Thursday, September 27, 2007

மாவீரன் பகத் சிங்க் நூறாண்டு பிறந்தநாள் தினம்!


இன்று சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் பகத் சிங்கின் நூறாண்டு பிறந்த நாள் நினைவு தினம்.


அவரைப்பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு:

செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!







அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

பகத் சிங்க் தூக்கில் சில மர்மங்களும் உள்ளது, அவர் தூக்கில் இட்டும் சாகாமல் இருந்ததாகவும் எனவே , சாண்டர்ஸ் என்ற அதிகாரியின் உறவினர்கள் துப்பாக்கியில் சுட்டும் , வெட்டியும் கொன்றார்கள் எனவும் ஒரு நூல் சொல்கிறது(சாண்டர்சை கொன்றதாக தான் லாகூர் கொலை வழக்கு). மேலும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் ஆங்கில அரசே எரிக்கப்பார்த்தது. இது தொடர்பாக ஒரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட லெஜெண்ட் ஆப் பகத் சிங்க் படத்திலும் வரும்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

T20 சாம்பியன்களுக்கு வரவேற்பு!- விடியோ

இருபதுக்கு இருபதை அள்ளிவந்த நூற்றுக்கு நூறு சாம்பியன்களுக்கு மும்பையில் மிக ஆராவாரமான , உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராட்டு விழா நடைப்பெறும் வான்கடே மைதானம் வரையில் திறந்த பேருந்து ஒன்றில் வீரர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் தான் கூட பேருந்தில் இருந்தாவாறே ஆடி ஒத்துழைப்பு தந்து உற்சாகப்படுத்தியது வேகப்பந்து நடனப்புயல் ஸ்ரீசாந்த் மற்றும் சிக்சர் சிங்கம் யுவராஜ்.


திறந்தவெளிப்பேருந்தில் வீரர்களின் ஊர்வலம்:



அரசியல்வாதிகள் வழக்கம் போல தங்கள் வித்தையை இதிலும் காட்டி விட்டார்கள், வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் வீரர்களை பின் வரிசைக்கு தள்ளி விட்டனர், முன் வரிசையில் அரசியல்வாதிகளும் , கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுமே ஆக்ரமித்துக்கொண்டனர்.ரசிகர்கள் வந்தது T20 சாம்பியன் வீரர்களை பார்க்க தானே அன்றி இவர்களின் முகத்தை அல்ல. அரசியல்வாதிகளான சரத் பவார், மகாராஸ்டிர துணை முதல்வர் ஆகியோர் மைக் பிடித்து இதனை தங்கள் அரசியல் சாதனையாக்கி கொண்டதோடு அல்லாமல் காத்திருந்த ரசிகர்களின் பொறுமையையும் ஏகத்துக்கும் சோதித்து விட்டனர்.

தோனியின் சிறப்புரை வீடியோ:



செய்தி மற்றும் வீடியோ உபயம் ரெடீப், நன்றி:

Monday, September 17, 2007

காற்றினிலே வரும் குடிநீர்!

நமக்கு தேவையான நீர் மழை மூலம் கிடைக்கிறது. அந்த மழை எப்படி பெய்கிறது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள், கடல் நீர் அல்லது மற்ற நீர் ஆதாரங்களில் உள்ள நீர் ஆவியாகி மேகம் ஆகி ,பின் குளிர்ந்த காற்று வீசும் போது மேகம் குளிர்ந்து மழையாகிறது என்று.அந்த மழையை நாம் விரும்பிய போது வர வைக்க முடியுமா ,விமானம் மூலம் மேகங்களின் மீது வெள்ளி அயோடைட் ரசாயனத்தை தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம், ஆனால் நமக்கு தண்ணீர் தேவைப்படும் போது நம் வீட்டுக்குள் அப்படி வர வைக்க முடியுமா?

அழைக்கும் போது உதித்து விட்டால் அதற்கு பெயர் நிலவும் அல்ல , அழைக்கும் போது வீசிவிட்டால் அதற்கு பெயர் தென்றலும் அல்ல, அழைக்கும் போது மழை வந்து விட்டால் அதற்கும் பெயர் மழையும் அல்ல, அப்போ அது என்ன ,எப்படி, அது தான் காற்றில் இருந்து நீர் தயாரிக்கும் எந்திரம்.

அமெரிக்க ராணுவம் ஈராக் போன்ற பாலைவனங்களில் இருக்கும் போது குடி நீர் விமானம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது அதற்கு ஒரு காலனுக்கு 30 டாலர்கள் செலவாகிறதாம் அதனை குறைக்க , நாசா மூலம் ஆய்வு செய்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை செயற்கையாக குளிர வைத்து , சுருங்க வைத்து நீராக மாற்றும் எந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.ஆனால் நாசாவிற்கு முன்னரே அக்யூவா சயின்ஸ் என்ற இன்னொரு நிறுவனம் அதை விட சிறப்பான எந்திரத்தை உருவாக்கியுள்ளது , இப்பொழுது அதனை தான் அமெரிக்க ராணுவத்தினர் பாலைவனங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றின் ஈரப்பதத்தில் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளதாம்.காற்றில் 14 சதவீத ஈரப்பதம் இருந்தால் கூட போதும் ஒரு நாளைக்கு 600 காலன் நீர் தயாரிக்கலாம். பெரிய அளவு எந்திரங்களைக்கொண்டு 500,000 லிட்டர் கூட தயாரிக்க இயலுமாம்.

இந்த எந்திரம் செயல் படும் முறை, கிட்டதட்ட நம் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி போன்ற முறை தான்.

காற்றினை உறிஞ்சி இழுத்து முதலில் ஒரு வடிக்கட்டி வழியாக செலுத்தப்படுகிறது, இதன் மூலம் தூசுக்கள் அகற்றப்படுகிறது.

பின்னர் காற்று குளிரூட்டும் வாயு கொண்ட குழாய்களுக்கு இடையே செலுத்தும் போது குறைந்த வெப்பத்தில் நீராவி சுருங்கி நீராக மாறும்.

