுவின் வசம் போனால் என்னவாகும்! முதலுக்கே மோசம் அல்லவா ஆகும்.
---------------------------
tbcd,
நன்றி!

உங்கள் பதிலில் எதை எடுத்து சொல்வது, எல்லாமே என் கருத்தை ஒத்தே இருக்கிறது , நீங்கள் சொல்வது மிகவும் சரி, ஆனால் இதெல்லாம் உடனே நடக்காது, நடக்கும் காலம் வரும், ஆனால் அதுவும் அரசிடம் கோவில்கள் இருந்தால் தானே சாத்தியம்.

ஆகமம் எல்லாம் சாமன்யனை விரட்ட வைத்திருக்கும் சமாச்சாரம்.

சிலக்கோவில்களில் பள்ளிப்படிக்கும் அர்ச்சகரின் மகன் வந்து பூஜை செய்வான் அவனுக்கு என்ன எல்லா மந்திரமும் தெரிந்து விட்டதா இல்லை , பிறக்கும் போதே தெரிந்துக்கொண்டு வந்தானா? அந்த பொடியனையும் சின்ன குருக்கள் என்று வணங்குவார்கள் நம்ம மக்கள்.

அப்போது எல்லாம் ஆகமம் ஒன்றும் செய்யாதா?

//கோவிலில், காசுப் போட்டால், சாமி மனம் குளிரும் என்றுக் அழகாக கட்டமைத்து, காசுப் பிடுங்கிகளை வெளியேற்றுங்கள் என்பதே, என் வாதம்.//

காசு பிடுங்கும் கூட்டத்தை விரட்டலாம் என்றால் அதனை எப்படியோ தடுக்கிறார்கள், இடம்(கோவில்) இருந்தால் தானே பேரை சொல்லி காசு பிடுங்குகிறார்கள் என்று இடத்தையே எடுக்க சொல்கிறேன்.

சாலையோரம் ஆக்ரமித்து கடை வைத்திருப்பார்கள் , காலி செய்ய சொன்னால் லேசில் போக மாட்டார்கள், இரவோடு இரவாக பொக்லைன் வைத்து இடித்ததும் அலறி அடித்து ஓடுவார்கள்! அது போல தான் நான் சொல்வதும்.

Mohandoss said...

//*ஆளுக்கொரு மனக்கோவில் கட்டிய பிறகு ஏன் அடுத்தவர் கோவிலுக்கு போகனும்!//

வவ்வால் அருமை நீங்கள் இதைத்தான் சொல்லவந்தீர்கள் என்பது கண்ணபிரானுக்குப் புரியாதது ஏன் என்று தெரியவில்லை.

//பூசலார் கட்டிய மனக் கோயிலில் பூசலார் மட்டுமே வழிபட முடியும்!
ஏழை விவசாயியோ, இல்லை எளிய பாமரனோ உள்ளே சென்று வழிபட முடியாதுங்க!
அப்படி இருந்தால் மத்த 62 நாயன்மார்களும் கோவில் கோவிலாப் போக வேண்டிய அவசியமே இல்லையே! எல்லாரும் பூசலார் கோயிலுக்கே ஓடியாந்திருக்கலாமே!//

இப்படி ஏன் சொன்னார் என்று தெரியவில்லை உண்மையிலேயே உங்கள் வார்த்தைகள் பின்நவீனத்துவம் போல் சுற்றிக்கொண்டும் இல்லை!!!

வவ்வால் said...

மோஹன்,
நன்றி!

தெளிவாக சொன்னாலும் புரியாதவர்கள் போல இருத்தல் சிலருக்கு பிடிக்கும்.அப்படி இருக்கலாம் இது.

இப்போ தான் உங்களது பீமா விமர்சனம் படித்தேன் அங்கேயே வந்து சொல்றேன்.

கோவி.கண்ணன் said...

//கற்ப கிரகங்கள் ஆகமப்படிக்கட்டியது அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் செல்ல ஆசைப்படக்கூடாது என்றும் பிற்போக்காக சொல்லி இருக்கிறார்.

இவற்றை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வதாம்?//

இங்கும் புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு இருக்கிறது, அனைத்து மதத்தினரும் அர்சகர் ஆகவேண்டும் என்று சொல்பவர் அவர், அவர் சொன்ன அர்சகர்கள் பார்பனர்கள் மட்டுமல்ல. பயற்சி எடுத்தவர்கள் அனைவரையும் குறித்தே குறிப்பிட்டு இருந்தார். நீங்கள் சொல்வது போல் நான் புரிந்து கொண்டிருந்தால் அவரிடம் அங்கேயே கேட்டு இருப்பேன். நீண்ட நாள் அவர் பதிவை படிப்பவன் ஆதலால் புரிதலில் குழப்பம் இல்லை.

முறைப்படி ஆகமம் பயின்றவர்கள் அர்சகர் ஆவதைத் தானே அரசு ஆணையும் சொன்னது.

அர்சகரில் பார்பனர் உண்டு, பார்பனர் மட்டுமே அர்சகர் அல்ல.

கோவி.கண்ணன் said...

//அனைத்து மதத்தினரும் அர்சகர் ஆகவேண்டும் என்று சொல்பவர் //

மேலே சொற்பிழை, அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகவேண்டும் என்று சொல்பவர் என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

வவ்வால் said...

கோவி,
நன்றி!

நீங்களும் இப்படி பேசுவது ஆச்சர்யம் அளிக்கிறது.

//முறைப்படி ஆகமம் பயின்றவர்கள் அர்சகர் ஆவதைத் தானே அரசு ஆணையும் சொன்னது.

அர்சகரில் பார்பனர் உண்டு, பார்பனர் மட்டுமே அர்சகர் அல்ல.//

சரி அரசு ஆணைப்படி எத்தனை கோவில்களில் பிற சாதியினர் அர்ச்சகர்களாக பதவி ஏற்றுள்ளனர். அதற்கு ஏன் பிராம்மண அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பார்ப்பனர் மட்டுமே என்று நானும் சொல்லவில்லை ஆனால், அவர்கள் தான் பெரும்பாண்மை! மிகச்சிரிய கோவில்கள் மட்டுமே தற்போது பார்ப்பனர் அல்லாதோர் வசம் இருக்கு. அதிக வரும்படி இருக்கும் கோவில்கள் எல்லாம் யார் வசம் என உங்களுக்கே தெரியும்.

முறைப்படி ஆகமம் பயின்றவர்கள் மட்டும் தான் கர்ப்பகிரகம் உள் செல்ல வேண்டும் எனில் அர்ச்சகரின் பள்ளிப்படிக்கும் சின்னப் பையன் (10-12 வயது)எல்லாம் எப்படி போய் பூஜை செய்கிறான்? அவன் என்ன அதற்குள் ஆகமம் பயின்று விட்டானா?

கோவி.கண்ணன் said...

//முறைப்படி ஆகமம் பயின்றவர்கள் மட்டும் தான் கர்ப்பகிரகம் உள் செல்ல வேண்டும் எனில் அர்ச்சகரின் பள்ளிப்படிக்கும் சின்னப் பையன் (10-12 வயது)எல்லாம் எப்படி போய் பூஜை செய்கிறான்? அவன் என்ன அதற்குள் ஆகமம் பயின்று விட்டானா?//

இதெல்லாம் பார்பனர்கள் அவர்களாகவே செய்யும் எல்லை மீறல், 12 வயது ஐயப்பனுக்கு பெண்கள் தீட்டு என்று கதை கட்டி இருக்கும் போது மற்றதெல்லாம் சொல்லத் தேவை இல்லை.
:))

கண்டிப்பாக தெரியும் அவர் பார்பனரின் உரிமையை காப்பதற்காக அவ்வாறு சொல்லவில்லை. அதற்கு மேல் உங்கள் எண்ணத்தில் நான் குறிக்கிடவில்லை.

Anonymous said...

http://www.ibnlive.com/news/guruvayur-temple-purified-after-foreigner-entry/57016-3.html

செல்வம் said...

வவ்வால் வழக்கம் போல் நச்சென்ற பதிவு.என் கருத்துகளையும் பதிவிட ஆசைப்படுகிறேன்.

கோவில் தேவையா???

தேவைதான் என்று தோன்றுகிறது.நம் நாட்டில் எல்லோரும் பிரச்சினைகளுடன் தான் வாழ்ந்துவருகிறோம்.பிரச்சினைகளைக் கடவுளிடம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொள்ளும் மக்கள்கூட்டம் நம் சமூகத்தில் ஜாஸ்தி.(அவர் இருக்காரோ?இல்லையோ?)இதுவும் இல்லையென்றால் மக்கள் mob culturஎ க்கு மாறும் வாய்ப்பு உள்ளது.போனமா?சொன்னமா?என்று வந்து விட்டால் பிரச்சினையே இல்லை.மக்களிடம் பிரச்சினைகள் உள்ள வரைக்கும் கோவில்களின் தேவை இருக்கத்தான் செய்யும்.

உண்டியல் தேவையா????

உண்டியலை விடக் கேவலமான ஒரு கலாச்சாரம் உள்ளது.அதுதான் சாமியை பிளாக் டிக்கெட்டில் பார்ப்பது.சாமி என்ன பொங்கல் ரீலிஸா???.இதை வைத்துக் கொள்ளையடிக்கும் கூட்டத்தை என்ன சொல்வது...திருச்செந்தூர் முருகனுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அங்குள்ள அர்ச்சகர்களை வேலாலேயே குத்தி துரத்தியிருப்பார்

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,
இங்க பெரிய விவாதம் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. விவாதத்தை நல்ல முறையில் எடுத்துச் செல்லும் உங்களுக்கு என் பாராட்டுக்கள் ...

ஒரே ஒரு மேட்டர் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்கறேன் :)

எனது இந்தப் பதிவில் உங்களது பிரதான கருத்தை நானும் சொல்லியிருந்தேன், ஆக நான் உங்களை முந்தி விட்டேன் தானே :))) அதாவது

"அது போல, செல்வனின் பின்னூட்டக் கருத்தான அரசு நிர்வாகத்தால் தான் கோயில்களில் பிரச்சினை என்பதும் ஏற்புடையதல்ல. ஆனால், செல்வனின் பிற கருத்துகள் 'நச்' ! எனக்குத் தெரிஞ்சு, பார்த்தசாரதி கோவிலில் 'அலம்பல்' பண்றவங்க, பரம்பரையா பாத்யதை உள்ளவங்களும், கோஷ்டியில வர்றவங்களும், மடப்பள்ளி ஆட்களும் தான் !!! எல்லா விசேஷ தினங்களிலும், அவங்க ஆதிக்கம் தான் :( யாராவது விஐபி வந்தா, கோயில் ஆட்கள், அவங்க மேலே விழுந்து கவனிக்கறதும் நாம் பார்க்கிறது தானே !
"

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,
மேலே சுட்டி கொடுத்துள்ள எனது பதிவை வாசிக்கவும், சமயம் கிடைக்கும்போது.
எ.அ.பாலா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//*ஆளுக்கொரு மனக்கோவில் கட்டிய பிறகு ஏன் அடுத்தவர் கோவிலுக்கு போகனும்!//

மிகவும் அருமையான கருத்து!
உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்-னு திருமூலர் பாடி வைத்தார்! ஆனா எத்தனை மனக்கோவில்கள் தோன்றின?

மனத்துள் கோவில் அமைத்த பூசலாருக்கே, பல ஆண்டுகள், பல தல யாத்திரைகள், பல இறையாளர்களின் பதிகங்கள் என்று கேட்டுக் கேட்டு, உணர்ந்து உணர்ந்து மனக் கோயில் அமைத்தார்.

