Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.



இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.



சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.



அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!




புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------

Wednesday, February 27, 2013

பரிணாமம் சாத்தியமே- அறிவியல் சான்று.


(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?)


ஏமக்குறைப்பு நோய் என தமிழில் அழைக்கப்படும் எய்ட்ஸ்(AIDS) நோய் HIV( Human Immunodeficiency Virus) என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

HIV வைரசின் முதல் தொற்று தாக்குதல் மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோ, கேமரூன் பகுதிகளில் இருந்தே துவங்கியது என அறியப்பட்டுள்ளது, சுமார் 1888 இலேயே முதல் தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள், ஆனால் 1927 இல் தான் இப்படி ஒரு நோய் உள்ளது என்றும் ,1980 இல் தான் இந்நோய்க்கு காரணம் HIV, வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள்.

HIV, the Human Immunodeficiency Virus, என்பது மனிதர்களிடம் முதலில் உருவாகவில்லை, ஆப்ரிக்க சிம்பன்சிகளில் ஒரு வகையான Pan troglodytes troglodytes என்ற குரங்கினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்கிறார்கள்.

சிம்பன்சி வகைக்குரங்கிடம் காணப்படும் வைரஸ் SIVs (simian immunodeficiency viruses) எனப்படும், இது மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் உண்டாக்காது, மேலும் அக்குரங்குகளுக்கும் எவ்வித நோயையும் உண்டாக்குவதில்லை, ஆனால் காலப்போக்கில் குரங்குகளின் உடலிலேயே வைரஸ்கள் மியுட்டேஷன் அடைந்து மனிதர்களுக்கும் தொற்றும் வண்ணம் மாறியிருக்க வேண்டும் எனவும், அப்படி மாற்றமடைந்த வைரஸ் தொற்று உள்ள குரங்குகளை வேட்டையாடி ,மாமிசம் உண்டப்போது வேட்டையாடியவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களில் சிம்பன்சிகுரங்கின் இரத்தம் பட்டு மியூட்டேஷன் அடைந்த SIVs (simian immunodeficiency viruses) மனிதர்களுக்கு தொற்றினை உண்டாக்கி இருக்கிறது.

தொற்று உருவாகும் வழிகள் என கீழ்க்கண்ட காரணங்களை சொல்கிறார்கள் ,

# சிம்பன்சி வகைக்குரங்குகளை வேட்டையாடிய பொழுது வேட்டைக்காரர்கள் உடலில் இருந்த காயம் மூலம் உள்நுழைதல்.

# காங்கோ நாட்டில் அக்காலத்தில் வாய் வழி மூலம் கொடுத்த போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது,எனவே போலியோ சொட்டு மருந்து மூலம் பரவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை போலியோ சொட்டு மருந்து தயாரித்த அமெரிக்காவை சேர்ந்த "the Wistar Institute in Philadelphia" நிறுவனம் மறுத்துவிட்டது , macaque monkey kidney cells மூலமே மருந்து தயாரிக்கப்பட்டது ,அவற்றுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என சொல்லிவிட்டார்கள்,ஆனாலும் இக்காரணம் இன்றும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

# காங்கோ பெல்ஜியத்தின் காலனியாகவும் கேமரூன் ஜெர்மனியின்  காலனியாகவும் இருந்தது ,அப்பொழுது அங்கு மலிவாக ரத்தம் சேகரிக்கப்பட்டு ,தேவையான நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது ,இதனாலும் பரவியிருக்கலாம் என்கிறார்கள்.

# விபச்சாரம்,போதை பொருள் எல்லாம் சகஜமாக உலவிய பகுதி என்பதாலும் எளிதில் பரவியது, அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக நிலவியதால் பாலிகேமி எனப்படும் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற நிலையும் நிலவியுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

# அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய பரிசோதனைகள் மூலமே ஹெச்.ஐ.வி வைரஸ் பரவியது என்ற கூற்றும் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள்,கருப்பின மக்களை அழிக்க செய்ததாக அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்களாம்.

