Wednesday, July 11, 2012

மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

மாட்டு சாணியிலிருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு போடலாம்னு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அந்த நேரம் பார்த்து "மாடு ஏப்பம்" விடும் போதும், காற்றை ஃப்ரியா விடும் போதும் மீத்தேன் வருது என "மாமிச உணவுக்காக மிருகங்கள் வளர்ப்பதால் புவி வெப்பமாகிறது என சகோ.சார்வாகன் ,
சுட்டி பதிவு போட்டுவிட்டார், இனிமேலும் சும்மா இருந்தால் மாட்டு வாயிலும், பின்னாலும் டியூப் சொறுகி மீத்தேன் தயாரிப்பது எப்படினு பதிவு போட வேண்டியதாயிருக்கும் என்பதால் சாண எரிவாயு தயாரிப்பதை பதிவா போட்டுறலாம்னு களம் இறங்கியாச்சு, அடுத்த பாகத்தில் சாண எரிவாயுவை பெட்ரோல் ஆக்கிடலாம் :-))

சாண எரிவாயுவை பொதுவாக கோபர் கேஸ் என்பார்கள், கோபார்(Gobar) என்றால் இந்தியில் மாட்டுசாணம், மாட்டு உரம்(cow manure), எனப்பொருள், நேபாளியிலும் மாட்டுச்சாணம் என்றே பொருள்.

உலகிலேயே அதிக கால்நடைகள் கொண்ட நாடு இந்தியா, 529 million cattles, and 648.8 millions of poultry உள்ளது. ஒரு மாடு தினசரி சராசரியாக 10 -12 கிலோ சாணியிடும்,இது மாட்டின் அளவு, இனம், உண்ணும் உணவுக்கு ஏற்ப மாறுபடலாம்(சிலப்பேர் எங்க வீட்டு மாடு 100 கிலோ சாணிப்போடும் என முட்ட வரலாம்!)

இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது.மற்ற பயன்ப்பாடுகளை செய்ய கூடுதல் செலவிட வேண்டும், ஆனால் கோபர் கேசினை அப்படியே வழக்கமான கேஸ் ஸ்டவ் மூலம் எரித்து சமையல் செய்ய பயன்ப்படுத்தலாம்,இந்தியாவில் பெரும்பாலும் சமையல் செய்யவே கோபார் கேஸ் பயன்ப்படுகிறது.மேலும் வளி மண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவும் குறைந்து சுற்று சூழலும் பாதுகாக்கப்படும்.

சாணத்தின் பண்புகள்:

மாட்டு சாணத்தில்,80% நீரும் 20% மட்டுமே திடப்பொருளும் சராசரியாக இருக்கும்,


20% திட சாணத்தில் உள்ள மூலங்களின் அளவு.

நைட்ரஜன்=1.8-2.4 %
பாஸ்பரஸ்=1-1.2%
பொட்டாசியம்=0.6-0.8%

கரிமக்கழிவு=50-75%,

எனவே ஒரு டன் ஈர சாணம் காய்ந்தால் 200 கிலோ எடை மட்டுமே இருக்கும்.

இச்சாணம் காற்றில்லா நொதித்தல் வினைக்கு உட்படும் போது ஒரு வாயுக்கலவை உருவாகும் அதற்கு பெயரே கோபர் கேஸ், இதில் மீத்தேன் பெரும்பான்மையாக இருக்கு.

மீத்தேன்.-68%

கரியமிலவாயு=31%

நைட்ரஜன்ன் வாயு= 1%

பாஸ்பரஸ் சல்பைடு=1%

மீத்தேன் வாயுவின் எரிதிறன்=678 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்.

கோபார் கேஸ் பிளாண்ட்:

இடம் தேர்வு செய்தல்:

# சமதளமான , தண்ணீர் தேங்காத மேடான இடம்.

#நெகிழ்வான மண் இல்லாமல்,கடினமான மண் கொண்ட தரையாக இருக்க வேண்டும்.
காரணம்: டைஜெஸ்டரில் வாயு உற்பத்தியாகும் போது ஏற்படும் அழுத்தத்தினால் கட்டுமானம் விரிவடையாமல் தடுக்க சுற்றுப்புற மண் அழுத்தமாக உறுதியாக இருக்க வேண்டும்.

# மாட்டு தொழுவத்திற்கும், சமயலைறைக்கும் பொதுவாக அருகாமையான இடமாக இருக்க வேண்டும்.

#நிலத்தடி நீர் அதிகம் ஊறாத இடமாக இருக்க வேண்டும்.

# கிணறு போன்ற நீர் நிலைகளூக்கு அருகமையில் அமைக்க கூடாது.

# நல்ல திறந்த வெளியாக காற்றோட்டம், சூரிய ஒளி படக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.

#அருகில் மரங்கள் இருக்க கூடாது,காலப்போக்கில் மரத்தின் வேர் கட்டுமானத்தில் விரிசல் விட வைக்கும்.

# வேறு கட்டுமான அமைப்பு,சுவர்கள் ஆகியவற்றில் இருந்து போதுமான இடைவெளி விட வேண்டும், குறைந்தது 1.5 மீ இடை வெளி இருக்கலாம்.

சுமார் 10 மாடுகள் கொண்ட குடும்பத்திற்கு தேவையான சாண எரிவாயு உற்பத்தி செய்யும் கலன் அமைப்பதைக்காணலாம்.

பெரும்பாலும் கோபார் கேஸ் சமையலுக்கு பயன்ப்படுத்தப்படுவதால், பிளாண்ட் அமைக்கும் போது சமையலறைக்கு பக்கமாக இடம் தேர்வு செய்தல் நல்லது.

சாணஎரிவாயு கலன் இரு வகையில் அமைக்கப்படும் ,

தரை மட்டத்திற்கு கீழ் மற்றும் மேல் என, இதில் நிலையான வாயுக்கலன், மிதக்கும் வாயுக்கலன் என இரண்டு வகை இருக்கு.

சாண எரிவாயு கலனின் பாகங்கள்:

1)உள்ளீடு தொட்டி(inlet chamber)

2)வெளியேற்றும் தொட்டி(out let chamber)

3) நொதிக்கும் அறை(digester)

4) வாயு சேகரிக்கும் கலன்(gas holding dome)

ஆகியவை இருக்கும்.

பொதுவாக அனைத்தின் செயல் முறையும் ஒன்று போலவே, எனவே இப்போது தரைக்கீழ் , நிலையான வாயுகலன் சாண எரிவாயு அமைப்பினை பார்க்கலாம்.

சாண எரிவாயு கலன் திட்ட வரைப்படம்:



10 மாடுகளின் சாணியில் இருந்து சாண எரிவாயு தயாரிக்க சுமார் 100 கன அடிக்கொள்ளவு கொண்ட வாயு சேகரிப்பு கலன் உடைய அமைப்பு தேவைப்படும்.

எனவே சுமார் 5.5 அடி விட்டத்தில் சுமார் 10 அடி ஆழம் உள்ள பள்ளம் வெட்ட வேண்டும்.

அடித்தளம் அமைக்க ஒரு 1 அடி தடிமனில் கான்கிரிட் தளம் அமைக்க வேண்டும், அதில் வட்ட வடிவில் முறுக்கு கம்பிகளை அமைத்து , இணையாக வரிசையாக கம்பி வளையங்களுடன் 10 அடி உயரத்திற்கு ரீ-இன்போர்ஸ்டு கான்கிரிட் சுவர் உருளை வடிவில் அமைக்க வேண்டும்.


செலவினை குறைக்க பொதுவாக செங்கல் கொண்டும் அமைப்பார்கள், மேலே வரும் வாயு சேமிக்கும் டோம் மட்டும் கான்கிரிட்டில் அமைத்துக்கொள்வார்கள்.


நொதிக்கும் தொட்டி/டைஜெஸ்டரின் அளவு வாயு சேகரிக்கும் கலனைப்போல சுமார் 2.75 அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு கன மீட்டர் சாண எரிவாயு சேகரிக்கும் கலனுக்கு 2.75 கனமீட்டர் அளவுள்ள டைஜெஸ்டர் அமைக்க வேண்டும்.எனவே நாம் எவ்வளவு சாணியை தினசரி பயன்ப்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்து , சாண எரிவாயு கலனை வடிவமைக்க வேண்டும்..

பெரிய சாண எரிவாயு கலன் அமைத்துவிட்டு , குறிப்பிட்ட அளவை விட குறைவான சாணத்தினை பயன்ப்படுத்தினால் உற்பத்தியாகும் வாயு ,கலனில் குறிப்பிட்ட அழுத்தத்தினை உருவாக்காது, எனவே குழாய் வழியே பயன்ப்பாட்டுக்கு வெளியில் வராமல் கலனிலேயே இருக்கும்.