எளிய பக்தர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இது எடுத்த எடுப்பில் எப்படிச் சாத்தியம்?
இப்படி எல்லாப் பக்தர்களும் மனக்கோவில் கட்டிக்கிட்டாங்க என்றால் பிரச்சனையே இல்லை!
அது வரை என்ன செய்யப் போறீங்க?

//வவ்வால் அருமை நீங்கள் இதைத்தான் சொல்லவந்தீர்கள் என்பது கண்ணபிரானுக்குப் புரியாதது ஏன் என்று தெரியவில்லை//

மோகன்தாஸ்...
இங்கே புரிதல் என்பது எனக்கு மட்டும் இல்லை! ஆழ்வார், நாயன்மார்கள் அனைவருக்கும் தான்!

அவரவர் ஒரு மனக்கோயில் கட்டிக் கொண்டு, அடுத்தவர் கோயிலுக்கு ஏன் போகணும்? தனித் தனித் தீவுகளாய் அவரவர் அப்படியே அப்படியே இருந்து விடலாமே!

பக்தி இயக்கத்தின் அடிப்படை என்னவென்றால் - ஆலயங்கள் இறைவனுக்காக மட்டும் ஏற்பட்டது அல்ல! அடியவருக்கும் ஏற்பட்டது தான்!

அதனால் தான் தனிப்பட்ட அளவிலான ஆன்மீக முயற்சிகள் மட்டும் இல்லாது, கூட்டான ஆன்மீக முயற்சிகளையும் வரையறுத்துச் சென்றார்கள்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு சொன்னது எல்லாம் இதுக்குத் தான்!

அவரவர் மனக்கோயில் கட்டிக்கிட்டா ஏன் அடுத்தவன் கோயிலுக்குப் போகோனும்-னு, பக்தியில்லாத எனக்கே புரியும் போது, தொண்டில் சிறந்த நாயன்மார்களுக்குத் தெரியாதா என்ன?
பாவம் எதுக்கு வயசான காலத்துல, கையில் உழவாரப்படை ஏந்திக் கொண்டு, கோயில் கோயிலாகப் போயி, சீர்திருத்தனும்? எல்லாரும் மனக்கோயில் கட்டி வழிபடுங்கள் ன்னு சொல்லிட்டு, நாவுக்கரசர் பெருமானும் தானும் ஒரு மனக் கோயில் கட்டிக்கிட்டு வழிபட்டிருக்கலாமே! பாவம் அவருக்கும் ஏன் இது புரியாமல் போனதுன்னு தான் தெரியலை! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@செந்தழலார்

தன்னாட்சி நிறுவனமான சென்னை IIT-இல் பார்ப்பன/உயர் சாதி ஆதிக்கம் மிகுந்திருந்தால் அது பெருந்தவறு தான்! அதைக் களைய பல முயற்சிகள் எடுக்கலாம்! அரசும் நீதிமன்றங்களும் உள்ளன.

இதனால் நாட்டில் எல்லாத் தன்னாட்சி நிறுவனங்களும் அப்படித் தான் செயல்படுகின்றனவா என்பது கேள்வியே! எனக்குத் தெரிந்த அளவில் ISRO இல்லை!

@மணியன்
//மக்களின் புரிந்துணர்வு விதிகளை மாற்ற உடன்படும்வரை, வாக்குவங்கிகளைக் கணக்கிடும் அரசுகளால் செயல்படுத்த முடியாது//

இதே! இதே!
அதனால் தான் கொள்கை முடிவுகள் அரசின் கையில்!
அன்றாட நிர்வாகம் (Day to day professional management) தன்னாட்சி நிறுவனத்திடம் என்று சொன்னேன்!

@செல்வம்
மிகவும் சரி!
ஆலயங்கள் தேவையே! உண்டியல்களும் ப்ளாக் டிக்கெட்டில் சாமியைப் பார்ப்பது பற்றியும் தான் பதிவில் வெகுண்டு எழுதி இருந்தேன்!
படித்துப் பாருங்கள்!

@வவ்வால்
91-இல் கொண்டு வந்த அமைப்பு, எந்த அளவுக்குத் தொழில்முறைத் தரம் வாய்ந்தது? அதன் அதிகாரங்கள் என்ன? செயல் திட்டம் எப்படிப்பட்டது? அது தோல்வியைச் சந்தித்தது என்றால் "தோல்வி" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

அரசு தானே தன்னாட்சி நிறுவனத்தை அமைக்கப் போகிறது! அப்போது இது போன்ற சாதீயம் தலை தூக்காத வண்ணம் கட்டமைத்தால் பிரச்சனைகள் வரும் வாய்ப்பில்லை! எதுக்கு சோ இராமசாமியைக் நிறுவனத்தில் போடணும்? சார்பு நிலை கொண்டவர்களைக் கிட்ட அண்டவே விடக் கூடாது! நிறுவனத்தில் எந்தவொரு பிரமுகர்களும் தேவையில்லை! மேலாண்மை நிபுணர்களே தேவை! இவர்களுக்கும் அன்றாட நிர்வாக அதிகாரங்கள் மட்டும் தான்! கொள்கை முடிவுகள் என்றுமே அரசின் கையில் தான்!

சிதம்பரம் ஆலயம் தனியார் சொத்து என்று தீட்சிதர்கள் ஆட்டம் ஆடினால், அரசு கையகப்படுத்த சிறப்புச் சட்டங்கள் கொண்ட வரவேண்டும்! கையகப்படுத்தியே தீர வேண்டும்!

ஆலயங்கள் அமைக்கும் போதே தனிவொரு நபராகவோ, தனியொரு சாதிக் குழுவாகவோ, தம் சொந்தப் பணம் போட்டு மட்டும் தொடங்கக் கூடாது என்பது தான் ஆகம விதியும் கூட! அப்படி இருக்க சிதம்பரத்தில் நடக்கும் கொட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! வங்கிச் சட்டம் வந்தது போல் ஆலயச் சட்டம் வந்தால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது!

சட்டங்கள் செய்ய அரசு. அன்றாட நிர்வாகம் தொழில்முறையான தன்னாட்சி அமைப்பு!
தீட்சிதர்கள் அனைவரும் சீருடை போட்ட தனியார் பணியாளர்கள் தான்! எப்போது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்ந்து, வீட்டுக்கு அனுப்பப் படுவோம் என்ற பயமாவது மிஞ்சும்.

//சிலக்கோவில்களில் பள்ளிப்படிக்கும் அர்ச்சகரின் மகன் வந்து பூஜை செய்வான் அவனுக்கு என்ன எல்லா மந்திரமும் தெரிந்து விட்டதா இல்லை , பிறக்கும் போதே தெரிந்துக்கொண்டு வந்தானா?//

அதைத் தான் நானும் சொல்கிறேன்!
அந்தச் சிறுவனுக்கு அந்த உரிமையை வழங்கியது யார்?
இதை அரசோ, அரசு அலுவலர்களோ தடுக்க முடிகிறதா?

இன்னொன்றும் இருக்கு! வீதிப் புறப்பாட்டில் சம்பந்தமே இல்லாமல் வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் என்று அனைவரையும் வாகனத்தின் மேல் ஏற்றிவிடும் பழக்கம்! இறைவனை மறைத்துக் கொண்டு, பாதி மனிதத் தலைகள் தான் வாகனத்தில் தெரியும்! - இப்படி ஒவ்வொரு விடயத்தையும் அரசு பார்த்துப் பார்த்துச் சீர்செய்ய முடியாது!

தன்னாட்சி நிறுவன நிர்வாகத்தில், தனியார் நிர்வாகம் போல், பணியாளர்களுக்கு உண்டான நடத்தை விதிமுறைகள் (code of conduct) படி நடந்தே ஆக வேண்டும்! அப்போது இது போல் எல்லாம் யாரும் அலம்பல் செய்ய முடியாமால் ஒழுங்கு முறைக்குள் வந்தே ஆகும்!

Anonymous said...

வவ்வாலு, ரவிசங்கர் அவர்கள் ஆழமாகப் படித்து, யோசித்து அற்புதமாகப் பதிவெழுதுகிறார். தாங்களோ நுனிப்புல் மேய்ந்துவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று பதிவெழுதி எல்லாருடைய நேரத்தையும் வீணடித்து வருகிறீர்கள். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி, தானும் அதுபோல பாவித்து...ஆடியது போல இருக்கிறது. நீங்கள் இந்த தலைப்பை விட்டுவிட்டு உங்களுக்குப் பழக்கமான திராவிட கும்மிக்கு சென்றுவிடுவதுதான் முறையாக இருக்கும்.

குமரன் (Kumaran) said...

வவ்வால். நல்லதொரு வாதத்தை வைத்திருக்கிறீர்கள். இப்போது இருக்கும் அமைப்பில் ஊழல் நிரம்பி வழிந்தாலும் தனியார் வசமிருக்கும் கோவில்களிலும் விதிவிலக்காக சில கோவில்களைத் தான் காட்டமுடியும். மற்றவற்றில் எல்லாம் பல குறைகள் இருக்கத் தான் செய்கின்றன.

அவரவர் கருத்தினை அவரவர் எழுதுகிறார்கள். ஒருவர் எழுதியதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடியாது தான். ஆனால் நீங்கள் இரவிசங்கர் எழுதியதில் (அவர் ரவி ஷங்கர் என்று ஷ போட்டு எப்போதாவது அவர் பெயரை எழுதியிருக்கிறாரா என்ன? முதன்முதலில் நீங்கள் எழுதித் தான் அப்படிப் பார்க்கிறேன்) குறைகள் காணலாம்; சாதிய எண்ணத்தைக் காணலாம். உள் நீரோட்டத்தைக் காணலாம். அப்படிக் கண்டுபிடித்துச் சொல்வது உங்கள் பதிவின் முக்கிய நோக்கம் இல்லை என்று எண்ணுகிறேன். அவர் சொன்ன கருத்துகளில் இருக்கும் அபாயத்தைச் சொல்ல நினைப்பதே முக்கிய நோக்கம் என்று எண்ணுகிறேன். அந்த வகையில் நீங்கள் எழுதியதை இப்படி மாற்றிப் படித்துக் கொள்கிறேன் 'பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் வாய்ப்பினைக் கொண்டிருப்பது சிறிது உற்றுக் கவனித்தாலே தெரியும்'.

மொத்தமாக இந்த இடுகை சொல்லும் கருத்தில் எந்த வேறுபாடும் இல்லாததால் சில சிறிய பற்றியங்களைப் பற்றி மட்டும் கேட்கிறேன்.

//பொன்னம்பலத்தில் தேவாரம் பாடத்தடை விதித்தவர்கள் தான் இந்த தீட்சிதர்கள், அவர்களும் பாட மாட்டார்கள், பாடவரும் சிவாச்சார்யார்களையும் விட மாட்டார்கள். //

இது முழுக்க முழுக்க உண்மை தானா? தீட்சிதர்கள் பொன்னம்பலத்தில் தேவார திருவாசகங்களைப் பாடுகிறார்கள். மற்றவர் ஏறிப் பாடுவதற்குத் தான் தடை விதிக்கிறார்கள் என்று தானே இதுவரை சிதம்பரம் பற்றி வலைப்பதிவுகளில் பேசப்பட்டவற்றை வைத்துப் புரிந்து வைத்திருக்கிறேன். அது தவறா? நீங்களும் படித்ததை வைத்து இருக்கும் புரிதலில் சொன்னதா அல்லது நேரடியாக உறுதி செய்து கொண்டு சொன்னதா? ஏனெனில் என்னைப் பொருத்தவரை இதில் மொழிப் பிரச்சனையை விட சாதி வெறி தான் இருக்கிறது.

