Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Thursday, September 06, 2012

என்ன கொடுமை சார் இது-8

(ஹி...ஹி வளைவுகள் ஜாக்கிரதை)


பதிவரசியல்.

தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நடைப்பெற்றதை பெரும்பாலோர் அறிவார்கள்.

எந்த ஒரு நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவது என்பது சிரமமான ஒன்றே என்றளவில் நடத்திய மற்றும் பங்குப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்நிகழ்வை ஒட்டி சிலப்பதிவர்களுக்கு தெரியவில்லை, அல்லது அழைக்கவில்லை என ஒரு பேச்சு ஓடியது,

இதனை ஒட்டி ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை ,அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்பினை பதிவில் பார்த்துவிட்டு மட்டுமே வந்தார்கள் என விளக்கம் அளித்தார், யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க தேவையில்லை எனவே இவ்விளக்கம் ஏற்கக்கூடியதே, ஆனால் அவர் விளக்கம் சொல்லிய சில நாட்களுக்கு பிறகு வந்த பதிவுகளில் பார்த்தால் இன்னாரை நான் போன் செய்து அழைத்தேன் என ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பதிவு போடுகிறார், இன்னொரு "முக்கிய" பதிவரோ இன்னின்னார் என்னை தொலைப்பேசியில் அழைத்து கலந்து கொள்ள சொன்னார்கள் எனப்பதிவிடுகிறார்.

அழைக்கவில்லை என சொன்னவர்களையும் அனைவரும் அறிவர், அழைப்பு விடுவிக்கப்பட்ட சிலரையும் அறிவார்கள், ஆரம்பத்தில் யாரையும் அழைக்கவில்லை என சொல்லிவிட்டு உடனே அழைப்புவிடுவிக்கப்பட்டதாகவும் முன்னுக்கு பின்னாக பதிவுகள் வருவது சரியாகப்படவில்லை, பாகுபாடற்ற அணுகுமுறையில்லையோ என்றே நினைக்க வைக்கிறது.

மேலும் அனைத்துப்பதிவுகளிலும் சென்னையில் தமிழ்ப்பதிவர்களின் முதல் சந்திப்பு என மறக்காமல் அழுத்தம் கொடுப்பதும் ஏதோ ஒன்றினை குறியீடாக சொல்கிறதா?

என்ன நடந்தால் உனக்கென்ன ..நீ என்ன கலந்துக்கொண்டாயா எனக்கேட்பாங்க எனவே வாயை மூடி சும்மா இருடா வவ்வாலு :-))

என்ன கொடுமை சார் இது!

---------------
வாய மூடி சும்மா இருடா!

சமீபத்தில் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என பெருமையாக சொல்லிக்கொண்டு வந்த திரைப்படம் "முகமூடி'ஆனால் ஏனோ அனைவரும் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்(முகமூடி என்ற பெயர் பிடிக்கலையோ), படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை பதிவர்களின் விமர்சனம் வைத்து கணிக்கவே முடியாதப்படியான அளவு கோல்களின் அடிப்படையில் படத்தினை பதிவர்கள் விமர்சிக்கிறார்கள் .நாயகியாக எப்படி இவரைப்போடலாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் பெண்ணுக்குரிய "அம்சங்களே' இல்லை என சாமுத்திரிகா லட்சண குரு போல சொல்கிறார் ஒரு பதிவர் ,

இன்னொருவரோ ஏன் நாயகி வீட்டில் புத்தர் சிலையைக்காட்டுறாங்க என்கிறார், ஒரு வேளை பிள்ளையார் பொம்மையை காட்டினால் பாராட்டியிருப்பாரோ என்னமோ. படத்தில் மேலும் பலக்குறியீடுகளை இயக்க்குனர் திணித்து தனது உலக திரைப்பட அறிவைக்காட்டியிருப்பதாக ஒரு மாபெரும் வதந்தி பதிவர்களால் கிளப்பிவிடப்பட்டுள்ளதால், அக்குறியீடுகளை கட்டுடைத்து ஒரு விமர்சனமும் எழுதி மக்களை சோதிக்கலாம் என அடிமனதில் ஒரு அல்ப ஆசை ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்கிற்கு படம் பார்க்க போய் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இம்முறை திரையரங்க நுழைவு நிச்சயம் ,ஆனால் பன்னரங்கு காட்சியகம் செல்லாமல் ஏதேனும் ஒற்றைத்திரையரங்கு செல்வேன், பெரும் அரங்குகள் என்னைப்போல ஏழைகளுக்கு உகந்தது அல்ல!

