Thursday, May 24, 2012

பங்கு சந்தையால் பயனடைவது யார்?




பங்கு சந்தைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவை என பொதுவான கருத்துண்டு,ஆனால் அதில் நடப்பது என்னமோ யூகங்களின் அடிப்படையிலான சூதாட்டமே, மேலும் பல்லாயிரங்கோடிகள் பங்கு வர்த்தகத்தில் புழங்கினாலும் அதன் பலன் யாருக்கு போய் சேருகிறது,சாமனிய மனிதனுக்கு அதனால் பலன் உண்டா என்பதையெல்லாம் அலசும் நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்.அனைத்தும் வாசிப்பின் அடிப்படையில் உருவான எனது சொந்த பார்வையே,பிழை இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ,மாற்றுக்கருத்து இருப்பின் கூறலாம்.

பங்கு சந்தையின் பலாபலன்களை புரிந்து கொள்ள ஒரு பணக்கார தொழிலதிபர், ஒரு சிறு தொழில் செய்பவர் ஆகிய இருவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

முதலில் குப்பன் எனும் சிறு தொழில் செய்பவரைப் பார்ப்போம்,

குப்பன் ஒரு தேநீர்க்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்,அவரது வாழ் நாள் லட்சியம் சொந்தமாக தேநீர் கடை ஆரம்பிப்பதே.உழைப்பில் கொஞ்சம் சேமிப்பு இருக்கு அதனுடன் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும் கடை போட்டுவிடலாம் என்ற நிலை.

மேற்கொண்டு நிதிக்காக அனைத்து வங்கிகளுக்கும் படை எடுத்து பார்க்கிறார்,கஜானா திறப்பேனா என அடம் பிடிக்கிறது. வேறு வழி இல்லாமல் கந்து வட்டி கந்தனிடம் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கி, கையில் உள்ளப்பணம் ,மனைவி நகை எல்லாம் அடகுவைத்து நிதி திரட்டிவிடுகிறார்.

கடைக்கு இடம் தேடியலைந்து ஒருவழியாக பிடித்து ,அங்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லை என ,வண்டியில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து ,பல முறை கார்ப்பரேஷன் அலுவலத்துக்கு அலைந்து,கடைசியில் லஞ்சம் கொடுத்து கடைக்கு அனுமதி வாங்கி ஒருவழியாக தேநீர்க்கடையை ஆரம்பித்து விடுகிறார்.

வரும் வருமானம் எல்லாம் வட்டிக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக போய்விடுகிறது.மேற்கொண்டு கடையை விரிவுப்படுத்த நிதி இல்லை என்று ரொம்ப டைட்டாக ஓடுது வியாபாரம்.

இப்போது பணக்கார தொழிலதிபர் ஜூனியர் கும்பானி என்பவரைப் பார்ப்போம், பணக்கார குடும்பத்தில் தங்க ஸ்பூனோட பொறந்தவர்,ஆனாலும் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் என சுமார் ஒரு கோடி முதலீட்டில் ஒரு தேயிலைத்தூள் நிறுவனம் ஆரம்பிக்க நினைக்கிறார்.

இவர் இடம் எல்லாம் தேடவில்லை, ஆரம்பிக்க அனுமதி கேட்டதும் அரசே தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கொடுத்து விடுகிறது,மேலும் தடையில்லா மின்சாரம், குடிநீர் எல்லாம் கொடுக்கிறோம், கூடவே 7 ஆண்டுக்கு 100 சதவீத வரிவிலக்கு எல்லாம் சொல்லி தொழிலை துவங்க ஊக்குவிக்கிறது அரசு.

கும்பானியும் தொழிற்சாலை ஆரம்பித்து ஊட்டியில் பச்சை தேயிலையை கிலோ 20 ரூக்கு வாங்கி வந்து அரைத்து பொடியாக ஒரு கிலோ 300 என சல்லீசாக கொளை லாபத்தில் விற்கிறார், அந்த தேயிலைக்கு ஃப்ரீரோசஸ்னு அழகா பேரும் வச்சுக்கிறார்(ரோசாவுக்கும் டீக்கும் என்னையா சம்பந்தம்?)

பேரு மட்டும் வச்சாப்போதுமா ,அதை விளம்பரப்படுத்த ,ஃபிரிஷா என்ற கோலிவுட்/பாலிவுட் நடிகையை வச்சு விளம்பரம் எடுத்து விடுறார், அந்தம்மணியும் வாங்குன காசுக்கு வஞ்சணையில்லாம தம்மாத்துண்டு துணிய உடுத்திக்கிட்டு வந்து என் மேனி எழிலுக்கு காரணம் ஃப்ரிரோசஸ் டீ தான் ??!! சொல்லுது.

மேலும் உங்களுக்கு ஏன் ஃபிரிரோசஸ் புடிக்கும்னு இந்த நம்பருக்கு கால் செய்து சொல்லுங்கன்னு கொஞ்சலா சொன்னதும் ,ஒரு நிமிடத்துக்கு 10 ரூபா புடுங்கிடுவான்னு தெரியாம பல ரசிகக்கண்மணிகள் கால் செய்து ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டு பூரிப்பது தனிக்கதை ;-))

பிரிஷா குடிச்ச டீயத்தான் !!?? குடிப்பேன்னு மக்களும் போட்டிப்போட்டு ஃபிரிரோசஸ் டீத்தூளை வாங்கி குடிக்கவே கும்பானிக்கும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது ,நல்ல லாபமும் வருது ,வராதா பின்ன 20 ரூ டீத்தூளை 300 ரூனு வித்தா ?

நம்ம டீக்கடை குப்பன் கூட பிரிரோசஸ் டீத்தூளை தான் வாங்குறார்னா பார்த்துக்கோங்க.

இப்படியே ஒரு மூன்று ஆண்டுகள் ஓடுது, கும்பானி அவரோட ஃபிரீரோசஸ் டீக்கம்பெனிய பங்கு சந்தையில் இறக்குறார், ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை நிதி தணிக்கை மற்றும், மதிப்பீடு நிறுவனங்கள் 100 கோடினு மதிப்பீடு செய்கிறது.அது எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது அதான் சந்தை மதிப்பு செய்வது என்ற பொருளாதார நிபுணத்துவம் :-))

ஒரு பங்கு பத்து ரூ என்பதை புக் பில்டிங் முறையில 120 ரூ என மதிப்பிடப்பட்டு ஐபிஓ வெளியிடப்படுகிறது,இதற்கென "lead run book managers" என book building process செய்ய தனி அமைப்புகள் இருக்கு, கமிஷன் வாங்கிக்கிட்டு ,வேலைய கச்சிதமா முடிச்சுக்கொடுப்பாங்க. மக்களும் போட்டிப்போட்டு வாங்குறாங்க. இப்போ போட்டக்காசை விட பல மடங்கு கும்பானிக்கு திரும்ப கிடைச்டுச்சு, இனிமேல் டீத்தூளை விற்கவில்லை என்றாலும் கவலையே இல்லை.

இங்கே குப்பனின் நிலை என்னாச்சுனு பார்த்தா அவரோ இன்னமும் மூன்று ஆண்டுக்கு முன்னர் வாங்கிய 50 ஆயிரம் கடனையே அடைக்க முடியாமல், கந்து வட்டி கந்தனை பார்த்தாலே தலையில் முக்காடுப்போட்டுக்கொண்டு ஓடிவிடுகிற நிலையில் இருக்கார்.

கும்பானிக்கு வியாபாரம் நல்லா போகுது, நிறைய சம்பாதிக்கிறார் ,அப்போ அரசுக்கும் நிறைய வருமான வரிக்கட்டுவார்னு நினைப்பீங்க தானே அதுவும் இல்லை, அப்போ வரியைக்கட்டாமல் ஏய்க்கிறாரா என்றால் அப்படியும் சொல்ல முடியாது ஆனால் அரசாங்கமே சலுகை கொடுக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கும்பானியோட சம்பளம்னு எதுவும் காட்டிக்க மாட்டார்,அப்படியே காட்டினாலும் அது சொற்ப தொகையா இருக்கும். அவருக்கு வரும் வருமானம் அவரது நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலம் வரும் டிவிடென்ட் வருமானம் எனக்காட்டுவார்,அப்படிக்காட்டினால் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் அடிப்படையில் வரிப்போடுவாங்க,

வழக்கமான வருமான வரி விகிதம் ஆனது,

2 லட்சம் வரை - வரி இல்லை,

2-5 லட்சம்-10%

5-8லட்சம் வரை-20%

8 லட்சத்திற்கு மேல் 30% வரி ஆகும்.

ஆனால் தொழிலதிபர்கள் ,பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர் லாங்க் டெர்ம் கேபிட்டல் கெயின் டாக்ஸ் என்ற வகையில் ஒரே விகிதமாக 20% வரிக்கட்டினாலே போதும், அந்தப்பணத்தையும் ,நிறுவனத்தின் பொது வருமானத்தில் இருந்து கட்டிடுவாங்க,அப்படித்தான் கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் விதி இருக்கு.

இப்போ டீக்கடை குப்பனுக்கே வியாபாரம் நல்லா சூடுப்பிடிச்சு நல்ல லாபம் வருதுனு வச்சுக்கோங்க, அவருக்கு ஆண்டு வருமானம் 10 லட்சத்தினை தாண்டிவிட்டால் போதும் 30% வரிக்கட்ட சொல்லுவாங்க.ஏன் எனில் அவர் பங்கு சந்தையில் இல்லை என்பதாலே அப்படி.

குப்பனுக்கு மட்டுமில்லை நாம் அனைவருக்குமே அப்படியான வருமான வரி விகிதம் தான்.

இதனை எப்படி சொல்கிறார்கள் என்றால் உழைப்பின் மூலம் வரும் வருமானத்திற்கு அதிக வரியும் ,மூல தனத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு குறைவான வரியாம்.

இப்படிலாம் நடக்குதா என நீங்கள் நினைக்கலாம், கடந்த ஆண்டு இந்தியாவில் அதிக வருமான வரிக்கட்டியது உலகின் முன்னணி இந்திய பணக்காரர் ஆன அம்பானிகள் அல்ல ,ஒடிஷாவை சேர்ந்த ஒரு இரும்பு தாது சுரங்க அதிபரே ஆவார், 95 கோடி ரூ வருமான வரிக்கட்டி சாதனைப்படைத்துள்ளார். மேலும் முதல் மூன்று இடங்களும் ஒடிசா இரும்பு தாது அதிபர்களுக்கே போய்விட்டது.

