Tuesday, November 29, 2011

வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!



வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீதமும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ "அன்னிய" என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.

இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின்  பெரிய பலவீனமே.

முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.



முறை சார் சில்லரை வணிகம்
என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி,  தணிக்கை எல்லாம் உண்டு.

முறை சாரா சில்லரை வணிகம்:

இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.

உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே ஒட்டன் சத்திரம் முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.

சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.

இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.

இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து 5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.

இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல் தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.

அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது  விரயம் ஆன  தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.

தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.

சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.

மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல் " laizze fair market" ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.

இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய முறைசாரா வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜண்ட்கள் கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.

ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?

எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.

முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில் 2/3  பங்கு விவசாயிக்கு சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில்  அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக 1/5 அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.

இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில் தயாரிக்கப்படுகிறது ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.

நுகர்வோருக்கு வாங்கும் அனுபவம் நல்லதாக,இனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.

இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!

இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான் இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம்  மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.

முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.

அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.

அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.

இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.

உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.

மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன் அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.




25 comments:

SURYAJEEVA said...

//முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.//

நீங்கள் அலசியதில் பெரும்பான்மை சரியாக இருக்கலாம், ஆனால் மேலே உள்ளது போல் நடக்க வாய்ப்பில்லை... அதே போல், கடைசியில் இதை எல்லாம் அரசு கவனிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள். இந்த அரசோ அல்லது பா.ஜ.க அரசோ இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் நான் நம்பவில்லை.

commodity market குறித்து நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே..

நெல்லை கபே said...

இதில் உள்ள பெரும்பிரச்னையே அவர்களிடம் பெரும்பணம் இருக்கிறது அல்லது புரட்ட முடியும். முதலில் விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும். விளைபொருட்களை நேரடியாக வாங்கிவிடுவார்கள். விவசாயிகளும் அவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். போகப் போக மற்றவர்கள் சந்தையில் காணாமல் போக பின்னர் விவசாயிகளுக்கு வேறு வழியில்லாமல் அவர்களிடம் விற்க வேண்டிய நிலமை ஏற்படும். அதுதான் இடிக்கும். நீண்டகால அடிப்படையில் பார்த்தால் வேலைவாய்ப்பு மிகமோசமாக அடிபடும்.அது உடனே நடக்காது. பத்து வருடங்களாவது ஆகும்.

வவ்வால் said...

வாங்க சூர்யா,

நன்றி,வணக்கம்,

//நீங்கள் அலசியதில் பெரும்பான்மை சரியாக இருக்கலாம், ஆனால் மேலே உள்ளது போல் நடக்க வாய்ப்பில்லை...//

ஏன் வாய்ப்பில்லை, இப்போது ரிலையன்ஸ் பிரெஷ், நீல்கிரீஸ் போன்றவற்றில் என்ன ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமா வேலை செய்கிறார்கள்? எனவே அனைது பிரிவுக்கும் வணிக விற்பனை,மேலாண்மை வேலை வாய்ப்புள்ளது.

//அதே போல், கடைசியில் இதை எல்லாம் அரசு கவனிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள். இந்த அரசோ அல்லது பா.ஜ.க அரசோ இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் நான் நம்பவில்லை.//

உண்மையில் சரியாக கவனிப்பார்களா என்றால் பதில் தெரியாது, ஆனால் ஒரு ஒழுங்கு முறை, சட்டம் ஆகியவை இயற்றப்பட வேண்டும். இப்போது கூட மினிஸ்ட்ரி ஆப் காமெர்சில் ஒரு ஆணையம் இருக்கிறது இது போல அன்னிய முதலீட்டை வரையருக்க, அவர்கள் வழிக்காட்டுதலில் தான் இப்போது இந்த அனுமதியே. அவர்களே சில மேற் சொன்ன வரையறைகளை செய்யலாம், நடைமுறைப்படுத்துவது அடுத்த விஷயம்.

//commodity market குறித்து நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே..//

அது எங்கே இந்த சில்லரை வர்த்தகத்தில் வந்தது, மேலும் 100 சதவீத அனுமதி மொத்த கொள்முதல் , கேஷ் & கேரி என்ற வகையில் ஏற்கனவே அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு செயலில் இருக்கே. இனிமே அதனை இதனுடன் சேர்த்து பேசி என்னப்பயன். இது வரைக்கும் தெரியவில்லை எனில் கூகிள் செய்துப்பார்க்கவும்.

Anonymous said...

//வர்த்தகம் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாமல் சிறிய சில்லரை வர்த்தகமாகவே இருக்கு. இது 97% , மிதி 3% தான் முறையான சில்லரை வர்த்தகம். இதனால் விற்பனை வரி, சேவை, வருமான வரி சரியாக அரசுக்கு வருவதில்லை.