இப்போதைக்கு முகமூடியின் இப்பாடல் எனக்கு தத்துவார்த்த ரீதியான ஒருப்பாடலாக படுகிறது ...


எனவே படம் எப்படியிருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன் , என்னைப்படம் பார்க்க தூண்டிய ஒரே விடயம் படத்தின் பெயர் "முகமூடி" :-))

என்ன கொடுமை சார் இது!

----------
அரசியல் விளையாட்டு.

சென்னை நேரு கால் பந்தாட்ட மைதானத்தில் பயிற்சிக்கு வந்திருந்த இலங்கைக்கால்பந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டு ,நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் அனுமதி அளித்த அரசு உயர் அலுவலரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணம் இலங்கை தமிழர் பிரச்சினை நிலவும் நிலையில் இலங்கை வீரர்கள் எப்படி தமிழ் மண்ணில் பயிற்சி செய்யலாம் என்பதாகும்.

அம்மையாரின் அதிரடி கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள நகைச்சுவை என்னவெனில் இது போல மட்டைப்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியிருக்க முடியுமா என்பதே , ஆண்டு தோறும் இலங்கை அணி இந்தியாவில் போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறது, சென்னையிலும் போட்டிகளில் ஆடியுள்ளார்கள், மேலும் இலங்கை வீரர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இருக்கிறார்கள்.

மேலும் பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு பயிற்சி மையத்தில் டென்னிஸ் லில்லி தலைமையில் இலங்கை பந்து வீச்சாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர், சமிந்தா வாஸ், லசித் மலிங்கா உட்பட பலர் எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தின் தயாரிப்பே.

மட்டைப்பந்தாட்ட அணியை ஆடவிட்டு வேடிக்கைப்பார்க்கும் அரசியல்வாதிகள் கால்பந்தாட்ட அணியை மட்டும் விரட்டி வீரம் காட்டுவது நகை முரண் ஆகும் , ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையாக இருக்கு.

என்ன கொடுமை சார் இது!
---------------------
பணங்காய்ச்சி மரம்.

சமீபத்தில் சென்னையில் பள்ளிப்பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி பலியானாள், அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் ஓயும் முன்னரே க.க நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி ரஞ்சித் என்ற மாணவன் இறந்துப்போனான்.

மாணவன் ரஞ்சித் , மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் என்பவரின் ஒரே மகன் ஆவார்.

இச்சம்பவத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்துவன,

# 26 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் ,ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார், இன்னொரு பயிற்சியாளரோ, உதவியாளரோ இல்லை.

# காலையில் பள்ளிக்கு வந்ததும் ஏன் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும்? பெரும்பாலும் உடல் திறன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மாலையில் தானே வைப்பார்கள்?

எனது கணிப்பு என்னவெனில் பல மாணவர்களை நீச்சல் பயிற்சியில் சேர்த்து பணம் வசூலித்துவிடும் பள்ளி நிர்வாகம் ,அனைவருக்கும் ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்க காலையில் இருந்து மணிக்கு ஒரு அணியாக பயிற்சிக்கு அனுப்பி சமாளித்து இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளருக்கு மாணவர்கள் மீது பெரிதாக கவனம் இருக்க வாய்ப்பில்லை.

# மாணவன் இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு எதுவுமே நடவாதது போல தொடர்ந்து பள்ளியை நடத்தியுள்ளனர், பல மாணவர்களின் பெற்றோரும் கூடி போராடிய பின்னரே ,பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளனர்.

# சென்னை சேலையூர் சியோன் பள்ளி நிர்வாகி இதே போன்ற வழக்கில் கைதாகி ,பிணையில் கூட வர இயலாமல் சிறையில் இருந்தார் ஆனால் அதே போன்ற சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகி பெயருக்கு கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளிவந்து விட்டார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என அரசியல் நிர்ணய சட்டம் சொல்கிறது.

