Wednesday, August 01, 2012

சிக்கு புக்கு-Indian railways.


கடந்த திங்கள் அன்று தில்லி-சென்னை , தமிழ்நாடு விரைவு தொடர் வண்டி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீவிபத்தில் சிக்கி சுமார் 50 நபர்கள் உயிருக்கு உலை வைத்ததை அனைவரும் அறிவார்கள், இது இந்திய ரயில்வேயில் நடக்கும் முதல் விபத்தும் அல்ல கடைசி விபத்தும் அல்ல ,ஒரு தொடர்கதையாக தொடர்கிறது, இதற்கெல்லாம் அடிப்படையில் என்ன காரணம் என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

இப்படியான விபத்துக்களுக்கு அடிப்படையான காரணமே வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு சென்றப்போது என்ன நிலையில், தொழில் நுட்பத்தில் , நிர்வாக முறையில் இருந்ததோ அதே நிலையில் 60 ஆண்டுகள் கடந்தப்பின்னும் இருக்கிறோம் என்பதே.

இதனை நம்ப முடியாமல், இல்லை நாம் நிறைய முன்னேற்றம் செய்துள்ளோம் என நினைத்தீர்களானால் ,அது உண்மையில் மிக மிக சிறிய அளவில் மட்டுமே முன்னேற்றி இருக்கிறோம்,அதனை 60 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட முன்னேற்றத்தோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை எனலாம்.

உலக நாடுகளை எல்லாம் ஒப்பிட வேண்டாம் சீனாவுடன் ஒப்பிடுவோம்.

சீனாவுடன் ஏன் ஒப்பிடுகிறேன் எனில்,

# நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடு,

#ஆசியப்பிராந்திய அண்டை நாடு.

# சீனாவும் *பிரிட்டீஷ் காலனியாக இருந்து ,இந்தியாவுடன் சம காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு.

*சீனா முழுவதும் பிரிட்டீஷ் காலனியாக இல்லை, ஹாங்காங்க் மற்றும் சிலப்பகுதிகள், சீனாவில் அப்போது பிரிட்டீஷ், ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என ஆளுமை செலுத்தி வந்தார்கள், PEOPLES REPUBLIC OF CHINA(PRC) ஆட்சி 1949 இல் தான் உருவானது.

# மேலும் சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவை விட வறுமையும், பின் தங்கியும் இருந்த ஒரு நாடு, இன்று சீனா உலக வல்லரசு, இந்தியாவோ கனவு காணும் நிலையில்.

1947 ஆண்டுக்காலக்கட்டத்தில் இந்திய சீன ரயில் கட்டமைப்புடன் இன்றைய நிலையின் ஒப்பீடு.


1947
இருப்பு பாதை நீளம்: இந்தியா: 53,396,சீனா: 27,000

இன்று : இந்தியா: 63,327 ,சீனா:91,000
கி.மீ கள்.

அதாவது இந்த 60 ஆண்டுகால நவீன இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் கி.மீ அளவுக்கே புதிய இருப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சீனாவில் சுமார் 64 ஆயிரம் கி.மீ அளவுக்கு புதிய இருப்பு தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில் , இது பயணத்தட நீளம், ஒற்றை வழித்தடம் எனில் அதே நீளம் ,இரட்டை வழித்தடம் இரண்டு மடங்கு நீளம், சீனாவில் 40% வழித்தடம் இரட்டை வழித்தடம் என்பதால் அவர்களின் மொத்த இருப்பு பாதை நீளம் 154,600km ஆகும்.

எனவே இந்தியா போட்ட 10 ஆயிரம் கிலோமீட்டர் இருப்புப்பாதையில் பெருமளவு இரட்டைத்தடம் ஆக்க போட்டது.

எனவே சீன மொத்தமாக புதிதாக உருவாக்கி இருப்புப்பாதை நீளம் 127,600 கிமீகள் ஆகும், இந்தியாவோ 10 ஆயிரம் கிலோ மீட்டர்களே ,ஒப்பீட்டளவில் இந்தியாவை போல சுமார் 13 மடங்கு புதிய இருப்பு பாதைகள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இரயில்வே தடவாளங்களின் நிலை:


எஞ்சின்கள் :இந்தியா: 8,300 ,சீனா:19,432

பயணிகள்
பெட்டி:இந்தியா: 45000 ,சீனா:52,130

சரக்கு பெட்டி:இந்தியா: 225,000 ,சீனா: 622,284

ஒப்பிட்டால், பயணிகள் பெட்டியில் மட்டும் இந்தியாவில் வித்தியாசம் குறைவாக இருக்கிறது,எஞ்சின்கள், மட்டும் சரக்கு பெட்டிகள் சீனாவில் பல மடங்கு அதிகம் இருப்பது தெளிவாக தெரிகிறது.