செய்திக்கான சுட்டி:


இதை ஏதோ நான் பங்கு சந்தை, மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது ஏதோ கடுப்பில் சொல்கிறேன் என நினைக்கலாம் சிலர், ஆனால் இதை எல்லாம் சொன்னது பங்கு சந்தையின் குரு என சொல்லப்படும் வாரென் பஃபெட் ஆவார், நான் இந்தியாவுக்கு ஏற்றாப்போல ஒரு உதாரணக்கதைய மட்டுமே சொன்னேன் :-))

வாரன் பஃபெட் கட்டுரை:


மேலும் அவர் பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும், என்னிடமும் வசூலித்துக்கொள்ளுங்கள் என வெளிப்படையாக எழுதியுள்ளார். சுட்டியில் சென்று முழுவதும் படிக்கவும்.

ஆனால் இந்தியாவிலோ இப்படி பேசக்கூட ஒருவரும் தயாரில்லை, எப்படி எல்லாம் வரிக்கட்டாமல் தவிர்க்கலாம் என பல திட்டங்கள் போடுகிறார்கள், அதற்கு மன்னு மோகன் அரசும் பலமாக ஒத்துழைக்கிறது.

அப்படி தொழிலதிபர்களுக்கு சாதகமாக போட்ட திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம், அவற்றில் ஏகப்பட்ட சலுகைகள்,

#முதலீட்டுக்கு 100% வருமான வரி விலக்கு.

#உற்பத்தி பொருளுக்கு, லாபத்திற்கு, முதல் 7 ஆண்டுகளுக்கு 100% வரிவிலக்கு பின்னர் ,25%,அப்புறம் 50% என ,மொத்தம் 15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டணம் இல்லை.

# மறு விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கும் வரி இல்லை.

உ.ம்: சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 ஏக்கர் இடம் இருக்கு,ஆரம்பத்தில் குறைவான விலைக்கு வாங்கிய இடத்தை சில ஆண்டுகளுக்கு பின்னர் அதில் ஒரு ஏக்கரை அதிக விலைக்கு விற்றால் அதற்கு வரி கிடையாது.

சாதாரண குடிமக்கள் அப்படி தங்கள் இடத்தினை விற்று லாபம் சம்பாதித்தால் கேபிட்டல் கெயின் டாக்ஸ் எனக்கட்ட வேண்டும்.

# வெளியில் இருக்கும் துணை நிறுவனங்களில் இருந்து பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் விற்பனை வரி,சேவை வரி இல்லை.

#500 மில்லியன் டாலர் வரை வெளிநாட்டு நிதியமைப்புகளிடம் கடன் பெற அனுமதி பெற வேண்டியது இல்லை.

இப்படிப்பல சலுகைகள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேலை வாய்ப்பையும்,உற்பத்தியை பெருக்க தானே அரசு செய்கிறது எனலாம், ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதற்கு அமெரிக்காவே உதாரணம்.ஏன் எனில் இந்த திட்டத்தையே அமெரிக்காவைப்பார்த்து தான் மன்னு மோகன் காப்பி அடித்துள்ளார்.

அமெரிக்காவில் 60-70 களிலேயே இத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டது.நிறைய உற்பத்தி ஆனது என்னமோ உண்மை தான் ஆனால் இப்போது என்ன ஆனது என்றால் குமிழி உடைந்து விட்டது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஏன் எனில் 1000 பேர் செய்ய வேண்டிய வேலையை நவீன எந்திரங்கள்,கணினி என வைத்து 100 பேரைக்கொண்டே இத்தகைய சிறப்பு தொழிற்சாலைகளில் முடித்து விடுவதால் ஆரம்பத்தில் சில வேலைவாய்ப்புகள் உருவானாலும் நீண்டக்கால நோக்கில் வேலை வாய்ப்பின்மையே உருவாக்குகிறது.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறார், ஏழை மேலும் பரம ஏழை ஆகிறான்!இதுவே நவீன பொருளாதார சித்தாந்தத்தின் பலன்!

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

நியுயார்க் டைம்ஸ்,டைம்ஸ் ஆப் இன்டியா,கூகிள், ரெடிப் இணைய தளங்கள்,நன்றி!




Tuesday, May 22, 2012

தீப்பிடிக்க ...தீப்பிடிக்க நானோ காருடா ...!




வந்த புதிதில் ஒரு லட்சம் ரூபாய் கார் என்ற பட்டத்துடன் இந்திய கார் சந்தையில் புகுந்து நடுத்தர மக்களின் மனதில் தீப்பிடிக்க வைத்த நானோ கார் இப்போதெல்லாம் அதுவே தீப்பிடித்து செய்தியாகிக்கொண்டிருக்கிறது.

ஒரு உண்மை சம்பவம்:

நானோ எரிவதுப்பற்றி சில செய்திகள் படித்திருந்தாலும் ஒரு பதிவு போடலாமா வேண்டாமா என தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது, சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவில் ,வெங்கி என்கிற இம்சை என அறியப்படும் மூத்தப்பதிவரின் நானோ எரிந்து விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதையும்,வெங்கி மயிரிழையில் தப்பியதையும் பகிர்ந்துக்கொண்டார், அதனைப்பார்த்த பின்னரே பதிவு போட்டால் தப்பில்லை,நாலு பேருக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனப்போட்டாச்சு.

மேலும் விபத்திற்காக இழப்பீடு கேட்டு டாடா மோட்டாரிடம் விண்ணப்பித்தும் கிடப்பில் இருக்கிறது ,என்றும் "கேட்டால் கிடைக்கும்" என்ற அவர்களின் அமைப்பின் மூலம் அனைவரும் டாடா மோட்டார் முகநூலில் கேட்கவும் சொல்லி இருக்கிறார்.

செய்தியுடன் கூடியப்புகைப்படம்:


வெங்கியின் முகநூல் பக்கம்:


கேட்டால் கிடைக்கும் விவரங்களுக்கு:

நானோ கார் தீப்பிடிக்க என்ன காரணம் , கட்டமைப்பில் உள்ள கோளாறு, அதன் குறை நிறைகளையும் ,கொடுக்கும் காசுக்கேற்ற தரமான காரா என அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

நிறைகள்:

*விலை மலிவானது என சொல்லப்படுகிறது ஆனால் அப்படியல்ல கொஞ்சம் வசதிகளுடன் வாங்க வேண்டும் என்றால் 2.60 லட்சம் ஆகிவிடும்.

*குறைவான முன் தொகை, மாதத்தவணை என அப்படியும் நடுத்தட்டு மக்களின் காராகவே கருதப்படுகிறது ஒரு கூடுதல் தகுதியே.

*திருப்பும் ஆரம் சுமார் 4 மீட்டர் எனவே குறுகலான,ஜனசந்தடி மிக்கப்பகுதிகளில் பயன்படும்.

* மைலேஜ் நன்றாக உள்ளது.

* டாடா என்ற நம்பகமான பிராண்ட்(இப்போ அந்த நம்பகத்துக்கு வேட்டு வைப்பதும் நானோவே)

என்னால் இந்த அளவுக்கு தான் நானோவின் பலமாக சொல்லமுடியும், அவர்கள் இன்னும் பல பலன்கள் சொல்லக்கூடும் அதெல்லாம் உண்மையில் காகித வாக்குறுதிகளே.

இப்போது குறைகளை காணலாம்.,

வடிவமைப்பு குறை-1

* அதிக இடவசதி எனச்சொல்லிக்கொள்வது ஒரு சுய தம்பட்டமே ,காரின் ,நீளம்,அகலம் மிக குறைவே பின்னர் எப்படி அதிக இடவசதி, உயரத்தினை அதிகரித்து , கன அளவை அதிகரித்து உள்ளே இட வசதி என்கிறார்கள்.

உயரமானவர்களுக்கு தலை இடிக்காது என்கிறார்கள் ஆனால் உட்காரும் போது கால் நீளுமே அதற்கு இடம் எங்கே? கொஞ்சம் பருமனானவர்கள் என்றாலும் கஷ்டமே.

மேலும் நீளம்,அகலம் விகிதத்திற்கு ஏற்ப காரின் உயரம் இருக்க வேண்டும், இல்லை எனில் வளைவுகளில் உருளும் அபாயம் உண்டு, ஏன் எனில் உயரம் கூடும் போது மைய ஈர்ப்பு புள்ளி (cg-Centre of gravity)உயரத்தில் அமையும், திடமாக தரையில் இருக்க மைய ஈர்ப்பு விசை புள்ளி உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

இரட்டை அடுக்கு பேருந்துகளில் இந்நிலை ஏற்படும். இதனை தவிர்க்க கீழ் தளத்தில் அதிக எடையும், மேல் தளத்தில் குறைவாகவும் இருக்குமாறு செய்வார்கள்.

படம்-1 புவியீர்ப்பு மையம் தாழ்வாக உள்ளப்போது,நிலைப்பு தன்மை அதிகம் எனக்காட்டுகிறது.


படம்-2 , புவியீர்ப்பு மையம் உயரத்தில் இருக்கும் போது நிலைப்பு தன்மை இழப்பதைக்காட்டுகிறது.


வழக்கமான கார்களிலும் வளைவில் திரும்பும் போது சாய்வது போன்ற பிரமை ஏற்படும், நாமும் வளைவின் வெளிப்பக்கம் நோக்கி தள்ளப்படுவோம். ஆனால் கார் சாய்ந்து விடாது நிலையாகவே இருக்கும்.

மேற்சொன்னது எல்லாம் நடக்க காரணம் மைய ஈர்ப்பு விசை சரியான புள்ளியில் இருக்குமாறு கார் வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம் ஆகும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பிற்கு "ஆண்டி ரோல் பார்" (Anti roll bar)என்ற ஒரு இருப்பு கம்பி அமைப்பு காரின் முன் ,பின் அச்சுகளில் பொறுத்தப்பட்டிருக்கும், தரமான கார்களில் இரண்டு அச்சிலும், கொஞ்சம் விலைக்குறைவான கார்களில் முன் அச்சில் மட்டும் பொறுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் டாடா நானோ காரில் முன்,பின் என இரண்டு அச்சிலும் ஆண்டி ரோல் பார் இல்லை.இதனை நாம் விரும்பினால் பொறுத்திக்கொள்ள முடியும்,ஆனால் அதற்கான அமைப்பு காரில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை.

எனவே நானோ வேகமாக செல்லும் போது வளைவில் உருண்டு விடும் அபாயம் உள்ளது.