என்ன கொடுமை சார் இது!
------------------------------------

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி,

கூகிள்,யூட்யூப் தளங்கள்,நன்றி!
*******

Thursday, July 05, 2012

ஒலிம்பிக் கனவுகள்!-1

(abebe bikila on bare foot at rome olympics)

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றே வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் பல காலமாய் படித்து வந்திருக்கிறோம், இன்று வரையில் பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரம்,ராணுவ ஆட்சி, வறுமை என்ற சூழலே நிலவுகிறது ,ஆனால் அவர்களின் ஒலிம்பிக் சாதனைகளைப்பார்த்தால் ,"ஒளிரும்" இந்தியா போன்ற நாடுகள் முக்காடுப்போட்டுக்கொள்ள வேண்டும் :-))

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் , வளம் இருந்தும் வறுமையில் வாடும் நாடு ,ஆனால் அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ ஆட்சிக்காலத்திலேயே பிறந்த ஒருவர் 24 வயது வரையில் தடகள பயிற்சி எடுத்திராமல் , திடீர் என தடகள வீரர் ஆக ஆசைப்பட்டு முயற்சி செய்து , தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் மராத்தான் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து இருக்கிறார் என்றால் ,இந்தியா போன்ற நாட்டில் பிறந்தவர்கள் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிருக்கும் காரணம் , தன்னம்பிக்கை,கடின உழைப்பு தானே ஒழிய ,பணமோ,நவீன வசதிகளோ அல்ல என்பது புரியும்.

எவ்வித வசதியும், இல்லாத சூழலில் பிறந்து சாதித்த ஒரு ஆப்ரிக்க தடகள சிங்கத்தினை இப்பதிவில் காணலாம்.

அபிபி பிக்கிலா(abebe Bikila) 1932 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ,தலை நகர் அடிஸ் அபாபா நகருக்கு அருகே ஜாதோ என்ற சிற்றூரில் Widnesh Menberu and Ato Bikila Demssie தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்ததால் , இளவயதிலேயே ஆடு மேய்த்துள்ளார், 12 வயது வரையில் எதியோப்பிய பாரம்பரிய கல்வியை மட்டும் படித்துள்ளார்.

இராணுவ ஆட்சி என்பதால் அவரது 12 ஆம் வயதிலேயே ராணுவத்தில் அரசருக்கு பாதுகாவலராக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.குடும்ப பாரத்தை குறைக்கவே 12 வயதில் வேலைக்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்ல நேரிட்டது.அங்கு தான் வழக்கமான உடற் பயிற்சிகள் ,விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடைத்துள்ளது, எத்தியோப்பிய பாரம்பரிய விளையாட்டான கெனாவிலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். கெனா என்பது ஹாக்கி மட்டை போன்ற வளைந்த குச்சிகளை வைத்துக்கொண்டு ,மரப்பந்தை அடித்து விளையாடும் ஹாக்கிப்போன்ற விளையாட்டு ஆகும்.

1956 இல் ,அவரது 24 வது வயதில் சிலர் பல வண்ண விளையாட்டு ஆடைகளை அணிந்து வரிசையாக செல்வதைப்பார்த்து , யார் அவர்கள் ,எங்கே செல்கிறார்கள் என விசாரித்துள்ளார், அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள செல்லும் தடகள வீரர்கள் என்பதையே அப்போது தான் அறிந்துள்ளார், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் குறித்தே 24 ஆவது வயதில் தான் அறிந்துள்ளார், அவருக்கும் அதில் கலந்துக்கொள்ள ஆசை வந்ததுக்கு காரணம், அப்போது தான் வண்ணமயமான டிராக் சூட், மரியாதை எல்லாம் கிடைக்கும் என்பதாலே.

அதன் பிறகே பயிற்சிகளை ஆரம்பித்து , ராணுவ வீரர்களுக்கான வருடாந்திர தடகளப்போட்டியில் முதன் முறையாக கலந்துக்கொள்ள முடிவு செய்து அதில் எடுத்ததும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்போட்டியில் அப்போதைய தேசிய நீண்ட தூர ஓட்ட சாம்பியன் வாமி பிராட்டு(Wami bratu)வும் கலந்துக்கொண்டதால் ,அனைவரும் வாமி பிராட்டு வெற்றிப்பெறுவார் என எதிர்ப்பார்த்திருக்க, இறுதியில் வாமி பிராட்டுவை பின் தள்ளி அவரது சாதனையையும் உடைத்து பிகிலா வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தவே, தேசிய தடகள அணியின் பயிற்சியாளர் ஒரு எதிர்கால சேம்பியன் கிடைத்துவிட்டார் என தேசிய அணியில் இடம் வாங்கி கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்.

