Thursday, October 25, 2007

உங்கள் வாகனம் சத்தம் போடாமல் ஓடுவதேன்?






நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, இதனால் சுற்று சூழல் பாதிப்பு, அதிக சத்தம் எல்லாம் வருகிறது. யோசித்து பாருங்கள் அத்தனை வாகனத்திலும் புகைப்போக்கி ,ஒலிக்குறைப்பான்(exhaust silencer) இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்.எல்லார் காதும் கேட்க்காது ஆகிடும்.விமானங்களில் புரொப்பெல்லர் வகை சிறிய விமானங்களுக்கு மட்டும் புகைப்போக்கி ஒலிக்க்குறைப்பான் உண்டு.கப்பல்களிலும் உண்டு.

நம்ம வாகனம் சத்தம் போடாமல் ஓட உதவும் புகைப்போக்கி ஒலிக்குறைப்பான் எப்படி செயல் படுகிறதுனு பார்ப்போம்.நம் வாகனத்திலே இருக்கும் பாகங்களில் நமது கவனத்தினை குறைவாக பெருவது இது தான் , ஆனாலும் நிறைவான வேலையை செய்வது.

ஒரு வாகன எஞ்சினில் அதிக அழுத்தத்தில் காற்றுடன் எரிப்பொருள் கலக்கப்பட்டு பற்ற வைக்கப்படுகிறது, அதன் மூலம் கிடைக்கும் விசையே வாகனம் ஓடப்பயன்படுகிறது.

எரிப்பொருள் காற்றுக்கலவை பற்றவைக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு வெடிக்குண்டு போல சத்தம் எழுப்பும், எரிந்ததும் வரும் புகையை வெளியேற்றினால் தான் அடுத்த சுற்றுக்கு எஞ்சின் தயாராகும். அந்த புகை கிட்ட தட்ட 1200 C வெப்ப நிலையில் இருக்கும். அதிக அழுத்தத்துடன் வெளிவரும் புகை விரிவடைவதால் பலத்த சத்தத்துடன் புகை வெளிவரும். இந்த ஓசையுடன் வாகனத்தை ஓட்ட முடியாது என குறைக்கப்பயன் படுவது தான் புகைப்போக்கி ஒலி குறைப்பான். இதனை சைலன்சர் என்று சொன்னாலும் "muffler" என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.

இனி ஒலிக்குறைப்பான் என்றே சுருக்கமாக சொல்வோம், அது செயல் படும் விதத்தினை பார்ப்போம்.

ஒலிக்குறைப்பான்கள் செயல்படும்விதம்.

1) ஒலி உறிஞ்சுதல்
2)ஒலி எதிரொலித்தல்,
3)ஒலி தடுத்தல்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ , அல்லதும் மூன்றும் இணைந்தோ ஒரு ஒலிக்குறைப்பான் செய்யப்படும். அது வாகனத்தின் தன்மை, செலவிடும் தொகைக்கு ஏற்ப மாறும்.

ஒரு சிலிண்டர் , பல சிலிண்டர்கள் உள்ள எஞ்சின்கள் உள்ளது, அவற்றை ஒரு குழாய் மூலம் ஒன்றாக இணைத்து(exhaust port and manifold) ஒலிக்குறைப்பான் பகுதிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இனி ஒலிக்குறைப்பான் உள்ளே செல்வோம்.

ஒலிக்குறைப்பான் உள்ளே ஒரு குழாயில் சிறு துளைகள் இட்டு அதன் மீது கண்ணாடி இழைகள்( glasswool)கொண்டு சுற்றி அதன் மூலம் புகையை வர வைப்பார்கள். ஒலியை கண்ணாடி இழை உறிஞ்சி குறைக்கும், மேலும் புகையின் அழுத்தம் குறைவிக்கப்படும். அதன் பின்னர் புகை வெளியேற்றப்படும் . இதில் நேரானப்பாதை , எதிர்ப்பாதை வெளியேற்றம் என்ற இரண்டு முறை இருக்கிறது.
நேர்ப்பாதை புகைப்போக்கி

ஓரே குழல் மூலம் புகை உள்ளே வந்து வெளியேருவது நேரானாது. ஒரு குழல் மூலம் வந்த புகை, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு குழல் மூலம் வெளியேற்றப்படுவது,இதில் புகை சுற்றுப்பதையில் செல்வதால் ஒலியின் வலிமை அதிகம் குறையும். எதிர்ப்பாதை புகைப்போக்கி

மேற் சொன்ன முறையில் ஒலி உறிஞ்சுதல், தடுத்தல் என்ற இரண்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கும்.

கண்ணாடி இழையை விட அதிக பயன் உள்ள ஒலிக்குறைப்பான், ரெசனோட்டர்(resonator) வகை ஒலி எதிரொலித்தல் ஒலிக்க்குறைப்பான் ஆகும்.

இதில் புகை சிறு துளைகள் உள்ள குழாய் மூலம் ரெசனோட்டர் அறை என்ற ஒன்றின் உள் செலுத்தப்படும், அந்த அறையில் சில பள்ளங்கள்/புடைப்புகள் இருக்கும் அதில் பட்டு எதிரொலிக்கும் ஒலி சரியாக உள்ளே வரும் ஒலியின் கட்டத்திற்கு(phase) எதிரான கட்டத்தில் உள்ள ஒலியாக(opposite phase) இருக்கும். இரண்டு ஒலி அலைகளும் ஒன்றின் மீது ஒன்று மோதி வலுவிழந்து விடும். பின்னர் புகை அடுத்த அறைக்கு எடுத்து செல்லப்பட்டு நேர் குழல் அல்லது எதிர்ப்பாதை குழல் வழியாக வெளியில் எடுத்து செல்லப்படும்.

எல்லா வகை ஒலிக்குறைப்பானிலும் குறுகிய குழாயில் வரும் புகை அகன்ற ஒலிக்குறைப்பானுக்கு வரும் போது மெதுவாக விரிவடைய வைப்பதன் மூலம் அழுத்தம் வெப்பம் குறையும், மேலும் ஒலியை வலுவிழக்க செய்ய சுற்றுப்பாதை , ஒலி உறிஞ்சும் பொருள், எதிர்க்கட்ட ஒலியை கொண்டு ஒலியை குறைத்தல் ஆகியவற்ற்றின் அடிப்படையில் தான் எல்லாவகை ஒலிக்குறைப்பான்களும் செயல் படுகிறது.

எஞ்சினின் திறனுக்கு ஏற்ப ஒலிக்குறைப்பானின் குழல் நீளம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,வடிவம் மாறும் , இல்லை எனில் ஒரு எதிர் அழுத்தம் (back pressure)ஏற்பட்டு புகை மீண்டும் எஞ்சினுள் செல்லும், அது எஞ்சினைப்பாதிக்கும்.அப்படி எதிர் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எஞ்சினின் சக்தியைக்கொண்டு ஒரு விசையை ஒலிக்குறைப்பானுக்கு தருவதை டர்போ சார்ஜிங் என்பார்கள்.

சிறிய வாகனங்களில் ரெசனோட்டர் அறை,எல்லாம் ஒரே குழல் உள்ளேயே வைத்து இருக்கும். கார் போன்ற வாகனங்களுக்கு தனியே அடுத்தடுத்து புகைப்போக்கியின் பாதையில் இருக்கும்.வெளிநாட்டுக்கார்கள் சத்தம் குறைவாக இயங்க காரணம் அவர்கள் பொருத்தும் ரெசனோட்டரின் தரம் தான் காரணம்.

தற்போது ரெசனோட்டரில் எதிரொலி மூலம் ஒலியை மட்டுப்படுத்துவதற்கு பதில் ஒரு மின்னணு கருவி மூலம் ஒரு எதிர்க்கட்ட ஒலியை உருவாக்கி புகை,ஒலி வரும் திசைக்கு எதிரில் அனுப்பி ஒலியை வலுவிழக்க செய்து குறைக்கலாம் எனக்கண்டுப்பிடித்துள்ளார்கள். இம்முறை இன்னும் வாகனங்களில் நடைமுறைக்கு வரவில்லை.
காரின் புகைப்போக்கி அமைப்பு

கார்களுக்கு கூடுதலாக கேட்டலிடிக் கன்வெர்டெர் என்ற அமைப்பும் இருக்கும்.இதில் பல்லாடியம், பிளாட்டினம், ரோடியம் கலவையின் பூச்சு கொண்ட சிறு துளைகள் கொண்டபீங்கான் தகடுகள் இருக்கும் .இதனை ஒரு துருப்பிடிக்காத கலத்தினுள் வைத்திருப்பார்கள். இதன் வழியே புகை செல்லும் போது , சரியாக எரியாத எரிப்பொருளையும், நைட்ரஜன் ஆக்சைடு , கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை மீண்டும் ஆக்சிஜன் ஏற்றம் செய்து காற்று மாசுபடுதலைக்குறைக்கும். தற்போது இரு சக்கர வாகனத்தின் புகைப்போக்கியிலும் கேட்டலிடிக் கன்வர்டர் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இதனை மாற்ற வேண்டும்.
கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள் அமைப்பு

Wednesday, October 17, 2007

விசில் அடிக்கலாம் வாங்க!


கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் , மாநகரப்பேருந்து என்று எங்கும் கேட்கும் சத்தம் விசில் சத்தம்! நம்மில் பலரும் விசில் அடித்து இருப்பார்கள்(சிலருக்கு காத்து மட்டும் வரும்) சிலர் வாய்ல விரல் வைத்து அடிப்பார்கள், சிலர் கடையில் விற்கும் விசில் வாங்கி ஊதுவார்கள். வாயில் வைத்து உஷ் என்று ஊதினால் எப்படி உய்ங்க் என்று சத்தம் வருகிறது?

விசிலுக்குள்ள என்ன இருக்கு?

விசில் என்பது ,ஒரு சிறிய குழல் , அதனை கழுத்து என்பார்கள், பிறகு உருண்டையான பந்து போன்ற வெற்றுக்கூடு அதனுடன் இணைந்து இருக்கும். அதன் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். இது தான் ஒரு விசிலின் அமைப்பு.

குழல் பகுதியை வாயில் வைத்து காற்றினை உட்செலுத்தும் வண்ணம் ஊதினால் சத்தம் வரும்! அந்த சத்தம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

விசிலை அறிவியல்ப்பூர்வமாக அழைத்தால் ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசொனட்டோர் என்று அழைக்க வேண்டும்(Helmholtz resonator or Helmholtz oscillator ) உருண்டையான பந்து ஒரு காற்றுக்கலமாகசெயல்படுகிறது இதனை தான் ரெசனோட்டர் என்பது. இது தான் ஒலி வரக்க்காரணமாக இருக்கிறது.


