Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Wednesday, December 12, 2012

அஃதே,இஃதே-4: 27-11-2043(12-12-12)



# 12-12-12

 எல்லாருக்கும் 27-11-2043 என்ற அபூர்வ நாளில் அடியேனின் அதி அற்புத வாழ்த்துக்கள்!!!

ஹி...ஹி இன்னிக்கு 12-12-12 தானே என சிண்டை பிச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ,தலைப்பிலேயே நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிந்து இருக்கும்.

ஆங்கில முறையில் கிரிகோரியன் காலண்டர் முறையில் தான் இன்று 12-12-12 என வரும், அதனை நூறாண்டுக்கு ஒரு முறை வரும் அதிசயம் என பலர் அதிசயமே அதிசயத்துப்போகும் வண்ணம் பதிவுலகில் பிரஸ்தாபித்து இருப்பார்கள் :-))

ஆனால் நம்ம தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்றே ஒரு நாட்காட்டி முறை உருவாகி ரொம்ப காலமாச்சு , நிறைய பேரு இன்னும் தமிழ் நாட்காட்டி முறை என்றால் பிரபவ என துவங்கி 60 ஆண்டுகளை கொண்ட விக்ரம சாகா நாட்காட்டியினையே நினைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் அது வடமொழி நாட்காட்டி, அப்படியே சுட்டு இங்கே வைத்துவிட்டார்கள், இந்த 60 ஆண்டுகளும் நாரத பாகவதருக்கும் , ஊதாங்குழல் கிருஷ்ணாவுக்கும் பிறந்த புள்ளைங்களாம் :-))

அது எப்படி ரெண்டு பேரும் ஆம்பிளைங்களாச்சே என வாய எல்லாம் தொறக்கப்படாது, பகவான் எல்லாத்துக்கும் ஒரு இண்டெலிஜென்ஸ் பிளான் வைத்திருப்பார், எனவே நாரத பாகவதரின் ஸ்திரி மோகத்தினை தனிக்க கவர்ச்சி கன்னி அவதாரம் எடுத்துவிட்டார் எல்லாம் வல்ல ஊதாங்குழல் கண்ணன் :-))

எனவே இந்த கண்றாவி வட மொழி ஆண்டுக்கணக்கு வேண்டாம் என கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.

கார்த்திகை என்பது 11 ஆவது மாதம் ,இன்று கார்த்திகை 27 எனவே தான் 27-11-2043 என இந்நாளை குறிப்பிட்டேன் , எனவே 12-12-12 என்று நாள்,மாதம், ஆண்டு வருவது எல்லாம் சிறப்பு என சொல்வதில் எந்த பெருமையும் இல்லை ,ஏன் எனில் ஒவ்வொரு வகை காலண்டரிலும் ஒவ்வொரு நாள் இப்படி வர வாய்ப்புள்ளது, எனவே எல்லா நாளும் சிறந்த நாளே!

ஹி...ஹி ஆனாலும் சும்மா இருக்க முடியுமா , ஒரு பதிவைப்போட்டு கடமையாற்றுவது தானே நம்ம பொழப்பு என இப்பதிவைப்போட்டு இந்நாளை எனது பதிவுலக டைம் லைனிலும் பதிவாக்கிட்டேன் :-))

கடந்தாண்டு 11-11-11 அன்றும் இதே போல சேவை ஆற்றியுள்ளேன் ,அதனைப்படிக்க சுட்டியை தட்டிவிடவும்.

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 11-11-11


#சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார்.



11-12-1882 இல் திருநெல்வேலி சீமையில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார் ,சிறு வயதில் சுந்தரமூர்த்தி என்ற பெயரில் அறியப்பட்டாலும் பின்னாளில் சுப்பிரமணிய பாரதியாராக மாறி  தனது 38 வயதிற்குள் பல புரட்சி மிகு , எழுச்சி கவிதைகளை பாடி தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்று ,செப்டெம்பர் -11,1921 ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்த போது அவர் வயதின் எண்ணிக்கையை விட குறைவாக வெறும் 32 நபர்கள்  மட்டுமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பதில் இருந்து ,நம் மக்களின் தமிழ் ஆதரவு நன்கு புலப்படும்.

நம்ம ஊரில் ஒரு சாமானியன் தமிழ், தமிழன் என்றால் பொழைக்க தெரியாதவன் ,அதே அரசியல்வாதி தமிழ், தமிழன் என்றால் பொழைச்சுப்பான் :-))

பாரதியின் நினைவில் ...இப்பாடலை ரசியுங்கள்!



# super Star:



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் ... கேட்கிறவன் கேணையனாகவே இருக்க வேண்டும், எனவே அவரைப்பற்றி நாம தனியாக சொல்லத்தேவையில்லை, தமிழ் திரைப்படத்தின் வணிக வலிமையை தமிழகம் தாண்டி உலகிற்கு நடைமுறையில் காட்டியவர் நம்ம "ரியல் தல" மட்டுமே!, அவரின் பிறந்த நாள் இன்று தான் என நான் வேற தனியாக சொல்லணுமா?

வாழ்த்துக்கள்!!!

பட்டைய கிளப்பும் இப்பாடலை ரசித்து மகிழுங்கள்!



#மரமும் மாணவர்களும்:



தமிழகத்தில் வனப்பரப்பு தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட 18 சதவீதத்திற்கும் குறைவாக 15 சதவீதம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொன்னாலும், அதெல்லாம் காகித எண்ணிக்கை என நினைக்கிறேன் ,அதைவிட குறைவாகவே வனப்பரப்பு இருக்க வேண்டும்.

மேலும் சாலை ஓரம் இருக்கும் மரங்களை எல்லாம் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் போடுவது என வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.  தானே புயல் வீசிய போது பல லட்சம் மரங்கள் வீழ்ந்து கிடப்பதை நேரடியாக பார்த்தவன், புயலால் கடலூர் மாவட்டத்தில் முன்பிருந்ததை விட மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும் சில ,பல அரசியல் கட்சிகள் மரம் வெட்டிப்போட்டே கட்சியை வளர்க்கிறார்கள்,இது போக சமூக விரோதிகளும் மரங்களை வெட்டிக்கடத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மரங்களே இல்லாத சூழல் உருவாகி, வெப்பம், சுற்று சூழல் மாசு அதிகரித்து, மழை பொழிவு குறையலாம், தற்சமயமே பெரும்பாலும் மழை பொழியாமல் ஏமாற்றிவிடுவதை அனைவரும் உணரலாம்.

அரசு ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அடிக்கடி மரம்நடுவிழா என நடத்தி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதை அடிக்கடி பார்க்கலாம், ஆனால் அப்படி நட்ட மரங்கள்(மரக்கன்று) என்னாச்சு என அதன் பின் யாரும் கவலைப்படுவதில்லை, புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவுக்கு வேர் ஊன்றி இருக்காது, எனவே தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும், ஆனால் மரம் நட்டவர்கள், கைத்தட்டிக்கொண்டு வேற ஊருக்கு மரம் நடும் வேலையை செய்ய போய்விடுவார்கள், நம்ம மக்களும் மரம் வளர்ந்தால் நமக்கும் நல்லது தானே என சுயமாக தண்ணீரும் ஊற்றுவதில்லை,எனவே ஒரே வாரத்தில் மரக்கன்று காய்ந்து விறகாக ஆகிவிடும், அக்கம் பக்கம் மக்கள் அடுப்பெரிக்க பொறுப்பாக புடுங்கிக்கொன்டு போய்விடுவார்கள் :-))

இதான் மரம் நடும் விழாவின் உண்மையான நிலை, இப்படியே செய்துக்கொண்டிருந்தால் , எக்காலத்திலும் தமிழகம் பசுமையாக மாறாது.

இதற்கு ஒரு நல்ல தீர்வாக நான் நினைப்பது என்னவெனில் , பள்ளி மாணவர்களை இதற்கு பயன்ப்படுத்துவதே ஆகும்.

தமிழகத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை-5185

கடந்தாண்டு(2012) இல் 10.87 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்கள், அப்படியானல் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுக்கு இதே எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்கள் இருந்திருக்க வேண்டும்.

எனவே 5- 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை -

10.87*5=54.35 லட்சம் மாணவர்கள்.

ஒரு மாணவன் 5 ஆம் வகுப்பில் சேரும் போதே ஒரு மரக்கன்றை கொடுத்து நட்டு ,பராமரிக்க சொல்ல வேண்டும், ஏதேனும் ஒரு பொது இடத்தில் நட வைக்கலாம், மேலும் தினசரி ஒரு இரண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றினாலே போதும் சுமார் மூன்று மாதத்தில் மரம் நிலைத்துவிடும்.