ஆண்டி ரோல் பார் செயல்படும் விதம்:

காரினை இடப்பக்கமாக திருப்புகிறோம் எனில் ,இடப்பக்க சக்கரம் கீழ் அழுந்தும், அதே சம்யம் வலப்பக்க சக்கரத்தின் மீது அழுத்தம் குறைந்து மேலே தூக்கும் , அப்படி தூக்கும் போது 30 டிகிரிக்கு மேல் வாகனம் சாயுமெனில் உருண்டு விடும். இந்த கணக்கு வாகன வடிவமைப்பு, அதில் உள்ள நிறைப்பொறுத்து மாறும், 30 டிகிரி என்பது பொதுவான அளவு.

ஆண்டி ரோல் பார் பொறுத்தப்பட்ட கார் எனில் வலப்பக்க சக்கரம் மேலே தூக்காமல் கீழே அழுத்தி சாலையில் பிடிப்பை ஏற்ப்படுத்தும். ஒருப்பக்கம் கீழே சென்றால் அதற்கு ஏற்ப அடுத்தப்பக்கதில் கவுண்டர் பேலன்ஸ் செய்யும் வகையில் ஆண்டி ரோல்ப்பார் வடிவமைக்கப்பட்டு வாகன அச்சில் பொறுத்தப்பட்டு ,,இடம்,வலம் என இரண்டு சக்கரங்களையும் இணைத்து இருக்கும்.

anti roll bar image:


உதாரணமாக, மாநகரப்பேருந்தின் படிக்கட்டுப்பகுதியில் நிறையப்பேர் தொங்கிக்கொண்டு இருப்பார்கள் இதனால் பேருந்து சாய்ந்து விடுமோ எனப்பயப்படும் அளவில் ஒருப்பக்கமாக சாய்ந்துக்கொண்டு போவதைப்பார்த்திருப்பீர்கள், வாகனத்தின் கூடு தான் சாய்வாக இருக்கும் ஆனால் இரண்டு அச்சின் சக்கரங்கள் இடம்,வலம் என இரண்டுப்பக்கமும் சமமாக சாலையில் இருக்கும். இதற்கு ஒரு காரணம் ஆண்டி ரோல் பார் ,மற்றது வாகனத்தின் மைய ஈர்ப்பு விசைப்புள்ளி குறைவான உயரத்தில் இருப்பது.

டாடா நானோவில் ஆண்டி ரோல் பாரும் இல்லை, மைய ஈர்ப்பு விசையும் உயரமாக வருவது போல வடிவமைப்பு, என எதிர்மறையாக உள்ளது.

வடிவமைப்பு குறை-2

இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கார்களிலேயே பின் புற எஞ்சின்(rear engine and rear wheel drive)கொண்ட கார் நானோ மட்டுமே(like auto,share auto) வெளிநாடுகளில் போர்ஷ், வோல்க்ஸ் வாகன் பீட்டில் போன்றவை பின் எஞ்சின் வாகனங்களே ஆனால் அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ,பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை எனவே அவற்றுடன் எல்லாம் நானோவை ஒப்பிட இயலாது.

பின் புறம் எஞ்சின் உள்ளதால் வாகன நிறை சரியான விகிதத்தில் முன்,பின் அச்சுகளிடையே சமமாக நிறவப்பட வேண்டும், (weight balance or mass centralization)ஆனால் நானோவில் அப்படியில்லாமல் பின் அச்சின் மீது 60% எடையும், முன் அச்சில் 40% வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின் அச்சில் எடைக்கூடினால் என்ன ஆகும்?

வாகனம் வளைவில் சீராக திரும்ப டிபரன்ஷியல் கியர் (differential gear)என்ற அமைப்பு பயன்ப்படுகிறது. அதுப்பற்றி முன்னரே ஒரு பதிவிட்டுளேன். அவற்றை இங்கு காணவும்



வாகனத்தின் எடை சமச்சீராக உள்ள கார்களுக்கே டிபரன்ஷியல் கியர் மட்டுமே சீரான திரும்புதலுக்கு உயர் வேகத்தில் உதவாது என்பதால் "ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம்"(ABS_ Anti brake lock system) எலக்ட்ரானிக் பேலன்ஸ் கண்ட்ரோல்" (EBC-electronic balance control) and EPS -eletronic assited power steering ஆகியவை பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்தியாவில் விற்கப்படும் நானோக்களில் பொறுத்தப்படவில்லை,சாதாரணமாக காணப்படும் பவர் ஸ்டியரிங்க்கூட இல்லை..மேலும் பின் புற எஞ்சினால் எடையும் சமச்சீராக இல்லை, இந்நிலையில் வளைவில் திருப்பும் போது என்ன ஆகும் எனில்

"குறைவான திருப்புதல் விளைவு "(Under steering effect)ஏற்படும். அப்படியெனில் என்ன,


ஒரு கார் நேர்க்கோட்டில் பயணிக்கிறது எனில் அதன் மீது நேர்க்கோட்டு உந்தம் ஏற்படும் இது தொடர்ந்து நேராக செல்லும் நிலையில் இருக்கும், அப்படி இருப்பது நிலைமம் (inertia)என்பார்கள்.நியூட்டனின் விதியை நினைவில் கொள்க.

இப்போது வலப்புறமாக வாகனத்தினை திருப்ப முயன்றால் என்ன ஆகும் எனில் முன் சக்கரம் மட்டுமே திரும்பும் ஆனால் வாகனத்தின் உடல் மீது செயல்படும் ,உந்தம் ,நிலைமம் காரணமாக நேராக செல்ல எத்தனிக்கும், இதனால் வாகனத்தின் மீது ஒரு திருப்பு விசை செயல்ப்படும், இப்போது இரண்டு அச்சுகளில் பின் அச்சில் எடை அதிகம் இருந்தால் அதற்கு அதிக உந்தம் கிடைத்து பக்கவாட்டில் முன்னால் வரப்பார்க்கும் ,கிட்டத்தட்ட சுழலப்பார்க்கும்(spin), பின்பகுதியானது சாலையைவிட்டு சறுக்கிக்கொண்டு போவது போல போகும், இதனை டிரிப்ட் (drift)என்பார்கள்.

பந்தய மைதானங்களில் கார்கள் இப்படி டிரிப்ட் ஆகிக்கொண்டு செல்வதைப்பார்த்து இருக்கலாம்.டிரிப்ட் ரேஸ் என தனியாகவும் ஒரு பந்தயம் உண்டு. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார்கள் தான் டிரிப்ட் ஆனாலும் புரளாமல் இருக்கும், நானோ போன்றவை பக்கவாட்டில் பல்டி தான் அடிக்கும்.

இதே விளைவு சாலையின் இடப்பக்கமாக செல்லும் போது இடப்பக்கம் திருப்ப கடினமாக இருக்கும் ,அப்போது அழுத்தம் கொடுத்தால் அதிகம் திரும்பி விடும் இதை அதிக திருப்புதல் விளைவு (over steering effect)என்பார்கள். இது போன்று நிகழ்ந்தால் பக்கத்தில் வரும் வாகனத்தின் மீதோ அல்லது எதிர் திசையில் வரும் வாகனத்தின் மீதோ உரசிவிடும்/மோதிவிடும் அபாயமும் உள்ளது.


எனவே மற்றக்கார்களை போல வளைவில் வேகமாக நானோவை ஓட்டக்கூடாது.

நானோவில் குறை/அதிக திருப்புதல் விளைவை தடுக்க ஒரு முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் அதுவே ஒரு பயன்பாட்டுக்குறைப்பாடு ஆகிவிட்டது எனலாம், அது என்னவெனில்,

நானோவில் பின் சக்கரங்கள் முன் சக்கரங்களை விட பெரியவை, 155 மி.மி ஆரம் கொண்டவை முன் சக்கரங்கள் 135 மி.மி ஆரம் கொண்டவை சிறியவை. இப்படி பின் சக்கரங்களை பெரிதாக்குவதன் மூலம் பின் அச்சுக்கு அதிக சாலைப்பிடிப்பு (road grip)ஏற்படும் இதனால் குறை திருப்பல், மிகை திருப்பல் விளைவு சிற்றிது கட்டுப்படுத்தப்பட்டு "டிரிப்ட்" ஆவது ஓரளவுக்கு குறையும், ஆனால் இம்முறை ஓரளவுக்கு மட்டுமே கைக்கொடுக்கும்.

இப்படி இரண்டு அச்சுக்கும் வேறு அளவில் டயர்கள் இருப்பதால் ,ஒரே ஸ்டெப்னி டயரைப்பயன்ப்படுத்த முடியாது. நானோ வாங்கும் போது கொடுக்கும் ஸ்டெப்னி டயர் முன் சக்கரத்துக்கானது,எனவே முன் சக்கரம் பங்சர் ஆனால் மட்டுமே உதவும்,பின்னால் பங்சர் ஆனால் கழட்டி எடுத்து சரி செய்து மாட்டிக்கொள்ள வேண்டும். ட்யூப்லெஸ் டயர் என்பதால் பங்சர் ஆனாலும் சுமார் 50 கி.மீ ஓட்டி செல்ல முடியும் என்பதை வைத்தே சமாளிக்கவேண்டும்.

நானோவில் பின் புற ஹேட்ஜ் டோரையும் திறக்க முடியாது.பாதியில் ரேடியேட்டர் அணுக மட்டுமே ஒரு திறப்பு உண்டு. பொருட்களை எல்லாம் உட்புறமாக மட்டுமே வைக்க ,எடுக்க முடியும் என்பதும் ஒரு வடிவமைப்பு குறையாகும்.

இது போல இன்னும் சில பல வடிவமைப்பு குறைகள் இருக்கு மிகவும் ஆபத்தான சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுளேன், இப்போது ஏன் தீப்பிடிக்கிறது என்பதைப்பார்க்கலாம்.

நானோ தீப்பிடிக்கவும் பின் புற எஞ்சின் வடிவமைப்பே காரணமாக இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு, ஏன் எனில் டாடாவே சில தீப்பிடிப்பு சம்பவங்களை ஆராய்ந்து சொல்லியுள்ளது என்னவெனில் ,பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்தது(rupture in fuel tube), அல்லது சைலண்சரில் ஏதோ ஒரு பொருள் சிக்கி அடைப்பு ஏற்பட்டது ஆகியவையே காரணம் என சொல்லியுள்ளது.

இதன் காரணமாக பல நானோக்களில் பெட்ரோல் செல்லும் குழாய்களை மாற்றியும் கொடுத்துள்ளது.

பெட்ரோல் குழாய்கள் வெடிப்பதற்கும்,பின் புற எஞ்சினுக்கும் என்ன தொடர்பு?