எஞ்சின்கள் ,மற்றும் சரக்கு பெட்டிகள் மிக அதிக அளவில் இருப்பதால் சீனா மிக அதிக சரக்குகளை கையாள்கிறது 3,300 மில்லியன் மெட்ரிக் டன்கள் , இது உல சரக்கு கையாளுதலில் 25% ஆகும் ,சீனா தொழில் துறையிலும்,உற்பத்தியிலும் முன்னேற இதுவும் ஒரு காரணம். அதே சமயத்தில் இந்தியா 750 மில்லியன் மெட்ரிக் டன்களே கையாளும் திறன்கொண்டுள்ளது. இது சுமார் 5% ஆகும்.

சீனா அதிக சரக்குகளை மிக வேகமாக கையாளும் திறன் கொண்ட கனரக ரயில்களையும், இருப்புப்பாதைகளை வடிவமைத்து பயன்ப்படுத்துகிறது.

சீனாவில் சரக்கு வண்டிகளின் சராசரி வேகமே 120 கி.மீ, இந்தியாவில் பயணிகளின் அதிகப்பட்ச வேகமே 160 கி.மீ :-))



சீனாவில் பயணிகளின் ரயிலின் அதிக பட்ச வேகம் 400 கி.மீ ஆகும்,சராசரி வேகம் 350 கி.மீ, இவ்வேகத்தில் ஹார்மனி எக்ஸ்பிரஸ் என்ற டிரெயின் சீனாவின் Wuhan மற்றும் Guangzhou இடையே சுமார் 1060 கி.மீ தூரத்தினை 3 மணி நேரங்களில் கடந்து விடுகிறது, விபத்தில்லாமல்!

மேலும் பீஜிங்க் லண்டன் இடையே ரயில் போக்குவரத்து துவங்க ஒரு திட்டமும் தீட்டிக்கொண்டிருக்கிறது.

பீஜிங்கில் இருந்து சீனக்கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தலைநகர் லாசாவுக்கும் இருப்புப்பாதை அமைத்து செயல்ப்படுத்திக்கொண்டுள்ளது. இப்பாதையே உலகிலேயே மிக உயரமான இருப்புப்பாதை அமைப்பாகும்.

பீஜிங்-xining-லாசா இருப்புப்பாதை வரைப்படம்.


மேலும் திபெத் இருப்பு பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக லாசாவில் இருந்து இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திற்கு அருகேயுள்ள Xigaze விற்கு இருப்பு பாதை அமைத்துக்கொண்டுள்ளது 2015 இல் நிறைவு பெறவுள்ளது.

திபெத்தின் லாசாவுக்கு செல்லும் தொடர் வண்டியின் காணொளி, இதில் பயணிக்க மருத்துவசோதனைகளுக்கு உட்பட வேண்டும் ஏன் எனில் மிக அதிக உயரத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும் என்பதால், புகைவண்டியில் பயணிகள் அனைவருக்கும், பிராணவாயு குடுவை, மருத்துவ உதவி என அனைத்தும் தேவைக்கு வழங்கப்படும்.அவ்வளவு உயரமான இடத்திலும் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.

A train to tibet.

மேலும் தில்லிக்கும் பர்மா வழியாகவோ அல்லது அருணாச்சல பிரதேசத்தின் நாதுங் பாஸ் வழியாக Xigaze இருப்புப்பாதையின் வழியாக ரயில்ப்போக்குவரத்தினை துவக்க சீன அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது.

இந்தியாவிலோ அஸ்ஸாமின் கவுகாத்தியை தவிர வேறு எங்கும் வடக்கிழக்கில் இருப்பு பாதை வைத்தில்லை.

இந்தியாவால் ஏன் வடக்கிழக்கில் இருப்புப்பாதை அமைக்க முடியவில்லை எனில் அம்மாநிலங்கள் இமயமலைத்தொடரில் உயரமான இடங்களில் உள்ளது, அங்கு இருப்புப்பாதை அமைக்க தேவையான தொழில்நுட்பமோ,பணமோ இல்லை.

ஆனால் அதே இமயமலைத்தொடரில் உள்ள திபெத்தின் லாசாவுக்கு சுமார் 5000 மீட்டர் உயரத்தில் இருப்புப்பாதை அமைத்துவிட்டது சீனா, இப்பாதையில் உள்ள ரயில் பாலமே உலகிலே உயரமான ரயில் பாலம் ஆகும்.

உலகின் உயரமான இருப்புப்பாதை பாலத்தின் காணொளி:

highest rail bridge:

எந்திரங்களின் மூலம் புதிய இருப்புப்பாதை அமைப்பதை விளக்கும் காணொளி.