இதே போல ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும். மாணவர்கள் நட்ட மரம் உண்மையில் இருக்கிறதா என்பதை ஆண்டு இறுதியில் ஆசிரியர் கணக்கெடுக்க வேண்டும், இவ்வாறு ஆண்டுக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக கொடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் ஊக்கத்துடன் மரம் நடுவார்கள்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மரக்கன்று நட்டு பராமரித்தை காட்டினால் 5 மதிப்பெண்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் கொடுக்கலாம், சமூக அறிவியல் பாடத்திற்கு கொடுத்தால் பொறுத்தமாகவும் இருக்கும். எத்தனையோ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சில மதிப்பெண்களில் தோல்வியடைவதுண்டு ,அவர்களுக்கு எல்லாம் போனஸ் மதிப்பெண் ஒரு வர பிரசாதமாக இருக்குமே.

போனஸ் மதிப்பெண்கள் கொடுத்தால் கல்வி தரம் குறையும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும், ஆமாம் 5 மதிப்பெண் குறைவாக எடுக்க வைத்தால் மட்டும் கல்வித்தரம் கூடிவிடுமா? இதனால் யாருக்கு என்ன நட்டம் ,அனைவருக்கும் ஒரே சீராக 5 மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாதகமாகிவிடாது.

ஆண்டுக்கு 50 லட்சம் மாணவர்கள், 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக கொண்டால் பத்து ஆண்டுகளில் 5 கோடி மரங்கள், அவற்றில் 50% பிழைத்து மரமாக நின்றாலும் 2.5 கோடி மரங்கள், உருவாகி தமிழகம் பசுமையாகுமே!

மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு மரம் வீதம் 10 ஆம் வகுப்பு வரும் போது ஐந்து ஆண்டுகளில் ஐந்து மரம் நட்டு, உருவாக்கி இருப்பார்கள், இவை அம்மாணவர்களின் சொத்து , எனவே 10 ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் போது அம்மரங்களை அரசு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிக்கொள்வது போல செய்ய வேண்டும், இதன் மூலம் மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி கல்வி முடிக்கையில் ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது  போல இருக்கும். மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் பசுமை சான்றிதழ் என ஒன்றை அளித்து அவர்களின் சேவையை கவுரவிக்கலாம். இது பின்னாளில் வேலைக்கு செல்லும் பொழுது அம்மாணவரின் சமூக பொறுப்புணர்ச்சிக்கு சான்றாக காட்ட உதவும்.

இது போல ஏதேனும் மாற்று வழியில் மரங்களை நட அரசு சிந்தித்தால் மட்டுமே தமிழகம் பசுமையாக மாறும், வழக்கம் போல அரசு எந்திரம் மூலம் மரம் நடுகிறோம் என செலவு கணக்கு காட்டிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் தமிழகம் பாலைவனமாக தான் மாறும்.

------------------
பின் குறிப்பு:

தகவல் ,மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,விக்கி,யூடியூப்,தமிழ்நாடு அரசு இணைய தளங்கள்,நன்றி!
-----------------------

Friday, September 14, 2012

அஃதே,இஃதே-3



யார் சிந்தனையாளர்கள்?

சென்னையில் நடந்த அன்ன தான விழாவில் ஒருவர் பேசியதாவது, மற்ற ஜாதினருக்கு தானம் அளிப்பதை விட பிராமணர்களுக்கு தானம் அளிப்பது மிகவும் சிறந்தது எனப்பேசினார், அதற்கு விவேகானந்த அய்யா அவர்கள், இக்கருத்தில் நல்லதும் உண்டு ,தீயதும் உண்டு. நாட்டில் உள்ள எல்லா பண்பாடுகளும் பிராமணர்களிடையே நடைமுறையில் உள்ளன,நாட்டின் சிந்தனையாளர்களாகவும் அவர்களே உள்ளனர்,அவர்களை சிந்தனையாளர்களாக ஆக்குகின்ற வாழ்க்கை வழியை அடைத்துவிட்டால் நம்ம் நாடு முழுவதும் பெரும் துன்பத்துக்குள்ளாகும் என சொன்னார்.

விவேகானந்த அய்யாவின் கூற்றினை கட்டுடைத்து பார்த்தால்,

# பிராமணர்களுக்கு மட்டுமே சிந்திக்க தெரியும்??!!

# அவர்களை சிந்தனையாளர்களாக உருவாக்க அவர்களுக்கு நிறைய தானம் செய்ய வேண்டும் .

அல்லது தானம் கொடுத்து சொகுசாக வாழ வைத்தால் சிந்திக்க மாட்டாங்கன்னு சேம் சைட் கோல் அடிக்கிறாரா?

# பிராமண சிந்தனைகள் ஊற்றெடுக்கவில்லை எனில் நாட்டுக்கு பெரிய துன்பம் உண்டாகிடும்.

பிராமண சிந்தனை ஊற்றெடுத்து என்ன நாடு வளமாச்சுன்னு எனக்கு ஒன்னியும் பிரியலை.

ஹி..ஹி எதையவாது படிப்போமேனு தேடினப்போ எப்போவோ வாங்கி சும்மா கிடந்த , விவேகானந்தரின் " கொழும்பு முதல் அல்மோரா வரை" என்ற பயணக்கட்டுரை நூல் கிடைச்சது, கொஞ்சம் பக்கங்கள் மானாவாரியா படிச்சதில் சிக்கினது தான் மேற்கண்டது.

500 பக்கமுள்ள இந்நூல் வெறும் 38 ரூவா தான் அதனாலேயே இந்நூலை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். மலிவான விலையில் விற்க காரணம் இராமகிருஷ்ண மட வெளியீடும், அதற்கு டீ.வி.எஸ் குழுமத்தின் சுந்தரம் நிதிநிறுவனத்தின் பண உதவியும் ஒரு காரணம்.

---------------
"பாசி"ட்டிவ் எனர்ஜி.



ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த உயிர் வேதியல் அறிஞர் " Pierre Calleja" என்பவர் பாசியில் இருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்கு எரிய வைக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

இவ்வகையான பாசியை தண்ணீர் கொண்ட கலத்தில் வைத்து பகலில் வெயில் படும் படி வைத்துவிட்டால் காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் , கதிரவனின் ஆற்றலை ஈர்த்து மின்சாரமாக மாற்றி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமித்து வைத்துவிடும், பின்னர் இரவில் தெருவிளக்கினை ஒளியூட்டலாம். இதன் மூலம் நகரத்தில் வாகன போக்குவரத்தினால் உருவாகும் கரியமில வாயு குறைவதோடு, மின்சாரம் தயாரிக்கும் போது உருவாகும் கரியமில வாயு இன்ன பிற வாயுக்களும் உற்பத்தியாவது குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.


இத்திட்டங்கள் எல்லாம் ஆய்வு நிலையில் வெற்றிகரமாக இயங்குகின்றன, வணிக ரீதியில் விலை குறைவாக தயாரிக்க முடிந்தால் பெருமளவு மின் தேவையை இயற்கையாக பெறலாம் ,மேலும் அபாயமான அணு உலைகள் கட்டுவதும் தேவைப்படாது.

மேலும் பாசிகள் மூலம் பெருமளவில் மின்சாரம் தயாரிக்கவும் உலக அளவில் சோதனைகள் நடந்துக்கொண்டுள்ளன, நம் நாட்டில் வழமை போல நிலக்கரி, அணு உலை என தீரா ஆர்வத்துடன் வேலை நடக்கிறது :-))

தேவையே கண்டுப்பிடிப்பின் தாய்! நம் தேவைகள் புதிய தீங்கில்லா மாற்று எரிசக்திகளை உருவாக்கினால் மட்டுமே எதிர்காலத்திற்கு நல்லது.

------------------------

சந்தையில் புதுசு:மின் வெட்டில் மின்னும் விளக்கு.

மேற்கண்ட படத்தில் உள்ள லெட் விளக்கு ஒரு சீனத்தயாரிப்பாகும், இதில் ஒரு சிறிய ,மின்கலமும்,மின்னேற்றியும் உள்ளது ,வழக்கமான மின் விளக்குகளை பொறுத்துவது போல "தாங்கியில்"(ஹோல்டரில்" ),மாட்டலாம். தானாக மின்னேற்றம் ஆக்கிவிடும், மின்வெட்டு ஆகும் போது சேமித்த மின்சாரம் மூலம் தானாகவே எரியும், சுமார் 3 மணி நேரம் வரையில் ஒளி கொடுக்கும். விலை 150 ரூவிலிருந்து இருக்கிறது,படத்தில் இருப்பது 150 ரூ, அடுத்து 200, 250 என கூடுதல் ஒளிரும் திறனுடன் விளக்குகள் இருக்கிறது.

எப்படி இருக்கிறது சோதனை செய்ய ஒன்றை வாங்கினேன் , நன்றாகவே இருக்கிறது ,இன்னும் இரண்டு வாங்கி மாட்டலாம் எனப்பார்க்கிறேன். தலை கீழ் மின்மாற்றி சேமகலம் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒன்று எனலாம்.

