Friday, February 08, 2008

வள்ளல் பாரி வேள் வரலாறு!

யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு.

யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,தாமதத்திற்கு மன்னிக்கவும், பலப்புத்தகங்களிலும் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் போட்டுள்ளார்கள்,இப்பொழுது ஓரளவு சுருக்கமாக சொல்லும் அளவுக்கு தான் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவற்றை மட்டும் இப்போது சொல்கிறேன், மேலதிக தகவல்கள் கிடைத்ததும் பின்னர் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் பாரிப்பற்றி மேலதிக தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கவும் பதிவில் சேர்த்துவிடலாம்.

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே ...நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.

முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.

அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.

அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.

நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.

இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.

மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.

காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

மற்றொரு மகளுக்கு என்னவாயிற்று என்பது சரி வர தெரியவில்லை, அவ்வையார் அப்பெண்ணுக்கு ஒரு குறு நில மன்னனுடன் மணம் முடித்தார் என்றும் சொல்கிறார்கள்.

பின்குறிப்பு:

பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

28 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
பாரி வள்ளல் வரலாறு பற்றி தெரிய வேண்டி போது; பொதுவாக ஒரு பதிவிட்டும்; மின்னஞ்சல் விலாசம் தெரிந்தோருக்கு நேரடியாகவும் மடலிட்டேன்.
பலர் தெரியவில்லை;சிலர் தேடித் தருகிறோம்; என்றார்கள்.அனைவருக்கும் நன்றி
அதில் குமரன்...அதை "உடுக்கை இழந்தவன் கை" எனும் தொடராக விரிவாக எழுதி;3 பாகம் வந்து விட்டது.படித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது உங்கள் வரலாற்றுச் சுருக்கமும் கிடைத்துள்ளது.
பொறுப்புடன் தேடிப்;பகிர்ந்தமைக்கு இருவருக்கும் மிக்க நன்றி.
எல்லாவற்றையும் படித்து; பின்னூட்டத்தில் வரும் மேலதிக தகவல்களையும் படித்துச் சேர்த்து;
எனக்குத் தேவையான வகையில் எடுக்கவுள்ளேன்.
பல தகவல்கள் எனக்கு மிகப் புதியன.
மீண்டும் உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி!!

பிறைநதிபுரத்தான் said...

பாரியின் உருக்கமான கதையை மிகவும் சுருக்கமாக தந்ததற்கு மிக்க நன்றி!

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்களே - அதற்கு உதாரனமாக கூறலாம்- பாரியின் கதையை.

இல்லை என்று கூறாத பாரியின் இரக்ககுணமே - அவன் இறக்கவும் காரணமாயிற்றே.

முல்லைக்கு தேர் கொடுத்தவன் - பெற்ற பிள்ளைக்கு வாழ்வை கொடுக்க முடியவில்லையே!

இரக்கத்தோடு கூடிய - வீரம் இருந்திருந்தால் - இத்தகைய இழி நிலையை தவிர்த்திருக்கலாமே!

இவனை வள்ளல் என்பதா அல்லது வாழும் வகையற்றவன் என்பதா?

Thamiz Priyan said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...

கபிலர் பாரி பற்றி புறநானுற்றில் பாடிய செய்யுள்கள் சில :
105. தேனாறும் கானாறும்!
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட,
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
106. தெய்வமும் பாரியும்!
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.
107. மாரியும் பாரியும்!
‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.
108. பறம்பும் பாரியும்!
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,
‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.
109. மூவேந்தர் முன் கபிலர்!
அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.
110. யாமும் பாரியும் உளமே!
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.
111. விறலிக்கு எளிது!
அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

Thamiz Priyan said...

பாரியின் இரு மக்களின் கையறு நிலையை சிறப்பாக நாலே வரிகளில் விவரிக்கும் கபிலரின் வரிகள்.
//112. உடையேம் இலமே!
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!//

இந்த சூழல் பல இலக்கியவாதிகளால் எடுத்துக்காட்டுக்காக எடுத்தாளப்படக் கூடியது.