1)

பழைய இருப்பு பாதையை புதுப்பிக்கும் நவீன முறை:


இருப்புப்பாதையில் ,தண்டவாளங்களை அகற்றாமல் ,பழைய ஸ்லீப்பர்கட்டைகளை மாற்றும் காணொளி:


இருப்புப்பாதையின் அடியில் உள்ள கருங்கல் ஜல்லிகள் காலப்போக்கில் உடைந்து,அமிழ்ந்து போதல் காரணமாக ,இருப்பாதை வலுவிழக்கும் ,இதனை சரி செய்ய ,ஜல்லிகளை தண்டவாளத்தின் ஸ்லீப்பர்களுக்கு அடியில் மீண்டும் நிரப்பி , வலுவாக்க வேண்டும் ,இதற்கு tamping the track என்பார்கள்.
அப்போது தான் ரயில்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும், தடம் புரளாமல் இயக்க முடியும், தண்டவாளத்தையோ, ஸ்லீப்பர் கட்டைகளையோ அகற்றாமல்ல் ஜல்லிகளை அடியில் செலுத்தி வலுவாக்கும் எந்திரம் செயல்ப்படும் காணொளி கீழே.


இத்தகைய நவீன இருப்புப்பாதை அமைக்கும் முறையோ ,பராமரித்தலோ இல்லாமல் எப்போதோ பிரிட்டீஷ் காலத்தில் அமைத்த தண்டவாளங்களை மாற்றாமலும் இரயில் பெட்டிஎஞ்சின் என அனைத்தும் புராதனமானவையாக ,பழுதடைந்து உள்ள நிலையில் இன்றும் ரயில்களை இயக்கிக்கொண்டு இருப்பதாலேயே நம் நாட்டில் அடிக்கடி தொடர் வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகிறது, இரயில் பயணம் பாதுகாப்பானதாக இல்லாமல் அபாயகரமாக உள்ளது.

சமீபத்தில் கூட நாகர்கோயிலில் கோவை எக்பிரஸ் தடம் புரண்டு வயலில் இறங்கிவிட்டது.நல்லவேளையாக யார்டில் இருந்து நிலையத்திற்கு காலியாக வ்ந்த ரயில் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இப்பதிவில் இருப்புப்பாதை அமைப்பதில் இந்தியாவின் நிலையினைப்பார்த்தோம் அடுத்தப்பதிவில் பாதுகாப்பு, இன்ன பிற இயக்குதல் சார்ந்த தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் இந்தியாவின் நிலையினைப்பார்ப்போம்.

-------------------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள்,

கூகிள்,விக்கி, யூட்யூப்,தினமலர், சீன ரயில்வே, திபெத் ரயில்வே இணைய தளங்கள் நன்றி.

14 comments:

குட்டிபிசாசு said...

தனிப்பதிவாக இட்டமைக்கு நன்றி.
…இந்தியாவின் பல ரயில் பாதைகள் உறுதிதன்மையற்றவையாகவே உள்ளன. மழையோ, புயலோ ஏற்பட்டால் பாதிக்கப்படும் நிலையில் தான் இவை உள்ளன. நீங்கள் சொன்னதுபோல் கட்டமைப்பு குறைவாக இருப்பினும், அவற்றின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். போக்குவரத்தைப் பொருத்தவரை இந்தியாவின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பேருந்தாகட்டும், ரயிலாகட்டும் சீறான கட்டமைப்பு வசதிகள் அறவேயில்லை. இல்லாவிடில் இத்தனை உயிர் சேதங்கள் ஏற்படாது. நாம் மிகமிக பின் தங்கியிருக்கிறோம். இதில் மாற்றுக்கருத்தேயில்லை.

…உங்களுக்காக அடுத்த பதிவுக்கான விடயம் தயாராகவுள்ளது. மின்சார தட்டுப்பாடு. வரவர இந்தியாவுடைய டவுசர் அந்நியாத்திற்குக் கிழிந்து கொண்டிருக்கிறது. இது எங்கே போய் முடியுமோ?

மாயன் said...

வவ்வால், எல்லாவற்றிலும் சீனா மேற்குலகிற்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது.. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆரம்பித்து விண்வெளி பயணம் வரை சீனா அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறது.. சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேசும் மீடியா ஆட்களையும், அரசியல்வாதிகளையும், பகட்டு நாட்டுப்பற்று பேசும் ஆட்களையும் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டும் போல் இருக்கிறது... எனக்கும் நாட்டுப்பற்று இருக்கிறது என்று உண்மை நிலவரம் தெரியாமல் சீனாவை விட இந்தியா சிறந்தது என்று உளரும் ஆட்கள் தான் அதிகம்... இன்னும் இந்திய சீன ராணுவங்களை ஒப்பிட்டால் தலையை சுற்றும்.. எனக்கு நம் அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது... நாம் அவர்களுக்கு என்ன விட்டு போக போகிறோம்???