வவ்வால் said...

கோவி,
//இதெல்லாம் பார்பனர்கள் அவர்களாகவே செய்யும் எல்லை மீறல்,//

அத்துமீறல் இப்போதே இப்படி எனில் , தனி நிர்வாகக்குழு அமைத்து அதுவும் இவர்கள் கட்டுப்பாட்டில் போச்சுனா என்னாகும்?

பதிவின் கருத்தின் அடிப்படையில் தான் நான் கண்ணபிரான் பதிவுக்கு பதில் சொல்கிறேன், அவர் இப்படி என்று முடிவு செய்ய அல்ல!

------------------------
அனானி ,
நன்றி!
-------------
செல்வம்,
நன்றி!
கோவில்கள் இருப்பதால் ஒன்றும் கேடில்லை , ஆனால் அதை வைத்து வருமானம் பார்க்க பல வேலைகளும், மக்களை பாகுபாடு செய்வதும் தான் சரியல்ல, அதனை ஒழிக்க கோவில்களை எடுத்தாலும் தவறில்லை தானே.

உண்டியல், பிளாக் டிக்கெட் எல்லாம் எடுக்க விடாமல் செய்வது யார் அதே கோவில்லை வைத்து பிழைப்பு பார்ப்பவர்கள் தானே. எதாவது சீர் திருத்தம் செய்யப்போனால் ஒட்டு மொத்தமாக இந்து விரோதிகள் என்று சொல்லி குட்டையை குழப்பி விடுவார்கள்.
--------------------
எ.எ.பாலா,

உங்கள் பதிவைப்பார்க்கவில்லை பார்த்திருந்தால் அதுக்கும் ஒரு பதிவு போட்டிருப்பேன்.
இப்போ பார்த்து விடுகிறேன்.

//எனக்குத் தெரிஞ்சு, பார்த்தசாரதி கோவிலில் 'அலம்பல்' பண்றவங்க, பரம்பரையா பாத்யதை உள்ளவங்களும், கோஷ்டியில வர்றவங்களும், மடப்பள்ளி ஆட்களும் தான் !!! //

தனிக்குழு அமைத்து நிர்வகிக்க போனால் பார்த்த சாரதிக்கோவில் கதை தான் எல்லாக்கோவில்களுக்கும் ஆகும். அக்குழும் பரம்பரை சொத்தாகிவிடும்.
-=---------------------------
கண்ணபிரான்,

தனி மனித பக்தி பெருகினால் போதும், அதை வளர்க்கலாமே, ஏன் முடியாது என்று சொல்ல வேண்டும். அக்காலத்தில் அப்படி ஆச்சுனா இப்போவும் அப்படி காலம் எடுக்குமா? ஆனால் அப்படி எல்லாம் சுயமாக கடவுளை அணுகினால் ஒரு சிலருக்கு வருமானம் போய்விடும்.

குறைந்த பட்சம் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இல்லாமே வழிப்பட வழி செய்யலாமே, எதுக்கு ஒரு பவர் புரோக்கர்!

//தனித் தனித் தீவுகளாய் அவரவர் அப்படியே அப்படியே இருந்து விடலாமே!

பக்தி இயக்கத்தின் அடிப்படை என்னவென்றால் - ஆலயங்கள் இறைவனுக்காக மட்டும் ஏற்பட்டது அல்ல! அடியவருக்கும் ஏற்பட்டது தான்! //

சரிதான், ஆனால் அடியவர்களில் சாதிப்பார்த்து சிலருக்கு மட்டும் கோவிலில் முழு மரியாதை பலர் உள்ளே கூட வர முடியாது அது ஏன். அவர்களும் அடியவர்கள் தானே.

பணம் வைத்து மரியாதை கோவிலில் மாறக்கூடாது என்று நினைக்கும் உங்களால் இது ஏன் நினைக்க முடியவில்லை. பொதுமக்களுக்காக கட்டப்பட்ட ஒரு கோவில் திருமண மண்டபத்தை கூட ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தவரால் வாடகைக்கு எடுக்க முடியவில்லை இங்கே.

//சட்டங்கள் செய்ய அரசு. அன்றாட நிர்வாகம் தொழில்முறையான தன்னாட்சி அமைப்பு!
தீட்சிதர்கள் அனைவரும் சீருடை போட்ட தனியார் பணியாளர்கள் தான்! எப்போது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்ந்து, வீட்டுக்கு அனுப்பப் படுவோம் என்ற பயமாவது மிஞ்சும்.//

முழுக்க அரசே வைத்திருக்கும் போதே அப்படி சட்டம் பாயலாமே. ஏன் பாயவில்லை,பாய விடாமல் இப்போதே அர்ச்சகர்கள் சகல விதத்திலும் தடுக்கிறார்கள் என்பதே உண்மை, தனி நிர்வாகக்குழு வந்தால் அதனைக்கைக்குள் போட்டுக்கொள்வார்கள்.

கோவில் அர்ச்சகர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் , இது பத்திரிக்கைகளில் படித்தது தான் எனவே என்ன ஆதாரம் என்று பாயாதீர்கள்,

ஒரு தாழ்த்தப்பட்டவர் கோவில் நிர்வாக அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்டதால் அவரை கோவில் உள் இருக்கும் அலுவலத்தில் அமர்ந்து பணி செய்ய விடவில்லை அர்ச்சகர்கள்.இது எந்த கோவில் என்று மறந்து விட்டது.

அதே போன்று பெண் அதிகாரி வந்த போது நேரடியாக நீங்கள் தீட்டாக இருந்தால் எங்களுக்கு எப்படி தெரியும் எனவே நீங்களும் கோவிலுக்குள் வந்து பணி செய்யாதீர்கள் என்று தடுத்து விட்டார்கள்.இது திருவண்ணாமலையில் நடந்தது.

அரசின் கையில் கோவில்கள் இருக்கும் போதே அவர்கள் இப்படி செய்யக்காரணம் என்ன மேலிடத்தில் இருந்து வரும் போது நன்றாக கவனித்து விடுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

இவர்கள் முன் உள்ளூர் நிர்வாக குழு எம்மாத்திரம்.

முன்னரே கேட்டேன், நீங்கள் புரொபெஷனல் குழு என்கிறீர்கள் அவர்கள் யார் , எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் சார்பு தன்மை இன்றி இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அரசும் நன்கு படித்தவர்களையே நியமிக்கிறது அவர்களை சரியாக வேலை வாங்கினாலே போதுமே.

//தீட்சிதர்கள் அனைவரும் சீருடை போட்ட தனியார் பணியாளர்கள் தான்! எப்போது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்ந்து, வீட்டுக்கு அனுப்பப் படுவோம் என்ற பயமாவது மிஞ்சும்.//

இப்போ மட்டும் என்ன அரசின் கீழ் உள்ள எல்லா கோவில் அர்ச்சகர்களும் அரசு பணியாளர்கள் தான் மாத சம்பளம் கூட உண்டு. ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்பதை முன்னரே சொல்லியுள்ளேன்.
//பணியாளர்களுக்கு உண்டான நடத்தை விதிமுறைகள் (code of conduct) படி நடந்தே ஆக வேண்டும்! அப்போது இது போல் எல்லாம் யாரும் அலம்பல் செய்ய முடியாமால் ஒழுங்கு முறைக்குள் வந்தே ஆகும்!//

இப்போதும் அந்த கோடு எல்லாம் இருக்கு ஆனால் அவர்கள் மீது கை வைத்தால் அரசு இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறது என்று பழிப்போடுவார்கள்.

மேலும் அரசு எந்திரம் என்பது பெரிய இயக்கம், அதனையே எதிர்த்து காரியம் சாதிப்பவர்களால் உள்ளூர் மேலாண்மை குழுவை அடக்கி விட மாட்டார்களா, அல்லது அவர்களுக்கு "உரியதை" கொடுத்து வாங்கி விட மாட்டார்களா, எப்படி அவர்கள் வந்தால் சரியாகிவிடும் என்று அடித்து சொல்கிறீர்கள்.

அப்படிப்பார்த்தால் மேலாண்மை படித்தவர்களை வேலைக்கு வைத்திருக்கும் எல்லா தனியார் நிறுவனங்களும் லாபம் ஈட்ட வேண்டும், ஆனால் பல நிறுவனங்கள் நஷ்டம் அடைவதேன்.

தவறு செய்பவர்களை தண்டித்தாலே எல்லாம் சரியாகிவிடும். அதை அரசே செய்தால் என்ன?

ஆலயத்திற்கும் அனைவரும் வருவதற்கே அனுமதிக்கவில்லை எனப்போராடி பெற்றது தான் இந்த உரிமை, மீண்டும் அவ்வாறு செய்து விடாமல் இருக்க தான் அரசே கோவில்களை நிர்வகித்து வருகிறது.இன்னும் பல இடங்களிலும் அனைத்து மக்களுக்கும் வழிபடும் உரிமை முழுதாக கிடைத்து விடவில்லை அதற்குள் அரசின் கையை விட்டு நிர்வாகம் போக வேண்டும் என்பது சரியா?
------------------------

அனானி,
உங்கள் உபதேசத்திற்கு நன்றி,
//வவ்வாலு, ரவிசங்கர் அவர்கள் ஆழமாகப் படித்து, யோசித்து அற்புதமாகப் பதிவெழுதுகிறார். //

ஆழமாக என்றால் எப்படி கிணற்றுக்குள் உட்கார்ந்து படிப்பாரா? :-))

நான் நுனிப்புல் மேய்ந்ததை வைத்து கேள்விக்கேட்பதற்கே சரியாக பதில் வர மாட்டேங்குதே இங்கே, இன்னும் நான் விவரமாக வந்தால் நீங்கள் எல்லாம் தாங்குவிங்களா?

ஆன்மீக கும்மி அடிக்க நீங்க இருக்கும் போது நான் வருவது தப்பு தான் :-))

----------------------------------------

குமரன்,
நன்றி!

ஷ , ச என்பதை உற்று கவனித்து கேட்கிறீர்களே, அதன் பின் எதுவும் இருக்கா? ஆங்கிலத்தில்"sha"nkar என்றே எழுதுவதால் அப்படி போட்டேன். அவர் தமிழில் பெயர் எழுதி நான் பார்த்ததில்லை.

//இது முழுக்க முழுக்க உண்மை தானா? தீட்சிதர்கள் பொன்னம்பலத்தில் தேவார திருவாசகங்களைப் பாடுகிறார்கள். மற்றவர் ஏறிப் பாடுவதற்குத் தான் தடை விதிக்கிறார்கள்//

நான் போய் இருந்த போதும் தேவாரம் பாடப்படவில்லை. வெளியில் நின்றவர்கள் சிலர் பாடினார்கள்.


அவர்களும் பிரச்சினை வந்த பிறகு என்றாவது தேவாரம் பாடுகிறார்கள், தினசரி அல்ல,அதுவும் அம்பலத்திற்கு முன்னர், அதன் மீதல்ல என்று கேள்விப்பட்டேன்.

மேடை போல உயர்ந்த அமைப்பில் பொன் கூறையுடன் இருக்கும் அதன் முன்னர் நிறைய இடம் இருக்கும் அங்கே அனுமதிப்பார்கள், மேலே எறிச்செல்ல தான் சிறப்பு கட்டணம் எல்லாம், அதுவும் தேவாரம் பாட அனுமதி இல்லை.