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

பாரிவேளைப் பற்றி யோகன் ஐயா கேட்டுக் கொண்டதற்கிணங்க தேடிப் பார்த்ததில் கிடைத்த புறநானூற்றுப் பாடல்களின் அடிப்படையில் நான் எழுதி வரும் தொடர்கதையைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் விருப்பமும் நேரமும் இருந்தால் படித்துப் பாருங்கள். அதே போல் விருப்பமும் நேரமும் இருந்தால் பின்னூட்டுங்கள். :-) (படிங்க பின்னூட்டம் போடுங்கன்னு சொல்றதுக்கு கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. நான் படிக்கிறேன் குமரன் - ஏதாவது சொன்னா உங்களுக்குப் பிடிக்காது அதனால் சொல்லலைன்னு சொல்லிவிடுவீர்களோன்னு). :-)

கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் கடையேழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகிறார்களா வவ்வால்? அப்படி என்றால் முற்சங்க காலங்களில் வாழ்ந்த வேறு வள்ளல்களை இப்படி தொகுத்து அழைத்திருக்கிறார்களா?

கடைச்சங்க காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று படித்த நினைவுண்டு. இங்கே பாரி வேளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது எப்படி தெளிவாகத் தெரிந்தது? எந்த தரவின் படி யார் இதனை நிறுவியது? சொல்லுங்கள்.

பாரியின் ஆட்சியில் 300 கிராமங்களே இருந்தன என்ற செய்திக்கும் தரவு இருக்கிறதா?

மூவேந்தர்கள் முற்றுகை இட்டதாக நான் கண்ட புறநானூற்றுப் பாடல்களின் மூலம் அறிகிறேன். ஆனால் முற்றுகைக்கு காரணம் மகற்கொடை மறுத்தது என்றல்லவா அந்தப் பாடல்கள் சொல்கின்றன. பாரியின் புகழைக் கண்டு மூவரும் முற்றுகை இட்டனர் என்பதற்குத் தரவு இருக்கிறதா?

கபிலர் கிளிகளுக்குப் பயிற்சி கொடுத்து நெற்கதிர்களைக் கொண்டு வரச் செய்தார் என்ற கதை சுவையாக இருக்கிறது. எனக்குப் புதிய கதை இது. இதனைக் கதை என்று நீங்கள் குறித்ததால் இதற்குத் தகுந்த தரவு இல்லை என்று நினைக்கிறேன். சரியா?

கபிலரின் பாடல்களில் நீங்கள் சொன்ன தேனடை, வேரில் பழுத்த பலா, கிழங்குகள், மூங்கில் நெல் போன்ற உணவுப் பொருட்களைப் பற்றியும், நீங்கள் பாணராகவும் விறலியர்களாகவும் சென்றால் அவன் தன்னையும் அவன் நண்பனான என்னையும் கூட உங்களுக்கு பரிசிலாகத் தருவான் என்ற குறிப்பும், ஏற்கனவே எல்லா ஊர்களையும் பாரி பரிசில்களாகக் கொடுத்துவிட்டான்; இப்போது இருப்பது மலையும், மாளிகையும், அவனும் நானுமே என்று சொல்வதும், இருக்கின்றன. ஆனால் இந்த எல்லாப் பாடல்களிலும் மூவேந்தர்களை இழிவு படுத்தும் உணர்வும் பாரியைப் புகழும் உணர்வும் தான் மிகுதியாகத் தோன்றுகிறது - மூவேந்தர்களுக்கு வழி சொன்னதாகத் தோன்றவில்லை. அதனால் கபிலரே பாரியின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆனாரா என்று தெரியவில்லை. எனக்கென்னவோ பாரியின் வீழ்ச்சிக்கு அவனது குடிப்பெருமை தான் காரணம் என்று தோன்றுகிறது. அதனைப் பற்றி நீங்கள் பேசவே இல்லையே. ஏன்?

மூவேந்தர்களும் பாணரைப் போல் வேடமிட்டுச் சென்றார்கள் என்பதற்குத் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? நான் பார்த்தவரையில் மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரி இறந்தான் என்ற செய்தி மட்டுமே இருக்கிறது - எந்த வகையில் சூழ்ச்சி செய்தார்கள் என்ற செய்தி இல்லை. உங்களுக்கு அந்தத் தரவு கிட்டியிருந்தால் சொல்லுங்கள்.

அதே போல் நாட்டையும் உயிரையும் மூவேந்தப் பாணர்கள் கேட்டார்கள் என்பதற்கும் ஏதேனும் தரவுகள் இருக்கின்றனவா? அல்லது அது கிடைத்த செய்திகளை வைத்துப் பிற்காலத்தவர்கள் உருவாக்கிய வரலாற்றுப் புனைவா?