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

நாம் கட்டமைப்பில் மிகவும் பின் தங்க்கியே இருக்கோம்,ஏதோ மெட்ரோ நகரில் பளபள கட்டிடங்களும், மென்பொருளும் கொஞ்சம்"வெளிச்சம்" போட்டுக்குது அதுக்கே வல்லரசு என்ன பெருமைப்பட்டுக்கிறோம், காணொளியில் காட்டிய ரயில்வே எந்திரங்களில் ஒன்றாவது இந்தியாவில் இருக்கா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்லலாம், டேம்பிங் மெசின் இருப்பதாக கேள்வி, பெரும்பாலும் மனித ஆற்றலை வைத்தே இங்கே எல்லா வேலையும் நடக்கிறது.100 கி.மீ இருப்புப்பாதையை சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு போடுவார்கள். சீனாவில் ஆண்டுக்கு 5000 கி.மீக்கு குறையாமல் பாதை அமைத்து விடுவார்கள்.

மின்சாரம் குறித்தும் மாற்று எரிப்பொருள் குறித்தும் நிறைய பதிவுப்போட்டாச்சு, கீழ்க்கண்டவற்றை பார்க்கவும்.

1)வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

2)வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.

3)வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!

4)வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!

-------------
மாயன்,

வாங்க,நன்றி!

முந்தைய தலை முறை நமக்கு என்ன செய்ததோ அதையே நாம் அவர்களுக்கு செய்வோம்.நம் மக்களுக்கு அவன் வாழ்வுக்கு பங்கம் வராத்அ வரைக்கும் கவலைப்பட மாட்ட்டான் ,எப்படியாவது வெளிநாட்டுக்கு போய்விட்டால் போதும்,,பின்னர் டர்ட்டி இந்தியா என திட்டிக்கொண்டு தமிழ்ப்படம்பார்த்து பொழுது போக்கிக்கொள்வான்.

படிச்சவன் எல்லாம் தப்பி வெளியே ஓடிப்பொயிடுறான், போக முடியாதவன் , என்ன இருக்கோ அதுக்கு வாழப்பழகிக்கிறான் :-))

இருக்கவே இருக்கு வல்லரசு கனவு பொழுது சுகமாய் கழியும் :-))

”தளிர் சுரேஷ்” said...

அங்கு ஊழல் வளர்ந்திருக்காது! இங்கு பெருமளவில் வளர்ந்து இருக்கிறது! இந்த ஊழல்வாதிகள் இருக்கும்வரை இப்படிப்பட்ட உயிரிழப்புக்கள் குறையாது! சிறந்த பதிவு! சிறப்பான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

naren said...

வவ்வால்,
நல்ல தகவல் நன்றி. அப்படியே, அங்கே டிக்கெட் விலை எவ்வளவு என்று நம்மிடம் ஒப்பிட்டு பார்த்திருந்தால் சரி. தேடிய வகையில் கிடைக்கவில்லை. உலகத்தில் மிக குறைந்த விலையில் பயனம் செய்வது நாமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்
சரக்கு போக்குவரத்து விலை சீனாவில் கம்மியாக உள்ளது அதனால் அதிகளவு வியாபாரம் நடக்கின்றது என படித்திருக்கிறேன்.

சீனாவின் இரயில்வே மந்திரி இராணுவ மந்திரியை விட அதிகாரம் வாய்ந்தவர் என சீன்..சீ..சீனா நோக்கர்கல் சொல்கிறார்கள். கட்டமைப்புக்கு இவ்வளவு செலவு செய்கிறார்களே அந்த பணம் எல்லாம் நாம் வாங்கும் சைனா பொருடகள் மூலம் தானே அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்தியாவில், aeroplane watchers மாதிரி train watchers என்று ஒரு சங்கம் இருக்காம். இவர்களின் பொழுது போக்கு, எந்த எந்த மைய இரயில் என்ஜின்கள் எந்த எந்த நிலையத்தில் இருக்கின்றது என்று பார்ப்பதுதானாம். ஈரோடு, அரக்கோணம் என்று நம்பர் போட்டு வருமே. இரயில்வே நிருவாகத்திற்கு, எந்த இரயில் என்ஜின் எங்கே இருக்கும் என அறிய குறைந்தது ஒரு வாரம் ஆகுமாம். அதனால், நிர்வாகத்தில் என்ஜினின் இருப்பிடத்தை அறிய விரும்புவர்கள், இந்த சங்கத்தை தொடர்பு கொள்வார்களாம், உடனே சொல்லிவிடுவார்களாம் எங்கே இருக்கின்றது என்று. ஹிண்டுவில் படித்ததாக ஞாபகம்.

அந்த கடைசி ”ஜல்லியடிக்கும்” இயந்திரத்தை ராயப்புரம் நிலையத்தில் எப்போது நின்றிருக்கும். தினமும் பார்க்கிறேன். ஓடுகிறதா என்று தெரியவில்லை.

இருக்கின்ற வசதியை வைத்து சாகடிக்காமல் போகிற இடத்துக்கு சேர்த்தால் நல்லது.