மனித உடலில் தொற்று உருவாதல்:

ஹெச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் நுழைந்ததும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தாக்கும் என அறிவோம்,ஆனால் அவற்றால் வெள்ளை அணுக்களில் எளிதில் நுழைய முடியாது அதற்கு ஒரு நுழைவு வாயில் தேவை ,அவ்வாறு செயல்படுவது CCR5 (C-C chemokine receptor type 5)எனப்படும் ரிசெப்டார்கள் ஆகும்,இது ஒரு கிளைகோ புரோட்டின் ஆகும். இதன் பின்னர் ஹெச்.ஐவி வைரஸ் CD4 (cluster of differentiation 4)  என்ற மற்றொரு கிளைக்கோ புரொட்டின் ரிசெப்டாரை தாக்கி இணையும், இதன் மூலமே மனித செல்லின் டிஎன்.ஏ வை ஹெச்.ஐவி வைரஸ் சென்றடையும். மனித செல்லின் டி.என்.ஏவின் பிரதி எடுக்கும் அமைப்பை வைரசின் ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரைப்டேஸ் மூலம் ஆர்.என்.ஏ பிரதி எடுக்கப்பயன்ப்படுத்திக்கொள்ளும், அப்பொழுது தான் பல வைரஸ்கள் பெருக முடியும், ஹெச்.ஐ.வி வைரசால் ஒரு உயிருள்ள செல் இல்லாமல் தனித்து வாழ முடியாது.


CD4 (cluster of differentiation 4) இன் வேலை என்னவெனில்  ஏதேனும் நோய் கிருமி உடலில் நுழைந்துவிட்டால் ,அதனை எச்சரித்து நமது நோய் எதிர்ப்பு அமைப்பினை இயக்குவதாகும். இவ்வாறு CD4 (cluster of differentiation 4) அறிவித்ததும் CD8 என்ற இன்னொரு கிளைகோ புரோட்டின் நோய்க்கிருமியை கொல்ல தேவையான ஆண்டிஜனை உற்பத்தி செய்யும். ஹெச்.ஐ.வி வைரஸ் சிடி4 இனை செயல்பட விடாமல் செய்து விடுவதால் ,நோய் எதிர்ப்பு ஆண்டிஜனை சிடி8 உற்பத்தி செய்யாமல் போய்விடுகிறது ,இதனால் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதனையே எயிட்ஸ் என்கிறோம். எயிட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை செயல்படாமல் செய்யும் ஒரு தொற்று எனவே எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளும் வந்து இறக்க நேரிடும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படாததால் எந்த மருந்தும் வேலை செய்யாமல் போய்விடும்.

(HIV ON HUMAN CELL-ELECTRON MICROSCOP IMAGE)

இயற்கையில் எதிர்ப்பு:

CCR5 (C-C chemokine receptor type 5) டெல்டா-32 என்ற இன்னொரு வகை அல்லீல் ரிசப்டார்கள் சிலருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பிய காக்கேசியன் வகை இனக்குழு மக்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இத்தகைய மாற்று அல்லீல் ரிசெப்டார்கள் உள்ளதாம். அவர்கள் இயல்பிலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

டெல்டா-32 வகை அல்லீல் ரெசப்டார்கள் ஹெச்.ஐ.வி வைரசினை நுழைய அனுமதிப்பதில்லையாம், எனவே வைரசால் மனித செல்லுடன் இணைய முடியாமல் அழிந்து விடுகின்றன.

