Saturday, November 24, 2012

2G Spectrum Scam: real or Fabricated



(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ)


2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சொன்னதும், அதன் தொடர்ச்சியாக ஆ.ராசா, கனி மொழி,நீரா ராடியா ஆகியோர் கைதானதும் , மொத்தம் 122 உரிமங்களை பெற்ற ஒன்பது அலைப்பேசி நிறுவனங்களின் உரிமங்கள் இரத்தான முன் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இரத்து செய்யப்பட்ட உரிமங்களை ஏல முறையில் விற்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் கடந்த 13 ஆம் தேதியன்று ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது ,ஆனால் எதிர்ப்பார்க்கப்பட்ட விலைக்கும் கீழாக 9,401 கோடி அளவுக்கு சில பகுதிகள் மட்டுமே விற்பனையானது.

இதன் அடிப்படையில் முன்னர் ஆ.ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடைப்படையில் அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சொல்லப்படும் 1.76 லட்சம் கோடி என்ற தொகை மிகைப்படுத்தப்பட்டது ,தற்போதிய ஏலத்தில் பெரும் தொகை ஈட்டப்படவில்லை எனவே பொய்யான குற்றச்சாட்டு என்பது நிருபணம் ஆகிவிட்டது , என ஊழலோட சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெருமிதமாக நெஞ்சு நிமிர்த்தி முழக்கமிடுகிறார்கள்.

கூடவே மத்திய தணிக்கை குழுவின் தொலைத்தொடர்ப்பு பிரிவின் தலைவராக பதவி வகித்த அதிகாரி திடீர் என முன்னர் அவ்வாறு அறிக்கை அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என பேட்டிக்கொடுத்துள்ளார், இதுவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு தேனாமிர்தமாக இனிக்க, கூடுதல் சக்தியுடன் உரக்க முழக்கமிட ஆரம்பித்துள்ளார்கள்.

அலைக்கற்றை வழக்கினை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்திருப்போருக்கு தெரியும் தணிக்கை குழு சொல்லும் தொகை  ஒரு கணிப்பின் அடைப்படையில் உத்தேசமாக  கணக்கிடப்பட்ட தொகை என்பது ,குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்நாள் வரையில் அவ்வளவு ஊழல் நடக்கவில்லை என்று மறுத்தார்களே ஒழிய ,ஊழலே நடக்கவில்லை என ஒரு போதும் மறுத்ததில்லை. தற்போது தான் திடீர் உத்வேகத்துடன் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

நம் நாட்டில் இயற்கை வளங்களை ஏலம் அல்லது உரிமம் வழங்கும் நடைமுறையில் கையூட்டு இல்லாமல் ஒரு காகிதம் கூட கை எழுத்தாகாது என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம். அப்படி இருக்கையில் ஊழல் நடக்கவில்லை என சொல்வதே மிகப்பெரும் பொய், இப்பொழுது ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டதை வைத்து மட்டுமே மறுக்கிறார்களே ஒழிய மற்றபடி ஊழல் நடக்கவில்லை என்பதை மறுக்க வேறு ஆதாரம் காட்டவில்லை.

எதிர்ப்பார்க்கப்பட்டதை விட ஏலத்தொகை ஏன் குறைவாக கேட்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால் ,அலைக்கற்றை ஒதுக்கிட்டில் ஊழல் நடந்ததா இல்லையா என்பதை நாமே கண்டறிய முடியும், அதனை இப்பதிவில் காணலாம்.

அலைக்கற்றை ஒதுக்கீடு , ஏலம் போன்ற வியாபார நடைமுறைகளை காணும் முன்னர் அலைப்பேசி வலையமைப்பு (Telecom network)செயல்படும் முறையினை சுருக்கமாக காணலாம், அப்பொழுது தான் எளிதாக நடைமுறை சிக்கலையும், சில வியாபார நோக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

அலைப்பேசி வலை அமைப்பு(Cell Phone structure)

உலகம் முழுவதும் GSM ,CDMA (global service mobile and Code division Multiple Access) என இரு வகை தொழில்நுட்பத்தில் அலைப்பேசி அமைப்புகள் இயங்குகின்றன. தற்போதுள்ள ஜிஎஸ்.எம் அமைப்பு 2ஜீ தொழில்நுட்பம் ஆகும். 3ஜீ என்பது அடுத்த தலைமுறை CDMA (WCDMA) தொழில் நுட்பமே, தற்போது  இது போதும் ,பொதுவாக அலைப்பேசி அமைப்பினை அணுகலாம்.

அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் இவ்விரண்டு முறையில் ஏதோ ஒன்றிலோ அல்லது இரண்டும் கலந்தோ அலைப்பேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

பொதுவாக ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உள்ள அம்சங்களை காணலாம்.

# அலைப்பேசி(Mobile phone)

# அலைப்பேசி கோபுரம்(mobile tower or Base Transciver Station-BTS)

# தரைக்கட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC)

# மையக்கட்டுப்பாட்டு மையம்.(Mobile switching Service centre or Main Station Ccontroller-MSC)

# பொது தொலைப்பேசி வலையமைப்பு இணைப்பு.(Pulic Switched Telephone Network-PSTN)

ஆகிய அலகுகள் அனைத்து அலைப்பேசி வலையமைப்பிலும் இருக்கும்.

இவற்றை தொலைதொடர்பு நிறுவனங்கள் அமைத்துக்கொண்டு, பின்னர் அலைக்கற்றை உரிமம் பெற்று ,தொலைத்தொடர்பு சேவையை உருவாக்குவார்கள்.

அலைக்கற்றை அகலம்(Spectrum Bandwidth):

வானொலி, தொலைக்காட்சி, ரேடார் , ராணுவம் என பலவற்றுக்கும் பல அலைவரிசையில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருக்கும், அதே போல அலைப்பேசிகளுக்கு என சில குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது, உலகம் முழுக்க அக்குறிப்பிட்ட அலைவரிசைக்குள் தான் அலைப்பேசிகள் இயங்க வேண்டும், எனவே தான் குறைந்த அளவில் கிடைக்கும் அலைக்கற்றைக்கு மதிப்பு அதிகம் ஆகிறது.

பொதுவாக அலைப்பேசிக்கு ஒதுக்கப்படும் அலைக்கற்றை அகல எல்லைகள்,

872-960 MHz, 1710-1875 MHz and 1920 - 2170 MHz. ஆகும்,

இதில் 800,900,1700,1800,1900,2100 (சில இடங்களில் 2,200,2,300 உண்டு,அமெரிக்காவில் 300 முதல் 3,000 மெ.ஹெர்ட்ஸ்)என அடிப்படையாக ஒரு அதிர்வெண்ணை  வைத்துக்கொண்டு ,முன்னால் ,பின்னால் உள்ள அதிர்வெண்களில் அலைப்பேசிகள் இயங்குமாறு வடிவமைப்பார்கள், இதனை Band  என்பார்கள்,ஒரு  நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் "Band overlap " ஆகாதவாறு அலைக்கற்றை பேண்ட்கள் தேர்வு செய்யப்படும்.

 ஆரம்பக்கட்ட அலைப்பேசிகள் ஒரே ஒரு அதிவெண் வீச்சில் செயல்பட்டது , அதனை Mono band என்றார்கள், பின்னர் Dual Band, Try Band கைப்பேசிகள் உருவாயிற்று , இப்போழுது அனைத்து கைப்பேசிகளும் Quatra band  வசதியுடன் உருவாக்கப்படுகிறது.

ஏன் எனில் உலகில் உள்ள பல நாடுகள் அனைத்து பேண்ட்களிலும் அலைப்பேசி சேவையை இயக்குவதில்லை, இரண்டு அல்லது மூன்று பேண்டுகளில் இயங்குவார்கள், எனவே கைப்பேசிகளை நான்கு பேண்ட்களில் தயாரித்தால் ஏதேனும் ஒரு நாட்டில் இயங்கும் பேண்டுடன் ஒத்து இயங்கிவிடும், எனவே ஒவ்வொரு நாட்டுக்கும் தனியாக கைப்பேசிகள் தயாரிக்க வேண்டியதில்லை.

முன்னர் எல்லாம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைப்பேசிகள், ஐரோப்பாவில் இயங்காத நிலை எல்லாம் இருந்தது. காரணம் இது போன்ற மாறு பட்ட பேண்ட்களில் இயங்கியதே.

பொதுவாக 2ஜீ  800, 900 பேண்ட்களிலும் , 1800,1900 பேண்ட்களில்  3 ஜீக்கும் பயன்ப்படுத்தப்படுகிறது, 2100,2200 ஆகிய பேண்ட்கள் இணைய பயன்ப்பாட்டிற்கு பயன்ப்படுகிறது. இணையம்,3ஜீ ஆகியவற்றுக்கு பயன்ப்படும் பேண்ட்கள் நாட்டைப்பொறுத்து மாறி அமையும்.

இப்போதுள்ள கைப்பேசியில் குறிப்பிட்ட பேண்ட்களை எல்லாம் நாம் தேர்வு செய்யவேண்டியதில்லை தானே தேர்வு செய்துகொள்ளும், மேலும் குறிப்பிட்ட அலைப்பேசி சேவையின் அதிர்வெண்ணை தேர்ந்தெடுக்க ,SIM Card (Subscribers Information Module)ல் உள்ள குறியீடு(code) பயன்ப்படுகிறது, இதன் மூலம் நமது கைப்பேசியின் அதிர்வெண் டியூன் செய்யப்படும்.

இதனை  வழக்கமாக ஒரு வானொலியில் குறைந்த அலைவரிசை,மத்திய அலைவரிசை,பண்பலை, என தேடி நாம் வைப்பது போல ,ஆனால் கைப்பேசியில் அனைத்தும் தானாக செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

872-960 MHz, 1710-1875 MHz

மேற்கண்ட இரண்டு அலைக்கற்றை அகலத்தில் , 900,1800 வரிசையில் 2ஜீ க்கும், 2100 வரிசையில் 3 ஜீக்கும் இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டு செயல்படுகிறது.

உலக அளவில் பயன்ப்படுத்தப்படும் அலைக்கற்றை அகல வரிசைகள் பட்டியலை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.

http://www.worldtimezone.com/gsm.html

கி.பி 1994 இல் இந்தியாவில் முதன் முறையாக அலைப்பேசி உரிமங்கள் வழங்கப்பட்ட போது ,ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்திற்கும் GSM வகைக்கு 10 மெ.ஹெர்ட்ஸ் , CDMA  வகைக்கு 5 மெ.ஹெர்ட்ஸ் என அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது .

பொதுவாக  ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனமும் செயல்பட GSM இல் 4.5 மெ.ஹெர்ட்ஸ் உம், CDMA  வில் 2.5 மெ.ஹெர்ட்ஸ் அலைக்கற்றையே போதுமானது ,அப்போது அதிக போட்டியில்லாத நிலை எனவே கணக்கு பார்க்காமல் தேவையை விட இருமடங்கு அலைக்கற்றையை மலிவாக கொடுத்தார்கள்.எனவே அனைத்து நிறுவனங்களிடமும் உபரி அலைக்கற்றை இருந்தது, அதனையும் அவர்கள் வேறு வகையில் பயன்ப்படுத்தி வந்தனர், , இத்தனை நாளும் அவ்வாறே இருந்தது, இந்தாண்டு அக்டோபர் மாதம் புதிய 2ஜீ ஏலத்திற்கு முன்பாக இம்முறையில் ஒரு மாற்றத்தினை தொலைத்தொடர்பு துறை அறிவித்தது, இம்மாற்றமும் ஏலம் சரியாக போகாதற்கு ஒரு காரணம் ஆக்கும், என்ன மாற்றம், அதன் விளைவுகள் என்ன? அனைத்தும் பின்வரும் பகுதியில் அலசலாம்.

THE CELL:




இப்பொழுது அலைக்கற்றை உரிமம் இருக்கிறது , நிறுவனம் துவங்கியாகிவிட்டது, வாடிக்கையாளர் ஒரு அலைப்பேசியை வாங்கி ஒரு சிம் கார்டினையும் போட்டுவிட்டார், இப்போது எப்படி அலைப்பேசி சேவையை பயன்ப்படுத்தி அழைப்புகளை ஏற்படுத்துவார்?

அலைப்பேசி என்பது ஒரு கம்பியில்லா  Full duplex தொலைதொடர்பு கருவி ஆகும். அலைப்பேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டால் மட்டுமே இன்னொரு அலைப்பேசியை அழைக்க முடியும், ஆனால் அனைத்து இடத்திலும் ஒரு அலைப்பேசி நிறுவனம் செயல்பட முடியாது எனவே அலைப்பேசி நிறுவனம் -அலைப்பேசியுடன் தொடர்பை உண்டாக்க ஒரு இடை நிலை அமைப்பு தேவை ,அதுவே அலைப்பேசி கோபுரம்(Base transciver -BTS).

நாடு முழுக்க அலைப்பேசி பயனாளர்கள் இருப்பார்கள் ,அங்கு எல்லாம் ஒரு அலைப்பேசி கோபுரம் அமைத்தால் ஏகப்பட்ட செலவு ஆகும், எனவே எங்கு அதிக பயனாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும் அமைத்தால் போதும், அதற்கும் எத்தனைக்கோபுரம் அமைப்பது என கேள்வி எழும், இங்கு தான் ஜி.எஸ்.எம் அலைப்பேசியின் வீச்சு தூரம் பயன்ப்படுகிறது.

திறந்த தடங்கல் அற்ற வெளியில் 2ஜீ அலைவரிசை 35 கி.மீ வரையில் பரவும், ஆனால் 10 கி.மீக்கு அப்பால் மெல்ல வலுவிழந்து , தொடர்பு நிலையாக இருக்காது, எனவே 10 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைப்பார்கள், மேலும் கட்டிடங்கள்,மரங்கள் ஆகியவை அலைவரிசையை கிரகித்து வலுவிழக்க செய்யும் என்பதால் நகரப்பகுதியில் 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் அமைக்கலாம்.

ஒவ்வொரு கோபுரத்திலும் 120 டிகிரி கோணத்தில் மூன்று அலைபரப்பி வட்டுகள்(Antenna) வைக்கப்படும், இதனால் கோபுரத்தில் இருந்து சுற்றிலும் பரவும் அலைவரிசை அறுங்கோண வடிவில் பரவும் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள், இப்படி ஒரு அலைப்பேசிக்கோபுரத்தினை சுற்றி உருவாகும் அறுங்கோண அலைபரப்பு பகுதியை செல் எனப்பெயரிட்டார்கள்.ஒரு செல் அமைப்பு இன்னொரு செல் அமைப்புடன் ஒன்றின் மீது ஒன்றாக படியாமல் திட்டமிட்டு அலைப்பேசி வலையமைப்பை அமைப்பார்கள்.

ஒரு செல் பகுதியில் இருக்கும் அனைத்து அலைப்பேசி பயனார்களும் அச்செல்லின் மையத்தில் உள்ள  குறிப்பிட்ட கோபுரத்துடன் இணைப்பில் இருந்து  மற்ர அலைப்பேசிகளுடன் தொடர்பினை உருவாக்கிக்கொள்ள முடியும்,இது போல அறுங்கோன செல்கள் , கோபுரங்கள் என தேவைக்கு ஏற்ப ஒரு அலைப்பேசி வலையமைப்பில் உருவாக்கப்படும். எனவே தான் அலைப்பேசியை செல் போன் என அழைக்கிறார்கள்.

அழைப்பு செயல்படும் விதம்:

பல செல்கள் ,அவற்றில் பல கோபுரங்கள் என அமைத்து ,அக்கோபுரங்களை சேட்டலைட், அகலப்பட்டை வடம் / கண்ணாடி இழை வடம் என இரு முறையிலும், அலைப்பேசி நிறுவனத்ததின் மையக்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட வேண்டும்.

பரந்த நிலப்பரப்பில் எண்ணற்ற அலைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொன்றையும் நேரடியாக மையக்கட்டுப்பாட்டு (Main Station Controller-MSC)அறையுடன் இணைப்பது கடினம், செலவு பிடிக்கும் எனவே அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள கோபுரங்களை ஒன்றிணைத்து ஒரு கட்டுப்பாட்டு மையம் உருவாக்குவார்கள், இதனை  தரைகட்டுப்பாட்டு மையம்(Base station controller-BSC) என்பார்கள்,இது போன்று பல சிறு மையங்கள் உருவாக்கப்பட்டு  , பின்னர் மத்திய மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.



இம்முழு வலையமைப்பும் ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் வலைக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும். இன்னொரு அலைப்பேசி வலையில் உள்ள கைப்பேசியை அழைக்க ,அதன் மையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வார்கள் ,இதற்கு பொது தொலைபேசி கட்டுப்பாட்டு அறை (PSTN) இடை இணைப்பாக உதவுகின்றது. இச்சேவையை  BSNL,MTNL  போன்றவை செய்கின்றன.

ஒரு அலைப்பேசி பயனாளர் அழைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறார், அவரது கைப்பேசியானது ஒரு அழைப்பு கோரிக்கையை(Request) அப்பகுதியில் உள்ள அலைப்பேசி கோபுரத்திற்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படும்,

தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் மையக்கட்டுப்பாட்டு மையம்:
( Base station and Main switching Centre)

ஒரு அலைப்பேசி நிறுவனத்தின் சிம் கார்டை வாங்கி செயலாக்கியவுடன், அவ்வெண் ஆனது மத்தியக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியில் பதியப்படும் , இதனை இல்ல பயனர்ப்பதிவு (Home  location Register)என்பார்கள். இதனை வைத்தே ஒருவரது கணக்கில் உள்ள பணத்திற்கு ஏற்ப பேசும் நேர அளவு, எவ்வளவு நேரம் பேசினார், இன்ன பிற பயனர் தகவல்கள்,கணக்குகள் பராமரிக்கப்படும்.

இந்த எண் தமது அலைப்பேசி எண் தான் என மற்ற தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்கும் பகிரப்பட வேண்டும், அப்போது தான் அலைப்பேசி கோபுரங்கள் ஒரு கைப்பேசியின் அலைவீச்சினை பெற்று தொடர்பு உண்டாக்கும், எனவே பயனர் விவரம் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியிலும் பதியப்ப்படும், இவ்விவரங்களை,விருந்தினர் பயனர்ப்பதிவு (Visitor Location Register)என்பார்கள். ஏன் எனில் ஒரு பயனாளர் தொடர்ந்து ஒரே அலைப்பேசிக்கோபுர எல்லையில் இருக்கமாட்டார்கள், அடிக்கடி இடம் மாறுவார்கள் அல்லவா .

பெயர் தான் மாறுகிறதே ஒழிய விவரங்கள் ஒன்றே, மேலும் இப்படி மாறுப்பட்ட பெயர் வைப்பது ரோமிங் பயன்ப்பாட்டின் போது உதவும், வேறு அலைப்பேசி நிறுவனத்தின் எண் எனில் விருந்தினர் பயனர் பதிவில் மட்டும் பதியப்படும், மத்தியக்கட்டுப்பாட்டு மைய கணினியில் இல்லப்பயனர் என பதியமாட்டார்கள்,இதன் மூலம் மாறுப்பட்ட அலைப்பேசி சேவைகளை அடையாளங்காண முடியும். அதற்கேற்ப கட்டணம் வசூலிக்க முடியும், அவ்வாறு அடையாளப்படுத்தாமல் இணைப்பினை உருவாக்கினால் யாருடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்ற குழப்பம் வரும், அனைத்து கைப்பேசி சேவையும்,அனைத்து வலையமைப்பிலும்  இயங்கிவிடாதா?

இப்பொழுது அலைப்பேசியில் இருந்து அழைப்பு கோரிக்கை(Request)  கோபுரம் மூலம் தரைக்கட்டுப்பாட்டு கணினிக்கு வந்துவிட்டது, அழைப்பு விடுத்த எண் VLR பட்டியலில் இருக்கிறதா என கணினி சரிப்பார்க்கும், இருந்தால் அழைப்பை செயல்படுத்தும், இப்பொழுது அழைக்கப்பட்ட எண் அதே சேவையின் எண்ணா  என பார்க்கும், அதே சேவை எனில் மேற்கொண்டு அவ்வெண் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோபுரங்களின் எல்லையில் இருக்கிறதா என பார்க்கும், அப்படி இருந்தால் தரைக்கட்டுப்பாட்டு மையமே இரண்டு அலைப்பேசிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி பேச வழி செய்யும்.

வேறு நிறுவன எண் அல்லது தனது எல்லைக்கு அப்பால் உள்ள எண் என அறிந்தவுடன், அழைப்பை மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கும் எண் யாரை சேர்ந்தது என சோதிக்கும் ,பின்னர்,அதே சேவை எண் எனில் அழைக்கப்பட்ட எண் எந்த தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் உள்ள எந்த கோபுரத்தின் எல்லையில் இருக்கிறது என தேடி அங்கு அழைப்பை அனுப்பும்.

வேற்று நிறுவன எண் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும், அங்கிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையம் ,கோபுரம் என அழைப்பு செல்லும், டிங்க்டாங்க் என அழைப்பு மணி அடித்ததும் பச்சை பித்தானை அழுத்தி உரையாடலை துவக்கலாம்.

தரைக்கட்டுப்பாட்டு மையம் தேடும், மையக்கட்டுப்பாட்டு மையம் தேடும் என்று எளிதாக புரிய சொல்லி இருக்கிறேன், ஆனால் அப்படி எண்ணை தேடிக்கொண்டிருக்காது, தரைக்கட்டுப்பாடு மையம் தனக்கு வந்த அழைப்பு கோரிக்கையை அதன் கீழ் உள்ள அத்தனை கோபுரங்களுக்கும் Broadcast  செய்யும், அங்கு அழைக்கப்பட்டவர் இருந்தால் அழைப்பு ஏற்கப்படும், இல்லாத நிலையில் ,இல்லை என திரும்பி வரும் ,உடனே அடுத்தக்கட்டமாக மையக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும், அங்கும் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் ஒரே நேரத்தில் அழைப்பு கோரிக்கை Broadcast  செய்யப்படும்,எங்கு அழைக்கப்பட்டவர் இருக்கிறாரோ அங்கு அழைப்பு ஏற்கப்படும் ,மற்றவை திரும்பிவிடும், இது ஒரு Request token Pass  அமைப்பு ஆகும், அனைத்து அழைப்புகளும் என்கிரைப்ட் செய்யப்பட்ட சிறிய பொதிகளாகவே (encrypted packs)அனுப்பப்படும், அதற்கு முன்னர் இந்த ரெக்வஸ்ட் டோக்கன் பொதி அனுப்பட்டு இசைவு தெரிவிக்கப்பட்ட பின்னரே அழைக்கப்பட்டவரின் அலைப்பேசியில் மணி அடிக்கும் . இதெல்லாம் நடக்க அதிக நேரம் ஆகாது, சில மைக்ரோ வினாடிகளில் முடிந்துவிடும்.

அலைப்பேசியில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும் முன்னர் சில நொடிகள் அமைதியாக இருக்கிறதே அந்நேரமே இணைப்பினை உருவாக்க ஆகும் நேரம், உள்ளூர் அழைப்பு , ஒரே நிறுவனம் எனில் உடனே இணைக்கப்படும், நீண்ட தூரம் எனில் சிறிது தாமதம் ஆவதும் உண்டு.

ஒவ்வொரு அலைப்பேசி நிறுவனத்தின் குறுகிய அலைக்கற்றை பட்டையிலே (4.5 M.HZ spectrum)பல பயனாளர்கள் பேச முடியும், அனைத்து தகவல் பொதிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து அனுப்பப்படுவதால் , அலைவரிசை மீண்டும் பயன்ப்படுத்த முடியும்.

4.5 மெ.ஹெர்ட்ஸ் என்பது வலையமைப்பு முழுக்க இருக்கும் அலைவரிசை அகலம், இதற்குள் சுமார் 5 லட்சம் பயனாளர்கள் தகவல் பரிமாற முடியும்,ஆனால் அனைத்து பயனாளர்களும் ஒரே இடத்தில் இருப்பதில்லை என்பதால் , ஒரு குறிப்பிட்ட கோபுர எல்லையில் எப்போதும் அதிக பட்ச எல்லைக்குள் பயனாளர்கள் இருந்தாலே போதும்.அதனை தாண்டும் போது தான் இணைப்பில் சிக்கல் உண்டாகும், மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பயனாளர்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அலைப்பேசியை பயன்ப்படுத்துவதில்லை, எனவே Network congestion பிரச்சினை அதிகம் உருவாகாது.


ஒரே நிறுவனத்தின் எண்ணை அழைக்க மலிவாக கட்டணம் நிர்ணயிக்க காரணம், அழைப்பினை அவர்கள் மையக்கட்டுப்பாட்டு அறைமூலமே வழங்குவதே, மாற்று நிறுவனம் எனில் அந்நிறுவன மையக்கட்டுப்பாட்டு அறையை அணுக , ஒரு இடை நிலை ஊடகம் தேவை , பெரும்பாலும் கம்பிவட /கண்ணாடி இழை இணைப்பினைப்பயன்ப்படுத்துவார்கள், இது பி.எஸ்.என்.எல் போன்றவற்றின் கம்பிவட இணைப்பாகும் , இதற்கு ஆண்டுக்கட்டணம் செலுத்த வேண்டும், இதனை network migration charges/network interconnecting charges  என்பார்கள்.