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி,

ஆமாம் ஊழல் தான் பெரியக்காரணம்.சீனாவில் ஊழல் இருக்கு ஆனால் மாட்டில் மர்க்கயா ;-))

உங்கப்பதிவும் பார்க்கிறேன்.

------------------------
-நரேன்,

வாரும்,நன்றி!

சீனாவில் எல்லாம் ரொம்ப வேகம், 2000 கி.மீ தடம் 2 ஆண்டுகளில் போடுடுவாங்க. இங்கே 100 கி.மி போட 10 ஆண்டு ஆகும், இதனால் திட்ட செலவு பல மடங்கு ஆகிடும்.

விலையை போட்டுள்ளேன் ஒப்பிட்டு பாருங்க,சீனா மலிவா தான் இருக்கு.

delhi-chennai-1763 kms, duranto exp, 2nd class ac fare 2690 rs,per km cost 1.52 rs.

RMB-331=2895.76 rs, for 3360 kms travel bejing to lahsa,AC chair car.per km .86 rs.

ஒரு கி.மீ 86 பைசா சீனாவில்.இது குறைந்தபட்ச கட்டணம்.

ஏசி சிலீப்பர் 2 வகுப்புக்கு-712rmb
முதல் வகுப்புக்கு-1104 rmb

ஒரு சீன rmb=8.74 ரூபாய்

*RMB=Renminbi=CNY=chinese yuan

ref http://www.chinauniquetour.com/arts.asp?place=16&id=5456

அந்த ஜல்லி டேம்பிங்க் மசின் மட்டும் தான் இருக்கு, சென்னையில் முன்னர் மீட்டர் கேஜ் ,பிராட் கேஜ் ஆ மாத்தின வேலையை நேராப்பார்த்து இருக்கேன் ,எல்லாம் மனித சக்தியே.

Venkat said...

vovval,

Have been reading your blog regularly and have always found it very informative. A very good comparison brining forth the snail's pace in the growth of Indian Railways as opposed to a supersonic pace of the Chinese.

Just one thing. You have mentioned that China was a British colony. Only Hongkong was a British colony which was given back to China by the British in 1997.


Venkat

சார்வாகன் said...

வணக்கம் சகோ
அருமையான் பதிவு.

நாம் இரயில் ஓட்டி விளையாடினால் சீனாக்காரன் விளையாட்டாக ஏகப்பட்ட இரயில் விதவித்மா விடுரான்.

சைனா அண்ணன்கள் மக்கள் தொகையையும் கட்டுப்படுத்தி,தீவிரவாதம் ஒடுக்கி புதுவிதமான பொருளாதாரம், இன்னும் என்னமோ செய்கிறான்.உலக அளவிலும் அரசியல் அழுத்தம் கொடுக்கிறான்.

நாம் வல்லரசு ஆவோம் என கனவு (மட்டும்) காணுவோம் .எதுவும் செய்ய மாட்டோம்.இதை செய்தால் அவன் அழுவான்.மக்களிடன் இருந்து அரசு நிலம் கையகப் படுத்தினால் வேறு வாழ்வாதாரம் கொடுக்க மாட்டார்கள் என்றால் எவன் நிலம் கொடுப்பான்?

இந்த சீனாவின் இரயில் திட்டங்கள் ஒரு சின்ன எ.கா மட்டுமே!!!!!!!
நன்றி

வவ்வால் said...

வெங்கட்,

வாங்க,நன்றி!

உங்களைப்போலவே எல்லாம் "அமைதியா" படிச்சிட்டு போயிடுறாங்க :-))

எதாவது கருத்து சொன்னாத்தானே தெரியும், ஹாங்காங்க் வச்சு தான் அப்படி சொல்லிட்டேன், மேலும் முதல் ரயில்வே பாதையை அமைச்சதும் பிரிட்டிஷ் தான். சீனாவில் இங்கிலாந்து,பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான்னு ஆளுக்கு கொஞ்சம் ஏரியா பிரிச்சுக்கிட்டு அப்புறம் வியாபாரம் செய்துக்கிட்டு இருந்து இருக்காங்க, யாருக்கும் முழு காலனியா இல்லை,சரி நம்ம இந்தியா ,சீனா ,பிரிட்டிஷ்னு வச்சுப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

இப்போ வரைக்கும் தைவான் சீனாவோடு இருக்கா தனி நாடான்னு எனக்கு குழப்பமாவே இருக்கு :-))

-----------
சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

அதே தான் , நம்ம ஆளுங்க "கைப்புள்ள வடிவேலு " போல வெற்று முழக்கம் விட்டுக்கிட்டு வல்லரசுனு சொல்லி ஊரை ஏமாற்றிக்கிட்டு இருக்காங்க, இன்னும் இந்த சனங்க அதை நம்புதுங்க, ஒரு ஏவுகணைய விட்டுட்டு நல்லா பார்த்துக்கோங்க நானும் வல்லரசுன்னு சொல்லிக்கிறோம் :-))