இத்தகைய நோய் எதிர்ப்பு தன்மை உருவாக காரணம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் மற்றும் தட்டம்மை நோய்கள் பரவலாக பரவியது ,அப்பொழுது அதற்காக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவை CCR5 (C-C chemokine receptor type 5) ரிசப்டாரில் தற்செயலாக ஒரு மியுட்டேஷன் ஏற்படுத்தி டெல்டா-32 என்ற CCR5 (C-C chemokine receptor type 5) ரிசெப்டார்களை உருவாக்கி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

இத்தகைய அல்லில்கள் இருப்பது ஹெச்.ஐவிக்கு முற்றிலும் பாதுகாப்பு எனவும் சொல்லிவிடமுடியாது ஆனால் எளிதில் நோய் தொற்றாமல் செய்கிறது என்கிறார்கள், எச்.ஐவி யால் பாதிக்கப்பட்டு கேன்சர் வந்தவர்களுக்கு டெல்டா-32 அல்லீல் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜையினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை அளித்த பொழுது, ஹெச்.ஐ.வி வைரசின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாம்,எனவே டெல்டா-32 உள்ளவர்களின் ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்தால் ஹெ.எச்.வியை குணமாக்கலாம் என ஒரு ஆய்வு நடக்கிறது.

வைரசின் பரிணாம வளர்ச்சி:

ஆரம்பத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்களை மனித நோய் எதிர்ப்பு சக்தி முறியடித்துள்ளது,ஆனால் தொடர்ந்து சிம்பன்சி வகைகளை வேட்டையாடும் பொழுது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, SIVs (simian immunodeficiency viruses) மேலும் மியூட்டேஷன் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்கும் வைரசாக மாற்றமடைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் ஹெச்.ஐ.வியிலேயே இன்னொரு வகை ஹெச்.ஐ.வி-2 என உருவாகி இருப்பதையும் 1999 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தார்கள். இவ்வைரஸ்  sooty mangabey (the White-collared monkey) என்ற வகை குரங்கின் SIVs (simian immunodeficiency viruses) மூலம் உருவான ஹெச்.ஐ.வி வைரஸ் எனவே இதனை ஹெச்.ஐ.வி-2 என வகைப்படுத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி-1 வைரஸே மிக அதிக தொற்றினை உருவாக்கியுள்ளது, ஹெச்.ஐ.வி-2 மிக குறைந்த அளவிலேயே தொற்றினை உருவாக்கியுள்ளதாகவும், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து புது வகை வைரசினையும் உருவாக்கின்றது எனவும் கண்டுப்பிடித்துள்ளார்கள்,இவ்வாறு செய்வதை viral sex" என்கிறார்கள்.

SURVIVAL OF THE FITTEST:

ஹெச்.ஐவி-1 வைரஸ் ஒரே நாளில் பல பில்லியன் எண்ணிக்கையில் பெருக வல்லவை ,இவ்வாறு பல்கி பெருகும் போது ,ஹெச்.ஐ.வியின் மரபியல் பொருளான ஆர்.என்.ஆ வும் பிரதி எடுக்கப்படும், இவ்வாறு அதி வேகமாக ஆர்.என்.ஏ மறு பதிப்பு  செய்கையில் ஆர்.என்.ஏவில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,இதனால் பல புதிய வகை ஹெச்.ஐ.வி வைரஸ்கள் உருவாகின்றன ,அவற்றில் மனித உடலில் வாழ தகுதியுள்ளவை பிழைத்து ,மீண்டும் புதிய வைரஸ்களை உருவாக்கும்.

இதனை ஹெச்.ஐ.வி வைரசின் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். உலகிலேயே அதி வேகமாக பரிணாம வளர்ச்சி அடையும் வைரசாக ஹெச்.ஐ.வி உள்ளது. இதனாலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு உரிய மருந்தினை கண்டுப்பிடிக்க முடிவதில்லை.

ஒரு வகை மருந்தினை கொடுத்தால் அதனால் பெரும்பாலான வைரஸ்கள் அழிந்தாலும் சில மட்டும் தப்பிப்பிழைக்கின்றன, அவ்வாறு பிழைக்கும் வைரஸ்கள் அம்மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்கின்றன,பின்னர் சில நாட்களில் பல்கி பெருகி நோயை முற்ற வைக்கின்றன.