ஹெர்ம் ஹோல்ட்ஸ் என்பவர் காற்றின் அதிர்வில் இருந்து ஒலி வருவதற்கான அறிவியல்ப்பூர்வமான விளக்கம் கொடுத்தார். அதை விளக்க அவர் விசிலை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதனை ஹெர்ம்ஹோல்ட்ஸ் ரெசனோட்டர் என்பார்கள்.விசில் என்பது முன்னரே இருந்தாலும் அவர் பெயரால் விசிலையும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசனோட்டர்


ஹெர்ம் ஹோல்ட்ஸ் தத்துவத்தின் படி விசிலில் இருந்து ஒலி எப்படி வருகிறது எனப்பார்ப்போம்.

குழலின் வாய்ப்பகுதியின் வழியாக காற்றினை செலுத்தும் போது காற்றின் ஒரு பகுதி உருண்டை வடிவ பந்தில் உள்ள மேற்புற திறப்பின் வழியே மேலே செல்கிறது மறு பகுதி உருண்டை வடிவத்தின் உட்பகுதியில் கீழ் நோக்கி செல்கிறது,அப்போது பந்தின் உட்பகுதியில் உள்ள காற்றினை அழுத்துகிறது. இப்பொழுது மேல் திறப்பின் வழி சென்ற காற்றால் வெற்றிடம் ஏற்பட்டு மேற்ப்பரப்பில் அழுத்தம் குறையும் இதனால் பந்தின் உட்பகுதியில் அழுத்தப்பட்ட காற்று மீண்டும் விரிவடையும், இந்த விளைவு தொடர்ச்சியாக நடக்கும் போது அதுவே ஒரு ஒத்திசைவான காற்றின் அதிர்வாக மாறும்(harmonic vibration of air) தொடர்ச்சியாக ஊத சீரான இனிமையான ஒலி வரும்.

உருண்டையான பந்து போன்ற வடிவத்தின் கன அளவிற்கு ஏற்ப ஒலியின் வீச்சு இருக்கும். இந்த உருண்டைதான் ரெசனோட்டர் ஆக செயல்படுகிறது. பந்தில் உள்ள காற்று தம்பத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒலியின் வலிமை இருக்கும்,ஏன் எனில் காற்று தம்பத்தின் அதிர்வு தான் ஒலி உருவாகக்காரணம்.

விசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

வீசில் ஒலியின் அதிர்வெண் கண்டுப்பிடிக்க ஹெர்ம் ஹோல்ட்ஸ் கண்டுப்பிடித்த சூத்திரம்,



f= frequency
c= speed of the sound
s= surface area of the top hole
v= volume of the air
L= length of the whistle neck

வீணை, கித்தார் போன்றவற்றிலும் ஒரு காற்றுக்கலம் உருண்டையாகவோ இல்லை பெட்டிப்போன்றோ இருக்கக்காரணம் இது தான்.


Tuesday, October 16, 2007

குண்டு துளைக்காத கண்ணாடி!

சாதாரணக்கண்ணாடி நம் வீடு முதல் அலுவலகம் வரை எங்கு பார்த்தாலும் காணக்கிடைக்கிறது. கண்ணாடியை கவனமாக கையாளவும் என்றே சொல்வார்கள் காரணம் அது எளிதில் உடைந்து விடும். ஆனால் சில கண்ணாடி துப்பாக்கியால் சுட்டால் கூட தாங்கும் வலிமை மிக்கதாகவும் இருக்கிறதே எப்படி, அதே கண்ணாடியா அல்லது வேறா?

குண்டுதுளைக்காத கண்ணாடி எதனால் ஆனது?

முதலில் கண்ணாடி என்றால் என்னவென்று பார்ப்போம்.
கண்ணாடி என்பது வேதியல் ரீதியாகப்பார்த்தால் வேறொன்றும் இல்லை "மணல்" தான். சிலிக்காவால் ஆனது தான் மணல். இதனை அதிக வெப்பத்தில் சூடுப்படுத்தி உருகவைத்து குளிரவைத்தால் கிடைப்பது தான் கண்ணாடி.சுத்தமான சிலிக்காவில் இருந்து கண்ணாடி தயாரிக்கலாம் என்றாலும், எளிதாக தயாரிக்க சிலிக்காவுடன், சுண்ணாம்பு, சோடீயம் கார்பனேட் எல்லாம் கலந்து சூடுப்படுத்தி, உருக்கி பின்னர் குளிர வைப்பார்கள்! கண்ணாடி என்பது திடப்பொருளோ, திரவப்பொருளோ அல்ல அது ஒரு உறைந்த திரவம்!(frozen liquid)

இப்படி தயாரிக்கப்படும் கண்ணாடி ஒளி ஊடுருவும் வகையிலும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருக்கும்.

மேலும் கடினப்படுத்த கண்ணாடி தயாரிக்கும் போது வேகமாக குளிர வைப்பார்கள் , இதற்கு "குயிஞ்சிங்க்"(quenching) என்று பெயர்.

குண்டு துளைக்காதக்கண்ணாடி:

துப்பாக்கி குண்டினை தாங்கும் வலிமைக்கொண்ட கண்ணாடி ஒரேக்கண்ணாடிக்கிடையாது, பல மெல்லிய கடினமாக்கப்பட்ட கண்ணாடி ஏடுகளை ஒன்றன் மீது ஒன்றாக படியவைத்து தயாரிக்கப்படுவது. ஒவ்வொருக்கண்ணாடிப்படிமத்தின் இடையிலும் பாலிக்கார்பனேட் என்ற பிளாஸ்டிக் படிமம் வைக்கப்படும்.எனவே குண்டு துளைக்காத கண்ணாடியில் ஒரு ஏடு கண்ணாடி, அடுத்த ஏடு பாலிகார்பனேட் என அடுத்தடுத்து இருக்கும்.

பாலிக்கார்பனேட் என்பது ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் ஆகும் இதனை பல இடங்களிலும் பார்த்து இருப்போம், சுத்திக்கரிக்கப்பட்ட குடி நீர் கேன்கள் செய்யப்பயன்படுவதும் பாலிக்கார்பனேட் தான்.

பாலிக்கார்பனேட்டின் ரசாயான மூலங்கள்:

பிஸ்பினால் -A (bisphenol-A), சோடியம் ஹைட்ராக்சைடு(NAOH), பாஸ்ஜீன்(phosgene) ஆகியவற்றை வினைபுரியவைத்து கிடைப்பது தான் பாலிக்கார்பனேட்,இதனை பிஸ்பீனால் பாலிக்கார்பனேட் என்பார்கள்.

மற்றொரு வகை பாலிக்கார்பனேட் பாலி மெத்தில் மெத்தாகிரைலேட் (poly methyl-methacrylate)ஆகும்.



இவ்வாறு தயாரிக்கப்பட்ட கண்ணாடி அதன் தடிமனுக்கு ஏற்ப குண்டு துளைக்காத தன்மையுடன் இருக்கும். சாதாரண கைத்துப்பாக்கி முதல் ஏ.கே-47 வரைக்கும் துப்பாக்கியின் சக்திக்கு ஏற்ப கண்ணாடியின் தடிமன் வேறுபடும்.அதிகப்பட்சமாக 50 மி.மீ தடிமன் கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது.

குண்டு துளைக்காத கண்ணாடி செயல்படும் விதம்:

துப்பாக்கி குண்டு மோதியதும் கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள ஏடு மட்டும் விரிசல் விடும் இதன் மூலம் துப்பாக்கி குண்டின் விசை பல திசைகளிலும் பரவி குறையும், அதற்கு அடுத்துள்ள பாலிக்கார்பனேட் ஏடு குண்டினால் ஏற்படும் விசையின் அதிர்வை மட்டுப்படுத்தும், இதனால் வேகம் குறையும் குண்டு துளைக்கும் சக்தி இழக்கும்.

a bullet proof glass after fired

கண்ணாடி என்பது கடினமான ஒரு பொருள், இடையில் உள்ள பாலிக்கார்பனேட் பிளாஸ்டிக் , இரப்பர் போன்று அதிர்வுகளை உள்ளிழுத்துக்கொள்ளும்.

வழக்கமான குண்டு துளைக்காத கண்ணாடி மிக கனமாக இருக்கும் இதனால் இக்கண்ணாடிப்பொறுத்தப்பட்ட வாகனத்தின் செயல் திறன்ப்பாதிக்கப்படும் , இதனைக்குறைக்க தற்சமயம் நவீன வகையிலான லேசான எடைக்கொண்ட ஒருக்கண்ணாடிப்பயன்படுத்தப்படுகிறது. இக்கண்ணடியில் சிலிக்காவுடன் அலுமினியம் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவை கலந்து இருக்கும், இதனால் அது குறைந்த எடையில் அதிக கடினமாக இருக்கும்.இக்கண்ணாடியை அலுமினியம் ஆக்சிநைட்ரைட் கண்ணாடி என்பார்கள்.

ஒரு குண்டு துளைக்காதக்காரில் , குண்டு துளைக்காத கண்ணாடி, அதன் உலோகப்பகுதியில் உள்ப்புறமாக இன்னும் தடிமனான இரும்பு தகடுகளும் பொறுத்தப்பட்டு இருக்கும், காரின் அடிப்பகுதியில் "fibre reinforced plastic" பொறுத்தி இருப்பார்கள்.

உங்களுக்கும் குண்டு துளைக்காத கார் வேண்டுமா விலை அதிகம் இல்லை , குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் ஒன்றின் விலை 18 லட்சம் தான்.கண்ணிவெடி தாக்காத கார் எனில் 70 லட்சம் ஆகும். விலையுயர்ந்த மாடல் கார் எனில் அதற்கு ஏற்ப விலை. எல்லாக்கார்களும் குண்டு துளைக்காத கார்களாக மாற்றி அமைக்கபடுவது தான். எந்தக்கார் தயாரிப்பு நிறுவனமும் சொந்தமாக தயாரிக்கவில்லை.

வேகமா எங்கே கிளம்பிட்டிங்க குண்டு துளைக்காத கார் வாங்கவா?

Friday, October 12, 2007

சில வினாக்களும் , விடைகளும்!





விக்கி பசங்களின் கேள்வியின் நாயகனே பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கான பதில்கள், பிழை இருப்பின் திருத்தலாம்!

ரவிசங்கர் கேட்டது:

//9. பாம்புக்கு காது இருக்கிறதா? பால் குடிக்குமா?//

பாம்புக்கு காது இல்லை, அதன் உடல் மூலம் தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே ஒலியை கிரகிக்கும், மற்ற உயிரினங்களின் நட மாட்டத்தை அறியும்.

பாம்பின் நாக்கு பிளவுப்பட்ட தன்மையுடன் இருக்கும் , மேலும் அதற்கு திரவத்தை உறிஞ்சும் தொண்டை கிடையாது. எனவே பால் எல்லாம் குடிக்காது. இன்னும் சொல்ல போனால் மென்று தின்னும் அமைப்பில் அதன் தாடைகளும் இல்லை, அப்படியே முழுங்கும்.