கம்பிவடத்தின் இரு முனையில் உள்ள நிறுவனங்களும் கட்டணம் செலுத்துவதால், உள் அழைப்பினை பெற்ற மாற்று நிறுவனத்தின் எண்ணை அழைக்கும் போது அவ்வழைப்பினை செயல்படுத்த மாற்று நிறுவனம் கட்டணம் கேட்கும், இதை எல்லாம் சேர்த்து மொத்தமாக பேசியவரின் கணக்கில் கழிக்கப்ப்டும்.  ரோமிங் அழைப்பின் போது ,ஒரு நிறுவன அலைப்பேசி முழுக்க இன்னொரு நிறுவன அலைப்பேசி தொடர்பு எல்லையில் இருப்பதால் , அழைப்புக்கட்டணம் அதிகம் ஆகும், அதனை அழைத்தவரிடம் வசுலீக்காமல் அழைக்கப்பட்டவரிடம்  ரோமிங் அழைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது செலவை இருமுனையிலும் பரவலாக்குகிறார்கள்.

அப்படி செய்யவில்லை எனில் ஏதேனும் ஒரு நிறுவனம் அனைத்து அழைப்பும் ஒரு நொடிக்கு ஒரு பைசா என சொன்னால், அந்நிறுவனத்தின் மூலம் அதிக அழைப்புகள் இன்னொரு நிறுவனத்திற்கு போகும், ஆனால் அந்நிறுவனத்தின் பயனாளர்கள் அழைப்பு விடுக்காமல் சும்மா இருக்க ஆரம்பித்துவிட்டால் , only incoming ,No out going calls  என்ற நிலையில் வருமானம் பாதிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறான ஒரு பக்கம் இருந்தே அதிக பயன்ப்பாட்டினை அதிகரித்ததால்  சமீபத்தில் மாறுபட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு உதாரணமாக இச்சம்பவத்தினை சொல்லலாம்.

ஏர்செல் குறுஞ்செய்தி சேவை மூலம் ஏர்டெல்,வோடாபோனுக்கு அதிகம் செய்திகள் அனுப்பப்படுகிறது ஆனால் அதே அளவுக்கு ஏர்டெல்,வோடா போனில் இருந்து ஏர்செல்லுக்கு குறுஞ்செய்திகள் போவதில்லை இதனால் அவர்களுக்கு  வருமான  இழப்பு  என்பதால் ஏர்செல் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 10 பைசா தரவேண்டும் ,இல்லை எனில் செய்தியை அனுப்பமாட்டோம் என தடை செய்துவிட்டார்கள்.

அலைப்பேசிக்கோபுரங்கள்(Cell Phone Towers)



ஆரம்பத்தில் அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் தங்களுக்கான கோபுரம், தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை நாடு முழுவதும் சொந்த செலவில் அமைத்து இயங்கினார்கள்.

2008 இல் ஒரு அலைப்பேசி கோபுரம்,அதன் மின்னணு உபகரணங்கள் என அமைக்க 2 கோடி செலவானது, இருந்த போதும் பல கோபுரங்கள் அமைத்தே செயல்பட்டார்கள், 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என அமைக்க வேண்டும், இதே போல எத்தனை அமைக்க முடியும்? இவ்வளவு செலவு செய்வதற்கு ஏற்ப அங்கு வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும், எனவே அதிக வாடிக்கையாளர் இருக்கும் பகுதிகளில் தான் கோபுரங்கள் அமைக்கப்பட்டது, எனவே கிராம புரங்களில் சிக்னல் கிடைக்காமல் கூப்பாடு தான் போட வேண்டிய நிலை.

மேலும் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப்போட்டுக்கொண்டு கோபுரங்களை அமைத்தன , 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரே கோபுரத்தின் மூலம் கவரேஜ் வழங்க முடியும், ஆனால் ஆளுக்கு ஒரு கோபுரம் அமைத்துக்கொண்டாலும் ஒரு கோபுரத்தின் கையாளும் திறனுக்கு தேவையான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலான  இடங்களில் இருப்பதே இல்லை.

சொற்ப வாடிக்கையாளர்களுக்கு என கோபுரம் அமைத்து இயக்குவதால் அதிக செலவு ஆவது நிறுவனத்தின் லாப விகிதத்தினை குறைக்கும். எனவே ஒரே கோபுரத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கருவிகளை நிறுவிக்கொள்ளலாம் என கலந்து பேசி முடிவுக்கு வந்தார்கள்.

ஒரு கோபுரத்தில் ஆறு அலைப்பேசி நிறுவனக்கருவிகளை பொருத்த முடியும். இந்நிலையில் தான் அலைப்பேசி கோபுர கட்டமைப்பு வசதி வழங்கும் நிறுவனம்(Telecom Tower Business) என்ற ஒரு புதிய வியாபாரம் பிறந்தது. இவ்வியாபாரம் ஏற்கனவே மேலை நாடுகளில் உண்டு, ஒரு நிறுவனம் அலைப்பேசி கோபுரங்களை சொந்த செலவில் நிறுவும் ,தேவையானவர்கள்  வாடகைக்கொடுத்துவிட்டு பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் புதிதாக கோபுரங்களை உருவாக்கியதோடு ,ஏற்கனவே கோபுரங்களை வைத்திருந்த அலைப்பேசி நிறுவனங்களின் கோபுரங்களையும் நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டன.

கையில் இருக்கும் கோபுரங்களை ஏன் விற்க வேண்டும்?

காரணம் ஒவ்வொரு கோபுரங்களுக்கும் இடத்திற்கு வாடகை, தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனெரேட்டர், பராமரிக்க இருவர் , உபகரண செலவு, கட்டுமான செலவு என அதிகம் முதலீடு தேவை, ஆனால் ஒரே ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களும் குறைவு எனும் போது வருவாயை விட செலவு அதிகம் ஆகிவிடும். இதனாலேயே  ஒரு கட்டத்திற்கு மேல் புதிதாக கோபுரங்களை அமைக்க முடியாமல் அலைப்பேசி நிறுவனங்கள் தடுமாறின.

மேலும் 2008 இல் ஒரு கோபுரம் அமைக்க 2 கோடி செலவானது, இப்போது 50 லட்சமே போதும், எனவே நல்ல விலை கிடைத்ததும் விற்றுவிட்டார்கள், மேலும் பலரும் ஒரே கோபுரத்தினை பயன்ப்படுத்துவதால் வாடகையும் குறைவாக இருக்கிறது,எனவே 50 லட்சம் கூட செலவழிக்காமல் தங்கள் அலைப்பேசி வலையமைப்பை விரிவாக்க முடிகிறது.

தரையில் அமைக்கப்பட்ட அலைப்பேசி கோபுரத்திற்கு வாடகை மாதம் 30,000 ரூ, கூரை மீது அமைக்கப்பட்ட கோபுரத்திற்கு 21,000 ஆகும்.

ஐடியா, ஏர்டெல், வோடா போன் ஆகியவை ஒன்றாக சேர்ந்து அலைப்பேசி கோபுரங்கள் அமைத்து பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன. இப்பொழுது நாட்டில் BSNL  தவிர அனைவரும் வாடகை கோபுரங்களையே பயன்ப்படுத்துகிறார்கள்.அவர்களும் விரைவில் வாடகை முறைக்கு மாறிவிட இருக்கிறார்கள்.

இவ்வாறு கோபுரங்களின் கட்டமைப்பினை மட்டும் பயன்ப்படுத்திக்கொள்வதை Passive sharing  என்பார்கள், அலைக்கற்றை , தரைக்கட்டுப்பாட்டு கணினி ஆகியவற்றையும் பகிர்ந்தால் Active sharing  என்பார்கள்.

அமெரிக்க போன்ற நாடுகளில் இடத்திற்கு ஏற்ப முழு பகிர்தல் உண்டு,AT&T  பெரு நகரங்களில் மட்டும் நேரடியாக கவனம் செலுத்திவிட்டு , சிறு நகரங்களுக்கு அலைக்கற்றை, தரைக்கட்டுப்பாட்டு கருவி எல்லாம் வாடகைக்கு விட்டு விடும், ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணம் வசூலிப்பார்கள்.

வாடகைக்கு எடுத்தவர்கள் ஏபிசி செல் என பெயர் கூட வைத்துக்கொள்ளலாம், அந்த பகுதிக்கு அவர்கள் ஒரு அலைப்பேசி நிறுவனம்.

கிட்டத்தட்ட இந்நிலை இப்பொழுது இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலும் வர இருக்கிறது, எப்படி என்பதனை முழுவதும் படிக்கும் போது அறியலாம்.

இந்தியாவில் உள்ள அலைப்பேசி கோபுர நிறுவனங்கள்.

Indus Towers a joint venture of Vodafone, Bharti Airtel and IDEA is formed.

Indus Towers = Ortus Infratel Holding (Vodafone – 42%) + Bhart Airtel (42%) + IDEA (16%)

American Tower Corp has acquired Xcel Telecom towers for 700 crores.

Quippo Telecom has acquired Spice Telecom’s tower business and Tata Teleservices WITIL is merged into it.


மேற்கண்ட விளக்கங்களுக்கும்  2ஜீ ஏலம் குறைவாக போனதற்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம், மைய கருத்தினை சரியாக புரிந்து கொண்டவர்கள் எளிதாக ஊகிக்க முடியும்,அல்லது தொடர்ந்து படியுங்கள்.

2ஜீ ஏலம் குறைவான மதிப்புக்கு விலைப்போனது ஏன்?

அலைப்பேசி நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டு இருப்பீர்கள், மேற்கண்ட விளக்கங்கள் இம்முறை ஏன் ஏலம் குறைவாக போனது என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

# ஒரு அலைப்பேசி நிறுவனம் இயங்க 4.5 மெ.ஹெர்ட்ஸ் போதும் எனப்பார்த்தோம்,உபரியாக இருக்கும் அலைக்கற்றை குறித்து சமீபத்தில் அரசு ஒரு மாற்றம் செய்தது அல்லவா, அது என்னவெனில் உபரி அலைக்கற்றைக்கு இனிமேல் ஒரு முறை உரிமக்கட்டணம் (one time license fee)என ஒன்றை செலுத்த வேண்டும் என்பதே.

அதாவது ஆரம்பத்தில் 10 மெ.ஹெர்ட்ஸுக்கு செலுத்திய பணம் 4.5 M.HZ மட்டுமே, எனவே மீதி இருக்கும் 5.5 M.HZ ஆரம்பத்தில் செலுத்திய கட்டண அடிப்படையில் செலுத்த வேண்டும்.

ஆயிரம் கோடி செலுத்தி இருந்தால் இப்போது அதே அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும், இப்படி அறிவித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக 270 பில்லியன் ரூபாய்கள் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த உத்தரவு அலைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் அடியாகும், இதனை சமாளிக்கவே தற்போதைய 2ஜீ உரிமத்தினை யாரும் வாங்கவில்லை அப்படி வாங்கவில்லை என்றால் எப்படி அலைப்பேசி நிறுவனங்களை செயல்படுத்துவார்கள் என கேட்கலாம்?

இங்கு தான் அலைப்பேசி கோபுர வாடகை முறை ,கோபுர பகிர்வு எனும் Active and passive infrastructure sharing  முறை உதவப்போகிறது.

முன்னர் தனித்தனி கோபுரம் ,தனித்தனி தரைக்கட்டுப்பாட்டு மையம் என்பதால் , இரண்டு அலைப்பேசி நிறுவனங்களுக்கிடையே பயனாளர் கணக்கினை பகிர்ந்து கொள்வதில் சிரமமும், பேசியதற்கான கட்டணத்தினை பிரிப்பதிலும் குழப்பம் வரும் எனவே தனி தனியே கணக்கினை பராமறித்தார்கள்.

இப்பொழுது கோபுரத்தில் உள்ள ஆண்டெனா மட்டுமே தனி, மற்ற உபகரணங்கள் அனைத்தும் அலைப்பேசி கோபுர நிறுவனத்திற்கு சொந்தமானது, இப்பொழுதும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் என தனி கணினி,டிரான்ஸ்மீட்டர் என உண்டு.ஆனால் உரிமை மற்றும் நிர்வாகம் கோபுர நிறுவனம், எனவே அனைத்து அலைப்பேசி நிறுவனங்களும் , கணினி முதல் அலைக்கற்றை வரை பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

இதன் மூலம் முதலீடு மற்றும் செலவு வெகுவாக  குறையும், புதிதாக அலைக்கற்றை உரிமமும் பெறத்தேவையில்லை.

அதாவது தமிழ்நாட்டினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனம் ,மும்பையினை மையமாக வைத்து செயல்படும் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் அதன் அலைக்கற்றையில் கொஞ்சம் இடம் கொடுக்கும், பதிலுக்கு மும்பையில் தமிழ்நாட்டு நிறுவனத்திற்கு அலைக்கற்றையில் இடம் கிடைக்கும்.

மும்பை நிறுவனம் தமிழ்நாட்டில் உரிமம் பெற தேவையில்லை , ஆனால் அலைக்கற்றையை உள்வாடகையாக அல்லது பகிர்வு முறையில் பெற்றுக்கொள்ளும், அதே போல தமிழ்நாடு நிறுவனமும் மும்பையில் உரிமம் இல்லாமல் இயங்கிக்கொள்ளும். இது கிட்டத்தட்ட  National Roming on infrastructure sharing அடிப்படையில் எனலாம்.

இதனால் கிடைக்கும் அனுகூலம்  என்னவெனில்  ,புதிய 2ஜீ அலைக்கற்றை ஏலத்தின் விலை உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது அடிப்படை விலையே 14,000 கோடி ரூபாய் எனவே ஏலம் கேட்டால் அதனை விட அதிகம் கேட்க வேண்டும்.இதனை தவிர்த்தாலும் தொடர்ந்து அலைப்பேசி சேவையை வழங்க முடியும் என்பதே

 உபரியாக இதுநாள் வரை இலவசமாக வைத்திருந்த 5.5 M.HZ பழைய விலையின் அடிப்படையில் அக்டோபர் 13 இல் இருந்து உரிமக்கட்டணம் செலுத்த சொல்லிவிட்டார்கள்.கட்டவில்லை எனில் திரும்ப ஒப்படைக்க வேண்டும், அதனை மீண்டும் அரசு ஏலம் விடும்.

ஆனால் எந்த நிறுவனமும் திரும்ப ஒப்படைக்கவில்லை, கூடுதல் கட்டணத்தினை செலுத்த தயாராகிவிட்டார்கள் ஏன் எனில் பழைய விலை ரொம்ப குறைவு ,ஆனால் அதனை வைத்தே இன்னொரு அலைப்பேசி நிறுவனமே இயக்க முடியும் எனும் பொழுது ஏன் அதிக விலையில் அலைக்கற்றையை புதிதாக வாங்க வேண்டும், எனவே தான் இப்போதைய அலைப்பேசி ஏலத்தினை புறக்கணித்துவிட்டார்கள்.

இத்தனை நாளாக நிறைய அலைக்கற்றை உபரியாக வைத்திருந்ததை ,வைத்து தாரளமாக இயங்கிவந்தார்கள்,எங்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ அங்கு மட்டும்  network congestion  குறைக்க கூடுதல் அலைக்கற்றைக்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை உருவாக்கி கொண்டார்கள்.

நாம் பயன் படுத்தும் அலைப்பேசி எண்ணின் முதல் இரண்டு இலக்கம் ஒரு நிறுவனத்தின் மையக்கட்டுப்பாட்டு அறையை (Mobile Services Switching Centre-MSC)குறிப்பது, ஒரே நிறுவனத்திற்கே இரண்டு தனிப்பட்ட முதல் இலக்கம் இருப்பதை பார்த்திருப்பீர்கள் ,அது அதே நிறுவனத்தின் இரண்டு வேறுபட்ட அலைக்கற்றைகளுக்கான மையக்கட்டுப்பாட்டு எண் ஆகும்.எத்தனை உரிமங்கள் இருக்கிறதோ அத்தனை எண் வரிசை ,மையக்கட்டுப்பாட்டு அறைக்கு என வழங்கப்படும்.

ஒவ்வொரு தொலை தொடர்பு வட்டத்திலும் ஒரு தொலைத்தொடர்பு உரிமத்திற்கும் ஒரு மையக்கட்டுப்பாட்டு அறை, அதில் இருக்கும் உபரி அலைக்கற்றையை தேவைப்படும் இடத்தில் இரண்டாக பிரித்து இரண்டு மையக்கட்டுப்பாட்டு அறை(Mobile Services Switching Centre-MSC) அமைத்து பயன்ப்படுத்திக்கொள்ள முடியும்.

இலவசமாக இருந்த நிலையில் தேவைப்பட்டால் பயன்ப்படுத்தினார்கள், விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இனிமேல் கட்டாயம் பயன்ப்படுத்த வேண்டும் என்பதால் ,உபரி அலைக்கற்றையை இன்னொரு நிறுவனத்துடன் பகிர்ந்து வருமானம் பெறலாம் என முடிவு செய்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு இடம் கொடுக்காமல் இந்த பகுதிக்கு நாம் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்று முன்னர் போட்டிப்போட்டவர்கள், அரசின் விலையேற்றத்தினை சமாளிக்க ஒன்று கூடி ஒரு குழுமம் ஆக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.இதன் மூலம் புதிய 2ஜீ ஏலத்தில் அரசு எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் வருவதையும் தடுத்துவிட்டார்கள் எனலாம்.

ஏற்கனவே இவர்கள் The Cellular Operators Association of India(.coai ) என்ற பெயரில் குழுமம் ஆக தான் செயல்ப்பட்டு வருகிறார்கள் ,ஆனாலும் போட்டி இருந்தது , இப்போது போட்டியை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள், இக்குழுமம் மூலம் தான் Passive infrastructure sharing  திட்டம் இயங்கிவந்தது,இனிமேல் Active Sharing  நடக்கும், ஏற்கனவே அதனை தான் இக்குழும உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்தார்கள், இதற்கென "PROJECT MOST" (Mobile Operators Shared Towers))என்ற பெயரில் ஒரு திட்டமும் செயல்படுகிறது.

http://www.coai.in/projectDetails.php?id=2

3G FACTOR:


2008 இல் 3ஜீ என்பதே இல்லை , எனவே அனைவரும் 2ஜீக்கு போட்டியிட்டார்கள், மேலும் அக்கால கட்டமே 2ஜீ தொழில்நுட்ப பயன்ப்பாட்டின் உச்ச கட்டம் எனலாம்.

2ஜீ வந்த போது மக்களுக்கு அலைப்பேசி பயன்ப்பாட்டினை பற்றிய அறிமுகமே இல்லை ,எனவே பயன்ப்படுத்த ஆட்களே இல்லை, அப்பொழுது அதிக விலைக்கு அலைக்கற்றையை விற்றால் ஒருவரும் வாங்க மாட்டார்கள்.

உதாரணமாக ஒரு கதாநாயகன் அறிமுகம் ஆகிறார் அப்பொழுது அவருக்கு என்ன சம்பளம் கொடுத்திருப்பார்கள், அனேகமாக சோத்தை போட்டு வேலை வாங்கியிருப்பார்கள், ஆனால் இரண்டு படம் ஹிட் கொடுத்தப்பிறகும் அதே போல சோத்துக்கு மட்டும் நடிப்பாரா?

நல்ல சம்பளம் கேட்பார், கொஞ்ச நாளுக்கு உயர்ந்த சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார், வயசாகி அல்லது நான்கைந்து தோல்வி கொடுத்த பின் மீண்டும் உயர்ந்த சம்பளம் கேட்க முடியுமா? சம்பளத்தை குறைத்து கொள்வார் அல்லவா?

அதே போல தான் 2ஜீ நிலையும் , ஆரம்பத்தில் குறைவான விலை ,ஆனால் நல்ல பயன்ப்பாட்டு விகிதம் அதிகரித்து அனைவரும் வாங்க தயாராக இருக்கும் போது அதற்கேற்ற விலை 2008 இல் நிர்ணயிக்கவில்லை.

இப்பொழுது 3ஜீ அலைக்கற்றை உரிமம் விற்பனையாகி பயன்ப்பாட்டில் இருக்கிறது, அதில் அதிக முதலீடும் செய்துள்ளார்கள்,அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை இழுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே 3ஜீ யை தான் முன்னெடுத்து செல்ல முயல்வார்கள் ,ஆனால் இப்பொழுது மீண்டும் 2ஜீயை அதிக முதலிட்டில் வாங்கினால் அதில் இருந்து லாபம் ஈட்ட அதிக வாடிக்கையாளர்களை கவர அதனையும் முன்னெடுத்தால் மக்கள் என்ன செய்வார்கள் விலை குறைவாக இருக்கு என 2ஜீ ஐயே தொடர்ந்து பயன்ப்படுத்துவார்கள்.3ஜீ க்கு என புதிதாக வாடிக்கையாளர்கள் பிறந்து வரப்போவதில்லை எனவே தொடர்ந்து 3ஜீ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயராது.

அதிக விலைக்கொடுத்து 2ஜீ என்ற பழைய நுட்பத்தினை வாங்கி அதனை முன்னெடுத்து செல்வதை விட , ஏற்கனவே முதலீடு செய்த 3ஜீ யை முன்னெடுத்து செல்லலாம், கட்டணத்தினை சிறிது குறைத்தால் போதும் மக்கள் 2ஜீ யில் இருந்து 3ஜீக்கு மாறிவிடுவார்கள்.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர உயர கட்டணம் குறையும் என்பது வியாபார நியதி, எனவே அடுத்த ஆண்டுக்குள் 3ஜீ கட்டணம் தற்போதுள்ள 2ஜீ கட்டணம் அளவுக்கு குறைந்துவிடும், எனவே அப்போது 2ஜீ சேவை பயன்ப்படுத்த ஆட்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம்.

எனவே இன்னும் குறுகிய காலமே நிலைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம் , Break even அடைய ஆகும் காலம் அதிகம் ஆகும் ,என தற்போதைய 2ஜீ ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

2ஜீ முற்றிலும் வழக்கொழிந்து விடுமா என்றால் ,நுகர்வோர் பார்வையில் ஒரு காலத்தில் 2ஜீ சேவை பயன்ப்பாட்டில் இல்லாமல் போகலாம், ஆனால் அலைப்பேசி நிறுவனங்கள் தொடர்ந்து 2ஜீ அலைக்கற்றையை Back-Up Airwave ஆக பயன்ப்படுத்துவார்கள் ஏன் எனில்,

3ஜீ யின் அலைவரிசையின் அதிகப்பட்ச வீச்சு(coverage) 5 கி.மீ , நகரப்பகுதியில் 1.5 கி.மீ தான் , எனவே 1.5 கி.மீக்கு ஒரு கோபுரம் என அமைத்தால் தான் 3 ஜீ சேவை தங்கு தடையின்றி தொடர முடியும், பயனர் அடர்த்தியுள்ள இடம் எனில் அவ்வாறு நிறைய கோபுரங்கள் வைக்கலாம், ஆனால் கிராமப்புறங்களில் ,மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் எல்லாம் அதிக 3ஜீ கோபுரங்கள் அமைப்பது லாபகரமான ஒன்றல்ல. எனவே அங்கெல்லாம் 2ஜீ கோபுரங்களே செயல்படும், இதன் மூலம் அதிக தொலைவினை கவரேஜ் செய்யலாம்.

இனி வருங்காலங்களில் 2ஜீ அலைக்கற்றை ஒரு உதவி அலைக்கற்றையாக மட்டுமே செயல்படும், ஏற்கனவே பல நாடுகளில் 3ஜீ, 4ஜீ, 5ஜீ என அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் 2ஜீ கைப்பேசிகள் விற்பனை செய்வதையே நிறுத்திவிட்டார்கள்.

வண்ண தொலைக்காட்சி வந்த பின் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியை ஆரம்பத்தில் கொஞ்ச நாள் வாங்கினார்கள் ,இன்று வாங்கவும் ஆள் இல்லை தயாரிக்கவும் ஆள் இல்லை, அதே நிலை தான் 2ஜீக்கும், மக்களுக்கு இனிமேல் 2ஜீ தேவைப்படாது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் Back-up  அலைக்கற்றையாக சிறிதளவே பயன்படும்.


இப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்  2008 இல் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்பிருந்ததா இல்லையா ?

----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,
http://www.indiabandwidth.com/db/article/757

http://www.ofcom.org.uk/static/archive/ra/topics/mpsafety/school-audit/mobilework.htm

http://www.coai.in/technology.php

இந்து, விக்கி, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# பிழை திருத்தம் , இன்னும் சில மாற்றங்கள் செய்யவில்லை ,பின்னர் சரி செய்யப்படும்.
----------------------------

86 comments:

suvanappiriyan said...

பல அரிய தகவல்கள். திருஷ்டி பரிகாரத்துக்கு அசின் போட்டோ எதற்கு? :-)

சார்வாகன் said...

சகோ வவ்வால்,
அருமையான பதிவு.
ஊழல் என்றால் என்ன?
அரசியல் ஊழல்
http://ta.wikipedia.org/s/q20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறைஅட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது.
..........
ஆகவே ஒரு ஒப்பந்தத்தின் உண்மையான் மதிப்பைவிட குறைவான விலைக்கு தனியாருக்கு கொடுப்பது ஊழல் என்றால் ,இத்னை ஐயந்திரிபர நிரூபித்தல் கடினம்.

ஒப்பந்த முறை நிர்ணயம் அரசு வகுத்த விதிகளின் படி நடை பெற்றதா என் மட்டுமே பார்க்க முடியும். அரசிடம் இரு பெற்ற ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு இலாபத்தோடு விற்க முடிவது குற்றம்,ஊழல் ஆகுமா?
ஊழல் நட்ந்து இருக்கும் வாய்ப்பே அதிகம்.ஆனால் அரசு விதிகளின் படி நிரூபிக்க முடியுமா என்பதே கேள்வி.
நமது சட்டங்களில்,தேர்தல் முறையில் அதிக மாற்றம் தேவை என்பதே நம் கருத்து.
மாறும் சூழலுக்கு ஏற்ப சட்டங்கள் தேவை.இண்டு இடுக்குகளில் ஊழல் நுழைவதை இப்போதைய சட்டங்கள் தடுக்க முடியாது.