மேலும் இது போன்ற கடைகளில் வேலை செய்வோருக்கு எந்த பணி நிர்ணயம், ஊதிய நிர்ணயம் என எதுவும் இல்லை. நுகர்வோருக்கும் நல்ல இனிமையான சூழல், விருப்பத்ஹ்டிற்கு தேர்வு செய்ய உரிமையும் இல்லை.என்ன வாங்க வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொண்டு போய் பட்டியல் கொடுத்து வாங்க வேண்டும், கடையில் என்ன இருக்கு, அதன் எக்ஸ்பயரி டேட் எல்லாம் நாமாக பார்த்து வாங்க இயலாது//

நண்பர் வௌவால்...

மேலே உள்ள உங்கள் ஆதங்கம் தான் எனதும்...

//எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகங்கள் தனியாகவோ, சங்கிலித்தொடராகவோ வர வேண்டும்//

இதில் நீங்கள் சொல்வது ஐடியல்(IDEAL) நிலை...

ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை....இது மேற்கத்திய நாடுகளில்,குறிப்பாக அமெரிக்காவில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே பயன்பெறும் தோற்றுப்போன பரிசோதனை...இதனால் வாழ்விழந்து போனோர் அத்தனை சிறுதொழில் வர்த்தகர்களும் தான்...இதற்க்கு இந்தியா விதிவிலக்காகாது...

//இதனால் விற்பனை வரி, சேவை, வருமான வரி சரியாக அரசுக்கு வருவதில்லை//

இதில் மட்டும் அமெரிக்காவின் முந்தய சிறு வர்த்தக முறையை நாம் பயன்படுத்தலாம்...
உதாரணத்துக்கு...ஒரு பென்சில் கடையில் விற்கப்பட்டாலோ,வாங்கப்பட்டாலோ அந்த நிமிடமே அது கணக்கில் வருகிறது...கூடவே அத்தனை வரிகளும்...ஏய்ப்பதுக்கு எந்த வழியும் இல்லாமல்... அதை நாமும் பயன்படுத்தலாம்...

வவ்வால் said...

மாயன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

//இதில் உள்ள பெரும்பிரச்னையே அவர்களிடம் பெரும்பணம் இருக்கிறது அல்லது புரட்ட முடியும்.//

அதனால் தான் அவர்களை விவசாய உட்கட்டமைப்புக்கும் செலவழிக்க அரசு வழிக்காட்டுதல் நிபந்தனை விதிக்க வேண்டும் என சொல்லி இருக்கேன்.நம் நாட்டில் காய்,கனி உற்பத்தில் பாதிக்கு மேல் நுகர்வோரை சென்றடையாமல் வீணாகப்போகிறது என புள்ளிவிவரங்கள் சொல்கிறது. உணவுப்பதப்படுத்துதல் மிக பின் தங்கியுள்ளது.

// பின்னர் விவசாயிகளுக்கு வேறு வழியில்லாமல் அவர்களிடம் விற்க வேண்டிய நிலமை ஏற்படும். அதுதான் இடிக்கும். நீண்டகால அடிப்படையில் பார்த்தால் வேலைவாய்ப்பு மிகமோசமாக அடிபடும்.அது உடனே நடக்காது. பத்து வருடங்களாவது ஆகும்.//

இப்போதும் என்ன நடக்கிறது , கமிஷன் ஏஜண்ட், வியாபாரி கூட்டணியிடம் வேறு வழி இல்லாமல் அவர்கள் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் தானே விவசாயிக்கு. அழுகும் காய்கனி விவசாயிகள் வேறு வழி இல்லாமல் செலவு செய்த தொகைக்கு கூட விற்காமல் கடனில் தத்தளிப்பதை ஏன் யாரும் கவனத்தில் கொள்வதில்லை.பிற்காலத்தில் மாட்டிக்கொள்வார்கள் எனப்பயமுறுத்துகிறீர்கள் ஆனால் நிகழ்காலத்திலேயே விவசாயி மாட்டிக்கொண்டு தான் இருக்கான்னு தெரியலையே!

பருத்தி ஏற்றுமதிக்கு தடை இருப்பதால் ஒரு போட்டி விலை இல்லாமல் இங்கே என்ன விலை என நிர்ணயம் செய்கிறார்களோ அந்த விலைக்கு விற்று விவசாயி கஷ்டப்படுகிறான், ஆனால் , பின்னாலடை உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்கு தடை இல்லையே, அவர்கள் மட்டும் அன்னிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்தூ எப்படி பார்த்தாலும் செலவுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்றுக்கொள்வார்கள். ஆனால் விவசாயி மட்டும் அவனுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு விற்க உரிமை இல்லை. யாரோ ஒருவர் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்க நிர்பந்திக்கப்படுகிறான்.விவசாயிக்கு உரிய விலை தேவை இல்லையா?

எத்தனை பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என செய்திகள் பார்த்திருப்பீர்கள், ஆனால் எத்தனை மில் அதிபர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அது என்ன விவசாயிக்கு இல்லாத உரிமை வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு மட்டும் வேண்டும்.

Anonymous said...

நண்பர் வௌவால்..