சிபிக்கேட்டது:

//ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?//

ரோலர்கள் அது தரும் அழுத்தத்தின் மூலம் தரையை சமம் செய்கிறது , சிறியதாக வைத்தால் தேவையான அழுத்தம் கிடைக்காது. ஆனால் தற்போது வேகமா இயங்கும் (ஓடும்) ரோட் ரோலர்கள் இருக்கிறது.

சாலைப்பணிகள் அல்லாமல் நிலத்தை சமன் செய்ய என சிறிய ரோலர்களும் உள்ளது. தேவையைப்பொருத்து அளவு.

//தீக்கங்குகளை தண்ணீரில் போட்டால் "புஸ்"ஸென்ற சப்தம் வருவது எதனால்?

(இந்தியாவிலும் இதே சத்தம்தான் கேட்கிறது?)

வெந்நீரில் போட்டாலும் இதே சப்தம் வருமா?//

எல்லாம் வெப்ப நிலை வேறுபாடு தான். வென்னீரை எரியும் நெருப்பில் ஊற்றினால் அணைக்காதா? தீக்கங்கின் வெப்பத்தில் நீர் ஆவியாகிவிடும், அது விரைவாக நடப்பதால் ஏற்படும் விரிவினால் காற்றில் ஒரு அதிர்வு ஏற்படும் அது தான் புஸ் சப்தம். அதாவது தீக்கங்கின் அருகில் மட்டும் காற்று விரிவடையும் மற்றப்பகுதியில் காற்று விரிவடையாது இருக்கும் இந்த வித்தியாசம் தான் சத்தம்.

துளசிகோபால் கேட்டது:
//போட்டோஜினிக் என்றால் என்ன?//

ஒரு புகைப்படம் என்பது பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும் ஒளியை புகைப்பட சுருளில் சிறைப்பிடிப்பது.

நம் முகம் எந்த அளவுக்கு ஒளியை மீண்டும் வெளியிடுகிறதோ அந்த அளவுக்கு நம் முகம் தோற்றப்பொளிவுடன் இருக்கும்.

முகத்தில் இருக்கும் மேடுகள் ஒளியை நன்கு திருப்பும் , பள்ளங்கள் அப்படி திருப்பும் ஒளியின் அளவு குறைவாக இருக்கும்.

இதை எல்லாம் சரிக்கட்ட தான் மேக் அப். மேக் அப் பொருள் சிவப்பாக காட்டும் என்றாலும், அதில் நிறைய ஒளியை எதிரொளிக்கும் ரசாயனங்களும் இருக்கும்.

இன்னும் சொல்ல போனால் எந்த அளவு லைட்டுக்கு எந்த கிரேட் மேக் அப் என்று கூட உள்ளது.

பிலிம்களும் ஒளி அளவுக்கு ஏற்றார் போல ரேட்டிங்க் இருக்கு. சாதாரணமான கையடக்க கேமிரா பிலிம் பார்த்தீர்கள் எனில் 100 என போட்டு இருக்கும். அப்படியே 200, 400, 600 என ரேட்டிங்களில் எல்லாம் பிலிம் வருகிறது, அதற்கு ஏற்றார்ப்போல ஒளியை நன்கு வாங்கிக்கொள்ளும். இண்டோர், அவுட்டோர் எனவும் பிலிம் இருக்கிறது.
(சாமுத்திரிகா லட்சணம் படி முகம் இருப்பது வேறு அம்முகம் நேரிலும் அழகாகவே இருக்கும்)

ஓகை கேட்டது:

//கௌ்வி: கிபி 1000 ஆவது ஆண்டில் உலகின் மிக உயரமான கட்டிடம் எது?//

அப்பொழுது என்று இல்லை ஆரம்பத்தில் இருந்தே மிக உயரமான கட்டுமான அமைப்பு எகிப்திய கிரேட் பிரமிட் தான் உயரம் 487 அடி. தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 216 அடிகள் தான். தற்காலத்தில் எக்கச்சக்கமான உயரமான கட்டிடங்கள் வந்தாச்சு . தற்போது உலகின் உயரமான கட்டிடம் ,தாய் பே-101 , தைவான், உயரம்1671 அடிகள், அதற்கு முன்னர்ர் பெட்ரோனாஸ் டவர், மலேசியா உயரம் 1483 அடிகள்.

தருமி் கேட்டது:

//டென்னிஸ் மேட்சுகளில் இப்போதெல்லாம் controvercial calls பற்றி விளையாடுவோர் கௌ்வி எழுப்பலாம். உடனே பந்து கோட்டின் எந்த இடத்தில் விழுந்தது என்பது உடனே காண்பிக்கப் படுகிறது.
இது எப்படி?//

டென்னிஸ் கோர்ட்டில் உள்ள எல்லைக்கோடுகள் வெள்ளை நிறப்பட்டியாக இருக்கும் அதன் அடியில் முழுவதும் பட்டையாக சென்சார்கள் வைத்து , கம்பியூட்டர் உடன் இணைத்து இருப்பார்கள், பந்து கோட்டில் பட்டதும் பீப் சத்தம் வரும். மேலும் பலக்கேமிராக்கள் இருக்கும் அதன் மூலம் பதிவு செய்துக்கொண்டே இருப்பார்கள். தொலைக்காட்சியில் ஏதேனும் ஒரு காமிரக்கோணம் தான் வழக்கமாக வரும். ஒளிப்பரப்புவதற்கு ஒரு பெரிய அணியே வேலை செய்யும்.

//கிர்க்கெட் மேட்சுகளில் விழுந்து எழும்பிச் செல்லும் பந்தைமட்டும் close-up-ல் replay-ல் காட்டுகிறார்களே. நிச்சயமாக manual-ஆக அந்தப் பந்தை மட்டும் படம் பிடிக்க முடியாது - with very long focal length lenses.
எப்படி முடிகிறது.//

கிரிக்கெட் மேட்சில் காட்டும் பந்து கிராபிக்ஸில் காட்டுவது. அதை சொல்கிறீர்களா, இல்லை மற்ற ரீப்பிளே வா? எதுவாக இருந்தாலும் சாத்தியமே.

//one way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?//

போலரைசர் பிலிம்களின் வேலை அவை.வழக்கமாகஒளிக்கற்றையில் பல தளங்களிலும்ம் ஒளி அதிர்வடைந்து கொண்டு ஒரு கலவையாக இருக்கும்.இதில் நாம் சில தளங்களை மட்டும் வடிக்கட்டி ஒரே தளத்தில் மட்டும் அதிரும் சமச்சீரான அதிர்வு கொண்ட ஒளியைப்பெற முடியும். அல்லது முழுவதுமாக வடிகட்டி தடுக்க முடியும். ஒரு வழிக்கண்ணாடி, கார் கண்ணாடி பிலிம்களில் ஒரு பக்கத்தில் இருந்து வரும் ஒளியின் அதிர்வுகளை மட்டும் வடிக்கட்டி விடும் போலரைச்சர் பிலிம்கள் அல்லது பூச்சுகள் இருக்கும்.

சிபி கேட்டது

//சாதாரணமாக உணவுப் பொருட்களை தீயில் காட்டி சூடு செய்யும்போது இன்னும் மொறுமொறுப்புதானே (கிரிஸ்பி) அடையவேண்டும். மாறாக பிஸ்கட்டுகளை தீயில் சுட்டால் கிரிஸ்பி தன்மையை இழந்து நெகிழ்வதன் காரணம் என்ன?//

காரணம் பிஸ்கெட்டில் உள்ள சர்க்கரை, நேரடியாக சுட்டால் வெப்பத்தில் இளகுவது. நீங்கள் மைரோவேவ் அவனில் வைத்து சுட்டால் அப்படி ஆகாது மொறு மொறுப்பாக இருக்கும்.

Tuesday, October 09, 2007

சேது சமுத்திர திட்டம்:எதிர்ப்புகளும் , காரணங்களும்! -2

சேது சமுத்திர திட்டம் , அதன் சாதக பாதகங்கள், அதற்கு எதிராக எழும் எதிர்ப்ப்புகள் என முந்தையப்பதிவில் பார்த்தோம் , பதிவை விட அதில் பின்னூட்டங்களில் மி்க விலாவாரியாக பேசப்பட்டாலும் பலருக்கும் சில வெகு சன ஊடகங்களில் ராமர் பாலம் என்ற ஒன்றைக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட அசட்டு வாதங்களையே அதிகம் முன்னிறுத்தி பேசினர்.

எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக உலக அளவில் பெரிதும் பயன்படும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இரண்டு கடல் வழிக்கால்வாய்கள் (பனாமா, சூயஸ்), மேலும் இந்திய துறை முகங்கள் , முக்கியமாக குறிப்பிடப்படும் இலங்கையின் கொழும்பு துறை முகங்களின் கையாளும் திறன் அடிப்படையில் தொழில் நுட்ப ரீதியானப் பார்வையில் , சேது கால்வாயை ஒப்பிட்டுப்பார்ப்போம்.

பனாமா கால்வாய் தொழில் நுட்ப விவரம்:

வட அமெரிக்க , தென் அமெரிக்க இடையே உள்ள பனாமா இஸ்துமஸ் என்ற நில இணைப்பை வெட்டி உருவாக்கப்பட்டது.

கால்வாய் அளவுகள்:
நீளம்: 59 மைல்கள்
ஆழம்: 41 - 45 அடிகள்
அகலம் 500 - 1000 அடிகள்(கால்வாயின் மிக குறுகிய அடிப்பகுதி அகலம் 300 அடிகள்)

இந்த கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கிறது , எனவே எல்லா இடங்களிலும் ஒரே அகலம் , ஆழம் இல்லை. எனவே இக்கால்வாயில் செல்லும் அனுமதிக்கப்பட்ட கப்பல் அளவு குறைந்த பட்ச ஆழம் ,அகலத்திற்கு ஏற்றவாறு தான் இருக்க வேண்டும் என்பதைக்கணக்கில் கொள்ளவும்.

இந்தக்கால்வாயில் மூன்று பெரிய நீர் கதவுகள் வைத்து (water locks) கால்வாயில் செயற்கையாக நீரினை தேக்கி இக்கால்வாயின் ஆழத்தை இரட்டிப்பாக்கி சற்றே பெரியக்கப்பல்களையும் செலுத்துகிறார்கள். அது இல்லாமல் மேலும் பன்னிரண்டு சிறிய நீர்க்கதவுகள் உள்ளது.

இதில் நீர் செலுத்தி தேக்க உதவுவது அங்கு பாயும் நதிகளானா "the charges river(இதற்கு 24 கிளை நதிகள் வேறு உண்டு), obispo river" ஆகியவற்றின் நீர் ஆகும் அதற்காக அணைகள் கூடக்கட்டப்பட்டு உள்ளது.