திருமுடிக்காரியோ அவன் மக்களில் ஒருவரோ அங்கவை சங்கவை இருவரையும் மணந்ததாக நான் படித்த குறிப்பு சொல்கிறது. ஒருவரை மட்டும் மணந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அது வியப்பாக இருக்கிறது. இருவருக்கும் மணமான பின்பே கபிலர் குன்றில் கபிலர் உயிரைத் துறந்தார் என்று படித்தேன்.

காரியின் மேல் மூவேந்தர்கள் படையெடுத்து அவனைக் கொன்ற செய்தியை இப்போது தான் அறிகிறேன்.

ஒளவையார் பாரியின் மக்கள் இருவரையும் தெய்வீகன் என்ற ஒரு சிற்றரசனுக்கு மணமுடித்து வைத்தார் என்ற கதையையும் படித்திருக்கிறேன். ஜெமினியின் ஒளவையார் திரைப்படத்திலும் அப்படியே காட்டுகிறார்கள். ஆனால் அதற்கு இலக்கியத் தரவுகளை இதுவரையில் பார்க்கவில்லை.

இங்கே தரவுகளை நான் கேட்டது நீங்கள் சொன்னவற்றை மறுப்பதற்கு இல்லை வவ்வால். இது வரை எனக்குக் கிடைத்த தரவுகளை வைத்துத் தொடர்கதை எழுதுகிறேன். உங்களுக்குக் கிடைத்த தரவுகளையும் பெற்றுக் கொண்டால் நான் எழுதும் வரலாற்றுப் புனைவில் அதிகம் புனைவு இல்லாமல் மிகுதியாக வரலாறே இருக்கும் படி அமையும். அதனால் கேட்கிறேன்.

நறுமுகையே என்று தொடங்கும் பாடலையும் தாருங்கள். இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.

குமரன் (Kumaran) said...

நான் எடுத்து வைத்திருக்கும் பாடல்களில் சிலவற்றைத் தமிழ் பிரியன் இங்கே பட்டியல் இட்டுவிட்டார். :-)

Thamiz Priyan said...

//இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.//
இப்போது பிரான்மலை என்று அழைக்கப்படும் இந்த மலையில் முஸ்லிம் பெரியவர் ஒருவரின் சமாதியும் உள்ளது. இது மலையின் உச்சியில் உள்ளது. தரையில் இருந்து சுமார் 7 கி.மீ தூரம் உள்ள மலை. மலைஉச்சியில் சில கடைகளையும், தங்கும் சத்திரத்தையும் பார்த்த ஞாபகம் உள்ளது. (மலையேறி தான்). :)

Thamiz Priyan said...

குமரன் (Kumaran) said...
//பாரியின் ஆட்சியில் 300 கிராமங்களே இருந்தன என்ற செய்திக்கும் தரவு இருக்கிறதா? //

கபிலர் கூறும் இந்த கூற்றை வைத்து முடிவு செய்திருக்கலாம். வரலாற்று ரீதியாக தெளிவான கல்வெட்டு போன்ற ஆதாரங்கள் இல்லாத போது இது தானே ஆதாரம்.
//முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;//

குமரன் (Kumaran) said...

நன்றி தமிழ் பிரியன். நானும் கபிலரின் அந்த வரிகளைப் படித்திருக்கிறேன். எடுத்துச் சொன்னதற்கு நன்றி. நான் தரவாகக் கேட்கும் போது இப்படி மூல நூலில் வரிகளைத் தான் கேட்கிறேன். நன்றிகள்.

வவ்வால் said...

யோகன்,
நன்றி, மேலும் விவரங்கள் கிடைத்தால் அதையும் சேர்த்து வெளியிடுகிறேன்.வரலாறு,தமிழ் இரண்டிலும் ஆர்வம் எனக்கு உள்ளதால் நீங்கள் சொன்னது அதை ஊக்குவித்தது என்றே சொல்வேன், உங்களால் நானும் கொஞ்சம் தெரிந்துக்கொண்டேன், எனவே உங்களுக்கும் நன்றி!
-------------------------
பிறைநதிபுறத்தான்,
//இவனை வள்ளல் என்பதா அல்லது வாழும் வகையற்றவன் என்பதா?//