இதையெல்லாம் தாண்டி உணர்வுபூர்வமாக சிந்தித்தால்...எனக்கு அண்ணாச்சி கடையில் தான் பலசரக்கு வாங்க பிடிக்கும்...சண்முகம் கடையில் முடிவெட்ட புடிக்கும்...ஏன் முத்துகிருஷ்ணன் கறிக்கடையும்...தெருமுனை பேக்கரியும் வேணும்...
ஏன்னா...எங்க தாத்தா
கூட எங்க அப்பா கூட கைபிடிச்சு அங்கல்லாம் போன நினைவு இன்னும் இருக்கு...வேணும்னா அவர்கள் வரியை சரியா கட்ட வழிசெய்யலாம்...
அதை விட்டுட்டு இது எல்லாத்தையும் வால்மார்ட்லயோ டார்கட்லையோ பண்ண என் இதயம் ஒத்துக்கல...மூளை லேசா சரின்னு சொன்னாலும்...

ஏனா..நாம எப்படி சுத்தி வளைச்சாலும் கடைசியில...ஊருக்கு ரெண்டு வால்மார்ட்...டார்கட் ன்னு தான் இது முடியும்...

வவ்வால் said...

ரெவெரி,

வாங்க, நன்றி,வணக்கம்,

//இதில் மட்டும் அமெரிக்காவின் முந்தய சிறு வர்த்தக முறையை நாம் பயன்படுத்தலாம்...
உதாரணத்துக்கு...ஒரு பென்சில் கடையில் விற்கப்பட்டாலோ,வாங்கப்பட்டாலோ அந்த நிமிடமே அது கணக்கில் வருகிறது...கூடவே அத்தனை வரிகளும்...ஏய்ப்பதுக்கு எந்த வழியும் இல்லாமல்... அதை நாமும் பயன்படுத்தலாம்...//

அப்போ நம்ம நாட்டில் தெருவுக்கு தெரு இருக்கும் கடைகளை வரி வலையத்தில் கொண்டு வருவது மட்டும் எளிதில் சாத்தியமா?

நகரில் இருக்கும் சரவணா ஸ்டோரிலேயே முறையாக வரி வசூலிக்க முடியவில்லை :-))

நான் சொன்னது ஐடியல் நிலையாக இருக்கலாம், ஆனால் ஒரு 50% வெற்றிக்கிடைத்தாலே போதும் விவசாயிகள் பிழைத்துக்கொள்வார்கள்.

இப்போது இருப்பது போல கமிஷன் மண்டி முறை இருந்தால் இன்னும் 10 வருடம் பின் விவசாயம் செய்ய ஆளே இருக்காது. இப்போதே பெரும்பாலோர் விவசாயம் விட்டு வெளியேறுகிறார்கள், கட்டிட வேலை, சாலைப்பணி என செய்ய கிளம்பிவிட்டார்கள்.விவசாயத்திற்கான செலவு அதிகரிக்கும் விகிதத்தில் விளைப்பொருளுக்கான விலை அதிகரிப்பதில்லை.

நாம் எல்லாம் சுயநலமாக நமக்கு மலிவாக கிடைத்தால் போதும், என அதை உற்பத்தி செய்பவன் பற்றிக்கவலைப்படுவதில்லை. அதை வாங்கி விற்பவன் பாதிக்கப்படக்கூடாது, வாங்குபவன் பாதிக்கப்படக்கூடாது என கோஷம் போடுவோம்.

வவ்வால் said...

நண்பர் ரெவெரி,

வாங்க,

//என் இதயம் ஒத்துக்கல...மூளை லேசா சரின்னு சொன்னாலும்..//

உங்க இதயத்தில் கூட கறிக்கடை, அண்ணாச்சிக்கடை, சலூன் கடைக்கு மட்டும் தான் இடமா, விவசாயிக்கு எதுவும் இடம் இல்லையா? :-))

60 சதவீத மக்கள் விவசாயம் செய்றாங்க , அவங்களை கசக்கி பிழிந்து அடிம்மாட்டு விலைக்கு ஒரு 10 சதவீத வணிகர்கள் வாங்கி விற்பனை செய்றாங்க, அவங்க என்னிக்காவது விளைப்பொருள் உற்பத்தி செலவுக்கும், நாம வாங்கிற விலையும் மீட் ஆகுதானு யோசிப்பாங்களா? நாமும் யோசிப்பதில்லை.மலிவா கிடைச்சா போதும் வாங்கி சாப்பிடுவோம்! நமக்கு ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் வரலைனா போராடுவோம், பஸ் டிக்கட் விலை ஏத்திட்டா போராடுவோம். :-))ஏன் எனில் நமக்கு எல்லாம் மூளை இருக்கு!

சாராயம் விற்கிற நாட்டில் கள் வித்தா கெட்டுப்போய்டுவான்னு அதிசயமாக தத்துவம் பேசுவோம்!

60 சதவீத விவசாயிகள் ஒருங்கிணைவது இல்லை எனவே பெரிதாக சத்தம் கேட்கவில்லை, ஆனால் 10 சதவீத வணிகர்கள் சங்கம் வைத்து ஒருங்கிணைந்து போராடினால் டெல்லி வரைக்கும் எதிரொலிக்கும், வலைப்பதிவுகளும் அதிரும்!