//ஏனெனில் என்னைப் பொருத்தவரை இதில் மொழிப் பிரச்சனையை விட சாதி வெறி தான் இருக்கிறது.//

சாதி வெறி கூடவே மொழி வெறுப்பும் உள்ளது .

Anonymous said...

பதிவும் பின்னூட்டங்களும் அருமையாகப்போய்க்கொண்டிருக்கிறது...

அனானிக்கு கொடுத்த பதில் அருமை...

ஆமாம் நீங்க ///நான் நுனிப்புல் மேய்ந்ததை வைத்து கேள்விக்கேட்பதற்கே சரியாக பதில் வர மாட்டேங்குதே இங்கே, இன்னும் நான் விவரமாக வந்தால் நீங்கள் எல்லாம் தாங்குவிங்களா? ///

நுனிப்புல் மேய நீங்க என்ன ராமநாதபுரம் மாடா ?

குமரன் (Kumaran) said...

//ஷ , ச என்பதை உற்று கவனித்து கேட்கிறீர்களே, அதன் பின் எதுவும் இருக்கா?//

உண்டு வவ்வால். நீங்களும் செந்தழல் இரவியும் கண்ணபிரான் இரவிசங்கரின் சாதியைப் பற்றிய ஒரு ஊகத்தையும் அவருடைய தமிழ்மொழியின் மேலுள்ள எண்ணங்களைப் பற்றிய ஒரு ஊகத்தையும் கொண்டு இங்கே பேசிக் கொண்டிருக்கிறீர்களோ என்ற ஐயம் இருக்கிறது. சில முறை கண்ணபிரான் இரவிசங்கரின் பதிவில் சில அனானிகள் அவரை 'அம்பி' என்று அழைப்பதையும் அவர் அதனை மறுப்பதையும் கவனித்திருக்கிறேன். அவர் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் அவர் பார்ப்பனர் இல்லை என்று அவர் மறுப்பதை வைத்து அறிகிறேன். உங்கள் இருவருக்கோ வேறு எவருக்கோ அவர் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணமோ தமிழ்மொழியின் மேல் உள்ள பற்றை விட வடமொழியில் அதிக பற்றுள்ளவர் என்ற எண்ணமோ இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டுகிறேன். இரவிசங்கரை இரவிஷங்கர் என்று எழுதியதால் அதில் இந்த எண்ணங்கள் தொக்கி நிற்கின்றனவா என்று அறியத் தான் அதனை தனியாக எடுத்துக் கேட்டேன்.

வவ்வால் said...

செந்தழல் ரவி,

தொடர்ந்த உங்களது ஊக்கத்திற்கு நன்றி!, பின்னூட்டங்களில் அனைவரும் அருமையாக உரையாடுகிறார்கள். காரணம் பலருக்கும் கோவில்களில் இருக்கும் ஒரு சாரரின் ஆதிக்கம் பிடிக்கவில்லை. அனைவரும் அதை நீக்க விரும்புகிறார்கள், பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்பது தான் கேள்வி.

//நுனிப்புல் மேய நீங்க என்ன ராமநாதபுரம் மாடா ?//

இதில் உள்குத்து இருக்கா?

ஆகா கடைசில எல்லாருமா சேர்ந்து மாடு ஆக்கிட்டிங்களா .... ஆனாலும் முரட்டுக்காளைங்கோ இது! :-))
-------------------------------

குமரன்,
நன்றி!

"ஷ" என்ற ஒற்றை எழுத்துக்குள்ள இத்தனை அர்த்தம் இருக்கோ?

சரி நானாவாது உள்நீரோட்டம் என்ரெல்லாம் சொல்லி இருக்கேன், செந்தழல் என்ன செய்தார் அவர் பாட்டுக்கு தேமே என்று வந்து iit,iim என்று உதாரணம் மட்டுமே அளித்தார், நடப்பதை சொல்வது உள்நோக்கமா... என்ன கொடுமை சார் இது!

நான் கூட பதிவர் மனதில் இருக்கும் உள்நீரோட்டம் என்று சொல்லாமல் பதிவின் உள் நீரோட்டம் என்று சொல்லி இருக்கிறேன். அப்பதிவின் கருத்து இன்னும் ஆலயங்கள் அனைவருக்கும் பொது என்று நிலை வராத போது , அரசை குறை சொல்லி வெளியேற்ற சொல்வது சரியல்லவே.

எப்படிப்பார்த்தாலும் கண்ணபிரான் பதிவு பெரும்பாண்மை மக்களுக்கு விரோதமானது என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.

ஆலயங்களில் காசு இருப்பவன், இல்லாதவன் என ஏற்றத்தாழ்வு பார்ப்பது மட்டும் அவருக்கு வருத்தம் அளிக்கிறது , அதில் தவறில்லை, ஆனால் எத்தனையோ பேருக்கு கோவில் நுழைவு, தேர்வடம் தொட கூட அனுமதி இல்லாத நிலைக்கு என்ன வருத்தம் தெரிவித்தார்.அப்படிப்பட்ட வேறு எல்லாம் இல்லை என்று மூடி மறைத்தார்.

நான் யாரையும் பார்ப்பனர் என நிறுவ ஆசைப்படுவதில்லை, கடவுள் பெயரால் நடக்கும் மோசடிகளை ஒரு பக்கமாக நியாயப்படுத்துவதைப்போலவும், அரசு மட்டுமே காரணம் என்பது போலவும் பேசுவதை தான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

Mohandoss said...

//அவரவர் மனக்கோயில் கட்டிக்கிட்டா ஏன் அடுத்தவன் கோயிலுக்குப் போகோனும்-னு, பக்தியில்லாத எனக்கே புரியும் போது, தொண்டில் சிறந்த நாயன்மார்களுக்குத் தெரியாதா என்ன?
பாவம் எதுக்கு வயசான காலத்துல, கையில் உழவாரப்படை ஏந்திக் கொண்டு, கோயில் கோயிலாகப் போயி, சீர்திருத்தனும்? எல்லாரும் மனக்கோயில் கட்டி வழிபடுங்கள் ன்னு சொல்லிட்டு, நாவுக்கரசர் பெருமானும் தானும் ஒரு மனக் கோயில் கட்டிக்கிட்டு வழிபட்டிருக்கலாமே! பாவம் அவருக்கும் ஏன் இது புரியாமல் போனதுன்னு தான் தெரியலை! :-)//

உங்களுக்கு நாயன்மார்கள் புனிதபசுக்களாகவோ புனித பிம்பங்களாகவோ இருக்கலாம், அதைப்பற்றிய பிரச்சனை எனக்கு இல்லை.

ஆனால் நாயன்மார்கள் புரிதல்களோடு நிற்றலும், நாயன்மார்களுக்குத் தெரியாதது எதுவுமே இருக்க முடியாது என்பன போன்றவைகள், ரங்கராஜன் சாரே சொல்லிட்டார் என்று ஒதுங்கிக் கொள்வதைப் போல் தான். நாயன்மார்களின் பாடல்களை உதாரணமாகக் காட்டலாம். அவர்கள் சுஜாதாவின் கதைகளை உதாரணம் சொல்வார்களாயிருக்கும்.

பூசலார் 'கதை' சொல்வது மனக்கோயில் கட்டுவது எத்தனை அரிதானது என்று நினைத்து நினைத்து வியக்கிறேன் :)

குமரன் (Kumaran) said...

//இதுக்கு என்ன சொல்லப்போறார் ?//

இப்படி செந்தழல் இரவி கேட்டதில் 'இதற்கு இரவிசங்கர் வந்து என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறார்?' என்ற பொருள் தொனித்ததாக எனக்குத் தோன்றியது. அதனால் தான் அவரையும் சேர்த்துக் கொண்டேன். அம்புட்டுத் தான். மற்றபடி அவர் சொன்னதில் எனக்கு எந்த வித மறுப்பும் இல்லை.

சாதி ஏற்றத்தாழ்வுகள் கோவில்களில் இருப்பதையும் அதனை நீக்க வேண்டும் என்பதையும் இரவிசங்கர் பல முறை அவருடைய இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லியிருப்பதாகத் தான் எனது புரிதல் - அவருடைய இடுகைகளைத் தொடர்ந்து படித்தவன் என்ற முறையில். உங்களுக்கும் என்னுடைய புரிதல் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான். அதனால் உங்கள் புரிதலைக் குறை சொல்லவில்லை. உங்களுடைய இந்த இடுகையால் இனி மேல் அவருடைய இடுகைகளையும் இனி மேல் கவனமாகப் படிக்கிறேன் - உங்கள் புரிதல் எனக்கும் ஏற்படுகிறதா என்று பார்க்கிறேன். என்னுடைய இடுகைகளையும் கவனித்து எழுதுகிறேன் - என்னையும் அறியாமல் தவறான கருத்துகள் வந்துவிடாமல் இருக்க.

இன்னொரு டிஸ்கியும் போட வேண்டும். என் முந்தைய பின்னூட்டம் 'பார்ப்பனராய் பிறப்பதே தவறு' என்பது போல் தொனிக்கிறது. அப்படி சொல்லவில்லை. பார்ப்பனராய் பிறப்பதே தவறு என்றோ பார்ப்பனராய்ப் பிறந்தவர் எல்லோருமே ஒரு தனிப்பட்ட கருத்து தான் கொண்டிருப்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை; சொல்லவும் விழையவில்லை.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணனுக்கு ஒரு நன்றியையும் சொல்லிக் கொள்ள விழைகிறேன். இரவிசங்கருடன் ஒத்த கருத்துடையவர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள் (இருக்கிறோம்). அவர்கள் (நாங்கள்) எல்லாம் அவரை இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கிப் பேசாமல் ஒதுங்கிச் செல்லும் போது 'நாத்திகமும் ஆத்திகமும் என் இரு கண்கள்' என்று சொன்னாலும் நாத்திகக் கருத்துகளையே அதிகம் பேசி வரும் நீங்கள் இவ்வளவு தூரம் புரிந்து கொண்டு பேசுவது 'எனக்குச் சரி என்று படுவதை எதற்காகவும் தயங்காமல் வெளிப்படையாகச் சொல்வேன்' என்ற உங்களது நிலைப்பாட்டைக் காட்டுகிறது. மிகவும் நன்றி. மிகவும் நன்றி.

கண்மணி/kanmani said...

நீங்க சொல்றபடி தனியார் வசம் இருப்பது குறிப்பிட்ட சாதிகளுக்கு சாதகமாக பேகும்/போகலாம் என்பது வரை சரி.ஆனால் உண்டியல் வைத்து கொள்ளையடிப்பது கட்டண தரிசனம் எல்லாம் இரண்டு சாராரிடமும் உண்டு.அதற்காக உண்டியலில் போடுவதை விட [நானெல்லாம் போடுவதில்லை போட்டாலும் 5 ,10 தான்]லட்சக் கணக்கில் கட்டுக்கட்டாக போடுபவர்கள் தாங்களாகவே பல தர்ம காரியத்திற்கோ அல்லது அனாதை இல்லங்களுக்கோ அல்லது ஏதோ விதத்தில் தேவைப்படுவோருக்கோ செய்யலாம்.அதே நேரம்
கோயில் உண்டியல் நம்பியே இருக்கும் கோயில்களும் பராமரிப்பு குறைவானவையும் பல இருக்கின்றன.
அதனால் அது வேனுமா வேண்டாமா என்பதை விட அதில் மிகப் பெரிய தொகை போடாமல் நேரிடையாக பயன்படுத்தலாம்.
மனசுல எல்லோருமே கோயில் கட்டித்தான் வச்சிருக்கோம்.
ஆனா நடைமுறைக்கு அது ஒத்து வராதே.
ஆமாம் நீங்க எந்த சாமிக்கு மனக் கோவில் கட்டியிருக்கீங்க வவ்வால்:)

கண்மணி/kanmani said...
This comment has been removed by the author.
Anonymous said...