அதனை ஒரு தொட்டியில் சேகரித்து , பின்னர் வழக்கமான , புற ஊதாக்கதிர் , ஒசோன் , சவ்வூடு பரவுதல் முறை மூலம் சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு பயன் பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கருவியை வடிவமைக்கும் முறையினைப்பொறுத்து திறனின் அளவு மாறுபடுவதால், எந்த நிறுவனமும் அதன் எந்திரங்களின் செயல் முறையை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளன. மேலே சொல்லப்பட்டுள்ளது அடிப்படை தத்துவம் மட்டுமே.

மேலும் சில நிறுவனங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை கிரகிக்கும் ரசாயனங்களைப்பயன் படுத்தியும் எந்திரங்களை வடிவமைத்துள்ளன.


மற்றொரு நிறுவனம் , காற்றலை வடிவில் மின்சக்தி இல்லாமல் , இயங்கும் வண்ணம் , ஒரு எந்திரம் வடிவமைத்துள்ளது, அதன் உற்பத்தி திறன் சிறிது குறைவாக இருக்கும். இம்முறையில் எவ்வித குளிரூட்டும் பொருளும் பயன் படுத்தாமல் காற்றினை ஒரு சுழல் பாதையில் செல்ல விட்டு குளிர வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 13, 2007

இணையத்தில் இலவசமாக 20க்கு இருபது உலககோப்பை போட்டிகள்

இலவசமாக தெனாப்ரிக்காவில் நடக்கும் 20க்கு இருபது உலக கோப்பை போட்டிகளை இணையம் மூலம் பார்க்க வேண்டுமா , அதற்கென sopcast என்ற p2p வகை தொலைக்காட்சி மென்பொருள் ஒன்று உள்ளது அதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும.பின்னர் நேரடி ஒளிபரப்பாக போட்டிகளை தரும் இணைய தொடுப்புகளை சில இணைய பக்கங்களில் தருகிறார்கள் , அதில் ஏதேனும் ஒரு தொடுப்பினை சொடுக்கினால் உங்கள்து சோப்காஸ்ட் தொலைக்காட்சி செயல் பட்டு ஒளிபரப்பினைக்காணலாம். குறைந்த பட்சம் 256 kbps வேகமாவது இருந்தால் ஓரளவு நன்றாக தெரியும். அதிக வேகம் இருந்தால் இன்னும் நலம்.ஆரம்பத்தில் சிறிது நேரம் "buffer" ஆக எடுத்துக்கொள்ளும் பின்னர் தெளிவாக காட்சிகள் வரும்.

சோப்காஸ்ட்டில் உலகக்கோப்பை போட்டிகள் மட்டும் அல்லாது மேலும் பல இலவச தொலைக்காட்சிகளையும் காணலாம்.

சோப்காஸ்ட் இணையத்தளம்: sopcast

நேரடி ஒளிபரப்பு இணைப்பு தளம்; live links

மற்றும் ஒரு இணைப்பு தரும் தளம் , இதில் இங்கிலாந்து, இந்தியா ஒரு நாள் போட்டித்தொடர் என்று போட்டிருந்தாலும் 20க்கு இருபதும் தெரியும், முதல் லின்க் நன்கு வேலை செய்கிறது.

another link


தற்போதைய நிலவரம் ,
வங்க தேசம் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது. முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேறியது மே.தீவுகள்

சுருக்கமான ஆட்ட விவரம்:
மே.தீவு:
தேவோன் சுமித்-51,
சந்திரபால்-37
சாமுவெல்ஸ்-27,
டிவைன் சுமித்-29
மொத்தம்- 164/8

வங்கதேசம் பந்துவீச்சு:
ஹசன் 4/34
ரசாக் 2/25

வங்கதேசம்:
அஷ்ரபுல்-61(27)விரைவான அரைசதம் 20 பந்துகளில்)
அஹ்மத்- 62(49)
மொத்தம் -165/4
மே.தீவுகள் பந்து வீச்சு:
ராம்பால் -2/35
சர்வான் -2/10

Wednesday, September 12, 2007

சிமெண்ட் செங்கல்லை இணைப்பது எப்படி?


பசைக்கொண்டு காகிதம் ஒட்டுகிறோம் , அதே போல சிமெண்ட் கொண்டு இரண்டு செங்கல்லை ஒட்ட முடிகிறது , எவ்வாறு அது ஒட்டுகிறது. சிமெண்ட் , பசை இதற்கெல்லாம் ஒட்டும் , இணைக்கும் தன்மை எப்படி வருகிறது.

சிமெண்ட் கால்சியம் சிலிகேட்,கால்சியம் கார்பனேட், கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் பொடி செய்யப்பட்ட கலவையாகும். தண்ணீருடன் கலந்து கிடைக்கும் பசை போன்ற சிமெண்ட் காயும் போது ஏற்படும் நீரேற்ற வினையினால்(hydration) கெட்டிப்படுகிறது, அப்பொழுது அது கால்சியம் சிலிகேட் ஹைட்ரேட் ஆக மாறிவிடும்.அது ஒரு திரும்ப பெற இயலாத வேதி வினை ஆகும். சிமெண் குழம்பு செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும் போது இறுகுவதால் பிடித்துக்கொள்ளும். இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. இது மட்டும் இல்லாமல், சிமெண்டில் உள்ள மூலக்கூறுகளின் மின்னியல் பண்புகளும் இணைப்பு சக்தியை சிமெண்டிற்கு தருகிறது.

மேலும் சிமெண்டுடன் தண்ணீர் சேர்ப்பதால் கால்சியம்சிலிகேட், கால்சியம் அலுமினேட் போன்ற மூலக்கூறுகள் பிளவுற்று கால்சியம் அயனிகள்(ca2+) உருவாகும், எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை , அவற்றில் எலெக்ட்ரான்கள் என்ற எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருக்கும். செங்கல்லில் உள்ள அணுக்களில் இருந்து சில எலெக்ட்ரான்கள் பிணைப்பில் இருந்துவிடுபட்டு கால்சியம் அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும். கட்டுமானப்பணியின் போது செங்கல் மீது தண்ணீர் தெளிப்பார்கள் ,இது எலெக்ட்ரான்கள் விடுபட்டு எளிதாக இடம் மாற உதவும். இவ்வாறு எலெக்ட்ரான் பரிமாற்றத்தால் ஏற்படும் பிணைப்பிற்கு கோவேலண்ட் பாண்ட்(covalent bond) என்று பெயர்.இதன் மூலம் மூலக்கூறுகளிடையே ஒரு இணைப்பு விசை உருவாகும் அதற்கு வாண்டர் வால்ஸ் விசை(wanderwalls force) என்றுப்பெயர்.