SURYAJEEVA said...

நான் வாய்ப்பில்லை என்று கூறியது இதை தான்

//பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.//

மேலும் கமாடிடி மார்க்கெட் குறித்து என் அறிவுக்கு அவ்வளவாக எட்ட மாட்டேன் என்கிறது... எங்கேயோ சுத்தி சுத்தி வருவது போல் உள்ளது... நான் புரிந்து கொண்ட வரை.. ஒருவன் வெங்காயத்தை கமாடிடியில் வாங்கி, வெளி மார்க்கெட்டிலும் குறைந்த விலையில் வாங்கி, அதை பதுக்கி வைத்து, விலை உயரும் பொழுது இரண்டையும் ஒரே நேரத்தில் நல்ல லாபத்தில் விற்க முடியும் என்று கருதினேன்.. மளிகை கடைகளை அந்நிய நிறுவங்க நடத்த நேர்ந்தால்.. நான் கருதிய படி நடக்க அதிக வாய்ப்புள்ளதாக யோசித்தேன்... நான் நினைத்தது சரியா தவறா என்று தெரியவில்லை... அதனால் தான் அது குறித்தும் உங்கள் பார்வையை எதிர் பார்த்தேன்...

விவசாயிகள் குறித்து நீங்கள் பேசுவது சரியே... இதை வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து இறங்கி, சரி செய்கிறதா என்று இந்திய அரசு உட்கார்ந்து கவனிக்காமல்... இதை முறை படுத்த ஏன் இந்திய அரசை வலியுறுத்தக் கூடாது?

வவ்வால் said...

சூர்யா,

வாங்க,

////பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.//

இது எப்படி சாத்தியம் இல்லாமல் போகும் என்று நீங்களே தெளிவாக சொல்லிடுங்க!

எனக்கு தெரிந்து அண்ணாச்சிகடைகளில் வேலை செய்பவர்களை விட ந்ல்ல சம்பளம் , பணி நநேரம் , வேலைச்சூழல் எல்லாம் ரிலையன்ஸ்,நீல்கிரீஸில் உள்ளது.

கம்மோடிட்டி குறித்து ஏற்கனவே முழு வீச்சில் ஒடிக்கொண்டிருக்கு, 100 டன் கையிருப்பாக காட்ட ஒரு 10 டன் கையில் இருந்தாலே போதும், அது ஒரு வகையான காகித வியாபாரம், கஸ்டோடியன் ஆஃப் கூட்ஸ் னு ஒருவரை நியமித்துக்கொள்வார்கள், அவர் சான்று போதும் பொருள் கையில் இருக்க தேவை இல்லை.

மேலும் அழுகும் பொருட்களில் இது சாத்தியக்குறைவானது, தினசரி சில்லரை வணிகத்தேவைக்கு சப்ளை செய்ய வேண்டிய சூப்பர் மார்கெட்கள் கம்மோட்டில வாங்கி நமக்கு விற்க முடியாது.


gibbons goods என்று அரிசி ,பருப்பு போன்ற சமையல் வகையறாக்களை சொல்வார்கள், இதனை செயற்கையாக ஒரு அளவுக்கு மேல் விலை ஏற்றினால் மக்கள் மாற்று மூலத்திற்கு போய்விடுவார்கள்.

உ.ம்"அரிசி விலை ஏறினால் கோதுமை, அதுவும் ஏறினால், பரோட்டா, அதுவும் ஏறினால், கம்பு, சோளம் இப்படி உணவுப்பழக்கம் மாறி விடும். அரிசி பஞ்சம் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வந்தது தான் பரோட்டா! கேரளாவில் மரவள்ளிக்கிழங்கை உணவாக்கி விட்டார்கள் அப்போது, கப்பலில் இறக்குமதி செய்ததால் கப்பக்கிழங்கு என்பார்கள்.


மேலும் நம் நாட்டில் பிடிஎஸ் அமைப்பும் இருக்கு, அமெரிக்காவில் ரேஷன் கடை இருக்கா, எனக்கு தெரியவில்லை , இதெல்லாம் சில்லரை வர்த்தகத்தில் பொருள் விலை உயராமல் கடிவாளம் போடும்.

நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல், ஒப்பந்த விவசாயம் தலை எடுக்கும்.

அன்னிய முதலீட்டுக்கு முன்னரே இந்தியாவில் சந்தையை பலப்படுத்தி இருக்க வேண்டும், ஆனால் இது வரைக்கும் 3 % தான் முறையாகி இருக்கு. நம்ம இந்திய தொழிலதிபர்கள் சிந்தனை வறட்சி கொண்டவர்கள், அவ்வளவு சிக்கிரம் மாற்றம் செய்ய மாட்டார்கள், அதனால் தான் இப்போ அன்னிய சில்லரைகள் வந்துட்டாங்க,என்று பதிவில் சொல்லி இருக்கேன்.எனவே தான் அராசு கண்கானிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கேன்.

Anonymous said...

விவசாயிகள் செழிக்கணும்கறதுல மாற்றுக்கருத்தே இல்லை நண்பரே...