இத்தொட்டி போன்ற அமைப்பின் மையத்தில் ஒரு பிரிப்பு சுவரும் அமைக்கப்படும், இதன் மூலம் உள்ளீடு தொட்டி ,வெளியேற்றும் தொட்டி என இரண்டு பாகமாக தொட்டியமைந்து விடும்.இத்தடுப்பு சுவர் டைஜெஸ்டர் விட்டம் 1.6 மீட்டருக்கு அதிகமான அமைப்பில் மட்டும் தேவைப்படும், சிறிய அமைப்புக்கு தேவை இல்லை.

இப்படி அமைக்கும் போதே , ஒரு பக்கம் சாணம் இட ,மற்றும் பயன்ப்படுத்தி முடித்த சாணக்கரைசல் வெளியேற குழாய்கள் /கட்டுமான அமைப்பு என பொறுத்திவிடவேண்டும்.இக்குழாய்கள் சாய்வாக,தொட்டியின் அடிப்பாகத்தில் ,ஒவ்வொரு அறையின் மையமாக இருக்குமாறு , தாங்கும் அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.


அரை கோள வடிவிலான கம்பிவலையமைப்பு ,உருவாக்கி கான்கிரிட் டோம் அமைத்தல்.இந்த டோம் போன்ற அமைப்பே சாண எரிவாயு சேகரிக்கும் கலனாக செயல்ப்டுகிறது.இந்த டோம்மில் சாண எரிவாயு வெளியேற வால்வுடன் கூடிய வெளியேறும் குழாய் ,மையத்தில் அமைக்கப்படும்.

video:


காணொளி பார்த்தால் ஓரளவு எப்படி சாண எரிவாயு கலன் கட்டப்படுகிறது என்பது புரிந்துவிடும்.இக்காணொளி உகாண்டாவில் கோபார் கேஸ் பிளாண்ட் அமைக்கப்படுவதை விளக்குவது,அவர்கள் டோம் உட்பட அனைத்தையும் "இண்டர் லாக்கிங்" செங்கல் கொண்டு கட்டி முடித்து விடுகிறார்கள்.

முழுவதும் கட்டி முடித்ததும் சாண எரிவாயு கலனை சுற்றியுள்ள வெற்றிடத்தில் மண்ணிட்டு நன்கு அழுத்தி கடினப்படுத்த வேண்டும்,அப்போது தான் வாயு உற்பத்தியாகும் போது கலன் விரிவடையாமல் தடுக்கப்படும்.

சாண எரிவாயு கலனை இயக்குதல்:

முதல் முறை சாண எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 500 கிலோ சாணத்தினை ,திடப்பொருட்கள்,கல் போன்றவற்றை நீக்கிவிட்டு 500 லிட்டர் நீரில் கரைத்து கரைசலாக உள்ளே இட வேண்டும், இந்த அளவு எப்போதும் உள்ளே இருக்கும், இது ஸ்டார்ட்டர் கரைசல் எனப்படும்.

சுமார் ஒரு வாரம் சென்ற பின் ,முதலில் உற்பத்தியாகும் வாயு பெரும்பாலும் கரியமில வாயுவே எனவே அவற்றை திறந்து வெளியில் விட்டு விட வேண்டும், பின்னர் வரும் வாயுவினை சேகரித்துப்பயன்ப்படுத்தலாம்.

தினசரி வாயு உற்பத்திக்கு கலனின் திறனுக்கு ஏற்ப சாணக்கரைசல் இட வேண்டும், 10 கிலோ சாணி எனில் 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்,அதாவது 1:1 என்ற விகிதத்தில் கரைசல் தயாரிக்க வேண்டும். கரைசலை உள்ளீடு தொட்டி வழியாக இட்டு மூடிவிட்டால் சுமார் 4 மணி நேரத்தில் முழு அளவில் சாண எரிவாயு உற்பத்தியாகிவிடும், அதனை குழாய்வழியாக கொண்டு சென்று தேவைக்கு ஏற்ப பயன்ப்படுத்தலாம்.

நொதித்தல் வினைக்கு பின் பயன்ப்படுத்தப்பட்ட சாணி( Humus) ,வெளியேற்றும் தொட்டி மூலம் தானாக வந்துவிடும் அதனை சேகரித்து ,உரமாக பயன்ப்படுத்தலாம்.

கோபார் கேஸ் பிளாண்ட் அமைக்க அரசு "MNRE" மூலம் 25-75% மாநியம் அளிக்கிறது, மேலும் தேசிய வங்கிகள் மூலம் கடனுதவியும் பெறலாம்.ஒரு நடுத்தர கோபர் கேஸ் பிளாண்ட் அமைக்க சுமார் ஒரு லட்சம் வரை ஆகலாம், நமது தேவை மற்றும் கட்டுமானத்தின் தரத்தினைப்பொறுத்து செலவு மாறுபடும்.




தற்போது சின்டெக்ஸ் டேங்க் தயாரிப்பாளர்கள், முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன சாண எரிவாயு அமைப்பினை தயாரித்து விற்கிறார்கள், அப்படியே வாங்கி ,பள்ளம் வெட்டி புதைத்துவிட்டு பயன்ப்படுத்த வேண்டியது தான்.

இந்த சாண எரிவாயு கலனில் மாட்டு சாணம் மட்டும் அல்லாமல் ,ஆடு,கோழி,பன்றி,குதிரை, என அனைத்து வகையான மிருகக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், ஏன் மனித கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், நாம் தான் பயன்ப்படுத்த யோசிப்போம்,சீனர்கள் மனிதக்கழிவு மற்றும் கால்நடை கழிவு என இரண்டையும் பயன்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாண எரிவாயு கலன் வடிவமைத்துப்பயன்ப்படுத்துகிறார்கள்.

திட்ட வரைப்படம்:


சாண எரிவாயு உற்பத்தி திறன்:

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம்.

ஒரு கன அடி= சுமார் 28 லிட்டர்,

ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,
=10*10= 100 கிலோ
100*28=2800 லிட்டர் சாண எரிவாயு கிடைக்கும்.

ஒரு கன மீட்டர் சாண எரிவாயு ஒரு கிலோ வாட் பவருக்கு சமம் ஆகும், எனவே,

2800 லிட்டர் =2.8 கிலோ வாட்/மணி.

ஒரு குடும்பம் சமைக்க தேவையான எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 4-5 மாடுகள் இருந்தாலே போதும்.

10 மாடுகள் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யும் போது உபரியாக வாயு கிடைக்கும் அதனைக்கொண்டு , எரிவாயு விளக்கு எரிக்கலாம், அல்லது மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சின்டெக்ஸ் நிறுவனமே ஒரு போர்ட்டபிள் சாண எரிவாயு ஜெனெரேட்டரும் விற்கிறார்கள்.



மேலும் சாண எரிவாயு உற்பத்திக்கு பின் கிடைக்கும் , சாணம் மிகுந்த ஊட்டச்சத்து மிக்க தொழு உரம் ஆகும். மேலும் பல வகையிலும் சாண எரிவாயுவினை பயன்ப்படுத்த முடியும் ,அதனை விளக்கும் படம்.


சாண எரிவாயுவில் மிகுதியாக மீத்தேனும் , குறைந்த அளவில் பிற வாயுக்களும் உள்ளது. பிற வாயுக்களை நீக்கிவிட்டு அழுத்திய மீத்தேனை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்தலாம்.
225 கன அடி சாண எரிவாயு ஒரு கேலன் பெட்ரோலுக்கு சமம் என்கிறார்கள், ஒரு மாடு மூலம் ஒரு ஆண்டுக்கு 50 கேலன் பெட்ரோலுக்கு இணையான சாண எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். எனவே ஒரு வாங்கினால் நமக்கு பால் மட்டும் கொடுக்காமல் 50 கேலன் பெட்ரோலும் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம் :-))

சாண எரிவாயுவை சுத்திகரித்து வாகனத்திற்குப்பயன்ப்படுத்துதல்:

சாண எரிவாயு சுத்திகரித்தல்:

# லைம் வாட்டர் வழியாக சாண எரிவாயுவை செலுத்தி கரியமில வாயு நீக்கப்படும்.

#இரும்புதுகள் வடிக்கட்டி வழியாக செலுத்தி ஹைட்ரஜன் சல்பைடு நீக்கப்படும்.