//ஆழமாக என்றால் எப்படி கிணற்றுக்குள் உட்கார்ந்து படிப்பாரா?//

வவ்வாலின் அறிவு புல்லரிக்க வைக்கிறது! அது சரி, கோவில்களின் இருண்ட மூலைகளில் தலைகீழாகத் தொங்கும் பிராணி அல்லவா? இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனெவே ஒரு பதிவரிடம் இதுபோல பேசித்தான் "_த்தியம்" என்று உங்களைப் பற்றி தனி பதிவே போட்டார். இப்போது இன்னொருவர் ராமநாதபுரம் மாடு என்கிறார். ஹூம்...

வவ்வால் said...

மோஹன்,
நன்றி!

//நாயன்மார்களுக்குத் தெரியாதது எதுவுமே இருக்க முடியாது என்பன போன்றவைகள், ரங்கராஜன் சாரே சொல்லிட்டார் என்று ஒதுங்கிக் கொள்வதைப் போல் தான். நாயன்மார்களின் பாடல்களை உதாரணமாகக் காட்டலாம். அவர்கள் சுஜாதாவின் கதைகளை உதாரணம் சொல்வார்களாயிருக்கும்.//

எப்படிங்க இதுலாம்... சொல்ல வந்ததை நாசூக்காக சொல்லிட்டிங்க! :-))

நானாயிருந்தால் எதுனா காட்டமான வார்த்தைகளைப்போட்டு சொதப்பி இருப்பேன்! :-))

நன்றாக சொன்னீர்கள்!
//பூசலார் 'கதை' சொல்வது மனக்கோயில் கட்டுவது எத்தனை அரிதானது என்று நினைத்து நினைத்து வியக்கிறேன் :)//

இங்க தான் நீங்க நிக்குறிங்க!(உட்கார்ந்தாலும் தவறில்லை) :-))
----------------------------------
குமரன்,
////இதுக்கு என்ன சொல்லப்போறார் ?//

இப்படி செந்தழல் இரவி கேட்டதில் 'இதற்கு இரவிசங்கர் வந்து என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறார்?' என்ற பொருள் தொனித்ததாக எனக்குத் தோன்றியது.//

எப்படிங்க குமரன் உங்களால மட்டும் இப்படிலாம் சிந்திக்க முடியுது, நீங்க ஒரு சிந்தனை சிற்பிங்க :-))

கதைல எழுதும் போது பைக் மீது பாய்ந்து 80 களில் சீறீனான் என்று எழுதுவாங்க , உடனே நீங்க அவன் என்ன புலியானு கேட்பிங்க போல! :-))

எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுபிடித்தால் அது எங்கோ போய் முடியும், செந்தழல் சொன்னது ரொம்ப சாதாரணம், just an example! அதில் எல்லாம் உள்ளர்த்தம் கற்பித்து பெருசாக்க தேவை இல்லை!

//சாதி ஏற்றத்தாழ்வுகள் கோவில்களில் இருப்பதையும் அதனை நீக்க வேண்டும் என்பதையும் இரவிசங்கர் பல முறை அவருடைய இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லியிருப்பதாகத் தான் எனது புரிதல் -//

ஆனால் நான் குறிப்பிடும் பதிவில் அப்படி ஒரு தொனி இல்லை, அதை விட சமூக சம உரிமை அளிக்கும் வாய்ப்பிற்கு மூடு விழா காணும் யோசனையை முன்னிறுத்தியதால் அப்பதிவிற்கான ஒரு மாற்றாக மட்டுமே இப்பதிவு.

* கோவி வழக்கம் போல அவர் கருதுக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார், அதனை நானும் வரவேற்கிறேன்.

என்னைப்பொருத்த வரை எல்லாக்கருத்துக்களையும் வரவேற்பேன், எனக்கு ஒத்தவற்றை ஏற்பேன், அதற்காக மற்றவற்றை புறக்கணிக்க மாட்டேன்!அனைத்தையும் கவனிப்பேன். மறு மொழி மட்டுறுத்தல் இல்லாதிருப்பதில் இருந்தே அது புரிந்திருக்கும்.

----------------------------------
கண்மணி,
நன்றி!
//ஆனால் உண்டியல் வைத்து கொள்ளையடிப்பது கட்டண தரிசனம் எல்லாம் இரண்டு சாராரிடமும் உண்டு.//

ஆனால் இப்போது அரசிடம் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு, சரியான நடவடிக்கை இல்லாதிருப்பதற்கு காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான். அரசு நிர்வாகத்தை சீர் திருத்தம் செய்ய சொல்லலாம். ஆனால் அதற்காக அரசே இருக்க கூது என்றால் அதன் விளைவு மோசமாக இருக்கும்.

//நடைமுறைக்கு அது ஒத்து வராதே.//

நடை முறை என்பது என்ன, அக்காலத்தில் விதவைகள் எல்லாம் வெள்ளைப்புடவை கட்டணும் சொன்னாங்க இன்னிக்கு யார் கட்டுறாங்க சொல்லுங்க, பூ வைக்காமல் , பொட்டு வைக்காமல் இருக்கலாம், அதுவும் செய்ய தேவை இல்லை எதுக்கு செய்யனும், கணவன் என்று ஒருவன் வரும் முன்னரே பெண்ணுக்கு பூவோடும், பொட்டோடும் பந்தம் உண்டு, ஆனால் இடையில் வந்து நடுவில் போன கணவனுக்காக அதை ஏன் துறக்கணும், இப்படி நடை முறைகள் என்பது எல்லாம் நாமா முட்டாள் தனமாக ஏற்படுத்திக்கிட்டது தான்.

சரி வராதுனு சொல்லிக்கிட்டு இருக்காம முயற்சி செய்துப்பார்க்கணும்.

ஒவ்வொரு புகழ்ப்பெற்ற கோவிலும் தற்போது ஒரு வணிக , பணம் கொழிக்கும் கேந்திரமாக தான் பார்க்கப்படுகிறது, கோவிலுக்கு உள்ளும் சரி அதன் சுற்றுப்புறத்திலும் வரும் பக்தர்களிடம் அதிகப்பட்சம் பணம் கறக்கத்தான் அனைவரும் பார்க்கிறார்கள், அவர்களை அந்த பகவான் தண்டிக்க மாட்டாரா என்ன?
-------------------------------------

அனானி,
//வவ்வாலின் அறிவு புல்லரிக்க வைக்கிறது! அது சரி, கோவில்களின் இருண்ட மூலைகளில் தலைகீழாகத் தொங்கும் பிராணி அல்லவா? //

என் அறிவு எப்போதுமே புல்லரிக்க தான் வைக்கும் அத்தனை விசேடம்!

இருண்ட மூலைகளில் இருப்பதால் தான் வெளிச்சத்தில் நடக்கும் தவறுகள் என் கண்ணுக்கு தெரிகின்றன!

என்னைப்பற்றி பதிவு போட்டா நான் இல்லை கவலைப்படணும் நீர் ஏன் கவலைப்படுறிங்க ஓய் , இப்படிலாம் கவலை பட்ட உடம்புக்கு என்னாவுறது!

உண்மைல என்னைப்பற்றி அப்படி பதிவு போட்டவரின் மன நிலை சரியா இருக்கானே எனக்கு சந்தேகம் , வலைப்பதிவை விட்டு ஓடிப்போறேன்னு அல்பமாக வித்தைக்காட்டியவர் அல்லவா , ஓடிப்போறேன்னு சொல்லிட்டு என்னாத்துக்கு இங்கே இருக்கார்னு நீர் ஏன் கேட்கலை ஓய்!

ஆமாம் அனானியா வந்து கேட்கும் போதே இத்தனைக்கேள்வினா வலைப்பதிவரா இருந்தா எத்தனை கேட்பீர்!சிக்கிரம் பதிவு ஒன்றை ஆரம்பித்து தில்லா கேளும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன், கோவி.அண்ணா,
இணையம் மட்டுமே தவிர, பிறிதொரு தளத்தில் நாம் மிகவும் பழகவில்லையாயினும்,
அடியேனைப் பற்றிய உங்களின் உண்மையான புரிதலுக்கும், மற்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

//ஆனால் அவர் பார்ப்பனர் இல்லை என்று அவர் மறுப்பதை வைத்து அறிகிறேன்//

குமரன், இதை இவ்வளவு விளக்கிச் சொல்ல வேண்டுமா என்ன?
சமய இலக்கியங்கள் பற்றி நான் எழுதுவதாலேயே அப்படி வவ்வால் நினைத்து விடுவார் என்று நான் எண்ணவில்லை!

வவ்வால் என்னுடைய மற்ற தமிழ் ஆர்வலப் பதிவுகளுக்கும் வந்து நல்ல கருத்துக்கள் பல சொல்லி உள்ளார்! மணவாள மாமுனிகள் பதிவில் நாம் மூவருமே சில விவாதங்களும் செய்தோமே!

செந்தழல் ரவி, என்னுடைய திருக்கோவிலூர்-ஆழ்வார் பாசுரப் பதிவுகளுக்கு பல படங்களை அவரே எடுத்து ஆர்வமாகவும் அனுப்பி வைத்துள்ளார்!

இங்கு வவ்வால் வைக்கும் பார்வையைத் தனிமனிதத் தாக்குதலாக நான் பார்க்கவில்லை! அனானி ஒருவர் வந்து அடிக்கடி என் பெயரைச் சொல்வதால் சில கேலிச் சொற்கள் தொனிக்கிறதே தவிர...மற்றபடி பதிவின் நோக்கம் நேர்மையானது என்று தான் கருதுகிறேன்!

@வவ்வால்
உங்கள் இடுகையின் முக்கிய நோக்கம், நிர்வாகம் தன்னாட்சிக்குச் சென்றால், கடந்த காலச் சாதிப் பாகுபாடுகள் மீண்டும் தலைதூக்கி, பாடுபட்டுக் கிடைத்த உரிமைகளை அழித்து விடும் என்று அஞ்சுகிறீர்கள்!
அது எனக்கும் புரிகிறது!

ஆலயங்களில் சாதி புகுந்து விடுமோ என்ற ஒரே ஒரு பரிமாணம் மட்டும் நீங்கள் காண்பது!
என் பதிவில் நான் சொல்ல வந்தது, சாதிப் பரிமாணம் மட்டுமன்றி, ஆன்மிகத்தில் வணிக நோக்கு, சமூக மேம்பாட்டை ஆலயங்கள் கொள்ளாதது, தமிழ் வழிபாட்டை இன்றும் கேட்டு வாங்கக் கூடிய நிலையில் இருப்பது, நெரிசல் தவிர்த்த கூட்ட மேலாண்மை என்று பல பரிமாணங்கள்!
அவ்வளவு தான் நம் இரு பதிவுக்கும் வேறுபாடுகள்!