அதற்க்கு இந்த தாராளமயத்தின் படி எந்த உதவியும் செய்யாதுங்க்றது என் நிலைப்பாடு..

கூடவே அரசுக்கு வரி ஒழுங்கா உடனடியா கிடைத்தாலும்... இந்த தாராளமயத்தின் உதவி இல்லாமலே அரசுக்கு வரி ஒழுங்கா
கிடைக்க வைக்க முடியும்ங்கறது என் கருத்து...

ஆப்ப்ரிக்காவிலையே இது முடியுது...ஆளுக்கு ஒரு தொலைபேசி கொண்டுவந்த நம்மால இதுவும் முடியும்...

Anonymous said...

கதையில் வேண்டுமானால் எறும்பு யானையை வெல்லலாம்...வாழ்க்கை வேறல்லவா...?

நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் அமெரிக்க சிறு வணிகர்கள் அழிந்த கதை...

ஒரு டூரிங்க் கொட்டாய் எடுத்துவிட்டு ஒரு நவீன சினிமா வருகிறது நண்பரே...
நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களை அழித்து ஒரு வால்மார்ட் வருகிறது...அது தான் வித்தியாசம்....

அது நூறு குடும்பம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல...சமூகம் சார்ந்த பிரச்னை...நூறு குடும்பங்களின் பணம்,சொத்து,முதலீடு எல்லாம் அந்த சமூகத்துக்கே...
ஒரு வால்மார்ட்டின் பணம் எங்கே போகும்...கடவுளுக்கே வெளிச்சம்...

I don't have a dog in this fight...நண்பரே...

வவ்வால் said...

ரெவெரி நண்பரே,

உங்க கருத்துக்கு நன்றி!

//அதற்க்கு இந்த தாராளமயத்தின் படி எந்த உதவியும் செய்யாதுங்க்றது என் நிலைப்பாடு..//

உங்க நிலைப்பாட்டுக்கு காரணம் இல்லை எனில் எப்படி?

என் காரணம் , இந்திய வியாபாரிகள் விவாசயத்துக்கு உதவி இருக்கணும், ஆனால் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்போம்னு அடிமாட்டு விலைக்கே எல்லாம் வாங்க்கி வியாபாரம் செய்தார்கள்.

கேட்பரிஸ் கோக்கோ சாகுபடியை ஒப்பந்த விவசாயம் செய்கிறது.

பெப்சி உருளை கிழங்கை லேஸ் சிப்ஸ்காக ஒப்பந்த விவசாயம் செய்து.

ரிலையண்ஸ் ஒப்பந்த்அ விவசாயம், நேரடிக்கொள்முதல், கமிஷண் மண்டி என எல்லா வகையிலும் செயல்ப்படுது.

இத எல்லாம் நான் பார்க்கும் போது முறையான சில்லரை வணிகத்தில் விவசாயிக்கு உற்பத்தி ,விற்பனை எளிதாக இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

இதை எல்லாம் இந்திய வியாபாரிகள் செய்ய தவறிட்டாங்க். செய்திருந்தால் அன்னியன் ஏன் இங்கே வர இடம் கிடைக்கப்போகுது.

SURYAJEEVA said...

http://suryajeeva.blogspot.com/2011/11/blog-post_30.html

ஊக வணிகத்திற்கும் சில்லறை வணிகத்திற்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று என் அறிவுக்கு எட்டிய வரை ஒரு பதிவு போட்டுள்ளேன்... என் பார்வை சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பதில் அளிக்கவும்... திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கவும்

SURYAJEEVA said...

அப்புறம் pds அமைப்பை ஒழித்துக் கட்ட ஒரு மசோதாவை [உணவு பாதுகாப்பு மசோதா என்று நினைக்கிறேன்] அழகாக தயாரித்து வைத்திருக்கிறது அரசு...
வேலை நேரம் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களிடம் பேச முடியாது என்பது என் எண்ணம்... தொழிலாளர் நல சட்டங்களையும் மதிக்க மாட்டார்கள்... கடையில் வேலை செய்பவர்கள் முறை சாரா தொழிலாளிகளாக சங்கத்தில் சேர நம் நாட்டு சட்ட திட்டங்கள் அனுமதித்தாலும் இதை பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே...
ஏற்கனவே சில்லறை வணிக கடைகளில் வேலை நேரம் இல்லை தான்...
ஆனால் நடை முறைப் படுத்த சாத்தியம் இருக்கும் சூழ்நிலையை விட்டு விட்டு சாத்தியம் அற்ற சூழ்நிலைக்கு செல்லலாமா என்ற சந்தேகம் தான் எழுகிறது

சிவானந்தம் said...

மிக அருமையான கட்டுரை வவ்வால். ஆனால் அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள் என்று பெயர் பெற்றுவிட்டத்தை போல், தனியார் துறையினரும் மோசடிப் பேர்வழிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அந்த எண்ணம்தான் அவர்களை எதிர்க்கத் தூண்டுகிறது.