நன்றி!!!


வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

வாங்க,நன்றி!

என்னாது திருஷ்டி பரிகாரமா ...ஹ்ஹ்ர்ர் ...மலபார் படம் போட்டா தான் பதிவே மஜாவா இருக்கும், அதை போய் திருஷ்டின்னு சொல்லுறிங்களே, நீங்க தான் சுவாமிகள் ஆகியாச்சுன்னா எல்லாரும் முற்றும் துறந்த சாமியார் ஆகணுமா?

அவ்வ்வ :-((
---------------

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!


ஊழலின் இலக்கணம் எல்லாம் படிக்க விக்கி வரைக்குமா போகணும் ,கோவால புரம் போனாலே சல்லீசா புரிஞ்சுக்கலாமே :-))

ஐயம் திரிபுற நிறுபிக்கனும் என்றால் இந்தியாவில் எந்த ஊழலையுமே சாட்சி கொண்டு வந்து நிறுப்பிக்க முடியாது, கார்ப்பரேஷன் கக்கூசை கூட ஒரு சாமனியனால் டெண்டர் எடுக்க முடியாது, அம்புட்டு சிண்டிகேட், இதில் தொலை தொடர்புல மட்டும் வெளிப்படையாகவா எல்லாம் நடந்திருக்கும்?

கார்ப்பரேஷன் கக்கூசுக்கு டெண்டர் விடுவதை ஒழிக்கணும், மேலும் இலவசமாக ஆக்கணும்,. அதை வல்லரசான இந்தியாவால் செய்ய முடியலை , என்னமோ சந்திரனுக்கு ராக்கெட் விடுறாங்கலாம் :-))

Anonymous said...

Excellent article about cellphone.

---By Maakkaan.

VENG said...

நல்ல பதிவு. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவும்.

சிவானந்தம் said...

வவ்வால்,

அற்புதமான பதிவு. ஈசியாக புரிந்துகொள்ளும் அளவில் எழுதி இருக்கிறீர்கள்.

இதில் டவர் ஷேரிங் முறை இருப்பதை நான் இப்போதுதான் படிக்கிறேன். இதுதான் தனியார் துறையை நான் ஆதரிக்க காரணம். அவர்களால் மட்டுமே இப்படி யதார்த்தமாக வேகமாக முடிவெடுக்க முடியும்.

இதேபோல் வங்கிகளும் ATM நடத்துவதை தனி நிறுவனமாக நடத்தலாமே?

தமிழ்நாட்டில் ஒரே தெருவில் அடுத்தது ATM பார்த்திருக்கிறேன். சில இடங்களில் அது இல்லாமல் அவஸ்த்தைபட்டிருக்கிறேன். இந்த முறை அங்கேயும் வந்தால் அவர்களுக்கும் லாபம், கிராமபுரங்களிலும் இதை அமைக்கலாம்.

அப்படி ஏதாவது பேச்சு இருக்கிறதா? இதுவரை நான் கவனிக்கவில்லை

Dino LA said...

அருமை

அஞ்சா சிங்கம் said...

தெளிவான அலசல் .......
நேற்று புதியதலைமுறை சானலில் . வேறு கோணத்தில் அலசி இருந்தார்கள் ..
ஊழல் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும் . இவ்வளவு பிரம்மாண்டமாக ஆக்கியதில் அரசியல் நிறையவே இருக்கிறது . இன்னும் நிலக்கரி ஏலம் இருக்கிறது பார்க்கலாம் ..
நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் .மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படுகிறது .
பிரம்மாண்டமாக ஊதி பெரிதாக்கி பொறுப்பற்றதனமான செய்தியையும் நாம் மறுப்பதற்கு இல்லை .
தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான் .
(இந்த அசின் ஆண்டியை விட மாட்டீரா .)

வவ்வால் said...

மாக்கான்,

வாங்க,தொடர் வருகைக்கும், ஊக்கத்திற்கும்,நன்றி!
-------------------
வெங்க்,

வாங்க,நன்றி!

ரொம்ப சுருக்கமா பேரு மட்டுமில்ல கருத்தும் :-))

ஆங்கிலத்தில் உள்ள பல தரவுகளை வைத்து தானே எழுதுறேன் ,அதை மீண்டும் ஆங்கிலத்தில் ஏன் செய்யனும் ,மேலும் ஆங்கிலத்தில் எழுதினால் பள்ளியில் கட்டுரை எழுதுவது போல ஆகிடுது, தமிழில் தான் நமக்கு என ஒரு நடை கிடைக்குது.
---------------
சிவானந்தம்,

வாங்க,நன்றி!

ஆரம்பத்தில் போட்டியாளரை தவிர்க்க தங்களுக்கு மட்டுமே பிரத்யோக டவர் இருக்க வேண்டும் என நினைத்தார்கள், ஆனால் எல்லா இடத்திலும் பரவலாக சென்று சேர அம்முறை உதவாது என புரிந்து கொன்டு ஷேரிங்க் முறைக்கு மாறிவிட்டார்கள், ஆனால் இன்னமும் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு எங்கே போனாலும் எங்க நெட் ஒர்க் வரும்னு அவங்க புகழை பாடும் பம்மாத்து மட்டும் குறையவில்லை :-))

ஏடி.எம் இல் பணமில்லை வைக்கணும்,அதை யார் வைப்பது? பணம் என்பது ஒரு மூலதனம், எனவே அதனை பொதுவாக ஒருவர் வைத்தால் என்ன ரிடர்ன் கிடைக்கும் எனப்பார்ப்பார். வெறும் சர்வீஸ் சார்ஜுக்காக மட்டும் நாடெங்கும் கோடிக்கணக்கான பணத்தினை ஏடி.எம் இல் வைக்க முன்வர மாட்டார்கள்.

வங்கிகள் கூட அதிக ஏடி.எம் வைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம், ஒரு மெஷ்இனில் சுமார் 50 லட்சம் வைக்க வேண்டுமாம், இது போல பல மெஷ்இனில் வைக்கும் பணம் முதலீடு ஆக இல்லாமல் சும்மா வைக்கப்படுவது ,அவற்றின் மூலம் வரும் வட்டி வருமானத்தினை கணக்கு போட்டால் , சர்வீஸ் சார்ஜ் ஒன்றுமே இல்லை, எனவே அதிக பணத்தினை முடக்க மாட்டார்கள்.

இப்பொழுது பல வங்கி ஏடி.எம் கள் இடையே இணைப்பு கொடுத்து ஷேரிங் ஆக வைத்துள்ளார்கள், அவ்வளவு தான் செய்ய முடியும், அதிலும் சில பெரிய வங்கிகளுக்கு இழப்பே, 12,000 ஏடி.எம் இருக்கும் ஸ்டேட் வங்கியின் சேவையை சில 100 ஏடி.எம் இருக்கும் வங்கியும் பகிர்வதால் ஸ்டேட் வங்கிக்கு இழப்பு தானே.
-------------
மாற்றுப்பார்வை,

வாங்க,நன்றி!

நாம மாற்றுப்பார்வையில் பதிவு போடுவோம், நீங்க பேரையே மாற்றுப்பார்வைனு வச்சிக்கிட்டிங்க :-))
-------------

அஞ்சா ஸிங்கம்,

வாங்க,,நன்றி!

2ஜீ ஏலம் குறைவாக போனதில் பல இரகசியங்கள் இருக்கு, நான் தொழில்நுட்ப ரீதியான பின் புலத்தினை மட்டுமே சொன்னேன்.

யுனிநார் 1200 கோடிக்கு வாங்கி 6000 கோடிக்கு 60% பங்குகளை விற்றது போன்றவற்றை வைத்து பார்த்தால் பல்ல மடங்கு மதிப்புள்ளதை குறைவான விலைக்கு விற்கப்பட்டது என 122 உரிமங்களுக்கும் கணக்கு போட்டது சொன்னது அத்தொகை.

கண்டிப்பாக குறைவான மதிப்பில் அலைக்கற்றை விற்கப்பட்டது உண்மையே, ஏன் சில ஆயிரங்கோடி ஊழல் என்றால் ஊழல் இல்லைனு ஆகிடுமா?

ஊடகங்களுக்கு எதையும் பெரிதாக ,பரபரப்பாக செய்தி ஆக்க வேன்டுமே, ஒரு விபத்து ஏற்பட்டாலும் பயங்கர விபத்து என்று தானே செய்தி போடுவார்கள்.

ஹி...ஹி மலபாரை அதுக்குள்ள ஆன்டினு சொல்லீட்டீர், நம்ம பதிவை மங்களகரமா வைத்திருக்க உதவும் மயிலு,மலபார் குயிலுய்யா :-))


தி.தமிழ் இளங்கோ said...

இது போன்ற கட்டுரைகளில் நீங்கள் தரும் விரிவான செய்திகள் படிப்பவர்களுக்கு பயன் உள்ளவையாக உள்ளன. இந்தியாவில் ஊழல் என்பது எந்த ஆட்சியிலும் தொடர் கதைதான்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டங்கள் தவிர முழுவதும் படித்தேன்.இன்னுமொரு முறை படிச்சுட்டு சொல்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி மேலேயும் அசின் படம் போடுறதா இருந்தா நான் இனி இங்க வர்ரதா இல்லை.......

வவ்வால் said...

தமிழிளங்கோ சார்,

வாங்க,நன்றி!

நாம படிப்பதை ,அப்படியே பகிரவும் செய்கிறோம், அதனால் பயனும் இருப்பதாக சொல்கிறீர்கள், அதுவே நமக்கும் மகிழ்வான பயன்.

ஊழல் நாட்டில் தொடர்கதை மட்டுமில்லை, தைரியமாகவும் செய்கிறார்கள்,முன்னர் எல்லாம் ஊழல் செய்தாலும் மக்களுக்கு தெரிந்தால் அசிங்கம் என நினைப்பார்கள்,இப்போ கூச்சப்படுவதேயில்லை :-))

---------

ராச நடராசர்,

நன்றி,

படிக்க ஒரு நாள் ,பின்னூட்டம் போட ஒரு நாளா ?சுகவாசிய்யா நீர் :-))

---------

ப.ரா,

நன்றி!

இது என்னய்யா உம்மோட ஒரே அக்கப்போரா போச்சு, அழகா ஒருப்படத்த போட்டா ரசிக்கிறத விட்டுப்புட்டு ரகளை செய்துக்கிட்டு...

அவனவன் ஒரு பதிவுக்கு 10 வண்ணப்படம் போட்டு குஜாலா இருக்கான், நான் ஒரு வண்ணப்படம் போட்டுட்டு உங்க கிட்டே நான் படுறப்பாடு இருக்கே அய்யய்யோ முடியலை ....அவ்வ்வ் !!!

ஜோதிஜி said...

திகைத்துப் போய் என்ன எழுதுவது என்றே தெரியாமல் முழிக்கின்றேன். ஒரு முழு புத்தகத்தில் சொல்லப்பட வேண்டிய விசயங்களை எந்த சுப்பனும் குப்பனும் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்ன விதத்திற்கு எனது பாராட்டு.

இந்த தொழில் நுட்பம் நம் வாழ்க்கையோடு சம்மந்தபட்டது என்பதால் எளிதாக புரிந்தது.

நான் பார்த்தவரைக்கும் வலையுலகில் வெட்டிக்காடு ரவி என்பவர் மட்டும் இந்த துறையில் இருக்கிறார். அவரும் இதே போல ஒரு தொடர் எழுதியிருந்தார்.

பெரும்பாலும் ஒரு துறையில் இருப்பவர்கள் அது குறித்து எழுதுவதற்கும் துறை சாராமல் வேறொரு துறையில் இருப்பவர்கள் ஆர்வத்தின் அடிப்படையில் தெரிந்து கொண்டு எழுதுவதறக்கும் உள்ள வித்தியாசங்களை உங்கள் எழுத்தின் மூலம் உணர முடிகின்றது.

ஆனால் இன்று வரைக்கும் நீங்களும் சார்வாகனும் எந்த துறையில் இருக்கீறீங்க என்பதைக்கூட சொல்லமல் மறைப்பதற்கு காரணம் 66ஏ வா?

ஒன்னும் செய்திடமாட்டாங்க? ச்ச்சும்மா சொல்லுங்களேன்?

ஜோதிஜி said...

ஏடிஎம் செயல்பாடுகள் குறித்து எழுதலாமே?

Prakash said...

சரி ஒரு வாதத்திற்கு அப்படி 2008லேயே ஏலம் நடந்திருந்தால், கூற்றின்படி 2010ல் அவுட் டேட் ஆகும் (2010ல் 3G ஏலம் நடந்தது) , எப்போதுமே அடுத்தகட்ட வளர்ச்சிகளை உற்றுநோக்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் 3G வரப்போகிறது என்று...... எப்படியும் ஒரு அவுட் டேட் ஆகும், இரண்டு வருடத்திலேயே காலாவதியாகும் ஒரு டெக்னாலஜிக்கு 1.76 லட்சம் கோடி அள்ளிகொடுக்க, தொலைதொடர்ப்பு நிறுவனகளுக்கு பைத்தியமா பிடித்திருக்கு ???? இல்லை ரெண்டே வருடத்தில் 1.76 லட்சம் கோடியை திரும்ப எடுக்கும் ரிட்டர்ன் ஆப் இன்வெஸ்ட்மென்ட் இருக்கின்றதா.....

இந்தியாவை பொருத்தவரைக்கும் சுமார் 95% சதவீதம் மொபைல் போன்கள், 2G தொழில்நுட்பத்தில் தான் இருக்கின்றன..இது மாற இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்..எனவே 2G இணைப்புகள் தான் எப்போதும் டிமாண்டில். இனிமேலும் 2G இணைப்புகள் தான் அதிக அளவில் வாங்கப்படும்.

மேலும், அவர்கள் சொல்வது போல, இந்தியாவில் இன்னும் பல வருடம் கழித்து அவுட்டேட் ஆகப்போவது 2G தொழில்நுட்பம் தான், 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை அல்ல....இதே ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை 3G / 4G போன்ற தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தலாம்..இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒன்றும் அவுட்டேட் ஆகப்போவதும் இல்லை, காலாவதியாகப்போவதும் இல்லை....

இந்த ஏலமே ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு தானே ஒழிய, 2G தொழில்நுட்பத்திற்கு அல்ல..

Prakash said...

குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் இணைய அறிவாளிகள் பொங்கினார்கள்...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகியிருக்கிறார்கள்...

ஆனால், 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. இதை தெரியாமல் அவர்கள் பொங்கினார்கள்..

"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity,"

"companies can raise additional capital which come through FDI by divesting their equity."

All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.

http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166

Prakash said...

ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?

1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை

இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

1995 - ஏலமுறை அறிமுகம்

மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.

1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை

இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.

2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.


முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)

இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).

தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (­Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை.

For More Pls Read : http://naathigam.blogspot.com/2010/12/blog-post_24.html

Prakash said...

சரி, அந்த நிருவனங்களிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??

வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சுசாமி, பூஷன் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்க்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன...

முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட ஜாதி கும்பல், அதின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிடப்பட்ட, சதி வலை பின்னப்பட்ட ஒரு விஷயமாகும்.....

1. 2ஜி நஷ்டம் ரூ. 1.76 கோடி என்று திரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடும் முன் வினோத் ராய், பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

2. மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தது ஏன்?, இருவரும் என்ன பேசினார்கள்?, நஷ்டத்தை அதிகரித்துக் காட்ட அந்த சந்திப்பில் முடிவெடுத்தார்களா?

3. RSS சார்புடைய முரளி மனோகர் ஜோஷி, ஜெயலிதாவுடன் மிக நெருக்கமான தொடர்புடையவர்...மேலும் இந்த 2G விஷயத்தில் அதிக அக்கரை காட்டும் சு. சாமி, பொதுநல வழக்குகள் தொடரும் பூஷன் கும்பல் போன்றோர்கள் எல்லாம் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்...யார் கண்டது , 2G வழக்கை விசாரிக்கும் சிபிஐ மற்றும் நீதிபதிகளில் கூட அந்த அமைப்பின் நிழல் உறுப்பினர்கள் இருக்கலாம்

4. ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை முழு அளவில் ஆய்வு செய்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்து, ரிப்போர்ட் தயாரித்தவர் , மதிய தணிகை துறையின் மூத்த உயர் அதிகாரி ஆர்.பி.சிங்.

5. ஆனால், சிங் தயாரித்த அந்த அறிக்கையை வெள்ளியிடவர், மதிய தணிகை துறையின் தலைவரான வினோத் ராய்.

6. சிங் ஆராய்ந்து தயாரித்த ஆடிட் அறிக்கையில் இழப்பு தொகையாக இருந்தது, ரூ. 2,645 கோடி தான், அதுவும் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி ரூ.2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டது.

7. இந்த முழு உண்மையையும் மறைத்துவிட்டு, அரசாங்கத்திற்கும், குறிப்பாக திமுக மற்றும் ராஜாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு அசிங்கபடவேண்டும் என்று திட்டமிட்டு அந்த 2,645 கோடியை, மிக மிக உயர்த்தி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கட்டு கதை திரிக்கப்பட்டு, அவர்களுடைய ஊடகங்கள் மூலம் முன்கூட்டியே கசியவிடபட்டு தொடர் பொய் பிரச்சாரம் இடைவிடாமல் நடத்தபட்டது..

8. அந்த திரிக்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இட ராயால், சிங் நிர்பந்திகபட்டுள்ளார்...ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை ஆராய்ந்து ரிப்போர்ட் தயாரித்த ஆர்.பி.சிங்கிடம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ள விவரமும் வெளியே வந்துவிட்டது. அந்த ரிப்போர்ட்டைத் திருத்தி, மாற்றி எழுதிவிட்டு, அவரை படித்துப் பார்க்க கூட விடாமல், கடைசி பக்கத்தில் மட்டும் அவரச அவசரமாக கையெழுத்து வாங்கியது ஏன்?.

வவ்வால் said...

பிரகாஷ்,

வாங்க,உங்க வரவு நல்வரவு ஆகுக!

யாருமே இல்லாத டீக்கடையிலேயே நான் நல்லா ஆத்துவேன் , நீங்க ஒருத்தர் தேடி வந்த பிறகு சும்மா விடுவேனா ....ஆத்திடுவோம் :-))

மிக அற்புதமாக ஒரு கழக விசுவாசியாக கருத்துக்களை வைத்துள்ளீர்கள்,ஆனால் அதில் சான்றுகளோ, தர்க்கமோ பொருந்தி வரவில்லை என்பது உங்கள் துர்பாக்கியமே எனலாம்.

#// எப்படியும் ஒரு அவுட் டேட் ஆகும், இரண்டு வருடத்திலேயே காலாவதியாகும் ஒரு டெக்னாலஜிக்கு 1.76 லட்சம் கோடி அள்ளிகொடுக்க, தொலைதொடர்ப்பு நிறுவனகளுக்கு பைத்தியமா பிடித்திருக்கு ???? இல்லை ரெண்டே வருடத்தில் 1.76 லட்சம் கோடியை திரும்ப எடுக்கும் ரிட்டர்ன் ஆப் இன்வெஸ்ட்மென்ட் இருக்கின்றதா.....//

இப்படி சொல்லிவிட்டு , அடுத்த பத்தியில் என்ன சொல்கிறீர்கள்,

//இந்தியாவை பொருத்தவரைக்கும் சுமார் 95% சதவீதம் மொபைல் போன்கள், 2G தொழில்நுட்பத்தில் தான் இருக்கின்றன..இது மாற இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்..எனவே 2G இணைப்புகள் தான் எப்போதும் டிமாண்டில். இனிமேலும் 2G இணைப்புகள் தான் அதிக அளவில் வாங்கப்படும். //

இப்படியும் சொல்கிறீர்களே :-))

ஏன் இந்த முரண்பாடு.

2008 இல் 3ஜி இல்லை , எனவே அதிக விலை சொன்னாலும் ,2ஜி பயன்ப்பாட்டாலர்கள் மிக அதிகமாக பெருகி வரும் நிலையில் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாங்கி தான் ஆக வேண்டும், எனவே வாங்குவார்கள்.

மேலும் 1.76 லட்சம் கோடி என்பது உத்தேசமானதே, 2008 இல் 122 உரிமங்களை 9 நிறுவனங்களுக்கு விற்றதில் Rs 12,386 crores மட்டுமே அரசுக்கு கிடைத்தது , இது மிக சொற்ப தொகை என்பதை யாருமே மறுக்க முடியாது எப்படி என்பதை புரிந்து கொள்ள 2008-09 காலத்தில் ஏர்டெல் ஈட்டிய லாப விகிதத்தை காணவும்

//Bharti Airtel Limited FY 2008 : Strong Revenue Growth of 46% and ending at over Rs. 27,000 Crore
Bharti Airtel announces results for the fourth quarter and full year ended March 31, 2008

Highlights for Full Year ended March 31, 2008

Overall customer base crosses 6.4 crore.

Highest ever-net addition of 2.5 crore customers in a year.

Market leader with a market share of all India wireless subscribers at 23.8%(22.4% last year)

Total Revenues of Rs. 27,025 crore (up 46% Y-o-Y)

EBITDA of Rs. 11,372 crore (up 53% Y-o-Y).

Cash Profit of Rs. 11,137 crore (up 52% Y-o-Y).

Net Income of Rs. 6,701 crore (up 57% Y-o-Y).//

http://www.airtel.in/wps/wcm/connect/About%20Bharti%20Airtel/bharti+airtel/media+centre/bharti+airtel+news/corporate/bharti+airtel+limited+fy+2008

27 ஆயிரம் கோடி வியாபாரம், நிகர லாபம் 6,701 கோடிகள். ஆண்டுக்கு 2.5 கோடி வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லில் இணைந்துள்ளார்கள். இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் 2008 ஆம் ஆண்டு என்பது 2ஜீ தொலைத்தொடர்பின் வருமானம் ஈட்டும் திறனின் உட்ச கட்ட காலம் என்பது.

எனவே 1.76 கோடிக்கு விற்க சொல்லவில்லை ஒரு லட்சம் கோடி ஏன் 50 ஆயிரம் கோடிக்கு அப்போது அலைக்கற்றையை விற்று இருந்தாலும் அனைத்து நிறுவனங்களும் போட்ட முதலீட்டை ஒரு சில ஆண்டுகளில் லாபத்துடன் எடுக்கவே செய்திருப்பார்கள்.

இல்லை என மறுக்க முடியுமா?

#//மேலும், அவர்கள் சொல்வது போல, இந்தியாவில் இன்னும் பல வருடம் கழித்து அவுட்டேட் ஆகப்போவது 2G தொழில்நுட்பம் தான், 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை அல்ல....இதே ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை 3G / 4G போன்ற தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தலாம்..இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒன்றும் அவுட்டேட் ஆகப்போவதும் இல்லை, காலாவதியாகப்போவதும் இல்லை....//

எனது பதிவிலேயே இதனையும் சொல்லி இருக்கிறேன், ஆனால் நீங்கள் சொல்வது போல 2ஜீ அலைவரிசையை 3ஜி,4ஜீக்கு பயன்ப்படுத்த முடியாது , Back-up Airwave ஆக என்பதை விளக்கியுள்ளேன்.

எனவே 2ஜி அலைக்கற்றை இருக்கும், அதனை வாடிக்கையாளர்கள் பயன்ப்படுத்த மாட்டார்கள் என.2ஜீ அலைப்பேசி மலிவாக கிடைக்கும் வரையில் 3ஜீக்கு யாரும் மாறப்போவதில்லை, ஏற்கனவே 3ஜீக்கு பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார்கள், இப்பொழுது 3ஜீக்கு வாடிக்கையாளர்களை புதிதாக உருவாக்க முடியாது, 2ஜீ பயனாளர்களை இழுக்க வேண்டும், எனவே 3ஜீ விலையை குறைக்க வேன்டும், அப்படி செய்ய தயாரான காலக்கட்டம் 2012 இல் ஆரம்பிக்கிறது எனவே இப்பொழுது 2ஜீக்கு அதிக விலைக்கொடுக்க மாட்டார்கள்.

ஏனவே ஏற்கனவே இருக்கும் 2ஜீ அலைக்கற்றைக்கு செலவிட்ட தொகையை அனைத்து நிறுவனன்ங்களும் லாபத்துடன்ன் எடுத்தாகிவிட்டது, இனிமேல் 2ஜீ அலைக்கற்றையில் பெரும் முதலீடு செய்ய முன் வரமாட்டார்கள் .

தொடரும்...

வவ்வால் said...

பிரகாஷ்,

//ஆனால், 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. இதை தெரியாமல் அவர்கள் பொங்கினார்கள்..//

உங்களுக்கு அந்நிய நேரடி முதலீடு,ஈக்குவிட்டி ஷேர் என்றாலே சரியாக புரியவில்லை ,இதில் அடுத்தவர்களை சொல்கிறீர்க்களே :-))

ஈக்குவிட்டி ஷேர் என்பது சமமாக பிரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு, அது பட்டியல் இட்டாலும்,இடப்படவில்லை என்றாலும் முகமதிப்பில் ஒரே மதிப்பினை உடையது.

பட்டியல் இடப்பட்டு சந்தை விலைக்கு வரும் போது தான் அது பொது பங்கு ஆகிறது.

பட்டியல் இடப்படாத அனைத்து நிறுவனங்களையும் ஏதேனும் ஒரு எண்ணிக்கையாக சமமதிப்பில் மொத்த நிறுவன மதிப்பை பிரித்தாலும் ஈக்குவிட்டி ஷேரே.