நான் சாதிப் பாகுபாட்டைப் புறந்தள்ளி, மற்ற விடயங்கள் மட்டுமே பேசியதாக நீங்கள் கருதுகிறீர்கள்! ஆனால் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம் எப்படி அறுநூறு ஆண்டுக்கு முன்பே சாத்தியமானது என்றும் சொல்லியுள்ளேன்! அர்ச்சகர்களை மட்டுமே பேசிக் கொண்டிராமல், ஓதுவார்கள், நாதசுரக் கலைஞர்கள் என்று அவர்கள் நல்வாழ்வு குறித்தும் கருத்துக்கள் வைத்துள்ளேன்! மாற்று மதத்தினரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளேன்!

இரு பதிவுகளுக்கும் அடிப்படை மாறுபாடுகள் அதிகம் இல்லை! நீங்க ஒரு பரிமாணத்தை மட்டுமே தொட்டுச் சென்றுள்ளீர்கள்! நான் இன்னும் சில பரிமாணங்களை எடுத்துப் பேசி இருக்கிறேன்! அவ்வளவு தான்!

வவ்வால் said...

கண்ணபிரான் ரவிசங்கர்,

புரிதலுக்கு நன்றி!
மீண்டும் சொல்கிறேன் இது உங்களுக்கு எதிரான கருத்தல்ல உங்கள் பதிவுக்கு எதிரான மாற்றுக்கருத்து.

//ஆன்மிகத்தில் வணிக நோக்கு, சமூக மேம்பாட்டை ஆலயங்கள் கொள்ளாதது, தமிழ் வழிபாட்டை இன்றும் கேட்டு வாங்கக் கூடிய நிலையில் இருப்பது, நெரிசல் தவிர்த்த கூட்ட மேலாண்மை என்று பல பரிமாணங்கள்!
அவ்வளவு தான் நம் இரு பதிவுக்கும் வேறுபாடுகள்! //

சாதிய சக்திகள் மேலோங்கி விடும் என்பதை அதிகம் அழுத்தி சொல்லியுள்ளேன், நீங்கள் சொன்ன மற்ற பரிமாணங்களும் கவனத்தில் கொண்டேன், ஆனால் எப்படி தனியார் வசம் போனால் மேம்படும் என்றும் கேள்விக்குள்ளாக்கியுள்ளேன். நீங்கள் சொல்வது ஒரு நம்பிக்கை தான் மேம்பட வாய்ப்பு மிக குறைவே, அரசையே ஏய்ப்பவர்கள் அந்த மேலாண்மை குழுவையும் ஏய்ப்பார்கள் என பல முறை சொல்லியுள்ளேன் பார்க்கவில்லையா?

மேலும் அந்த மேலாண்மைக்குழுவினை எதன் அடிப்படையில் தேர்வு செய்வது, mba படிப்பு என்ற அடிப்படையிலா?(ஆன்மீக ஈடுபாடு, உயர்குடி வகுப்பு, பணக்காரர், சமஸ்கிருதம், வேதம் தெரிந்தவர் என்றா) அப்படி எனில் mba க்கள் வேலை செய்யும் எல்லா நிறுவனமும் லாபம் ஈட்ட வேண்டூமே ஏன் பல நஷ்டம் அடைகிறது என்றும் கேட்டுள்ளேன்.

இவற்றை மூன்றாவது முறையா மீண்டும் கேட்கிறேன். இது குறித்து நீங்கள் எதுவும் கருத்தே சொல்லவில்லை.

உங்களது மற்றப்பரிமாணங்களின் வெற்றிப்பெறும் சாத்தியக்கூறுகள் பற்றி எதுவும் நீங்கள் சொல்லாமல் , சர்வரோக நிவாரணி தனியார் மயமாக்கல் என்று சொல்லி செல்வது தான் நகைச்சுவையே!

மற்ற எல்லா வகையிலும் தனியார் மயம் ஆலய மேம்படுத்துதலில் தோல்வி அடைந்தாலும் சாதிய ஆதிக்க குழுக்கள் தலை தூக்குவதில் மட்டும் கண்டிப்பாக வெற்றிப்பெறும் என்று நான் கருதுவதாலேயே எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

வவ்வால்,

அரசுமயமோ, தனியார்மயமோ நிர்வாகம் சீர்குழைந்தால் எல்லாமும் சாக்கடைதான்.
:)

அரசுமயம் என்பது தனியார்மயாமான கட்சித்தலைவர்களின் பிடியிலும் அரசியலிலும் தானே நடக்கிறது ?

வவ்வால் said...

கோவி,
//அரசுமயமோ, தனியார்மயமோ நிர்வாகம் சீர்குழைந்தால் எல்லாமும் சாக்கடைதான்.
:)//
அப்படி சொல்லுங்க, நான் அதான் கோவிலும் வேண்டாம் உண்டியலும் வேண்டாம்னு சொல்லி இருக்கேன்! :-))

//அரசுமயம் என்பது தனியார்மயாமான கட்சித்தலைவர்களின் பிடியிலும் அரசியலிலும் தானே நடக்கிறது ?//

ஆனாலும் ரொம்ப ஊழல் செய்தால் மக்கள் மவுனமாக தேர்தலில் அதன் பலனை தந்து விடுவார்கள் என்று ஒரு அச்சம் இருக்கும்.

முன்னர் திருச்செந்தூர் முருகன் வேல் குறித்து தேர்தல் காலங்களில் பிரச்சாரமே நடந்தது, அது அக்காலத்தில் கலைஞருக்கு பின்னடைவை தந்தது.எனவே ரொம்ப கையை வைத்தால் மக்கள் கவனித்துக்கொள்(ல்)வார்கள்!

Anonymous said...

//கோவி,
//அரசுமயமோ, தனியார்மயமோ நிர்வாகம் சீர்குழைந்தால் எல்லாமும் சாக்கடைதான்.
:)//
அப்படி சொல்லுங்க, நான் அதான் கோவிலும் வேண்டாம் உண்டியலும் வேண்டாம்னு சொல்லி இருக்கேன்! :-))//

அரசு நிர்வாகமும் தான் சீர்குலைந்திருக்கிறது. அப்போ அரசாங்கமும் வேண்ட்டாம், போலீசும் வேண்டாம் என்று சொல்வீர்கள் பொலிருக்கிறதே! நாங்களும் ஸ்மைலி போட்ருக்கோமில்ல :-)

enRenRum-anbudan.BALA said...

//
அரசு நிர்வாகமும் தான் சீர்குலைந்திருக்கிறது. அப்போ அரசாங்கமும் வேண்ட்டாம், போலீசும் வேண்டாம் என்று சொல்வீர்கள் பொலிருக்கிறதே! நாங்களும் ஸ்மைலி போட்ருக்கோமில்ல :-)
//
I think I know who this ANONY is ;-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவற்றை மூன்றாவது முறையா மீண்டும் கேட்கிறேன். இது குறித்து நீங்கள் எதுவும் கருத்தே சொல்லவில்லை//
என் நண்பர் ஒருவருடன் இது குறித்து நீண்ட தொலைபேசி விவாதம் நடைபெற்றது! உங்கள் அச்சம் நியாயமானது தான் எனினும் தேவையற்ற ஒன்று!
தன்னாட்சி நிறுவனம் பற்றிய அமைப்பு அளவிலான நன்மை/தீமைகள் இன்னொரு பதிவில் விரிவாகச் சொல்கிறேன்!
இப்போ மிகவும் சுருக்கமாக...

மீண்டும் சொல்கிறேன் "மாநில அளவிலான" தன்னாட்சி நிறுவனம்!
//மேலும் அந்த மேலாண்மைக்குழுவினை எதன் அடிப்படையில் தேர்வு செய்வது//
உயர் கல்வித் தகுதி, பணி அனுபவம், சமூகப் பங்களிப்பு, மதச் சார்பின்மை - இவை தான் தகுதிகள்!
மேலும் தன்னாட்சி நிறுவனத்தில் சாதீயக் கொடுமைகளைக் கண்காணிக்க என்றே தனி அலுவலர் இருக்க வேண்டும்! இட ஒதுக்கீடும் செய்து கொள்ளலாம்! உங்கள் கவலையும் தீரும்! மற்ற முதலீட்டு நிபுணர், ஆகம நிபுணர் எல்லாம் advisorகள் மட்டுமே!
ஒரு உதாரணத்துக்காக மட்டுமே பேர்களைச் சொல்கிறேன்! இன்போசிஸ், E&Y என்று தன்னாட்சி அமைப்புக்கு உட்பட்டு custodianகளாக செயல்படத் திட்டம் உருவாக்குங்கள்!
அன்றாட நிர்வாகம் சமச்சீராக நடக்கும்! அவர்கள் custodian fees மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்!
மற்றபடி ஆலய நிதி ஆதாரங்கள், வரவு செலவு வரைவு என்று அனைத்தும் ஒழுங்கு பெறும்! traceability & accountability கிடைக்கும்!
அரசின் மக்கள் நலப் பணிகளுக்கு ஆலயங்கள் இவ்வளவு கொடுத்தன என்று வெளிப்படையாகத் தெரிய வரும்!

இதனால் அரசுக்குத் தான் இன்னும் நன்மை! அன்றாட ஆலய நிர்வாகத்தில் ஒவ்வொரு சிறுசிறு பிரச்சனையும் அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியாது!
தன்னாட்சி நிறுவனத்துக்கோ அது தான் வேலையே! ஆலயத்துக்கு வரவேண்டிய பாக்கிகள் ஒழுங்காக வசூலிக்கப்படும்! லோக்கல் அரசியல் எல்லாம் தனியாரிடம் செல்லாது!
அர்ச்சகர் ஆகட்டும், கணக்காளர் ஆகட்டும், வாட்ச்மேன் ஆகட்டும் - அனைவரும் சாதாரணத் தனியார் பணியாளர்கள் தான்!
அதற்கு மேல் யாருக்கும் ஆலயத்தில் அதீத உரிமைகள் இல்லை! அர்ச்சகர் மகன் என்று எல்லாம் எவனும் நுழைய முடியாது இது போன்ற நிர்வாகத்தில்! ஒரு தொழிற்சாலை போல் நடக்கும் நிர்வாகம்!

ஆலயங்களால் ஆன்மீகமும் சமூகத்தில் வளரவேண்டும்! ஒரு அரசு இதை agendaவாக வைத்துக் கொள்ள முடியுமா?
தன்னாட்சியோ இதைக் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் செயல்படும்! TTD ஓரளவு சுமாரான எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாடுகள் கொள்கை அளவில் அப்படியே இருக்கும்!
திருவிழாக் காலங்களில் MLA, MP உட்பட விஐபி தரிசனம் கிடையவே கிடையாது என்று அடித்துச் சொல்ல முடிகிறதே, எப்படி? இதைப் பழனியில் இப்போது செய்ய முடியுமா?
(சாதாரண காலங்களில் பாகுபாடு தரிசனம் செய்வதும் தவறு தான்! அதான் TTDஐச் சுமாரான எடுத்துக்காட்டுன்னு சொன்னேன்!)

முக்கியமான ஒன்று! கொள்கை அளவிலான மாற்றத்தின் போது, தன்னாட்சியைக் கலைக்க அரசுக்கு முழு அதிகாரம் உண்டு! தன்னாட்சி என்பது நிர்வாகத்துக்காக மட்டும் தான்!