மக்களுக்கு பயனுள்ள பொருட்களை எளிமைப்படுத்தி புதிய வகையில் மலிவாக கொடுப்பதில் சீனர்கள் எப்போதும் முந்திக்கொள்கிறார்கள், நல்ல மூளைக்காரர்கள் தான்!

---------------------

பாட்டொன்று கேட்டேன்!

ஹி... ஹி... மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் பாடல் காணொளி.சூப்பர் ஸ்டாருக்கு நடனம் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் வருவதை வச்சு அழகாக பாடல் காட்சிகளில் நடித்து , நடனமாட தெரியவில்லை என்ற குறையே தெரியாமல் பாடலை ஹிட் ஆக்கிவிடுவார்(அதான்யா நடிப்பு), அப்படியான எப்போதும் பசுமையான ஒரு பாடல் பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து.


-----------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், யூடியூப், டிஜிடெய்லி ,இணைய தளங்கள் ,நன்றி!
************

Saturday, August 18, 2012

சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.




சமீபகாலமாக உலக அளவில் மீண்டும் 3டி படங்கள் அதிகம் வர ஆரம்பித்து இருக்கின்றன, இதெல்லாம் திரையரங்கிற்கு வர தயங்கும் மக்களை வரவழைக்க செய்யப்படும் "கவர்ச்சி தந்திரங்களே" ஆகும். மேலும் பல பழைய 2டி படங்களும் 3டிக்கு மாற்றும் வேலைகளும் நடக்கின்றன,அத்தகைய முயற்சிகள் தமிழிலும் சூப்பர் ஸ்டாரின் "மெஹா ஹிட் படமான "சிவாஜி" மூலம் நடப்பெறுகின்றது. இப்பதிவில் 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றம் செய்வது எப்படி நடக்கிறது எனக்காண்போம்.


இவ்வாறு எடுக்கப்படும் பல 3டி படங்கள் உண்மையில் சொல்லப்போனால் உண்மையான 3டி படங்கள் கிடையாது, பலப்படங்கள் வழக்கம் போல 2டியில் எடுத்துவிட்டு பின்னர் போஸ்ட் புரொடெக்‌ஷனில் கணினி உதவியுடன் 3டி ஆக ரெண்டர் செய்யப்பட்ட படங்களே.

நேரடியாக 3 டி இல் எடுக்கும் போது இரண்டுக்கேமரா உதவியுடன் சற்றே மாறுப்பட்ட தூரத்தில் ஒரே காட்சியை எடுத்து ஒரு டெப்த் உருவாக்கி பின்னர் இணைத்து முப்பரிமாணக்காட்சியாக்குவார்கள். இப்படி அனைத்துகாட்சியும் படமாக்குவது கடினம், செலவும், நேரமும் ஆகும் என்பதால் முக்கியமான காட்சிகளை "உண்மையான ஸ்ட்டீரியோ ஸ்கோப்பில்" படமாக்கி கொண்டு மற்றக்காட்சிகளை போஸ்ட் புரோடக்‌ஷனில் 3டி ஆக மாற்றுவார்கள், இதனை டிஜிட்டல் 3டி என்பார்கள்.

அவதார், டின் டின் போன்ற 3 டியில் எடுக்கப்பட்ட படங்களிலேயே முழுக்க ஸ்டீரியோ ஸ்கோபிக் படப்பிடிப்பு கிடையாது.பெருமளவு டிஜிட்டல் 3டி யில் கன்வெர்ஷன்ன் செய்யப்பட்டதாகும்.

இப்படி செய்ய பல மென்பொருள்கள் இருக்கிறது, மாயா- ஃப்ளேர், அடோப் ஆஃப்டெர் எபெக்ட்ஸ், போன்றவற்றிலும் செய்ய முடியும்.

வழக்கமான படத்தினை 3டி ஆக இரு வகையில் செய்வார்கள், முழுக்க தானியங்கியாக, அதாவது முழுப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்து விட்டால் அதுவே 3டி ஆக மாற்றிவிடும், இதில் முழுத்தரமும் இருக்காது என்பதால், பகுதி மனிதர்கள் எடிட் செய்து தேவையான தரம் கொண்டுவருவார்கள்.

மாயா-ஃப்ளேரில் தேவையான எடிட்டிங் செய்து 2டி இல் இருந்து 3டி ஆக மாற்றும் காணொளி;


ஒரே படத்தின் பல அடுக்குகளை கொண்டு அல்லது டெப்த் ஆப் ஃபீல்ட் உருவாக்கி என 3டியாக மாற்றலாம்.

2டி + டெப்த் பிளஸ் என இதனை சொல்வார்கள், இன்னும் சில முறைகளைக்கொண்டும் வழக்கமான 2டி காட்சியை 3டிக்காட்சியாக மாற்ற முடியும். இப்படித்தான் டைட்டானிக் படம் 3டி ஆக மாற்றப்பட்டது.

இப்பொழது கணினிகளின் வேகமும், மென்ப்பொருளின் திறனும் வெகுவாக முன்னேறிவிட்டதால் வெகு எளிதாக 2டி யில் இருந்து 3டி ஆக மாற்ற முடியும்.

எல்.ஜி லைவ் 3டி சினிமா மேஜிக் எனப்படும் 3டி தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் வழக்கமான அனைத்து தொ.கா நிகழ்ச்சிகளையுமே 3டி யில் உடனே மாற்றிக்காட்டும்., மிக எளிய முறையில் செயல்ப்படும் அமைப்பு என்பதால் கொஞ்சம் பிசிறடிக்கலாம், ஆனால் இத்தொலைக்காட்சியில் 3டி படங்கள் நன்கு தெரியும். விலை 40,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்துஸ்தான் டைம்சில் வந்த எல்ஜி. 3டி தொ.காவின் விமர்சனக்கட்டுரை;


2D to 3D conversion feature:

Let's say you are a Big B fan and your favourite movie is Deewar. Let's also add your favorite dialogue to this "Tumhara pass kaya hai.... mere pass ma hai". Now you can transform this into a 3D experience. LG 3D Cinema Smart TV allows conversion of existing pictures into 3D mode quite easily. The conversion feature is easy. Big B has bashed the baddies it's now time to feel the power of his punch. You can increase the "depth" feature to 20 (maximum) for maximum 3D effect. For the dialogues you could do 3D sound zooming. It's a lot of power in your hands in terms of conversion to 3D.

முழு விவரம் அறிய சொடுக்கவும் சுட்டியை:

3டி யில் படம்பிடிப்பதைக்காட்டும் காணொளி,


-----------
நல்ல கிராபிக்ஸ் கார்ட், நினைவகம், வேகமான சிபியு இருந்தால் யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே 2டி இல் எடுக்கப்பட்ட படத்த்இனை 3டிக்கு மாற்றலாம், அவ்வாறு 2D to 3D Conversion Test Using Xilisoft 3D Video Converter கொண்டு மாற்றியதை ஒருவர் யூடூயூபில் வெளியிட்டுள்ளார், நீங்களும் காணுங்கள்.

வீடியோ டைம் லைனில் 3டி என இருப்பதை அழுத்திவிட்டு , 3டி கண்ணாடி அணிந்து பார்த்தால் 3டியில் தெரியும்.

மேலும் 3டி என இருப்பதில் ஆப்ஷன் பகுதியில் பார்க்கும் முறையை கண்ணாடி இல்லாமல் என மாற்றியும் பாருங்கள், இரண்டு தனித்தனி காட்சிகள் பக்கம்,பக்கமாக காட்டும்.

இதை எல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லை மென்ப்பொருளே கொடுக்கப்பட்ட காட்சியினை இரண்டுக்காட்சிகளாக மாற்றி தேவையான டெப்த்தினை உருவாக்கி 3டி ஆக காட்டும்.



தற்பொழுது தமிழில் மிகப்பெரும் வெற்றிப்பெற்ற சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி" படத்தினை 3டியில் மாற்றுவதாக செய்திகள் வருகின்றது, ஆனால் வழக்கம் போல "ரொம்பக்கஷ்டப்பட்டு" மாற்றுவதாக பில்ட் அப் கொடுக்கிறார்கள், மேலும் அவர்கள் சொல்வது போல பிரேம் ,பிரேம் ஆக கட் செய்தெல்லாம் 3டி ஆக்க மாட்டார்கள், அப்படி செய்ய முதலில் புளு மேட்/கிரீன் மேட்டில் எடுத்தக்காட்சியாக இருக்க வேண்டும். மேலும் அப்படி எல்லாம் செய்யத்தேவையே இல்லாதவாறு கணினி மென்ப்பொருள்களின் அல்காரிதம் அனைத்தினையும் பார்த்துக்கொள்ளும்.