1960 ரோம் ஒலிம்பிக்கிற்கு அணி அறிவிக்கப்பட்ட போது இவர் தேர்வாகவில்லை, சீனியர் என்பதால் வாமி பிராட்டுவே தேர்வாகி இருந்தார், ஆனால் கடைசியில் பிகிலாவிற்கே அதிஷ்டம் கைக்கொடுத்தது, ரோம் ஒலிம்பிக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் ஒரு கால்பந்து போட்டியில் ஆடுவோம் என பிராட்டு ஆடியதில் கால் முறிந்துப்போனது. அவருக்கு பதிலாக யாரை அனுப்புவது என பலத்த யோசனை , விமானம் கிளம்பும் நேரம் வரைக்கும் நடந்து கடைசியில் பிக்கிலா வை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

ரோமுக்கு போனப்பிறகும் சோதனை தொடர்ந்துள்ளது, இவர்கள் அணிக்கு ஷீ ஸ்பான்சர் செய்ய ஒத்துக்கொண்ட அடிடாஸ் நிறுவனம் ,ஏழை நாடு தானே என்ற எண்ணத்திலோ என்னமோ பிகிலா கால்களுக்கு பொருந்தாத ஷீ வைக்கொடுத்து இது தான் இருக்கு , அட்ஜெஸ்ட் செய்து போட்டுக்கொண்டு ஓடுங்க என சொல்லியுள்ளது.பொறுந்தாத ஷீ வைப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு நான் வெறும் காலுடன் ஓடுவேன் என ஷீ இல்லாமலே களத்தில் குதித்துவிட்டார், சகல வசதிகள் கொண்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு வெற்றுக்கால்களுடன் முழு மராத்தானும் ஓடி வெற்றிப்பெற்றார், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி மற்றுமல்ல அதுவரையில் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியா வீரர் யாரும் தங்கம் வென்றதே இல்லை ஏன் எந்த ஆப்பிரிக்க கறுப்பின வீரரும் வென்றதே இல்லை. வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 2 மணி ,16நிமிடம்.20 விநாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட" என தைரியமாக சொன்னார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் 1964 இல் டோக்கியாவில் நடந்தது அதிலும் கலந்துக்கொள்ள தேர்வானார்,ஆனால் போட்டிக்கு 6 வாரங்களுக்கு முன்னால் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது, எனவே அவரால் போட்டியில் கலந்துக்கொண்டு ஓட முடியாது என அனைவரும் முடிக்கட்டிய நிலையில், அவரோ ஆபரேஷன் செய்த நிலையிலும் , மருத்துவமனையில் அவரது அறையிலே ஜாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டாரம்.மாற்று வீரர் அனுப்பலாம் என நினைத்த பயிற்சியாளரையும் வற்புறுத்தி அவரே டோக்கியோ சென்றார், விமானத்தில் இருந்து இறங்கவே சிரமப்படுவதை பார்த்து , அவரால் ஓட முடியாது என அனைவரும் நினைத்த நிலையில், தன்னம்பிக்கையுடன் ஓடி மராத்தானில் தங்கம் வென்றதோடு மீண்டும் ஒரு புதிய உலக சாதனையாக 2 மணி 12.11 இல் ஓடி முடித்தார். அதோடு மட்டும்மில்லாமல் முதன் முறையாக மரத்தானில் அடுத்தடுத்து தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்தார். இன்று வரை அச்சாதனை இருக்கிறது.