சரியாக சொன்னீர்கள், வள்ளல் தன்மையில் சிறந்தவன் என்ற பெயரை வாங்க அனைத்தையும் இழந்தவன், ஆனால் இப்படி வெகு சிலருக்கே சாத்தியம், மற்றவர்களால் இயலாத காரியம் இது.
----------------------------

தமிழ்ப்பிரியன்,
மிக்க நன்றி, நிறைய தகவல்களை அளித்துள்ளீர்கள்.இது போன்று பாடல்களை வைத்து சொல்ல முடியவில்லை எனக்கு, அது கொஞ்சம் காதை சுற்றி மூக்கை தொடுவது போல எனக்கு தெரிந்தது, எனக்கும் கொஞ்சம் சோம்பல் என்றும் சொல்லலாம்.
உரை நடை வடிவில் சுருக்கமாக கதையை சொன்னால் படிப்பவர்கள் பயப்பட மாட்டார்கள் என்று எண்ணினேன், கூடுதல் விவரங்களாகவும் , குமரன் கேட்டது போல தரவுகளாகவும் உங்கள் பாடல் அமைந்து விட்டது.

நான் செய்ய தவறிய, சோம்பல் பட்டக் காரியத்தை செய்து எனது வேலையை குறைத்து விட்டீர்கள் நன்றி!
------------------------

குமரன்,
நன்றி,

இந்தப்பதிவைப்போடும் போது தான் உங்கள் பதிவையும் படித்தேன், பிறகு பின்னூட்டம் இடலாம் என்றும் இருந்தேன்.3 பாகமாக இருந்ததால் மொத்தமாக படித்து விட்டேன், எனவே எங்கே கேள்விக்கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன் :-)), இன்னும் தொடர்கிறது போல இருக்கே.

நீங்கள் கேட்ட சில தரவுகளை தமிழ் பிரியன் அளித்துள்ளார்.

//அப்படி என்றால் முற்சங்க காலங்களில் வாழ்ந்த வேறு வள்ளல்களை இப்படி தொகுத்து அழைத்திருக்கிறார்களா? //

நீங்களே சொன்னது போல கடை ஏழு வள்ளல்கள் இவர்களே. அதே போல இன்னும் இரண்டு பிரிவும் உள்ளது.

முதலேழு வள்ளல்கள்,இடையேழு வள்ளல்கள், பின்னர் வந்தவர்களே கடை ஏழு வள்ளல்கள்.

//கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது எப்படி தெளிவாகத் தெரிந்தது? எந்த தரவின் படி யார் இதனை நிறுவியது? சொல்லுங்கள். //

அக்காலத்தில் சரியாக காலத்தை குறிக்க இயலாது ஆனால் சில புறநானூற்றுப்பாடல்கள், பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து அகியவைக்கொண்டு ஒரு மன்னரின் காலம் கணிக்கலாம். மேலும் அவரது சம காலத்தவராக சொல்லப்படும் மற்ற மன்னர்கள் கொண்டும் கூற முடியும், அப்படி ஒரு முடிவுக்கு வந்த காலமே இரண்டாம் நூற்றாண்டு என்பதும், தோராயமாக முதல் - இரண்டாம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவராக இருக்கலாம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

//ஆனால் முற்றுகைக்கு காரணம் மகற்கொடை மறுத்தது என்றல்லவா அந்தப் பாடல்கள் சொல்கின்றன. பாரியின் புகழைக் கண்டு மூவரும் முற்றுகை இட்டனர் என்பதற்குத் தரவு இருக்கிறதா?//

பாரி ஆண்டப்பகுதி அப்போதையா பாண்டிய தேசத்தின் கீழ் வந்தது, மகற்கொடை தரவில்லை எனில் அவன் மட்டும் தானே போர் தொடுக்க முடியும் ஏன் மூவேந்தர்கள் கூடி வந்தார்கள் அதுவும் ஒரு சிற்றரசன் மீது?