மொத்தப்படத்தினையும் கணினியில் உள்ளீடு செய்துவிட்டு தேவையான இடங்களில் பேராமீட்டர்களை நன்கு கணித்து எந்தக்காட்சி, பொருள் முன்னால் நீள வேண்டும், பேக்ரவுண்ட் எப்படி இருக்க வேண்டும் என சரிப்பார்த்தால் போதும், அல்லது சில அளவீடுகள் கொடுத்து முழுதாக கணினியே மாற்றம் செய்யவும் வைக்கலாம்.

ஒரு தொலைக்காட்சியில் லைவ்வாக மாற்றம் செய்யும் போது கணினியில் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்பது புரிந்திருக்கும், நல்ல தரமாக காட்சி வரவே கொஞ்சம் மெனக்கெட வேண்டும் மற்றப்படி மண்டை உடைக்கும் சமாச்சாரமில்லை 2டி யில் இருந்து 3டிக்கு மாற்றுவது.

இப்பொழுது பல லேப்டாப்புகளும் 3டி வசதியுடன் சந்தையில் கிடைக்கிறது, ஏசர், சோனி வயோ, டெல் என பல பிராண்டுகளும் கொண்டு வந்துவிட்டன.நாம் 2டி அல்லது 3டி எனமாற்றி வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான். 3டியில் எடுக்கப்பட்டவை நல்ல தரமான காட்சியுடனும் 3டி யில் மாற்றியது கொஞ்சம் சுமாராகவும் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
-----------
பின்குறிப்பு;
தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,யூடுயூப்,இந்துஸ்தான் டைம்ச் இணைய தளங்கள். நன்றி!
---------------

Tuesday, July 17, 2012

The DON- A guide to understand gangster films.



ஹாலிவுட்டில் டான்(Don) வகை "mafia gangster"படங்கள் ஏக பிரசித்தம் அதில் மார்லன் பிராண்டோவின் "தி காட் ஃபாதர்"(The godfather) அல்டி மேட் எனலாம், இப்படம் மரியோ பூசோ (mario puzo)எழுதிய "தி காட் ஃபாதர்" என்ற நாவலின் அடிப்படையில், ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் குப்போலா (Francis ford coppola)இயக்கியது.அதே போல குட்ஃபெல்லாஸ்(goodfellas), ஸ்கார்ஃபேஸ்(sacrface,1932 &1983) என பல புகழ்ப்பெற்ற டான் படங்கள் உண்டு.
(1932 முதல் ஸ்கார்ஃபேஸ்)

இந்தியாவில் டான் படங்களை முதலில் அறிமுகப்படுத்தி புகழ்ப்பெற செய்தது இந்தி திரைப்படங்கள் எனலாம், அதில் "அமிதாப் பச்சன் ஶ்ரீவத்ஸ்வா" நடித்து இன்றளவும் "டான்" வகைப்படங்களுக்கு முன்னோடியானது "டான் "என்ற பெயரில் வந்த இந்திப்படம் ஆகும். அக்காலத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன படம், இதனால் அமிதாப்பிற்கு இந்தி திரையுலகின் டான் என்ற பட்டப்பெயரும் உருவானது, இன்று ஷாருக் கான் எல்லாம் வந்துவிட்டாலும் "அமிதாப்பின் டான்" இமேஜ் அப்படியே தான் உள்ளது.
(1983 இல் அல்பாசினோவின் ஸ்கார்ஃபேஸ்)
(உண்மையான மாபியா டான் "ஸ்கார்ஃபேஸ்"அல் கேபோன்)

இந்தி " டான்" திரைப்படம் உருவானதை சுருக்கமாக பார்க்கலாம், நாரிமன் இரானி (Nariman.A.Irani)என்ற ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் "Zindagi Zindagi (1972) என்ற படத்தினை Sunil Dutt நடிப்பில் தயாரித்ததில் 10 லட்சம் கடனாளியாக்கிய சூழலில்,இயக்குநர் மனோஜ் குமாரின் " Roti Kapada Aur Makaan (1974), என்றப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த அமிதாப் பச்சன், ஜீனத் அமன்(jeenat aman), ப்ரன் (pran)மற்றும் அப்படத்தின் உதவி இயக்குநர் சந்திரா பரோட்(chandra barot) ஆகியோர் ,நாரிமன் இரானியின் கடன் சுமையை அறிந்து அவருக்கு உதவ ஒரு படம் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். அதற்கான கதையை சலிம்-ஜாவித் அக்தரிடம் கேட்டுள்ளார்கள், அவர்கள் கொடுத்த கதையில் "டான்" பாத்திரம் இருக்கவே படத்திற்கு டான் எனப்பெயரிட்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் "டான்" மற்றும் அதே போன்ற உருவமுடைய விஜய் என்ற அப்பாவி இளைஞனாகவும் அமிதாப் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த டான் திரைப்படம் 1962 இல் ஷம்மி கபூர் நடிப்பில் வந்த "சைனா டவுன்" என்ற படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். அதில் ஒரே உருவ அமைப்புள்ள அண்ணன் ,தம்பி ஆகவும், ஒருவர் டான்,மற்றவர் அப்பாவி ,பின்னர் ஆள்மாறாட்டம் எனக்கதை. இப்படமே தமிழில் எம்ஜிஆர் நடிப்பில் "குடியிருந்த கோயில்" என ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் என்.டி.ராமா ராவ் நடிப்பில்"பலே தம்முடு" எனவும் ரீமேக் செய்யப்பட்டு , அனைத்து மொழியிலும் சூப்பர் ஹிட் ஆனது.

டான் படம் முடியும் முன்னரே நாரிமன் இரானி வேறு ஒருப்படப்பிடிப்பில் ஒளிப்பதிவு செய்யும் போது விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டார், பின்னர் சந்திரா பரோட் ,அவரது குரு "இயக்குநர் மனோஜ் குமார் "உதவியுடன் "Khaike Paan Banaraswala" என்றப்பாடலையும் எடுத்து படத்தில் சேர்த்து 1978 இல் வெளியிட்டார், ஆனால் முதல் வாரத்தில் சரியாக வசூல் ஆகாமல் தோல்விப்படம் ஆகக்கூடிய சூழலில் "Khaike Paan Banaraswala" பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது, அதனை தொடர்ந்து மக்கள் வாய்மொழி விளம்பரத்தால் நன்கு ஓடி அவ்வாண்டின் மிகப்பெரிய ஹிட் ஆனது.படத்தின் மூலம் கிடைத்த வருவாய் நாரிமன் இரானியின் விதவை மனைவிக்கு கொடுக்கப்பட்டது. இப்படத்தினை முடித்து வெளியிட பல சிரமங்கள் ஏற்பட்டதால் "ஜீனத் அமன்" சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டார். மற்றவர்களும் குறைவான சம்பளத்திலேயே வேலை செய்துள்ளார்கள்.
(அக்கால "கனவுக்கன்னி" ஜீனத் அமன்)


படம் முடிந்தவுடன் பார்த்துவிட்டு படத்தில் "மஜாவா" ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் மனோஜ் குமார் அவரது செலவிலேயே எடுத்து சேர்த்த பாடல் தான் "Khaike Paan Banaraswala" (சூப்பர் ஸ்டாரின் பில்லாவில் வெத்தலைய போட்டேண்டி),அப்பாடலின் வெற்றியே படத்தினை வெற்றியாக்கியது. கடனில் சிக்கிய சக தயாரிப்பாளருக்கு அக்காலத்திலேயே உதவியுள்ளார்கள் இந்தி திரையுலகினர், எதை எல்லாமோ காப்பி அடிக்கும் தமிழ் திரைப்பட "பாக்ஸ் ஆபிஸ் கிங்"கள் இந்த நல்லப்பழக்கத்தினையும் காப்பி அடிக்கலாமே :-))

(கோலிவுட் டான்"சூப்பர் ஸ்டார்)

இந்தி டான் பின்னர் தமிழில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் பில்லா என வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது , அப்புறம் அஜித் நடிப்பில் பில்லா-1 ,2 என வந்து கலெக்‌ஷண் அள்ளியது, இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் டான் 1,2 என வந்து சூப்பர் ஹிட் ஆனது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்திய திரையுலகின் நிரந்தர டான் "அமிதாப்" அவர்களின் டான் படத்தில் இருந்து "மே ஹூன் டான்"(Main hoon Don) பாடலின் காணொளி. இப்பாடலே தமிழில் "மை நேம் இஸ் பில்லா" ஆகியது. இந்தியில் கிஷோர்குமார் பாடியது, (தமிழ். எஸ்.பி.பி)

இது வரையில் திரையுலக "டான்" கதாப்பாத்திரங்களைப்பார்த்தோம், இனி டான், மாபியா போன்ற நிழல் உலக குற்ற சாம்ராஜ்யம் உருவான வரலாற்றைப்பார்ப்போம்.