#கால்சியம் குளோரைடு பில்டர் மூலம் நீராவி/நீர் திவளை நீக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட சாண எரிவாயுவினை மூன்றடுக்கு முறையில் அழுத்தம் செய்ய வேண்டும்,

முதல் கம்பிரஷரில் 10 கி/ச.செமி என அழுத்தப்படும்,

பின்னர் இரண்டாவது நிலையில் 60கி/ச.செமீ என அழுத்தப்படும்,

மூன்றாவது நிலையில் 250 கி/ச.செமி என அழுத்தி கலனில் சேகரித்து வைக்கப்படும்.


இதனை CNG-Compressed Natural Gas இல் இயங்கும் அனைத்து வாகனத்திலும் செலுத்தி இயக்கலாம். ஏனெனில் பெட்ரோலிய எரிவாயுவில் 80% மீததேனும் இதர பெட்ரோலிய வாயுக்களே உள்ளன.

அடுத்தப்பதிவில் சாண எரிவாயுவில் இருந்து பிரித்தெடுத்த மீத்தேனை பெட்ரோலாக மாற்றுவதைக்காணலாம்.


கூடுதல் தகவல்:

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகி வளர்க்கும் மாட்டுக்கு "அசின்" என பெயரிட்டு புரட்சி செய்திருப்பார் இயக்குநர் "பாண்டி ராஜ்" அந்த பசு மாட்டு படம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை,

ஹி..ஹி எனவே இந்த படம் :-))
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள், கூகிள், நபார்டு இணையதளங்கள் நன்றி!

*****

Sunday, July 08, 2012

நெய்வேலியில் நூல்வெளி-புத்தக சந்தை-2012




வழக்கமாக சென்னை புத்தக சந்தைக்கு போய் வேடிக்கை பார்ப்பதுண்டு, பின்ன வேடிக்கை பார்க்கும் விலையில் தானே நவீன எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகள் இருக்கு, இந்த வாரம் ஊரு பக்கமா போய் இருந்த போது தினமலரை தற்செயலா விரிச்சா ,நெய்வேலியில் புத்தக சந்தைனு விளம்பரம் கண்ணில் பட்டது, வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் வைப்பாங்க ,இம்முறை முன்கூட்டியே வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பதிவர் சுரேகா பதிவில் சொல்லியிருந்தார் ஆனால் இந்த மாதம் தான் என்பதை கவனத்தில் வைக்கவில்லை.இவ்வளவு தூரம் வந்தாச்சு ,அதையும் போய் பார்த்துவிடுவோம் என 2 மினிட்ஸ் பிளான் ஒன்று போட்டாச்சு. சரி வாங்க சுரங்க நகரத்தின் உள்ளே போவோம்.

சுரங்க நகரத்தின் முகப்பு நுழைவாயில் ..ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப் என்று பெயர், கும்பகோணம் சென்னை பேருந்துகள் உள்ளே செல்லாது இங்கே இறங்கி லோக்கல் பேருந்தில் செல்ல வேண்டும். புத்தக்காட்சியரங்கு 11 ஆம் வட்டத்தில் ,பாரதி விளையாட்டு அரங்கு அருகே உள்ளது.


நெய்வேலி நகரம் அன்புடன் அழைக்கிறதாம், வழி நெடுக யூகலிப்டஸ் மரங்கள் தான் நிக்குது சாலையோரம் ,என்னை வரவேற்று பூமழை தூவ பூவையார் யாரும் காணோம் :-))

புத்தக அரங்கு முகப்பு,கோட்டை போல படம் வரைந்து வெட்டி டி.ஆர் போல செட்டிங் போட்டு இருக்காங்க!


நுழைவு சீட்டு வழங்கும் இடம், கட்டணம் 3 ரூபாய் மட்டுமே, கார் பார்க்கிங் 5 ரூ, 2 சக்கர வாகனம் நிறுத்த 3 ரூ என எல்லாம் சகாய விலையில் , காரணம் புத்தக சந்தைக்கு உபயதாரர் பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்பதால் லாப நோக்கு இல்லை.

சென்னை போல எழுத்து சிற்பிகளும், பதிப்பங்களும் சொந்தக்காசில் வினைல் போர்ட் வச்சு நாசம் செய்யவில்லை என்பது கூடுதல் அழகு. மேலும் அரங்கும் சின்னது எளிதில் ரவுண்டு அடித்துவிடக்கூடியதே ஆனாலும் மத்தியான வேளையில் சென்றதால் செம வெயில் , தொப்பர நனையும் அளவுக்கு வியர்த்துக்கொட்டிவிட்டது.
ஒரு சில அரங்குகளை மட்டுமே கைப்பேசியில் படம் எடுத்தேன் அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த செக்கியூரிட்டி படம் எடுக்க கூடாது என எச்சரிக்கை விட்டார், என்ன கொடுமை சார் இது, நான் பெங்களூர்,சென்னையில எல்லாம் டிஜிட்டல் கேமிராவிலே படம் எடுத்து இருக்கேன், இங்கே புதுசா சொல்றாங்களேனு கேட்டேன் அது அப்படித்தான் சொல்லிட்டு போயிட்டார்... சண்டை வந்திருக்கும் , ஆனால் நெய்வேலிக்கு என சில விதிகள் இருக்கு,அங்கு பொதுவாகவே படம் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. என்பதால் அமைதியா ஆகிட்டேன் ...ஹி ..ஹி ஆனாலும் படம் எடுக்கிறதையும் விடவில்லை...என்ன கொஞ்சம் அமுக்கமா செஞ்சேன் ..நீங்க பார்க்கிறது எல்லாம் திருட்டு படங்கள் (திருட்டு டிவிடி போல)

500 ரூ க்கு மேல வாங்க கூடாதுன்னு முடிவு செய்து போனேன் ,அந்த தொகைக்கு புத்தகத்தோட அட்டைய மட்டும் தான் வாங்க முடியும் போல :-))

வழக்கம் போல அதே ...அதே பதிப்பாளர்களின் அதே ..அதே எழுத்தாளர்களின் ..அதே ..அதே புத்தகங்களே குவிந்திருந்திருந்தன , என்ன ஒன்று சென்னையை விட இங்கே கம்மியா லோடு இறக்கி இருந்தாங்க.

பதிவுலக நண்பர் சுரேகாவோட புத்தம் புதுத்தகம் தலைவா,வா! வெளியிடப்பட்டு இருக்குன்னு சொன்னாரே என தேட ஆரம்பித்தால் கண்ணுல அகப்படுவனானு தண்ணிக்காட்டுச்சு, என்ன பதிப்பகம்னு மறந்து விட்டதால் வந்த வினை, ஒரு வழியா ரெண்டாவது ரவுண்டில் "மதி புத்தக நிறுவனத்தில் " கண்டேன் தலைவனை.

புத்தகம் நல்லா வடிவமைக்கப்பட்டிருக்கு, தரமும் நல்லா இருக்கு, விலையும் குறைவு தான் 80 ரூ, (10% கழிவு போக 72ரூ) பக்கங்கள், 114,(ஒரு பக்கத்தின் விலை எனப்பார்த்தால் கூடுதலோ என நினைக்கிறேன், ஒரு பக்கம் 1 ரூ 58 பைசா வருது)

அட்டைக்கு எல்லாம் காசு சேர்த்து கணக்கு செய்தா கொடுத்த காசு செரிச்சிடும்னு நினைக்கிறேன் :-))
(இந்த கணக்கை எல்லாம் குவார்ட்டர் வாங்கும் போது போட தோன்றுவதில்லை!)

திரும்பி வரதுக்குள்ள ரேண்டமாக அங்கே ,இங்கே என சில பக்கங்கள் படித்துவிட்டேன், இதுல காப்பி ரைட் ஸ்டேட்மென்ட் தான் சூப்பர் ... யாருக்கும் இரவலாகவோ அல்லது வாடகைக்கோ புத்தகத்தை விட கூடாதாம், லெண்டிங் லைப்ரரிகாரங்க வாங்கினா, விற்பனை குறைஞ்சிடும்னு முன்னெச்சரிக்கை போல :-))

தோராயமா திறந்த பக்கத்தில் துருவ ஐஸ் கட்டியில் 20% மேல தெரிவது திறமை, தெரியாம உள்ள மூழ்கி இருப்பது குணாம்சம்னு தத்துவம் சொல்லியிருக்கார் தலைவர், அப்படியே ,காந்தி பார்த்த் வேலை,காமராஜரின் குணம்னு எல்லாத்தையும் தொட்டு போறாபோல இருக்கு.