செங்கல்லை சிமெண்ட் இணைப்பதன் காரணம் மேல் சொன்ன இரண்டும் தான்.மேலும் சிமெண்டில் நீரேற்ற வினை ஏற்பட்டு இறுகும் போது சுருங்கும் , அதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் சில சமயங்களில். மேலும் முழுவதும் நீரேற்றம் ஆகாத மூலக்கூறுகளையும் நீரேற்ற அதிகப்படியாக தண்ணீர் கட்டுமானத்தின் மீது ஊற்றப்படும். இதற்கு செட்டிங் என்பார்கள் சாதரணமாக 28 நாட்கள் தேவைப்படும்!

இதே போன்று பசை காகிதத்தை ஒட்டவும் , எலெக்ட்ரான்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் கோவேலண்ட் பாண்ட் தான் காரணம்.

Sunday, September 09, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்!-week end posting

அறிவு ஜீவிகள் எல்லாம் இதைக்கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுங்கள், வாரக்கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டி வரைக்கும் ஒரு மின்னல் வேக பயணம் போய்விட்டு வந்தேன். எதுக்கா எல்லாம் அதுக்கு தான்யா.. பச்ச புள்ளையாட்டாம் கேட்கப்படாது , அங்கு போனதும் ராயல் சேலஞ்ச ஆர்டர் செய்து குமுறிவிட்டேன்! சரி திரும்ப வரும் போது வெரும் கையுட்ன் வரக்கூடாது என்று ஒரு முழு புட்டி இம்பீரியல் புளு என்ற சரக்கு வாங்கினேன்(கைல அது வாங்குற அளவு தான் காசு இருந்துச்சு full - 210 rs/- only very cheap) Rc வாங்கணும்னு தான் திட்டம் , ஒரு குளிர் ஊட்டப்பட்ட பாரில் பெக் கணக்கில் ஊத்தி அரை RC க்கு முழு அளவுக்கு காசப்பிடுங்கிட்டான்!

நேற்று இரவில் இருந்து இன்று இரவு 12க்குல் அந்த முழு புட்டியும் காலி ஆகிடுச்சு உபயம் நம்ம இந்திய கிரிக்கெட் அணி, வந்தவுடன் கொஞ்சம் போட்டேன் , மேட்ச் பார்த்தேன்.. தூத்தேரி எழவு எடுத்த பசங்கனு இன்னும் கொஞ்சம் போச்சு இப்படியே கேப்ல எல்லாம் போட்டு கடைசில இன்னிக்கே எல்லாம் தீர்ந்து போச்சு ... அடுத்த வீக் எண்ட் வரைக்கும் வைத்து இருக்கனும்னு திட்டம் போட்டேன் அது நாசாம போச்சு! வேற என்ன செய்ய வழக்கம் போல பச்சை கலர் போர்ட் போட்ட கடைக்கு நாளைக்கும் போகனும்! :((

Friday, September 07, 2007

அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில் ,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள் ,,

சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony),
மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

LetterMorse
Adi-dah
Bdah-di-di-dit
Cdah-di-dah-dit
Ddah-di-dit
Edit
Fdi-di-dah-dit
Gdah-dah-dit
Hdi-di-di-dit
Idi-dit
Jdi-dah-dah-dah
Kdah-di-dah
Ldi-dah-di-dit
Mdah-dah


N dah-dit
Odah-dah-dah
Pdi-dah-dah-dit
Qdah-dah-di-dah
Rdi-dah-dit
Sdi-di-dit
Tdah
Udi-di-dah
Vdi-di-di-dah
Wdi-dah-dah
Xdah-di-di-dah
Ydah-di-dah-dah
Zdah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

லிப்டில் போனால் உடல் எடை குறைக்கலாம்?

சாதாரணமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் , சில சிறிய வேலைகளையும் உடல் உழைப்பின் மூலம் செய்வதால் அதிக கலோரிகள் எரித்து உடல் எடைக்குறைக்கலாம் என சொல்வார்கள். அந்த வகையில் மாடிப்பகுதிகளுக்கு செல்ல லிப்டிற்கு பதில் படிகளில் ஏறி சென்றால் எடை குறையும் என்பார்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சாட்சியாக சொல்கிறேன், லிப்டில் இறங்கி வந்தால் உடனடியாக உடல் எடை குறையும் , 100 சதவீதம் உத்திரவாதம் !

அது எப்படி என்று சொல்கிறேன்,

முதலில் உங்கள் எடை என்னவென்று குறித்துக்கொள்ளுங்கள்

முதல் தளத்தில் இருக்கும் ஒரு லிப்டில் ஏறி நின்று கொள்ளுங்கள் , எடை குறைவதைக் காண கையோடு ஒரு எடை பார்க்கும் கருவியும் எடுத்து செல்லுங்கள். இப்பொழுது எடை பார்க்கும் எந்திரத்தின் மீது நின்று கொண்டு முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வாருங்கள். அப்படி வரும் போது உங்கள் எடை என்னவென்று எடை பார்க்கும் எந்திரத்தில் பாருங்கள், கண்டிப்பாக எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்! கடினமாக உழைக்காமல் எப்படி எடை குறைந்தது, ஆச்சரியமாக இருக்கிறதா , அது தான் இயற்பியலின் விந்தை!

நம் உடல் எடை என்பது புவி ஈர்ப்பு விசை ஆனது உடலின் பருமன் மீது செயல்படுவதால் ஏற்படும் விசை ஆகும், அவ்விசையை எடைப்பார்க்கும் கருவி உணர்வதால் அதில் எடை காட்டுகிறது.