இந்த நதிகளால் கால்வாய்க்கு உதவி என்றாலும் பிரச்சினையும் உண்டு, அந்த நதிகளும் அதன் கிளை நதிகளும் மணலை அடித்து வந்து கால்வாயினை மேடிட வைக்கிறது எனவே வருடா வருடம் தூர் வாரிக்கொண்டே இருப்பார்கள். அதோடு அல்லாமல் கால்வாய் துவக்கத்தில் கடல் நீரோட்டம் காரணமாகவும் மணல் படிகிறது அதற்காக நீரடியில் சில்டிங்(silting) தடுப்புகளும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் அட்லாண்டிக் கடல் பக்கம் உள்ள நிலம் 20 இன்ச்கள் பசிபிக் கடலை விட தாழ்வானாது. எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில் கடல் அலையின் உயரம் 2.5 அடிக்கு தான் எழும், ஆனால் பசிபிக்கில் 21.1 அடிக்கு அலை அடிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே இக்கால்வாயில் கப்பல் செலுத்துவது எப்போதும் அபாயமானது, அதிக கவனம் தேவை.

இது போன்ற தொழில்நுட்ப காரணங்களால் தான் இக்கால்வாயின் ஆழத்தை அதிகரிக்க முடியவில்லை. ஆரம்பக்காலத்தில் சிறியக்கப்பல்கள் தான் செல்லும் பின்னர் படிப்படியாக ஆழம், நீர் கதவுகள் எனப்போட்டு தற்போது தான் மிதமான பெரியக்கப்பல்கள் செலுத்தப்படுகிறது ,அதுவும் அதிக எடை இருந்தால் அதனை இறக்கி சிறுகப்பல்களில் எடுத்து செல்வார்கள்.

சூயஸ் கால்வாய்:

செங்கடலையும் , மத்திய தரைக்கடலையும் இணைக்கும் வண்ணம் எகிப்தில் வெட்டப்பட்ட கால்வாய் இது.
கால்வாய் அளவுகள்:
நீளம்: 105 மைல்கள்.
அகலம்: 300 - 365 மீட்டர்
ஆழம்: 16 மீட்டர் - 21 மீட்டர்.

இக்கால்வாய் வெட்டுவதிலும் இரண்டுபகுதிகளுக்கும் இருக்கும் கடல் மட்டம் வித்தியாசம் பிரச்சினையாக இருந்தது, பின்னர் அதனை சமாளித்து அதற்கேற்ப வடிவம் அமைத்தார்கள். மணல் பாங்கான பகுதி என்பதால் அதிகம் மணல் படிந்து தூர்ந்து விடும் ,அடிக்கடி தூர்வாருகிறார்கள்.

இக்கால்வாயிலும் மிகப்பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. இக்கால்வாயினை இதுவரை 15 முறை ஆழப்படுத்தி இருக்கிறார்கள் , தற்போது 22 மீட்டராக ஆழப்படுத்தும் பணியும் நடக்கிறது.

மும்பை துறை முகம்:

இங்கு இரண்டு துறை முகங்கள் உள்ளது மும்பை துறை முகம் , ஜவகர்லால் நேரு துறைமுகம்.

மும்பை துறைமுகம் அளவுகள்:

இதில் மூன்று கப்பல் நிறுத்தங்கள்(docks) இருக்கிறது ,

சராசரியாக ஆழம்: 9.1 மீட்டர் முதல் 11.1 மீட்டர் வரை

துறைமுகத்தை அனுகும் கால்வாய் நீளம்: 21 கி.மீ.

ஆழம்:10.7 - 11.0மீட்டர்

ஜவகர்லால் நேரு துறைமுகம்:

சராசரியாக ஆழம்: 13.5 மீட்டர்

அணுகும் கால்வாய் நீளம்: 7.22 கி.மீ,

ஆழம்:11.5 மீட்டர்

கொழும்பு துறைமுகம்:

துறைமுக ஆழம்: 15 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்: 1.1கி.மீ.

ஆழம்: 16 மீட்டர்.

தூத்துக்குடி துறைமுகம்:

ஆழம்:10.9 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்:1450 மீட்டர்,

ஆழம்:10.9 மீட்டர்.

சென்னை துறைமுகம்:
இங்கு இரண்டு கப்பல் நிறுத்தம் உள்ளது.

ஆழம்:18 மீட்டர்.

அணுகும் கால்வாய் நீளம்: 7 ,கி.மீ

ஆழம்: 18.6 - 19.2 மீட்டர்



தற்போது சேது திட்டக்கால்வாயின் அளவுகளையும் பார்ப்போம்,

சேதுக்கால்வாய்:

நீளம்:167 கி.மீ
அகலம்: 300 மீட்டர்.

ஆழம்: 12 மீட்டர்(12.8 என பத்திரிக்கைகளில் வந்துள்ளது)

ஒப்பீட்டு பார்வையில் ஒரு அலசல்:

அதனோடு இத்துறைமுகங்களின் ஆழத்தினை ஒப்பிட்டால் சேதுக்கால்வாய் ஒன்றும் மிகவும் பின் தங்கி போய் இல்லை என்பதும், எதிர்காலத்தில் மேலும் அக்கால்வாயின் ஆழம் மேம்படுத்தப்படும் என்பதும் புரியும் , எனவே சிலர் சொல்வது போன்று அத்திட்டம் ஒன்றும் உதவாத வெறும் கனவல்ல என்பதும் புரியும்.

நாம் பார்த்த சர்வதேசக்கால்வாய்களில் பனாமா கால்வாய் சேதுக்கால்வாய் அளவே ஆழம் தற்போதும் இருக்கிறது, நீர் கதவுகள் வைத்து பெரிய கப்பல் விடுகிறார்கள். அதுவும் தற்போது தான் சாத்தியம் ஆயிற்று. எனவே நாமும் கால்வாய் வெட்டியப்பிறகு படிப்படியாக அதன் திறனை அதிரிக்கலாம் தானே. அதற்குள் அங்கே பாருங்கள் இங்கே பாருங்கள் இக்கால்வாய் நடை முறைக்கு ஒத்து வராது என்பது ஏன்?

மேலும் சூயஸ், பனாமா கால்வாய்களிலும் மணல் படிவது நடக்கிறது , தூர் வாரப்படுகிறது , அனைத்து துறைமுகங்களிலும் மணல் படியும் , தூர்வாரப்படும். இது ஒரு பொதுவான நடைமுறை.எனவே சேதுக்கால்வாயில் மட்டும் மணல் படியும் , செலவு ஆகும் , பராமரிப்பது கடினம் என்பது ஏன்?

இப்படி துறைமுகங்களை தூர்வாறும் பணியில் அதிக லாபம் இருப்பதாலும், அடிக்கடி தேவை இருப்பதாலும் ரிலையன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தூர்வாறும் நிறுவனத்தை துவக்க காக்கி நாடா துறைமுகத்தினை அரசிடம் கேட்டுள்ளது.

மேலும் மும்பை துறைமுகத்தின் ஆழம் சேதுக்கால்வாயினை விட குறைவாகவே இருக்கிறது எனவே அங்கு வரும் கப்பல்கள் எல்லாமே சேதுக்கால்வாய் வழியே சென்னைக்கு எளிதாக வரும் தானே!

தற்போது இந்திய துறைமுகங்கள் அனைத்தும் ஆழப்படுத்தி வசதியினை மேம்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. சென்னையில் மூன்றாவது கப்பல் நிறுத்தம் வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் ஆழம் அதிகரிக்க வேலை நடக்கிறது புதிய டெர்மினலும் வருகிறது. சொல்லப்போனால் சேதுக்கால்வாய் விட அதிகப்பணம் சுமார் 6000 கோடி தூத்துக்குடியில் முதலீடு செய்யப்பட உத்தேசித்துள்ளது அரசு.

மேலும் கொழும்பு துறைமுகம் ஒன்றும் அத்தனை பெரியது அல்ல ஆழம் 15 மீட்டர் தான் , வேறு வழி இல்லாததல் அங்கு போகிறார்கள் , நாம் இப்பொழுதே 12 மீட்டரில் கால் வாய் ஆரம்பித்து சில ஆண்டுகளில் இன்னும் மேம்படுத்தினால் கொழும்பு துறைமுகம் வருவாய் இழக்கும் .

கொழும்பு துறை முகத்தை 21 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தி இன்னொரு டெர்மினல் கட்ட ஜப்பானிட்ம் கடன் கேட்டுள்ளார்கள் ,அவர்களும் சம்மதித்துள்ளார்கள், அத்திட்டம் வருவதற்குள் சேது வந்து விட்டால்(வரும் வாய்ப்புஅதிகம்) என்னாவது , எதிர்கால கப்பல் போக்குவரத்தினை நம்பி தான் கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்கிறார்கள். கொழும்புவில் இருந்து ஆவது ஏற்றுமதி அல்ல டிரான்சிட் சரக்கு தான் அவை. எனவே அத்திட்டம் பாதிக்கபடுமே என்ற பயம் தான் சேதுவை எதிர்க்க காரணம்.

கொழும்பு துறைமுகத்தினை விட சென்னை அதிக வசதிக்கொண்டது , (கொழும்புவின் பலம் அது இருக்கும் இடம் தான் சர்வதேச கடல் வழியில் உள்ளது)மேலும் சேதுக்கால்வாய் மூலம் சென்னை , தூத்துக்குடி, மும்பை என துறைமுகங்கள் இடையே ஒருங்கிணைப்பு வருவதால் இந்தியாவிற்கு நல்லது தானே.

இப்போது செய்ய வேண்டியது எல்லாம் கால்வாய் கொண்டு வந்த பிறகு அப்படியே போடாமல் சில ஆண்டுகளில் 15 மீட்டர் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்புறம் நம்மை அடித்துக்கொள்ள முடியாது.

இதில் ஊழல் நடக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளதால் தான் , அவ்வாய்ப்பு பறிபோன ஆவேசத்தில் அதிமுக எல்லாம் எதிர்க்கிறது. தற்போதே ஊழல் இல்லாமல் இல்லை ஒரு பெரிய தொகையை அடித்து விட்டார்கள்.

இத்திட்டம் ஆரம்பத்தில் 1800 கோடிக்கு தான் மதிப்பிடப்பட்டது தற்போது 2427 கோடி ஆக்கி இருக்கிறார்கள். 1800 கோடியிலேயே இத்திட்டம் சாத்தியம் என்பதை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.

மும்பைக்கு அருகே மிகப்பெரிய தனியார் துறைமுகம் ஒன்று ரேவா என்ற இடத்தில் கட்டப்படுகிறது அதில் ரிலையன்ஸ் 40 சதவீத பங்கு தாரர். அவர்கள் அகழ்ந்தெடுத்த மண்ணின் கனபரிமானம் சேதுக்கால்வாய் விட அதிகம் , கால்வாய் திட்டம் மதிப்பிடப்படுவது தோண்டப்படும் மண்ணின் அளவைப்பொறுத்து என்பதை இங்கு நினைவில் கொள்க.