இன்னொன்று: கண்டதேவி தேர்வடம், கல்யாண மண்டபம் கொடாமை - இவை எல்லாம் பத்தாயிரத்துள் ஒன்றான நிகழ்வுகள்! இதில் சாதி-அரசியல் கலப்பு தான் முக்கியப் பிரச்சனை! வெறுமனே சாதி ஆதிக்கம் என்றால் அரசு என்றோ தீர்த்திருக்காதா? இதைப் போல் அர்ச்சகரை எம்.எல்.ஏ அடித்தது, குன்றக்குடி அடிகளாரைக் கட்சித் தலைவர் கோயிலில் சொல்லாடியது என்று என்னாலும் அங்கொன்று இங்கொன்று நிகழ்வுகளைச் சொல்லமுடியும்!
தமிழ்நாட்டில் பத்தாயிரம் பெருங் கோயில்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எத்தனை ஆலயங்களில் சாதியைக் காட்டி உள்ளே நுழையத் தடை செய்ய முடியும்?
பின்னி விட மாட்டார்களா? எந்தவொரு அர்ச்சகனுக்கு அந்தத் "தில்" இருக்கு இப்போது?
சாதியால் மக்களையும் அடியார்களையும் விலக்கி வைக்க இனி முடியவே முடியாது! தந்தை பெரியாரின் சீர்திருத்தம் irreversible reform!

கடைசியாக: //MBA படித்தவர்கள் நடத்தும் நிறுவனங்கள் தோல்வி காண்பதில்லையா?//
அவை எல்லாம் வணிக நிறுவனங்கள்; சந்தைப் பொருளாதாரம், பொருளீட்டல் என்று வரும் போது ஏற்படும் தோல்விகள்!
இங்கோ வெறும் ஆலய நிர்வாகம் மட்டுமே! சமச்சீர் நிர்வாகத்தை நிபுணர்கள் சரியாகச் செய்வார்கள்! அரசுக்குத் தான் தலைவலி தீர்ந்த நன்மை!

இப்போதைக்கு இத்துடன் அமைகிறேன்.

என் பதிவில் பல பரிமாணங்கள் இருந்ததால், இந்த ஒன்றை மட்டும் இவ்வளவு விளக்கமாக அங்குச் சொல்ல இடம் போதவில்லை!
அதற்கு உங்கள் பதிவில் இடங் கொடுத்தமைக்கு நன்றி வவ்வால்!
குமரன், கோவி.அண்ணா - உங்களுக்கு மீண்டும் நன்றி!
செந்தழலார், பாரி அரசு, டிபிசிடி, மோகன்தாஸ், அனானி ஐயா, இன்னும் பலர் - கருத்தாடல்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!

வவ்வால் said...

அனானி,
//அரசு நிர்வாகமும் தான் சீர்குலைந்திருக்கிறது. அப்போ அரசாங்கமும் வேண்ட்டாம், போலீசும் வேண்டாம் என்று சொல்வீர்கள் பொலிருக்கிறதே! நாங்களும் ஸ்மைலி போட்ருக்கோமில்ல :-)//

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வேண்டாம் ஒரு தனியார் மேலாண்மை குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும், போலீஸ் வேண்டாம் தனியார் செக்கியூரிட்டி போதும் என்று நீங்க சொன்னா இரண்டும் வேண்டாம் மக்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்வேன் :-))

நாங்களும் சிரிப்பான் போடுவோம்ல!
------------------
எ.எ.பாலா,
துப்பறியும் புலியா இருப்பிங்க போல, நான் ரொம்ப எல்லாம் மண்டைய உடைத்துக்கொள்வதில்லை அனானிகள் பற்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வவ்வால், இந்தப் பின்னூட்டக் கருத்தை அனுமதியுங்கள்!

//மோகன்தாஸ் said...
உங்களுக்கு நாயன்மார்கள் புனிதபசுக்களாகவோ புனித பிம்பங்களாகவோ இருக்கலாம், அதைப்பற்றிய பிரச்சனை எனக்கு இல்லை//

பதிவில், இந்தச் சொல்லாடலுக்கு மட்டும் என் கடும் கண்டனங்கள்! :-(

தமிழ்நாட்டில் தமிழ் உய்ய வந்தவர்களைப் புனிதப் பசுக்கள் என்றோ பிம்பங்கள் என்றோ சொல்லாடுவது அறம் அன்று!
நாயன்மார்களே எல்லா விடயங்களிலும் அத்தாரிட்டி ஆகிவிட மாட்டார்கள் என்று பல வழிகளில் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம்! சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் - குறள் தான் நினைவுக்கு வருகிறது!

//பூசலார் 'கதை' சொல்வது மனக்கோயில் கட்டுவது எத்தனை அரிதானது என்று நினைத்து நினைத்து வியக்கிறேன் :)//

வியந்து கொண்டே இருங்கள்! :-)

ஊனுடம்பு ஆலயத் திருமூலரும், நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தமான தாயுமானவரும்,
பூசலார் அன்புள்ளத்தையும் அறிந்தவர்கள் - அவர் ஆலயங்கள் புரந்ததையும் நெறி பெருக நடந்ததையும் சேர்த்தே அறிவார்கள்!

பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!!

வவ்வால் said...

கண்ணபிரான் ரவிசங்கர்,
நன்றி!

உங்கள் அயாராத முயற்சிக்கு பாராட்டுக்கள், நீங்கள் அதீதமான நேர்மறை சிந்தனைக்கொண்டவராக இருக்கிறீர்கள் அதுவும் ஆன்மீகத்தில், எப்படியோ நேர்மறை எண்ணங்கள் மிகுந்தால் சரி.

ஆனால் யதார்த்தம் என்பதை மறந்து விடுகிறீர்கள்! நான் யதார்த்தவாதி!

//மீண்டும் சொல்கிறேன் "மாநில அளவிலான" தன்னாட்சி நிறுவனம்!//

only one apex body at statelevel? அவர்களுக்கு எப்படி கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் உடனடியாக வந்து சேரும், அல்லது எப்படி இருக்கும் 1000 கணக்கான கோவில்களையும் மாநில தலைமையகத்தில் அமர்ந்து கொண்டே பார்ப்பார்கள்.

எனவே நிர்வாகத்திற்காக மாவட்ட அளவில் ஒன்றைக்கொண்டு வருவார்கள், அவர்கள் சொல்வது தன் நிலவரம் என்று ஆகிவிடும், பின்னர் இப்போது இருப்பது போல தான்!

//ஒரு உதாரணத்துக்காக மட்டுமே பேர்களைச் சொல்கிறேன்! இன்போசிஸ், E&Y என்று தன்னாட்சி அமைப்புக்கு உட்பட்டு custodianகளாக செயல்படத் திட்டம் உருவாக்குங்கள்!
அன்றாட நிர்வாகம் சமச்சீராக நடக்கும்! அவர்கள் custodian fees மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்!
மற்றபடி ஆலய நிதி ஆதாரங்கள், வரவு செலவு வரைவு என்று அனைத்தும் ஒழுங்கு பெறும்! traceability & accountability கிடைக்கும்! //

நீங்கள் சொல்வது போல உத்தோமத்தர்களின் கைகளில் நிர்வாகம் போகிறது என்றே வைத்துக்கொள்வோம்,அதுவும் இன்போசிஸ் நாரயணமூர்த்தி தேசியக்கீதம் பாடுவதில் கூட விருப்பம் இல்லாதவர், எனவே அவர் ரொம்ப உத்தமராக தான் இருக்க வேண்டும் :-))

தமிழகத்தில் ஒரு 1000 கோவில்கள் இருக்கு, ஆனால் அவற்றில் எத்தனைக்கோவில்கள் அதிக வருமானம் ஈட்டும்,விரல் விட்டு எண்ணிவிடலாம் அவற்றை.

அப்போ மீதி இருக்க 900 சொச்சம் கோவில்களை எப்படி நிர்வகிப்பார்கள் அந்த மேலாண்மை மக்கள், இந்த கோவில்களின் வருமானத்தில் இருந்து எடுத்துப்போட்டு தானே, அப்படியும் சரியான அளவுக்கு நிதி இல்லை எனில் அந்த மேலாண் மக்கள் சொந்த பணத்தில் இருந்து செலவு செய்வார்களா?

இப்போது அரசு நல்ல வருமானம் உள்ள கோவில் நிதிகளை சரியான முறையில் பயன்ப்படுத்தவில்லை என்று தோன்றலாம், ஆனால் அரசு வருமானம் இல்லாத மற்ற கோவில்களையும் தாங்கிப்பிடிக்கிறது, எண்ணற்ற ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கிறது, கோவில் நிதியில் விரயம் ஆனது போக மீதியில் வைத்து சமாளிக்க முடியுமா, அரசு எப்போது எல்லாம் நிதி கோவில்களுக்கு தேவையோ அப்போது எல்லாம் பொது நிதியில் இருந்து அளித்து காப்பாற்றி வருவதை மறந்து விட வேண்டாம்.

மேலும் நீங்கள் சொன்ன மேலாண் குழு எப்படி ஊழியர் செலவினை சரிக்கட்டும், கோவில் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை பெற்று என்றால் , இத்தனைக்காலமாக அவற்றை அனுபவித்தவர்கள் கோர்ட்க்கு சென்று ஜவ்வாக இழுப்பார்கள், அதுவரைக்கும் செலவுக்கு என்ன செய்யும் அந்த குழு?

புதிதாக ஒன்றும் செய்ய மாட்டார்கள் எல்லாவற்றுக்கும் கட்டணம் என்று போட்டு விடுவார்கள் இலவச தரிசனமே இருக்காது!

கோவிலை சுற்றி ஷாப்பிங்க் மால், மல்டி பிளெக்ஸ் , தீம் பார்க் கட்டுவார்கள், இப்படிலாம் வருமானத்தை பெருக்கி என்னப்பயன். அதே சமயம் வருமானம் இல்லாத கோவீலை சீண்டிக்கூடப்பார்க்க மாட்டார்கள்!


மேலும் வருமானம் இல்லாத கோவில்களை நடத்துவதில் ஆர்வமும் காட்ட மாட்டார்கள், அப்படி இருந்தால் நஷ்டத்தில் நடக்கும் பொது துறை நிறுவனங்களை அரசு விற்க முயன்ற போது வாங்கி லாபகரமாக நடத்தி இருக்கமாட்டார்களா?

அதை விட நீங்கள் சொன்ன குழுவில் இருப்பவர்களின் இஷ்ட தெய்வம் என்றெல்லாம் பார்ப்பார்கள், சிலர் வைணவராக இருந்தால் வைணவ தலங்களுக்கு முக்கியத்துவம் தருவார், சைவராக இருந்தால் சைவத்தலங்களுக்கு முக்கியத்துவம் தருவார்.

tvs group கூட தமிழகத்தில் சில பழுதுப்பட்ட கோயில்களை புணர் நிர்மாணம் செய்வதில் ஈடுப்பட்டது ஆனால் வைணவக்கோயில்களாகப்பார்த்து தான் செய்தார்கள்.

எனவே அந்த குழு மிக தன்னிச்சையாக , நேர்மையாக செயல் பட வாய்ப்பு என்பது மிக மிக குறைவே. இது எதிர் மறை எண்ணம் என்று பார்க்காதீர்கள் உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்.

இதை எல்லாம் நான் நுனிப்புல் மேய்ந்து சொன்னதாக வைத்துக்கொண்டாலும் சரி , அரசை விட தனியார் சிறப்பாக செயல்படுவார்கள் எப்போது எனில் வருமானம் வர வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே, சேவை மனப்பாண்மையில் செய்யப்படும் காரியங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள், அவர்களுக்கு, அவர்கள் நிறுவனத்திற்கு பெயர் கிடைக்க என்றால் சிறிது செலவு செய்வார்கள்.