லிப்டில் மேல் இருந்து கீழ் நோக்கி இறங்கும் போது எடை குறைவாக காட்டக்காரணம் , லிப்ட் அது ஒரு வேகத்தில் இறங்குகிறது எனவே அதன் மூலம் ஒரு விசை நம் உடலில் செயல்படும், எனவே இப்பொழுது நம் உடலின் மீது இரண்டு விசை செயல்படுகிறது , புவி ஈர்ப்பு விசை மேல் திசையிலிருந்து கீழ் நோக்கிய விசை , கூட லிப்டின் மேலிருந்து கீழ் நோக்கிய விசை இரண்டும் ஒரே திசையில் இருப்பதால் , இப்போது புவீஈர்ப்பு விசையில் ஒரு மாற்றம் ஏற்படும் அதன் காரணமாக உடலின் மீது மொத்த விளைவு ஈர்ப்பு விசை குறையும்! எனவே தான் எடை குறைவாக காட்டும் எடைப்பார்க்கும் எந்திரம்!

இரண்டு விசையும் எதிர் எதிராக இருந்தால் எடை கூடுதலாக காட்டும் .

*லிப்டில் கீழ் இருந்து மேல் மாடிக்கு செல்லும் போது எடை அதிகம் காட்டும் எடைப்பார்க்கும் கருவி.

*லிப்ட் நிற்கும் போது உடலின் உண்மையான எடைக்காட்டும் !

எடைப்பார்க்கும் எந்திரத்தின் மீதான விசை = எடை
f =m*a

இங்கு a = g , லிப்டின் மேல் , கீழ் செயல்பாட்டினால் நம் உடலில் ஏற்படும் விசை ,மேலும் லிப்ட் இயங்கும் வேகத்தினால் வரும் முடுக்கத்தினால் (a= acceleration)வருவது என இரண்டு விசை , எனவே மொத்த கூட்டு விசை

f= m*(g - or +(a)

இதன் மூலம் நிகர எடை அறியாலாம்.

இந்த சூத்திரம் கொண்டு லிப்ட் வேகத்தீற்கு ஏற்ப மேல் அல்லது கீழ் செல்லும் போது ஏற்படும் எடை மாற்றத்தினை கணக்கிடலாம்.கீழ் இறங்கும் போது "-" மேல் ஏறும் போது "+".

உடல் எடையை குறைக்கணும்னா இனிமே வேகமா லிப்டில் இறங்கினா போதும்! உண்மையா உடல் நலம் ,எடைக்குறைத்தல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓடி வந்து படித்த மக்கள் அடியேனை பொருத்தருள்க!

Thursday, September 06, 2007

நீங்களும் கண்டுபிடிக்கலாம் பூமியின் சுற்றளவை

இன்று பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்ட நிலையில் எதுவும் சாத்தியம் ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் , கருவிகள் என எதுவும் இல்லாமலே பலவற்றையும் வெறும் கணக்கீட்டின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

அப்படி பூமியின் விட்டம் , சுற்றளவை மிகச்சரியாக கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயெ எரட்டோதீனியஸ்(Eratothenes, 230 B.C) என்ற கிரேக்க அறிஞர் முக்கோணவியல் மூலம் கண்டு பிடித்துள்ளார். அது மிக எளிய ஒன்று , நாம் கூட அம்முறையை செய்துப்பார்க்கலாம்.
















எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த முறை:

ஒரு அடி நீளம் உள்ள குச்சி ஒன்றினை பூமியில் செங்குத்தாக நட்டுவைக்கவும். அதன் நிழலை தொடர்ந்து கவனித்து வந்தால் , இருப்பதிலேயே மிக நீளம் குறைவான நிழல் சூரியன் தலைக்கு நேராக உச்சியில் வரும் போது தான் விழும் என்பது தெரியவரும். எனவே சூரியன் உச்சியில் வரும் போது குச்சியின் நிழல் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஏறக்குறைய அதே தீர்க்க ரேகைப்பகுதியில் உள்ள வேறு ஒரு இடத்தில் குச்சியை நட்டுவைத்து , மீண்டும் சூரியன் உச்சியில் இருக்கும் போது நிழலின் நீளத்தை அளந்து கொள்ளவேண்டும்.

இதில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் கோணத்தூரம் என்பது , சூரியக்கதிர் பூமியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கு சமம் , அதனைக்கண்டு பிடிக்க தான் நிழல் , குச்சி இரண்டும் பயன்படுகிறது. இங்கே நிழல், குச்சி இரண்டின் நீளங்கள் தெரியும் அதைக்கொண்டு Tan கோணம் கண்டறியலாம்.

இரண்டு இடங்களில் நிழல் விழவைத்து இரண்டு கோணங்கள் ஏன் கணக்கிட வேண்டும் , இந்த இரண்டு புள்ளிகளும் , பூமியின் மையம் மூன்றாவது புள்ளியாக கொண்டு ஒரு முக்கோணம் வரைந்தால் , அதில் பூமியின் மையத்தில் வரும் வரும் கோணம் இந்த இரண்டு கோணத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். படத்தினை பார்த்தால் கொஞ்சம் விளங்கும்!

1) h1/b1= tan deeta1
2)h2/b2= tan deeta2

tan1-tan2= புவிமையத்தில் வரும் கோணம்.

நிழல் விழும் இரண்டு புள்ளிகள் , மையம் மூன்றும் இணைந்து ஒரு முக்கோணம் உருவாக்கினால் , அதில் ஒரு பக்கம் இரண்டு நிழல் புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு தெரியும், மற்றொரு பக்கம் என்பது பூமியின் ஆரம் அது தெரியாது , ஆனால் மையத்தில் வரும் கோணம் இப்போது தெரியும் ,

எனவே , அதனைக்கொண்டு ,

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ ஆரம் = மையக்கோணம்
எனவே ,

பூமியின் ஆரம் = இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம்/ மையக்கோணம்

என எளிதாக கண்டுபிடித்து விடலாம்,

அப்படி எரட்டோதீனியஸ் கண்டுபிடித்த ஆரம் , 6371.02 கி.மீ

இதனைக்கொண்டு பூமியின் சுற்றளவும் சொல்ல முடியும், 2xpi xR= 40,008 km .இப்போது நீங்களும் பூமியின் சுற்றளவை கண்டுப்பிடிக்கலாம்!

இதுமட்டும் அல்லாமல் முக்கோணவியலைக்கொண்டு தான் அக்காலத்திலேயே நிலவின் அளவு, அதன் தொலைவு, மேலும் சூரியன் இருக்கும் தூரம் கூட சரியாக கண்டுப்பிடித்தார்கள்!மேலும் மலைகளின் உயரம் கூட இப்படி அளக்கலாம்.