பாரி மீது படை எடுக்க காரணம் மூவேந்தர்களையும் தாண்டி அவன் புகழ் பரவியதும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

//நான் பார்த்தவரையில் மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பாரி இறந்தான் என்ற செய்தி மட்டுமே இருக்கிறது - எந்த வகையில் சூழ்ச்சி செய்தார்கள் என்ற செய்தி இல்லை. உங்களுக்கு அந்தத் தரவு கிட்டியிருந்தால் சொல்லுங்கள்.//

பின் குறிப்பில் இதனையே நானும் சொல்லி இருப்பேன், கபிலர் கூறியது மட்டும் தான் இப்போதுள்ளது. ஒருவேளை பாணர்களாக வேடமிட்டு சென்று கோட்டைக்கதவை திறக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

//திருமுடிக்காரியோ அவன் மக்களில் ஒருவரோ அங்கவை சங்கவை இருவரையும் மணந்ததாக நான் படித்த குறிப்பு சொல்கிறது. ஒருவரை மட்டும் மணந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

ஒருவரை மட்டும் மணந்ததாக the history of south india by. k.a.neelakanda shastri எழுதிய நூலில் காணப்படுகிறது.

மேலும் அவ்வையார் ஒரு பெண்ணை மணம் முடித்து வைத்தார் என்று வேறு எப்போதோ படித்திருந்தேன்.

நீங்கள் சொல்வது போல அவ்வையாரே இரண்டு பெண்ளையும் மணம் முடித்து வைத்திருந்தால் கபிலர் என்ன செய்தார்?

நீங்கள் தரவுகளை கேட்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் தற்போது கைவசம் நூல்கள் இல்லை, நான் என்ன செய்தேன் என்றால் , நூலகத்திற்கு போய் நாலைந்து நூல்களைப்புரட்டிப்படித்தேன், எதையும் குறிப்பு எடுத்துக்கொள்ளவில்லை,(எப்பொழுதுமே குறிப்புகள் எடுக்க மாட்டேன் , அவ்வளவு சோம்பேறித்தனம்) படித்ததை என் நினைவில் இருந்தே மீண்டும் ஒருவாறு தொகுத்து எழுதி விட்டேன்.

மீண்டும் போய் சரியான குறிப்புகளுடன் வருகிறேன் :-))

அரை பிளேடு said...

படித்தேன். பாரியை பற்றி அறியாத செய்திகள் அறிந்தேன். நன்றி.

வவ்வால் said...

அரைப்பிளேடு.
நன்றி!

குமரன் (Kumaran) said...

வவ்வால்.

குறிப்புகளுடன் மீண்டும் வரும் வரை காத்திருக்கிறேன். தமிழ்பிரியன் தந்த பாடல்கள் எல்லாம் ஏற்கனவே தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் கிடைத்துவிட்டன. மொத்தம் 20 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்துத் தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். 3 பகுதிகளில் 3 பாடல்கள் தான் வந்திருக்கின்றன. அதனால் இன்னும் எத்தனை பகுதிகள் வரலாம் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். :-)

என் பதிவில் வரலாற்றுப் புனைவாக எழுதுவதால் நீங்களும் தமிழ் பிரியனும் அரைபிளேடும் மற்றவர்களும் படித்து கருத்துகளைச் சொல்லவேண்டும். மேற்சென்று இடிக்க வேண்டியிருந்தால் அதனையும் செய்ய வேண்டும். நன்றிகள். (இது சொ.செ.சூ.வான்னு தெரியலை. ஆனாலும் உண்மையாகவே வேண்டிக்கிறேன். :-) )

உண்மைத்தமிழன் said...

வவ்வால்ஜி, அங்கவை, சங்கவை இருவரையும் ஒருவருக்கே மூதாட்டி ஒளவையார்தான் திருமணம் செய்து வைத்ததாக நான் காலம் காலமாக பல்வேறு புத்தகங்களில் படித்து வந்திருக்கிறேன்.

மற்றபடி பாரியைப் பற்றி நீங்களும், குமரன் எழுதுவதும் என்னை மாதிரி அரைவேக்காடுகளுக்கு புதிய வரலாற்றுப் புத்தகம்.

தொடருங்கள்.. இணையமே ஒரு பள்ளிக்கூடம் போல் இருக்கிறது..

Anonymous said...

மக்களோட தேவை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்...மேலும் டார்கெட் ஆடியன்ஸ் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சா இன்னும் நிறைய விஷயம் சேர்க்கலாமே..அதுக்குத்தான்...ஐயம் நாட் எக்ஸ்பெக்டிங் கும்மி தேர்...:)))

வவ்வால் said...