டான் (don)என்ற சொல் "dominicus" என்ற இலத்தின் சொல்லின் சுருக்கப்பட்ட வடிவம் , அதன் பொருள் லார்ட், மாஸ்டர் என்பதாகும், இலத்தின் புழக்கத்தில் இருந்த இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நிலச்சுவாந்தார்கள், பிரபுக்களை பெயருக்கு முன்னால் "டான்" எனப்போட்டு மரியாதையாக அழைப்பது வழக்கம். அதாவது ஒரு நிலப்பகுதியை ஆள்பவர்கள் எனலாம், "domain" என்பது "dominicus" இல் இருந்தே உருவானது.

ஸ்பெயினில் மிஸ்டர் என ஆங்கிலத்தில் சொல்வதற்கு இணையாக "டான்" என பெயருக்கு முன்னால் சேர்த்து சொல்வார்கள், உதாரணமாக டான் குவிசோட்(Don quixote), டான் ஜுவான் (Don juan)போன்ற கதாப்பாத்திரங்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

டான் என்ற சொல் இங்கிலாந்தில் பிரபுக்களை "லார்ட்"(lord) என்று சொல்வதற்கு ஒப்பான மரியாதை மிக்க சொல் , பெண்களினை உயர்வாக அழைக்க பெயருக்கு முன்னால் "டோனா" (Dona)என்று சேர்த்து அழைப்பார்கள், டானின் பெண்பால் டோனா ஆகும்.லார்டுக்கு பெண்ப்பால் "லேடி" (Lady)ஆகும்,ஆனால் இப்பொழுது பொதுவாக பெண்களை எல்லாம் "லேடி" என்று அழைத்து விடுகிறோம் :-))

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்,ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவருக்கும் பட்டப்பெயர் "டான்" ஆகும். அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் பெயருக்கு முன்னால் "டான்"சேர்த்துக்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.அதே போல அப்பல்கலைக்கழக மாணவர்களும் தங்களை "டான்" என சொல்லிக்கொள்வதுண்டு. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் விடுதி தலைவருக்கு "டான்" என்று பெயர். பெரும்பாலும் மாணவர்கள் மொழியாக அப்போது டான் என்ற சொல் பிரசித்தம் அடைந்து இருந்தது.

ரஷ்யாவில் ஓடும், வோல்கா நதியின் கிளை நதிக்கு பெயரும் டான் ஆகும், அதே போல இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பகுதியிலும் "டான்" என்ற சிறிய நதி ஓடுகிறது.இப்போ அவர்களை ஏன் டான் பெயரால் அழைக்கப்படுகிறார்கள் என்பது புரிந்திருக்கும்.

நிழல் உலகத்தினருக்கு டான், மாபியா என்றெல்லாம் பெயர வைத்து அழைக்க ஆரம்பிக்க காரணமானவை அக்காலப் பத்திரிக்கைகளும், எழுத்தாளர்களுமே, உண்மையில் கேங்க்ஸ்டர்கள் இடையே அப்படியான பழக்கம் அப்போது இல்லை, பின்னர் அவர்களும் பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.

டான் என்ற சொல் புழக்கத்திற்கு வந்த வழிப்பார்த்தோம் , அடுத்து "மாபியா" என்ற சொல் புழக்கத்திற்கு வந்த வழியைப்பார்ப்போம்.

mafia என்ற சொல் " mafioso"(mafiosi or mafiusi or mafiusu) என்ற இலத்தின் சொல்லின் குறுகிய வடிவம் ஆகும், " mafioso" என்றால் வீரமான , அல்லது சண்டைக்கு அஞ்சாதவன் என்று பொருள், சுருக்கமாக சொன்னால் ஒரு குழுவாக வம்பு சண்டைக்கு செல்பவர்கள், யாராவது சண்டைக்கு ஆட்கள் கேட்டால் போவார்கள், கூலிப்படை ,சண்டியர்கள் எனலாம்.

தெற்கு இத்தாலியில் உள்ள மேற்கு சிசிலியில்(sicily) பாலெர்மோ(palermo) என்ற இடத்தினை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தவர்கள், 1842-60 காலக்கட்டங்களில் இத்தாலியில் புரட்சி நடைப்பெற்ற போது , கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து அரசப்படைகளை கொல்வது , அலுவலங்களுக்கு நெருப்பு வைப்பது என்று செய்துவிட்டு கிடைத்த பொருளை சுருட்டிக்கொண்டு செல்வது வழக்கம், மேலும் கலவரம் நடக்கும் இடங்களில் இவர்களும் புகுந்து துப்பாக்கியால் சுட்டு விட்டு கடைகளை கொள்ளையடிப்பது வழக்கம், இதனால் ஆரம்பத்தில் இவர்களையும் புரட்சியாளர்கள் என நினைத்துக்கொண்டது அரசாங்கம், பின்னரே கொள்ளையடிப்பது வேறு ஒரு கும்பல் எனக்கண்டுக்கொண்டார்கள்.

கலவரத்தின் போது கடைகளை சூறையாடும் உள்ளூர் ரவுடிகள் நம்ம ஊரிலும் உண்டு, எம்.ஜி.ஆர்,இந்திராக்காந்தி ஆகியோரின் மறைவின் போது ஏற்பட்ட கலவரத்தின் போது பலக்கடைகள் சூறையாடப்பட்டது நினைவிருக்கலாம்.

இத்தாலியில் புரட்சி முடிந்து புதிய ஆட்சி அமைந்ததும், கொள்ளையடிக்க முடியாமல் போகவே ,அங்குள்ள நிலப்பிரபுக்களின் ஆரஞ்சு, எலுமிச்சை தோட்டங்கள், மற்றும் வயல்களில் திருடுப்போவதை தடுக்கும் காவலர்கள் பொறுப்பினை செய்தார்கள், ஏன் எனில் அங்கு திருடுவதும் " mafioso" வகை மக்களே, எனவே அவர்களை அடக்க மற்றொரு " mafioso" குழுவை வேலைக்கு வைத்தார்கள் நிலப்பிரபுக்கள்.அவ்வாறு பாதுகாப்பு அளிப்பதற்கு அளிக்கும் பணம் பிஸ்ஸோ(pizzo=protection money) எனப்பட்டது.

இம்முறை நம்ம ஊரிலும் அக்காலத்தில் உண்டு "கள்ளர்கள்" திருடுவதை குலத்தொழிலாக செய்வதும் அவர்களிடம் இருந்து பாதுகாக்க மறவர்களை பணிக்கு வைப்பதும் வழக்கம், அரவாண் படத்தில் "கரிகாலன்" பாத்திரம் இப்படியான ஊர்க்காவலன் வேடத்திலும், பசுபதி கள்ளனாகவும் நடித்திருப்பதைக்காணலாம்.

" mafioso" க்கள் தங்களுக்கு வேலைக்கொடுத்து பணம் கொடுக்காத பண்ணைகளில் அவர்களே திருட ஆள் அனுப்பவும் செய்தார்கள், பணம்கொடுக்காத நிலப்பிரபுக்களை மிரட்டவும் செய்தார்கள்." mafioso" தங்களுக்குள் ஆளுக்கு ஒரு பகுதி எனப்பிரித்துக்கொண்டு இதனை ஒரு குடும்பத்தொழிலாக செய்ய ஆரம்பித்தார்கள். 26(100கும் மேல் உண்டு)குடும்பங்களின் கீழ் பல குழுக்களாக பிரிந்து வேலை செய்தார்கள்.

எத்தனை நாளுக்கு தான் பண்ணைகளில் மிரட்டி கப்பம் வசூலிப்பது என மெல்ல நகரப்பகுதிகளில் வணிகர்களையும் மிரட்டி கப்பம்(protection money) கேட்டார்கள், கொடுக்காதவர்களின் கடைகளை சூறையாடுவது வழக்கம்,மேலும் சரக்கு வாகனம் செல்லும் போது நடு வழியில் கொள்ளை அடித்து விடுவார்கள், அதெல்லாம் செய்யாமல் இருக்க "கப்பம்" செலுத்த வேண்டும், 26 குடும்ப குழுக்கள் இருந்ததால் ஒரு குழுவின் பாதுகாப்பு பெற்ற வியாபாரியின் உடைமையை மற்ற குழு கொள்ளை அடிப்பது அடிக்கடி நிகழும்.

" mafioso" க்கள் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்றாலும் தொழில்பக்தி,நேர்மை உடையவர்கள், அவர்களிடம் கப்பம் செலுத்தி பாதுகாப்பு பெற்றவர்களுக்காக உயிரையும் கொடுத்து சண்டைப்போடுவார்கள்,இதனால் அடிக்கடி " mafioso" க்கள் இடையே குழுச்சண்டை ,கொலை எல்லாம் நடக்கும், இப்படியான தொடர் அடிதடி, கொலைகளின் விளைவாக 5 " mafioso" குடும்ப குழுக்கள் மட்டுமே பெரிய குழுவாக வளர்ந்து நின்றது,மற்ற குழுக்கள் எல்லாம் இந்த ஐந்தில் அடங்கிவிட்டது.