டாடா நானோவில் பெட்ரோல் டேங்க் முன்புற டிரைவர் சீட்டுக்கு அடியில் உள்ளது, பேட்டரி அதற்கு பக்கத்து சீட்டுக்கு அடியில் உள்ளது. பெட்ரோல் டேங்க் உள்ளே இருப்பதும் அல்லாமல் மின்கலத்துக்கும் அருகில் இருப்பதால் மின்சுற்றுக்கோளாறால் தீப்பிடித்தால் ஓட்டுநரே முதல் பலியாவார் என்பது மிகவும் ஆபத்தான வடிவமைப்பு குறையாகும்.

எஞ்சின் பின்புற இருக்கைக்கு பின்னர் அடியில் உள்ளது. அதன் மீது மூடிப்போட்டு மூடி லக்கேஜ் வைக்கும் பகுதியாக்கிவிட்டார்கள்,பின்பக்க பம்பர் அருகில் ரேடியேட்டர் மையமாக உள்ளது.



இப்படிப்பட்ட வடிவமைப்பில் எஞ்சினுக்கு இயற்கையான காற்றோட்டம்,மற்றும் குளிர்ச்சி கிடைக்காது, ரேடியேட்டர் மட்டுமே குளிரூட்டும் அமைப்பு.வழக்கமாக எல்லாக்கார்களிலும் முன்பக்கம் ரேடியேட்டர் இருக்கும் அப்போது தான் அதிக காற்று உள்வாங்கி நன்றாக குளிர்விக்கும்,ஆனால் நானோவிலே பின்னால் இருக்கிறது எனவே இயற்கையாக காற்று கிடைக்காது ,பேன் மூலம் வரும் காற்றே, அது சிறப்பாக குளிர்விக்க போதுமானதாக இருக்காது.

எனவே எஞ்சின் இருக்கும் பகுதியில் அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது.ரேடியேட்டர்களின் அமைவிடம் ஏன் முக்கியம் எனில், ஃபார்முலா ஒன் பந்தயக்கார்களிலும் எஞ்சின் பின் பக்கமே இருக்கிறது,அதிலும் அதிவேகத்தில் ஓட்டப்படுவதால் எஞ்சின் பயங்கரமாக சூடாகிவிடும் ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொறுத்தப்பட்ட ரேடியேட்டர்கள் நன்றாக எஞ்சினை குளிர்விப்பதால் பிரச்சினை ஆவதில்லை.

ஃபார்முலா-1 கார்களின் இரண்டுபக்கமும் ஒரு சாய்வான கோணத்தில் ரேடியேட்டர்கள் பொறுத்தப்பட்டு ,நேரடியாக காற்றுப்படும் படியே வடிவமைத்திருப்பார்கள்.அப்போது தான் விரைவாக எஞ்சினை குளிரிவிக்க முடியும்.இந்த பந்தயக்காரின் படத்தினைப்பார்த்தால் எளிதில் புரியும்.



டாடா நானோவில் முன் புறம் உள்ள பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ,பின் புறம் உள்ள எஞ்சினுக்கு செல்கிறது, நானோவில் மல்டி பாயிண்ட் பியுல் இஞ்செக்‌ஷன் (MPFI-multi point fuel injection)அமைப்பு உள்ளது. இது எஞ்சினுக்கு மேல உள்ளதும் ,எஞ்சின் மீதாக பெட்ரோல் குழாய் செல்வதையும் இப்படத்தில் காணலாம்.




சரியாக குளிரிவிக்கப்படாத எஞ்சின் அதிக வெப்பமாகிவிடுவதால் , பெட்ரோல் எஞ்சின் சிலிண்டர் உள்ளே சென்றதுமே ,ஸ்பார்க் பிளக் செயல்ப்படும் முன்னரே பற்றிக்கொண்டு வெடிக்கும் இதனை நாக்கிங் (Knocking or detonation or pingking)என்பார்கள், இது போல பல நடக்கும் போது எஞ்சின் பிஸ்டன்(piston)cylinder head, கேஸ்கெட்(gasket) எல்லாம் சிதைந்து வெளியிலும் தீப்பிழம்பு வரலாம்.



கடினமான காஸ்ட் அயர்ன் எஞ்சின் பிளாக் (cast iron block)எனில் ஓரளவு தாங்கும், ஆனால் இப்பொழுதெல்லாம் அலுமினியம்-மெக்னீசியம் கலவையிலான எடைக்குறைவான எஞ்சின் பிளாக்குகளே பயன்ப்படுகின்றன. அதிலும் நானோ எஞ்சின் மிக இலகுவான வடிவமைப்பு அதிக வெப்பம் தாங்குவது கடினமே.அதிக வெப்பத்தில் இரும்பை விட அலுமினியம் 3 மடங்கு அதிகம் விரிவடையும் என்பது கவனிக்க தக்கது.அதிக மைலேஜ் கிடைக்கவே அலுமினியம் அல்லாய் எஞ்ஜின்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

இது போன்ற எஞ்சின் சிலிண்டரில் ஏற்படும் நாக்கிங் மட்டும் இல்லாமல் இன்னொரு வகையிலும் தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

எஞ்சின் பிளாக் வெகு அருகில் பெட்ரோல் கொண்டு வரும் குழாய் உள்ளது, அப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குழாயில் உள்ள பெட்ரோல் எளிதில் ஆவியாகி விடக்கூடும் இதனால் ஏற்படும் அழுத்தம் தாங்காமல் குழாய் வெடித்தால் ,சூடான எஞ்சின் உள்ள நிலையில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

nano fire video:



இதனை டாடா நிறுவனம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாமல் புதிதாக நன்கு இன்சுலேட் செய்யப்பட்ட அதிக அழுத்தம் தாங்கும் பெட்ரோல் குழாய்களை மாற்றி பொருத்தியதிலிருந்தே ,தீப்பிடித்தலுக்கு வடிவமைப்பு ரீதியாகவே ஒரு காரணம் இருப்பது தெளிவாகிறது.

டாடா நிறுவனமே சைலண்சரில் அடைப்பு ஏற்பட்டதால் தீப்பிடித்தது என்றும் சொல்லி இருக்கிறது. அது எப்படி எனப்பார்ப்போம்.

சைலண்சர் எப்படி வேலை செய்கிறது என்பதை எனது பழையப்பதிவான
உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவது எப்படியில் காணலாம்.

எஞ்சினில் இருந்து வரும் புகையானது அதிக வெப்பமாக இருக்கும், சைலைண்சரில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் சரியாக புகை வெளியேறாது, இதனால் ஒரு பின்னோக்கிய அழுத்தம் (back pressure)ஏற்பட்டு மீண்டும் சூடான புகை எஞ்சினுக்குள் சென்று விடும் ,இதனால் எஞ்சின் குளிராமல் அதிக வெப்பமாகும் முன்னர் சொன்னப்படியே "நாக்கிங்" விளைவால் எஞ்சின் சிதைந்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இது வரைப்பார்த்ததில் இருந்து நானோவில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,பின்னால் உள்ள எஞ்சினும், சரியாக எஞ்சின் குளிர்விக்கப்படாததும் என்பது புரிந்திருக்கும்.

இது ஒரு வடிவமைப்பு குறைப்பாடு இதனை சரி செய்து நல்ல தரமான ,பாதுகாப்பான காரினை டாடா வெளியிடலாம், ஆனால் விலை ஏறிவிடும்.வெளிநாட்டில் எல்லாம் இப்படி குறைபாடு இருப்பது தெரிந்தால் உற்பத்தியை உடனே நிறுத்திவிடுவார்கள், ஆனால் இங்கோ நிலைமையே வேறு.

முன்னர் டேவூ மோட்டார்ஸ் என்ற கொரிய கம்பெனியின் சியல்லோ வகை கார்களில் இது போல தீப்பிடிக்கும் பிரச்சினை வந்து ,விற்பனைப்பாதிக்கப்பட்டு , பின்னர் வேறு சிலக்காரணங்களால் நஷ்டமும் ஏற்படவே நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.

தற்போதைய நிலையில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டால் நானோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது எனலாம் :-))

பின் குறிப்பு:

தகவல்கள்,படங்கள் உதவி,
google, team bhp,shell, youtube ,இணைய தளங்கள்,நன்றி!

Sunday, May 20, 2012

FALLING RUPEE:IMPACT ON INDIAN ECONOMY





சமீப நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக வரலாறுக்காணாத அளவில் வெகுவாக குறைந்து வருகிறது ,தற்போதைய நிலவரப்படி ஒரு டாலரின் மதிப்பு 54.47 ரூ ஆகும்.

ரூபாயின் மதிப்பு குறைய காரணங்களாக சொல்லப்படுவன,

அமெரிக்க பொருளாதாரமே சரிவில் இருந்தாலும் அதன் நாணய மதிப்பு உயர்ந்த்து வருவது எப்படி என சந்தேகம் எழலாம், உண்மையில் வேறு எந்த ஒரு நாடாக இருந்தாலும் நாணய மதிப்பு குறைந்து இருக்கும்,ஆனால் அமெரிக்க டாலர் என்பது சர்வதேச அளவிள் பல நாடுகளுக்கு தேவையான ஒரு அன்னிய செலவாணியாக இருப்பதே இதற்கு காரணம்,

சர்வதேச அன்னிய செலவாணி தகுதி எப்படி டாலருக்கு கைக்கொடுக்கிறது எனில், தற்போது யூரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை,சரிவு ஆகியவற்றாலே,அதுவும் கிரீஸில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் யுரோவின் நாணய மதிப்பு சரிவடைகிறது,எனவே பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வசம் இருக்கும் யூரோவிற்கு பதிலாக டாலரை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பி அதிக அளவில் வாங்குகின்றன.

மேலும் நிதி நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்களும் டாலரை அதிகம் கையிருப்பு வைத்திருக்க வாங்குகின்றன.அதோடு அல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்கள்,மற்றும் வங்கிகளுக்கு யூரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளே சுமார் 40% சதவீத டாலர் பரிவர்த்தனை செய்து வந்தன, அவற்றை பெருமளவு குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.



டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும் இதனால் என்ன கஷ்டம்,நஷ்டம் ,யாருக்கு லாபம் எனப்பார்க்கலாம்.

இந்தியா ஆரம்ப காலம் தொட்டே ஒரு இறக்குமதி நாடு அதாவது நாம் ஏற்றுமதி செய்வதன் மொத்த மதிப்பை விட இறக்குமதி செய்வதன் மொத்த மதிப்பு அதிகம், இதனை ஒரு நாட்டின் நிகழ்கால நிதிக்கணக்கில் (current account of nation)பற்றாக்குறை பட்டுவாடா நிலை (Balance of payment -deificit) என்பார்கள்.