மூன்றாவது முறையாக 1968 இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் போது அவரது கால் விரல் எலும்பு முறிந்துவிட்டது.ஆனாலும் விடாமல் எலும்பு முறிவோடு போட்டியில் கலந்துகொண்டு 15 கி.மீ வரையில் முன்னணியில் இருந்து பின்னர் , வலி அதிகரிக்கவே , முழுவதும் முடிக்காமல் ஒதுங்கிவிட்டார், அப்போட்டியில் சக எத்தியோப்பிய வீரர் ஆன மாமோ வோல்டெ(Mamo wolde) தங்கம் வென்றார். அபிபி பிகிலா ஓடி இருந்தால் என்னால் தங்கம் வென்று இருக்க முடியாது என மாமோவே சொன்னது , அவரது திறமைக்கு சான்றாகும். ஏனெனில் இந்த ஒரு போட்டி தவிர பிகிலா அதுவரையில் கலந்துக்கொண்ட எந்த போட்டியிலும் தோற்றதே இல்லை.

பின்னர் நான்காவது ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார், ஆனால் இம்முறை விதி விளையாடிவிட்டது, இவர் இராணுவத்தில் இருந்ததால் , சர்வாதிகார அரசருக்கு எதிராக போராடியவர்கள் இவர் சென்ற காரை தாக்கியதில் ,கட்டுப்பாடு இழந்து கார் விபத்துக்குள்ளானாதால் ,பிகிலாவின் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது, வீல் சேரில் இருக்கும் போதும் , வீல் சேரோடு மராத்தானில் கலந்துக்கொண்டு ஓடுவேன் என நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார், ஆனால் கடைசி வரை குணமாகாமல் ,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனது 41 ஆம் வயதில் தூங்கும் போதே உயிர்ப்பிரிந்தார்.

அபிபி பிகிலாவின் எழுச்சிக்கு பிறகே எத்தியோப்பிய வீரர்களுக்கு மராத்தானிலும்,நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களிலும் உலக அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எத்தியோப்பியாவை பின்ப்பற்றி மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தயார்ப்படுத்த ஆரம்பித்து சாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றளவும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளில் எத்தியோப்பியா ,கென்யா,மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளே முன்னிலை வகிக்கின்றன, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே அவர்கள் முன் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலோ அடிப்படை வசதி கூட எதுவுமில்லை. தேசிய அளவில் சாதித்தால் ராணுவத்தில் ஒரு வேலைக்கொடுப்பார்கள், அங்கிருந்து பயிற்சி செய்து தான் அனைவரும் சாதிக்கிறார்கள், பெரும்பாலோர் சாலையில் ஓடியே பயிற்சி எடுக்கிறார்கள்.நவீன ஜிம்கள் பார்க்க வேண்டும் என்றால் தலை நகர் அடிஸ் அபாபாக்கு தான் வர வேண்டும், அதே போன்று தான் விளையாட்டு அரங்குகளும். தலை நகருக்கு வெளியே எவ்வசதியும் இருக்காது.

3 வேளை சாப்பிட உணவுக்கிடைப்பதே கடினம், அங்குள்ள முக்கியமான வேலை வாய்ப்பே ராணுவப்பணி தான், அடுத்து வேலை என்றால் ஓட்டப்பந்தய வீரர் ஆவது மட்டுமே, மற்றபடி நல்ல வருமானம் கிடைக்க வழியே இல்லாத நாடு. எத்தியோப்பிய வீரர்களிடம் ஏன் தடகள போட்டியில் ஓடுகிறீர்கள் எனக்கேட்டால் சொல்வது என்னவெனில் " முதலில் நாட்டுக்காக ஓடுகிறேன், பின்னர் எனது வாழ்க்கைக்காக" என்பார்கள்.

எத்தியோப்பிய நிலையை ஒப்பிட்டால் இந்தியா சொர்க்க புரி என்பது புரியும், இந்த வசதிகளை கொண்டு நாம் எத்தனை தங்கம் வாங்கியிருக்க வேண்டும், ஆனால் நாம் ஒரே ஒரு தனி நபர் தங்கம் வாங்கவே 2008 வரையில் அபினவ் பிந்த்ரா வரவுக்காக காத்திருந்தோம். ஆனால் எத்தியோப்பியா 1960 முதல் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்று வருகிறது.இதில் வேடிக்கை என்னவெனில் இன்றும் நாம் பாடப்புத்தகத்தில் ஆப்பிரிக்க ஒரு இருண்ட கண்டம் என படித்துக்கொண்டிருக்கிறோம் :-))

ங்கொய்யாலே இப்படி குருட்டு தனமாக பாடப்புத்தகம் எழுதறவங்களை பிடிச்சு சிங்கத்துக்கு இரையாக்கணும் :-))

அடுத்த பதிவில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஆப்பிரிக்க பெண் சிங்கத்தை பார்க்கலாம்.