இது லாப,நட்டத்தினை சமமாக பகிற செய்யப்படுவது.

புரோமோட்டர்ஸ் என்ற பதமே அந்த நிறுவன பங்குகள் பங்கு சந்தையில் பட்டியலிடும் போது மட்டுமே வரும், அவர்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குகளே புரோமோட்டர்ஸ் ஷேர்.

பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஷேர்கள் அனைத்தும் ஈக்குவிட்டி ஷேர்களே ஆனால் தனிப்பட்ட பங்குதாரர் ஷேர்கள் அவ்வளவே.

ஸ்வான் டெலிகாம் ,அப்போது தான் உருவான ஒரு டெலிகாம் நிறுவனம், அவர்களுக்கு அதற்கு முன்னர் ஒரு செங்கல் கூட டெலிகாம் நிறுவன உரிமையாக இல்லை. ஆனால் அலைக்கற்றையை 1,537 கோடிக்கு வாங்கி 4,200 கோடிக்கு 45% சதவீத நிறுவன பங்குகளை எப்படி விற்க முடிந்தது?

அந்நிய நேரடி முதலீடு என்றால் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு அதன் மதிப்பு மற்றும் செயல்ப்பாட்டினை பொறுத்து வரலாம், அல்லது நிறுவனம் ஆரம்பிக்கும் போதே seed capitol முதலீட்டாளராக வரலாம்.

ஆனால் செயல்படாத நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள் ,அதுவும் மிக உயர்ந்த விலைமதிப்பீட்டில் , எதன் அடிப்படையில்?

ஸ்வான் டெலிகாமின் மதிப்பு எப்படி உடனே உயர்ந்தது ,காரணம் அவர்கள் வாங்கிய அலைக்கற்றை மட்டுமே.அப்படியானால் அந்த மதிப்பு அலைக்கற்றையின் மதிப்பே அன்றி ,நிறுவனத்தின் மதிப்பல்ல என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
-----------------

//ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?//

பெருசா நீட்டி முழக்கியிருப்பதெல்லாம் தேவையே இல்லை.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு, 2008 இல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டார்கள், யார் செல்போன் நிறுவனம் ஆரம்பித்து விற்றாலும் ,கட்டணம்ம், கவரேஜ் சரியாக இருந்தால் ஓடி வந்து வாங்க தயாராக இருந்தார்கள்.

முன்னர் வகுத்த விலைக்கொள்கையை அப்படியே பின்பற்றினோம் என்றால் , 2001 இல் இருந்த விலைக்கா பெட்ரோல் 2008 இல் விற்பனை செய்யப்பட்டது.

இல்லை முன்னர் பெட்ரோல் விலையை மத்திய பெட்ரோலிய துறையே நிர்ணயம் செய்ததை எப்படி மாற்றி எண்ணை நிறுவனங்கலே நிர்ணயிக்கலாம் என முடிவெடுத்தார்கள், அதுவும் பழைய கொள்கையாக வைத்திருக்க வேண்டியது தானே?

பெட்ரோலின் விலையை மட்டும் சந்தை விலைக்கு நிர்ணயிப்போம், ஆனால் அலைக்கற்றை விலையை எல்லாம் ஆதிகால விலைக்கே தான் விற்போம் என சொல்வது ஏன்?

-----------------

வவ்வால் said...

பிரகாஷ்,

//சரி, அந்த நிருவனங்களிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??//

நல்லா பாயிண்ட் எடுத்துக்கொடுக்கிறீங்க,நன்றி!

கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் வெறும் 1 லட்சம் முதலீட்டில் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது 2008 இல் பல ஆயிரம் கோடி வருமானம்ம் காட்டியது எப்படி?

இந்நிறுவனத்தில் இறந்த சாதிக்பாட்சா மற்றும் ஆ.ராசவின் மனைவி, சகோதரர்கள் அனைவரும் பங்குதாரர்கள்.

யுனிடெகின் ஒரு நிறுவனமான டிபி ரியாலிட்டிஸ் கிரீன் ஹவுசுடன் கொடுக்கல் வாங்கல் செய்து இருக்கிறது.

எங்கோ மும்பையில் இருக்கும் டிபி நிறுவனம் எப்படி எந்த உத்தரவாதமும் இல்லாமல் சென்னையில் புதிதாக துவங்கிய கலைஞர் டிவிக்கு 200 கோடி கடன்ன் என்ற பெயரில் பணம் கொடுத்தது. பின்னர் 200 கோடியும் திருப்பிக்கொடுக்கப்பட்டதாக கணக்கும் காட்டப்படுகிறது.

200 கோடி வருமானம் ஈட்டியதா கலைஞர் டீ.வி ,அதன் நிதி நிலை அறிக்கையில் கூட 200 கோடி லாபம் வந்ததாக இல்லை.

# சென்னை அண்ணா சாலையில் ஒரு சதுர அடி என்ன விலை இருக்கும்,

53,000 sq ft சதுர அடி ஓல்டாஸ் வளாகத்தினை 25 கோடிக்கு சரவணன் என்பவர் வாங்குகிறார் அது பின்னர் மலேஷியாவை சேர்ந்த ஷண்முகநாதன் என்பரின் ஷங்கல்பம் நிறுவனத்திற்கு கைமாறுகிறது.25 கோடிக்கு அண்ணா சாலையில் அவ்வளவு பெரிய இடத்தினை வாங்க முடியுமா?

அண்ணா நகரிலேயே ஒரு கிரவுண்டு 2400 ச.அடி 5 கோடிக்கும் மேல் :-))

சரவணன் என்பவர் ராயல் எண்டர் பிரைசசில் ஒரு பணியாளராக வேலை செய்தவர், அந்நிறுவனம் ராஜாத்தியாம்மாளுக்கு சொந்தம்.

ஷண்முகநாதன் ஒரு ஆடிட்டர், முன்னர் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸின் மலேசிய கிளைக்கு கணக்கு பார்த்துள்ளார், இவருக்கு குன்னூரில் தேயிலை தோட்டம் இருக்கிறது, ராசாவின் தொகுதி அது. எனவே இதன் பின்னால் யார் இருப்பார்கள் என உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.

முழுக்கதையும் தெகல்கா இணைய தளத்தில் இருக்கு படிக்கவும்.

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne010111Coverstory.asp

இன்னும் கூட நீங்கள் நிறைய கேள்விகள் கேட்கலாம் ...கேட்டால் கிடைக்கும், தக்க பதில் :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

பிரகாஷர் போட்ட பின்னூட்ட வெள்ளத்தில் உங்களை கவனிக்கவில்லை, ஆனாலும் நீங்க ரொம்ப்ப புகழுறீங்க :-))

நன்றி!

நீங்க காரைக்குடி பதிவில் சொன்னது போலத்தான் இணையம் நமக்கு அறிவுக்கண்ணை திறக்க உதவுது ,படிக்க ஆர்வம் இருந்தால் போதும் நல்லா கற்கலாம், உண்மையில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கூட இத்தனை கற்றுக்கொண்டதில்லை, மக்கு மண்டையாகவே இருந்தேன் :-))

ஹி...ஹி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லை என்பதால் நம்மை பற்றி சொல்லிக்கொள்வதில்லை, 66 ஏ வுக்கு எல்லாம் டாட்டா காட்டுவேன் :-))
----------
ஏடி.எம் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டு பதிவிடுகிறேன்.

முன்னர் ஏடி.எம் அமைப்பிற்கு மென்பொருள் தயாரிப்பில் இருந்தவர் எனது நண்பர் அவர் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் ஏடி.எம் மென்பொருள் முதன் முதலில் உருவாக்கியவர்களே சென்னையை சேர்ந்த லேசர் சாஃப்ட் என்ற நிறுவனம் தானாம். மெஷின்கள் புதுச்சேரியில் தான் அதிகம் தயாரிக்கப்படுகிறதாம். கிளையண்ட்-செர்வர்,கோர் கம்பியுட்டிங்க் என்றெல்லாம் சொன்னார், அப்போ ஒன்னும் புரியலை, மீண்டும் படித்து பதிவாக போடுகிறேன்.

பட்டிகாட்டான் Jey said...

தொழிநுட்பம் ரீதியாக விரிவாக எழுதியமைக்கு நன்றி.

2007 லிருந்து 20010 முடிய 4ஆன்காண்டுகாலம் தொலைதொடய்பு நிறுவனங்களின் வருமானம் மற்றும் நிகர லாபங்களை கணக்கிட்டால், 1 லட்சம் சொச்சத்திற்கு ஏலம் எடுத்திருந்தாலும் எந்த நிறுவனமும் நஷ்டம் அடைந்திருக்காது என்று தெரிந்து கொள்ளலாம்.

லாபத்தை ஈட்டமுடியும் என்ற தெளிவான எஸ்டிமேட் போட்டுக் கொண்டுதான் டெலினார் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் 1661 கோடிக்கு வாங்கிய ஷேர்களின் 60% பங்கை 6200 கோடிக்கு வாங்கியது.

அதே காலகட்டத்தில் S-Tel (சிவசங்கரன் நிறுவனம்)நிறுவனம் 10,00 கோடிக்கி வாங்க முன் வந்துது மேலும் கட்டணம் உயர்த்தினாலு குடுக்க தயார் என்று சொன்னது.

இந்த இரண்டு கோணங்களில் பார்த்தால் 2008 காலகட்டத்தில் சுலபமாக 50,000த்துக்கும் மேலான பணம் அரசுக்கு வருமானமாகக் கிடைத்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

1.76 என்பது 3ஜி ஏலத்தின் வருமானத்தை வைத்து தோராயமாகக் கணக்கிட்ட தொகை.

அதை விட்டுவிட்டாலும் மற்ர இரண்ண்டு கோணங்களில் அரசுக்கு வந்திருக்க வேண்டிய வரமானத்தை இழக்கச் செய்தது சரிதானா?

அரசின் வருமான இழப்பைவிட குறைந்த அளவில் தான் லஞ்சம் பறிமாரப்பட்டது என்று யாரேனும் சொன்னாலும் ஊழல் ஊழல்தானே, அதை எப்படி மறுக்க முடியும்...



ராஜ நடராஜன் said...

வவ்ஸ்!பின்னூட்டம் நீட்டி முழக்கனும்ன்னுதான் நினைத்தேன்.நண்பர் பிரகாஷ் குற்றவியல் வக்கீல் மாதிரியே க்ளையன்டை காப்பத்தனும்ன்னு ரொம்ப பாடுபடுகிற மாதிரியே பின்னூட்டங்கள் போட்டுள்ளார்.சகோக்களுடனான அக்கப்போரை விட இப்படியான பின்னூட்டங்கள் ஆக்கபூர்வமாகவும் மண்டைக்கு விடுகதை போடற மாதிரியும் இருப்பதால் பிரகாஷின் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.

எதிர் வக்கீல் மாதிரி பாய்ன்ட்களை உடைச்சிருக்கீங்க.பிரகாஷ் இன்னும் சொல்லுகிறாரான்னு பார்த்துட்டு நானும் எடுத்துக்கொடுக்கிறேன்.(தனியாவே ஆத்துவீங்கன்னு சொல்றீங்களா:))

அசினு சிவப்பு சேலை கட்டுற போதே ப.ரா அறிக்கை விட்டார்.ப.ரா சொல்ற ரகசியத்தை இன்னும் புரிஞ்சுக்காம அசினுகிட்டேயே ஜொல்லு வடிஞ்சா:)

ராஜ நடராஜன் said...

அட்ரா சக்க!அட்ரா சக்க!பட்டிக்காட்டான் எப்படி எடுத்துக்கொடுக்கிறார்ன்னு பாருங்க!

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கும்,பிரச்சினைக்குள் சிக்கியவர்களுக்கும் வேண்டுமென்றால் சார்பு நிலைகள் இருக்கலாம்.நமக்கு உண்மை மெய்ப்பித்தலே பிரதானம்.

வவ்வால் said...

பட்டிக்காட்டார்,

வாங்க,நன்றி!

அஃதே,அஃதே...நானும் அதை தான் ஏர் டெல்லின் 2008 ஆம் ஆண்டின் நிதி அறிக்கை வைத்து சொல்லியுள்ளேன்.

ஒன்பது நிறுவனங்களும் சேர்ந்து ஒரு லட்சம் கோடிக்கு உரிமம் பெற்றிலிருந்தாலும் 2-3 ஆண்டுகளில் வட்டியுடன் முதலினை திருப்பி இருப்பார்கள்.

ஏர் டெல் நிதியறிக்கையிலும் 6,700 கோடி என 2008 இல் காட்டியிருந்தாலும் அது முழு லாபத்தினை வெளிக்காட்டவில்லை, அவர்கள் அவ்வாண்டு மொத்த வருமானம் சுமார் 27,000 கோடியில் சுமார் 12000 கோடியினை ரிசர்வ் என ஒதுக்கி வைத்துள்ளார்கள், அது எதிர்கால வளர்ச்சிக்காம். எனவே ஒரு லட்சம்ம் கோடிக்கு உரிமம் போயிருந்தாலும் யாருக்கும் நட்டமே வந்திருக்காது என்பதே உண்மை.

தனியார் கொள்ளை லாபம் சம்பாதிக்க சதவீத அடிப்படையில் கமிஷன் வாங்கிக்கொண்டு உரிமம் கொடுக்கப்பட்டதை இன்னமும் கழக விசுவாசிகள் இல்லை என்பதை பாமரனும் ஏற்க மாட்டார்கள்.

------------

ராச நடராசர்,

வாங்க,நன்றி!

மார்க்கப்பந்துக்கள் மதக்கோட்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கிறார்கள், இவர் ஊழல் கோட்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கிறார்கள், இரண்டுமே பொய்களின் அடிப்படையில் என்பதால் கட்டுடைப்பது எளிது.

எடுத்துக்கொடுக்க வேண்டாமா, கொடுத்தால் வேண்டாம்னா சொல்ல போறாங்க.

சிங்கிளாவும் ஆத்துவோம் ,எசப்பாட்டுக்கு ஏற்றார்ப்போலவும் ஆத்துவோம்ல!

# ப.ரா சொல்வதில் என்ன ரகசியம் இருக்குன்னு சொல்லாம சொன்னா எப்பூடி? அவர் பிரமாண்டாமா எதிர்ப்பார்க்கிறார் போல நாம கைக்கடக்கமா கச்சிதமா இருந்தால் போதும் என நினைக்கிற எளிமை விரும்பி :-))

# பட்டிக்காட்டார் சொன்னதை தான் நானும் சொல்லி இருக்கிறேன்,நான்ன் சொல்லி இருப்பதன் தர்க்க நியாயம் அவருக்கு புரிந்துள்ளது எனவே கூடுதலாக எடுத்து கொடுக்கிறார்.

பொதுவாக அனைவருக்குமே தெரியும் 2008 காலம் அலைப்பேசி பயன்ப்பாட்டின் உச்ச நிலை என, எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என நல்ல விலைக்கு அலைக்கற்றைகளை விற்றிருக்கலாம், சந்தை என்பது சப்ளை & டிமாண்ட் மற்றும் நுகர்வு விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் என்பதை பொருளாதாரம் அறிந்தவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆனால் ராசா போன்றவர்களுக்கு புரியாமல் போனதாக கழக கண்மணிகள் நினைத்தால் அவர்களின் அப்பாவித்தனமானவர்கள் என நினைக்க வேண்டும் போல :-))
-----------------

பட்டிகாட்டான் Jey said...

10 நாட்களுக்கு முன் கூகுள்பிளஸில் இது தொடர்பான விவாதம் நடந்தது.

கிட்டத்தட்ட 240 கமெண்ட்ஸ், இங்கே பிரகாஸ்ஜி போட்ட கமெண்ட் கூட அங்கே அவர் போட்ட கமெண்ட்தான்னு நினைக்கிறேன்.

விவாதத்தின் ஒரு பகுதியாக, 1 லட்சம் கோடிக்கி ஏலம் எடுத்திருந்தால் இந்த கம்பெனிகள்கள்,

இந்த 1 லட்சம் கோடி + கூடுதலாக உள்கட்டமைப்பிற்காக முதலீடு செய்யும் பணம் + அதன் வட்டி இப்படி எல்லா பணத்தையும் எடுக்க பல பத்தாண்டுகள் ஆகும் எனவே இந்த 1.76 லட்சம் கோடி தொகையானது எந்த்ய வகையிலும் கம்பெனிகள் குடுத்து ஏலம் எடுத்திருக்காது என வாதிடப்பட்டது.

அதற்கு 1 லட்சம் கோடிக்கு ஏலம் எடுத்திருந்தாலும் கம்பெனிகள் நஷ்டப்பட வாய்ப்பு குறைவு என்று பதிவில் நீங்கள் சொன்னது மற்றும் கமெண்ட்சில் நான் சொன்ன கோணங்கள் மாதிரி, கீழ் கண்டவாரும் கணக்கு போட்டு ஒரு கருத்து சொல்லியிருந்தேன்....

அதாவது ஒரு மொபைல் கனெக்‌ஷனுக்கு ரூ50/- லாபம் என்று எடுத்துகொண்டால் (இதில் 10ரூ மாசம் டோப்-அப் செய்றவங்களும் 3,000/- செலவழிப்பவர்கள் எல்லாம் சேர்த்து சராசரி- இதி மாறுபாடுகள் இருக்கலாம்), இந்த ரூ 50-ஐ மொத்த மொபைல் சப்ஸ்கிரபர்கள் எண்ணிக்கையால் பெருக்கி மாத & வருட லாபம் கணக்கு பார்க்கப்பட்டது :

92கோடி * ரூ 50 = 4600 கோடி/மாசம்
12மாசம் * 4600 = 55200 கூடி/வருசம்
55200 * 2 = 1,10,400 கோடி/2 வருசம்

முதல் இரண்டு வருடத்தில் முதலீடாக 1லட்சம் ஏலம் எடுத்திருந்தாலும் சுலபமாக எடுக்கபட்டுவிடும்.

அடுத்த 1 வருசத்துல உள்கட்டமைப்பு முதலீடா ரூ 50,000 கோடி செலவளித்திருந்தாலும் அதையும் எடுத்துவிடலாம்


அப்ப 3 வது வருசம் 50 ஆயிரம்கோடி நேரடியா பாக்கெட்டுக்கா...

இப்படி கணக்கு போட்டா 1.76 லட்சம் கோடி பிஸாத்து போலயே...


( India's mobile phone subscribers' base touches 929 million

http://articles.timesofindia.indiatimes.com/2012-07-05/telecom/32550630_1_base-touches-subscriber-base-wireline-segment ))


இதில் நான் எடுத்துக்கொண்ட ரூ 50/கனெக்சன் என்பது கூடலாம் குறையலாம், அப்ப்டி பாதியாக குறைந்தாலும் 5 வருடத்திற்குள் மொத்த பனமும் எடுக்க வழியிருப்பதாகவே படுகிறது.

கனெக்சன்கள் எண்ணிக்கை கடந்த மே மாத எண்ணிக்கை கொண்டு கனக்கிட்டுள்ளேன்.

எப்படி இருந்தாலும் ஊழல் நடக்கவில்லை என்று யாரும் மார்தட்ட முடியாதுதானே.

அஜீம்பாஷா said...

"யாருமே இல்லாத டீக்கடையிலேயே நான் நல்லா ஆத்துவேன் , நீங்க ஒருத்தர் தேடி வந்த பிறகு சும்மா விடுவேனா ....ஆத்திடுவோம்"

வவ்வால்ஜி இது உங்கள் வாக்கு மூலமா அல்லது சுய விமர்சனமா .
நல்ல அருமையான பதிவு.
எல்லார்க்கும் என்னைபோன்ற பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்கியதற்கு நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனி உங்க பேர் வவ்வால் இல்லெ

”வாவ்”வால் தான் :)

வால் போஸ்டர் அடிப்பவரை துவம்சம் பண்ணி இருக்கீங்க .. சூப்பர் !

வவ்வால் said...

பட்டிக்காட்டார்,

நன்றி!

தொடர்ந்து கவனிக்கிறிங்க போல!

ஓ முன்னரே விவாதம் போயிருக்கா.

நீங்க கணக்கு போட்டது சரியான முறையே, என்னோட கணிப்பும் ஒரு லட்சம் கோடி , ரொம்ப கம்மி என்றால் 50000 கோடியாவது ஏலம் போயிருக்க வேண்டும் 12000 கோடி என்பது பகல்கொள்ளை.

ARPU= Average Revenue Per User (ஒரு மாதத்திற்கு)என டெலிகாம் தொழிலிலும் கணக்கிடுவார்கள், எல்லா நிறுவன பேலன்ஸ் ஷீட்டிலும் பார்க்கலாம், ஏர் டெல்-182, வோடபோன் 193 , ஐடியா 180.2 ரூ என எல்லா நிறுவனங்களும் நல்ல வருமானமே காட்டுகின்றன. நீங்கள் எடுத்துக்கொண்ட 50 ரூ என்பது ரொம்ப கம்மி தான்.

2012 இல் இந்திய டெலிகாம் துறையின் மொத்த வருவாய் மதிப்பு இரண்டு லட்சத்து என்பத்தி மூன்றாயிரம் கோடி . டெலிகாம் தொழிலில் சுமார் 20% நிகர வருவாய் எனக்கணக்கிடப்படுகிறது.

எனவே ஆண்டுக்கு மொத்தமாக நிகர லாபம் சுமார் 60,000 கோடிகள் வரும்,இது அனைத்து செலவீனங்கள் ,வரி , முதலீடு,வட்டி எல்லாம் போக.

EBITDA(Earnings before Interest, tax, depriciation, amortiziation) எனப்படும் தொகை ஆபரேஷனல் செலவு போக ,அதனை வைத்து ஒரு ஆண்டு வருவாய்ய் பார்த்தால் எப்போதுமே ஒரு லட்சம் கோடிக்கு மேல் தான் வருகிறது.

ஒரு ஆண்டின் மொத்த EBITDA(Earnings before Interest, tax, depriciation, amortiziation) மதிப்புக்கு அலைக்கற்றையை ஏலம் விட்டாலும் 3 ஆண்டுகளில் போட்ட பணத்தினை எடுத்துவிட முடியும்.

மேலும் 2008 இல் இருந்தே அலைப்பேசி கோபுரங்கள் ஷேரிங் முறை வந்துவிட்டதால் பெரிதாக முதலீட்டு செலவும் இல்லை.

எனவே ஊழல் நடக்கவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது, நடக்கவே இல்லை என்பவர்களின் அறிவு திறன் சந்தேகத்திற்கு இடமானதாகும் :-))
----------------

அஜிம்பாஷா,

வாங்க,நன்றி!

வாக்கு மூலம், சுய விமர்சனம் எல்லாம் ஒன்று தான், நான் யார் படிப்பாங்க, புடிக்குமா என எல்லாம் யோசித்து பதிவு போடுவதில்லை என்பதால் , யாரும் இல்லாமலே டீ ஆத்துவேன் என சொல்லிக்கொள்வதில் தப்பில்லை :-))

என்னாது நீங்க எல்லாம் பாமரனா, அப்போ நான் எல்லாம் கற்கால மனிதன்னே சொல்லிக்கலாம், அதனால் எளிமையாக தானே எனது மொழி இருக்கும் :-))

வவ்வால் said...

குறை ஒன்றுமில்லை,

நன்றி!

பேரே பாட்டு மாதிரி இருக்கே ,இசை கலைஞரா?

மறைமூர்த்தி போலவே "வால் போஸ்டர்" அடிப்பவர்னு சொல்றீங்களே ,அதாருங்கோ? நான் பாட்டுக்கு வேற யாரையாவது நினைச்சுக்க போறேன்.

Paleo God said...

இப்படி எல்லாம் எழுதி ப்ளாக்ல போடச்சொல்லி என்னை ஜோஷி வற்புறுத்தினாருன்னு நாளைக்கு ஒரு பதிவு வருதான்னு பார்த்துட்டு, பொறவு இதப் படிக்கலாம்னு ஒரு முடிவோட வெறும் கமெண்ட் மட்டும் போட்டுட்டு வழக்கம்போல தொடர்ந்து வந்து ஊக்குவித்து அமர்கிறேன்.

நன்றி!

குறை ஒன்றும் இல்லை !!! said...

பேரே பாட்டு மாதிரி இருக்கே ,இசை கலைஞரா?//

வாவ்வால் அண்ணே :) சரியா போச்சு போங்க.. பால் இருக்கி பலம் இருக்கி .

நின்னுக்கோரி வர்ணம் ஜாதி நான் :)))))))


என் பெயர் ராஜ்குமார் சின்னசாமி.. நான் VRS வாங்கிய பிளாக்கர். கூகுள் ப்ளஸ் எனும் சமூக வலைதளத்தில் காமெடி பண்ணிட்டு இருக்கேன் :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

பெயர்க்காரணம் பெருசா ஒண்ணும் இல்லே..தமிழ் தெரிஞ்ச யார் எப்படி இருக்கேன்னு கேட்டாலும் ஐயம் ஃபைன்னு சொல்றத விட குறை ஒன்றும் இல்லைனு சொல்லிப் பழகிட்டேன் .. மனசுக்கும் நல்லா இருக்கு அதான் பேர வச்சிட்டேன் :)

வவ்வால் said...

ஷங்கர்ஜீ,

//இப்படி எல்லாம் எழுதி ப்ளாக்ல போடச்சொல்லி என்னை ஜோஷி வற்புறுத்தினாருன்னு நாளைக்கு ஒரு பதிவு வருதான்னு பார்த்துட்டு, //

வாங்க,நன்றி!