இது போன்ற  எதிர்ப்பு சக்தியை பூச்சிகளும் உருவாக்கிக்கொள்ள வல்லவை,இதனாலேயே பூச்சி மருந்துகளுக்கு பல பூச்சிகளும் கட்டுப்படாமல் விவசாயத்தில் பெரும் பாதிப்பு உண்டாகிறது, இவ்வாறு எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதும் பரிணாம வளர்ச்சியே.

எனவே ஹெச்.ஐவி தாக்கிய நோயாளிக்கு பலவகையான நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட்டாக கொடுக்க வேண்டும், பின்னர் தொடர்ந்து கண்காணித்து மேலும் சில நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து புதிதாக உருவாகிய வைரஸ்களை கட்டுப்படுத்த வேண்டும்,ஆனால் முற்றிலும் அழிக்க முடியாது.

படம்-1



ஒரு வகை மருந்தில் முதல் வகை வைரஸ் மட்டுமே அழிக்கப்படுகிறது ,தப்பிய மற்ற வகை வைரஸ் அப்படியே உள்ளது.

படம்-2



மேலும் சில வகை மருந்தினை கலந்து கொடுக்கப்படும் பொழுது மற்ற வகையும் அழிகிறது ஆனால் சில தப்பி பிழைத்து உள்ளது.

வகைகள்:

இவ்வாறு தொடர்ந்து மனித உடலில் ஹெச்.ஐவி வைரஸ் பரிணாமம் அடைந்து புதிய வகையினை உருவாக்கி வருவதால், எயிட்சை கட்டுப்படுத்த பரிணாம உயிரியியலாலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வரையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வகைகள்.



ஹெச்.ஐ.வி வைரஸ் ஒரு பொது மூதாதையரிடம் இருந்து உருவாகி பல்கி பெருகியதை விளக்கும் பரிணாம மரம்:



இக்காலத்தில் ஒரு செல் கொண்ட நுண்ணுயிரான வைரஸ் பல பரிணாம மாற்றங்கள் அடைவதை ஹெச்.ஐவி வைரைஸ் மூலம் தெளிவாக பார்த்தோம், அப்படி இருக்கையில் ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் பல உயிர்களாக பல்கி பெருகி இருக்க ஏன் முடியாது?

மேலும் வைரஸ் என்பதே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்கும் ஒரு உயிர் அமைப்பாகும், சாதகமற்ற சூழலில் படிகமாக ஆகிவிடும், அப்பொழுது அது உயிரற்றது போன்றதாகும், மீண்டும் சாதகமான சூழலில் உயிர்ப்பெற்று விடும்,எனவே தான் வைரசினை எளிதில் அழிக்க முடியாது என்கிறார்கள்.

பேக்ட்டீரியா, வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை உயிர் தொழி நுட்ப வல்லுனர்கள் ஆய்வங்களில் நிறுவியுள்ளார்கள்,எனவே உயிர்களிடமும் அத்தகைய பரிணாம வளர்ச்சி சாத்தியமேயாகும் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது, பொது அறிவு இல்லாமல் இன்னமும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))

தொடரும்(வவ்வால் நாடினால்)....
----------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://evolution.berkeley.edu/evolibrary/article/medicine_04

http://www.avert.org/origin-aids-hiv.htm

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)61052-6/fulltext

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
------------------------------

Friday, January 27, 2012

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?





ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?


முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.

பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு  தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.

பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))

இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.

புத்தர்களின் பட்டியல

இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.




ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)



முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?


என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.

கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.

பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.

இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்

வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.

இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.

கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.

இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.

இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.

இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.

கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.

அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))

எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.

மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))

ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.

கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.

கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி

பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.

மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))

ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.

 பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.

1)சார்வாகன் -1

2)சார்வாகன் -2

3)சார்வாகன் -3

மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:

1)) ஆதாம் ,ஏவாள்

2) கெயின் , ஏபெல்

3))சந்ததியினர்



பிற்சேர்கை:-

சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்

ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி

கெயினின் மனைவி