சந்திர மவுலி, விக்னேஷ் பாத்திரப்படைப்பின் அடிப்படையில் பார்த்தால் " ராபின் ஷர்மா" எழுதின "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" போலவோனு தோனுது.காப் மேயர், ,எம்.எஸ்.உதயமூர்த்தி போல கட்டுரை வடிவில் இல்லாமல் "paulo coelho" ராபின் ஷர்மா வகையில் கதையாக கொண்டு போயிருக்கிறார்.

இன்னும் முழுசா படிக்கலை ,படிச்சிட்டு விமர்சனம் எழுதலாம்னு ஒரு எண்ணம், அது சொந்த செலவில் சூனியம் ஆகிடுமோன்னு ஒரு கெவுளி கூவுது , சுரேகா தான் இன்னும் என்னை திட்டாம இருக்கார், அவர் கிட்டேவும் திட்டு வாங்கலாம்னு முடிவு செய்துட்டா ...விமர்சனம் எழுதிட மாட்டோம், ஏன்னா நான் ஒரு தடவை முடிவு செய்திட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் :-))

பக்கத்தில கேபிள்ஜியின் சினிமா வியாபாரமும் இருந்துச்சு(சோடிப்போட்டு வைக்குறாங்கப்பா) எடுத்து புரட்டிப்பார்த்தேன், அட்டை ரொம்ப டல்லா பழுப்பு ,கருப்பு கலரில் கவருவது போல இல்லை,கேபிள்ஜி சினிமா புத்தகம்னா சும்மா ஜிலு ..ஜிலுனு அட்டை போட வேண்டாம்?

சரியாக கவனிக்காமல் போய் இருப்பேன் , புத்தகம் பேரு கடைசி வினாடியில் பிளாஷ் ஆகி நினைவுப்படுத்தியது, எடுத்து பார்த்ததோடு சரி வாங்கவில்லை,
ஏற்கனவே பட்ஜெட் தாண்டியாச்சு அதனால் அப்புறம் பார்க்கலாம்னு வந்துவிட்டேன்.


ஏற்கனவே ஒரு ரவுண்ட் போய்விட்டதால் வந்த வினை, முதல் ரவுண்டில் பாரதி புத்தகாலயம்,விடியல்,அலைகள், நியுசெஞ்சுரி போன்ற பதிப்பக அரங்குகளில் மலிவு விலையில் நல்ல நூல்களாக கொஞ்சம் பொறுக்கிவிட்டேன்.இது போன்ற பதிப்பங்களில் தான் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்றவர்களின் மொழியாக்க நூல்கள் சல்லீசாக கிடைக்கிறது.

கிழக்கில் எல்லாம் டவுசரை உருவ என்றே ரஜினி,கலைஞர், விஜயகாந்துக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு நூல்களை போட்டு காசு புடுங்கிற வேலையை கன கச்சிதமாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எஸ்.ரா.எழுதிய 5 நூல்கள் 150 ரு என ஒரு அறிவிப்பு, ரொம்ப ஆசைப்பட வேண்டாம் பேசும் புலி, அது இதுனு சின்ன குழந்தைகளுக்கு எப்போவோ எழுதி இருப்பார் போல ,அது போன்றவையாம்.

மேற்கொண்டு எதுவும் வாங்காமல் ,வேடிக்கைப்பார்க்கலானேன், சின்னப்பசங்க நிறையபேர் அவரவர் அப்பா,அம்மாவை இழுத்துக்கொண்டு கடை கடையா அலைய விட்டார்கள், நெய்வேலியில் எல்லாருமே உத்தியோகஸ்தர்கள், என்பதாலும் , பசங்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள், பசங்க வேகத்துக்கு பெற்றோர் வளரவில்லை எனலாம்,,இது போன வருஷம் வாங்கின புத்தகம், வேண்டாம் என்றே சொல்லி பசங்களை இழுத்துப்போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பையன் அவசரப்பட்டு பாலித்தின் கவரை பிய்த்து புத்தகத்தை அவங்க அப்பாக்கிட்டே காட்ட எடுத்து போக பார்த்தான், கடையில் இருந்தவர் திட்டிக்கொண்டு இருந்தார். இரு வேறு உலகால் ஆனது வாழ்க்கை.

பாலித்தீன் ஒழிப்போம் என யாரும் கேரி பேக் தரவில்லை, ஒரு பேப்பர் கவரில் போட்டு கொடுத்தார்கள் ,கை வேர்வையிலே ஊறி பிய்ந்துக்கொண்டது, அப்புறம் எதுக்குய்யா புத்தகத்தை மட்டும் பாலித்தீன் கவரில் போட்டு மூடி வைக்குறிங்க :-))

குறைவான புத்தகங்களையே வாங்கினேன் , அதற்கே 1000 வந்துவிட்டது, எப்படியும் 10 நாளில் படித்துவிடுவேன். வாங்கிய புத்தகங்கள் எல்லாம் சராசரியான ஒரு "முட்டாளின்" தேர்வாகவே இருக்கும் என்பதால், வெளியில் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை :-))

மேலும் சில படங்கள்...





Saturday, July 07, 2012

காமெடி கழகம்-1

(ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு ..ஃபினிஷிங் தான் சரியில்லை... அவ்வ்வ்)


மாபெரும் சிறை நிரப்பு போராட்டம் ஒன்று நடந்து முடிஞ்சு இருக்கு, ஏதொ அந்த காலத்தில வெள்ளையனே வெளியேறு போல் ஏதேனும் கொள்கை இருக்குமானு பார்த்தால் , அவங்க சொல்கிற கொள்கையோ மகா கேவலமா இருக்கு , நில அபகரிப்பு,ஆட்க்கடத்தல், கொலை ,கொலைமுயற்சி, கற்பழிப்பு இன்ன பிற குற்றங்களுக்காக எங்களை கைது செய்ய கூடாதுனு வலியுறுத்தி சொல்லவே சிறை நிரப்பு போராட்டமாம், என்ன கொடுமை சார் இது!

இப்படி போராடுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தினையும், நாட்டில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பையும் அவமதிக்கும் செயல் இல்லையா? குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க கூடாது என சொல்வது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஆகும், மேலும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என சொல்வதை எதிர்ப்பதாகும். இல்லை இவர்கள் எல்லாம் சட்டத்திற்கும் மேலான புனித பிம்பங்களா?

நாட்டுல பெட்ரோல் விலை ஏறிச்சு, பேருந்து, மின்சாரம், பால், என அனைத்து பொருட்களும் விலை ஏறிச்சு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது அப்போதெல்லாம் இத்தனை தீவிரம் காட்டாத ஒரு அரசியல் இயக்கம், குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்களை காக்க அறப்போரட்டம் நடத்துகிறோம் என சொல்லும் காமெடியை நாமும் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனில் என்ன காரணம் இந்தியாவில் ஜனநாயகம் என்பது இதற்கு மேலும் அழுகி நாற்றமடிக்காது எனும் அளவுக்கு உச்ச பட்சமாக அழுகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது.

முன்னர் எப்போவோ படித்தது, சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்தி முழு சுதந்திரம் வேண்டும் என கோரிக்கை வைக்காமல் " டொமினியன்" அந்தஸ்தில் வெள்ளைக்காரர்கள் ஆளுகைக்கு கீழ் ஒரு தன்னாட்சி அதிகாரம் போதும் என கேட்பதில் விருப்பம் காட்டினார், லாலா லஜபதி ராய், திலகர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் "பூரண சுதந்திரம் " என வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இதனை சுட்டிக்காட்டி காந்தியிடம் , நீங்கள் ஏன் முழு சுதந்திரம் வேண்டாம் என சொல்கிறீர்கள் எனக்கேட்டதற்கு, பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய பதில் ஒன்றை சொன்னார்,

"இன்னும் நம் மக்கள் முழு சுதந்திரத்தை எப்படி பயன்ப்படுத்துவது என்ற பக்குவத்தினை பெறவில்லை, இப்போது முழு சுதந்திரம் கொடுத்தால் தவறாகவே பயன்படும்" என்றார். அவர் சொன்னது இப்போது நடந்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

மன்னராட்சி ஒழிந்தாலும் தற்போது ஜனநாயகத்தில் "அரசியல் மன்னராட்சி" தான் நாடு முழுவதும், ஒரே அரசியல் மன்னருக்கு பல வாரிசுகள் இருந்தால் அக்கால மன்னராட்சியில் ஏற்பட்டது போன்ற வாரிசு சண்டை எல்லாம் உண்டு, என்ன ஒன்று யானைப்படை, குதிரைப்படை எல்லாம் காணாமல் போய் கூலிப்படை என முன்னேற்றம் கண்டிருக்கிறது நாடு :-))

சமயத்தில் சின்ன வூட்டு வாரிசு ,சின்னம் சிறிய வூட்டு வாரிசுகளும் உரிமைப்போரில் குதித்து குட்டையை குழப்பும் அளவுக்கு அரசியல் மன்னராட்சி மாண்பு உள்ளது.