அவர்கள் நிச்சயம் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வரப்போவதில்லை. லாபம்தான் அவர்களின் குறிக்கோள். லாபம் அவர்களுக்கு போனாலும் ஒரு துறை சிறப்பாக செயல்படுவதன் மூலம் நாட்டுக்கும் லாபம் என்பதும் நிஜம்.

விளக்கம் தேவைப்படாத அளவுக்கு தெளிவான வாதங்களை வைத்திருகிறீர்கள். மேலும் விளக்கம் அளிக்குமளவுக்கு பொறுமையும் இருக்கிறது. keep the fighting.

வவ்வால் said...

சூர்யா,

வாங்க, உங்க கேள்விக்கு எல்லாம் உங்க பதிவில விளக்கமா பதில் போட்டு இருக்கேன், அதையே ஒரு பதிவாகவும் போட்டு விடுகிறேன்.

வவ்வால் said...

வாங்க சிவானந்தம்,

வணக்கம், நன்றி!

//அவர்கள் நிச்சயம் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வரப்போவதில்லை. லாபம்தான் அவர்களின் குறிக்கோள். லாபம் அவர்களுக்கு போனாலும் ஒரு துறை சிறப்பாக செயல்படுவதன் மூலம் நாட்டுக்கும் லாபம் என்பதும் நிஜம்.//

கண்டிப்பாக லாபம் தான் நோக்கம்! நம்ம இந்திய தொழிலதிபர்கள் தன் முனைப்பு இல்லாதவர்கள், இல்லைனா இத்தனைக்காலத்தில இந்திய சில்லரை வர்த்தகம் நல்ல முறைப்படுத்தப்பட்டிருக்கும்.நடைமுறையை புரிந்துக்கொண்டு என்பதிவை நீங்கள் வாசித்திருப்பது புரிகிறது.

அம்பாசிட்டர் கார் கதை தான் , அவங்களா மாடல் முன்னேற்றவும் செய்யவும் இல்லை, போட்டி இல்லாத வரைக்கும் ஜமாய்த்தங்க, போட்டி வந்த பிறகும் முன்னேற்றம் செய்யலை, வித விதமாக வெளிநாசட்டுக்கார்கள் வரக்காரணம் என்ன இவங்க மக்கள் விரும்பும் கார் கொடுக்கலை, இப்போ பின் தங்கிட்டாங்க, இத்தனைக்கும் பிர்லா குருப் அது, கைல காசு இல்லையா என்ன? இப்போ அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்கிறாங்க. இப்போ பாருங்க மல்லையா கேட்கலையா அத போல தான்.

manjoorraja said...

விளக்கமான கட்டுரையும் பின்னூட்ட கேள்விகளுக்கான தெளிவான பதில்களும் எழுதியுள்ளீர்கள்.

நீண்ட காலத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம்.

வவ்வால் said...

வாங்க மஞ்சூர் ராஜா,

வணக்கம், நன்றி!

//நீண்ட காலத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம்.//

எனது ஆதங்கமும் அதுவே. கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு தரகர்களால் நம்ம விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளார்கள், ஆனால் அதற்கு யாரும் தீர்வு சொல்லவில்லை.

உண்மையில் நம் நாட்டில் எதற்கும் தட்டுப்பாடு இல்லை. உற்பத்தியை சரியாக சந்தைக்கு கொண்டு வரவிடாமல் தேவைக்கும் குறைவாகவே கொண்டு வருவார்கள். இதன் மூலம் டிமாண்ட் அதிகமாக்கி, அனைவரையும் அதிக விளைக்கு வாங்க வைப்பார்கள்.

விவசாயிகளோ காய்,கனிகளை விற்க முடியாமல் ரோட்டில் கொட்டி செல்வார்கள்.

அமர பாரதி said...

வவ்வால்,

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய அனுமதி இந்தியா போன்ற, ஆதி முதல் அந்தம் வரை எங்கும் ஊழல் உள்ள ஒரு நாட்டில் பாதிப்பையே கொடுக்கும்.

விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் உயர்வதற்கு வாய்ப்பில்லை. ஒட்டன் சத்திரத்தில் 5 ரூபாய்க்கு வாங்கப்படும் தக்காளி சென்னையில் 50 ரூபாய்க்கு (10 மடங்கு என்பது அதிகமே, ஆனால் 3 மடங்கு சராசரி) விற்கிறதென்றால் அதற்கு கமிஷன் மண்டிகள் மட்டும் காரணமல்ல. போக்கு வரத்து, ஏற்ற இறக்க கூலி என்ற அனைத்தும் உள்ளது. வால்மார்ட்டும் பொருட்களை வாங்குவதற்கு இவர்களையே நம்பத்தான் வேண்டும், அல்லது இவர்கள் போன்றே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் 3 மடங்கு விலை என்று சென்னையிலெயே உற்பத்தி செய்ய முடியாது.

மேலும் அமெரிக்காவில் எந்த விவசாயியும் அரை ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கர் வைத்துக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆயிரக்கணக்கில் விளை நிலங்கள் உள்ளது. அதில் அவர்கள் உயர்வான தொழில் நுட்பங்கள் மூலம் (உ.ம். மசுமைக் குடில்) அதிக பட்ச விளைச்சலை எடுக்கிறார்கள். மேலும் விவசாயத்துக்கு அதிக பட்ச மானியம் வழங்கப்படுகிறது. அரசு மானியம் தான் விவசாயிகளின் லாபமே. இதை நானே ஒரு பேட்டியில் பார்த்தேன்.