ரேவாத்துறைமுகத்தின் அகழ்வெடுத்த செலவு 1800 கோடி, இதனை அத்திட்ட இயக்குனரே பேட்டியில் சொல்லி இருக்கிறார் சேது சமுத்திர திட்டத்தினை விட பெரிய கடல் அகழ்வை நாங்கள் மலிவாக ஒரு ஹாலந்து கடல் அகழ்வு(dredging) நிறுவனத்தை வைத்து செய்துள்ளோம் என. அவர் அப்படி சொன்னதே இச்சேது கால்வாய் திட்டத்தில் எப்படி பணம் விளையாடி இருக்கும் என்பதை நக்கலாக சொல்லத்தான்.

அரசியல் விளையாட்டுக்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இத்திட்டத்திற்கு எதிர்காலம் இருக்கிறது, எனவே கொண்டு வரலாம். தி.முக அரசு மெத்தனமாக சரியாக இத்திட்டம் பற்றி விளக்காமல் ராமர் , புராணம் என ஒரு விளம்பரத்திற்கு சண்டைப்போடுகிறது.

Saturday, October 06, 2007

சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!


சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது.

இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது.

திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

* ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது!

இது எத்தனை சத வீதம் உண்மை ,

மனித இனம் தோன்றிய வரலாற்றினை அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குரங்குகளாக தான் இருந்தோம். பின்னர் மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பின்னர் நாகரீகத்தின் முதல் கட்டமாக கருவிகளை உருவாக்கியதன் அடிப்படையில் காலம் பிரிக்கையில் , கி.மு 3000க்கு முன்னர் கற்காலம் வருகிறது , பின்னர் தாமிரக்காலம் , இரும்பை பற்றி அறிந்து கொண்டதே கி.மு 1200 இல் தான். அப்படி இருக்கும் போது இரண்டு மில்லியன் ஆண்டுகள் காலத்திற்கு முன்னர் இராமாயண காலம் போல முழு நாகரீகம் பெற்ற இராம ராஜ்யம் இருந்து இருக்குமா? பாலம் கட்டி இருக்க தான் முடியுமா?

நாசா எடுத்தது என ஒரு படம் காட்டுகிறார்களே அது என்ன?

அது ஒரு இயற்கை அமைப்பு , இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நில இணைப்பிற்கு இஸ்துமஸ்(isthmus) என்று புவியியல் பெயர். இப்படிப்பட்ட இணைப்பு வட , தென் அமெரிக்காவிற்கு இடையே கூட உண்டு , அதனை வெட்டி தான் பனாமா கால்வாய் போடப்பட்டுள்ளது.

சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் இங்கே கடலில் மூழ்கி இருககிறது. மேலும் அந்த அமைப்பை ஒட்டி மணல் படிவதால் ஆழம் குறைவாக உள்ளது.

இயற்கை, சுற்று சூழல் பாதிப்புகள் வரும் என்பது,

ஏற்கனவே சொன்னது போல இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக்கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12 .8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள் இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது , எனவே மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும்(4-5 மீட்டர்). சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள மணல் திட்டுகள் தான் பெரிதாக தெரிகிறது , கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது.

மன்னார் வளைகுடாப்பகுதி தான் கடல் வாழ் உரினங்களின் முக்கியமான பகுதி , அப்பகுதியில் இயற்கையிலே ஆழம் இருப்பதால் அங்கு கால்வாய் வெட்டப்படவில்லை. பால்க் நீரிணைப்பு பகுதியிலும் , ஆடம் பாலம் பகுதியிலும் இரண்டு பகுதியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இது செயற்கை ,இயற்கை சேர்ந்த கடல் வழி கால்வாயாக தான் இருக்கும்.

மேலும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் சரியல்ல, இப்பகுதியில் குறைவாக மீன் கிடைக்கிறது எனவே எல்லை தாண்டி மீன் பிடிக்க போய் தானே இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள் அப்படி இருக்கும் போது இப்போது கால்வாய் வெட்டும் போது மட்டும் எப்படி மீன்கள் காணாமல் போகும். ஆழ்கடலில் தான் அதிக மீன்கள் பிடிக்கபடுகிறது.

சாதாரணமாக புதிதாக சாலை போட்டாலே அதற்காக மரங்கள் வெட்டுவது என எதாவது ஒரு சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்காது , அப்படி இருக்கும் போது கடலில் கால்வாய் வெட்டும் போது சுத்தமாக பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி. ஏற்படும் பாதிப்பு குறைந்த பட்சமாக இருக்குமாறு பார்த்து செயல் பட வேண்டும்!

இப்படி தற்போது சில எதிர்ப்புகள் உள் நாட்டில் கிளம்பினாலும் , ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே! எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.

ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.

மேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.


முடிந்த வரை தடுக்க பார்க்கும் இலங்கை அரசு , முடியவில்லை எனில் திட்டம் வந்தால் அதிலும் ஒரு நன்மையை எதிர்ப்பார்க்கிறது , அக்கால்வாய் பாதுக்காப்பு , ரோந்து ஆகியவற்றில் இலங்கை கடற்படையை ஈடுபடுத்த அனுமதி தரவேண்டும் என்று!மேலும் மன்னார் வளைகுடாப்பகுதியில் கப்பல் போக்குவரத்தினை அனுமதிக்கும் நிர்வாக உரிமையையும் கேட்கிறது.சுருக்கமாக சொல்ல போனால மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வர கடலைப்பயன்படுத்த இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் யாரும் வரமுடியாத நிலை வரும்.

கால்வாய் முழுக்க முழுக்க அமையப்போவது இந்திய கடல் எல்லைக்குள் தான் , அப்படி இருக்கும் போது பாதுகாப்பினை காரணம் காட்டி சந்தடி சாக்கில் நம்ம கடலையும் சேர்த்து கண்காணிக்க ஆசைப்படுகிறது இலங்கை! நாம் செலவு செய்து கால்வாய் வெட்டுவோம் , நிர்வகிக்கும் அதிகாரம் அவங்களுக்கு வேண்டுமாம்!

இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.

தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.

ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!

ஜெயலலிதா போன்றவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டதை கொண்டுவருவதாக சொன்னவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மிகப்பெரிய இத்திட்டதை கொண்டு வருவதால் கிடைக்கும் கமிஷன் தொகை கை விட்டுப்போகிறதே என்ற வயத்தெரிச்சல் தான்! 2,427 கோடி ரூபாய் திட்டம் ஆச்சே சுளையாக ஒரு தொகை கமிஷனாக வருவது போனால் சும்ம இருக்க முடியுமா!

சேது கால்வாய் திட்டம் பற்றிக்கவலைப்படுவதானால் அதன் பொருளாத லாபம் ஈட்டும் தன்மை குறித்தும் , சுற்று சூழல் பாதிப்பு அதிகம் ஆகாமல் இருப்பது குறித்து மட்டும் தான் இருக்க வேண்டும்.

இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.

Friday, October 05, 2007

ஆபாசம், வக்கிரம் அதன் மறு பெயர் தான் என்ன?

சிலர் ஆபாசமாக திட்டுகிறார்கள் என ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் அவர்கள் நடந்து கொள்வது அதை விட கேவலமாக இருக்கிறது, அற்ப விளம்பர மோகம் கொண்டு அலைகிறார்கள் ,உண்மையில் நாலு பேரு கண்டனம் சொல்லி திட்ட வேண்டும் , பின்னர் மனம் உருகி அய்யோ நான் தப்பு செய்து விட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டு பதிவு போட வேண்டும் என்ற நமைச்சல் சிலருக்கு அதிகம் ஆகி விட்டதோ எனத் தோன்றுகிறது.

நான் பெயர் எதுவும் போடாமல் சொல்வதால் அனாவசியமா யார் என்று குழம்பிகொள்ள வேண்டாம் , தமிழ்மணத்தை பார்த்தாலே தானாகவே புரியும. நாளு பேர் அவங்களை கண்டுக்க வேண்டும் என்பதற்காகவே பதிவு போடும் அவர்களது பெயரை சொல்வதும் அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் என நினைத்து சந்தோஷம் அடையும் அல்பமாக இருக்கிறார்கள் .சாவு வீட்டுக்கு போனாலும் அண்ணன் வாழ்க என்று கோஷம் போடும் அல்லக்கை கூட்டம் கொண்டவர்கள் ஆச்சே!அது தான் மொட்டை கடுதாசிப்போல பதிவு போட்டு இருக்கேன்!


மக்களே வாரக்கடைசியில் இப்படிப்பட்ட மண்டை இடி தேவையா என டென்ஷன் ஆகாம சிந்தித்து சத்தம் போடாமல் கண்டு பிடியுங்கள் அந்த விளம்பர பிரியரை! ங்கொய்யாலே இந்த லட்சணத்தில் மக்களுக்கு இணைய விழிப்புணர்வு இல்லை , அது இல்லைனு சீன் காட்டுகிறது அந்த அல்பம்!

Thursday, September 27, 2007

மாவீரன் பகத் சிங்க் நூறாண்டு பிறந்தநாள் தினம்!


இன்று சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பகத் சிங்கின் நூறாண்டு பிறந்த நாள் நினைவு தினம்.


அவரைப்பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு:

செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!







அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

பகத் சிங்க் தூக்கில் சில மர்மங்களும் உள்ளது, அவர் தூக்கில் இட்டும் சாகாமல் இருந்ததாகவும் எனவே , சாண்டர்ஸ் என்ற அதிகாரியின் உறவினர்கள் துப்பாக்கியில் சுட்டும் , வெட்டியும் கொன்றார்கள் எனவும் ஒரு நூல் சொல்கிறது(சாண்டர்சை கொன்றதாக தான் லாகூர் கொலை வழக்கு). மேலும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் ஆங்கில அரசே எரிக்கப்பார்த்தது. இது தொடர்பாக ஒரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட லெஜெண்ட் ஆப் பகத் சிங்க் படத்திலும் வரும்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

T20 சாம்பியன்களுக்கு வரவேற்பு!- விடியோ

இருபதுக்கு இருபதை அள்ளிவந்த நூற்றுக்கு நூறு சாம்பியன்களுக்கு மும்பையில் மிக ஆராவாரமான , உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராட்டு விழா நடைப்பெறும் வான்கடே மைதானம் வரையில் திறந்த பேருந்து ஒன்றில் வீரர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் தான் கூட பேருந்தில் இருந்தாவாறே ஆடி ஒத்துழைப்பு தந்து உற்சாகப்படுத்தியது வேகப்பந்து நடனப்புயல் ஸ்ரீசாந்த் மற்றும் சிக்சர் சிங்கம் யுவராஜ்.