உதாரணமாக இப்படி சொல்லலாம், நாம் 1000 டாலருக்கு உற்பத்தி பொருளை/சேவையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் எனில் 1500 டாலர் மதிப்பிலான பொருட்களை/சேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்கு மதி செய்து விடுகிறோம்.இதனால் என்ன ஆகிறது எனில் ஏற்றுமதி செய்வதால் கிடைத்த 1000 டாலர் தான் இறக்குமதிக்கு செலவிட அல்லது கொடுக்க இருக்கும், மீதி 500 டாலர் கைவசம் இருக்காது பற்றாக்குறையாக போகிறது.

ஒரு பாடல் பாமா விஜயத்தில் வருமே அதான் வரவு எட்டணா,, செலவு பத்தண்ணா அதிகம் இரண்டனா துந்தனா ..துந்தனா தான் எப்போதும் இந்தியாவுக்கு.

பொதுவாக ஆரோக்கியமான நிதி நிலைமை உள்ள நாட்டில்,

இறக்குமதி=< ஏற்றுமதி

என இருக்கும், அப்படிப்பட்ட நாட்டுக்கு மற்ற நாடுகளில் இருந்து அன்னிய செலவாணி வந்து குவியும் அந்நாட்டை உபரி நாடு என்பார்கள்.

இந்தியாவில்,

இறக்குமதி >ஏற்றுமதி

இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால் நமது பணம் நாட்டில் இருந்து வெளியில் செல்லும் நிலை,எனவே அன்னிய செலவாணி பற்றாக்குறையாக இருக்கும்.

அல்லது ,

ஏற்றுமதி= இறக்குமதி

என சம நிலையில் இருந்தாலும் ஆரோக்கியமான பொருளாதாரம் எனலாம்.

இந்தியா ஒரு பற்றாக்குறை நாடு , நமது இறக்குமதியின் மதிப்பு 75 பில்லியன்ன் டாலர்கள், ஏற்றுமதியை விட 15 பில்லியன்ன் டாலர்கள் அதிகம. எனவே பற்றாக்குறை(Balance of payment) 15 பில்லியன் டாலர்கள்.

அந்நிய செலவாணிப்பற்றாக்குறையை எப்படி அரசு சமாளிக்கும் எனில், அந்நிய நாடுகளிடம் கடன் வாங்கியோ, அல்லது கடன் பத்திரம் கொடுத்து அல்லது பங்கு சந்தையில் வாங்கி என.

இப்போது ஒரு அணைக்கட்ட ஒரு பில்லியன் டாலர் உலக வங்கியிடம் கடன் வாங்குகிறோம், எனில் அதனை எப்படி இந்தியாவில் செலவு செய்யும் அரசு, வேலை செய்பவர்களுக்கு டாலராக கொடுக்குமா என்ன இல்லை,அதே மதிப்புக்கு இந்திய ரூபாய் அச்சடித்துக்கொள்ளும், அந்த டாலர்களை ரிசர்வ் வங்கியில் அன்னிய செலவாணி இருப்பாக வைத்துவிடும்.

இந்த அன்னிய செலவாணிகள் எதற்குப்பயன்ப்படுகின்றன என்றால் இறக்குமதிக்கு அதில் பெருமளவு பெட்ரோலிய பொருட்களுக்கும்,அடுத்து தங்கம் இறக்குமதிக்குமே செலவாகிறது.

இப்படி பெட்ரோல்,தங்கம் என இறக்குமதி செய்து மீண்டும் டாலர் வெளியில் போய்விடும், அதை குறைக்க ஒரு வழியாகத்தான் அரசு பெட்ரோலிய,தங்க நுகர்வை குறைக்க அவற்றின் மீதி அதிக வரி, விலையேற்றம் எல்லாம் செய்கிறது.இதனால் நுகர்வு குறைய வேண்டும்,ஆனால் நம்ம ஆட்களோ போட்டிப்போட்டுக்கொண்டு அட்சய திருதியை ,அம்மாவாசைனு சொல்லிக்கிட்டு தங்கம் வாங்குவதை குறைப்பதேயில்லை.

பைக்கில் பெண் நண்பியை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உல்லாச சவாரிப்போவதையும் குறைப்பதில்லை.நாம் தான் காசுக்கொடுத்து விடுகிறோமே அப்புறம் என்ன எனலாம் ,அது ரூபாய் ,பெட்ரோல் இறக்குமதி செய்ய டாலர் அல்லவா வேண்டும்!

அரசுக்கு எப்படி ஏற்றுமதியாலர்களிடம் இருந்து டாலர் கிடைக்கிறது எனப்பார்க்கலாம், மேலும் ரூபாய் மதிப்பு குறைந்தால் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் எனவும் பார்க்கலாம்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி செய்பவர் அமெரிக்காவிற்கு 1 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார், சரக்கு டெலிவரி ஆகும் அன்று அமெரிக்கர் ஒரு லட்சம் டாலர் கொடுப்பார் என ஆர்டர் எடுக்கும் போது ஒப்பந்தம் ஆகிறது எனில் அன்று டாலர் மதிப்பு 45 ரூ என இருக்கு எனில் இந்திய மதிப்பில் 45 லட்சம் ஆகும்.

சரக்கு அமெரிக்காவில் 1 மாதம் பின்னரே டெலிவரி ஆகிறது,அன்று டாலர் திருப்பூர் ஏற்ருமதியாளருக்கு கையில் வரும் அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூ ஆகிவிட்டது எனில் அவர் 1 லட்சம் டாலரை வங்கியில் கொடுத்தால் 50 லட்சம் கிடைக்கும்.எதிர்ப்பார்த்தது , 45 லட்சம் ஆனால் 5 லட்சம் கூடுதலாக கிடைத்துவிட்டது.

இந்த காரணங்களுக்காகவே அடிமாட்டு விலைக்கு கூட ஏற்றுமதி செய்ய திருப்பூரில் பலரும் முன்வருகிறார்கள். உற்பத்தி செய்த பொருளை அடக்க விலைக்கு விற்றாலும் அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தின் மூலம் லாபம் கிடைக்கும் என கணக்குப்போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.பலரும் ஏற்றுமதி ஆர்டர் எடுத்துவிட்டு டெலிவரி நாளுக்குள் டாலர் மதிப்பு உயர வேண்டும் என டென்ஷனுடன் இருப்பார்கள் ;-))

இதிலும் அபாயம் உண்டு , டாலர் மதிப்பு குறைந்து விட்டால் கையை சுட்டு விடும்,காரணம் மிக குறைவான விலைக்கு ,அதிலும் உள்நாட்டு விலையை விட குறைவான விலைக்கு விற்க ஒப்பந்தம் போட்டு இருப்பவர்கள் அதிகம்.

உதாரணமாக ஒப்பந்தம் அன்று ஒரு டாலர் 45 எனப்பார்த்தோம், டெலிவரி அன்று 40 ரூபாயாக டாலர் குறைந்து விட்டால் ,திருப்பூராருக்கு ஒரு லட்சம் டாலருக்கு 40 லட்சம் தான் கிடைக்கும், ஏற்கனவே அடிமாட்டுக்கு விலைக்கு பேசி இருப்பதால் 5 லட்சம் குறைந்தால் பெரும் நட்டம் ஆகிவிடும்.

இந்திய அரசுக்கோ டாலர் மதிப்பு குறையணும், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கோ உயரணும், நாட்டை விட அவர் வியாபாரம் முக்கியம் இல்லையா?

இந்த அபாயத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர் தவிர்க்க முடியாதா எனக்கேட்கலாம் முடியும் ,

விலைப்பேசும் போதே குறிப்பிட்ட லாபவிகிதம் வைத்து வழக்கமான வியாபாரம் போல ஒப்பந்தம் போடலாம், ஆனால் அப்படி செய்யாமல் போட்டியில் தனக்கே ஆர்டர் கிடைக்க வேண்டும் என போட்டிப்போட்டுக்கொண்டு விலையை குறைத்து பேசுவார்கள்,பின்னர் அன்னிய செலவாணி மூலம் சரிக்கட்டிக்கலாம் என்று. இது தேவையற்ற அபாயகரமான ஒரு வியாபார அணுகுமுறை ஆகும். இதனாலே இப்பொழுது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளார்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இப்போது நிலவும் டாலர் மதிப்பைப்பார்த்து ஆனந்தத்தில் மிதப்பார்கள் என நினைக்கிறேன்.

அதோடு அல்லாமல் வங்கி மூலம் முன் வியாபார ஒப்பந்தம்(Forward contract) போட்டாலும் நட்டம் வராமல் தடுக்கலாம். எப்படி எனில் இன்று டாலர் 45 ரூ எனில் ஒரு மாதம் கழித்து டெலிவரி ஆகும் போதும் அதே விகிதத்தில் பணம் தரும் வங்கி.அதாவது டாலர் மதிப்பு குறைந்தால் வரும் நட்டத்தினை வங்கி ஏற்றுக்கொள்கிறது. இதனால் எதிர்காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற பயம் ஏற்றுமதியாளருக்கு இல்லை.

சரி வங்கி ஏன் தானாக முன்வந்து இதை செய்ய வேண்டும், ஏன் எனில் அரசுக்கு டாலர் தேவை பெட்ரோல் வாங்க ,எனவே வங்கிகள் மூலம் இப்படி திரட்ட ஏற்பாடு. மேலும் ஒரு காரணம் இருக்கு , இப்போ டாலரின் மதிப்பு ஒரு மாதம் கழித்து 50 ரூ ஆனால் அப்போதும் ஏற்றுமதியாளருக்கு 50 லட்சம் கொடுக்காது, முன் வியாபார ஒப்பந்தம் போட்டப்போது 45 ஒரு டாலர் என்ற விகிதத்தில் 45 லட்சம் மட்டுமே கொடுக்கும், மீதி 5 லட்சம் வங்கிக்கு லாபம்..ஹி..ஹி இப்போ தெரியுமே வங்கி ஏன் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறாப்போலனு முன் வந்தது என :-))

இதனாலே திருப்பூர்காரர்கள் என்று இல்லை பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் முன்வியாபார ஒப்பந்த்தினை வங்கி மூலம் போடாமல் ,அவர்களே ரிஸ்க் என்ற ரஸ்க் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்,சில நேரம் ரிஸ்க்,பல நேரம் ரஸ்க் கிடைக்கும், இப்போ ஏற்றுமதியாளர்கள் ரஸ்க் சாப்பிடும் நேரம் :-))

ரூபாய் சரிவால் அரசுக்கு கூடுதலாக செலவு செய்து டாலர்கள் வாங்க வேண்டியதாகிறது.அப்படி கூடுதலாக செலவு செய்து டாலர் வாங்கி ,அதில் பெட்ரோல் வாங்கி, பழைய விலையில் விற்றால் நட்டம் என சொல்லித்தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறது அரசு. அரசும் கையை சுட்டுக்க விரும்பாது தானே.பெட்ரோல் விலையில் பாதி அரசின் வரி என முன்னரே ஒரு பதிவில் பார்த்துள்ளோம், வரியை குறைத்தாலே போதும் ஆனால் செய்ய மாட்டார்கள், ஒரு வியாபாரிப்போல ஏற்றியதைக்குறைக்காமல் மீண்டும் ஏற்றவே பார்ப்பார்கள்.