உங்க பிளஸ் சிலது படிச்சு இருக்கேன், டெங்கு காய்ச்சல்னு பையனுக்கு சங்கரநேத்ராலயா போனது எல்லாம் பார்த்தேன், டெங்கு போயாச்சா?

இப்போ தான் நம்ம கடை பக்கம் வரிங்கன்னு நினைக்கிறேன், நமக்கே லிட்மஸ் டெஸ்ட்டா ?

... ஜோஷியை விட நான் நல்லா ஸ்பின் போலிங் போடுவேன் ...ஆமாம் நீங்க சுனில் ஜோஷினு லெஃப்ட் ஆர்ம் ஆர்தடோக்ஸ்(மதமில்லை) ஸ்பின்னர தானே சொல்றீங்க :-))
-----------

குறை ஒன்றுமில்லை,

விவரத்துக்கு நன்றி!

நல்லா இருக்கு உங்க பெயர்க்காரணம்.

ஹி...ஹி நான் கூட யாராவது ஹவ் யுனு கேட்டா இது வரைக்கும் ஒன்னும் மோசமா போகலைனு சொல்லுவேன் ... எல்லாம் காண்டாயிடுவாங்க :-))

இனிமே உங்க பாணிக்கு மாறிடலாமான்னு தோனுது!

உங்க பிளஸ் ஓபன் வகைனா சொல்லுங்க அப்போ அப்போ படிச்சுட்டு போறேன் ... நான் பிளஸ்ஸில் இல்லை ஆனால் கண்ணில் படும் பிளசை எல்லாம் படிப்பேன்.

Paleo God said...

வாங்க,நன்றி!

உங்க பிளஸ் சிலது படிச்சு இருக்கேன், டெங்கு காய்ச்சல்னு பையனுக்கு சங்கரநேத்ராலயா போனது எல்லாம் பார்த்தேன், டெங்கு போயாச்சா?

இப்போ தான் நம்ம கடை பக்கம் வரிங்கன்னு நினைக்கிறேன், நமக்கே லிட்மஸ் டெஸ்ட்டா ?

//

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
வாஸ்து பிரகாரம் பிரபல பதிவர் ஆவதற்காக மேல இருக்கற ட்ரேட் மார்க்க மாத்தினது ஒரு தப்பா?.

//சங்கரநேத்ராலயா//
சைல்ட் ட்ரஸ்ட் :)) பையன் நல்லா இருக்கான். :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

வவ்வால் அண்ணே ! நான் பெரும்பாலும் பப்ளிக் ப்ளஸ் தான் !

https://plus.google.com/u/0/108785930679834031188/posts

Ravichandran Somu said...

வவ்வால்ஜி,

நண்பர் ஜோதிஜியின் பிளஸ்ல் பார்த்து இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன். மிக அருமையான பதிவு. செல்பேசி இயக்கம் பற்றி மிக எளிமையாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள் !!!

2G அலைக்கற்றையில் ஊழலே நடக்கவில்லை என்று கூவிக்கொண்டிருக்கும் உடன்பிறப்புகளை பார்த்து ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்று கொண்டிருக்கிறேன் :)

தொலைத்தொடர்பு துறையில் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். வேலை நிமித்தமாக டெல்லியுள்ள தொலைத்தொடர்பு தலைமையகம் DOT, BSNL, MTNL நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்று வருபவன் என்ற முறையில் 2G அலைக்கற்றையில் நடந்த தகிடுதத்தங்கள் ஓரளவு தெரியும். 1.76 லட்சம் கோடி என்பது ஊக அடிப்படையில் CAG தெரிவித்த தொகை . ஆனால என் கணிப்புபடி ஊழல் தொகை என்பது 5000 கோடி முதல் 10000 கோடிக்குள்தான்.

நண்பர் ஜோதிஜி சொன்ன வெட்டிக்காடு ரவி அடியேந்தான். எனது தொலைத்தொடர்பு பதிவுகள்.

http://vssravi.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Ravichandran Somu said...

One correction: MSC stands for Mobile Switching Center

ஜோதிஜி said...

ஆகா என் கூகுள் ப்ளஸ் (கூட்டல்) பார்த்து மககள் கும்மியிருக்காங்க.

ரவி மிக்க நன்றி. வவ்வுக்கு எப்படியோ ஒரு தப்பு கண்டு பிடிச்சீங்களே? நமக்கு இந்த துறை பற்றி தெரியல.

ஷங்கர் கலக்கல்.

குறையொன்றுமில்லை பளஸ் வந்து பாருங்க.

அவரும் பகல் நேரத்து வவ்வால் தான். அவரு பெயர் ராஜ்குமார் . பேரச் சொன்னா ப்ளஸ்சே அதிரும்லே.

ஜோதிஜி said...

பின்னூட்டம் மட்டும் படிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

வவ்வு அவசியம் நம்ம ரவி பதிவுகளை படிங்க. வேறொரு பார்வையில் அற்புதமாக எழுதியிருப்பார்.

பட்டிகாட்டான் Jey said...

// அவரும் பகல் நேரத்து வவ்வால் தான். அவரு பெயர் ராஜ்குமார் . பேரச் சொன்னா ப்ளஸ்சே அதிரும்லே. //

ரிக்டர் அளவில எத்தினி பாய்ண்ட்னு சொல்லாம விட்டுப்புட்டீகளே ஜோதிஜி அண்ணேன் :-))))))))))

திவாண்ணா said...

நல்ல நேர்மையான அலசல். பல விஷயங்களை புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி!

Prakash said...

குப்புற விழுத்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இருக்கிறது நீங்க சொல்றது...

நேரடியாக இதற்கு பதில் சொல்லுங்கள் , நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் TRAI, 2G அலைகற்றையை ஏலத்தில்தான் விடவேண்டும் என்று என்று சொல்லியிருகின்றதா???

The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..


வோல்ட்ஸ் போன்ற பார்ப்பன ஊடகங்களின் கட்டுகதையை அனைவரும் நம்பவேண்டும் என்றில்லை..ஆதாரம் இருந்தால் சுப்ரீம் கோர்டில் சொல்லவேண்டியது தானே, கடந்த மூன்று வருடங்களாக அந்த 200 கோடியை மட்டும் தானே தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்....ஊழல் செய்பவர்கள் செக் மூலம், வங்கி, வருமானவரி போன்ற அரசின் நிறுவனகளுக்கு தெரியும்படி தான் செய்வார்கள் போல....

டெலிகாம் FDI அனுமதிக்கப்பட்ட ஒன்று, முதலீடிற்க்காக சட்டபடியாதானே ஷேர் விற்று இருக்கிறார்கள்..

//the Central Board of Direct Taxes has said Swan and Unitech never sold their licenses to their foreign partners and that the sale of equity was above board....//

//They didn't sell their equities. They expanded the equity of the company and brought in new people. That's not the same thing.//

//"The question was whether it was divestment (sale) of promoter’s equity or dilution of equity by issue of fresh shares... This was examined by the Ministry of Finance.//

//“Both were cases of dilution of equity by issue of fresh shares. The Prime Minister wanted to know if it was a case of dilution of equity or divestment.//

//“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//

http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876

http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html

http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece

வவ்வால் said...

ஷங்கர்ஜி,

நன்றி!

TM"ஷங்கர்" என்ற பெயரை நான் பலாப்பட்டரை ஷங்கரின் பெயர் என நினைத்துக்கொண்டிருந்தேன்,எனவே இப்போ ஷங்கர்.ஜீ எனப்பார்த்ததும் இப்போ தான் வரிங்கன்னு நினைத்துக்கொண்டேன். மன்னிக்கவும்.

ஹி...ஹி சைல்ட் டிரஸ்ட் தான், ஓரு நியாபகத்துல்ல நேத்ராலாயன்னு வந்துடுச்சு.

எங்க சிஸ்டர் பையனுக்கும் டெங்குவாக இருக்குமோன்னு அப்போல்லோவுக்கு கூப்பிட்டு போனதால இது நல்லா நியாபத்தில இருந்துச்சு,டெங்கு இல்லைனு சொல்லிட்டாங்க.உங்கப்பதிவை படிச்சப்பிறகு தான் சைல்ட் டிரஸ்ட்ல நல்லா கவனிக்கிறாங்கப்போல இனிமே அங்கேயே போகலாம்னு கூட சொல்லி வச்சேன்.
------------------
குறை ஒன்றும் இல்லை,
நன்றி!
அப்போ கண்டிப்பா படிச்சிடுறேன், பிளஸ்ஸில் கூடவே இருந்து பதில் சொன்னால் தான் பேச முடியும், சாட்டிங்க் போல என்பதால் படிப்பதோடு சரி.

உங்களைப்பத்தி வேற ஜோதிஜி மிரட்டலா பின்னாடி சொல்லி இருக்கார் :-))
----------------------
ரவிச்சந்திரன்,

வாங்க,நன்றி!

//நாம் பயன் படுத்தும் அலைப்பேசி எண்ணின் முதல் இரண்டு இலக்கம் ஒரு நிறுவனத்தின் மையக்கட்டுப்பாட்டு அறையை (Mobile Services Switching Centre-MSC)குறிப்பது,//

நீங்க சொன்னாப்போல சுவிட்சிங் சென்டர் என்று தான் எல்லா இடத்திலும் போட்டிருக்க வேண்டும், நான் ஒரு இடத்தில் மட்டும் அப்படி குறிப்பிட்டு விட்டு எழுத எளிதாக ,புரியும்படி இருக்க வேண்டும் என கட்டுப்பாட்டு அறை என்பதையே பயன்ப்படுத்திக்கொண்டேன், அதையே தனியாக விளக்கும் போதும் போட்டுவிட்டேன் , தேவையான இடங்களில் Mobile Services Switching Centre-MSC என மாற்றிவிடுகிறேன்.

நீண்ட அனுபவம் உள்ளவர் என்பதால் நேரடியாக தெரிந்து இருக்கும், அரசு அலுவலக நடப்புகள் என்ன என ஓரளவுக்கு எனக்கும் தெரியும் , ஒரு குறைந்த பட்ச கவனிப்பு இல்லையெனில் வேலையே நடக்காது என்பதை நேரடியாக பார்த்த அனுபவம் உண்டு.

10,000 கோடி அளவுக்கு மட்டுமா இழப்பு வந்திருக்கும் ஆன்டு நிகர லாபம் மட்டுமே மொத்தமாக 60,000 கோடி வருகிறது, கிட்டத்தட்ட அதற்கு சமமாக ஏலம் கொடுக்கலாம், ஏன் எனில் 20 ஆண்டுக்கான உரிமம் தானே அப்போ அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு கொடுக்கும் அலைக்கற்றை உரிம தொகசி என்பது குறைவு தானே.

2014 இல் பல அலைக்கற்றை உரிம காலம் முடிவடைகிறது அப்போது கட்டாயம் பல பழைய மொபைல் ஆபரேட்டர்களும் 2ஜீ அலைக்கற்றையை வாங்கித்தானே ஆக வேண்டும் அப்போதும் இது போல புறக்கணிக்க முடியுமா?

உங்கள் பதிவுகளை அவசியம் படிக்கிறேன், தொழில்நுட்பப்பதிவுகள் படிப்பதில் எப்பொழுதும் ஆர்வமுண்டு.

-------------
ஜோதிஜி,

வாங்க, பத்தவச்சது உங்க வேலை தான்னு கொஞ்ச நேரத்துக்கு ,முன்னர் தான் பிளஸ்ஸில் பார்த்தேன், இங்கே வந்து பார்த்தால் விளைச்சல் இருக்கு :-))

பத்த வச்சதுக்கு நன்றி, ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா...நானும் கொஞ்சம் உஷாரா இருந்து வரவங்களை "சிறப்பாக" கவனிப்பேன்.
# தப்பு கண்டுப்பிடிச்சதும் என்னா ஒரு சந்தோஷம்ம் :-))

பின்குறிப்பிலேயே "இன்னும் பிழை திருத்தம்,சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்குன்னு "உஷாரா ஒரு முன் ஜாமீன் போட்டேன் கவனிக்கலை போல , வழக்கமாக்கவே தினம் கொஞ்சம்ம்னு டைப் செய்துவிட்டு அப்புறம் மொத்தமாக சேர்க்கும் போது சரிப்பார்ப்பேன், இம்முறை அப்படி கூட சரிப்பார்க்கலை,எனவே ஆங்காங்கே முன் ,பின்னாக போனப்போல ஒரு அவதானிப்பு, சரி நாம என்ன ஆய்வுக்கா கட்டுரை எழுதுறோம்னு முன் ஜாமின் போட்டுட்டு பதிவாக்கிட்டேன்,எல்லாம் சோம்பல் தான் :-))

#அலைப்பேசி கோபுர வியாபார பட்டியலை முதலில் டேபிளாக போட்டப்போது எல்லாம் அலைண்ட் மெண்ட் மாறிப்போச்சு, ஜோதிஜி விட மாட்டேருன்னு அப்படியே படமாக மாற்றிப்போட்டேன் :-))
# குறையொன்றுமில்லை பேராக்கேட்டாலே அதிருமா அப்போ சாக்கிரதையா தான் அணுகனும், ஆனாலும் நாம எதிரொலி பார்ட்டி அதிர்வை எதிரொலிச்சிடுவோம் :-))
-------------
பட்டிக்காட்டார்,

ஒரு அடி ஸ்கேலில் எத்தனை அடின்னு முதலில் கேட்டு வச்சிப்போம் :-))
------------------

வவ்வால் said...

பிரகாஷ்,

வாங்க,வாங்க, எங்கே திரும்ப வராமலே போயிடுவிங்களோன்னு கவலைப்பட்டேன், ஏன்னா இன்னும் நிறைய பட்டாசு உங்களுக்காக வச்சிருக்கேன்ல :-))

மீசையில மண்ணப்பத்திலாம் பேசுறிங்க , ஆனால் உடம்பு முழுக்க ஊழல் சேற்றை பூசிக்கொண்டு :-))

//The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..//

முதலில் டிராய் வேலை என்னனு தெரிஞ்சுக்குங்க, பரிந்துரை தான் கொடுக்கும், அது சரியா இருந்தா ஏற்றுக்கொள்ளலாம், இல்லைனா

High Powered Telecom Commission which also includes part time members from the Ministry of Finance, Industry, IT and Planning Commission ஆகியவற்றிடம் பரிந்துரையை கொடுத்து விவாதிக்கனும் அதையும் செய்யவில்லை.

பின்னர் Empowered Group of Ministers (EGoM) கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும், அதனை

Ministry of Law and Justice,the Attorney General/Solicitor General of India ஆகியோரிடம் கொடுத்து சட்டப்பூர்வம ஒப்புதல்ல் பெற்று இருக்க வேண்டும்.

பிரதமர் ஒப்புதல் தரவே இல்லை.

ஆனால் எதுவும் செய்யாமல் டிராய் சொன்னது செய்தேன் என்றால் ராசா எதுக்கு அமைச்சர், டிராய் மட்டுமே போதுமே.

இன்னும் சில முரண் பாடுகளை சொல்கிறேன்,

டிராய் ஏலம் விட அறிவுறுத்தவில்லை எனவே முன்னர் இருந்த முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொடுத்து உரிமம் கொடுத்தேன் என்கிறார், பின்னர் ஏன் கட் ஆஃப் தேதியை மாற்றினார்.

மேலும் பல நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதியே இல்லை என்ற போதும் எப்படி கொடுத்தார்.

மேலும் 2008 இல் நிர்ணயிக்கப்பட்ட தொகை 2001இன் ஸ்பெக்ட்ரம் விலை, ஆனால் அத்தொகை அப்போது ஏலம் மூலம் நிர்ணயிக்கப்பட்டது, அப்படியானால் ஏழு ஆண்டுகளுக்கு பின்னரும் ஏலம் தானே விட்டிருக்க வேண்டும்.

2006 இல் டிராய் 2100 மெ.ஹெர்ட்ஸ் உரிமம் வழங்க ஏலம் விடலாம் என முன் அறிக்கை தந்துள்ளது. எனவே ஏலம் விடுவதனை மீண்டும் 2008 இல் ஏன் யோசிக்கவில்லை.

அடுத்து 2001 இல் அடிப்படை சேவை,மொபைல் சேவை என இரண்டாக பிரித்து விலை வைக்கப்பட்டது, ஆனால் 2008 இல் ஒருங்கிணைந்த சேவைக்கு வெறுமனமே அலைக்கற்றை விலையை மட்டும் அடிப்படையாக வைத்து விற்றது ஏன்.

மேலும் அப்போது விற்றது தனி தனி சர்க்கில் என ,அதனை 2008 இல் பான் இந்தியா சேவைக்கு எப்படி ஒப்பிட முடியும்.

ஏன் எனில் டிராயே ஒருங்கிணைந்த சேவை என வரும் போது மொபைல் ஆபரேட்டர் லைசென்ஸ் ம்ற்றும் அலைக்கற்றை என தனியாக பிரித்துவிட வேண்டும், லைசென்ஸுக்கு ஒரு தொகை, அலைக்கற்றை சந்தை அடிப்படையில் விலை என்று தான் சொல்லியுள்ளது. ஒருங்கிணைந்த சேவையில் அலைக்கற்ரையுடன் உரிமம் கொடுக்கப்படக்கூடாது என சொல்லியுள்ளது.

பல நிறுவனங்கள் போலியானவை அவற்றின் பெயரில் வாங்கி ,பின்னர் மீண்டும் ,ஸ்வான், யுனிடெக் ஆகியவற்றின் கைக்கு மாறியுள்ளது, இதற்கே உரிமம் ரத்து செய்ய இடமுள்ளது.

எதற்கெடுத்தாலும் அமெரிக்க பொருளாதார முன்மாதிரி காட்டும் மன்மோகன் அரசு அமெரிக்காவில் 1993 முதலே ஏல முறை இருப்பதை அறியாதவரா?

அதுவும் 2008 இல் அலைப்பேசி வாடிக்கையாளர் பெருகிய நிலையில் மாற்றம் தேவைனு தெரியாதா என்ன?

////“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//

செயல்படவே துவங்காத நிறுவனம் கூடுதல் ஷேரை எப்படி விரிவாக்க ஷேர், பிரெஷ் என சொல்ல முடியும் அப்படியானால் அதன் மதிப்பு எப்படி கணக்கிட, மொத்த மதிப்பே அலைக்கற்றை தானே , பின்னர் அலைக்கற்ற்றையை விற்கவில்லை என சொல்வது இங்கே பொருந்தாது, ஏன் எனில் அலைக்கற்றை என்பது இன்டேஞ்ஜியபில் அசெட் , அப்படியே தான் இருக்கும், நிறுவன மதிப்பின் உரிமையை தான் ஈக்குவிட்டி ஷேராக கொடுக்கிறார்கள், அதற்குள் அலைக்கற்றை மதிப்பும் இருக்கு.

உங்களுக்கு 200 கோடி எல்லாம் சல்லீசாபோயிடுச்சு :-))

செக், டி.டி எனக்கொடுப்பாங்களான்னு கேட்கிறிங்களே, ஏன் கொடுத்தாங்க என்பதற்கு ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்.

ஆதாரத்தோடவே 200 கோடின்னா ஆதாரமில்லாமல் எத்தனை கோடின்னு ஒரு கேள்வி வருமே :-))

ஒரு பேச்சுக்கு வருவாய் இழப்பே இல்லைனு சொல்லுங்க, ஆனால் ஒரு சிலருக்கு சாதகமாக முடிவெடுக்கப்பட்டதா இல்லையா, அதற்கு கைமாறு பெறப்பட்டதா இல்லையா? அப்போ அது ஒரு அமைச்சர் நாட்டுக்கு செய்த துரோகம் தானே?

வவ்வால் said...

வாசுதேவன் திருமூர்த்தி,

வாங்க ,நன்றி!

பேர சொல்லி முடிக்கிறதுக்குள்ள இன்னொரு பின்னூட்டம் போட்ரலாம் :-))

சுருக்கமா வா.தி னு கூப்பிட்டுக்கலாமா?

Ravichandran Somu said...

I meant Rs 5000 to 10000 crores is the money that the politicians received as bribe. The loss of revenue to Government is much higher. In my opinion, compared to auction of spectrum revenue sharing model is better option for everyone (Government, Telecom operators and consumers)

வவ்வால் said...

ரவிச்சந்திரன் ,

வாங்க,நன்றி!

நம்ம ரெண்டு பேரு கணிப்பும் ஒத்து போகுதே, நான் அசல் மதிப்பு தோராயமாக 50,000 -100,000 கோடி என வைத்துக்கொண்டேன், எனவே 10% கமிஷன் என்றால் 5,000 கோடி, மற்றும் 10,000 கோடி என சரியா பொருந்துது.

அரசியல்வாதிகள் பெர்செண்டேஜில் கமிஷண் அடித்து நாட்டின் வளத்தை மதிப்பிழக்க வைக்கிறார்கள்.

அமெரிக்க பொருளாதார மாடலை காப்பி அடிக்கும் மன்னு மோகன் அரசு ஏன் அமெரிக்காவில் 1993 இல் இருந்து அலைக்கற்றை ஏல முறை இருப்பதை காப்பி அடிக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று :-))

Prakash said...

தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ( 2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' ( NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர்.

அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படை யில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன.

அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99 ' என்று பெயர்.

TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது?

அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?

எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை.

1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.


டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல..

அதுபோல, FCFSல் revenue sharing i.e வருவாயில் பங்கு உண்டு..எனவே அந்த முறையில் லைசென்ஸ் வாங்கிய நிருவனகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, லைசென்ஸ், ஸ்பெக்ட்ரம் கட்டணம் போக, அதின் வருவாயிலும் ஒரு பங்கு அரசிற்கு வந்திருக்கும்..

ஆனால், ஏல முறையில் வருவாயில் பங்கு கிடையாது, அதுவும் அந்த ஏல தொகையானது, உடனடியாக அரசிற்கும் கிடைக்காது..அது 20 வருடங்களில், EMI போல, பல பகுதிகளாய் சிறுக சிறுக அரசிற்கு வரும்....

மேலும், அரசிற்கான வருவாயை குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல....

Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”

Prakash said...

//Ministry of Finance, பிரதமர் ஒப்புதல் தரவே இல்லை.// - செம காமடி பாஸ்...Pls read the below..

Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is true that by June 2008, the position as indicated in the question was agreed upon between the Ministry of Finance and DoT. This agreement was reached after a series of discussions between DoT and the Ministry. Initially, Ministry of Finance had argued that the entire spectrum including start-up should be charged. During the discussions, DoT had told us that charging for the entire spectrum would be problematic and legally questionable on a number of grounds. Eventually after the discussions, the above position was agreed upon.”

To a further poser by Mr. Raja’s counsel if he sat at a meeting on July 4, 2008, attended by the Prime Minister, then Finance Minister P. Chidambaram and Mr. Raja in which the agreement between the Finance and Telecom Ministries was conveyed to the Prime Minister, Mr. Subbarao replied in the affirmative.


அடுத்தது, தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மாற்றினாரா ????
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்...பாரதி மிட்டல், ஹட்ச் எஸ்ஸார், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்ப்பு துறையில் இறங்குவதற்கு முன், இந்த துறையில் முன் அனுபவம் இருந்ததா ???

அடுத்தது, கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து, தலா ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, இருந்த டோக்கன் எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் பெற்றவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது..(More Additional Spectrom received from Military)

சரி, டோக்கன் உள்ள 100 பேருக்கும் லட்டு உறுதியானது என்ற பிறகு, 10ஆம் டோக்கன் வைதிருந்தவருக்கு முதலிலும், 3ஆம் டோக்கன் வைத்திருப்பவர்க்கு அடுத்தும் கொடுத்தால் என்ன...அதே போல தான் அந்த கட்-ஆப் தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அலைகட்ற்றை வழங்கப்பட்டது..இதில் என்ன விதி மீறல் உள்ளது...

சரி, அந்த நிருவனங்களிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??

வவ்வால் said...

பிரகாஷ்,

வாங்க,நன்றி!

பதிவில் முழுவதுமாக 2ஜீ அலைக்கற்றை முறைகேட்டினை அலசவில்லை, விட்டுப்போனவற்றை பிறகு தேவைப்பட்டால் எழுதலாம்என நினைத்தேன், நீங்களாக வந்து ஊழலே நடக்கவில்லை என சப்பைக்கட்டு கட்டுவதால் உண்மையை எடுத்து சொல்ல எனக்கு ஒரு நல்வாய்ப்பாக உள்ளது, அப்படி ஒரு வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கு எனது நன்றிகள் :-))

# //அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99 ' என்று பெயர்.

TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது?//

2001 இல் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டே ஒதுக்கப்பட்டுள்ளது என டிராயின் அறிக்கை சொல்கிறது, அப்படி கிடைத்த தொகையையே 2008 இல் அடிப்படையாக வைத்து அலைக்கற்றை ஒதுக்கியுள்ளார்.

2001 இல் ஏல முறையில் நிர்ணயமான தொகையை ஏன் மீண்டும் 2008 அப்படியே எடுத்துக்கொண்டார், மீண்டும் ஏலம் விட்டு அல்லவா முடிவு செய்ய வேண்டும்.

டிராய் அறிக்கையில் உள்ளது.
//
1.1 Spectrum in the 2G bands (800 MHz, 900 MHz and 1800 MHz bands) was last auctioned in the year 2001. Subsequently, upto and including in August 2007, TRAI did not recommend the auction process for spectrum in these bands. In 2006, it had recommended auction of spectrum in the 2100 MHz and 2300 MHz bands
//

CAG ஒரு அரசு அமைப்பு ஆளுங்கட்சிக்கு எதிராக எப்படி எதிர்க்கட்சியால் திருப்ப முடியும், அப்படி எதிர்க்கட்சி செய்ய அவ்வளவு சக்தியுடன் உள்ளதா? ஒரு எதிர்க்கட்சியால் அரசு அமைப்பை ஆட்டி வைக்க முடியும் எனில் ஏன் ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சரான ராசாவால்ல் டிராயை ஏலம் விட வேண்டாம் என அறிக்கை தயாரிக்க வைத்திருக்க முடியாது?