திறந்தவெளிப்பேருந்தில் வீரர்களின் ஊர்வலம்:



அரசியல்வாதிகள் வழக்கம் போல தங்கள் வித்தையை இதிலும் காட்டி விட்டார்கள், வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் வீரர்களை பின் வரிசைக்கு தள்ளி விட்டனர், முன் வரிசையில் அரசியல்வாதிகளும் , கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுமே ஆக்ரமித்துக்கொண்டனர்.ரசிகர்கள் வந்தது T20 சாம்பியன் வீரர்களை பார்க்க தானே அன்றி இவர்களின் முகத்தை அல்ல. அரசியல்வாதிகளான சரத் பவார், மகாராஸ்டிர துணை முதல்வர் ஆகியோர் மைக் பிடித்து இதனை தங்கள் அரசியல் சாதனையாக்கி கொண்டதோடு அல்லாமல் காத்திருந்த ரசிகர்களின் பொறுமையையும் ஏகத்துக்கும் சோதித்து விட்டனர்.

தோனியின் சிறப்புரை வீடியோ:



செய்தி மற்றும் வீடியோ உபயம் ரெடீப், நன்றி:

Monday, September 17, 2007

காற்றினிலே வரும் குடிநீர்!

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின் குளிர்ந்த காற்று வீசும் போது மேகம் குளிர்ந்து மழையாகிறது என்று.அந்த மழையை நாம் விரும்பிய போது வர வைக்க முடியுமா ,விமானம் மூலம் மேகங்களின் மீது வெள்ளி அயோடைட் ரசாயனத்தை தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம், ஆனால் நமக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வீட்டுக்குள் அப்படி வர வைக்க முடியுமா?

அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.

அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.

காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.

பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.

அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.

மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.


மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 13, 2007

இணையத்தில் இலவசமாக 20க்கு இருபது உலககோப்பை போட்டிகள்

இலவசமாக தெனாப்ரிக்காவில் நடக்கும் 20க்கு இருபது உலக கோப்பை போட்டிகளை இணையம் மூலம் பார்க்க வேண்டுமா , அதற்கென sopcast என்ற p2p வகை தொலைக்காட்சி மென்பொருள் ஒன்று உள்ளது அதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும.பின்னர் நேரடி ஒளிபரப்பாக போட்டிகளை தரும் இணைய தொடுப்புகளை சில இணைய பக்கங்களில் தருகிறார்கள் , அதில் ஏதேனும் ஒரு தொடுப்பினை சொடுக்கினால் உங்கள்து சோப்காஸ்ட் தொலைக்காட்சி செயல் பட்டு ஒளிபரப்பினைக்காணலாம். குறைந்த பட்சம் 256 kbps வேகமாவது இருந்தால் ஓரளவு நன்றாக தெரியும். அதிக வேகம் இருந்தால் இன்னும் நலம்.ஆரம்பத்தில் சிறிது நேரம் "buffer" ஆக எடுத்துக்கொள்ளும் பின்னர் தெளிவாக காட்சிகள் வரும்.

சோப்காஸ்ட்டில் உலகக்கோப்பை போட்டிகள் மட்டும் அல்லாது மேலும் பல இலவச தொலைக்காட்சிகளையும் காணலாம்.

சோப்காஸ்ட் இணையத்தளம்: sopcast

நேரடி ஒளிபரப்பு இணைப்பு தளம்; live links

மற்றும் ஒரு இணைப்பு தரும் தளம் , இதில் இங்கிலாந்து, இந்தியா ஒரு நாள் போட்டித்தொடர் என்று போட்டிருந்தாலும் 20க்கு இருபதும் தெரியும், முதல் லின்க் நன்கு வேலை செய்கிறது.

another link


தற்போதைய நிலவரம் ,
வங்க தேசம் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது. முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேறியது மே.தீவுகள்

சுருக்கமான ஆட்ட விவரம்:
மே.தீவு:
தேவோன் சுமித்-51,
சந்திரபால்-37
சாமுவெல்ஸ்-27,
டிவைன் சுமித்-29
மொத்தம்- 164/8

வங்கதேசம் பந்துவீச்சு:
ஹசன் 4/34
ரசாக் 2/25

வங்கதேசம்:
அஷ்ரபுல்-61(27)விரைவான அரைசதம் 20 பந்துகளில்)
அஹ்மத்- 62(49)
மொத்தம் -165/4
மே.தீவுகள் பந்து வீச்சு:
ராம்பால் -2/35
சர்வான் -2/10

Wednesday, September 12, 2007

சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?


பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது , எவ்வாறு அது ஒட்டுகிறது. சிமெண்ட் , பசை இதற்கெல்லாம் ஒட்டும் , இணைக்கும் தன்மை எப்படி வருகிறது.

சிமெண்ட் கால்சியம் சிலிகேட்,கால்சியம் கார்பனேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் பொடி செய்யப்பட்ட கலவையாகும். தண்ணீருடன் கலந்து கிடைக்கும் பசை போன்ற சிமெண்ட் காயும் போது ஏற்படும் நீரேற்ற வினையினால்(hydration) கெட்டிப்படுகிறது, அப்பொழுது அது கால்சியம் சிலிகேட் ஹைட்ரேட் ஆக மாறிவிடும்.அது ஒரு திரும்ப பெற இயலாத வேதி வினை ஆகும். சிமெண் குழம்பு செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும் போது இறுகுவதால் பிடித்துக்கொள்ளும். இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், சிமெண்டில் உள்ள மூலக்கூறுகளின் மின்னியல் பண்புகளும் இணைப்பு சக்தியை சிமெண்டிற்கு தருகிறது.

மேலும் சிமெண்டுடன் தண்ணீர் சேர்ப்பதால் கால்சியம்சிலிகேட், கால்சியம் அலுமினேட் போன்ற மூலக்கூறுகள் பிளவுற்று கால்சியம் அயனிகள்(ca2+) உருவாகும், எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை , அவற்றில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருக்கும். செங்கல்லில் உள்ள அணுக்களில் இருந்து சில எலெக்ட்ரான்கள் பிணைப்பில் இருந்துவிடுபட்டு கால்சியம் அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும். கட்டுமானப்பணியின் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் ,இது எலெக்ட்ரான்கள் விடுபட்டு எளிதாக இடம் மாற உதவும். இவ்வாறு எலெக்ட்ரான் பரிமாற்றத்தால் ஏற்படும் பிணைப்பிற்கு கோவேலண்ட் பாண்ட்(covalent bond) என்று பெயர்.இதன் மூலம் மூலக்கூறுகளிடையே ஒரு இணைப்பு விசை உருவாகும் அதற்கு வாண்டர் வால்ஸ் விசை(wanderwalls force) என்றுப்பெயர்.

செங்கல்லை சிமெண்ட் இணைப்பதன் காரணம் மேல் சொன்ன இரண்டும் தான்.மேலும் சிமெண்டில் நீரேற்ற வினை ஏற்பட்டு இறுகும் போது சுருங்கும் , அதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் சில சமயங்களில். மேலும் முழுவதும் நீரேற்றம் ஆகாத மூலக்கூறுகளையும் நீரேற்ற அதிகப்படியாக தண்ணீர் கட்டுமானத்தின் மீது ஊற்றப்படும். இதற்கு செட்டிங் என்பார்கள் சாதரணமாக 28 நாட்கள் தேவைப்படும்!

இதே போன்று பசை காகிதத்தை ஒட்டவும் , எலெக்ட்ரான்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் கோவேலண்ட் பாண்ட் தான் காரணம்.

Sunday, September 09, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்!-week end posting

அறிவு ஜீவிகள் எல்லாம் இதைக்கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுங்கள், வாரக்கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டி வரைக்கும் ஒரு மின்னல் வேக பயணம் போய்விட்டு வந்தேன். எதுக்கா எல்லாம் அதுக்கு தான்யா.. பச்ச புள்ளையாட்டாம் கேட்கப்படாது , அங்கு போனதும் ராயல் சேலஞ்ச ஆர்டர் செய்து குமுறிவிட்டேன்! சரி திரும்ப வரும் போது வெரும் கையுட்ன் வரக்கூடாது என்று ஒரு முழு புட்டி இம்பீரியல் புளு என்ற சரக்கு வாங்கினேன்(கைல அது வாங்குற அளவு தான் காசு இருந்துச்சு full - 210 rs/- only very cheap) Rc வாங்கணும்னு தான் திட்டம் , ஒரு குளிர் ஊட்டப்பட்ட பாரில் பெக் கணக்கில் ஊத்தி அரை RC க்கு முழு அளவுக்கு காசப்பிடுங்கிட்டான்!

நேற்று இரவில் இருந்து இன்று இரவு 12க்குல் அந்த முழு புட்டியும் காலி ஆகிடுச்சு உபயம் நம்ம இந்திய கிரிக்கெட் அணி, வந்தவுடன் கொஞ்சம் போட்டேன் , மேட்ச் பார்த்தேன்.. தூத்தேரி எழவு எடுத்த பசங்கனு இன்னும் கொஞ்சம் போச்சு இப்படியே கேப்ல எல்லாம் போட்டு கடைசில இன்னிக்கே எல்லாம் தீர்ந்து போச்சு ... அடுத்த வீக் எண்ட் வரைக்கும் வைத்து இருக்கனும்னு திட்டம் போட்டேன் அது நாசாம போச்சு! வேற என்ன செய்ய வழக்கம் போல பச்சை கலர் போர்ட் போட்ட கடைக்கு நாளைக்கும் போகனும்! :((

Friday, September 07, 2007

அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில் ,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள் ,,

சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony),
மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

LetterMorse
Adi-dah
Bdah-di-di-dit
Cdah-di-dah-dit
Ddah-di-dit
Edit
Fdi-di-dah-dit
Gdah-dah-dit
Hdi-di-di-dit
Idi-dit
Jdi-dah-dah-dah
Kdah-di-dah
Ldi-dah-di-dit
Mdah-dah


N dah-dit
Odah-dah-dah
Pdi-dah-dah-dit
Qdah-dah-di-dah
Rdi-dah-dit
Sdi-di-dit
Tdah
Udi-di-dah
Vdi-di-di-dah
Wdi-dah-dah
Xdah-di-di-dah
Ydah-di-dah-dah
Zdah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

லிப்டில் போனால் உடல் எடை குறைக்கலாம்?

சாதாரணமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் , சில சிறிய வேலைகளையும் உடல் உழைப்பின் மூலம் செய்வதால் அதிக கலோரிகள் எரித்து உடல் எடைக்குறைக்கலாம் என சொல்வார்கள். அந்த வகையில் மாடிப்பகுதிகளுக்கு செல்ல லிப்டிற்கு பதில் படிகளில் ஏறி சென்றால் எடை குறையும் என்பார்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாட்சியாக சொல்கிறேன், லிப்டில் இறங்கி வந்தால் உடனடியாக உடல் எடை குறையும் , 100 சதவீதம் உத்திரவாதம் !

அது எப்படி என்று சொல்கிறேன்,

முதலில் உங்கள் எடை என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள்

முதல் தளத்தில் இருக்கும் ஒரு லிப்டில் ஏறி நின்று கொள்ளுங்கள் , எடை குறைவதைக் காண கையோடு ஒரு எடை பார்க்கும் கருவியும் எடுத்து செல்லுங்கள். இப்பொழுது எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நின்று கொண்டு முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வாருங்கள். அப்படி வரும் போது உங்கள் எடை என்னவென்று எடை பார்க்கும் எந்திரத்தில் பாருங்கள், கண்டிப்பாக எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்! கடினமாக உழைக்காமல் எப்படி எடை குறைந்தது, ஆச்சரியமாக இருக்கிறதா , அது தான் இயற்பியலின் விந்தை!