மேலும் ரொம்ப சீரியஸாக பேசி ... உங்கள் வார இறுதி மனமகிழ்வுக்கு குந்தகம் விளைவிக்க விரும்பவில்லை, எனவே சில நகைச்சுவை ஒளிப்பட உரையாடல்களை இடுகிறேன் கண்டு மகிழுங்கள்!

******

# அண்ணே அடுத்து ,2ஜி ஊழல் வழக்குல கைது செய்யக்கூடாதுனு டில்லில திகார் சிறை நிரப்பும் போராட்டம் இருக்கு மறக்காம வந்திடுங்க...

திகாருக்கும்மா ....அக்கா ...எனக்கு இந்தி தெரியாது...வேணாங்க்கா ..விட்ருங்க..வலிக்குது ..அப்புறம் அழுதுடுவேன் ...மி பாவம். ..அவ்வ்வ்!
-------------------------------
#
கருப்பு கண்ணாடி போட்டவங்க எல்லாம் தலைவருனு கிளம்பிடுறாங்கய்யா ...


உன் மைண்ட் வாய்ஸ் அஹ் நான் கேட்ச் செய்துட்டேன், என்ன மைண்டுடா அது மானம் கெட்ட மைண்ட்... எனக்கே கேட்குது ...நாளைக்கு வாக்கிங் போவ இல்ல அப்போ இருக்கு உனக்கு கச்சேரி!
-----------------

#நல்லா பார்த்துக்கோங்க ..நானும் ஜெயிலுக்கு போறேன் ...ஜெயிலுக்கு போறேன் ..நானும் அரசியல்வாதி தான்!

----------------------------------

#


அண்ணே சாப்பாடு போட்டுட்டு கைது செய்வாங்களா இல்லை கைது செய்த பிறகு சாப்பாடு போடுவாங்களா?
--------------------------
# ஹலோ சார் நீங்க ரெண்டு விரலை காட்டுறிங்க , நீங்க அந்த கட்சி போலீஸ் ,உங்க கிட்டே நான் கைது ஆக மாட்டேன்.

பயப்புள்ள கைதாகாம இருக்க என்னலாம் பேசுது :-))

-----------------------------
#


ஹய்ய்யோ...ஹய்யோ உன்னோட ஒரே நகைச்சுவையப்பா... செம காமெடி ... ஏ... உடன் பிறப்பே என்னிக்காவது இப்படி நீ காமெடி செய்து இருக்கியா...இதை எல்லாம் பார்த்தாவது நகைச்சுவைய கத்துக்கோங்க கண்மணிகளே!


#புளியம்பழத்தில் இருந்து கொட்டை எடுக்கும் எந்திரம்.

பின் குறிப்பு:

ஈழப்புளிய மரத்தின் புளியம்பழங்களில் கொட்டை எடுக்க சிறப்பு தள்ளுபடி உண்டு, உடன் பிறப்புகள் ஓடி வரவும் :-))

-----
முக்காத அறிவிப்பு:

இப்பதிவில் இடம் பெற்று இருக்கும் வசனங்கள் முழுக்க கற்பனையே, யார் பேசியதையும் மறைந்திருந்து பதிவு செய்யவில்லை, நகைச்சுவை நோக்கிலேயே பதிவிடப்படுகிறது,யார் மனதேனும் புண்படுமாயின் அதற்கு பதிவர் பொறுப்பல்ல,நன்றி!

*****

Thursday, July 05, 2012

ஒலிம்பிக் கனவுகள்!-1

(abebe bikila on bare foot at rome olympics)

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றே வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் பல காலமாய் படித்து வந்திருக்கிறோம், இன்று வரையில் பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரம்,ராணுவ ஆட்சி, வறுமை என்ற சூழலே நிலவுகிறது ,ஆனால் அவர்களின் ஒலிம்பிக் சாதனைகளைப்பார்த்தால் ,"ஒளிரும்" இந்தியா போன்ற நாடுகள் முக்காடுப்போட்டுக்கொள்ள வேண்டும் :-))

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் , வளம் இருந்தும் வறுமையில் வாடும் நாடு ,ஆனால் அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ ஆட்சிக்காலத்திலேயே பிறந்த ஒருவர் 24 வயது வரையில் தடகள பயிற்சி எடுத்திராமல் , திடீர் என தடகள வீரர் ஆக ஆசைப்பட்டு முயற்சி செய்து , தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் மராத்தான் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து இருக்கிறார் என்றால் ,இந்தியா போன்ற நாட்டில் பிறந்தவர்கள் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிருக்கும் காரணம் , தன்னம்பிக்கை,கடின உழைப்பு தானே ஒழிய ,பணமோ,நவீன வசதிகளோ அல்ல என்பது புரியும்.

எவ்வித வசதியும், இல்லாத சூழலில் பிறந்து சாதித்த ஒரு ஆப்ரிக்க தடகள சிங்கத்தினை இப்பதிவில் காணலாம்.

அபிபி பிக்கிலா(abebe Bikila) 1932 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ,தலை நகர் அடிஸ் அபாபா நகருக்கு அருகே ஜாதோ என்ற சிற்றூரில் Widnesh Menberu and Ato Bikila Demssie தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்ததால் , இளவயதிலேயே ஆடு மேய்த்துள்ளார், 12 வயது வரையில் எதியோப்பிய பாரம்பரிய கல்வியை மட்டும் படித்துள்ளார்.

இராணுவ ஆட்சி என்பதால் அவரது 12 ஆம் வயதிலேயே ராணுவத்தில் அரசருக்கு பாதுகாவலராக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.குடும்ப பாரத்தை குறைக்கவே 12 வயதில் வேலைக்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்ல நேரிட்டது.அங்கு தான் வழக்கமான உடற் பயிற்சிகள் ,விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடைத்துள்ளது, எத்தியோப்பிய பாரம்பரிய விளையாட்டான கெனாவிலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். கெனா என்பது ஹாக்கி மட்டை போன்ற வளைந்த குச்சிகளை வைத்துக்கொண்டு ,மரப்பந்தை அடித்து விளையாடும் ஹாக்கிப்போன்ற விளையாட்டு ஆகும்.

1956 இல் ,அவரது 24 வது வயதில் சிலர் பல வண்ண விளையாட்டு ஆடைகளை அணிந்து வரிசையாக செல்வதைப்பார்த்து , யார் அவர்கள் ,எங்கே செல்கிறார்கள் என விசாரித்துள்ளார், அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள செல்லும் தடகள வீரர்கள் என்பதையே அப்போது தான் அறிந்துள்ளார், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் குறித்தே 24 ஆவது வயதில் தான் அறிந்துள்ளார், அவருக்கும் அதில் கலந்துக்கொள்ள ஆசை வந்ததுக்கு காரணம், அப்போது தான் வண்ணமயமான டிராக் சூட், மரியாதை எல்லாம் கிடைக்கும் என்பதாலே.

அதன் பிறகே பயிற்சிகளை ஆரம்பித்து , ராணுவ வீரர்களுக்கான வருடாந்திர தடகளப்போட்டியில் முதன் முறையாக கலந்துக்கொள்ள முடிவு செய்து அதில் எடுத்ததும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்போட்டியில் அப்போதைய தேசிய நீண்ட தூர ஓட்ட சாம்பியன் வாமி பிராட்டு(Wami bratu)வும் கலந்துக்கொண்டதால் ,அனைவரும் வாமி பிராட்டு வெற்றிப்பெறுவார் என எதிர்ப்பார்த்திருக்க, இறுதியில் வாமி பிராட்டுவை பின் தள்ளி அவரது சாதனையையும் உடைத்து பிகிலா வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தவே, தேசிய தடகள அணியின் பயிற்சியாளர் ஒரு எதிர்கால சேம்பியன் கிடைத்துவிட்டார் என தேசிய அணியில் இடம் வாங்கி கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்.