இங்கே இன்னோன்றையும் கவனிக்க வேண்டும், டாலர் மதிப்பு உயர்கிறது என்றால் அது உலக அளவிலும் உயர்ந்து தானே இருக்கும், எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும், இதனால் முன்னர் ஒரு பேரல் 100 டாலர் எனில் ,மதிப்பு உயர்வுக்கு ஏற்ப குறைந்து விடும் அதாவது ஒரு பேரல் 90 டாலருக்கே கிடைக்கும்,கிடைக்க வேண்டும், எனவே சரிந்த ரூபாயால் ஏற்பட்ட இழப்பு ஒரு அளவுக்கு சமன் ஆகி நாம் கொடுக்க வேண்டிய டாலர் அளவு குறைந்துவிடும், எனவே அரசுக்கு பெட்ரோல் வாங்கிய வகையில் பெருமளவு நட்டம் வர வழியில்லை, ஆனால் அரசோ தட்டையாக டாலர் விலை ஏறிவிட்டது எனவே பெட்ரோல் விலை ஏற்றப்போகிறோம் என சொல்லி மக்கள் தலையில் விலையை கட்டிவிடும் :-((

ரூபாய் சரிந்தால் ஏற்றுமதியாளருக்கு கொண்டாட்டம், அரசும் நட்டம் எனப்புலம்பினாலும் உண்மையில் பெரிய நட்டம் இருக்காது ஆனால் அஷ்டகோணாலாக முகத்தினை வைத்துக்கொண்டு நிதியமைச்சர் என்னமோ வேண்டா வெறுப்பாக செய்வது போல பெட்ரோல் விலையை ஏற்றிவிடுவார், உண்மையில் இதில் உதைவாங்குவது பொது ஜனமாகிய நாம் தான் :-))

# ரூபாய் மதிப்பு சரிவை சரிக்கட்ட அரசு என்ன செய்யும் எனில்,

1)ரிசர்வ் வங்கியில் உள்ல கையிருப்பு டாலர்களை பயன்படுத்தும்,நீண்ட நாட்கள் சரிவு நீடித்தால் கஷ்டம் தான்

2)தங்கம் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும்,அல்லது வரி உயர்த்தி இறக்குமதியாளர்களை விரட்டும்.

3)வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,இந்திய வங்கியில் வைப்பு நிதியாக வைத்தால் அதிக வட்டி தரும் என அறிவிக்கும். இதனால் டாலர் வரத்து அதிகரிக்கும்.

4)இந்தியாவில் உள்ளப்பெரிய ஏற்றுமதியாளர்கள் கைவசம் எப்போதும் பெரிய அளவில் டாலர்கள் இருக்கும்,அதில் 50% கண்டிப்பாக வைப்பு நிதியாக வைக்க சொல்லும் மேலும் கூடுதல் வட்டியும் தருவதாக சொல்லும்.

5)கடன் பத்திரங்கள், வெளிநாட்டு வங்கிகள், நாடுகளிடம் கடன் வாங்கும், சில நாடுகளுடன் அன்னிய செலவாணி ஒப்பந்தங்கள் உள்ளது அதன் மூலம் சமாளிக்கும்.

உ.ம்: ஜப்பானுடன் ஒரு அன்னிய செலவாணி உதவி ஒப்பந்தம் இருக்கிறது, இது போல சரிவு வரும் போது ஜப்பான் 15 பில்லியன் அமெரிக்க டாலர் க்டன் கொடுத்து உதவ வேண்டும், அதே போல இந்தியாவும் கொடுத்து உதவ வேண்டும்.

இன்னும் பல நடவடிக்கைகள் இருக்கு. முடிந்தவரைக்குறிப்பிட்டுள்ளேன்.

பின் குறிப்பு:

#ரூபாய் சரிவால் இன்னும் பல விளைவுகள் இருக்கு, முக்கியமாக பங்கு சந்தை தள்ளாடும், வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க முன்வருபவர்கள் குறைவார்கள், உற்பத்தி பாதிக்கும் எனலாம் பிரச்சினை இருக்கு,இங்கு ஒரு சில பிரச்சினைகளை மட்டும் அலசி இருக்கேன், மற்றவற்றை நேரம் இருப்பின் தொடர்கிறேன்.

பொருளாதார விளைவுகளை முழுமையாக ஒரே பதிவில் பேசிவிட முடியாது ,இது ஒரு எளிய முயற்சியே. மேலும் பல விவரங்களை எளிமையாக சொல்ல வேண்டும் என லேசாக சொல்லி இருக்கேன், முழுமையாக சொல்லவில்லை என மேதைகள் மல்லுக்கட்டக்கூடும் என்பதால் இந்த முன் ஜாமின் :-))

# தகவல்,படங்கள், கூகிள், ரெடிப், எகனாமிக் டைம்ஸ் இணைய தளங்கள்,நன்றி!

*****

Saturday, May 19, 2012

"வசூல்ராஜா எம்பிபிஸ்"கள் இனியாவது கிராமத்திற்கு வருவார்களா?



இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மருத்துவக்கல்லூரிகள் இருந்தாலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேவையான மருத்துவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை இல்லை எனலாம் ,மேலும் உருவாகி வரும் மருத்துவர்களும் நகரத்திலேயே தங்கி விடுகிறார்கள் எனவே கிராமப்புரங்களில் மருத்துவ வசதி நிலைமை ரொம்பவே மோசம்.


தேவையான மருத்துவர்களை உருவாக்கவே அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி ,மருத்துவப்படிப்பை குறைவானக்கட்டணத்தில் வழங்கி வருகிறது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் பணிப்புரிய செல்வதேயில்லை, அனைவரும் வருமானம்,வசதி இன்னப்பிற காரணங்களை முன்னிட்டு நகரங்களில் தங்கி விடுகிறார்கள்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் எனில் குறைந்தது 25 லட்சம் ஆகும்,ஆனால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரங்களில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு கிராமங்களில் அரசு மருத்துவராக பணி நியமனம் செய்தால் செல்ல மறுக்கிறார்கள்,இப்பிரச்சினை நீண்டகாலமாகவே இருக்கிறது, எனவே மருத்துவ மாணவர்கள் கிராமப்பணி செய்வதை கட்டாயம் என சட்டம் கொண்டு வர இருப்பதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்,.

செய்தி:


டெல்லி: மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

செய்தி சுட்டி;

இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த மகாராஷ்டிர மருத்துவக்கல்வி அமைச்சர் அவர்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் பற்றிக்கூறியது....

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

News link-2

மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது பல காலமாய் ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் பின் வாங்கிவிடும், எனவே மத்திய அரசை நம்பாமல் தமிழக அரசு , மகாராஷ்டிர மாநிலத்தினை முன் மாதிரியாகக்கொண்டு மருத்துவர்கள் கட்டாய கிராம சேவை செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம், எது எதற்கோ அதிரடியாக செயல்படும் அம்மையார் இவ்விஷயத்தில் இரும்புக்கரமோ ,சாட்டையோ சொடுக்கினால் மக்களுக்கு பயன் அளிக்குமே.

இனியாவது வசூல் ராஜா எம்பிபிஎஸ்கள் பணியாற்ற கிராமத்திற்கு போக முன் வருவார்களா?

மருத்துவ மாணவர்களின் கிராம புறக்கணிப்பு பற்றி 2007 இல் நான் எழுதிய பதிவு,


--------------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,தினமலர்,சுலேகா.காம்,இணைய தளங்கள்,நன்றி!

*****

Friday, May 18, 2012

அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!



அமெரிக்க பொருளாதார சரிவும் ,வால்ஸ்ட்ரீட் முற்றுகையும்!

இப்பதிவு மே-1 அன்று போட்ட "may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு? " என்றப்பதிவின் தொடர்ச்சியே இப்பதிவு!

சமூக நீதி:(social justice)

பிறப்பால்,நிறத்தால் பாகுபாடு பார்க்கப்பட்டு ஒருவருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை தடுத்து அனைவரும் சமம் என சொல்வது சமூக நீதி,

அப்படி சமூக சமத்துவம் மறுக்கப்படும் சூழலில் அதற்காகப்போராடுவது சமூக நீதிப்போராட்டம் எனலாம்.

உதாரணமாக கீழ்காண்பவற்றை சொல்லலாம்,

மேல் நாடுகளில் வெள்ளை,கருப்பு இனபேதம் நீக்கி உரிமைகளுக்காக போரடிய நிகழ்வுகள்.மார்ட்டின் லூதர் கிங்,ஜூனியர், மற்றும் ஆப்பிரஹாம் லிங்கன் போன்றோர் அமெரிக்காவில் சமூக நீதிக்காக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.தற்போது இனவாதம் பேசுவது,பழிப்பது போன்றவை குற்றம் என்னும் அளவில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் வர்ணாசிரம வகைப்பாடுகளால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வு பேதங்களை நீக்க போரடிய நீண்ட வரலாறு உண்டு, அம்பேத்கர், பெரியார். ஆகியோரின் போராட்டங்கள் அவ்வகையே . முழுதும் இல்லையென்றாலும் சமூக நீதி அடைவதில் ஓரளவு வெற்றியடைந்துள்ளோம்.

உலக அளவிலும் சரி ,இந்தியாவிலும் சரி சமூக நீதி குறித்தான விழிப்புணர்வு, சம நிலை என்பன ஓரளவு சாத்தியமாகியுள்ளது எனலாம்.

சமூக நீதிப்போராட்டங்களை பற்றி பின்னர் முடிந்தால் தனிப்பதிவிடுகிறேன்.

ஆனால் இந்தியாவில் ஒருவரின் வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதார நீதி குறித்து பெரிதாக பேசப்பட்டதா ,போராடப்பட்டதா என்றால் கேள்விக்குறி தான் எஞ்சுகிறது.