இக்காலக்கட்டத்தில் தான் " mafioso" க்கள் ஒரு முறையான நிர்வகிக்கப்படும் குழுவாக மாறினார்கள், ஒவ்வொரு குழுவின் ஆளுகைக்கும் உட்பட்ட பகுதியை டிஸ்ட்ரிக்ட்(district) என பிரித்துக்கொண்டார்கள், அங்கு மட்டுமே கப்பம் வசூலிக்க வேண்டும், அப்பகுதியின் அதிகாரப்பூர்வமற்ற நிலப்பிரபுக்கள் ஆனார்கள், இதனாலேயே "டான்"(don) என மற்றவர்கள் அழைக்கலானார்கள், அப்போதும் கூட அவர்களுக்குள் டான் என்றோ மாபியா என்றோ சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.

" mafioso" என்றப்பெயர் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது 1863 இல் எழுதப்பட்ட " I mafiusi di la Vicaria, " or "The Beautiful People of Vicaria." என்ற நாடகத்தின் மூலமே, இதனை Giuseppe Rizzotto and Gaetano Mosca, என்பவர்கள் எழுதினார்கள். இந்நூலில் பாலெர்ம்மோ சிறையில் சண்டையிட்டுக்கொண்ட இரண்டு குற்ற குழுக்களை விவரித்து " mafioso" க்கள் என சொல்லிருந்தார்கள், அதன் பின்னரே " mafioso" என்பவர்கள் பயங்கரமான குற்றவாளிகள் எனப்பரவ ஆரம்பித்தது, பின்னர் சுருங்கி மாபியா ஆகிவிட்டது.

மாபியாக்கள் என்ன தான் திறமையான வீரர்கள் ஆக இருந்தாலும் எப்படி மக்கள் கட்டுப்பட்டார்கள், அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழலாம், இதற்கெல்லாம் பின்னால் வாட்டிகனும், பிற்காலத்தில் பெரியண்ணன் அமெரிக்காவும் உதவியாக இருந்தது என்பதும் ஒரு காரணம்.

இப்போது ஆரம்பக்காலத்தில் வாட்டிகன் மறைமுகமாக உதவியதைக்காணலாம். " mafioso" க்கள் பற்றி ஒரு அதிகாரப்பூர்வமற்ற வரலாறு உண்டு, அக்காலத்தில் கிருத்துவ மதத்தினை ஏற்காமல், கிருத்துவர்களை கொலை செய்த பழங்குடியின குழுக்களும்(catalan marauders) இருந்தன ,அவர்களிடம் இருந்து கிருத்துவர்களை காக்க போர்ப்பயிற்சி பெற்ற ஒரு ரகசிய குழுவை வாட்டிகன் உருவாக்கி பழங்குடியினரை வேட்டையாட வைத்தது என்கிறார்கள்.அப்படிப்போர்ப்பயிற்சி பெற்ற குழுக்கள் தான் " mafioso" குழு என்பதாகும்.

இதற்கு ஆதாரம் என எதுவும் இல்லை,ஆனால் வாட்டிகன் பல அரசியல், போர் என செய்து தான் கிருத்துவத்தினை நிலை நாட்டியது என்பதனையும் மறுக்க முடியாது. ஃப்ரீ மேசன்(freemason), சிலுவை போர் என எல்லாம் வரலாற்று ரீதியாகவும் ஆதாரங்கள் இருக்கு. தி பிரைஸ்ட் (the priest)என்ற படத்தில் இரத்தக்காட்டேரிகளை வேட்டையாட என ஒரு போராளிக்குழுவை வாட்டிகன் (கிருத்துவ தலைமை பீடம்) உருவாக்கியதாக கதை சொல்லப்பட்டிருக்கும். இவ்விடத்தில் பழங்குடியினரை இரத்தக்காட்டேரிகள் என உருவகப்படுத்தி இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.

மேலும் 1860 இல் புரட்சி முடிந்து இத்தாலியில் சார்டினா கிங் "Victor Emmanuel" தலைமையில் உருவான ஃபாசிஸ்ட் அரசு வாட்டிகனுக்கு எதிராக செயல்பட்டது, வாட்டிகனை தன்னாட்சி பெற்ற அரசாக கருத முடியாது,போப்பும் இத்தாலி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர் என சொன்னது. பின்னர் 1870 இல் வாட்டிகனை(அப்போது அது நகரம் அல்ல,போப்பின் இருப்பிடம் மட்டுமே,மவுன்ட் வாட்டிகன் என மலையும், அவ்விடத்திற்கு பெயர் புனிதக்கடல்(holy sea) எனப்பட்டது, வாட்டிகன் நகர் என 1927 இல் சூட்டப்பட்டது),ரோம் ஆகியவற்றை கைப்பற்றி ரோமை ஒருங்கிணைந்த இத்தாலியின் தலைநகராக Victor Emmanuel அறிவித்துவிட்டு ,போப்புக்கு என சில இடங்களும் ,மாநியமும் மட்டும் அளித்தார்.இதனை law of guarantees என்ற பெயரில் போப் பியுஸ்-9க்கு தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த போப் பியுஸ்-9 (pope "Pius IX "), 1870 இல் ஒரு பிரகடனம் செய்தார்" ரோமன் கத்தோலிக்க கிருத்துவர்கள் யாரும் இத்தாலி அரசின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட தேவையில்லை ,அப்படிக்கட்டுப்படுவது கிருத்துவுக்கும், ஏசு கிருத்துவுக்கும் எதிரானது(anti catholic) , ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவர் போப் மட்டுமே என்று .இதனை பயன்ப்படுத்தி கொண்ட மாபியாக்கள் இத்தாலியின் வணிகர்கள், நிலப்பிரபுக்கள் அனைவரிடமும் இனி உங்களுக்கான நீதி மன்றம்,சட்டம் ,ஒழுங்கு எல்லாம் நாங்கள் தான், உங்கள் பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பு என்று அறிவித்தார்கள்.எந்த பிரச்சினை என்றாலும் மாபியாக்களையே அணுக வேண்டும்,அதுவே கிருத்துவ கொள்கைக்கு உட்பட்டது என பிரச்சாரம் செய்து கொண்டார்கள்.

மக்களும் கிருத்துவத்தின் மீது இருந்த பற்றினாலோ அல்லது அரசின் மீது இருந்த வெறுப்பினாலோ அல்லது மாபியாக்களின் மீது இருந்த பயத்தினாலோ ஏதோ ஒன்றினால் மாபியாக்களுக்கு கட்டுப்பட ஆரம்பித்தார்கள். மாபியாக்களுக்கு மாதம் தவறாமல் கப்பம் கட்டப்பட்டது. மாபியாக்கள் நகரின் சூதாட்ட விடுதி, கள்ளச்சாராயம், போதை மருந்து,வட்டித்தொழில்,விபச்சாரம் என அனைத்து சட்ட விரோத தொழிலையும் கைவசம் எடுத்துக்கொண்டு சாம்ராஜ்யத்தினை விரிவுப்படுத்தினார்கள்.துறைமுகங்களில் சரக்கு ஏற்றுவது இறக்குவது முதல் அனைத்தும் மாபியாக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இதில் மேலும் இன்னொரு காரணமும் இருந்தது அப்போது வ்ட்டித்தொழில்,வங்கி இவற்றை முழுக்க ஆக்ரமித்து இருந்தது யூதர்களே, அவர்கள் இத்தாலிய அரசுக்கு பண உதவி எல்லாம் செய்து வந்தார்கள்,அவர்களது நிதி நிறுவனங்களை முடக்கி " mafioso" க்களின் நிதி நிறுவனம் வளர ஆரம்பித்தது, எனவே யூதர்களின் வியாபாரம் முடங்குவதை வரவேற்று ரோமன் கத்தோலிக்கர்கள் மாபியாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.ஆனால் பின்னாளில் மாபியாக்களிடம் கடன் வாங்கினால் மரணம் என்ற அளவுக்கு மாபியாக்கள் கடுமையாக நடந்துக்கொண்டது தனிக்கதை.

மாபியாக்கள் நன்கு வளர்ந்து வலுவான நிலையில் இணையான நிழல் உலக அரசாங்கம் நடத்தும் நிலையை அடைந்து விட்டதால் தங்களை நிர்வாக ரீதியாக வடிவமைத்துக்கொண்டு , சட்ட திட்டங்கள் எல்லாம் உருவாக்கிக்கொண்டார்கள்.

நிர்வாக அமைப்பு,சட்ட திட்டங்கள் , பிற்கால மாபியாக்களின் வளர்ச்சி, அதில் பெரியண்ணன் அமெரிக்காவின் பங்கினை அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

---------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள்,

விக்கி,கூகிள்,நியு என்சைக்கிளோபீடியா,நியு அட்வென்ட்,யூடியூப் இணைய தளங்கள் நன்றி!
*******

Saturday, March 03, 2012

கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?


கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென தனியே ஒரு அடையாளம் மட்டுமல்ல பெரும் வணிக மதிப்பும் உண்டு ,மற்ற நடிகர்களின் படம் ஓடினால் அமோக வசூல் வீழ்ந்தால் அடியோடு நாசம் என இருக்கும் போது சூப்பர் ஸ்டாரின் சுமாரான அல்லது ஓடாத படங்களின் வசூல் கூட அதே சமயத்தில் வெற்றியடந்ததாக சொல்லப்படும் படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக  பாபா படம் சரியாக ஓடவில்லை ,தோல்வி என்றார்கள் ஆனால் அதே காலக்கட்டத்தில் வந்து வெற்றி என்று சொன்னப்படங்களின் வசூலை விட பாபா வசூல் மிக அதிகம் என்பதே உண்மை.

லோக நாயகன் என்று சொல்லிக்கொள்பவரின் படமெல்லாம் ஓடினால் போட்டக்காசு தான் கிடைக்கும் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளரின் கோவணமும் உருவப்படும் என்பதான வியாபார வல்லமைக்கொண்ட படங்கள்.அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ஹிட் ஆனால் அதன் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைவருக்கும் அமோக வசூல் மட்டுமல்லாமல் அடுத்து அவர்கள் யாருடைய படத்திலாவது நஷ்டமடைந்தாலும் தாங்க கூடிய அளவு செழிப்படைவார்கள்.அதே சமயத்தில் சுமாராகவோ, அல்லது தோல்வி(வெகு சிலவே) என சொல்லப்படும் படங்களின் வசூல் கூட மிகப்பெரியதாகவே இருக்கும், எனவே நஷ்டம் என்பது எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது அல்லது வட்டியின் விகிதத்தை பொறுத்தே நட்டம் ஆனதாக சொல்ல முடியுமே தவிர போட்ட முதலில் எல்லாம் போய்விடாது முழுதுமோ அல்லது  ஒரு ஆரோக்கியமான தொகையோ மீள கிடைத்துவிடும்.

இதனாலேயே தயாரிப்பாளார்,விநியோகஸ்தரின் ஆபத்பாந்தவனாக சூப்பர் ஸ்டார் இன்றும் திகழ்கிறார்.

இத்தனைக்காலமும் சூப்பர் ஸ்டாரின் வணிக பெருமதிப்பை அனைவரும் நன்றாகவே பயன்ப்படுத்திக்கொண்டார்கள், புதிதாக திரை துறைக்குள் நுழைந்துள்ள  அவரின் வாரிசும் இதை எல்லாம் அவதனித்து அவரின் ஸ்டார் வேல்யுவை பயன்ப்படுத்தி பலன் அடைந்தால்  என்ன என நினைக்க துவங்கிவிட்டார்கள் ,அதில் தவறில்லை ஆனால் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லையே, அவரின் உடல் நிலை நன்றாக இருந்த போதே சிவாஜி படக்காலத்திலேயே  சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்ன புண்ணியம்  அப்படம்  டிரைலருக்கு மேல போகவில்லை. எதாவது தெரிஞ்சா தானே பயன்படுத்தி அனிமேஷன் படமாக எடுக்க :-))

சுல்தான் தி வாரியர்  எடுக்க முடியாமல் ஏன் வாரியது , அனிமேஷன் படங்களின் முதல் தலைமுறை காலமல்ல இப்போது இருப்பது, எல்லா வசதியும் இருக்கு எடுக்க தெரியாமல் சொதப்பியதால் நேரமும், பணம் மட்டுமே விரயம் ஆனதால்  மீண்டும் சூப்பர் ஸ்டார் வேல்யுவை பணமாக்க ராணாவுக்கு பூஜைப்போட்டார்கள் ஆனால் அவரவர் மனம் போல நடக்கும் என்பதாக எதிர்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்ல நேரிட்டது. இப்போது தான் மீண்டு வந்துள்ளார் ஆனால் உடனே மீண்டும் ஒரு படம் சூப்பர் ஸ்டாரை வைத்து என்று துவங்கிவிட்டார் வாரிசு , அவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அனிமேஷன் படமே எப்படி எனத்தெரியாமல் சொதப்பியவர்கள் இப்போது "பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்" என்ற புதிய நுட்பத்தை வைத்து படம் எடுக்க போகிறேன் என குதித்து இருக்கிறார்கள்,( அதனாலே இப்பதிவும் நான் போட வேண்டியதாகிவிட்டது)

இப்போது அனைவருக்கும் நியாயமாக சில கேள்விகள் எழுகின்றன,

# சிவாஜி -தி பாஸ் படக்காலத்தில் துவக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் -3டி அனிமேஷன் படம் ஏன் முடிக்கப்படவே இல்லை.

# சிவாஜிக்கு பிறகு சில காலம் சும்மா இருந்தார் , பின் எந்திரன் துவங்கி பின்னர் தடைப்பட்டு ஓய்வில் இருந்தார் அப்போது கூட சுல்தான் முடிக்கப்படவே இல்லை, ஏன்?

#பின்னர் அவசரமாக ராணா படம் துவக்கப்பட்டு பூஜை அன்றே உடல் நலன் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் இப்போது தான் , புணர்ஜென்மம் அடைந்து சூப்பர் ஸ்டார் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படமாக கோச்சடையானை அறிவித்துள்ளார்கள் கூடவே வந்துள்ள இந்தியாவின் முதல் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர் படம் என்ற அறிவிப்பு தான் ஒரு சந்தேகத்தை தூவியுள்ளது.

அது என்னவெனில் உண்மையில் கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்பதே?

ஏன் எனில் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர்  தொழில் நுட்பம் அப்படியானது, அது ஒன்றும் மிக புதிதான நுட்பம் இல்லை ஏற்கனவே இருந்த மோஷன் கேப்சரிங் நுட்பத்தின் நுணுக்கமான அடுத்த கட்டமே ஆகும்.

மோஷன் கேப்சரிங்க்:

ஒரு நடிகரின் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் சென்சார்கள் பொருத்தி அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக அகச்சிவப்பு கேமிராவில் பதிவு செய்து , அந்த அசைவுகளை கணினி வரைகலை உருவத்துக்கு கொடுத்து செயல்பட வைப்பது. இதற்கென தனி அகச்சிவப்பு கேமராக்கள் , கணினி , மென்பொருள் எல்லாம் பயன்ப்படுத்துவார்கள், ஆனால் இதில் பெறப்படும் சித்தரிப்பு அத்தனை தத்ரூபமாக இருப்பதில்லை. அசைவுகள் செயற்கையாக இருக்கும்,எனவே தனியாக அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்துவார்கள்.

இந்த குறைப்பாட்டை நீக்க வந்தது தான் பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங்க், இது ஒன்றும் அச்சு அசலாக ஒருவரின் நடிப்பை பிரதிபலித்து படமாக்கவில்லை. மேம்பட்ட சென்சார்கள்  கூடுதலான எண்ணிக்கையில் , எளிதாக ,நேர்த்தியாக அசைவுகளை கணினிக்கு மாற்ற ஒரு உடையோடு கூடிய சென்சார் என ஒரு முன்னேற்றம் அவ்வளவே.இம்முறையில் முன்பை விட சிறப்பாக காட்சியமைப்பு வரக்காரணம் புதிய மென்பொருளும் ஹை டெபனிஷன் கேமிராவுமே.

பெர்பார்மென்ஸ் கேப்சர் செய்யப்பயன்படும் லைக்ரா உடை.


பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் வந்த முதல் படம் அவதார் என்று சொல்லிக்கொண்டாலும் அதுவல்ல முதல் முயற்சி மேட்ரிக்ஸ் படமே ,அதே சமயத்தில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இல் முற்றிலும் கணினி வரைகலைப்பயன்ப்படுத்தி செய்தார்கள் கோலும் என்ற கதாபாத்திரத்தை. பின்னர் கிங்காங்க், போலார் எக்ஸ்பிரஸ், ஸ்பைடர் மேன் -2 வில் எல்லாம் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையான பெர்ஃபார்மென்ச் கேப்சரிங் செய்யும் கருவி எதுவெனில் வழக்கமான திரைப்பட கேமிரா தான், அது தானே நடிகர்களின் பெர்ஃபார்மன்சை நேரடியாக பதிவு செய்கிறது!

 அவதார் படத்தில் அசைவுகளை இணைக்கும் காட்சி:

இம்முறையில் முழுக்க கணினி வரைகலை உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை ஒத்த உருவத்தினை கணியில் உருவாக்கியோ உயிர்க்கொடுக்க முடியும்.மேலும் காட்சியில் இருக்கும் சூழலை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், வெளிப்புற படபிடிப்பு , இன்ன பிற அரங்க படப்பிடிப்பு எல்லாம் தனியாக பிடித்துக்கொண்டு அதில் கதாப்பாத்திரங்களை புகுத்திக்கொள்வார்கள்.எனவே ஸ்டூடியோவை விட்டு நடிகர்கள் போகாமலே மொத்த படமும் எடுக்க முடியும்.