Friday, August 31, 2007

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் இடமாற்றமா?


நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிவித்துள்ளதாக செய்தித்தாள்களில் வந்துள்ளது.

இப்பொழுது அது அவசியமா ,

சென்னை மத்தியப்பேருந்து நிலையம் பற்றி,

*ஆசியாவிலேயே மிக்கபெரிய பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பு,
*103 கோடி செலவில் கட்டப்பட்டது!
*300 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வண்ணம் பேக்கள் உள்ளது.
*2000 பேருந்துகள் வந்து செல்கின்றன!
*இலவச கழிப்பிடம் , வாகனம் நிறுத்தும் இடம் , கடைகள் ,உணவுவிடுதிகள் அனைத்தும் உள்ளது!
*தற்போது சிறப்பு நிலை பேருந்து நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு ISO:9001:2000 சான்றளிக்கப்பட்டுள்ளது.அப்படி சான்று பெற்ற ஒரே இந்திய பேருந்து நிலையம் இது தான்!

இப்படி சகல வசதிகளுடன் புதிதாகக்கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அதற்குள் மாற்ற வேண்டும, புதிதாக புறநகர் பகுதிகளிலில் மூன்றாக பிரித்து திருவான்மியூர், தாம்பரம் , பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனைப்போல தோன்றினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை முன்னரே கணக்கிட்டு , அப்பொழுதே மூன்றாகவோ அல்லது இன்னும் கொஞ்சம் புற நகரான பகுதியில் கட்டி இருக்கலாமே.

புதிதாக கட்ட பெரும் செலவு , ஏற்கனவே கட்டியதில் செலவிட்ட 103 கோடியும் தண்டம் , ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஞானோதயங்களுக்கு ஏற்றார் போல திட்டங்களை தீட்டிக்கொண்டு போனால் அதற்கு யார் பணம் செலவு ஆகிறது , எல்லாம் மக்கள் பணம் தானே!

பேருந்து நிலையதிற்கு ISO சான்று அளித்த போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்...
"After a detailed survey, keeping in mind the traffic density by 2015, the CMDA constructed the "terminus, which was unique in many ways, more particularly the ultra-modern facilities provided for the operation of buses." It was built at an estimated cost of Rs.103 crores, including the cost of 37 acres of land."

2015 இல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள் ஆனால் அதற்குள் , மாற்ற வேண்டும் என ஆலோசிக்கிறார்கள்! புதிய திட்டங்கள், புதிய ஏல ஒப்பந்தம் , புதிய வருமானம் என்ற கணக்கில் செய்கிறார்கள் போல!

சமிபகாலமா 100 அடி சாலையில் கிண்டி கத்திப்பாரா - கோயெம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது காரணம், மோசமான சாலைகள், சாலை ஆக்ரமிப்புகள் , முறையற்ற பார்க்கிங்கள், ஷேர் ஆட்டோக்கள் நடு சாலையில் நின்று பயணிகளை ஏற்றுவதும் , இறக்குவதும்,கத்திப்பாரவில் மேம்பாலம் கட்டுகிறேன் என்று சாலையை கொத்திப்போட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது என பல காரணங்கள் உள்ளது.இவற்றை முதலில் சரி செய்தாலே பாதி நெரிசல் குறைந்து விடும்.

சிறிது காலத்திற்கு முன்னர், ஆம்னி பஸ்கள் நகரில் வராமல் மதுரவாயல் புறநகர் சாலை வழியாக சென்று வரவேண்டும் என உத்திரவிட்டார்கள் , தனியார் பேருந்துகளுக்கு நட்டம் ஏற்படும் என அவர்கள் யாரையோ கவனித்து மீண்டும் நகருக்குள் வர அனுமதி வாங்கிக்கொண்டார்கள்.முன்னர் போல அவர்களை புறநகர் சாலையில் செல்ல சொல்லலாம் போக்குவரத்து நெரிசல் குறையும்.

அல்லது அனைத்து பேருந்துகளும் நகருக்கு வரும் போது மதுர வாயல் புறநகர் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வரவேண்டும், சென்னையில் இருந்து செல்லும் போது 100 அடி சாலை மார்க்கமாக வழக்கம் போல செல்லலாம் , இதனால் பேருந்துகளுக்கு பயணிகள் வருவதும் தடைபடாது , நெரிசலும் ஓரளவு குறையும்.

மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்தால் பயணிகள் சுமைகளை தூக்கிகொண்டு வேறு வேறு ஊர்களுக்கு செல்லும் இணைப்பு பேருந்துகளை பிடிக்க அலைய வேண்டி இருக்கும்.

Tuesday, August 28, 2007

என்ன வளம் இல்லை இந்நாட்டில்!

நம் நாட்டில் படித்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு போவோர் எண்ணிக்கை அதிகம் இதனை பிரெயின் டிரெயின்(brain drain) என்பார்கள்.எனினும் சமீப காலமாக பல ஐ.ஐ.எம் மாணவர்கள் அப்படி கிடைத்த வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு இந்தியாவில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். காரணம் தற்போது அயல்நாடுகளுக்கு இணையான அல்லது மிக நல்ல சம்பளங்கள் இந்திய நிறுவனங்களில் தரப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம் தான்.

இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் ஒரு நல்ல முன்னுதாரணம் ஆக அமைந்துள்ளது.

பெரும்பாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அனைவரின் மனதும் இந்தியாவில் தான் இருக்கும் , வெகு சொற்பமானவர்களே "Dirty country" என்பது போல இந்தியாவை மட்டமாக நினைக்க கூடும். பெரும்பாலோர் ஆத்மார்த்தமாக இந்தியாவின் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.வருங்காலத்தில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நம் அறிவுத்திறன் குறைந்து அனைவரும் இந்தியாவில் இருந்து செயல்படும் சூழல் வரும் , அந்நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு மாணவனும் படிக்க என அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்குகிறது அப்பணம் பல இந்தியர்களின் உழைப்பில் வந்தது. வரி கட்டுபவர்கள் பணம் மட்டும் அல்ல, சாதாரணமாக ஒரு உப்பு பொதி வாங்கினால் அதில் விற்பனை வரி என எல்லா சராசரி இந்தியனும் அரசுக்கு வருமானம் தருகிறான் , எனவே வரிக்கட்டுவோர் மட்டும் கவலைப்பட வேண்டியது அல்ல, அனைவருக்கும் உண்டு பொறுப்பு!