குமரன்,

மீண்டும் நூலகம் போகணும் ஆனா எப்போ போவேன் என்று தெரியாது ஆனால் சீக்கிரமாக போய்டுவேன், அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சினை, சும்மாவே கிண்டுவேன், எதுனா கைல அகப்பட்ட விடுவனா :-))

//3 பகுதிகளில் 3 பாடல்கள் தான் வந்திருக்கின்றன. அதனால் இன்னும் எத்தனை பகுதிகள் வரலாம் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். :-) //

ஒரு பாட்டுக்கு ஒரு பதிவா, உங்களைத்தான் மெகா சீரியல் எடுக்க சன் டீவில தேடுறங்களாம் :-))

//இது சொ.செ.சூ.வான்னு தெரியலை. ஆனாலும் உண்மையாகவே வேண்டிக்கிறேன். :-) )//

என்னைப்பார்த்தா சூன்யம் வைக்கிறவன் போலவா தெரியுது :-))

நான் அடியார்க்கு அடியான்... மக்கள் தொண்டனுங்கோவ்!

வவ்வால் said...

தேவரீர் ஸ்ரீமான் உண்மைத்தொண்டர் அவர்களே,

//மற்றபடி பாரியைப் பற்றி நீங்களும், குமரன் எழுதுவதும் என்னை மாதிரி அரைவேக்காடுகளுக்கு புதிய வரலாற்றுப் புத்தகம்.

தொடருங்கள்.. இணையமே ஒரு பள்ளிக்கூடம் போல் இருக்கிறது..//

என்ன இப்படி சொல்லிட்டிங்க, எம் பெருமான் முருகனுக்கு மயில் ரைடிங்க் சொல்லிக்கொடுத்த குருவே நீங்கள் தானே.அப்படி இருக்கும் போது அரைவேக்காடு என்று தாங்கள் சொல்வது தங்கள் அவை அடக்கம்!

அனைத்தும் அறிந்த தாங்களா இங்கே படிப்பது, அபச்சாரம் ...அபச்சாரம், நான் அடியேன் சின்னப்புத்திக்காரன் எதாவது உளரி வைப்பேன். அதையும் நீங்கள் பாடமாக கருதுவது உங்கள் உயர்ந்த எண்ணம்! ஆனாலும் எனது தமிழ் உளரல்கள் தங்கு தடை இன்றி தொடரும் , எல்லாம் உங்கள் சித்தம்!

உண்மைத்தமிழன் said...

//மீண்டும் நூலகம் போகணும் ஆனா எப்போ போவேன் என்று தெரியாது ஆனால் சீக்கிரமாக போய்டுவேன், அப்புறம் உங்களுக்குதான் பிரச்சினை, சும்மாவே கிண்டுவேன், எதுனா கைல அகப்பட்ட விடுவனா :-))//

கொடுத்து வைச்சவரு.. இப்படி லைப்ரரிக்குப் போறது.. படிக்கிறது.. படிச்சதை வைச்சு கொஸ்டீன் கேக்குறது.. வந்த பதிலுக்கு திரும்பவும் கொஸ்டீன் கேக்குறது.. மேல மேல கொஸ்டீன் கேக்க, திரும்பவும் லைப்ரரிக்குப் போறது.. ஒரு வயசுக்கு வந்த இந்திய வாலிபன் இப்படியே பொழுதைக் கழிச்சிட்டிருந்தா நாடு எப்படி முன்னேறும்..?

//என்னைப ்பார்த்தா சூன்யம் வைக்கிறவன் போலவா தெரியுது :-)) நான் அடியார்க்கு அடியான்... மக்கள் தொண்டனுங்கோவ்!//

ஆஹா.. என்னே ஒரு தன்னடக்கம்.. புல்லரிக்கு வவ்வால்ஜி.

வவ்வால் said...

செந்தழல்,
//ஐயம் நாட் எக்ஸ்பெக்டிங் கும்மி தேர்...:)))//

வழக்கமாக நிறைய பின்னூட்டங்கள் பார்த்தவர் அதே எண்ணத்தில் அதிகம் பின்னூட்டம் எதிர்ப்பார்க்கிறிங்களோனு தான் அதை சொன்னேன். பலரும் படிச்சுட்டு கருத்து சொல்லாம போய்டுவாங்க அதை வைத்து , யாரும் படிக்காம எதுக்கு எழுதனும்னு முடிவுக்கு வரக்கூடாதுனே அதை சொன்னேன்.எண்ணிக்கைப்பார்க்காம , கருத்தை மட்டும் பார்த்து நீங்க பாட்டுக்கு தொடருங்கனு சொல்ல வந்தேன், வேறெதுவும் இல்லை, தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

என்னைப்போல நிறைய பேர் உங்கள் பதிவை வழக்கமாக படிப்பார்கள், எனவே உற்சாகமாக தொடருங்கள்!