1960 ரோம் ஒலிம்பிக்கிற்கு அணி அறிவிக்கப்பட்ட போது இவர் தேர்வாகவில்லை, சீனியர் என்பதால் வாமி பிராட்டுவே தேர்வாகி இருந்தார், ஆனால் கடைசியில் பிகிலாவிற்கே அதிஷ்டம் கைக்கொடுத்தது, ரோம் ஒலிம்பிக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் ஒரு கால்பந்து போட்டியில் ஆடுவோம் என பிராட்டு ஆடியதில் கால் முறிந்துப்போனது. அவருக்கு பதிலாக யாரை அனுப்புவது என பலத்த யோசனை , விமானம் கிளம்பும் நேரம் வரைக்கும் நடந்து கடைசியில் பிக்கிலா வை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

ரோமுக்கு போனப்பிறகும் சோதனை தொடர்ந்துள்ளது, இவர்கள் அணிக்கு ஷீ ஸ்பான்சர் செய்ய ஒத்துக்கொண்ட அடிடாஸ் நிறுவனம் ,ஏழை நாடு தானே என்ற எண்ணத்திலோ என்னமோ பிகிலா கால்களுக்கு பொருந்தாத ஷீ வைக்கொடுத்து இது தான் இருக்கு , அட்ஜெஸ்ட் செய்து போட்டுக்கொண்டு ஓடுங்க என சொல்லியுள்ளது.பொறுந்தாத ஷீ வைப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு நான் வெறும் காலுடன் ஓடுவேன் என ஷீ இல்லாமலே களத்தில் குதித்துவிட்டார், சகல வசதிகள் கொண்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு வெற்றுக்கால்களுடன் முழு மராத்தானும் ஓடி வெற்றிப்பெற்றார், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி மற்றுமல்ல அதுவரையில் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியா வீரர் யாரும் தங்கம் வென்றதே இல்லை ஏன் எந்த ஆப்பிரிக்க கறுப்பின வீரரும் வென்றதே இல்லை. வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 2 மணி ,16நிமிடம்.20 விநாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட" என தைரியமாக சொன்னார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் 1964 இல் டோக்கியாவில் நடந்தது அதிலும் கலந்துக்கொள்ள தேர்வானார்,ஆனால் போட்டிக்கு 6 வாரங்களுக்கு முன்னால் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது, எனவே அவரால் போட்டியில் கலந்துக்கொண்டு ஓட முடியாது என அனைவரும் முடிக்கட்டிய நிலையில், அவரோ ஆபரேஷன் செய்த நிலையிலும் , மருத்துவமனையில் அவரது அறையிலே ஜாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டாரம்.மாற்று வீரர் அனுப்பலாம் என நினைத்த பயிற்சியாளரையும் வற்புறுத்தி அவரே டோக்கியோ சென்றார், விமானத்தில் இருந்து இறங்கவே சிரமப்படுவதை பார்த்து , அவரால் ஓட முடியாது என அனைவரும் நினைத்த நிலையில், தன்னம்பிக்கையுடன் ஓடி மராத்தானில் தங்கம் வென்றதோடு மீண்டும் ஒரு புதிய உலக சாதனையாக 2 மணி 12.11 இல் ஓடி முடித்தார். அதோடு மட்டும்மில்லாமல் முதன் முறையாக மரத்தானில் அடுத்தடுத்து தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்தார். இன்று வரை அச்சாதனை இருக்கிறது.

மூன்றாவது முறையாக 1968 இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் போது அவரது கால் விரல் எலும்பு முறிந்துவிட்டது.ஆனாலும் விடாமல் எலும்பு முறிவோடு போட்டியில் கலந்துகொண்டு 15 கி.மீ வரையில் முன்னணியில் இருந்து பின்னர் , வலி அதிகரிக்கவே , முழுவதும் முடிக்காமல் ஒதுங்கிவிட்டார், அப்போட்டியில் சக எத்தியோப்பிய வீரர் ஆன மாமோ வோல்டெ(Mamo wolde) தங்கம் வென்றார். அபிபி பிகிலா ஓடி இருந்தால் என்னால் தங்கம் வென்று இருக்க முடியாது என மாமோவே சொன்னது , அவரது திறமைக்கு சான்றாகும். ஏனெனில் இந்த ஒரு போட்டி தவிர பிகிலா அதுவரையில் கலந்துக்கொண்ட எந்த போட்டியிலும் தோற்றதே இல்லை.

பின்னர் நான்காவது ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார், ஆனால் இம்முறை விதி விளையாடிவிட்டது, இவர் இராணுவத்தில் இருந்ததால் , சர்வாதிகார அரசருக்கு எதிராக போராடியவர்கள் இவர் சென்ற காரை தாக்கியதில் ,கட்டுப்பாடு இழந்து கார் விபத்துக்குள்ளானாதால் ,பிகிலாவின் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது, வீல் சேரில் இருக்கும் போதும் , வீல் சேரோடு மராத்தானில் கலந்துக்கொண்டு ஓடுவேன் என நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார், ஆனால் கடைசி வரை குணமாகாமல் ,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனது 41 ஆம் வயதில் தூங்கும் போதே உயிர்ப்பிரிந்தார்.

அபிபி பிகிலாவின் எழுச்சிக்கு பிறகே எத்தியோப்பிய வீரர்களுக்கு மராத்தானிலும்,நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களிலும் உலக அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எத்தியோப்பியாவை பின்ப்பற்றி மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தயார்ப்படுத்த ஆரம்பித்து சாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றளவும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளில் எத்தியோப்பியா ,கென்யா,மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளே முன்னிலை வகிக்கின்றன, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே அவர்கள் முன் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலோ அடிப்படை வசதி கூட எதுவுமில்லை. தேசிய அளவில் சாதித்தால் ராணுவத்தில் ஒரு வேலைக்கொடுப்பார்கள், அங்கிருந்து பயிற்சி செய்து தான் அனைவரும் சாதிக்கிறார்கள், பெரும்பாலோர் சாலையில் ஓடியே பயிற்சி எடுக்கிறார்கள்.நவீன ஜிம்கள் பார்க்க வேண்டும் என்றால் தலை நகர் அடிஸ் அபாபாக்கு தான் வர வேண்டும், அதே போன்று தான் விளையாட்டு அரங்குகளும். தலை நகருக்கு வெளியே எவ்வசதியும் இருக்காது.

3 வேளை சாப்பிட உணவுக்கிடைப்பதே கடினம், அங்குள்ள முக்கியமான வேலை வாய்ப்பே ராணுவப்பணி தான், அடுத்து வேலை என்றால் ஓட்டப்பந்தய வீரர் ஆவது மட்டுமே, மற்றபடி நல்ல வருமானம் கிடைக்க வழியே இல்லாத நாடு. எத்தியோப்பிய வீரர்களிடம் ஏன் தடகள போட்டியில் ஓடுகிறீர்கள் எனக்கேட்டால் சொல்வது என்னவெனில் " முதலில் நாட்டுக்காக ஓடுகிறேன், பின்னர் எனது வாழ்க்கைக்காக" என்பார்கள்.

எத்தியோப்பிய நிலையை ஒப்பிட்டால் இந்தியா சொர்க்க புரி என்பது புரியும், இந்த வசதிகளை கொண்டு நாம் எத்தனை தங்கம் வாங்கியிருக்க வேண்டும், ஆனால் நாம் ஒரே ஒரு தனி நபர் தங்கம் வாங்கவே 2008 வரையில் அபினவ் பிந்த்ரா வரவுக்காக காத்திருந்தோம். ஆனால் எத்தியோப்பியா 1960 முதல் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்று வருகிறது.இதில் வேடிக்கை என்னவெனில் இன்றும் நாம் பாடப்புத்தகத்தில் ஆப்பிரிக்க ஒரு இருண்ட கண்டம் என படித்துக்கொண்டிருக்கிறோம் :-))

ங்கொய்யாலே இப்படி குருட்டு தனமாக பாடப்புத்தகம் எழுதறவங்களை பிடிச்சு சிங்கத்துக்கு இரையாக்கணும் :-))

அடுத்த பதிவில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஆப்பிரிக்க பெண் சிங்கத்தை பார்க்கலாம்.

தொடரும்...
-------------

பின்குறிப்பு;

நம்ம நாட்டினை குற்றம் சொல்ல அல்ல இப்பதிவு, எப்போது பார்த்தாலும் அமெரிக்காவை பார், ஆஸ்திரேலியாவை பார், என முன்னேறிய நாட்டை சொல்லி அப்படி நாம் எப்போ வல்லரசு ஆவது, ஒலிம்பிக்கில் சாதிப்பது என்றே மீடியாவும், மக்களும் பேசுகின்றார்கள், ஆனால் வறுமையிலும், உள்நாட்டுக்கலவரத்திலும் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தங்கள் விடா முயாற்சியாலே சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.