என்ன தான் வெளிநாட்டில் நிறைய சம்பளம் கொடுத்தாலும் அதனை இந்திய பணத்துடன் ஒப்பிடும் போது தான் அதிகமாத்தெரியும், அன்னாட்டு வாழ்கை முறைக்கு அது சாதாரணமான சம்பாத்தியம் தான். இந்தியாவில் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வீட்டு வேலைக்கு , கார் டிரைவர் என வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியும் , அயல் நாட்டில் அப்படி வைத்துக்கொள்வது எத்தனை பேருக்கு சாத்தியமாகும்.எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களே கார் ஓட்டி , வீடு கழுவி,பெருக்கி , துணி துவைத்து என கஷ்டப்படவேண்டும், வாங்கும் பணத்தை அனுபவிக்க முடியாது. இந்தியாவில் மிதமான சம்பளம் அதற்கு ஏற்ப வாழ்வை அனுபவிக்கலாம்!

இந்த அயல்நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை பற்றி சினிமா நடிகர் விஜய் வேறு தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார், இது குறித்து சிவபாலன் ஒரு பதிவும் போட்டுள்ளார்,

சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

யார் சொன்னது எனப்பார்க்காமல் சொன்னதை பார்த்தால் சரி எனத்தான் தோன்றுகிறது , ஆனால் அவரே தெலுங்கில் வெற்றிப்பெற்ற படங்களின் கதையை தான் விரும்பி வாங்கி நடிக்கிறார் , தமிழில் நல்ல கதைகளே இல்லையா, முதலில் அதை யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்கண்ணா!

மக்களே உங்களுக்கும் இது குறித்து மாற்றுக்கருத்துகள் இருக்கும் இருந்தால் சொல்லலாமே!

Monday, August 27, 2007

உள்ளது உள்ளபடி - 2:விவசாய தொழிலாளர்களின் நகர்ப்புர இடம் பெயர்வும் விளைவுகளும்

இந்தப்பதிவு "உள்ளது உள்ளபடி -ஓகை அவர்கள் பார்வைக்கு" என்றப்பதிவின் தொடர்ச்சியாக வருவது.அப்பதிவை படித்து விட்டு தொடர்ந்தால் இதன் அர்த்தம் எளிதாக புரியும்.
அப்பதிவு ஓகை அவர்களின் பதிவிற்கு பதிலாக எழுதப்பட்ட ஒன்று எனவே ஓகை அவர்களின் பதிவிற்கான சுட்டி: ஓகை

கிராமங்களில் வாழ்ந்த விவசாயி , விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு , வருமானம் இவற்றின் காரணமாக நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வரும் சூழலில் , அவர்களுக்கு கிடைப்பது சிறிய வருமானம் ஆனால் அவர்கள் அதற்காக இழப்பது அதிகம். கிராம , நகர்ப்புர வசிப்பிட சூழல், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்பீட்டளவில் காண்போம்!
நகரத்தில் சாலை ஓரம் வசிக்கும் நிலை!
வசிப்பிடம்:

கிராமத்தில் ,
ஏழையாக இருந்தாலும் சொந்தமாக குடிசை என்று ஒன்று இருக்கும் , அது எவ்வளவு மோசமான குடிசையாக இருந்தாலும் அவனுக்கே உரியது , அதற்கு வாடகை எதுவும் இல்லை.

நகரத்தில்,
வேலை தேடிவரும் இடத்தில் தங்க வசதிகள் பெரும்பாலும் செய்து தருவதில்லை. அவன் வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை வீடு பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாலை ஓரங்களில் , அல்லது பாலங்கள் அடியில் , கட்டுமான பணி நடைபெறும் இடத்திலே தகர கூறை வேய்ந்த இடங்களில் பலருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

பெண்கள் , வயது வந்த பெண் குழந்தைகள் வைத்து இருப்பவர் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும், அவர்களுகு பாலியல் ரிதியான பல தொந்தரவுகள் ஏற்படலாம், பாதுகாப்பு இருக்காது.

குடிநீர்:
கிராமத்தில் ,
குடிநீர் வேண்டும் என்றால் கிணரு , குளம் , அடி பைப்புகள் என ஏதோ ஒன்று இருக்கும் , தேவைப்பட்ட நேரத்தில் போய் நீர் கொண்டு வரலாம். குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் ஒரு பிரச்சினை அல்ல.

நகரத்தில் ,
குடிநீர் லாரி எப்போது வருகிறதோ அப்போது தான் பிடிக்க முடியும் . குளிப்பது , துணி துவைப்பது எல்லாம் பெரும் பிரச்சினை. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குளிக்க இயலும்.கிராமத்தில் சுத்தமாக வாழ்ந்தவர்கள் நகரத்தில் அசுத்தமாக வாழ வேண்டும்.

உணவு:
கிராமத்தில்,
சமையல் கூழோ ,கஞ்சியோ வீட்டில் பொறுமையாக சமைத்து உண்ணலாம், அரிசி , போன்ற சமையல் பொருட்கள் வாங்க வேண்டி இருக்காது. அல்லது அரிசியை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டை மூலம் வாங்கலாம். காய்கரிகள் , கீரை எதுவும் வாங்கும் நிலை இல்லை , பெரும்பாலும் இலவசமாக வீட்டு பின்புறம் தானே பயிரிட்டு பயன்படுத்திக்கொள்வார்கள். விறகு ,வரட்டி எல்லாம் செலவில்லாமல் கிடைக்கும் .

நகரத்தில்,
குறைந்த சம்பளத்தில் உணவு விடுதிக்கு எல்லாம் போய் சாப்பிட முடியாது. எனவே சமைக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்தும் கடையில் வாங்கி தான் செய்ய வேண்டும். வேலைத்தேடி வந்த இடத்தில் குடும்ப அட்டையும் பயன்படுத்த முடியாது.விறகு கிடைக்கவில்லை என சாலை ஓரம் கிடக்கும் குப்பைகளை எல்லாம் எரித்து சமைக்கும் சூழலும் ஏற்படும்.