சீனா ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரயில்வேக்கு செலவு செய்து,நாம சுமார்35 ஆயிரம்ம் கோடி மட்டுமே.ஒரு 3ஜி ஸ்பெக்ட்ரம் ல கூட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி பணம் புரளும் நாடு ரயில்வேயில அல்பமா முதலீடு செய்யுது :-))

சீனா கம்யூனிசம் ,எல்லாம் அரசு தான் செய்யும்னு சொல்றாங்க ,அங்கே 20 தனியார் ரயில்வே இருக்கு, என்ன ஒன்னு கட்டணம் எல்லாம் அரசு தான் நிர்ணயிக்கும், நிறைய கட்டுப்பாடும் உண்டு. நம்ம ஊரில தனியாருக்கு முழுசா தாரை வார்த்துட்டு பொருளாதார சீரமைப்புன்னு சொல்வோம் :-))

வழக்கமா பொது ஜனம் தான் விழிப்புணர்வு இல்லாம சினிமா, டி.வி ,கிரிக்கெட் ,மானாட மயிலாடன்னு மதி மயங்கி கிடப்பாங்க, ஆனால் பதிவுலக படிச்ச அறிவு சீவிங்களும் உலக நிலவரமே தெரியாம அரசியல்வாதிகள் விடுற அறிக்கையை மட்டும் நம்பிக்கிட்டு இருக்காங்க என்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கு.

ராஜ நடராஜன் said...

பாஸ்!வழக்கம் போலவே உங்களின் உழைப்பு தெரிகிறது.படங்கள்,புள்ளி விபரங்கள் கூட பிரமிக்க வைக்கின்றன.நாமும் ஊட்டி மலைப்பகுதியில் ரயில் விடுறோம்தானே:)ரயில்வே துறையையெல்லாம் விட்டு விட்டு தேமேன்னு ஓடும் மஞ்சள் நதியையெல்லாம் விட்டு விட்டு சும்மா உட்கார்ந்துகிட்டிருக்கிற சீன சுவரை பார்த்து ஏன் எல்லோரும் வாயைப் பொளக்கிறார்கள்.நம்மாலும் இயலுமென்ற உந்து சக்தியில்லாமல் சோர்ந்து போய் விடும் சூழலே நம்மிடமிருக்கிறது முந்தா நாள் ஒலிம்பிக்ஸில் சீனாவுடன் விளையாடிய சைனா நிவால் வரை.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீனாவின் வளர்ச்சி உயரத்தில் இருக்கின்றது என்ற போதிலும் மக்களின் அடிப்படை வாழ்க்கை முறையிலும்,கருத்து சுதந்திரத்திலும் இன்னும் பின் தங்கியே இருக்கிறார்கள்.சீனாவின் வளர்ச்சி பல துறைகளிலும் சிறப்பானது என்ற போதிலும் கேபிடலிஸ கம்யூனிஸ அரசியல் முறை சிறந்தது என்றும் கொள்ள முடியாது.

ஒருமுகத்தன்மை சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது.இந்தியாவுக்கு அரசியல் தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரன் மாதிரி தனிமனித நலன்களுக்கு ஏற்ற மாதிரி சட்டம் வளைந்து கொடுக்கிறது.
என்ன செய்யலாம்?சீனா மாதிரியான கம்யூனிஸத்தைக் கொண்டு வந்து விடலாமா?அது கூட வேண்டாம் தவறாகவே இருந்தாலும் கூட இந்திரா காந்தியின் எமர்ஜென்சியைக் கூட பரிட்சித்துப் பார்க்கும் கால அவகாசம் இந்தியாவுக்கு கிடைக்கவில்லையென்றே சொல்லலாம்.சரி!எமர்ஜென்சி கருத்துரிமையை பறித்தது என்று வைத்துக்கொண்டாலும் கூட தற்போதைய மாற்று அரசியலுக்கான களமாய் அன்னா ஹசாரே குழுவின் போராட்டங்கள் கூட சிதைந்து போகும் சூழலே காணப்படுகிறது.

என்ன செய்யலாம்?

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,நன்றி!

நீங்கள்ப்பதிவின் கருத்தினை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

இங்கே யார் கம்யூனிசம் வரவேண்டும் என்று சொன்னார்கள்,அதே சமயத்தில் வந்ததாலும் பிழையில்லை என்னும் நிலையே.

சீனாவில் சாதிக்க முடிந்ததில் ஒரு 50% சதம் ஆவது ஜனநாயக முறையில் சாதிக்க வேண்டாமா? அப்படி எதுவும் செய்யாமல் இருக்கும் என்றால் நம் நாட்டில் ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது என்பது உண்மையாகிவிடும்.