வசதி ,வாய்ப்புள்ளவன் சாதிப்பதை பார்த்து பெருமூச்சு விடுவதை விட ஆப்பிரிக்க நாடுகள் சாதிப்பதை பார்த்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
----

தகவல், மற்றும் படங்கள் உதவி,

விக்கி,எத்தியோப்பியன்ஸ்.காம் ,இணைய தளங்கள்,நன்றி!

*****

Tuesday, July 03, 2012

என்ன கொடுமை சார் இது!-6


(அடுத்த கைப்புள்ளை நான் தானா?)
.
முதல் குடிமகன்!

முதல் குடிமகன் தேர்தலுக்கு போட்டியிடும் திருவாளர்.பிரணாப் குமார் முகர்ஜீ ,தனது பிரச்சாரத்தினை சென்னையில் கனிமொழி இல்லத்தில் இருந்து துவங்கினார்னு செய்தி வருது. இதை விட இந்திய அரசியலமைப்பை கிண்டல் செய்ய வேறு நிகழ்வு தேவையில்லை. ஏன் எனில் குடியரசு தலைவரே இந்திய அரசியலைப்பின் படி நாட்டின் தலைவர், சட்டத்தின் தலைவர்,ஆனால் சட்டத்தின் முன் குற்றவாளி /குற்றம் சாட்டப்பட்ட கூண்டில் நிற்கும் ஒருவரின் இல்லத்தில் இருந்து தான் தனது பிரச்சாரத்தையே துவங்குகிறார் எனும் போது வருங்காலத்தில் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என தெரிகிறது.

இது நாள் வரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே முதலிடத்தில் இருப்பது 2ஜீ ஊழல் என்பதால் ,முதல் குடிமகன் தேர்தல் பிரச்சாரம் துவங்க ஒரு "முதலிடம் " பிடித்து சாதனைப்புரிந்தவர் இல்லமே சரியான இடம் என முதலிடம் தேடி சென்னைக்கு பிரணாப் முகர்ஜி வந்திருப்பாரோ?

என்ன கொடுமை சார் இது!

------------
சாகச ஓட்டுனர்கள்!

ஸ்பீட் ,டாக்சி, ஃபாஸ்ட்& ஃப்யுரியஸ் போன்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் ,கார் , டிரக், பஸ் எல்லாம் மேம்பாலங்களில் காற்றில் பாயும், குட்டிக்கரணம் அடிக்கும், அதை எல்லாம் தேர்ந்த சண்டைப்பயிற்சியாளர்கள் செய்வார்கள்.ஆனால் அதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என மாநகரப்பேருந்து ஓட்டுநர் அனாயசமாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாயும் சாகசம் செய்ய நினைத்து ,மயிரிழையில் தவறிப்போய் சுவற்றில் மோதி ,பல்டி அடித்துவிட்டார். அவர் மட்டும் செல் போனில் பேசாமல் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்து இருந்தால் பாலத்தில் இருந்து வெற்றிகரமாக ஜம்ப் அடித்து சாதித்து இருப்பார், மக்களும் ,மீடியாவும் ஹீரோவாக கொண்டாடி" பாரத் ரத்னாவோ அல்லது ஸ்டியரிங்க் வீல் சக்ராவோ" கொடுக்க சொல்லி போராடி இருக்கும்.

பாவம் ஹீரோ ஆக வேண்டியவர் வில்லனாகிவிட்டார் :-))

அதனைப்புரிந்து கொள்ளாமல் மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் செல் போனில் பேசிக்கொண்டே சாகசம் செய்ய முற்பட்டால் புகார் தெரிவிக்க என ஒரு எண்ணை வெளியிட்டுள்ளது.

அவ்வெண்:"93833-37639'

மூன்று தடவைக்கு மேல் புகாருக்கு ஆளானால் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்படுவாராம்.எச்சரிக்கை விட்ட அடுத்த நாளே , சாகசம் செய்வது எங்கள் பிறப்புரிமை அதனை செய்தே தீருவோம் என செயல்படும் ஒரு சாகச ஓட்டுனரை பாருங்கள் :-))

(பட உதவி:தினமலர்,நன்றி)


என்ன கொடுமை சார் இது!

-----------
சவாரிக்கு அழைக்கிறார்கள்!

(தமிழ் வளர்த்த மலபார் மங்கை)

"ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:

அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…"

மேற்படி விளம்பரம் ஒரு இணைய தளத்தில் காணக்கிடைத்தது. அதைப்பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, அந்தக்காலத்தில அவ்வையார்(நடிச்சவங்க பாடினது தான்) "பாலும், தேனும் ,பருப்பும்"கலந்துனக்கு தருவேன் "சங்கத்தமிழ்" மூன்றும் எனக்கு தான்னு பாடி "முருகனுடன்"டீல் போட்டு தமிழ் வளர்த்தாங்க, படம் "பக்தி" படம் என்றாலும் பட் அந்த டீல் எனக்கு பிடிச்சு இருந்தது.

இப்போ எட்ணாவோ ,பெட்னாவோ என்னமா ஒரு டீல் போட்டு தமிழ வளர்க்கிறாங்கய்யா... சாப்பிடலாம்னு சொல்லுறாங்க(சாப்பாட்டை தான்யா), சவாரிக்கு வான்னு சொல்லுறாங்க, படகுலதான்யா!,இன்னும் வேறு ஏதேனும் சிறப்பு சவாரிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களா என தெரியவில்லை...நோ ..நோ அப்படிலாம் பார்க்கப்படாது சிறப்பு சவாரின்னா "குதிரை சவாரி" போன்றவற்றை சொன்னேன், அட்லீஸ்ட் பச்சைக்குதிரையாவாது தாண்டலாமா? உள்விவரம் அறிந்தவர்கள் கேட்டு சொன்னால் தமிழ்கூறும் நல்லுலகம் தழைக்கும் :-))

மேநாட்டு தமிழர்கள் இதெல்லாம் செஞ்சுட்டு தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகத்திலும், இலவச மோகத்திலும் மூழ்கி இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாதுனு பதிவிட்டு பொங்குவார்கள் :-))

என்ன கொடுமை சார் இது!

------------
last but not the least!

(ரியல் தல!)

தமிழ் பதிவுகளில் அதிரடி மற்றும் அட்டகாசத்துக்கு பேர் போன (வாங்கிய)ஒரு பதிவர், தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் குறித்து ,"பெட்ரோல் விலை ரகசியம், ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பெட்ரோல் விலை ஏறாது, விலைக்குறைப்பு நாடகம், மாற்று எரி பொருள், பயோ டீசல், எத்தனால்" என பெட்ரோலியத்துறை அமைச்சகத்தினை போட்டு தாக்கிப்பதிவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.அப்பதிவுகளுக்கு அமோகமான ஆதரவினையும் நல்கினார்கள்.

இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோலிய அமைச்சகமும், அதிகாரிகளும் கூடிப்பேசி ,இப்படியே விட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து பெட்ரோலே வேண்டாம் ,நாங்களே மாற்று எரிபொருள் வீட்டில் தயாரித்துக்கொள்வோம் என களத்தில் இறங்கிவிட்டால் வியாபாரம் படுத்துவிடும் என பயந்து மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலையை ரூபாய் 2.60 குறைத்துள்ளார்கள்.

தற்போது எல்லாம் பதிவுலகில் எழுதினால் அனைவரும் கவனிக்கிறார்கள் ,குறிப்பாக அதிகார மட்டத்தில் என்பதற்கு இதுவே சான்று, எனவே பொறுப்புடன் எழுதினால் மாற்றத்தினைக்கொண்டு வரலாம் என்பதை மற்றப்பதிவர்களும் உணர வேண்டும். ஆனாலும் அந்த அதிரடி,அட்டகாசப்பதிவரோ ரூ 10 ஆவது குறைத்திருக்க வேண்டும், இது செல்லாது ,செல்லாது என முனகிக்கொண்டு அடுத்தப்பதிவில் , வீட்டிலேயே "மாட்டு சாணியில்"இருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது எப்படி? என பதிவிடலாமா என தலைக்கீழாக தவம் இருக்கிறாராம் :-))

ஹி...ஹி அவர் யார்னு கண்டுப்பிடிக்க "துப்பு" எதுவும் வேண்டுமா?

ஆஹ்ஹா ...ஒன்னு கூடிட்டாங்கய்யா ...எல்லாம் ஒன்னுக்கூடிட்டாங்க ...