குழந்தை வளர்ப்பு:
கிராமத்தில்,
குழந்தைகள் அனைத்தும் பள்ளிக்கு போகும் என்று சொல்ல இயலாவிட்டாலும் , குறைந்த பட்சம் மதிய உணவிற்காக துவக்கப் பள்ளிக்கு போகும் குழந்தைகள் அதிகம் இருக்கும். அப்படி படிக்க போகாத போதும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வீட்டிற்கு உதவியாக இருப்பார்கள் , உ.ம் ஆடு ,மாடு மேய்ப்பது , அல்லது விறகு பொறுக்கி தருவது என. அவர்கள் கெட்டுப்போவதற்கு வாய்ப்புகள் குறைவு.

நகரத்தில்,
புதிதாக வந்த இடத்தில் பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை இருக்கும். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு என இடம் மாறும் சூழலில் பலரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. எனவே பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சாலை ஓரம் இருக்கும் சிறுவர்கள் என்ன செய்வார்கள், பிச்சை எடுக்க போவார்கள் சிலர்,குப்பை பொறுக்கலாம் , அதில் கிடைக்கும் காசை பெற்றோர்க்கு தெரியாமல் செலவு செய்வார்கள் , புகை பிடித்தல் , பான் பராக் என பல தீய பழக்கங்களும் கற்றுக்கொள்வார்கள். வருங்காலத்தில் தீய நட்பினால் குற்றவாளியாகவும் நேரிடலாம்.

சமூக பாதுகாப்பு:
கிராமத்தில் ,
ஒரு சமூக பாதுகாப்பு இருக்கும், எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள் அசம்பாவிதம் ஏற்பட்டால் உதவிக்கு ஆட்களும் வருவார்கள்.

நகரத்தில் ,
புது இடம் , அங்கேவே இருக்கும் அடாவடி ஆட்கள் தகராறு ,செய்தால் அடித்தால் வாங்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். பெண்களை கிண்டல் செய்தால் , பாலியல் தொல்லை கொடுத்தால் கூட எதுவும் செய்ய இயலாது. காவல் நிலையத்தில் சொன்னால் கூட சாலை ஓரம் இருப்பவர்கள் தானே என அலட்சியம் காட்டுவார்கள்.

உடல் ஆரோக்கியம்:
கிராமத்தில்,
இருக்கும் வரை அவர்கள் உடல் ஆரோக்கியம் தானாகவெ நன்றாக இருக்கும் , காரணம் சுத்தமான சூழல். அவ்வபோது சாதாரண காய்ச்சல் தலை வலி தவிர வேறு எதுவும் வருவதில்லை

நகரத்தில்,

அனைத்து விதமான வியாதிகளும் வரும். ஒரு ஆய்வறிக்கையில் இப்படி இடம் பெயர்ந்து வேலை செய்வோரால தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. நகரத்தில் வேலை செய்து விட்டு திரும்புபவர்களால் கிராமங்களிலும் எய்ட்ஸ் தற்போது பரவி வருகிறது என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழல்:
மேலும் கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு மிக குறைந்த கூலியே தருகிறார்கள், ஒரு ஒப்பந்த தாரர் வசம் இவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழலும் உண்டு. அதிக நேரம் வேலைக் குறைந்த கூலி என இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.பல இடங்களில் கொத்தடிமை போன்று ஆகும் நிலையும் ஏற்படும்.
பணி நிரந்தரம் இல்லை. எல்லா நாட்களுக்கும் வேலை கிடைக்கும் எனவும் சொல்ல இயலாது.

இப்படி பலவற்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் மிக குறைந்த ஒரு தொகைக்காக தங்களது வாழ்க்கையை சீர் அழித்துக்கொள்ளும் நிலை தான் இப்படி இடம் பெயரும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரிடுகிறது.

நகரத்தில் ஏற்படும் செலவீனங்கள் போக அவர்கள் கையில் எஞ்சுவது ஒரு சொற்ப தொகை தான் அதனைக்கொண்டு வருங்காலத்தை வளப்படுத்துவதும் இயலாது, எனவே மீண்டும் மீண்டும் கூலி வேலை தேடி நகரம் , நகரமாக அலையும் ஒரு நாடோடி வாழ்க்கை தான் அவனுக்கு கிடைக்கிறது!

அப்படி எனில் இவர்கள் வாழ்கை என்னாவது ,இதற்கு என்ன தீர்வு,
கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்குவது, அவர்களுக்கு கிராமத்திலே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் ஆகும். இது பற்றி முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.
சுருக்கமாக சொன்னால் கிராமத்தை சிறு நகரம் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசு திட்டங்கள் போடவேண்டும்.

இல்லை எனில் இடம் பெயர்பவர்களின் வருகையால் ஏற்படும் திடீர் மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரங்கள் திணறி விடும்! நகரத்தில் அனைவருக்கும் அனைத்து வசதியும் செய்து தருவது சாத்தியம் இல்லாது போய்விடும்!

காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்

யோகன் அவர்கள் நாட்டுக்காளைகள் படங்கள் கிடைத்தால் போட சொல்லிக்கேட்டார் , இணையத்தில் தேடியதில் பெரும்பாலான காளைகள் மாட்டியது சில காளைகள் மட்டும் கண்ணில் சிக்கவில்லை , கிடைத்தவரை போட்டுள்ளேன் படத்தை பார்த்துவிட்டு யாரும் ம்மா.... ம்மா என்றெல்லாம் கத்தக்கூடாது!

Saturday, August 25, 2007

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

(அரசு வெளியிட்ட காங்கேயம் காளை சிறப்பு தபால் தலை!)

மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு ... என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என "UNO" போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் - பிகார்

3) பர்கூர் - தமிழ்நாடு

4) தாங்கி - மகாராஷ்டிரா

5) தியோனி - மகாராஷ்டிரா

6) கவொலாவோ - மகா

7) கீர் - குஜராத்

8) ஹல்லிகர் - கர்நாடகா

9) ஹரியானா - ஹரியானா

10) காங்கேயேம் - தமிழ்நாடு

11) காங்ரெஜ் - ராஜஸ்தான்

12) கேன்கதா - உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் - உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் - மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி - ராஜஸ்தான்

17) மேவாதி - உத்திரபிரதெசம்

18)நகோரி - ராஜஸ்தான்

19)நிமாரி - மகா

20)ஓங்கோல் - ஆந்திரா

21) பொன்வார் - உத்திரபிரதேசம்

22) புங்கனூர் - ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி - மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,

26) சாஹிவால் - பஞ்சாப்

27) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் - ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி - தமிழ்நாடு

30) வச்சூர் - கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி - உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா - கர்நாடகா

33) தோ தோ - நாகாலாந்த்

*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!

மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!

Friday, August 24, 2007

சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...

திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி பற்றி அறிவீர்களா அன்பர்களே, அப்படி ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல தென் கொரிய புகழ் மொக்கை மகாராசா செந்தழல் ரவி தான் ....

பாருங்கள் அவர் வீட்டில் அவர் சுவர் ஏறிக்குதித்து கள்ளத்தனமாக புகுவதை...

அவர் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:
//
  • என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)

    By <நாகு (Nagu)>, at Thursday, August 23, 2007


  • இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)

    By <ஜெஸிலா>, at Thursday, August 23, 2007


  • இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?

    mmmmhum...

    உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !

    Its True Vavvaal....

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ///அப்பு !
    அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///

    can you take care france branch ???

    Ravi

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///

    vanga nagu...i am going this week end to take gul.test

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////

    vanga Jesi....First time comment podereenga pola...good...

    ok i will send you that panjamirtham...give me the address hahaha

    By <Anonymous>, at Friday, August 24, 2007

  • //
செந்தழல் அவர் பதிவில் அவருக்கு வரும் பின்னூட்டத்திற்கும் கூட அனானி பதில் கொடுத்துள்ள அவலத்தை என்னவென்று சொல்வது ... என்ன கொடுமை .... செந்தழல்!

தத்துவம்: அதிகமா மொக்கை போட்டா ஆண்டவன் ஆரம்பத்தில நிறைய பின்னூட்டம் கொடுப்பான் ... ஆனா கடைசில கை விட்ருவான் , நல்லப்பதிவ போட்டா ஆரம்பத்தில பின்னூட்டம் தர மாட்டான் , கடைசில கை கொடுப்பான்!

பின்குறிப்பு: இது சும்மா தமாசு கண்ணா தமாசு!

அரசியல் சதுரங்கம்!


சேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சையான ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம்? கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.

இராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர்! தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்!

இரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்!இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஆனால் இதில் மகா கடுப்பு "பனம் கொட்டை தலையன்" லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.

Thursday, August 23, 2007

கடல் நீர் மட்டுமா , கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிக்கும்!

ரொம்ப நாளாக சர்வேசர் ஒரு பதிவை போட்டு கடல் ஏன் உப்பா போச்சுனு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார் , இணையத்துல் விடை கிடைக்கும் என தெரிந்தும் அவர் பகுத்தறிவை நம்பாமல் கடவுளை கேட்கிறார் நான் எனக்கு தெரிந்த பகுத்தறிவை வைத்து (இணையத்தின் உதவியுடன்) ஒரு விளக்கம் சொல்கிறேன்.

கடல் உருவானது எப்படி:

ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல் .

கடல் உப்பானது ஏன்:

1)ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம், மழை பெய்து குளிரும் போது ,வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது.

2)கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன , அவை வெளியிடும் லாவக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.

3)கடல் வாழ் ஜீவாராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும்.

4)கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும்.

மேலும் கடலில் தான் நதிகள் கலக்கின்ற , கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை இதனால் நீர் வெளியேற்றம், சேர்ந்த உப்பு என எதுவும் வெளியேறது.

சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி.அவ்வாறு ஆவியாகும் போது , உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும். இது போன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில்ஆவியாதல் தவிர வேறு வழியில் நீர் வெளியேறி கொண்டு இருந்து இருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது.

தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும் , சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலைப்பு விகிதத்தில் இருக்கிறது.

கடல் மட்டும் அல்லாது சில ஏரிகளும் நீர் வெளியேற்றம் இல்லாது , ஆவியாதல் மட்டுமே நீர் இழப்பு என இருப்பதால் உப்பு மிகுந்து இருக்கிறது.great salt lake , dead sea ஆகியவை கடல் நீரை விட அதிகம் உப்பு அளவினைக்கொண்டுள்ளது.

கடல் நீர் உப்புக்கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிப்பது ஏன்?

கண்ணீர்:

கண்ணீர் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வருகிறது. அதில் உப்பு வரக்காரணம். நம் உடலில் இருக்கும் உப்பு தான்.நம் உடலில் உள்ள செல்கள் , மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது!

வியர்வை:

வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது அதிலும் நம் உடலில் இருக்கும் உப்பு இருக்கும், மேலும் உடல் செயல் படுவதால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும் அதனால் வியர்வையும் உப்பு கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி , தசை பிடிப்பு ஏற்படும் அப்பொழுது அதனை ஈடு செய்ய உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.

Tuesday, August 21, 2007

சென்னைக்கு பிறந்த நாள்! - Madras day


நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.

அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 - உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

Monday, August 20, 2007

உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

முன்னோட்டம்:

ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.

உள்ளது உள்ளபடி:

இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.

சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.

ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.

எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.

நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?

சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.

தீர்வு:

ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.

செங்குத்து வளர்ச்சி:(vertical integration)

மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.

இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.

சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!

கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)

மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.

தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!

இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!

நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)

விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.

5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.

குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!

நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.

இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.



இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.

விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்

தொடரும்...

Friday, August 17, 2007

இயற்கை கொசு விரட்டிகள்!


செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.

பல மிக எளிமையான தீங்கற்றவை.

ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):

பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.

கொசு விளக்கு பொறி!

இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!

பெரோமொன் கொசு பொறி!

கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.

கொசுவின் இயற்கை எதிரிகள்:

உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.

அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்

நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.

உயிரி்ல் கொல்லி!

பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.

தாவரவியல் கொசு விரட்டி!

சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.


கொசு விழுங்கும் தாவரம்:

அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.

கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,

கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!