விவசா விளை பொருட்களுக்கு மானியம் அளித்தால் உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் இருக்கும். அனால் நாம் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை அமெரிக்காவை விட அதிகம்.

அரசுக்கு வரி வருமானம் வரும் என்பது ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் எங்கு வியாபாரம் செய்கிறதோ அந்த நாட்டு நடை முறைக்கு ஏற்பத்தான் செய்வார்கள். நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்றால் அவர்களும் செய்வார்கள். அமெரிக்காவில் மளிகைக்கடை நடத்தும் இந்தியர் கடைகளில் எந்த பில்லும் போடப்படுவதில்லை, வரியுடன்.

மேலும் இந்த முறைப் படுத்தப் படாத வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிப் பழக்கப் பட்டுப் போன அரசு அதிகாரிகள் இதற்கு புதியவர்களையும் பழக்கி விடுவார்கள்.

வெறும் தக்காளியை மட்டும் வைத்து இதை கணிக்க வேண்டாம். தற்போதைய நிலையில் விவசாயத்தை லாபகரமாக மாற்ற பல யோசனைகள் உள்ளன. பசுமை விகடனில் நிறைய வெளியிடுகிறார்கள். அமெரிக்கா போல விவசாய பொருட்களுக்கு 100% மானியம் வழங்க வேண்டும். அதாவது ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய்க்கு விளைச்சல் என்றால் அரசாங்கம் 5000 ரூபாயை மானியமமாக விவசாயிக்கு தர வேண்டும். இந்த மானியங்களால் தான் அமெரிக்காவில் விளை பொருட்களின் விலை கட்டுக்குள் (ஓரளவாவது) இருக்கிறது.

விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பம் 100% மானியத்துடன் அளிக்க வேண்டும். சாராயம் குடித்து செத்துப் போனவனுக்கு பணம் கொடுப்பதில் காட்டும் அதே அளவு முயற்சியும் ஈடுபாடும், நோய்த் தொற்றுகுக்ளை களைவதற்கும் அளிக்கப் பட வேண்டும்.

அரசாங்கம் குளிர் பதன கிடங்குகளை எல்லா நகராட்சிகளிலும் அமைக்க வேண்டும், அதுவும் மிக குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டும். மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களுக்கான தொழில் நுட்பம் இலவமாக அளிக்கப் பட வேண்டும் (பால் - சீஸ், காய் கறிகள் - ஊறுகாய், தக்காளி - ஜாம்)

இதையெல்லாம் செய்யாமல் அந்நியர்களை அனுமதித்தால் கேடாகவே முடியும். சீனாவிலும் அமெரிக்காவிலும் நம் நாட்டைப் போல அனைத்திலும் லஞ்சம் இல்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லாத அரசாங்கம் இல்லை. கிடங்கில் இருக்கும் கோதுமை மக்கி போனாலும் மக்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்பர்கள் இல்லை அவர்கள்.

வவ்வால் said...

அமரபாரதி,

வாங்க, வணக்கம், நன்றி!

நீங்க முழுசா என்னோடப்பதிவை படிக்கலையோனு தோன்றுகிறது, இரண்டுப்பதிவும் படிங்க, நீங்க சொல்லி இருக்கிறது எல்லாம் சொல்லி இருக்கேன்.

5 ரூ -50 ரூ என்பது எளிய உதாரணம் தான், அந்த அளவுக்குனு எடுத்துக்கக்கூடாது :-))

//விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் உயர்வதற்கு வாய்ப்பில்லை. //

எப்படி? விளக்கம் இருக்கா?

இப்போ விவசாயிக்கு லாபம் உயர வாய்ப்பு இருக்கு , ஆனால் இல்லைனே உங்க கூற்றுப்படி வச்சுக்கிட்டாலும், உற்பத்தியை ஏதோ ஒரு விலைக்கு விற்க வாய்ப்பு கிடைச்சா கூட போதும்.வாங்கவே மாட்டோம்னு தரகர்கள் சொல்வதால் ரோட்டில்ச் கொட்டுராங்க, இது எவ்வளவு கொடுமை.

//வால்மார்ட்டும் பொருட்களை வாங்குவதற்கு இவர்களையே நம்பத்தான் வேண்டும், அல்லது இவர்கள் போன்றே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.//

ஒப்பந்த விவசாயம் செய்வார்கள்னு சொன்னத கவனிக்கவில்லையா?