இப்ப நீங்களே சொல்லுவீங்க...

"என்ன கொடுமை வவ்வாலு இது!"

*****

Sunday, July 01, 2012

மருதநாயகம் பிள்ளை aka khan sahib "yusuf khan"-1

(ஹி..ஹி ராஜா,ராணி படம் ஒன்னும் கிடைக்கலை...)


முன்னோட்டம்:

மருதநாயகம் என்கிற கான்சாகிப் முகம்மது யூசப் கான் , இந்திய வரலாற்றில் ஹைதர் அலிக்கு அடுத்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சிரமம் கொடுத்த வீரன் , முன்னால் நண்பன் என ஆங்கில அதிகாரிகளாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டுள்ள ஒரு வீரன். அப்படிப்பட்டவனது அக்கால ஒரு ஓவியம் கூட கிடையாது என சொல்கிறார்கள், இப்போதுள்ள ஓவியங்கள் எல்லாம் பிற்காலத்தில் வறையப்பட்டவையே.ஆங்கிலேயருக்கு நண்பனாக இருந்து எதிரியாக மாறி பின்னர் அவரது 39 ஆம் வயதிலேயே துரோகப்பட்டம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி எறியப்பட்ட சோக வரலாறு உடையவன்.

இளமைக்காலம்:

இனிமேல் யூசப் கான் என்றே அழைப்போம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள பனையூரில் சைவ வேளாள குடும்பத்தில் கி.பி 1725 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சரியான ஆண்டு தெரியாது, பெற்றோர் பெயரும் தெரியாது, அவரது இளமைக்காலம் பற்றிய விவரம் எதுவுமில்லை என வ்ரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இளம் வயதில் படிக்காமல் சண்டியர் தனம் செய்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஊர் சுற்றியதால் ஊரார் பொது தண்டனைக்கொடுத்து அதனால் ஊரை விட்டு ஓடியதாகவும், அவரே கோபித்துக்கொண்டு புதுவைக்கு ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு தான் இஸ்லாம் மதத்தினை தழுவி " முகமது யூசப் கான்" எனப்பெயர் மாற்றிக்கொண்டார்.அப்போது மாஷா (அ) மெர்சியா என்ற போர்த்துக்கீசிய-இந்திய பெண்ணை மணந்துக்கொண்டார்.

புதுவையில் ,படகு ஓட்டுதல், தையல் தொழில், சித்த மருத்துவர் என எண்ணம் போல வேலை செய்து காலம் ஓட்டியிருக்கிறார், பின்னர் புதுவையின் அப்போதைய கவர்னர் மான்சியே ஜாக்கஸ் லா என்பவர் வீட்டில் பணியாளராக சேர்ந்து சில காலம்(3 ஆண்டுகள்) பணிப்புரிந்துள்ளார்.

யூசுப் கான் புதுவையில் வேலை செய்துக்கொண்டிருக்கட்டும், அதற்கிடையே தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் ,பகைமைகள், போட்டிகள், இவற்றினை வைத்து வெள்ளையைர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததை எல்லாம் சுருக்கமாக பார்க்கலாம். அப்போது தான் கான் சாகிப் எப்படி அரசியல் மற்றும் ஆட்சியில் முன்னேறி ஒரு வீரனாக பரிணாமம் அடைந்து , வீரனாகவே சதியால் வீழ்ந்தான் என்பது புலப்படும்.

தென்னிந்திய ஆட்சி சூழல்.
(எஞ்சியுள்ள கோட்டையின் பகுதி)

மதுரை நாயக்கர்களில் கடைசியாக ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மறைவுக்கு ,பின் அவரது இளம் விதவை மனைவி "ராணி மீனாக்‌ஷி" வாரிசு இல்லாமையால் தத்து எடுத்த புத்திரன் சார்பாக ஆள்வதற்கு முன் வந்தார்.அவருக்கு போட்டியாக தத்து புத்திரனின் தந்தை "வங்காரு(பங்காரு) திருமலை நாயக்கர் அரசாட்சி உரிமைக்கோரி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

மதுரை நாயக்கர்களுக்கு கீழ் 32 பாளையங்கள் இருந்தன அவர்களிடையே மறவர் பாளையம், தெலுகு நாயக்கர் பாளையம் என பிரிவினையும் ,சண்டையும் காலம் காலமாக ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானம் திருநெல்வேலிக்குட்பட்ட களக்காட்டிற்கு உரிமை கோரி ஒரு சண்டையிட்டு வந்தது.

எனவே தென் தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையும் சண்டையும் வழக்கமான ஒன்றாக இருந்த காலம் அது.

அப்போதைய காலக்கட்டத்தில் மதுரை நாயக்கர்கள் ,ஆர்காட் நாவாப்பிற்கும், நவாப் ஹைதராபாத் நிஜாமுக்கும், நிஜாம் தில்லி சுல்தானுக்கும் வரி செலுத்தக்கட்டுப்பட்டவர்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள்,மற்றும் உறவின் முறைகள்:

ஆர்காட் நாவப்: முகம்மது அன்வருதீன் அலிகான், ,அவர் மகன்கள் முகமது அலிகான் வாலாஜா, மாபூஸ் கான்,அப்துல் ரஹீம் ஆகியோர்.


கர்நாடிக் நவாப் ஆக தோஸ்த் அலிகான்,அவரது மகன் சப்தர் அலிகான்,மருமகன் சந்தா சாகிப் ,ஆர்காட் நவாப்பிற்கு கீழ் ஆட்சியில் இருந்தார்.

சந்தா சாஹிப் ,அவரது மகன் ரசா அலிகான்,

(மேற்கண்ட பெயர்கள் பெயர்கள் அடிக்கடி புழங்கும் என்பதால் பட்டியலிட்டுள்ளேன்)

டெல்லி சுல்தான் வலுவிழந்ததால் ஹைதராபாத் நிஜாம் "நிஜாம் உல் முல்க்" தன்னாட்சிப்பெற்றவராக செயல்ப்பட ஆரம்பித்தார் ,அதே போல ஆர்காட் நவாப்பும் தன்னாட்சிப்பெற்றவர்களாக செயல்பட்டார். ஆர்காட் நவாப் போலவே கர்நாடிக் நவாப் என மைசூர் மையமாக கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்கள்.

இந்த உறவினர்களான இரண்டு நவாப்புகளுக்கிடையேயும் பகை உண்டு ஆனால் நேரடியாக மோதாமல் ,காலத்திற்கு காத்திருந்தார்கள், இவர்கள் இருவரையும் அடக்க நிஜாம் காலம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கிழக்கிந்திய கம்பெனி இறங்கியிருந்த காலம் அது.

இப்படியான குழப்பமான தென்னிந்திய அரசியல் சூழலில் , கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு அஸ்திவாரத்தினை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் இராபர்ட் கிளைவ், அவரின் அப்போதைய வெற்றியில் பெரும் பங்கு வகித்தது வேறு யாரும் அல்ல கான் சாகிப் யூசப் கானே ஆகும்.ஆனால் வரலாற்றில் இராபட் கிளைவிற்கு கிடைத்த புகழும் பெருமையும் கான்சாகிப்பிற்கு கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். வெகு சில நூல்களும் ஆவணங்களுமே கான் சாகிப்பினைப்பற்றி அறிய கிடைக்கிறது.

கான் சாகிப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பின்னர் காணலாம்.

தொடரும்.

------
பின் குறிப்பு:

கீழ்கண்ட நூல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்நூல்களை தரவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை, ஆனால் கூகிள் புக் போன்றவற்றில் படிக்கலாம். History of Tinnevelly by R.Caldwell நூலினை பதிவில் பிடிஎப் ஆக இணைத்துள்ளேன் ,பொறுமை உள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம் :-))

#History of Tinnevelly by R.Caldwell (Bishop Robert Caldwell)

#Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill

#கான் சாகிப் சண்டை- நா.வானமாமலை, வெளியீடு மதுரைக்காமராஜர் பல்கலை.

#தகவல் மற்றும் படங்கள், கூகிள்,மற்றும் கூகிள் புக்,நன்றி!
------------------------
History of Tinnevelly by R.Caldwell :


-------

-----------
பிற்சேர்க்கை:-

எனது சில சரித்திர (தரித்திரம்?)பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பினை ,இணைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் படித்து பாருங்கள், ஆனால் அங்கே போய் பின்னூட்டம் போட்டு என்னையை அலையவிடாதிங்க ராசா...எதா இருந்தாலும் இங்கணக்குள்ள பேசித்தீர்த்துப்போம் :-))

# செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!









*****