2001 இல் ஏலம் விடப்பட்டுள்ளதை, நீங்கள் கவனமாக மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏன் எனில் 2008க்கு அடிப்படை தொகையாக ராசா காட்டுவது 2001 இன் அலைக்கற்றை விலையை ஆனால் அது ஏல முறையில் முடிவு செய்யப்பட்டது என்பதால் 2008 இல் ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு தானே/

தலைவரே, முன்னுக்கு பின் முரணாக டிராய் ஏலம் வேண்டாம் என சொல்லிக்கொண்டாலும் முந்தைய நிகழ்வுகள் "கல்வெட்டுகளாக" சாட்சியம் அளிப்பதை அனைவரும் அறிவார்கள், இதனால் கேள்வி எழுவதை தடுக்க முடியாது, இதனையே உச்ச நீதி மன்றமும் சுட்டிக்காட்டி கேட்கிறது.

எனவே ஏலம் வேண்டாம் என டிராய் பரிந்துரை செய்தது சரியான முடிவல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, எனவே அதனை வைத்து தப்பிக்க எண்ணினாலும் வலுவற்ற வாதமாகிவிடுகிறது.

//அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?//

ஆகா நல்ல கூற்று, மக்களுக்காக அரசு நட்டம் அடையலாம் என்றால் ஏன் பெட்ரோல் விலையை அப்படி குறைவாக நிர்ணயிக்கலாமே, அப்பொழுது மட்டும் எண்ணை நிறுவனங்கள் விலையை சந்தை விலைக்கு அவர்களே நிர்ணயம் செய்துக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் அரசு சொல்வது ஏன்?

மேலும் இதற்கு முன்னுதாரணமாக காட்ட பிஜேபி அரசு அப்படி ஒரு கொள்கை முடிவே எடுக்கவில்லை, அவர்கள் காலத்தில் பெட்ரோலிய துறை அமைச்சகமே விலை நிர்ணயம் செய்தது, தொலைத்தொடர்பில் மட்டும் பிஜேபி வகுத்த கொள்கை முடிவை உதாரணம் காட்டி பார்த்தீர்களா அவர்களும் இதான் செய்தார்கள் என சொல்லும் போது அவர்கள் காலத்திய பெட்ரோலிய விலை நிர்ணய கொள்கையை கடைப்பிடிக்கலாமே , மக்கள் நலன் அல்லவா முக்கியம் :-))

தொடரும்...

வவ்வால் said...

பிரகாஷ்,


//அதுபோல, FCFSல் revenue sharing i.e வருவாயில் பங்கு உண்டு..எனவே அந்த முறையில் லைசென்ஸ் வாங்கிய நிருவனகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, லைசென்ஸ், ஸ்பெக்ட்ரம் கட்டணம் போக, அதின் வருவாயிலும் ஒரு பங்கு அரசிற்கு வந்திருக்கும்..//

revenue sharing percentage எவ்வளவு , இது வரையில் ஆண்டுக்கு எவ்வளவு தொகை ஒவ்வொரு நிறுவனமும் அளித்துள்ளது என தெரியுமா?

தெரிந்தால் சொல்லுங்கள்.

//ஆனால், ஏல முறையில் வருவாயில் பங்கு கிடையாது, அதுவும் அந்த ஏல தொகையானது, உடனடியாக அரசிற்கும் கிடைக்காது..அது 20 வருடங்களில், EMI போல, பல பகுதிகளாய் சிறுக சிறுக அரசிற்கு வரும்.... //

ஏல முறையில் முதலிலேயே மொத்த கட்டணமும் செலுத்தப்பட வேண்டும், யார் சொன்னார்கள் ஆண்டு தவணை என்று.

ஒருங்கிணைந்த பான் இந்தியா ஏல முறையில் அலைப்பேசி உரிமத்திற்கு தான் ஏலம் , ஒரு முறைக்கட்டணம் 20 ஆண்டுகளுக்கு, அலைக்கற்றையினை மார்க்கெட் அடிப்படையில் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டனம் செல்லுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும், டிராய் அறிக்கையை முழுதாக படிக்கவும்.

//
On the issue of grant of licences, TRAI in its recommendations on „Spectrum Management and Licensing Framework‟ dated 11th May 2010 had recommended that all future licenses should be unified licenses and that spectrum be delinked from the licence.
//

2010 இல் இப்படி அறிக்கையை டிராய் வெளியிடவே தான் 2ஜீ யில் ஏன் இதே முறை பின்ப்பற்றவில்லை என பல கேள்விகள் எழுந்து , வழக்கானது.

ஏன் எனில் 3ஜீ க்கு இம்முறை பின்பற்றி அரசுக்கு நல்ல வருவாய் வந்துள்ளது, எனவே 2007 இல் ஒரு முறை ஏல பரிந்துரை செய்த டிராய் , 2008 இன் போது ஏலம் வேண்டாம் என சொன்னதாக சொல்லி ஆ.ராசா செயல்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட லாப நோக்கு இருப்பதை அறிய முடிகிறது, அதன்ன் அடிப்படையிலே பொது நல்ல வழக்கு தொடரப்பட்டு நடைப்பெற்றதை அறியலாம்.

எனவே டிராய் அப்படி சொன்னது என்பதை மட்டுமே சொல்வது தர்க்க ரீதியாக சரியா? அதனை தவிர அலைக்கற்றை மதிப்பினை நிர்ணயிக்க அப்போது ஆ.ராசா தவறியது ஏன்?

டிராய் முன்னுக்கு பின் முரணாக அறிக்கைகளை பரிந்துரைக்கும் நிலையில் ,டிராய் சொன்னதை மட்டுமே ஆ.ராசா தரப்புக்கு எப்படி வலு சேர்க்கும். பல காரணிகளும் அது சரியான பரிந்துரை அல்ல என நிருபிக்கின்றனவே, எனவே உங்கள் தரப்புக்கு வலு சேர்க்க வேறு ஒன்றுமே இல்லாமல் டிராய் சொன்னது என பிடித்துக்கொண்டு தொங்குவது ஏன்?

தொடரும்....

வவ்வால் said...

பிரகாஷ்,

//To a further poser by Mr. Raja’s counsel if he sat at a meeting on July 4, 2008, attended by the Prime Minister, then Finance Minister P. Chidambaram and Mr. Raja in which the agreement between the Finance and Telecom Ministries was conveyed to the Prime Minister, Mr. Subbarao replied in the affirmative.//

நீங்க போட்ட காபி&பேஸ்ட் தகவலில் எங்காவது பிரதமர் ஏற்றுக்கொண்டார் என இருக்கிறதா? அவருக்கு தெரிவிக்கப்ப்பட்டது என்று தான் இருக்கு.

அதன் பின்னர் பிரதமர் , நேர்மையாக, வெளிப்படையாக அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் படி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், அவசரப்பட வேண்டாம், ஆ.ராசாவுக்கு கடிதம் போட்டது ஏன்?

அட்டர்னி ஜெனரல் ,சட்ட அமைச்சகம் என ஒப்புதலே வாங்கவில்லை, மிக அவசரமாக முன் தேதியை மாற்றி 3.30 -4.30க்குள் ஓடி வாங்க என சொல்லை 122 உரிமங்களையும் அள்ளி வீசியது ஏன் ?

#//அடுத்தது, தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மாற்றினாரா ????
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்..//

நான்ன் சொல்வது முன் அனுபவங்களை பற்றி அல்ல போலியாக பல நிறுவனங்களை உருவாக்கி அதிக விண்ணப்பங்கள் வந்தது போல காட்டியதை ,

கீழே உள்ளவற்றை பார்க்கவும்.


Adonis Projects Pvt. Ltd., -6
Nahan Properties Pvt. Ltd., -6
Aska Projects Ltd. -3

Volga Properties Pvt. Ltd. --3

Azure Properties Ltd -1

Hudson Properties -1

மேற்கண்ட அனைத்து நிறுவனங்களும் அலைக்கற்றையை பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்கள் , அலைக்கற்றை உரிமம் பெற்றவுடன் உடனே யுனிடெக் உடன் இணைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்படுகிறது :-))

யுனிடெக் நேரடியாக கீழ்கண்ட இரண்டு பெயர்களில் மட்டுமே விண்ணப்பித்து இரண்டு உரிமம் மட்டுமே பெற்றுள்ளது :-))
Unitech Builders & Estates Pvt. Ltd.-1

Unitech Infrastructures Pvt. Ltd. -1
-----------------------
Allianz Infratech (P) Ltd.-2

மேற்கண்ட நிறுவம் ஸ்வானின் உருவாக்கம் , போலியாக செயல்பட்டு உரிமம் வாங்க்கி ,ஸ்வான் உடன் இணைந்துள்ளது.

ஸ்வான் பெயரில் மட்டும் 13 உரிமங்கள்.
Swan Telecom Pvt. Ltd.-13
-----------------
Shyam Telelink Limited -17

ஷ்யாம் டெலி லிங்கிற்கிற்கு மட்டும் 17 உரிமங்கள் , அதன் போலி நிறுவனத்த்இற்கு 4 உரிமம்.

Shyani Telelink Limited-4

பின்னர் இரண்டும் இணைந்த்து எம்டீ.எஸ் ஆகிவிட்டது.

----------
Spice Communications Ltd.-4

மேற்கண்ட நிறுவனம் ஐடியாவின் உருவாக்கம்ம், உரிமம் பெற்றதும் ஐடியாவுடன் இணைக்கப்பட்டாச்சு,
Idea Cellular-7

ஐடியா பெயரில் மட்டும் 7 உரிமம் .
------------------
Datacom Solutions Pvt. Ltd.-21

என்ற பெயரில் மட்டும் 21 உரிமங்கள், பின்னர் வீடியோ கான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Loop Telecom Pvt. Ltd.-21

இதற்கும் ஒரே நிறுவனத்திற்கு 21 உரிமங்கள்.

S Tel-6

இதற்கு ஆறு உரிமங்கள்.

tata tele service-3

இவர்களுக்கு 3 மட்டுமே.
---------------------

--

வவ்வால் said...

தொடர்ச்சி...

//அடுத்தது, கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து, தலா ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, இருந்த டோக்கன் எல்லாம் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா???//

இங்கே டோக்கன் கொடுத்து லட்டு விநியோகமாக செய்யப்படுகிறது?

விண்ணப்பிப்பவர்களின் தேதியை பதிவு செய்து முன்னுரிமை மட்டுமே நிர்ணயிக்கலாம், பின்னர் விண்ணப்பத்தாரர்கள் அனைத்து நடைமுறைகளும் பின்ப்பற்றி இருக்கிறார்களா, ஆவணங்கள் சரியாக உள்ளனவா என சோதிக்கப்பட வேண்டும்.

தகுதி இல்லை எனில் முன்னரே விண்ணப்பம் கொடுத்து இருந்தாலும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் ஏன் கட் ஆஃப் தேதியை மாற்ற வேண்டும்.

100 மருத்துவக்கல்லூரி இடம் இருக்கு என்றால் 200 விண்ணப்பம் வந்தால் போதும் என நினைப்பார்களா? தகுதி பார்க்க வேண்டும் அல்லவா, எனவே கடை தேதிவரை விண்ணப்பங்கள் பெற்றால் குற்றமா என்ன?

ஒரு வேளை நீங்கள் சொன்னது போல முதலில் வந்தால் மட்டும் போதும், எந்த வரையறுக்கப்பட்ட தகுதிகளும் இல்லை என DoT வைத்துள்ளதா? இல்லையே, அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் என ஆய்வு செய்ய வேண்டாமா, அதனை பூர்த்தி செய்யாதவர்களுக்கு எப்படி உரிமம் கொடுப்பது?

முதலில் வருபவருக்கு முன்னுரிமை மட்டுமே அதுவே உரிமத்திற்கான தகுதியல்ல.

மேலும் பல விண்ணப்பங்களும் பினாமியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 122 உரிமங்கள் 9 நிறுவனத்திற்கு போய் சேர்ந்ததே காட்டுகிறது, அதாவது பல்ல போட்டியாளர்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இது வழக்கமாக உள்ளூரில் டெண்டர் விடும் போது நடப்பது, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே நான்கைந்து டெண்டர் விண்ணப்பித்து கணக்கு காட்டிவிடுவார்கல்,மற்றவர்களுக்கு டெண்டர் அப்ப்ளிகேஷன் கூட கிடைக்காது. இதே முறையை தானே டெல்லியில் ஆ. ராசா செய்துள்ளார்.

ஒரே நிறுவனத்திற்கு 21 உரிமம், பல போலி நிறுவனங்களுக்கு உரிமம், இதெல்லாம் ஏன் செய்ய வேண்டும்?

இன்னும் பல கோல் மால்களை வெளிப்படுத்த முடியும், இப்பொழுது உங்கள் வாதத்திற்கு மட்டுமே பதில் கொடுத்துள்ளேன், நீங்கள் கேட்க கேட்க விளக்க நாம் தயார் :-))

நன்றி!
-------------

குறை ஒன்றும் இல்லை !!! said...


உங்களைப்பத்தி வேற ஜோதிஜி மிரட்டலா பின்னாடி சொல்லி இருக்கார் :-))//

நான் காமெடி பீஸூங்க :) அப்படித் தான் சொல்லுவார் அண்ணன்..

பலாப்பட்டறை சங்கர், பாபசா, சங்கர் ஜி எல்லாமே ஒரே ஆள் தான் :)

naren said...

வவ்வால்,

நான் ஒரு பெரும் சுகவாசிதான்:))) பதிவை பிச்சி பிச்சிதான் தினம்தினம் கொஞ்சம் படித்தேன் ))).

முதலில் நடந்த ராசாவின் ஏலமுறை சட்டப்படி சரியா தவறா என்பதை உச்சநீதிமன்றம் தக்க சட்ட கோட்பாடுகளின் மூலம் முடிவு செய்துவிட்டது தவறென்று. இந்த தவறைப் போல மீண்டும் செய்யக்கூடாது என்றால் எப்படி சரியாக செய்யலாம் என்றால் ராசா செய்ததை அலசலாம். ஆனால் ராசா செய்ததுதான் சரி என்றால் செத்த பாம்பை அடிப்பது போன்றது. அது மஞ்சள் துண்டு தலைவருக்கு கைவந்தக்கலை.

முதலில் நடந்த ஏலமுறையில் சட்டத்துக்கு புறம்பான காரியங்கள் கையூட்டுக்கள் பெறப்பட்டனவா என்பதை பற்றி தற்போது சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது ராசாவின் தலையெழுத்து சாமார்த்தியம், கூடவே கனிமொழியும் இருப்பார்.

மற்ற நாட்டு வளங்களில் ஏலம் சரியா மற்ற ஒதுக்கீடு முறை சரியா என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய முடியும். ஆனால் எந்த வகையாகயிருந்தாலும் சட்டப்படி, சட்டத்திற்கு புறம்பாக கையூட்டு பெறாமல் நடக்க வேண்டும்.

முதலில் நடந்த ராசாமுறையில் அரசாங்கத்திற்கு இவ்வளவு நஷ்டம் என்பதை மத்திய கணக்காளர் அறிக்கை சொல்கிறது. தற்போதுள்ள நிலைமைகள் மாறியுள்ளது. ஊழல் வேறு உத்தேச ஈழ்ப்பீடு வேறு.

ஏன் தற்போதிய ஏலத்தில் விலை குறைவாக இருந்தது என்பதை பதிவு அலசோ என்று அல்சுகிறது நிறைய தகவல்களுடன். இது சம்பந்தமாக அடுத்து வரும் மத்திய ஆட்சி பணிக்குழு தேர்வில் கேள்விக்கேட்கபடலாம். அந்த தேர்வுக்கு எழுதுபவர்கள் இந்த பதிவை படிக்கலாம்.

well researched பதிவு

நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்வால் & பிரகாஷ்!

2ஜி விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் கதையே வேற மாதிரியாக ஓடியிருக்கும்.கைதுகளும்,சிறை வாசமும் இருந்தும் கூட தவறிழைக்கவில்லையென்றும்,இழப்பு இல்லையென,ஜீரோ லாஸ்ன்னு கபில் சிபல் அறிக்கை விட்டதெல்லாம் பழைய கதையாகி இப்ப ஜோஷி வற்புறுத்தலால் தான் நான் கையெழுத்தே போட்டேன்ங்கிற வரைக்கும் வந்திருக்குது.

அரசு துறையில் பணிபுரியும் ஒருவருக்கு நிர்பந்தங்களும்,அழுத்தங்களும் இருப்பது தெரிந்த ஒன்றே என்றாலும் கூட பதவியில் இருப்பவர்களின் அழுத்தத்தால் செய்தேன் என்றால் கூட ஒரு நியாயத்தை கற்பிக்கலாம்.ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவரின் வற்புறுத்தலால் செய்தேன் என்பது நம்பும்படியாக இல்லை.பதவி காலத்தில் பயந்து கொண்டு கையெழுத்துப் போட்ட சுபாவம் பதவிகாலத்திற்கு பின்பு மாறுவதும் கூட கடினம்.

இரண்டு பொருளாதார மந்திரிகளாக ப.சி மற்றும் பிரணாப்புடன் பொருளாதார பிரதமர் காலத்தில் ஊழலை வெளிக்கொண்டு வருவது ஒன்றும் கடினமான காரியமில்லை.இங்கே பிரச்சினையே திருட்டை மறைக்க வேண்டுமென்றோ அல்லது திருட்டுக்கு உடந்தையாக இருக்க வேண்டுமென்றோ என எண்ணும்படியான மத்திய ஆட்சி முறையில் பணத்தை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லையென எதிர்கேள்வி வேற போடுறீங்களே பிரகாஷ்!

பிஜேபி ஒரு சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லையென்பதை 2G யின் துவக்கம் முதலே வெளிப்படுகிற ஒன்று.விவகாரம் நீதிமன்றம் செல்லாமல்,ஊடகங்களின் வீச்சு இல்லாமல் இருந்திருந்தால் பிஜேபியும்,முரளி ஜோஷியுமே கூட 2G நற்சான்றிதழ் வழங்கியிருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை:)

அன்னா ஹசாரே,கெஜ்ரிவால் குழுவினரை அரசியலுக்குள் பரிட்சித்துப் பார்ப்பது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது.

லட்டு பரிமாறலில் கூட அம்பி!இங்கோ வாடான்னு முன்னுரிமை அழைப்பையெல்லாம் நீங்க கேட்டிருக்கேளா பிரகாஷ்:)இப்ப ஜெத்மலானிக்கு வேற பிஜேபில அஷ்டமாம்.ஜெத்மலானியை கூட்டி வந்து மறுபடியும் வாதாடினாலும் கூட கேஸ் தேறாது.இருக்குற ஒரே அனுகூலம் புதனில் செவ்வாய் சஞ்சரிப்பதால இந்திய மக்களுக்கு மறதி மண்டையாம்.காலப்போக்குல 2Gயையே எதிர்த்த பரம்பரையாக்கும் சுவரொட்டு வேணுமின்னா ஒட்டிக்கலாம்:)

பிரகாஷின் துவக்க வாதம் எடுத்தவுடனே சிக்ஸர் அடிக்கிறாரேன்னு மலைப்பாக இருந்தாலும் கூட வவ்வால் அதள ரணகள புஜபல மள மள கல கல அது சரி அது சரி ஆட்டத்தில் ஆட்டத்தின் வெற்றி நாயகனாகிறார்:)

ராஜ நடராஜன் said...

கூகிளினால் கொட்டிக்கிடக்குது கதை கதையா.அன்னிய நாட்டின் சதின்னு கூட நாளைக்கு அறிக்கை விடறதுக்கு தோதா ஒண்ணே ஒண்ணு.....

http://knowledgetoday.wharton.upenn.edu/2012/02/revoked-licenses-are-the-latest-fallout-from-indias-2g-telecom-scam/

ராஜ நடராஜன் said...

நரேன்!விட்டும் தொட்டும் ரசிச்சு படிக்கிற ஒரே ஆள் நான்தான்.அதுக்கும் போட்டியா:)

வவ்வால் said...

குறையொன்றும் இல்லை,

நன்றி!

ஷங்கர்ஜி, பலாப்பட்டரை ஷங்கர் இருவரும் ஒருத்தர் தான்னு இன்னிக்கு தான் கண்டு கொண்டேன், பலாப்பட்டரையில் ஆன்மீகப்பயணம் எல்லாம் எழுதியதை வைத்து வேறு ஒருவர் என நினைத்துவிட்டேன், அடிக்கடி படிக்காமல் அவ்வப்போது படிப்பதால் சரியாக புரிந்து கொள்ளவில்லை :-))


என்னது காமெடி பீஸ் ஆ? உங்க பிளஸ் படிச்சுட்டேன் ... எல்லாரையும் வாரிக்கிட்டு இருக்கிங்க , காமெடின்னு சொல்லுறீங்களே, உங்க பிளஸ்ஸில் நம்ம பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

நாம ஒரு மொக்கை பீஸ் பாஸ்!
---------------

நரேன் ,

வாரும் ,நன்றி!

சுகவாசியே தான் :-))

உச்ச நீதி மன்றம் டிமாண்ட் & சப்ளை பொறுத்தே அரசின் வளத்தின் மதிப்பினை நிர்ணயித்திருக்க வேண்டும் என மண்டையில் கொட்டிய பிறகும், அதெல்லாம் இல்லை முந்தைய அரசு பின்ப்பற்றிய வழி முறை என்றால், முந்தைய அரசே தொடர்ந்து ஆண்டுக்கொண்டிருக்கட்டும் என பதவி விலகிடலாமே இவர்கள் :-))

பெட்ரோலுக்கு ஏன் மார்க்கெட் விலையில் நிர்ணயிக்கிறாங்க எனக்கேட்டதற்கு பதிலே சொல்லக்காணோம் :-))

இப்போ கூட , நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இவர்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கையில் தான் , அவர்கள் எடுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் சேர்த்து தான் கழகம் ஆதரவு கொடுக்கிறது அப்படியானால் அவர்களே ஊழலை ஏற்றுக்கொண்டு விட்டதாக தானே பொருள் :-))

இல்லை இதனை எதிர்க்கிறோம் என்றால் கூட்டணியில் ஏன் இருக்கிறார்கள் :-))

உச்ச நீதி மன்றம், பத்திரிக்கைகள் எல்லாம் ஆர்ய சூழ்ச்சி என்றால் ,காங்கிரஸும் ஆர்ய சூழ்ச்சியா? அப்புறம் என்னாத்துக்கு அது கூட அரசியல் உறவு :-))

ஆர்ய சூழ்ச்சி என கூவும் இவர்கள் வரும் பாராளூமன்ற தேர்தலின் போது பிஜேபி பக்கம் சாய மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை, அப்போ நிலையான அரசு அமைக்க உதவுகிறோம், இல்லையானால் காங்கிரஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது ,சாமானியன் துன்பப்பட்டான் இல்லை ஈழ மக்களுக்கு உதவவில்லை என மஞ்சத்துண்டு புதுசா கண்டுப்பிடிப்பாரு பாருங்க :-))

மத்திய ஆட்சிப்பணிக்கு படிக்க போறவங்க இதெல்லாம் படிச்சுட்டு எப்படி மாட்டிக்காம ஊழல்ல் செய்வது என கற்றுக்கொள்ளவா :-))

நன்றி!
------------------

ராச நட ராசர்,

வாரும்,நன்றி!

நான் வேற கடையில டீ ஆத்தும் போது நீர் இங்கே வந்துட்டீரா :-))

//ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவரின் வற்புறுத்தலால் செய்தேன் என்பது நம்பும்படியாக இல்லை.//

அதைத்தானே நானும் கேட்டேன் , அப்போ டிராய்யை ஆ.ராசா மிரட்டி இருக்கலாம்ல :-))) ,

பதிலே சொல்லவில்லை கழக தொண்டர்.

மேலும் பதவிக்காலம் முடிந்தவுடன் ஆர்.பி.சிங்க் பல்டி அடிக்க காரணம் இப்போ ஏதேனும் நியமன பதவிக்கு அடிப்போடுகிறார் போல.

அதை விட கூட்டணியில் இருக்கும் ,மஞ்சத்துண்டு அழுத்தம் கொடுத்திருக்கலாம் காங்கிரசுக்கு, அதன் விளைவாக காப்பாற்ற இப்படி ஒரு டிவிஸ்ட் அடிக்குறாங்க என நினைக்கிறேன்.

உச்ச நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாகவே சிபிஐ கூட கண் துடைப்புக்கு பேரளவில் தான் வழக்கை நடத்துகிறது, உண்மையில் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இன்னேரம் அனைத்தும் தோண்டி துருவி எடுத்திருக்கலாம்.

சட்டம் மற்றும் விசாரணை அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட நம் அரசியல் அமைப்புகள் இடம் கொடுப்பதேயில்லை.

ஒரு சிக்சர் அடிச்சுட்டு அடுத்த பாலில் அவுட் ஆகும் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் உண்டு.

நாம எல்லாம் நின்னு ஆடும் ரகம் ,எப்படி போட்டாலும் தடுத்தும் ஆடுவோம், தேவைப்பட்டால் தாக்குதல் ஆட்டமும் கொடுப்போம்ல.