பேச்சுரிமை இருக்கிறது ஆனால் பேசுவதை கேட்கமாட்டொம் என ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். நாம் சாலை வேண்டும் என கேட்க உரிமை இருக்கிறது ஆனால் அதற்கு பதிலே அரசிடம் இருந்து வராது எனில் அந்த பேச்சுரிமையின் பலன் என்ன? நீ பேசுரியா பேசிக்கோ ஆனால் பதிலை எதிர்ப்பார்க்காதே என்பது தனியாக பேசிக்கொள்வது தானே :-))

அப்புறம் ஊட்டியில் ஓடும் ரயில் எல்லாம் பொம்மை ரயில் ,அதுவும் கூட வெள்ளைக்காரன் செய்த ஏற்பாடு :-))

இங்கே பன்முகத்தன்மை ,தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் சூழல் எனில் திடமாக கூடங்குளம் அணு உலை அமைக்க எப்படி அரசால் முடிகிறது, மேலும் நாட்டின் இயற்கை வளங்களை திடமாக தனியாருக்கு தாரை வார்க்க எப்படி முடிகிறது.

மக்களுக்கு தேவையானதை செய்ய மட்டும் முடிவதில்லை ஆனால் அவர்களுக்கு தேவையில்லாததை உறுதியாக நின்று செய்ய எப்படி இங்கு அரசால் முடிகிறது.

மேலும் இந்த 60 சொச்ச ஆண்டுகளில் 90 சதவீதக்காலம் ஒரே கட்சியான காங்கிரஸ் தானே மத்தியில் ஆள்கிறது. ஏன் எதுவும் செய்ய முடியவில்லை?

ஜனநாயகம்- நீ ஆசைப்பட்ட நல்ல சாலை,மின்சாரம்,மருத்துவம், வேலை இன்னும் என்ன எல்லாம் வேண்டுமோ மனம் விட்டு கேட்டுக்கோ ஆனால் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்காதே.

கம்யூனிசம்: சாலை,மருத்துவம்,மின்சாரம்னு வேண்டும் என கேட்காதே ,நானே கொடுக்கிறேன் என செய்வது.

இப்போ இரண்டில் எம்முறையால் மக்களுக்கு பயன்?ஜனநாயகாமா ,கம்யூனிசமா என்பது முக்கியமில்லை மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஒரு ஆட்சி முறை வேண்டும் என்றே நான் எதிர்ப்பார்க்கிறேன்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட இருப்பாரானால் மக்களுக்கு என்ன செய்தார் என்று தான் கேட்பேன், மக்களுக்கு எதுவுமே செய்யாத நிலையில் கடவுள் இல்லை என்று தான் சொல்வேன், அவர் மக்களை சுபிட்சமாக வாழவைப்பாராயின் கடவுளை நம்புவதில் எனக்கு பிரச்சினை இல்லை.

இப்போது கடவுளும் ஜனநாயக ஆட்சியும் ஒன்று தான் :-))

Unknown said...

வருத்தப்பட வேண்டிய(மக்கள்) மாறும் சிந்திக்க வேண்டிய(அரசியல் வாதிகள்) விஷயம்...

குறும்பன் said...

வவ்வாலின் மறுமொழிகள் பலருக்கு பிடிக்கவில்லை, இனிமே சூப்பரா எழுதி இருக்கிங்க, அபாரம்,.... போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்களை போடவும். :))


10 ஆண்டுகளுக்கும் மேல் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா பணம் ஒதுக்கி இப்ப எங்க பகுதியிலும் ரயிலு வரப்போகுது. இன்னும் 1 ஆண்டில் ரயிலை பார்த்திடுவோமுன்னு நினைக்கிறேன். புதிய இருப்பு பாதையின் தூரம் 77கிமீதான், இதுக்கே 10 ஆண்டுக்கு மேல் :(. இதுல கொடுமை என்னன்னா வழக்கமா பால்வண்டி மற்ற லாரிகள் செல்லும் கிராமத்துக்கான சாலையில் போட்ட பாலம் தான். இவங்க போட்ட மேம்பாலத்தின் அடியில் பாரம் ஏற்றிய லாரிகள் செல்லமுடியாது. அதனால பாலத்துக்கு அடியில் கொஞ்சம் பள்ளம் தோண்டி எல்லா வண்டிகளும் அதன் வழியே செல்லுகிறது. இன்னும் சில காலத்தில் அச்சாலையில் நிறைய வண்டிகள் போகும். நல்லா திட்டம் போடறாங்க இவங்க. இப்படி இருக்கறப்ப எப்படி நாம சீனாவ மிஞ்சுறது?.

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க, நன்றி!

உங்களுக்கு மிகப்பெரிய நன்றி, சரியாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள், எனக்கும் மற்றவர்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாரா? இல்லையே சொன்ன கருத்தினை வைத்து இன்னொரு கருத்துசொல்லப்படுகிறது.