வவ்வால் said...

தேவரீர் ஸ்ரீமான் உண்மைத்தமிழர்,

என்ன ஒரு வேகம் என்ன ஒரு வேகம், உங்கள் பின்னூட்டம் உங்கள் அப்பன் முருகன் வேல் போல பாய்ந்து வந்துடுச்சே :-))

//ஒரு வயசுக்கு வந்த இந்திய வாலிபன் இப்படியே பொழுதைக் கழிச்சிட்டிருந்தா நாடு எப்படி முன்னேறும்..?//

இந்தியாவை முன்னேற்ற தாங்க நான் நூலகம் போறேன் , நீங்க கன்னிமரா, தேவநேயப்பாவணர் நூலகம் எல்லாம் போய்ப்பாருங்க அங்கே நிறைய பேரு கனவுக்கண்டுக்கிட்டு இருப்பாங்க, தூக்கத்தில தான்.கெவர்மெண்ட் டேபிள், சேர், ஃபேன் போட்டு என்னமா உதவுதுதுங்கிறிங்க!

கலாம் என்ன சொன்னார் கனவுக்காண சொன்னார்ல அதைத்தான் அங்கே செய்றாங்க நிறைய மக்கள். எனவே தான் நானும் நூலகம் போறேன், அப்போத்தான் தூக்கம் வரும் , பின்ன கனவு வரும், நாடு முன்னேறும், மனசிலாயோ! அதே!

//ஆஹா.. என்னே ஒரு தன்னடக்கம்.. புல்லரிக்கு வவ்வால்ஜி.//

புல் தரைல படுத்து உருண்டா அரிக்கத்தான் செய்யும், எதுக்கும் கவனாம இருந்துக்கோங்க , மாடு கீடு வந்து மேய்ன்ச்சிட போவுது!

நாம எப்போதும் அடக்கம் அமரருள் உய்க்கும்னு அய்யன் வள்ளுவர் வழி போறவனுங்க!

நாடோடி இலக்கியன் said...

பாரியின் பெயரை வைத்துக் கொண்டு இவ்வளவு விஷயங்கள் தெரியாமலே இருந்திருக்கேன்.

பாரியைப் பற்றி தெரியாத பல செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி வவ்வால்!

வவ்வால் said...

நாடோடி இலக்கியன்,
நன்றி!

நம் பழம் தமிழக வரலாறு சரியாக தொகுக்கப்படாமலே இருக்கு. அதை இப்படியே விட்டால் பலருக்கும் தெரியாமல் போய் விடவும் வாய்ப்பு இருக்கு.

தேடியப்போது தான் தெரிந்தது வெகு குறைவான தகவல்களே புத்தகங்களில் இருக்கு, அதுவும் ஒரு சில சம்பவங்களே மீண்டும் மீண்டும் வேறு வேறு புத்தகங்களில் வந்து இருக்கும், மற்ற தகவல்கள் எல்லாம் என்னாச்சு? யாராவது ஆய்வு செய்து பல தகவல்களையும் வெளிக்கொணர வேண்டும்.

Unknown said...

very good for your information and works. thank you

ஜோதிஜி said...

பதிவுகளை விட பின்னூட்டங்கள் அபாரம்

ரவி said...

விகடன் பிரசுரம் "வேள் பாரி" வாங்கி படியுங்கள் நண்பர்களே

Unknown said...

எழுத்தாளர் சு.வெங்கடேசன் M.P அவர்களின் மிகச் சிறந்த படைப்பு வேள்பாரி...இயற்கையுடன் இணைந்த தமிழர்களின் மலை வாழ்வு , தமிழர்களின் நாகரீகம், சிந்தனை , இயற்கை அறிவு, விஞ்ஞானம், வீரம், காதல் என சங்க காலத்தை கண் முன் நிறுத்தும் அற்புத காவியம்.... குறு நில மன்னனாக இருந்தாலும் நீங்கா புகழ் பெற்ற மன்னனாக விளங்கியவன் மன்னன் பாரி என்பதற்கு கபிலர் எழுதிய சங்க பாடல்களே சாட்சி......

Anonymous said...

பாரியின் மனைவி என்ன ஆனாள்?
நீலன், உதிரன், காலம்பன் என்ன ஆனார்கள்?