ஹி...ஹி ஆனாலும் நான் அம்பேல் ஆகிடுவேன்னு உள் மனசில் எதிர்ப்பார்த்திருப்பீர் தானே :-))

# கூகிள் அளவுக்கு எல்லாம் போய் கழக கண்மணிகள் படிப்பதில்லை, முரசொலியோட அவர்களின் வாசிப்பனுவம்ம் முடிந்துவிடுகிறது போலும் :-))

நீங்க போட்ட சுட்டியெல்லாம், முன்னர் நான் என்ன கொடுமை சார் இது பகுதியில் 2ஜீ பற்றி எழுதும் போது சான்றாக படித்தது.நமக்கு ஒரு தளத்தில் படித்துவிட்டு அப்படியே எழுதும் வழக்கம் இல்லை, குறைந்தது ஒரு 100 தளமாவது மேய்ந்துவிடுவது வழக்கம், பதிவில் சொல்வது கொஞ்சமே சொல்லாமல் விட்டது மிகுதி ,அதை எல்லாம் வெளிப்படுத்த ஒரு வழிக்காட்டிய பிரகாஷருக்கு தான் நன்றி சொல்லணும் :-))

# நரேன் ஒரு சுகவாசின்னு சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன போட்டின்னு கவலைப்பட்டுக்கிட்டு, அவரும் ஒரு பக்கம் நின்னு நிதானமா வாசிச்சுட்டு போகட்டுமே, நம்ம கடைக்கு வரும் கூட்டமே கொஞ்சம் அதுக்கே சிணுங்குறிங்களே :-))

Prakash said...

TRAI தான் இந்தியாவில் தொலைதொடர்ப்பு கொள்கைகளை உருவாக்கும், கண்காணிக்கும் உயரிய அமைப்பு ...மேலும் TRAI மட்டுமே ஏலம் தேவை இல்லை என்று சொல்லவில்லை, 1999 ஆண்டின் வெளியிடப்பட்ட அடுத்த பத்தாண்டிர்க்கான தொலைதொடர்ப்பு கொள்கையும் அதைத்தான் குறிப்பிடுகிறது.... டெலிடென்சிட்டியை அதிகரிப்பதும், தொலைதொடர்ப்பு சேவையை பரவலாகுவதுமே முக்கியம் என்று சொல்லி, வருமானம் என்பது இரெண்டாம் பட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது...

பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்திலே இதை குறித்து பேசியும் இருகிறார்கள்...பிரதமர் சும்மா டீ பிஸ்கட் சாப்பிடவா கூட்டங்களில் கலந்து கொள்வார் ???


லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட பின், மற்ற நிறுவனங்களுடன் அம்மால்கமேட் ஆகி, ஒரு ஒரே நிறுவனமாக மாறியது ஒன்றும் தவறில்லையே....யூனிடெக்கின் கீழ அந்த எட்டு நிறுவனங்கள் சேர்ந்ததை டெல்லி ஹைகோர்ட் சரி என்று சொல்லியுள்ளதே..... ஆனால் அதை அவர்கள் முன்கூட்டியே DoT இடம் தெரிவிக்கவேண்டும்..அவ்வளவுதான்...

//Unitech had applied for 2G licences under eight companies and then merged the entities. The amalgamation was approved by the Delhi High Court//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/info-tech/article2450670.ece

http://www.lslaw.in/News-and-Publications/Publications/Corporate/Telecom-mergers-redefined

ஒரே சர்கிள்ளில் லைசன்ஸ் பெற்ற இரு நிறுவனகளிலும் ஒருவரே சுமார் 10% பங்கை வைக்ககூடாது..கிராஸ் ஹோல்டிங்..இது தான் தவறு என்று இருகிறதே தவிர, பல்வேறு சர்கிள்களில் லைசன்ஸ் பெற்ற நிறுவனகள் DoTடிடம் சொல்லிவிட்டு மெர்ஜ் ஆகுவது தவறு என்று சொல்லவில்லை...

மேலும், இது எல்லாம், போஸ்ட் லைசன்ஸ் நடவடிக்கைகள்....லைசென்சை பெற்றுகொண்டப்பின் அந்த நிறுவனங்கள், அரசு விதிமுறைகளை மீறியிருந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமா அதை எடுப்பார்கள்...

எந்த ஒரு அரசு டெண்டரை பெறும் நிறுவனமும், அதை பெறும்போது, அந்த நேரத்தில் பூர்த்திசெய்யவேண்டிய நடைமுறைகளை மட்டும் தான் சரி பார்ப்பார்கள் (Meeting the Tendor Norms)..உதாரணத்திற்கு, ஒரு டெண்டரை பெற 5 டாகுமெண்ட்கள் தேவை எனில், அந்த 5 டாகுமென்ட்களும் சரியா, உண்மையானதா என்றுதான் பார்ப்பார்களே ஒழியே, அதில் குறிப்பிட்டவைகள் அனைத்தும் சரியா என்று பார்ப்பது அந்த துறையின் வேலை அல்ல, Won't comes under that dept's perview...அது அந்த டாகுமெண்ட்களை அளித்த துறையின் வேலை... ஆனால், இந்த 2G விவகாரத்தில், ஏதோ ராசா மட்டுமே அனைத்து விவகாரங்களையும் பார்க்கவேண்டும், தொலைதொடர்ப்பு துறைதான் முழு பொறுப்பு என்பது போல கருதுகிறார்கள்... Every dept have their own boundreis of operation.

சேஷாத்ரி என்ற ஒருவர் தவறான தகவல் அளித்து தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழை வருவாய்துறை மூலம் பெறுகிறார்...அதை கொண்டு அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்கிறார்...அவருக்கு, ஆசிரியர் பணியை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் பள்ளி கல்வித்துறை ஒதுக்குகிறது...அவர் அந்த பள்ளி கல்வித்துறை அதிகாரியை சந்தித்து வேலையில் சேரும்போது, என்ன சான்றிதழ்களை சரிப்பார்பார்கள் ???, அடையாள சரிபார்ப்பு, கல்வி தகுதி சரிப்பர்ப்பு, சாதி சான்றிதழ் சரிப்பர்ப்பு..அவ்வளவுதான்....இவர் பெயர் சேஷாத்ரி ஆயிற்றே, இவர் எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழை வைத்துள்ளார் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்...அவர்களை பொறுத்தவரையில், அவர் வைத்துள்ள, அளித்த சான்றிதழ்கள் எல்லாம் ஒரிஜினல்..அவ்வளவுதான்... பின்னர் யாராவது வந்து சேஷாத்ரி தாழ்த்தப்பட்டவர் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...

அவருக்கு ஆசிரியர் பணி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது...தவறான சான்றிதழ் அளித்த வருவாய்துறை அதிகாரிமீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்....

அது போல, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிருவனங்கங்ளின் மீது ஏதாவது புகார் இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் கொடுத்த, ரிஜிஸ்டர் செய்த, கம்பெனி விவகார துறை போன்ற சம்பந்தப்பட்ட துறை தான் பார்க்கவேண்டுமே தவிர தொலைதொடர்புதுறை அல்ல..

Prakash said...

மேலும் அந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்று பெரும்பாலான அரசு ஏஜென்சிகள் கோர்ட்டில் சொல்லிவிட்டன...TRAI ஏலத்திற்கு பரிந்துரைக்கவில்லை என்று கோர்ட்டில் சொல்லிவிட்டது...

அரசிற்கு தேவை லைசென்ஸ்சுக்கு பணம், அதை குப்புசாமி கொடுத்தால் என்ன முனுசாமி கொடுத்தால் என்ன...இல்லை இல்லை, முனுசாமிக்கு தான் லைசென்ஸ் தரவேண்டும், ஆனால் குப்புசாமிக்கு கொடுத்து விட்டார்கள் என்றால், குப்புசாமியிடம் என்ன பலன் பெற்று கொண்டு லைசென்ஸ் கொடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும், முனுசாமி லைசென்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை பின்பற்றினாரா?? அப்படி அவர் விதிமுறைகளை பூர்திசெய்தும் அவருக்கு லைசென்ஸ் கொடுக்கபடவில்லையா?? ஆனால் இந்த வழக்கில் எந்த நிறுவனமும் நாங்கள் விதிமுறைகளை பூர்திசெய்தும் தங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கபடவில்லை என்று சொன்னதாக எங்கும் படிக்கவில்லை...

சட்ட நடைமுறை படி, அரசின் கொள்கை முடிவால் ஏற்ப்படும் வருவாய் குறைவு, இழப்பு அல்ல..ராசா மீது குற்றம் சாட்டவேண்டும் என்றால், ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற நிருவனங்களிடம் இருந்து அவர் நேரடியாக பணமோ அல்லது வேறு உபகாரங்களோ பெற்றுகொண்டார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும்..இல்லை என்றால், வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்தார், அந்த சொத்து இந்த ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்த நிருவனங்களிடம் இருந்து பெறப்பட்டது (ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு போல) என்பது நிருபிக்கபடவேண்டும்...இல்லை என்றால், ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற நிருவனங்களிளில் அவரோ, அவரின் நெருங்கிய உறவினர்களோ ஷேர் வைத்திருந்தால், canflict of intrest படி தவறு...

இதில் எதுவுமே கடந்த மூன்று வருடங்களில் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் இந்த வழக்கில், எந்த ஒரு புலானாய்வு ஏஜென்சிகளால் ஆதாரப்பூர்வமாக நிறுவப்படவில்லை.....

எந்த ஒரு பணம் பெற்றதற்கான எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லாமல், வெறுமனே ஊழல் ஊழல் என்று சொல்வது டீ கடைகளில் உட்கார்த்து கொண்டு பேச மட்டும் தான் பயன்படும்..ஒரு சாதாரண பியூன் 500 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று நிரூபிக்கவே அவர் அதை வாங்கும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிடிக்கவேண்டும், ஆதாரத்தை காட்டவேண்டும்....அப்படி எதுவும் இல்லாமல், அந்த பியூனா, நல்லா வருமானம்பா, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மேனிக்கு மாசம் சுளையா இருபதாயிரம் வருதுப்பா என்று மரத்தடியில் உட்கார்ந்து புரளி பேசுவதை போல பேசி கொண்டுதான் இருக்கவேண்டும்....

Prakash said...

//3ஜீ க்கு இம்முறை பின்பற்றி அரசுக்கு நல்ல வருவாய் வந்துள்ளது//

வருவாய் சரி, அதினால் மக்களுக்கு பலன்...ஏல முறையில் நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு 3Gயை ஏலம் எடுத்ததினால் அவர்கள் தொழில் செய்யவே பணம் இல்லாமல் போயிற்று, விளைவு 3G சேவைகள் மக்களை சென்றடையாமல் கடைசியில் தோல்வியுற்றது...3Gயானது இந்தியாவில் மிக பெரிய தோல்வி, 3G சேவை வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெறும் 3% சதவீத மொபைல் போன் பயன் பயன்படுத்துபவர்கள் தான் 3G சேவையை உபயோகிக்கிறார்கள்....மீதி எல்லாமே 2G தான்..


"3G has not delivered because they paid such huge prices for the spectrum and there is no liquidity in the market for them to invest in the infrastructure and the devices to deliver 3G, for which 2G was successful and 3G was not successful"

"Bharti Airtel Chairman Sunil Mittal has said that bidding for 3G spectrum in "crazy numbers" has taken the sheen off the Indian telecom industry."

http://www.dnaindia.com/money/report_high-price-bill-shock-patchy-coverage-plague-3g_1584137

http://businesstoday.intoday.in/story/kapil-sibal-3g-service-not-been-successful-as-2g/1/23867.html

http://articles.timesofindia.indiatimes.com/2012-01-26/india-business/30666240_1_bwa-spectrum-bidding-for-3g-spectrum-airtel-chairman-sunil-mittal

Prakash said...

//முறையில் முதலிலேயே மொத்த கட்டணமும் செலுத்தப்பட வேண்டும், யார் சொன்னார்கள் ஆண்டு தவணை என்று.//


//operators to pay a third of the bid amount up front, with the remainder to be paid in 10 equal installments with interest, beginning from the fourth year of their licence period.//

http://articles.economictimes.indiatimes.com/2012-11-16/news/35155152_1_licence-fee-spectrum-fee-spectrum-auctions

வவ்வால் said...

பிரகாஷ்,

வாங்க,

டிராய் தான் கொள்கையை வகுத்து பரிந்துரைக்கும் ,ஆனால் அது பொருத்தமாக இருந்தால் மட்டுமே நடை முறைப்படுத்தப்பட வேண்டும், அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அரசும் செயல்படுது.

மேலும் 1999 இல் பத்தாண்டுகளுக்கு கொள்கை வகுத்தது என்றால் அக்கொள்கையை மாற்றாமல் 10 ஆண்டுகளுக்கும் பின்ப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, அது ஒரு அடிப்படை டிராப்ட் மட்டுமே.

1999 இல் பெட்ரோல் விலையை ஏற்ற வேண்டாம் என ஒரு முடிவு செய்தால் ,அடுத்த 10 ஆண்டுகளுக்கும் ஏற்றாமல்ல் விடுவார்களா?

1999 இல் பிஜேபி ஆட்சி அதன் கொள்கையை அப்படியே ஏற்று நடத்துவதற்கு ஏன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும், பிஜேபியே இருந்துவிட்டு போயிருக்கலாமே.

காலத்திற்கு ஏற்ப , சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்ய மாட்டீர்களா?

1999 இல் உங்க மகன் 6 ஆம் நம்பர் செருப்பு , 32 காலர் சைஸ் சட்டைப்போட்டார் என்றால் இப்போ வளர்ந்த பின்னும் அதே அளவைப்பயன் படுத்த முடியுமா?

1999 ஐ விட 2008 இல் அலைப்பேசி பயனாளர்கள் பெருகிவிட்டார்கள், எனவே வருவாய் ஈட்டும் திறன் அதிகம் ஆகி உள்ள சூழலில் அதற்கு ஏற்ப அலைக்கற்றை விலையை நிர்ணயிக்க வேண்டாமா?

டெலி டென்சிட்டியை அதிகரிக்க வேண்டும், பரவலாக்க வேண்டும் என்பதை போல மக்களுக்கு அத்தியாவசியமானது எரிபொருள், எரிவாயு, எனவே விலை ஏற்ற வேண்டாம் என முடிவெடுக்கலாமே?

இதனை குறித்து ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறிங்க :-))

உச்ச நீதிமன்றம் 2008 இல் அலைக்கற்றை விலை நிர்ணயிக்க கையாண்ட முறை தவறு என தெளிவாக சொல்லிவிட்டது, நீங்கள் மீண்டும் ,மீண்டும் அது சரி என்பதால் சரியாகிவிடாது.

# //பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்திலே இதை குறித்து பேசியும் இருகிறார்கள்...பிரதமர் சும்மா டீ பிஸ்கட் சாப்பிடவா கூட்டங்களில் கலந்து கொள்வார் ??? //

அப்போ எல்லாம் பிரதமருக்கு தெரிந்து,ஒப்புதலுடன் நடைப்பெற்றது என்கிறீர்கள் சரியா?

ஆனால் பிரதமர் என்ன சொல்கிறார், சரியான ,நேர்மையான முறையில் விலை நிர்ணயம் செய்ய சொன்னேன், அவசரப்பட வேண்டாம் என சொன்னேன், ஆனால் விரைவாக அலைக்கற்ரையை ஒதுக்கிவிட்டார் என சொல்கிறாரே, அதன் பொருள் நான் சொன்னதை கேட்காமல் செய்துவிட்டார், கூட்டணி அமைச்சர் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகிறது.

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆ.ராசா ஒரு முறை பிரதபர், நிதியமைச்சரை எல்லாம் விசாரிக்க வேண்டும் என பேட்டிக்கொடுத்தார், ஏன் அவர்களின் ஒப்புதலுடன் செய்த ஒன்றுக்கு இவர் மட்டும் மாட்ட வேண்டும், பேசாமல் கோர்ட்டில் அவர்கள் ஒப்புதலுடன் செய்தேன் , கண்டிப்பாக அவர்கள் பெயரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மனு கொடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது, அதனை செய்யலாமே?

இத்தனை நாளாக செய்யவில்லை என்றாலும் இவ்வளவு விவரமாக பேசும் நீங்கள் ஆ.ராசாவுக்கு சொல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனைவரையும் விசாரிக்க வைக்கலாமே :-))

இணையத்தில் வந்து பிரதமர் டீ,பிஸ்கட்டா சாப்பிட்டார் அவருக்கு தெரியும்னு சொல்வதால் என்ன பயன்ன் கோர்ட்டில் சொல்லிடுங்கோ , மற்றவற்றை கோர்ட் பார்த்துக்கும் , நீங்க விருப்பப்பட்ட படி ஆ.ராசா ஊழல் செய்யவில்லை எனில் இதனை செய்திருக்க வேண்டும் :-))

தொடரும்....
--------------------------

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட பின், மற்ற நிறுவனங்களுடன் அம்மால்கமேட் ஆகி, ஒரு ஒரே நிறுவனமாக மாறியது ஒன்றும் தவறில்லையே..//

அதான் விஞ்ஞான முறை ஊழல் என்பது. அப்புறம் எப்படி நிறைய விண்ணப்பம் வந்தது ,கட்-ஆஃப் தேதியை மாற்றினேன் என சொல்கிறார், பேசாம கட்-ஆஃப் தேதியை மாற்றாமல் ,பின்னால் விண்ணப்பித்தால் உரிமம் இல்லைனு விதியை காட்டி தள்ளுபடி செய்திருக்கலாமே :-))

ஆக்கப்பொறுத்தவர் ஆறப்பொறுக்காம என்னாத்துக்கு தேதியை மாற்றனும்?

எனவே திட்டமிட்டே பல நிறுவனங்கள் உருவாக்கி , அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது போல தோற்றம் உண்டாக்கி குறிப்பிட்டவர்களுக்கு உரிமம் சென்று சேர வழி வகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை இணைப்பது வேண்டுமானால் சட்டப்படி சரியாக இருக்கலாம், ஆனால் டெண்டரில் இப்படி கலந்துக்கொள்வது சட்டப்படி தவறு.

#//ஒரே சர்கிள்ளில் லைசன்ஸ் பெற்ற இரு நிறுவனகளிலும் ஒருவரே சுமார் 10% பங்கை வைக்ககூடாது..கிராஸ் ஹோல்டிங்..இது தான் தவறு //

இதனைப்படியுங்கள்...

//The mystery investor in Loop Mobile and Loop Telecom is a Mauritius based company Capital Global, which, the ED believes, is an Essar company. ED investigations showed that Essar Group's Capital Global along with another Mauritius entity owns more then 41 per cent equity in Loop Telecom, which is a violation of the 10 per cent cap as per DoT guidelines.//

http://ibnlive.in.com/news/2g-scam-probe-exposes-loop-telecomessar-link/144223-7.html

எஸ்ஸார்-லூப் தொடர்பினை ஆமோதிக்கும் லூப் ஊழியரின் வாக்குமூலம்..

//Subramaniam said his reporting supervisor Vikas Saraf in Loop Telecom was also CEO of Essar Telecom Business Group. “To my best of my knowledge, Vikas Saraf reported to the promoter Directors of Essar namely Shashi Ruia, Ravi Ruia, Prashant Ruia, Anshuman Ruia, Rewant Ruia and Smiti Ruia “ he added.//

http://www.hindustantimes.com/india-news/newdelhi/Essar-controlled-Loop-Telecom/Article1-745781.aspx


இது போல யார் முதலீடு செய்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு எங்கிருந்தோ பணம் பெறும் நிறுவனங்கள் ,இந்திய தொலைத்தொடர்பு வியாபாரத்தில் ஊடுருவது நாட்டுக்கு நல்லதா?

ஒரு ரயில்வே டிக்கெட் ரிசர்வ் செய்து பயணம் செய்தால் இன்னார் தான் டிக்கெட் உரிமையாளர், அவர் பெயரில் தான் டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது என நிருபிக்க புகைப்பட அடையாள அட்டை காட்ட சொல்லும் அரசாங்கம், யாருனே தெரியாம முதலீடு செய்யுன்னு விடுவதேன், அதெல்லாம் எங்க வேலை இல்லைனு சொல்லிக்கிட்டு ஒரு அரசமைப்பு ,அதனை சரி என பேசிக்கிட்டு நீங்க :-))

தொடரும்...
------------------------------

வவ்வால் said...

தொடர்ச்சி....

#//அவருக்கு ஆசிரியர் பணி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது...தவறான சான்றிதழ் அளித்த வருவாய்துறை அதிகாரிமீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்....//

ஏமாற்றியதை அறியாமல் செய்தால் நீங்கள் சொல்வது சரியே, ஆ.ராசா அறியாமல் தான் செய்தார் என்றால் , அவர் கட்-ஆஃப் தேதி முடியும் வரைக்கும் காத்திருக்கலாமே, என்ன அவசரம் , சீக்கிரமாக உரிமம் கொடுத்து சீக்கிரமாக டெலி டென்சிட்டியை அதிகரிக்கவில்லை எனில் ,இந்தியா வங்க கடலில் மூழ்கியா போயிடும் :-))

சுப்பிரமணியம் சுவாமி கூட பிரதமர், நிதியமைச்சரை எல்லாம் விசாரிக்கணும்னு கோர்ட்டில் முறையிட்டு தோல்வியுற்றுவிட்டார், ஆனால் ஏன் "அப்பாவியாக" மாட்டிக்கொண்ட ஒன்றுமே தெரியாத ஆ.ராசா தன்னைக்குற்றமற்றவர் என நிருபிக்க அதே போல கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யலாமே !!!

#//மேலும் அந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்று பெரும்பாலான அரசு ஏஜென்சிகள் கோர்ட்டில் சொல்லிவிட்டன...TRAI ஏலத்திற்கு பரிந்துரைக்கவில்லை என்று கோர்ட்டில் சொல்லிவிட்டது...//

அலைப்பேசி நிறுவனங்களின் ஆண்டு நிகர வருவாய் ,மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வருவாய் எல்லாம் ஒப்பிட்டு, மேலும் , 3ஜி, மற்றும் 2ஜி அலைக்கற்றை ஒப்பீட்டின் அடிப்படையிலும் இழப்பு ஏற்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே சிபி.ஐ விசாரிக்கவும், வழக்கு நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.

அதற்குள் தீர்ப்பு எழுதுறிங்களே :-))

டிராய் ஏலத்திற்கு பரிந்த்துரைக்கவில்லை என்றால் , ஏன் என கேள்வி வருகிறது? அதனை அப்படி பரிந்துரைக்க ஆ.ராசா அழுத்தம் கொடுக்கவில்லை என சொல்ல முடியுமா?

மேலும் பழைய கொள்கையை கடைசிவரையில் கடைப்பிடிப்பேன் என்பதையே மீண்டும் சொல்வது பொறுத்தமல்ல.

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க, நானும் இரண்டு முறைக்கேட்டாச்சு , ஒன்றுமே சொல்லவில்லை...

2001 இல் விற்கப்பட்ட விலையை அடிப்படை விலையாக 2008 இல் வைத்துக்கொண்டதாக சொல்லி தானே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது, ஆனால் 2001 இல் அவ்விலை ஏல முறைப்படி எட்டப்பட்ட ஒன்று, ஏலம் விடத்தேவை இல்லை என்பவர்கள், ஏல முறையினால் கண்டறியப்பட்ட அலைக்கற்றை விலையை ஏன் பயன்ப்படுத்த வேண்டும், புதிதாக மதிப்பிட்டு செயல்படலாமே, இல்லை மீண்டும் ஏலம் விட்டிருக்க வேண்டும்.

மேலும் 2001 ஐ விட 2008 இல் கையிருப்பில் உள்ள அலைக்கற்றையின் அளவு குறைவு ,ஆனால் அதன் தேவை அதிகம் ஆகிவிட்டது. நிறைய பேர் கேட்கிறார்கள், எனவே சப்ளை &டிமாண்ட் விதிப்படி விலையை நிர்ணயித்தால் கூடுதலாக அல்லவா இருக்கும்.

# நிருபிக்க தானே விசாரணை நடக்கிறது, தடையோ ,இடையூறோ இல்லாமல் சுதந்திரமாக விசாரிக்க விடுங்களேன், அதன் பின்னர் நான் குற்றமற்றவன் என கம்பீரமாக வாருங்களேன், அதற்குள் என்ன அவசரம்?

# //3G சேவை வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெறும் 3% சதவீத மொபைல் போன் பயன் பயன்படுத்துபவர்கள் தான் 3G சேவையை உபயோகிக்கிறார்கள்....மீதி எல்லாமே 2G தான்..//

2ஜீ ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு இதே நிலையில் தான் இருந்தது, 2007-08 இல் தான் சூடுப்பிடித்தது.

இப்பொழுதும் 2ஜீ கட்டணம் குறைவாக இருப்பதால் 3ஜீ க்கு மாறவில்லை, 3ஜீ கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என பதிவிலே சொல்லி ,விளக்கமும் கொடுத்துவிட்டேன்.

விரைவில் 3ஜீ ஆதிக்கம் பெறும்.

#//operators to pay a third of the bid amount up front, with the remainder to be paid in 10 equal installments with interest, beginning from the fourth year of their licence period.//

இந்த ஐடியாவே இன்று தான் ப.சி ஒப்புதல் கொடுத்து வெளியிட்டு இருக்கார், இந்த ஆப்ஷன் ஆரம்பத்தில் 2008 இல் ஏலம் விடலாம் என்ற பரிந்துறையுன் போதோ, இல்லை 2001 இல் ஏலம் விடப்பட்டப்போதோ இல்லை.