நான் படிக்கும் காலத்திலேயே சில சர்வே எடுக்கும் நிறுவனங்களுக்கு சர்வே எடுத்துக்கொடுத்துள்ளேன், ஒரு கார் புதிதாக வந்தால் அந்த கார் வச்சிருக்கவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு சர்வே எடுக்க சொல்வாங்க, போய் கார் வச்சிருக்கவங்களை கொஷினருடன் போய் கேட்டால் ஒருத்தரும் சொல்லவே மாட்டான் ,ஏன் எனில் பெயர், முகவரி எல்லாம் கொடுக்கணும், நாம எதாவது சொல்லி பிரச்சினை ஆகிடுமோன்னு பயப்படுவாங்க, 5 லட்சம் போட்டுக்கார் வாங்க்கிட்டு அந்தக்காரில் இருக்க பிரச்சினையை சொல்ல தயங்குவாங்க, உங்க பேர், விவரம் எல்லாம் ரகசியமாக இருக்கும், இது உண்மையான சர்வே என நிறுவனத்திற்கு உறுதிப்படுத்திக்கொள்ள தான் என விளக்கி சொல்லி ஒரு வழியா தகவலைக்கறக்கணும்.

இது மாதிரி ஆளுங்க தான் பதிவுல வந்து மூஞ்சு தெரியலை முதுகு தெரியலைன்னு சொல்வாங்க :-))

உண்மையான கருத்தினை வெளிப்படையாக சொல்லாமல் ஆகா,ஓகோ என போலியாக புகழ்ந்துவிட்டு உண்மையும்,கருத்து சுதந்திரத்தினையும் குழித்தோண்டி புதைத்துவிட்டு ,பதிவில் யாரும் நல்லக்கருத்துக்களையே சொல்வதில்லைன்னு புலம்புவாங்க :-))

நம்ம சனநாயம் எப்படி நாறிச்சு, இவன் எஞ்ஜாதிக்காரன், கட்சிக்காரன்னு பார்த்து பார்த்து ஓட்டுப்போட்டு ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு ஊழல் செய்தால் பொத்தாம் பொதுவாக அரசியலே நாறிப்போச்சு ,உலகம் கெட்டுப்போச்சுன்னு புலம்புவார்கள், மீண்டும் அடுத்த தேர்தலில் அதே ஊழல் அரசியல்வாதி வந்து இளிச்சுக்கிட்டு ஓட்டு கேட்பான்,நம்ம ஆளுக்கு தான் ஓட்டுன்னு மக்களும் குத்தும், இதை போல நாட்டை கெடுப்பது மக்களே,ஆனால் அரசியல் கெட்டுப்போச்சு, எவனும் சரியில்லைனு சொல்ல வேண்டியது.

இப்போ பதிவிலும் அதான் நடக்குது.

-----

அட இந்த ரயில்வே கதையே நாடுப்பூறா இப்படித்தான் 77 கி.மீ பாதை அமைக்க 10 ஆண்டுகள், நாம தான் அடுத்த வல்லரசு :-))

தென் மாவட்டத்துக்கு போக தீபாவளிக்கு டிக்கெட் இப்பவே எல்லா ரயிலிலும் வித்தாச்சு,ஏன் இந்த நிலைன்னு எவனும் கேட்க மாட்டான், இன்னமும் முழுசா இரட்டைத்தடம் அமைக்காதது தான் இதற்கு காரணம் , 60 ஆண்டுகளுக்கு மேல் ஓடிப்போச்சு,இந்த எம்.பி,எம்.எல்.ஏக்களை ஒரு தடவையாவது ஓட்டுக்கேட்க வரும் போது இதுப்பற்றி கேட்டு இருப்பாங்களா மக்கள்.

கடலூர் லாரன்ஸ் ரோட்டிலும் ரயில்வே சப்வேக்கு பள்ளம் வெட்டி ரெண்டு வருஷமா கிடக்குது, இன்னும் ஒரு வேலையும் நடக்கலை, பாதாள சாக்கடைக்குன்னு ஊரெல்லாம் பள்ளம் வெட்டி 6-7 வருஷம் ஆச்சு. மழைக்காலத்தில் ரோடெல்லாம் சேறு தான் ,இருசக்கர வாகனத்தில் சர்க்கஸ் கலைஞர்கலை விட திறமை இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.தேர்தல் மட்டும் குறிப்பிட்ட நாளில் வந்து போகுது, யாரும் எதுவும் செய்யவில்லை, டெசோவுக்கு வா, அந்த மாநாடுக்கு வா என ஊரெல்லாம் பிளெக்ஸ் பேனருக்கு மட்டும் குறைச்சல் இல்லை, நல்ல சனநாயகம், நல்ல மக்கள் :-))

நிஜ உலகம் தான் நாறிப்போய் கிடக்குன்னா பதிவுலம் அதை விட நாற வைக்கணும் என முடிவோட திரியறாங்க மெத்தப்படிச்சவங்க :-))