நம் உடல் எடை என்பது புவி ஈர்ப்பு விசை ஆனது உடலின் பருமன் மீது செயல்படுவதால் ஏற்படும் விசை ஆகும், அவ்விசையை எடைப்பார்க்கும் கருவி உணர்வதால் அதில் எடை காட்டுகிறது.

லிப்டில் மேல் இருந்து கீழ் நோக்கி இறங்கும் போது எடை குறைவாக காட்டக்காரணம் , லிப்ட் அது ஒரு வேகத்தில் இறங்குகிறது எனவே அதன் மூலம் ஒரு விசை நம் உடலில் செயல்படும், எனவே இப்பொழுது நம் உடலின் மீது இரண்டு விசை செயல்படுகிறது , புவி ஈர்ப்பு விசை மேல் திசையிலிருந்து கீழ் நோக்கிய விசை , கூட லிப்டின் மேலிருந்து கீழ் நோக்கிய விசை இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் , இப்போது புவீஈர்ப்பு விசையில் ஒரு மாற்றம் ஏற்படும் அதன் காரணமாக உடலின் மீது மொத்த விளைவு ஈர்ப்பு விசை குறையும்! எனவே தான் எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்!

இரண்டு விசையும் எதிர் எதிராக இருந்தால் எடை கூடுதலாக காட்டும் .

*லிப்டில் கீழ் இருந்து மேல் மாடிக்கு செல்லும் போது எடை அதிகம் காட்டும் எடைப்பார்க்கும் கருவி.

*லிப்ட் நிற்கும் போது உடலின் உண்மையான எடைக்காட்டும் !

எடைப்பார்க்கும் எந்திரத்தின் மீதான விசை = எடை
f =m*a

இங்கு a = g , லிப்டின் மேல் , கீழ் செயல்பாட்டினால் நம் உடலில் ஏற்படும் விசை ,மேலும் லிப்ட் இயங்கும் வேகத்தினால் வரும் முடுக்கத்தினால் (a= acceleration)வருவது என இரண்டு விசை , எனவே மொத்த கூட்டு விசை

f= m*(g - or +(a)

இதன் மூலம் நிகர எடை அறியாலாம்.

இந்த சூத்திரம் கொண்டு லிப்ட் வேகத்தீற்கு ஏற்ப மேல் அல்லது கீழ் செல்லும் போது ஏற்படும் எடை மாற்றத்தினை கணக்கிடலாம்.கீழ் இறங்கும் போது "-" மேல் ஏறும் போது "+".

உடல் எடையை குறைக்கணும்னா இனிமே வேகமா லிப்டில் இறங்கினா போதும்! உண்மையா உடல் நலம் ,எடைக்குறைத்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓடி வந்து படித்த மக்கள் அடியேனை பொருத்தருள்க!

Thursday, September 06, 2007

நீங்களும் கண்டுபிடிக்கலாம் பூமியின் சுற்றளவை

இன்று பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்ட நிலையில் எதுவும் சாத்தியம் ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் , கருவிகள் என எதுவும் இல்லாமலே பலவற்றையும் வெறும் கணக்கீட்டின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

அப்படி பூமியின் விட்டம் , சுற்றளவை மிகச்சரியாக கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயெ எரட்டோதீனியஸ்(Eratothenes, 230 B.C) என்ற கிரேக்க அறிஞர் முக்கோணவியல் மூலம் கண்டு பிடித்துள்ளார். அது மிக எளிய ஒன்று , நாம் கூட அம்முறையை செய்துப்பார்க்கலாம்.
















எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த முறை:

ஒரு அடி நீளம் உள்ள குச்சி ஒன்றினை பூமியில் செங்குத்தாக நட்டுவைக்கவும். அதன் நிழலை தொடர்ந்து கவனித்து வந்தால் , இருப்பதிலேயே மிக நீளம் குறைவான நிழல் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் வரும் போது தான் விழும் என்பது தெரியவரும். எனவே சூரியன் உச்சியில் வரும் போது குச்சியின் நிழல் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஏறக்குறைய அதே தீர்க்க ரேகைப்பகுதியில் உள்ள வேறு ஒரு இடத்தில் குச்சியை நட்டுவைத்து , மீண்டும் சூரியன் உச்சியில் இருக்கும் போது நிழலின் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

இதில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் கோணத்தூரம் என்பது , சூரியக்கதிர் பூமியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கு சமம் , அதனைக்கண்டு பிடிக்க தான் நிழல் , குச்சி இரண்டும் பயன்படுகிறது. இங்கே நிழல், குச்சி இரண்டின் நீளங்கள் தெரியும் அதைக்கொண்டு Tan கோணம் கண்டறியலாம்.

இரண்டு இடங்களில் நிழல் விழவைத்து இரண்டு கோணங்கள் ஏன் கணக்கிட வேண்டும் , இந்த இரண்டு புள்ளிகளும் , பூமியின் மையம் மூன்றாவது புள்ளியாக கொண்டு ஒரு முக்கோணம் வரைந்தால் , அதில் பூமியின் மையத்தில் வரும் வரும் கோணம் இந்த இரண்டு கோணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். படத்தினை பார்த்தால் கொஞ்சம் விளங்கும்!

1) h1/b1= tan deeta1
2)h2/b2= tan deeta2

tan1-tan2= புவிமையத்தில் வரும் கோணம்.

நிழல் விழும் இரண்டு புள்ளிகள் , மையம் மூன்றும் இணைந்து ஒரு முக்கோணம் உருவாக்கினால் , அதில் ஒரு பக்கம் இரண்டு நிழல் புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு தெரியும், மற்றொரு பக்கம் என்பது பூமியின் ஆரம் அது தெரியாது , ஆனால் மையத்தில் வரும் கோணம் இப்போது தெரியும் ,

எனவே , அதனைக்கொண்டு ,

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ ஆரம் = மையக்கோணம்
எனவே ,

பூமியின் ஆரம் = இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ மையக்கோணம்

என எளிதாக கண்டுபிடித்து விடலாம்,

அப்படி எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த ஆரம் , 6371.02 கி.மீ

இதனைக்கொண்டு பூமியின் சுற்றளவும் சொல்ல முடியும், 2xpi xR= 40,008 km .இப்போது நீங்களும் பூமியின் சுற்றளவை கண்டுப்பிடிக்கலாம்!

இதுமட்டும் அல்லாமல் முக்கோணவியலைக்கொண்டு தான் அக்காலத்திலேயே நிலவின் அளவு, அதன் தொலைவு, மேலும் சூரியன் இருக்கும் தூரம் கூட சரியாக கண்டுப்பிடித்தார்கள்!மேலும் மலைகளின் உயரம் கூட இப்படி அளக்கலாம்.

Friday, August 31, 2007

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் இடமாற்றமா?


நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிவித்துள்ளதாக செய்தித்தாள்களில் வந்துள்ளது.

இப்பொழுது அது அவசியமா ,

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் பற்றி,

*ஆசியாவிலேயே மிக்கபெரிய பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பு,
*103 கோடி செலவில் கட்டப்பட்டது!
*300 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வண்ணம் பேக்கள் உள்ளது.
*2000 பேருந்துகள் வந்து செல்கின்றன!
*இலவச கழிப்பிடம் , வாகனம் நிறுத்தும் இடம் , கடைகள் ,உணவுவிடுதிகள் அனைத்தும் உள்ளது!
*தற்போது சிறப்பு நிலை பேருந்து நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு ISO:9001:2000 சான்றளிக்கப்பட்டுள்ளது.அப்படி சான்று பெற்ற ஒரே இந்திய பேருந்து நிலையம் இது தான்!

இப்படி சகல வசதிகளுடன் புதிதாகக்கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அதற்குள் மாற்ற வேண்டும, புதிதாக புறநகர் பகுதிகளிலில் மூன்றாக பிரித்து திருவான்மியூர், தாம்பரம் , பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனைப்போல தோன்றினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்னரே கணக்கிட்டு , அப்பொழுதே மூன்றாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் புற நகரான பகுதியில் கட்டி இருக்கலாமே.

புதிதாக கட்ட பெரும் செலவு , ஏற்கனவே கட்டியதில் செலவிட்ட 103 கோடியும் தண்டம் , ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஞானோதயங்களுக்கு ஏற்றார் போல திட்டங்களை தீட்டிக்கொண்டு போனால் அதற்கு யார் பணம் செலவு ஆகிறது , எல்லாம் மக்கள் பணம் தானே!

பேருந்து நிலையதிற்கு ISO சான்று அளித்த போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்...
"After a detailed survey, keeping in mind the traffic density by 2015, the CMDA constructed the "terminus, which was unique in many ways, more particularly the ultra-modern facilities provided for the operation of buses." It was built at an estimated cost of Rs.103 crores, including the cost of 37 acres of land."

2015 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள் ஆனால் அதற்குள் , மாற்ற வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்! புதிய திட்டங்கள், புதிய ஏல ஒப்பந்தம் , புதிய வருமானம் என்ற கணக்கில் செய்கிறார்கள் போல!

சமிபகாலமா 100 அடி சாலையில் கிண்டி கத்திப்பாரா - கோயெம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது காரணம், மோசமான சாலைகள், சாலை ஆக்ரமிப்புகள் , முறையற்ற பார்க்கிங்கள், ஷேர் ஆட்டோக்கள் நடு சாலையில் நின்று பயணிகளை ஏற்றுவதும் , இறக்குவதும்,கத்திப்பாரவில் மேம்பாலம் கட்டுகிறேன் என்று சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.

சிறிது காலத்திற்கு முன்னர், ஆம்னி பஸ்கள் நகரில் வராமல் மதுரவாயல் புறநகர் சாலை வழியாக சென்று வரவேண்டும் என உத்திரவிட்டார்கள் , தனியார் பேருந்துகளுக்கு நட்டம் ஏற்படும் என அவர்கள் யாரையோ கவனித்து மீண்டும் நகருக்குள் வர அனுமதி வாங்கிக்கொண்டார்கள்.முன்னர் போல அவர்களை புறநகர் சாலையில் செல்ல சொல்லலாம் போக்குவரத்து நெரிசல் குறையும்.

அல்லது அனைத்து பேருந்துகளும் நகருக்கு வரும் போது மதுர வாயல் புறநகர் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும், சென்னையில் இருந்து செல்லும் போது 100 அடி சாலை மார்க்கமாக வழக்கம் போல செல்லலாம் , இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வருவதும் தடைபடாது , நெரிசலும் ஓரளவு குறையும்.

மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்தால் பயணிகள் சுமைகளை தூக்கிகொண்டு வேறு வேறு ஊர்களுக்கு செல்லும் இணைப்பு பேருந்துகளை பிடிக்க அலைய வேண்டி இருக்கும்.

Tuesday, August 28, 2007

என்ன வளம் இல்லை இந்நாட்டில்!

நம் நாட்டில் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகம் இதனை பிரெயின் டிரெயின்(brain drain) என்பார்கள்.எனினும் சமீப காலமாக பல ஐ.ஐ.எம் மாணவர்கள் அப்படி கிடைத்த வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு இந்தியாவில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். காரணம் தற்போது அயல்நாடுகளுக்கு இணையான அல்லது மிக நல்ல சம்பளங்கள் இந்திய நிறுவனங்களில் தரப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம் தான்.

இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் ஒரு நல்ல முன்னுதாரணம் ஆக அமைந்துள்ளது.

பெரும்பாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அனைவரின் மனதும் இந்தியாவில் தான் இருக்கும் , வெகு சொற்பமானவர்களே "Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும். பெரும்பாலோர் ஆத்மார்த்தமாக இந்தியாவின் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.வருங்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நம் அறிவுத்திறன் குறைந்து அனைவரும் இந்தியாவில் இருந்து செயல்படும் சூழல் வரும் , அந்நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு மாணவனும் படிக்க என அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது அப்பணம் பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு!

என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான். இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. இந்தியாவில் மிதமான சம்பளம் அதற்கு ஏற்ப வாழ்வை அனுபவிக்கலாம்!

இந்த அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி சினிமா நடிகர் விஜய் வேறு தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார், இது குறித்து சிவபாலன் ஒரு பதிவும் போட்டுள்ளார்,

சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது , ஆனால் அவரே தெலுங்கில் வெற்றிப்பெற்ற படங்களின் கதையை தான் விரும்பி வாங்கி நடிக்கிறார் , தமிழில் நல்ல கதைகளே இல்லையா, முதலில் அதை யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கண்ணா!

மக்களே உங்களுக்கும் இது குறித்து மாற்றுக்கருத்துகள் இருக்கும் இருந்தால் சொல்லலாமே!

Monday, August 27, 2007

உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்

இந்தப்பதிவு "உள்ளது உள்ளபடி -ஓகை அவர்கள் பார்வைக்கு" என்றப்பதிவின் தொடர்ச்சியாக வருவது.அப்பதிவை படித்து விட்டு தொடர்ந்தால் இதன் அர்த்தம் எளிதாக புரியும்.
அப்பதிவு ஓகை அவர்களின் பதிவிற்கு பதிலாக எழுதப்பட்ட ஒன்று எனவே ஓகை அவர்களின் பதிவிற்கான சுட்டி: ஓகை

கிராமங்களில் வாழ்ந்த விவசாயி , விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு , வருமானம் இவற்றின் காரணமாக நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வரும் சூழலில் , அவர்களுக்கு கிடைப்பது சிறிய வருமானம் ஆனால் அவர்கள் அதற்காக இழப்பது அதிகம். கிராம , நகர்ப்புர வசிப்பிட சூழல், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்பீட்டளவில் காண்போம்!
நகரத்தில் சாலை ஓரம் வசிக்கும் நிலை!
வசிப்பிடம்:

கிராமத்தில் ,
ஏழையாக இருந்தாலும் சொந்தமாக குடிசை என்று ஒன்று இருக்கும் , அது எவ்வளவு மோசமான குடிசையாக இருந்தாலும் அவனுக்கே உரியது , அதற்கு வாடகை எதுவும் இல்லை.

நகரத்தில்,
வேலை தேடிவரும் இடத்தில் தங்க வசதிகள் பெரும்பாலும் செய்து தருவதில்லை. அவன் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை வீடு பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாலை ஓரங்களில் , அல்லது பாலங்கள் அடியில் , கட்டுமான பணி நடைபெறும் இடத்திலே தகர கூறை வேய்ந்த இடங்களில் பலருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் , வயது வந்த பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும், அவர்களுகு பாலியல் ரிதியான பல தொந்தரவுகள் ஏற்படலாம், பாதுகாப்பு இருக்காது.

குடிநீர்:
கிராமத்தில் ,
குடிநீர் வேண்டும் என்றால் கிணரு , குளம் , அடி பைப்புகள் என ஏதோ ஒன்று இருக்கும் , தேவைப்பட்ட நேரத்தில் போய் நீர் கொண்டு வரலாம். குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் ஒரு பிரச்சினை அல்ல.

நகரத்தில் ,
குடிநீர் லாரி எப்போது வருகிறதோ அப்போது தான் பிடிக்க முடியும் . குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் பெரும் பிரச்சினை. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குளிக்க இயலும்.கிராமத்தில் சுத்தமாக வாழ்ந்தவர்கள் நகரத்தில் அசுத்தமாக வாழ வேண்டும்.

உணவு:
கிராமத்தில்,
சமையல் கூழோ ,கஞ்சியோ வீட்டில் பொறுமையாக சமைத்து உண்ணலாம், அரிசி , போன்ற சமையல் பொருட்கள் வாங்க வேண்டி இருக்காது. அல்லது அரிசியை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை மூலம் வாங்கலாம். காய்கரிகள் , கீரை எதுவும் வாங்கும் நிலை இல்லை , பெரும்பாலும் இலவசமாக வீட்டு பின்புறம் தானே பயிரிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். விறகு ,வரட்டி எல்லாம் செலவில்லாமல் கிடைக்கும் .

நகரத்தில்,
குறைந்த சம்பளத்தில் உணவு விடுதிக்கு எல்லாம் போய் சாப்பிட முடியாது. எனவே சமைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தும் கடையில் வாங்கி தான் செய்ய வேண்டும். வேலைத்தேடி வந்த இடத்தில் குடும்ப அட்டையும் பயன்படுத்த முடியாது.விறகு கிடைக்கவில்லை என சாலை ஓரம் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எரித்து சமைக்கும் சூழலும் ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு:
கிராமத்தில்,
குழந்தைகள் அனைத்தும் பள்ளிக்கு போகும் என்று சொல்ல இயலாவிட்டாலும் , குறைந்த பட்சம் மதிய உணவிற்காக துவக்கப் பள்ளிக்கு போகும் குழந்தைகள் அதிகம் இருக்கும். அப்படி படிக்க போகாத போதும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வீட்டிற்கு உதவியாக இருப்பார்கள் , உ.ம் ஆடு ,மாடு மேய்ப்பது , அல்லது விறகு பொறுக்கி தருவது என. அவர்கள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் குறைவு.

நகரத்தில்,
புதிதாக வந்த இடத்தில் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை இருக்கும். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு என இடம் மாறும் சூழலில் பலரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. எனவே பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சாலை ஓரம் இருக்கும் சிறுவர்கள் என்ன செய்வார்கள், பிச்சை எடுக்க போவார்கள் சிலர்,குப்பை பொறுக்கலாம் , அதில் கிடைக்கும் காசை பெற்றோர்க்கு தெரியாமல் செலவு செய்வார்கள் , புகை பிடித்தல் , பான் பராக் என பல தீய பழக்கங்களும் கற்றுக்கொள்வார்கள். வருங்காலத்தில் தீய நட்பினால் குற்றவாளியாகவும் நேரிடலாம்.

சமூக பாதுகாப்பு:
கிராமத்தில் ,
ஒரு சமூக பாதுகாப்பு இருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள் அசம்பாவிதம் ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களும் வருவார்கள்.

நகரத்தில் ,
புது இடம் , அங்கேவே இருக்கும் அடாவடி ஆட்கள் தகராறு ,செய்தால் அடித்தால் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். பெண்களை கிண்டல் செய்தால் , பாலியல் தொல்லை கொடுத்தால் கூட எதுவும் செய்ய இயலாது. காவல் நிலையத்தில் சொன்னால் கூட சாலை ஓரம் இருப்பவர்கள் தானே என அலட்சியம் காட்டுவார்கள்.

உடல் ஆரோக்கியம்:
கிராமத்தில்,
இருக்கும் வரை அவர்கள் உடல் ஆரோக்கியம் தானாகவெ நன்றாக இருக்கும் , காரணம் சுத்தமான சூழல். அவ்வபோது சாதாரண காய்ச்சல் தலை வலி தவிர வேறு எதுவும் வருவதில்லை

நகரத்தில்,

அனைத்து விதமான வியாதிகளும் வரும். ஒரு ஆய்வறிக்கையில் இப்படி இடம் பெயர்ந்து வேலை செய்வோரால தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. நகரத்தில் வேலை செய்து விட்டு திரும்புபவர்களால் கிராமங்களிலும் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல்:
மேலும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மிக குறைந்த கூலியே தருகிறார்கள், ஒரு ஒப்பந்த தாரர் வசம் இவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழலும் உண்டு. அதிக நேரம் வேலைக் குறைந்த கூலி என இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.பல இடங்களில் கொத்தடிமை போன்று ஆகும் நிலையும் ஏற்படும்.
பணி நிரந்தரம் இல்லை. எல்லா நாட்களுக்கும் வேலை கிடைக்கும் எனவும் சொல்ல இயலாது.

இப்படி பலவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைந்த ஒரு தொகைக்காக தங்களது வாழ்க்கையை சீர் அழித்துக்கொள்ளும் நிலை தான் இப்படி இடம் பெயரும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரிடுகிறது.

நகரத்தில் ஏற்படும் செலவீனங்கள் போக அவர்கள் கையில் எஞ்சுவது ஒரு சொற்ப தொகை தான் அதனைக்கொண்டு வருங்காலத்தை வளப்படுத்துவதும் இயலாது, எனவே மீண்டும் மீண்டும் கூலி வேலை தேடி நகரம் , நகரமாக அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் அவனுக்கு கிடைக்கிறது!

அப்படி எனில் இவர்கள் வாழ்கை என்னாவது ,இதற்கு என்ன தீர்வு,
கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவது, அவர்களுக்கு கிராமத்திலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் ஆகும். இது பற்றி முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.
சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.

இல்லை எனில் இடம் பெயர்பவர்களின் வருகையால் ஏற்படும் திடீர் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரங்கள் திணறி விடும்! நகரத்தில் அனைவருக்கும் அனைத்து வசதியும் செய்து தருவது சாத்தியம் இல்லாது போய்விடும்!

காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்

யோகன் அவர்கள் நாட்டுக்காளைகள் படங்கள் கிடைத்தால் போட சொல்லிக்கேட்டார் , இணையத்தில் தேடியதில் பெரும்பாலான காளைகள் மாட்டியது சில காளைகள் மட்டும் கண்ணில் சிக்கவில்லை , கிடைத்தவரை போட்டுள்ளேன் படத்தை பார்த்துவிட்டு யாரும் ம்மா.... ம்மா என்றெல்லாம் கத்தக்கூடாது!