தொடரும்...
-------------

பின்குறிப்பு;

நம்ம நாட்டினை குற்றம் சொல்ல அல்ல இப்பதிவு, எப்போது பார்த்தாலும் அமெரிக்காவை பார், ஆஸ்திரேலியாவை பார், என முன்னேறிய நாட்டை சொல்லி அப்படி நாம் எப்போ வல்லரசு ஆவது, ஒலிம்பிக்கில் சாதிப்பது என்றே மீடியாவும், மக்களும் பேசுகின்றார்கள், ஆனால் வறுமையிலும், உள்நாட்டுக்கலவரத்திலும் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தங்கள் விடா முயாற்சியாலே சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.

வசதி ,வாய்ப்புள்ளவன் சாதிப்பதை பார்த்து பெருமூச்சு விடுவதை விட ஆப்பிரிக்க நாடுகள் சாதிப்பதை பார்த்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
----

தகவல், மற்றும் படங்கள் உதவி,

விக்கி,எத்தியோப்பியன்ஸ்.காம் ,இணைய தளங்கள்,நன்றி!

*****

Tuesday, May 08, 2012

கேட்கிறவன் கேணையா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கே.எஸ்.ரவி குமாரா?






கி.பி 1889 ஆண்டில் ஒரு வழக்கமான ஞாயிறாகத்தான் அமெரிக்கவின் லுடிங்டன் நகருக்கும் விடிந்ததிருக்க வேண்டும் ,ஆனால் அன்று அந்நகரம் உணரவில்லை ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தலைநகராம் வங்கக்கடல் தரங்கம்பாடும் சிங்கார சென்னையில் இருந்து வவ்வால் எனும் நாமகரணம் கொண்ட ஒருவன் இணையத்தில் லூடிங்க்டனை தேட வைக்கும் சரித்திர புகழ்பெற்ற ஞாயிறு ஆக அமைய போகிறதென்பதை அந்நகர் அறிந்திருக்கவில்லை .ஏன் அவன் தேடினான் ... தேடலின் வரலாறு ,புவியியல் என்ன?


...கேட்கிறவன் கேணையனா இருந்தா கேரம் போர்டை கண்டுப்பிடிச்சது கேரம் கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவியா என
" மக்கள் மகிழ்விப்பான்" சந்தானம் யாரையோ பார்த்து வெள்ளித்திரையில் கேட்டாலும் என்னைப்பார்த்து கேட்டாப்போலவே இருக்கவே தான் இந்த தேடல் துவங்கியது மிஸ்டர் கூகிள் வழிக்காட்டலுடன், அப்படி என்ன தான் தேடிக்கிடைத்தது ... வாருங்கள் காண்போம்!


லூடிங்க்டன் நகருக்கு வழக்கமான ஒரு ஞாயிறாக விடிந்தாலும் பின்னாளில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வரலாற்றின் பக்கங்களில் அழியாச்சுவட்டினை அந்நாள் பதித்தது என்றால் மிகையில்லை. விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப்பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு உபாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க உபாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.



காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.


பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல்(Henry Haskell)என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப்பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

கேரம் போர்ட் உற்பத்தி செய்ய அவரது நண்பருடன் சேர்ந்து லூடிங்க்டன் நாவல்டி ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை கிபி 1890 இல் அமைத்தார்.பின்னர் 1900 இல் அர்ச்சரேனா என்ற நிறுவனத்துடன் இணைந்து கேரம் அர்ச்சரேனா கம்பெனி என மாற்றியமைத்தார்.