ஒருவன் ஏழையாய் இருக்கிறான் என்றால் அவன் ஏழையாய் பிறந்துவிட்டான் அதற்கு அடுத்தவர்களோ அரசோ என்ன செய்ய முடியும் என பொதுவான அபிப்பிராயம் உருவாகியுள்ளதே காரணம் ஆகும்.

கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் அதற்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொண்டாலும் எதுவும் நடைமுறையில் நிகழவில்லை,கொள்கையளவில் மட்டுமே அனைத்தும் பொதுவுடமையாக இருக்கு.


பொருளாதார நீதி(Financial justice)

வாழ்வதற்கு தேவையான வளங்கள்,பொருளாதார கூறுகள் ஆகியவற்றில் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு.வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை என சொல்வதே பொருளாதார நீதி!

அனைத்து ஜனநாயக நாட்டின் அரசியலைப்பும், கொள்கைகளும் என்ன சொல்கிறது ஒவ்வொருவரின் வாழ்வுரிமைக்கும் , வாழ்வாதாரத்துக்கும் பாதுகாப்பும், சம உரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் நடை முறை வேறாக இருப்பது கண்கூடு.

பொருளாதார நீதி ,சமத்துவம் என யாரும் போராடவில்லையா எனக்கேட்கலாம், அதற்காக உருவானது தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் மூலமே பொருளாதார சமத்துவமே, அனைவருக்கும் அனைத்தும் , என சொல்லி அனைவருக்கும் பொருளாதார ரீதீயாக மேம்படுத்த வளங்களை பகிர வேண்டும் என்று சொல்கிறார்கள்,ஆனால் எப்படி அந்த கொள்கையை அடைவது என்ற வழியினை அறியாமல் செயல்படுத்துவதில் சொதப்பியதன் விளைவே சோவியத் ருசியாவின் சிதைவுக்கு மூலகாரணம் ஆனது வரலாறு.

மே தினம், ஆக்குபை வால்ஸ்ட்ரீட்(occupy wallstreet), பொருளாதார நீதி எல்லாம் ஒரே புள்ளியில் இணைபவையே. மே தினம் உழைப்பாளர்களின் உரிமையையும், ஊதியத்தையும் நிர்ணயிக்க போராடிய தொழிலாளர் பொருளாதார நீதி போராட்டத்தின் அடையாளமே.

அதே போன்ற ஒரு போராட்டமாக வெடித்திருப்பது தான் ஆக்குபை வால்ஸ்ட்ரீட், ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு தேவையான பொருளாதாரம் கிட்ட வேண்டும், அதை ஈட்ட அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அப்போராட்டம்.

பங்கு சந்தைக்கும் ,பொதுமக்களின் பொருளாதார சம நிலை, பாதிப்புக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் பங்கு சந்தைக்கு எதிராக அணி திரள வேண்டும் என கேட்கலாம் ,அதற்கு சில உதாரணங்களை காண்போம்.

உலக பொருளாதார சரிவின் மையப்புள்ளி:

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா முதல் இந்தியா வரை பெரும்பாலான நாடுகளில் பொருளாதா மந்த நிலையும் ,சரிவும் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணமாக இருப்பது வணிக வங்கி, தொழில் வங்கி, நிதி நிறுவனங்கள் , பங்கு சந்தைகளின் செயல்ப்பாடும் அவற்றுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகை, விதி விலக்குகள் என்பதும் பலருக்கும் நம்ப கடினமாக இருக்கும் உண்மை, ஆனால் அமெரிக்க மக்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொண்டதாலே வால்ஸ்ட்ரீட்டை முற்றுகை இட்டுள்ளார்கள்.

எப்படி என இப்போது விரிவாக பார்ப்போம்,,

ஒருவர் வீடு வாங்க வங்கியிடம் வீட்டுக்கடன் வாங்கிறார், அவர் வாங்கிய கடனை சில ஆண்டுகளுக்கு வட்டியுடன் மாதத்தவணையாக கட்டுகிறார்.இதன் மூலம் வங்கிக்கு வருவாய் வரும். இது போல பலருக்கும் கடன் கொடுத்து மாதத்தவணையில் வசூலிக்கிறது. இது ஒரு வங்கியின் பொதுவான செயல்பாடு என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படி கடன் "கொடுக்கல்-வாங்கல்" நிகழ்வு இரண்டு புள்ளிகளில் முடிந்தால் சிக்கலில்லை ஆனால் சிக்கலாக்கவே சில பொருளாதார கண்டுப்பிடிப்புகள் இருக்கு ,

ஒரு பத்து பேருக்கு கடன் கொடுத்து ,தவணை வசூலிக்கிறது வங்கி என வைத்துக்கொள்வோம், இதனை ஒரு வருவாய் என கணக்கில் கொண்டு அதனை ஒரு கடன் பத்திரம் ,ஷேர் போல மாற்றிவிடுவார்கள், இது போன்று பல வீட்டுக்கடன்கள் ஒன்றாக குவிக்கப்படும்(pool) இதன் மதிப்பினை கணக்கிட்டு ரேட்டிங்க் கொடுக்க சில நிறுவனங்கள் இருக்கு அவை கொடுக்கும் ரேட்டிங்க் அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் பங்கு கொள்ளத்தக்க சான்றாக மாறிவிடும் இதனை டெரிவேட்டிவ்ஸ் (derivatives)என்பார்கள்.

டெரிவேட்டிவ்ஸ் என்றால் ஒன்றிலிருந்து மதிப்பினை உருவாக்கி கொண்டு வருவது என பொருள்.

டெரிவேட்டிவ் மூலம் கிடைக்கும் பங்கு போன்ற சான்றுக்கு செக்யுரிட்டி என்று பெயர். இதனை பங்கு சந்தையில் வியாபாரம் செய்யலாம் அல்லது இன்னொரு பெரிய வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கலாம்,அல்லது விற்கலாம்.

வழக்கமாக ஒரு பொது வணிக வங்கி என்ன செய்கிறது என்றால் அதன் வசம் உள்ள செக்யீரிட்டிகளை இன்னொரு பெரிய தொழில் வங்கியிடம் விற்றுவிடும், இதனை மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டி (mbs-mortage backed securites)என்பார்கள்.

மார்ட்டேஜ் என்பது அடகு வைப்பது , வீடு என்ற பொருள் அடகாக வைக்கப்பட்டு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வந்த டெரிவேட்டிவில் இருந்து செக்யூரிட்டிக்கு வீட்டின் மதிப்பு அல்லது மாத தவணையே ஒரு பிணை என்பதன் பொருளே இது.

சிறிய வங்கி கொடுத்த கடனுக்கு இணையாக செக்யூரிட்டிகளை விற்று பணம் திரட்டி மீண்டும் கடன் கொடுக்க துவங்கிவிடும். இதன் மூலம் அதற்கு மீண்டும் மூல தனம் கிடைத்துவிடும்.

பெரிய வங்கி அந்த செக்யூரிட்டிகளை பங்கு சந்தையில் விற்று காசுப்பார்த்து விடும்.மேலும் ஒரு பாதுகாப்பிற்கு அந்த செக்யூரிட்டிகளை காப்பீடு நிறுவனங்களிலும் காப்பீடு செய்துவிடும்.இதனால் கடன் என்ற "ரிஸ்க்" பரவலாக்கப்பட்டுவிடும், கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த தவறினாலும் சொந்தக்காசுக்கு இழப்பு குறைவாகிவிடும் அல்லது இழப்பு இருக்காது.

இப்போது இந்த சங்கிலித்தொடர் வர்த்தகத்தின் வருவாய் வழி என்ன எனப்பார்ப்போம்,

தவணை வசூலிக்கும் சிறிய வங்கி அதற்கு லாபமாக கிடைக்கும் வட்டியில் இருந்து ஒரு பங்கிணை ,பெரிய வங்கிக்கு கொடுக்கும் ,பெரிய வங்கி அதில் இருந்து டிவிடெண்ட் ஆக செக்யூரிட்டியை வாங்கியவர்களுக்கு கொடுக்கும்.

இதன் மூலம் என்ன நடக்கிறது என்றால் சிறிய வங்கி கொடுத்த கடன் தொகையானது பங்கு சந்தையில் இருந்து பல சிறிய ,பெரிய முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டு விட்டது.உண்மையில் வீடு வாங்க கடன் கொடுத்தது வங்கியல்ல , பங்கு சந்தை முதலீட்டாளர்கள்.ஆனால் இடையில் செயல்படும் இரண்டு வங்கிகளும் பெருமளவு லாபத்தினை அடைவார்கள்,ஒரு பக்கம் வட்டி என்ற வருமானம் மறுப்பக்கம் பங்கு சந்தை வருமானம், ஆனால் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய தொகை தான் கிடைக்கும். பின்னர் ஏன் அவர்கள் வாங்குறார்கள், வேறு ஒன்றும் இல்லை யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தையில் விலை ஏறும் போது விற்று விட்டு அதில் லாபம் பார்க்க தான்.

ஒரு வங்கி நன்றாக செயல்ப்படும் போது ,அது என்ன டிவிடெண்ட் கொடுக்கும் என்றெல்லாம் பார்க்காமல் செக்யூரிட்டிகளின் விலைப்பங்கு சந்தையில் ஏறும் எனவே அவ்வப்போது விற்று வாங்கி லாபம் பார்த்துக்கொள்ளலாம் என்றே வாங்குகிறார்கள்.

இந்த பணப்பரிவர்த்தனை லாபம் எல்லாம் ஒழுங்காக போகும் எது வரை என்றால் வீட்டுக்கடன் வாங்கிய நபர் மாதத்தவணையை ஒழுங்காக கட்டும் வரையில் :-))

அதிக அளவில் செக்யூரிட்டிகளை உருவாக்க வங்கிகள் அதிகக்கடன் கொடுக்கும் ,இதனால் திருப்பி கட்ட வருமானம் இருக்கா என்றெல்லாம் யோசிக்காமல் கடனை அள்ளிவிட்டார்கள். சரியான வருமானம் மற்றும் கடன் திருப்பி செலுத்தும் சக்தியுள்ளவர்களை மதிப்பீடு செய்து பிரைம்(prime) என்றும் ஏற்கனவே சரியாக செலுத்த தவறிய கடன் வரலாறு கொண்டவர்களை சப்-பிரைம் (sub-primes)என்றும் வகைப்படுத்தினார்கள்.