இந்த சுட்டிய பாருங்க ரிலையன்ஸ் போன்றவர்கள் ஒப்பந்த விவசாயம் செய்வதாக இருக்கும்,மேலும் இப்போ ஒரு சிலர் மட்டும் ஒப்பந்த விவசாயம் செய்ய முன்வருவதால் அவங்க மேல அதிக சார்ப்புத்தன்மை ஏற்படும் நிறைய பேர் இருந்தா விவசாயி பயம் இல்லாம இருக்கலாம், ஒருத்தர் ஒப்பந்தம் ரத்து செய்தால் இன்னொருத்தர் கூட செய்யலாம்.

http://www.financialexpress.com/news/big-firms-queue-up-for-contract-farming/174281/

மேலும் , விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய பல முனை வாய்ப்புகள் இருக்கனும், இப்போ இருப்பது போல கமிஷன் மண்டி என்ற அமைப்பு மட்டுமே இருந்தால் எந்த காலத்திலும் அவர்கள் கரையேற முடியாது.

இந்தப்பதிவோட தொடர்ச்சி ,மற்றும் இரண்டுப்பதிவிலும் இருக்கும் பின்னூட்டங்களும் ஒரு முறைப்பாருங்க.

எல்லாவற்ரிலும் நன்மையும்,தீமையும் இருக்க தான் செய்யும், இப்போ 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைய தீமைகளைப்பார்த்துட்டாங்க விவசாயிகள், மேலும் நுகர்வோர்களும், எனவே மாற்றம் வராதா என்று பார்ப்பதில் தவறில்லை.

//(உ.ம். மசுமைக் குடில்) //

ஹி..ஹி பசுமைக்குடில் பார்த்து இருக்கிங்களா? அதை வச்சு எல்லாம் பெரிய அளவு உற்பத்தி செய்ய முடியாது. இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமே அதை செலவு அதிகம் ஆனாலும் பரவாயில்லைனு பயன்ப்படுத்துறாங்க.

நம்ம நாட்டில இயற்கையாகவே நல்ல வளம், சூழல் இருக்கு எனவே பசுமைக்குடில் எல்லாம் தேவை இல்லாதது.இப்போ யாருங்க நம்ம நாட்டில உற்பத்தி கம்மினு சொன்னாங்க , அதிகமாக ஆகுது , அத்ஐ பயன்ப்படுத்தாம வீணாக்கிறாங்க.

Anonymous said...

Plz check this out by Vinavu

http://www.vinavu.com/2011/12/04/wal-mart/

குட்டிபிசாசு said...

வவ்வால்,

நேராக அறிவன் பதிவில் இருந்து வருகிறேன். போன வருடம் நான் பதிவுபக்கம் வராததால், இப்போதுதான் பார்த்தேன். 100% நீங்கள் சொல்லும் கருத்தோடு ஒத்துப்போகிறேன். மன்னுமோகன் அரசு கட்டுப்பாடுகளுடன் சில்லரை வர்த்தகத்தை அனுமதிக்குமா என தெரியவில்லை. ஆனாலும் கூட சில்லரைவர்த்தகம் வந்தால் விளைபொருட்கள் வீணாவது தவிர்க்கப்ப்படும், மக்களுக்கு கிடைக்கும் பொருட்களின் தரம் கொஞ்சம் கூடும் என எதிர்பார்க்கலாம், முறையான உபரி உற்பத்தியை சேமிக்கலாம், முறையான வர்த்தகம் என்பதால் கலப்படப் பொருட்கள் தவிர்க்கப்படலாம் என பல நன்மைகள் உள்ளன.

வெளிநாட்டுப்பொருட்களை உள்ளே கொண்டுவந்தால் லாபமில்லை. எப்படியும் நம் விவசாயிகளைத்தான் நாடியாக வேண்டும். மேற்படி சில கட்டுப்பாடுகளை அரசு நிர்ணயித்தால் விவசாயிகள் பலனடைவார்கள்.

நம் நாட்டுப்பொருட்களுக்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல சந்தையுள்ளது. ஆனால் நாம் அதை முறையாக பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை வரும் சில்லரை வர்த்தக நிறுவனங்களால் அந்த வாய்ப்புகள் நம் நாட்டிற்கு கிடைக்கலாம். எல்லாம் அரசின் கையில் உள்ளது.

Anonymous said...

////அதே போல், கடைசியில் இதை எல்லாம் அரசு கவனிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள். இந்த அரசோ அல்லது பா.ஜ.க அரசோ இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றும் நான் நம்பவில்லை.//

உண்மையில் சரியாக கவனிப்பார்களா என்றால் பதில் தெரியாது, ஆனால் ஒரு ஒழுங்கு முறை, சட்டம் ஆகியவை இயற்றப்பட வேண்டும். இப்போது கூட மினிஸ்ட்ரி ஆப் காமெர்சில் ஒரு ஆணையம் இருக்கிறது இது போல அன்னிய முதலீட்டை வரையருக்க, அவர்கள் வழிக்காட்டுதலில் தான் இப்போது இந்த அனுமதியே. அவர்களே சில மேற் சொன்ன வரையறைகளை செய்யலாம், நடைமுறைப்படுத்துவது அடுத்த விஷயம்.//


I am afraid because of this government only. If the government monitors it properly, I will support it whole heatedly. But, every body knows about our govt and parties. They are ready to sell our nation for money. This is what afraid of. In coming years, our corruption politicians will give entire freedom(indirectly through holes in our laws) to those foreign traders. Then we all know what will happen after that.