பின்னர் பல கூட்டணிகள், மாற்றங்கள் என கண்டு கி.பி 1939 இல் கேரம் இண்டஸ்ட்ரிஸ் என பெயரும் மாறியது. 1940 இல் நிறுவனரான ஹென்றி ஹேஸ்கல் காலமானார். அதன் பின்னர் சொப்பன சுந்தரியின் கார் போல பல கைகள் மாறி கி.பி 1980 இல் லைட்னிங் குருப் எனும் கம்பெனியின் வசம் சேர்ந்தது அது 1996 வரைக்கும் நடத்தியது,பின்னர் கம்பெனி நலிவடைந்ததால் செயல்ப்பாட்டினை நிறுத்திக்கொண்டது. இன்று வரையில் "Carrom" என்ற பெயரின் காப்புரிமை அவர்களிடமே உள்ளது மற்றவர்கள் அப்பெயரினை பயன்ப்படுத்த முடியாது. ஹி..ஹி ஆனால் நான் கேரம் போர்டை பயன்ப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது :-))

பிட்டுகள்:

# கேரம் என்ற சொல் கேனான்(பீரங்கி) இல் இருந்து உருவானது ,அதன் பொருள் ஷாட் -அடி என்பதாகும். ஸ்ட்ரைக்கர் வைத்து அடித்து தானே விளையாடுகிறோம்.

# கேரம் போன்ற விளையாட்டு உலகின் பல நாடுகளிலும் ,பல பெயர்களிலும் விளையாடப்பட்டே வருகிறது. பல நாடுகளில் கை விரல்களுக்கு பதில் கியுஸ் எனப்படும் ஒரு சிறு குச்சியினை பில்லியர்ட்ஸ் போலவே பயன்ப்படுத்துவதுண்டு.

சில நாடுகளில் புழங்கும் பெயர்கள்:

டென்மார்க்-கெரொமா

சீனா -கேரம்

ஃபிஜி- வின்டி வின்டி

கனடா -குரோக்கியோல்

இஸ்ரேல்- ஷே-ஷே

மெக்சிகோ- காயின்களுக்கு பதில் சோடா மூடியுடன் ஆடப்படுகிறது.

# 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அபிசினியாவில் (இன்றைய எத்தியோப்பியா)இதே போன்ற விளையாட்டு இருந்ததாக ஒரு கல்லரை ஓவியம் காட்டுகிறது.

#அக்காலத்தில் போர்த்து கீசியர்கள் கேரம் என்றே கேரளாவை அழைத்துள்ளார்கள்.எனவே இந்தியாவில் கேரளவில் இருந்து கூட தோன்றி இருக்கலாம்.பெரும்பாலோர் சொல்வது,இந்திய,இரான் பகுதிகளில் தோன்றி இருக்கக்கூடும் என்பதே.

#கேரம் விளையாட்டில் இந்தியா தான் முன்னணியில் உள்ளது பல உலக சாம்பியன்களை உருவாக்கியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல சேம்பியன்கள் உருவாகியுள்ளார்கள்.ஒலிம்பிக் போன்ற விளையாட்டு அமைப்புகளால் கேரம் இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு பொழுபோக்கு விளையாட்டு என்ற அளவிலே சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது.




#தமிழகத்தினை சேர்ந்த மரிய இருதயம் இரு முறை ஒற்றையர் உலக சேம்பியனாகவும் ,இரு முறை இரட்டையர் சேம்பியனாகவும் சாதனைப்புரிந்துள்ளார், ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அர்ஜுனா விருதுப்பெற்ற ஒரே கேரம் வீரர் ஆவார்.

#பி.ஆரோக்கிய ராஜ் ,தமிழ் நாடு , மரிய இருதயத்துடன் சேர்ந்து இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது போன்று ஆர்.நட்ராஜ்,ராதாகிருஷ்ணன் என பல கேரம் சாம்பியன்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

#பெண்களில் ஜீ.ரேவதி,பி.நிர்மலா போன்ற குறிப்பிட தகுந்த கேரம் வீராங்கனைகள் தமிழகத்தில் உள்ளனர்.

# மற்ற நாட்டில் கேரம் போல விளையாட்டு இருந்தாலும் அமெரிக்காகாரன் தான் பேரு வச்சு அதுக்கு காப்புரிமை வாங்கி வைப்பாங்க ,மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசிக்கு எல்லாம் காப்புரிமை வாங்கியது போல,சும்மா சொல்லக்கூடாது மூளைக்காரன்ங்கய்யா :-))

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி:

http://www.bestqualitytoys.com

http://www.international-carrom-fed-media-commission.org/

மற்றும் கூகிள், விக்கி நன்றி!