முன்னர் சொன்னது போல அதிக அளவு கடன் கொடுக்க வேண்டும் என்று சப்-பிரைம் கடனாளிகளுக்கும் கடன் கொடுக்கப்பட்டது.ஒரு கட்டத்தில் பெரும்பாலோர் கடனை திருப்பி செலுத்தாமல் தவறவே சிறிய வங்கி பெரிய வங்கிக்கு பங்கு கொடுக்கமுடியாமல் கை விரிக்க , பெரிய வங்கி பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்காமல் கையை விரிக்க ,சந்தையில் தள்ளாட்டம் ஏற்பட்டது.

முன்னரே பெரிய வங்கி செக்யூரிட்டிகளை காப்பீடு செய்தது எனப்பார்த்தோம் அல்லவா அது எதற்கு என்றால் இது போல மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிகள் மூலம் வரும் வருவாய் நின்றால் அதனை காப்பீடு நிறுவனம் தர வேண்டும் என்றே.பெரிய அளவில் நஷ்டம் வரும் போது பெரிய அளவில் காப்பீட்டு நிறுவனம் நஷ்ட ஈடு தரவேண்டியது இருக்கும். இப்படி செய்வதையும் கிரடிட் டிபால்ட் ஸ்வாப்(cds- credit default swap) என சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு சாதாரண வீட்டுக்கடனை ,வங்கி மாற்றி வங்கி எனக்கொண்டு போய் ,காப்பீடு நிறுவனம் ,பங்கு சந்தை , அதில் பல சிறு முதலீட்டாளார்கள் என சம்பந்தப்படுத்தி சிக்கலாக்குவது தான் பொருளாதார நிபுணத்துவம் :-))

சிறிய வங்கி என்னால் கொடுக்க முடியாது என மஞ்சள் கடுதாசி கொடுக்கிறேன் சொல்லும் பெரிய வங்கி காப்பீட்டு நிறுவனத்தை நெறுக்கும் தொகை பெருசா இருந்தா அதுவும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிடும், இப்போ பெரிய வங்கியும் மஞ்சள் கடுதாசி என்று சொல்லிவிட்டால் போதும் பங்கு சந்தையில் செக்யீரிட்டிகளை வாங்கியவர்களுக்கு பட்டை நாமம் தான். இந்தக்கதை தான் அமெரிக்காவில் நடந்துக்கொண்டு இருக்கிறது.மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தான்.

இதற்கு உதாரணம் கோல்டுமேன் சாஷ்(goldman sachs),ஏ.ஐ.ஜி (american inter national group-AIG)ஆகியவை.ஏ.ஐ.ஜி அமெரிக்காவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ,இவை இரண்டும் இது போன்ற மார்டேஜ் பேக்டு செக்யூரிட்டிஸ் இல் அதிக முதலீடு செய்து ஒட்டு மொத்தமாக கவிழ்த்து விட்டார்கள்.இப்போது மூடும் சூழல் வரவே அதனை மூடக்கூடாது என அமெரிக்க அரசு 185 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்பு தொகையாக கொடுத்துள்ளது, அதில் 12.5 பில்லியன் டாலர்களை கோல்டுமென் சாஷ்க்கு ஏ.ஐ.ஜி கொடுத்தது.

கோல்டு மேன் சாஷ் நட்டம் என சொன்னாலும் அதன் ஊழியர்களின் ஆண்டு சம்பளம் மட்டுமே 30 பில்லியன் டாலர்களாக இருக்கிறது என்றால் என்ன காரணம் லாபத்தில் மிக அதிக விகிதத்தை அவர்களே அனுபவிக்க முடிவு செய்து, அவர்கள் மட்டும் தாராளமாக செலவு செய்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என ஏமாற்றலாம் என்பதாலேயே. நிலமை மோசமானால் , மஞ்சள் கடுதாசி கொடுப்போம் என அரசை மிரட்டுகிறார்கள்.

இது ஒரு உதாரணம் தான் இது போல பல வங்கிகள், பல மஞ்சள் கடுதாசிக்கதைகள் அமெரிக்காவில் இருக்கு.இதே போல வியாபார ரீதியான செக்யூரிட்டிகளும் உண்டு, அதிலும் பலத்த நட்டமே எனவே ஒட்டு மொத்தமாக அமெரிக்க பங்கு சந்தை ஆட்டம் போடவே அமெரிக்க அரசு பல பில்லியன்களை மீட்பு தொகையாக செலவிட்டுள்ளது.



இதெல்லாம் பார்த்த அமெரிக்க பொது ஜனம் போங்கி எழுந்தது தான் வால் ஸ்ட்ரீட் முற்றுகை , அவர்களின் பொருளாதார நீதியின் கோரிக்கையே பங்கு சந்தையை மூடிவிட வேண்டும் என்பதே.

ஏன் மூடச்சொல்கிறார்கள்? ஏன் எனில் ஒரு சதவீத மக்களே பங்கு வர்த்தகத்திலும் , வியாபாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், 99% மக்கள் இதற்கு வெளியில் இருக்கிறார்கள், அவர்களுக்கோ வேலை வாய்ப்பு பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை என ஆயிரம் பிரச்சினை இருக்கு அதனை சரி செய்ய அரசு முயலாமல் ஒரு சதவீத பங்கு சந்தை முதலீட்டாளர்களை காக்க பெருமளவு பணத்தினை செலவு செய்கிறது ,அப்பணம் 99% மக்களுக்கும் உரியதே அவர்களின் வரிப்பணம். ஆனால் அவர்களுக்கு எதுவும் இல்லை,வாழ்வோ நாளுக்கு நாள் மோசமாகிறது.

இதற்கெல்லாம் காரணம் பங்கு சந்தை இருப்பது தானே ,யாருக்கு வேண்டும் அது மூடுங்கள் என வால்ஸ்ட்ரீட் முற்றுகைக்கு திரண்டுவிட்டார்கள். அவர்கள் அனைவரும் நியுயார்க் மன்ஹாட்டன் சதுக்கம் அருகே வால்ஸ்ட்ரீட் அருகில் லிபெர்டி பார்க் என்ற இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்கள். திரைப்பட நடிகை ரோசன் பார் முதல் நாளும் பின்னர் இயக்குனர் மைக்கேல் மூர் போன்ற பிரபலங்கள் எல்லாம் நேராக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கைகளில் வந்த செய்திகட்டுரைகள், தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுக்கூடி உருவானது தான் வால்ஸ்ட்ரீட் முற்றுகை என்பது குறிப்பிடத்தக்கது.



காவல் துறை எவ்வளவோ முயன்றும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதுவே நம்ம ஊரா இருந்தா காவல் துறை பின்னி பெடல் எடுத்து இருக்கும், அமெரிக்காவில் மனித உரிமைகளுக்கு நல்ல மதிப்பும், பாதுகாப்பும் உள்ளதால் எதுவும் செய்ய முடியவில்லை.

பெப்பர் ஸ்பிரே அடித்த காவல் துறை அதிகாரியை வீடியோ எடுத்து உடனே இணையத்தளத்தில் போட்டனர் .இதனால் காவல் துறையை பலரும் கண்டிக்க ,காவல் துறை பகிங்கர மன்னிப்பு கேட்டுள்ளது.இவர்கள் போராட்டத்தில் இணையம் பெரும் பங்கு வகிக்கிறது, வலைப்பதிவு, டிவீட்டர், முக நூல் என அனைத்திலும் உடனுக்குடன் பகிர்ந்துவிடுகிறார்கள். இதனால் அமெரிக்கா முழுவதும் பரவி ஆக்குபை லாஸ் ஏஞ்சல்ஸ், ஆக்குபை கலிபோர்னியா என பல குழுக்கள் உருவாகிவிட்டது.

ஆக்குபை வால்ஸ்ட்ரீட் இணையதளம்:


விக்கிப்பீடியா சுட்டி:


மேலும் அனானிமஸ் ஹேக்கர்ஸ் (anonymous hackers)என்ற குழு உருவாகி வன்முறை பிரயோகிக்கும் காவல் துறை அதிகாரிகளின் குடும்ப விவரம், உறுப்பினர்கள் புகைப்படத்தினை எல்லாம் வலைப்பதிவில் போட்டு எச்சரிக்கவும் செய்வதால் காவல் துறையினர் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் தொழிலாளர் போராட்டம் நடந்து ,மே தினம் உருவானது, அங்கு தான் இப்போது பொருளாதார நீதி வேண்டி வால்ஸ்ட்ரீட் முற்றுகையும் நடக்கிறது ,கம்யூனிசம் பேசும் நாடுகளில் கூட மக்கள் இத்தகைய எழுச்சிக்காட்டவில்லை , ஏன் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் என்ன நடந்தாலும் என்ன செய்ய எல்லாம் அப்படித்தான் நடக்கும் என மக்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். மற்ற நாடுகளை விட அமெரிக்க ஜனநாயகம் மக்களை சுதந்திர கருத்துக்களுடன் உருவாக்கியுள்ளது எனலாம்.

இந்தியாவிலும் பங்கு சந்தை செயல் படுவது சிலரின் நலனுக்காக தான், 99% மக்களுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை,ஆனால் அரசு பங்கு சந்தைக்கு காட்டும் அக்கரையை மக்களிடம் காட்டுவதேயில்லை. இதை எல்லாம் கேள்விக்கேட்டு ,பொருளாதார நீதி வேண்டும் என மும்பை பங்கு சந்தையுள்ள தலால் ஸ்ட்ரீட் முற்றுகை ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அதை எல்லாம் யோசிக்க கூட இங்கு பலருக்கும் தோன்றுவதே இல்லை என்பது தான் ஆச்சர்யமானது!

ஐ.பி.எல் கிரிக்கெட் இருக்கு ,மஜ்ஜாவா சினிமா இருக்கு , டீ.வி சீரியல் இருக்கு அப்புறம் என்ன பெருசா வேண்டும் ? பல ஆயிரம் கோடி ஊழல் செய்தான்னு தெரிஞ்சாலும் தியாகியா சித்தரித்து வாழ்த்தி வணங்கி போஸ்டர் ஒட்டவும் மாலைப்போடவும் தயாரா ஒரு அடிமைக்கூட்டம் இருக்கும் நாட்டில் நாமும் கூட்டத்தில் ஐக்கியமாகி குவார்ட்டர் கிடைக்குமா என பார்ப்பதே புத்திசாலித்தனம் என வாழ பழகியவர்கள் நாம் ... வேறென்ன சொல்ல ..ஜெய் ஹோ ..ஜெய் ஹோ !

பின்குறிப்பு:

#சிற் சில பிழைகள் இருக்கலாம் ,சில நினைவில் இருந்து எழுதப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட், இணைய தளங்கள், நன்றி!

*****