அப்படி உண்மையில் சேவை மனப்பான்மை இருக்குமெனில் ஒவ்வொரு பிரபல நிறுவனமும் ஒரு விளையாட்டு வீரரை தத்து எடுத்து செலவுகளை செய்து ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யலாமே , ஆனால் கிரிக்கெட் வீரர்களை தங்கள் பிராண்ட் அம்பாசடராக காட்டத்தானே போட்டிப்போடுகின்றன! தங்களுக்கு ஆதாயம் இல்லை எனில் ஆர்வம் காட்டமாட்டார்கள் அந்த பெரும்புள்ளிகள்!

//வவ்வால், இந்தப் பின்னூட்டக் கருத்தை அனுமதியுங்கள்!//

இங்கே எல்லாக்கருத்துக்களுக்கும் இடம் உண்டு!

மோஹன் சொன்னதில் பெரிய குற்றம் எதுவும் இல்லை என்பதே எனதுக்கருத்து, ஆனால் நீங்கள் அதீதமான பக்திக்கொண்டவர் எனில் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும்.

மனக்கோவில் கட்டுங்கள் என்பது ஒரு உதாரணமாக சொன்னது, ஆனால் அது ரொம்ப அரிது, இயலாது நாயன்மார்களுக்கே அனைவருக்கும் அது சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னது, மற்ற மக்களை விட நாயன்மார்களை மிக உயர்திப்பிடிக்கும் செயல்! உயர்த்திப்பிடித்தாலும் பரவாயில்லை, மற்றவர்களை தாழ்த்துவது ஏன்?

கொக்கென நினைத்தாய கொங்கணவா என்று இல்லத்தரசி ஒருவர் முனிவரைப்பார்த்துக்கேட்டாளாம், அவள் முனிவர் தான் தன்னை விட சிறந்தவர் என்ற தாழ்வுமனப்பாண்மை வைத்திருந்தால் அப்படிக்கேட்பாளா?

நம் பக்தி எப்படியும் நாயன்மார்கள் பக்தியை விட குறைவாகத்தான் இருக்கும் என்று நம்புவது தாழ்வுமனப்பாண்மையே.நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் பக்தி என்ன செய்யும்.

Anonymous said...

//நம் பக்தி எப்படியும் நாயன்மார்கள் பக்தியை விட குறைவாகத்தான் இருக்கும் என்று நம்புவது தாழ்வுமனப்பாண்மையே.நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் பக்தி என்ன செய்யும்.//

ஐயா வவ்வால், உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலை?

ரவிசங்கர், உங்களுக்கும் ஒரு வார்த்தை. தாங்கள் வவ்வாலிடம் கற்பூர வாசனையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். சீக்கிரம் திரும்புங்கள். மாதவிப் பந்தலில் தேன்மழை பொழியட்டும். கண்ணன் பாட்டிலே புல்லாங்குழல் கேட்கட்டும்.

போதும். இனி, வீணடிக்க நேரமில்லை!

வவ்வால் said...

அனானி,
என்னடா ரொம்ப சீரியசாக பேசிக்கிட்டு இருக்கோமே காமெடியா எதுவுமே இல்லையேனு நினைத்தேன் , அந்த குறையைப்போர்க்க வந்த சமயசஞ்சீவி நீர் தான் :-))

//ரவிசங்கர், உங்களுக்கும் ஒரு வார்த்தை. தாங்கள் வவ்வாலிடம் கற்பூர வாசனையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.//

ஆஹா சொல்லவே இல்லை அவர் கற்பூர வியாபரம் செய்வதை :-))

//மாதவிப் பந்தலில் தேன்மழை பொழியட்டும்.//

நாட்டுல வான்மழைக்கே வழியைக்காணோம், இதில தேன்மழையா ,இதுலாம் ரொம்ப ஓவராக தெரியலை :-))

அனானி அப்படி மெய்யாலுமே தேன்மழை பொழிந்தா எனக்கு ஒரு புட்டில புடிச்சு வந்து கொடுப்பா... நீ நல்லா இருப்ப ... உனக்கு சொர்க்கவாசல் தொறக்கும்! :-))

Anonymous said...

//ஆஹா சொல்லவே இல்லை அவர் கற்பூர வியாபரம் செய்வதை//

ஆஹா! confirmed-ஆகத் தெரிந்துவிட்டது...வவ்வாலுக்கு கற்பூர வாசனைத் தெரியவில்லை என்று!

-த்தியம் ஆச்சு, மாடு ஆச்சு, இப்போ இது வேறயா? அடக் கடவுளே!

சேச்சே...உங்கள் சீரியஸ் பதிவுகளை விடவா அனானியின் கமெண்ட்ஸ் காமெடியாக இருக்கிறது? அனாலும் ரொம்ப குறும்பு சார் உங்களுக்கு!

அடுத்த காமெடிப் பதிவை சீரியஸாக எதிர்பார்க்கிறோம்!

சுரேகா.. said...

இதுக்கு தொடர்பா பதிவு ஒண்ணு ..

http://surekaa.blogspot.com/2008/01/blog-post_24.html

வவ்வால் said...

அனானி,

கண்டிப்பாக என்னை விட உங்களுக்கே நகைச்சுவை உணர்வு அதிகம்! :-))(அடுத்தவன் கஷ்டப்பட்டு கொடுப்பதை சுரண்டி உண்ணும் மனிதர்களுக்கு சிரிக்க தெரியாதா என்ன)

//ஆஹா! confirmed-ஆகத் தெரிந்துவிட்டது...வவ்வாலுக்கு கற்பூர வாசனைத் தெரியவில்லை என்று!//

எனக்கு எதுக்கு கற்பூர வாசனை தெரியனும், தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை, வியர்வை வாசத்தில் ஊறிய எனக்கு பழம் கஞ்சி , வெங்காயம் இதன் வாசனையே பிடிக்கும். பசித்தவனுக்கு கஞ்சி வாசனையை விட கற்பூர வாசனை சுகம் அளிக்குமா, அளிக்கும் எனில் நான் அதையும் நுகர தயார்!

கற்பூர வாசனை வைத்து பிழைப்பு ஓட்டும் கும்பலுக்கு மட்டுமே அது பிடிக்கும் :-))(அவர்களும் கற்பூர வாசனை போதும் சோறு வேண்டாம்னு சொல்ல மாட்டாங்கிறாங்களே அது ஏங்க, சூடத்தை கொளுத்திக்காட்டி மணி ஆட்டினாக்கூட தட்டுலக்காசு போடனும்னுல கேட்கிறாங்க)
-----------------------
சுரேகா
நன்றி,
உங்கள் அவசியம் பதிவையும் பார்க்கிறேன்!

Mohandoss said...

நான் அத்தனை சீக்கிரம் எனக்கான ரிப்ளை வந்திருக்கா என்று பார்ப்பதில்லை அதனாலேயே பல சமயங்களில் வேகமான ரிப்ளை போடுவதுமில்லை.

//தமிழ்நாட்டில் தமிழ் உய்ய வந்தவர்களைப் புனிதப் பசுக்கள் என்றோ பிம்பங்கள் என்றோ சொல்லாடுவது அறம் அன்று! //

அறத்தை எல்லாம் பற்றி பேசினால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, நாத்தீகம் பேசுவதே பாவம் உங்களுக்கு கொதிக்கின்ற எண்ணைச்சட்டி காத்திருக்கின்றது என்பதன் நவீன வடிவம் தான் உங்கள் பின்னூட்டம்.

-------------

ரவி நான் ஒப்புக்கொள்கிறேன் இன்னும் இனிய தமிழில் தேனில் குழைத்தெடுத்த வார்த்தைகளால் ஒப்பேற்றியிருக்கலாம் தான். ஆனால் இதுதான் என் மொழி!

வவ்வால் said...

மோஹன்,
//அறத்தை எல்லாம் பற்றி பேசினால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, நாத்தீகம் பேசுவதே பாவம் உங்களுக்கு கொதிக்கின்ற எண்ணைச்சட்டி காத்திருக்கின்றது என்பதன் நவீன வடிவம் தான் உங்கள் பின்னூட்டம்.
//
:-)) கலக்கல்!

ஆம் அவரவர்க்கு அவரவர் மொழி தான் கை கூடும், இப்படி எழுதி இருக்கலாம், அப்படி எழுதி இருக்கலாம் என்று அடுத்தவரை நாம் வரையரை செய்தல் தவறே.அப்படிலாம் செய்தால் எல்லா எழுத்தும் ஒரே போல உருமாறி அடையாளம் இழந்து விடும்.(பின்னூட்டத்துக்கே இலக்கியம் போல இத்தனை அலப்பரையா என்று சிலர் கேட்கக்கூடும்)

ராஜ நடராஜன் said...

கொஞ்ச வருசத்துக்கு முன்னால் ஒரு தாடிக்காரப் பெரியவர்கிட்ட கேட்ட தர்க்கங்கள் எல்லாம் இங்கே கண்கூடாக அலசப் படுவதில் மகிழ்ச்சி.சில சமயம் இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தொலைக்காட்சி விளம்பரங்களில் மரக்கறி,கடலுணவுகள் என்ற வார்த்தைகளை அறியும்போது புதியதாக இருக்கும்.ஸ்மைலி என்றே அறியப்பட்ட வார்த்தைக்கு சிரிப்பான் என்ற பதம் காணும்போது புதிய வார்த்தையாக எனக்குப் பட்டாலும் ஸ்மைலி பெண்பாலாகத் தோன்றுவதால் சிரிப்பி சரியாகப் படுமோ எனத் தோன்றுகிறது.

வவ்வால் said...

நட்டு
நன்றி!
//கொஞ்ச வருசத்துக்கு முன்னால் ஒரு தாடிக்காரப் பெரியவர்கிட்ட கேட்ட தர்க்கங்கள் எல்லாம் இங்கே கண்கூடாக அலசப் படுவதில் மகிழ்ச்சி.//

எனக்கு இன்னும் தாடி சரியா வளர மாட்டேங்குது, ஒரு அடர்த்தியே இல்லாமல் நாலைந்து முடிகள் மட்டும் வளர்வதை தாடினு சொல்லிக்கலாமா? இன்னும் ஒரு 30-40 வருஷம் அப்புறம் நானும் கண்டிப்பாக தாடிக்கார பெரியவராக மாறிடுவேன் :-))(தாடி வளர்ந்திடும் அதுக்குள்ள என்ற நம்பிக்கையில் சொல்றேன்)

//ஸ்மைலி என்றே அறியப்பட்ட வார்த்தைக்கு சிரிப்பான் என்ற பதம் காணும்போது புதிய வார்த்தையாக எனக்குப் பட்டாலும் ஸ்மைலி பெண்பாலாகத் தோன்றுவதால் சிரிப்பி சரியாகப் படுமோ எனத் தோன்றுகிறது.
//

மைதிலி போல ஸ்மைலியும் பொண்ணு பேருனு நினைச்சுட்டிங்களா, அப்போ ஜெட்லீ , புருஸ்லீ எல்லாம் பொண்ணு பேரா :-))

சிரிப்பான் , சிரிப்பி எதை மக்கள் அதிகம் பயன்படுத்துறாங்களோ அது சரியானதாக எடுத்துக்கொள்ளப்படும் என்றே நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//மைதிலி போல ஸ்மைலியும் பொண்ணு பேருனு நினைச்சுட்டிங்களா, அப்போ ஜெட்லீ , புருஸ்லீ எல்லாம் பொண்ணு பேரா :-))//

எங்க உட்கார்ந்துகிட்டு இப்படியெல்லாம் யோசிப்பீங்க?

Anonymous said...

very very late comment...but post and comment section great..I like the style of vovaal's writing.




by- Maakkaan.