காங்கிரஸ் அனைத்து வகையிலும் 2ஜீ ஏலம் ஒரு தோல்வி என காட்ட இப்போது இப்படி செய்கிறது,ஏன் ஏலம் விடப்பட்ட அன்றே இப்படியான முறையினை சொல்ல வேண்டியது, இல்லை 2001 இல் இப்படி தவணை இருந்துச்சா?

இப்போ மட்டும் புதுசா கொள்கையை மாற்றி அமைக்க எப்படி முடியுது?

இதை வேற ரொம்ப நாளா இப்படித்தான் என்பது போல எடுத்துக்காட்டுறிங்க :-))

டாஸ்மாக் ஏலம், மணல் ஏலம், டோல் ரோட் ஏலம் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரியும் தானே?
-------------------

Prakash said...

//2ஜீ ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு இதே நிலையில் தான் இருந்தது, 2007-08 இல் தான் சூடுப்பிடித்தது//

நீங்களே ராசா தொலைதொடர்ப்பு மந்திரியாய் வந்தப்பிறகுதான், நாட்டின் சாதாரண மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் எட்டா கனியாக இருந்த மொபைல், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கபெற்றது என்று ஒத்து கொண்டதற்கு நன்றி...:))))))

ஏன் சூடு பிடித்தது ???, பல புதிய நிருவனகள் உள்ளே வந்தப்பின் தான், அதுவரை இந்திய தொலைதொடர்பு துறையை கைக்குள் வைத்திருந்த ஏர்டெல், ஹட்ச் போன்றவற்றின் கார்ட்டல் உடைக்கப்பட்டு, உலகிலேயே மிக குறைவான கட்டணத்தில் மொபைல் தொலைதொடர்ப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க பெற்றது....

Prakash said...

//எஸ்ஸார்-லூப் தொடர்பினை ஆமோதிக்கும் லூப் ஊழியரின் வாக்குமூலம்//

லூப் டெலிகாம்இல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..

Essar didn't violate rules: Law ministry

CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions.

The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group".

The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma.

http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms

Prakash said...

பெட்ரோலும் மற்ற பொருட்களும் அன்னிய செலாவணி கொடுத்து வாங்கி இங்கு பயன்படுதபடுவது...ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒன்றும் அப்படிப்பட்டது இல்லையே...ரெண்டையும் எப்படி ஒப்பிடுவது ????

Prakash said...

//இழப்பு ஏற்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே சிபி.ஐ விசாரிக்கவும், வழக்கு நடக்கிறது//

அந்த சிபிஐயின் டைரக்டர்ரே இப்போ இப்படி சொல்லியிருக்கிறார் "Despite such a huge figure, we had not termed it a loss"

ராஜ நடராஜன் said...

//நீங்களே ராசா தொலைதொடர்ப்பு மந்திரியாய் வந்தப்பிறகுதான், நாட்டின் சாதாரண மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் எட்டா கனியாக இருந்த மொபைல், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கபெற்றது என்று ஒத்து கொண்டதற்கு நன்றி...:))))))//

இன்னும் படம் ஓடிட்டு இருக்குதா!

பிரகாஷ்!முந்தைய சூழலில் அனைவருக்கும் மொபைல் போன் வசதி வந்தது தயாநிதி மாறன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த போது.தாத்தாவுக்கும்,பேரனுக்குமான சண்டையில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ராசா புகுந்து மேஞ்சுட்டார்.

பெட்ரோல் உலகசந்தையில் வாங்குவதால் என்பதால் ஸ்பெக்டரத்தை ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது என்பதில் உங்களோடு உடன்படுகிறேன்.

சரி!ராடியா,கனிமொழி உரையாடல்கள் இரண்டு பெண்கள் சாதாரணமாக பேசுக்கொண்ட விசயம்ன்னு கலைஞர் சொல்ற மாதிரியே வைத்துக்கொள்வோம்.ராசா தவறே செய்யவில்லையென்றும் வைத்துக்கொள்வோம்.கூட இருந்தவர்களும் நிரபராதிகள் என்றும் வைத்துக்கொள்வோம்.

அப்ப கைது செய்யப்பட்டவை,பதவி பறிக்கப்பட்டவை போன்றவைகள் போன்றவற்றிற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன?


வவ்வால் said...

பிரகாஷ்,

வாங்க ,என்ன சரக்கு காலியாச்சு போல காமெடிசெய்ய ஆரம்பிச்சுட்டிங்க :-))

2007-08 என சூடுப்பிடிச்சது 2ஜீ அலைக்கற்றைக்கு ஏற்பட்ட டிமாண்டை சொல்கிறேன். அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் விரிவாக்கம்ம் செய்ய விரும்பின. அதனால் விலை உயர்த்த வேண்டும் என்பதை மட்டுமே.

மேலும் ராசா 2007 மே மாதம் தான் பதவிக்கு வந்தார், செப்டம்பரில் அல்லைக்கற்றையை அவசரமாக ஒதுக்கினார் இத்இல் எப்படி 2007 இல் அவர் அனைவருக்கும் அலைப்பேசி பேச வாய்ப்பை உருவாக்கினார் என நான் சொன்ன காலக்கட்டத்தின் கிரெடிட்டை அவருக்கு கொடுக்க முடியும் ?

மேலும் 21 உரிமம் பெற்ற லூப் எத்தனை மாநிலங்களில் அதன் பிறகு சேவையை துவங்கி இருந்தது?

15 உரிமங்களை பெற்ற ஸ்வான் கடைசிவரைக்கும் சேவையை ஆரம்பிக்கவே இல்லை.

நிறைய பேர் ரொம்ப மெதுவாக 2008 இன் பிற்பகுதியில் தான் சேவையை துவங்கினார்கள்.

எனவே ஆ.ராசாவால் அப்போது பெரிய மாற்றமே ஏற்படவில்லை, பெரிய மாற்றம் ஏற்படத்தான் அலைக்கற்றை விற்க அரசு முயன்றது,.அதனை தவறாகப்பயன்ன்படுத்தி லாபம் பார்த்தது தான்ன் மிச்சம் :-))
----------------
//CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions. //

கெய்தான் குருப் ,எஸ்ஸார் குருப் ரவீ ரூயாவின் சகோதரி நிறுவனம், சும்மா குடும்ப உறுப்பினர்களை வச்சு வேற ,வேற பெயர் காட்டினா போதுமா?

மொரிஷியசில் இருந்து முதலீடு செய்தது யாருன்னெ தெரியாத வகையில் இருக்கே ஏன்?

# அலைக்கற்றையை வாங்கிய நிறுவனத்தில் வெளிநாட்டு நிருவனங்கள் முதலீடு செய்கின்றதே அந்த வகையில்.

அதிக விலைக்கு விற்றால் அதிக அன்னிய செலவாணி வரும், அதனை எரிபொருள் வாங்கப்பயன்ப்படுத்தி இருக்கலாம்.

நீங்க தானே சொன்னீங்க மக்களுக்கு பயன்ப்பட அரசு லாபம் பார்க்க கூடாதுன்னு. மனுஷன் பேசி என்ன செய்யப்போறான், பெட்ரோல்,கேஸ் கம்மியான விலைக்கு கிடைச்சா நல்லது தானே.

#சிபிஐ பொம்மை மாதிரின்னு தானே உச்ச நீதிமன்றம் கொட்டி கொட்டி வேலை வாங்குது, ஆளுங்கட்சி இடையூறு செய்யலைனா சி.பி.ஐ விசாரணை வேற மாதிரி இருக்கும்.

இப்போ சி.பி.ஐ இயக்குனர் இப்படிப்பேசக்காரணம் அரசியல் அழுத்தமே.

CAG ஐ எதிர்க்கட்சி மிரட்டுதுன்னு சொல்வீங்க,ஆளுங்கட்சி சிபிஐ ஐ மிரட்டாதா ?

------------------------
//இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க, நானும் இரண்டு முறைக்கேட்டாச்சு , ஒன்றுமே சொல்லவில்லை...

2001 இல் விற்கப்பட்ட விலையை அடிப்படை விலையாக 2008 இல் வைத்துக்கொண்டதாக சொல்லி தானே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது, ஆனால் 2001 இல் அவ்விலை ஏல முறைப்படி எட்டப்பட்ட ஒன்று, ஏலம் விடத்தேவை இல்லை என்பவர்கள், ஏல முறையினால் கண்டறியப்பட்ட அலைக்கற்றை விலையை ஏன் பயன்ப்படுத்த வேண்டும், புதிதாக மதிப்பிட்டு செயல்படலாமே, இல்லை மீண்டும் ஏலம் விட்டிருக்க வேண்டும்.//

பதிலே சொல்லாம எஸ்கேப் ஆவது ஏன்?


மேலும், பிரதமர், ப.சி பற்றி .ஆ.ராசா கோர்ட்டில் ஏன் மனுக்கொடுக்க கூடாதுன்னு கேட்டேன் பதிலே காணோம் ?

வவ்வால் said...

ராச நட,

வாங்க,

விட்ருவோவமா அம்புட்டு சீக்கிரம்... மொத்தமா டவுசரை கிழிச்சுட்டு தானே அனுப்புவேன் :-))

தயாநிதி பேரை அவரே சொல்லட்டும்னு தானே வெயிட்டிங்க், அதுக்கு ஒரு ஆப்பு இருக்கில்ல :-))

பெட்ரோலுக்கு அந்நிய செலவாணி தேவை அதை வேறு வகையில் ஈட்டி பின்னர் வாங்கி மலிவாக கொடுக்கலாமே.

நம் நாட்டு வளத்தை மலிவா விற்றுவிட்டு அயல்நாட்டு வளத்தை அவன் சொல்லும் விலைக்கில்ல வாங்குறோம், அப்புறம் எப்படி சரின்னு சொல்லுறிங்க, பொருளாதார புரிதல் கொஞ்சம் கூட இல்லையே ?

கிரானைட், நிலக்கரி ,அலைக்கற்றை, இயற்கை எரிவாயு இதை எல்லாம் சரியான விலைக்கு விற்றால் அரசுக்கு வருமானம் , அதை வைத்து தான் தட்டுப்பாடான பெட்ரோலை வாங்கனும்னு கூட தெரியலை .

ராஜ நடராஜன் said...

பியூன் 500 ரூவா வாங்கினால் கூட கையும் களவுமா நோட்டோடு,கைரேகையோடு புடிக்கனும்ன்னு இருக்குற தெம்புலதானே இந்தியாவில் தில்லுமுல்லுகள் நிறைய நடக்குது.

காணாமல் போன காசெல்லாம் மொரிஷியஸ்,துபாய் வரை கடல் நீங்க சொல்ற மாதிரி அனுமானத்தில் கடந்து போயிடுச்சுங்கிறாங்க.

ஒருவரின் தனிப்பட்ட வங்கி கணக்கை பொதுவில் வைக்க சொல்ல யாருக்கும் உரிமையில்லை.ஆனால் ஒருவரின் வங்கி கணக்கு பெருத்திருப்பதில் சந்தேகம்,சட்டப்படி குற்றம் எனும்போது அரசுக்கு பார்வையிட உரிமையுள்ளது. திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்த மாதிரி சந்தேகத்துக்குரிய 700 ஸ்விஸ் வங்கி கணக்குகளை வெளியே கொண்டு வரவே காங்கிரஸ் தயங்கும் சூழலில் ஆதாரத்தோடு புடிச்சு பார்ன்னு சவாலே விடலாம்.

பொது வாழ்வின் தவறுகள் ஒவ்வொரு இந்தியர்களையும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பாதிக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கும் என்கிற நிலை இந்தியாவுக்கு வர வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புக்கள் என்ன சொல்கின்றன என பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சிபிஐ மொரிசியஸ் விசயத்தையெல்லாம் தோண்டி எடுத்தாங்க.அப்புறம் ஜோசி மிரட்டுனாரோ ப.சி மிரட்டுனாரோ தெரியல.அப்படியே அமுங்கி போச்சு.

இன்றைய சூழலில் KFC சாப்பிடாம இருன்னு சொன்னாக்கூட பெட்ரோல் ஷேக்குக ஊர்ல சும்மா இருந்துடுவாங்க.ஆனால் மொபைல் போன் இல்லாம இருக்க மாட்டங்க அளவுல மொபைல் போன்கள்.நீங்க சொல்ற மாதிரி நான் ஸ்பெக்டரம் கொடுக்கிறேன்.நீ பெட்ரோல் கொடுன்னு கூட கண்டிசன் போட்டு விற்றிருக்கலாம்.எனவே டிமாண்ட் செய்ய முடியாதபடி காற்றை விட்டு (விற்று)விட்டார்கள்:)

கலைஞர் சஸ்பென்ஸ்,திரில்லர் கதையெல்லாம் சொல்வேனாக்கும் என்றார்.ஆனால் உண்மை என்னன்னா 2G கிடுக்குப்பிடியோடு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிஜேபி எப்படியும் அ.தி.மு.க பக்கம் சாயும்ங்கிற யதார்த்தத்தில் சஸ்பென்ஸ் வைத்தாலும் சிரிப்பொலியே கேட்கிறது.

சஸ்பென்ஸை கண்மணிகளே பெற்று மகிழ்வார்களாக.

Prakash said...

அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளுக்கும் கடைசியாக ப்ரைஸ் டிஸ்கவரி செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விலையை உபயோகப்படுத்தவேண்டும்...அதின்படி ஸ்பெக்ட்ரத்தை அதின் கடைசி டிஸ்கவர்ட் விலையான 2001 விலையை பயன்படுத்தினார்கள்...இதில் என்ன தவறு ???

அதேபோல, ராசா லைசென்செஸ் அளித்த அன்றைக்கு ஒருநாள் முன்வரை, அள்ளிகப்பட்டுவந்த அத்தனை ஸ்பெக்டரம் லைசென்சுகளும் அந்த விலையில் தானே வழகப்பட்டு வந்தன....

முதலில், முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு அளிக்கப்பட்டன என்றீர்கள்..சட்ட நிபந்தனைகளின் படி முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு லைசென்ஸ் கொடுக்ககூடாது என்று எதுவும் இல்லை என்றவுடன், அவை போலி நிறுவனகள் என்றீர்கள், அதுவும் இல்லை, கம்பனி சட்டபடி அவை பதிவு செய்யப்பட்டவை என்றவுடன், லைசென்ஸ்
வாங்கியவுடன் ஒன்றுடன் ஒன்று மெர்ஜ் ஆகி விட்டார்கள் என்றீர்கள், அதுவும் சட்டபடி சரி, டெல்லி ஹைகோர்ட் அதை உறுதிபடுத்தியுள்ளது என்றவுடன், கிராஸ் ஹோல்டிங் இருக்கிறது என்றீர்கள், அப்படியெல்லாம் இல்லை அதை சட்ட அமைச்சகம் மறுத்துள்ளது என்றவுடன், ஷேர்களை விற்று பல மடங்கு பணம் பெற்றுவிட்டார்கள் என்றீர்கள், அதுவும் சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட முறையில் முதலீட்டை உயர்த்திக்கொள்ள செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரம் கொடுக்கப்பட்டு விட்டது. sale of promoter’s equity இல்லை dilution of equityதான் என்று நிதி அமைச்சகம் சொல்லிவிட்டது..

இழப்பு, இழப்பு என்றீர்கள், அதையும் அந்நாள் நிதித்துறை செயலரும் இந்நாள் ரிசர்வ் வங்கி கவர்னர் முதல், இந்த வழக்கை புலானாய்வு செய்யும் சிபிஐ டைரக்டர் வரை, அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்....

வவ்வால் said...

பிரகாஷர்,

//அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளுக்கும் கடைசியாக ப்ரைஸ் டிஸ்கவரி செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விலையை உபயோகப்படுத்தவேண்டும்..//

இப்படித்தான் வந்து மாட்டணும் என இருந்தேன் , மாட்டினிங்க, அப்போ பிரைஸ் டிஸ்கவரி அதாவது 2001 இல் ஏல முறையில் செய்யப்பட்டது ,அதைத்தானே இம்மாம் நேரம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

//அத்தனை ஸ்பெக்டரம் லைசென்சுகளும் அந்த விலையில் தானே வழகப்பட்டு வந்தன.... //

லைசென்ஸ் மட்டுமே, அலைக்கற்றை இல்லை என நீங்களே ஒப்புக்கொண்டீர்கள்!

2001 இல் ஏல முறையில் பிரஸ் டிஸ்கவரி செஞ்சிட்டு, 2008 இல் அதையே அடிப்படையாக வச்சு ஏன் முதலில் வருவோருக்கு என பேச வேண்டும்?

2001 இல் கண்டுப்பிடித்த விலைக்கு ஏன் 2008 இல் விற்க வேண்டும், 2001இல் 4 மில்லியன் மொபைல் பயனாளர்கள், 2008 இல் 300 மில்லியன் , மேலும் 2001 இல் ஏல முறை அப்போ 2008 லும் ஏல முறை தானே இருக்கணும், அப்போ மட்டும் டிராய் சொன்னது என்றால் எப்படி?

அதுவும் டிராய் உரிமம் , அலைக்கற்றை தனி என 2007 இல் சொல்லியாச்சு.

மேலும் ஒருங்கிணைந்த ஏலத்தில்(பான் இந்தியா) மொபைல் ஆபரேட்டர் உரிமம் மற்றும் அலைக்கற்றை தனினு பிரிச்சாச்சு, உரிமத்தினை ஒரு முறை விலையில் விற்கலாம், ஆனால் அலைக்கற்றையை தேவைக்கு ஏற்ப சந்தை விலையில் விற்கலாம் இதான் டிராய் பரிந்துரை , FCFS என்பது அலைக்கற்றைக்கு தான், உரிமத்துக்கு அல்ல.

நீங்கள் ஏன் இரண்டையும் ஒன்றாக ஆக்கி கட் ஆஃப் தேதியை முன்னதாக சுருக்கி, 3.30-4.30 க்குள் வங்கி வரைவோலையை கொண்டு வர்ர வேண்டும் என்ன சொல்ல வேண்டும்?

லைசென்ஸ் தனியாகவும், அலைக்கற்றையை முதலில் வருவோருக்கு தேவைக்கு கிடைக்கும் எனவும் கொடுத்து தொலைய வேண்டியது தானே?

டிராய் சொன்னது இதான் , மொபைல் ஆபரேட்டர் லைசென்ஸ் தனி, அலைக்கற்றை ஒதுக்கீடு தனி , சந்தேகம் இருப்பீன் டிராய் அளித்த அபிடவிட் பார்க்கவும்.

-------------------------------

//இழப்பு, இழப்பு என்றீர்கள், அதையும் அந்நாள் நிதித்துறை செயலரும் இந்நாள் ரிசர்வ் வங்கி கவர்னர் முதல், இந்த வழக்கை புலானாய்வு செய்யும் சிபிஐ டைரக்டர் வரை, அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்....//

இதெல்லாம் பிரதமருக்கு மற்றும் நிதியமைச்சருக்கு தெரிந்து தானே நடந்தது, ஒப்புதல் அளித்தார்கள் என்கிறீர்கள், அப்போ ஆ.ராசா மட்டும் ஏன் சிறையில் போய், வழக்கை சந்திக்கணும், பிரதமரும், நிதி அமைச்சரும் எந்த அளவுக்கு குற்றமற்றவர்களோ அதே அளவுக்கு நானும் குற்றமற்றவன் என்றோ அல்லது எனக்கு எந்த அளவுக்கு குற்றத்தில் தொடர்பு இருக்கு என நீதிமன்றம் கருதுகிறதோ அதே அளவுக்கு அவர்களுக்கும் இருக்கு என ஆ.ராசா கோர்ட்டில் முறையிடலாமே?

ஏன் முடியாதா? நானாக இருந்தால் இப்படித்தான் வழக்கை எடுத்து செல்வேன் :-))

மடியிலை கனமில்லை என்கிறீர்கள் அப்போ ஆ.ராசா மட்டும் ஏன் வீணாக பழியை சுமக்கணும் , எல்லாம் பிரதமர், நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை, சட்டத்துறைக்கு தெரிவிக்கக்கப்பட்டது, அவர்களும் ஒப்புதல் தெரிவிச்சார்கள், இப்போ என்னை மட்டும் குற்றம் சொல்லி ஜெயிலில் போட்டால் எப்படின்னு கேள்விக்கேட்க வேண்டாமா?

அப்படிக்கேட்டால் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் இருக்குமா? எடுக்கலைனா இதனை ஆரிய சதி எனலாம் :-))

அப்போ அப்படி செய்யாமல் தடுக்கும் சக்தி எது? அதையாவது சொல்லித்தொலையும் :-))

இப்போ நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை கூறாமல் மீண்டும் மழுப்பலாக கூறினால் , நீங்கள் சொன்னது எல்லாம் பொய் என இப்பதிவை படித்தவர்கள் அறிவார்கள் :-))

வவ்வால் said...

முக்கியமான ஒன்று கட் ஆஃப் தேஇயை செப்-10க்கு மாற்றியதும் அல்லாமல் மாலை 3.30-4-30 க்குள் வரைவோலை அளிக்க வேண்டும் என அன்று காலை 10 மணிக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

அன்று மாலைக்குள் டெலி டென்சிட்டியை அதிகரித்து விட்டாரா?

21 உரிமம் பெற்ற லூப், மற்றும் 15 உரிமம் பெற்ற சுவான் ,இரண்டுமே பெரிதாக சேவைகளை ஆரம்பிக்கவே இல்லை, அப்போ என்னத்துக்கு அவசரமா தேதியை மாற்றி, வரைவோலை தர நேரத்தினை சுருக்கணும்?

பல் ஆயிரம் கோடி வியாபாரம் எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்தால் விட முடியுமா?

அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் 1500 இடம் தான் இருக்கு 10,000 விண்ணப்பம் வந்தாச்சுன்னு கடைசி தேதியை முன்னரே மாற்றினால் சும்மா விடுவீரா?

விண்ணப்பிக்க கடைசி தேதி தள்ளிப்போகுமே தவிர என்றும் முன்கூட்டி தள்ளி வைக்கப்படாது.

சும்மா கட்சிக்கு விசுவாசி என்றப்பெயரில் அர்த்தமே இல்லாமல் பேசிக்கொண்டிராமல், நான் கேட்டக்கேள்விகளுக்கு சரியான பதில் தரவும்.

குறும்பன் said...

இடுகையை படிச்சுட்டேன், பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமா பின்னூட்டத்தையும் படிச்சுட்டேன் :) பிரகாசு கவலைப்படதயா அடுத்தவதங்க பத்தாயிரம் அல்லது ஆயிரம் கோடின்னு சொன்னாலும் கொஞ்ச காலத்துல எப்படியும் ராசா குற்றமில்லைன்னு சொல்லிடுவாங்க. இராசா குற்றம் உறுதின்னா கனி குற்றம் செஞ்சது உறுதியாயிடும். மஞ்சதுண்டு விட்டுவாரா? அவர் சஸ்பென்ஸ் வைக்கும் போதே புரிஞ்சிருக்குமே?. (ஊருக்கே தெரிஞ்சத சஸ்பன்சுன்னு சொல்ற ஒரே ஆளு மஞ்சதுண்டு தான்).நீங்கெல்லாம் இருக்கறப்ப மஞ்சதுண்டு எது வேணா வைப்பாருப்பா :)) வவ்வால் இன்னும் ஆண்டி படத்தையே போடாமல் புது ஆளுங்க படத்தை போட்டு யூத்துன்னு காமிக்கவேணாமா? :)) கன்னட பைங்கிளி படம் போடாத வரைக்கும் மகிழ்ச்சி :))

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

உங்கப்பேரை அக்குறும்பன்னு மாத்துங்க :-))

இடுகையை படிச்சேன்னு சொன்னதோட நிக்கமா பல நாளா பின்னூட்டம் படிக்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?

நான் இன்னா தொடரு கதியா எயுதுறேன் ,என்னாத்துக்கு இந்த சலிப்பு ?

மஞ்சத்துண்டு நினைப்பார் நமக்கு வாய்த்த அடிமைகள் மகா திறமைசாலிகள் என்ன சொன்னாலும் நம்புறாங்கோன்னு :-))

பிரகாஷர் மேல்மட்டத்தில் யாரோடும் பழக்கம் வச்சிக்கலை போல அவங்க எல்லாம் பக்கா பிசினெஸ் மேன் :-))

கழகத்தில் ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு கூட ஒரு விலை தான் :-))
-----------

என்னாது ஆண்டியா, மலபார் யூத்துங்க, புதுசா வந்தது ஒன்னும் சரி இல்லை ,அதான் மலபாரையே என் ஆஸ்தான நாயகியா வச்சிருக்கேன்

..ஹி...ஹி என் பதிவுக்கு மட்டுந்தேன், நீங்க வேற மாதிரி நினைக்காதிங்கோ :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால் & பிரகாஷ்!

என்னங்கய்யா! சச்சின் டெண்டுல்கர் மாதிரியே 83,93 ல அவுட் ஆகிறீங்க!செஞ்சுரி போட்டு ஸ்பெக்ட்ரம் வானத்தைப் பார்க்க வேண்டாமா:)

வவ்வால் said...

ராச நட,

இனிமே சொல்ல கதை இல்லைனு ரிடயர்ட் ஹர்ட் ஆகி ஓடிப்போயிட்டார் பிரகாஷர், இப்போ வந்து செஞ்சுரி அடிக்கலையானு கேளுங்க :-))

இனிமே புது ஆட்டம், புது இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சா தான் உண்டு!

saravanaperumal said...

இங்கே நடந்த விவாதம்
நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக ஆதாரபூர்வமாக நடந்து இருக்கும்

2G வழக்கில் ஊழல் இழப்பு இல்லை என்று தீர்ப்பு வந்துள்ளது