உடல் அசைவுகளை தெளிவாக காட்ட உடலோடு ஒட்டிய லைக்ரா மோஷன் கேப்சர் உடைப்பயன்படுத்துவார்கள் ,அதில் சென்சார்கள் பதிக்கப்பட்டிருக்கும். முக அசைவுகளை படம் பிடிக்க ஒளிப்பிரதிப்பளிக்கும் வண்ணத்தினை கொண்டு முகத்தில் தேவையான இடங்களில் மார்க் செய்வார்கள். முன்னர் ஒளி உமிழும் எல் ஈ.டி பயன்ப்படுத்தியதால் அதிக மார்க்கர்களை உருவாக்க முடியவில்லை.

பின்னர் அகச்சிவப்பு கேமிராவில் படம் பிடித்து கணினிக்கு அனுப்பிவிட்டால் , தேவையான உருவத்துடன் இணைத்து ஒருங்கிணந்த அசைவுகளை கொடுத்துவிடும்.

ஸ்பைடர் மேன் -2 ல் முதுகில் எந்திரக்கரங்களுடன்ன் ஒரு விஞ்ஞானி பாத்திரம் டாக்டர் ஆக்டோபஸ் என வரும் ,சில குளோஸ் அப் காட்சிகள் தவிர மற்றதெல்லாம் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்கில் எடுக்கப்பட்ட 3டி மாடல் தான் அப்பாத்திரம்.

முகத்தினை மறைக்காமல் நிஜ நடிகரின் முகத்தினை, பாவனைகளையும் 3டி மாடலுக்கு கொண்டு வந்திருப்பார்கள்.


தத்ரூபமாக முகத்தினைக்காட்ட அரைவட்ட வடிவில் விளக்குகள் பொருத்தி (லைட் ஸ்டேஜ்) அதன் நடுவே நடிகரை உட்கார வைப்பார்கள் பின்னர் அனைத்து கோணங்களிலும் சுழன்று ஹை டெபனிஷன் கேமிராவில் 8 நிமிடத்தில் 2000 படங்கள் எடுக்கப்படும் அதனை கணினியில் உருவாக்கிய 3டி மாடலின் உருவத்தில் முகம் இருக்கும் இடத்தில் பொருத்திவிடுவார்கள். இப்போது 3டி உருவத்தினை எந்தக்கோணத்தில் திருப்பினாலும் அதற்கேற்ப முகம் தெரியும். இதெல்லாம் மென்ப்பொருளே கவனித்துக்கொள்ளும்.ஸ்பைடர் மேன் படத்தில் முகமூடியுடன் வரும் ஸ்பைடர் மேன் எல்லாமே 3டி மாடலே.முகம் தெரியாத நிலை என்பதால் இன்னும் எளிதான வேலை.

முகத்தினை தத்ரூபமாக படம் பிடித்தார் போல முழு உடலையும் கூட செய்ய முடியும், ஆனால் அதை கணினி வரைகலையில் செய்துக்கொள்வார்கள் ஏன் எனில் உண்மையில் குள்ளமாக,ஒல்லியான உருவம் உள்ள நடிகரை உயரமாக ,சிக்ஸ் பேக்குடன் என எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளவே.



இந்த முறையிலே மேட்ரிக்ஸ் படத்தில் வரும் வில்லன் ஏஜன்ட் ஸ்மித் ஒரே நேரத்தில் 100 பிரதிகளாக வரும் காட்சியில் 100 வெவ்வேறு ஆட்கள் தான் நடித்திருந்தார்கள், பின்னர் முகத்தினை மட்டும் இப்படி பிடித்து பொறுத்திவிட்டார்கள்,அப்போது இதற்கு யுனிவர்சல் கேப்சர் என்று பெயர்.அப்போது 5 கேமிராவைக்கொண்டே அனைத்து கோணத்திலும் தெரிவது போன்று முகபாவங்களை படம்ப்பிடித்துக்கொண்டார்கள்.சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து சண்டைப்போட்டதெல்லாம் 3டி மாடல்களே.


ஆண்டி செர்கிஸ்

முழுக்க கணினியில் உருவாக்கிய உருவமான கோலும்( Gollum ), பின்னர் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் படத்தில் கொரில்லாவிற்கு எல்லாம் உடல்,முக அசைவுகளை பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் ஆண்டி செர்கிஸ் என்பவரே கொடுத்தார்.இதற்காக உடல் அசைவுகளை 52 கேமிராவிலும்,   முக அசைவுகளை 20 கேமிராவிலும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிவாக்கியுள்ளார்கள்,இதனாலே அந்த 3டி கணினி வரைகலை கொரில்லா தத்ரூபமாக காட்சியளித்தது.மேலும் நுணுக்கமாக முக அசைவுகளை படம் பிடிக்க தலையில் கேமராவுடன் இணைந்த கவசம் அணிந்துக்கொள்வார்கள்.




போலார் எக்ஸ்பிரஸ் படத்தில் டாம் ஹேங்ஸ் 4 கதாபாத்திரங்களை அவரே இத்தொழிட்பத்தின் மூலம் நடித்திருப்பார்.

டாம் ஹேங்ஸ் அசைவுகள் 3டி உருவத்திற்கு கொடுப்பதை விளக்கும் படம்

கியுரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் வயதாக ஆக குழந்தையாவது போன்ற பாத்திரத்தில் பிராட் பிட் இந்தொழில்நுட்பத்தின் படி பல உருவங்களுக்கு முக பாவனை மட்டுமே கொடுத்து நடித்திருப்பார்.ஹி..ஹி இந்த படத்தின் உல்டா தான் அமிதாப் நடித்த ஃபா!


அவதார்,டின்டின் போன்ற படங்களின் காலத்தில் கணினியின் திறனும், மென்பொருளும் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதால் சிறப்பாக எடுக்க முடிந்தது.மேலும் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்த நடிப்பை உடனுக்குடன் சூழலுடன் பொருத்தியும் பார்க்கும் வசதியுள்ள வேகமான கணிப்பொறி,மென்பொருளும் பயன்ப்படுத்தப்பட்டது.

அவதார் படப்பிடிப்பில்.

இது போன்று உருவம் மட்டும் கிடைத்து விட்டால் அதற்கான நடிப்பை இயல்பாக அடுத்தவர்களை வைத்துக்கொடுக்க முடியும் என்பதால் இறந்த நடிகர்களையும் நடிக்க வைக்கலாம் , ஆனால் கொஞ்சம் கவனமாக ,செய்ய வேண்டும் ஏன் எனில் அனைத்துக்கோணங்களிலும் முகத்தின் படம் கிடைக்காது என்பதால் ஏதோ ஒரு கோணத்திலேயே காட்ட வேண்டியது இருக்கும்.

மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.

இப்போது பதிவின் தலைப்பின் பொருள் புரிந்திருக்குமே, கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரே அவரது உருவத்துக்கு நடிப்புக்கொடுக்க போகிறாரா அல்லது அவரைப்போலவே இமிடேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த மிமிக்ரி நடிகரை வைத்து பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் செய்வார்களா என்பதே எனது கேள்வி. குரலை மட்டும் டப்பிங்கில் கொடுத்து விட்டால் போதும் கண்டுப்பிடிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விரைவாக கோச்சடையானை துவக்கியதே இப்படியெல்லாம் கேள்விகளை உருவாக்குகிறது.ஏற்கனவே சுல்தான் அனிமேஷன் படமே இது போல ரஜினியின் முகம்,உருவத்தினை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மோஷன் கேப்சரிங்கை வேறு ஒருவர் மூலம் செய்து படமாக்க திட்டமிடப்பட்டது, இப்போது அதே வேலை பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்ற பெயரில் கோச்சடையானிலும் நடக்கலாம்,பழைய கள் புதிய மொந்தை :-))

சுல்தான் அனிமேஷன்  படத்திற்காக எடுக்கப்பட்ட முகம், உடல் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதிகளை பயன்ப்படுத்திக்கொண்டாலே போதும் மீண்டும் புதிதாக 3டி உருவத்தினை உருவாக்க கூடத்தேவை இல்லை. இம்முறை சொதப்பாமல் படத்தினை முடிக்க வேண்டுமென்பதால் தான் இம்முறை அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ரவிகுமாரை ,ஸ்டூடியோவில் நன்றாக வேலை செய்யவும் , திரைக்கதையை கவனித்து வேலையை முடிக்கவும் கோச்சடையானில் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


--------

பின்குறிப்பு:

படங்கள் உதவி: கூகிள் படங்கள்,IMDB,AWN தளங்கள், நன்றி!