Friday, August 17, 2007

இயற்கை கொசு விரட்டிகள்!


செயற்கை கொசுவர்த்தியின் தீமைகளை பார்க்கும் போது அதை விட கொசுக்கடியே மேல் எனத்தோன்றுகிறது.ஆனாலும் கொசு கொடுக்கும் இம்சைக்கு அளவே இல்லை.இயற்கையாக அதை கட்டுப்படுத்த ஏதாவது இருக்கிறதா எனத்தேடியதில் அகப்பட்டது சில இயற்கை வழிகள்.

பல மிக எளிமையான தீங்கற்றவை.

ஒட்டும் கொசுப்பொறி!(sticky mosquito trap):

பெரும்பாலான மளிகை கடைகளில் குழல் விளக்கை தேடி பூச்சிகள் வருகிறது என எண்ணை தடவிய காகிதம் ஒன்றை கட்டி விட்டு இருப்பார்கள், பூச்சிகள் அவற்றில் போய் ஒட்டிக்கொள்ளும். அதே வகை ஒட்டும் பொறி ஒன்றை கொசுக்களுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள் வண்ண காகிதம் ஒன்றில் எண்ணைக்கு பதில் எளிதில் காயாத பசை ஏதேனும் ஒன்றை தடவி வீட்டில் கட்டிவிட்டால் போதும். பாதிக்கொசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.காரணம் மஞ்சள் வண்ணம் கொசுக்களை கவர்கிறதாம்.

கொசு விளக்கு பொறி!

இதனை பெரும்பாலான உணவு விடுதிகளில் பார்த்து இருப்பீர்கள் , ஒரு மின் விளக்கும் மின்சாரம் பாச்சப்பட்ட கம்பி வலையும் கொண்டது , வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் கொசுக்கள் , பூச்சிகளை கொல்லும்!

பெரோமொன் கொசு பொறி!

கொசுக்கள் முட்டை இடும் இடத்தை அடையாளப்படுத ஒரு வகையான பெரோமோன் சுரக்கும் அதே போன்ற பெரோமொன் கொண்டு கொசுக்களை கவர்ந்து அழிக்க வல்ல ஒட்டும் தன்மை கொண்ட பொறிகள் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தலாம்.

கொசுவின் இயற்கை எதிரிகள்:

உங்கள் பகுதிகளில் நிறைய தும்பிகள்(dragon fly) இருந்தாலும் கொசுக்கள் வராது , தும்பிகள் கொசுக்கை பிடித்து உண்ணுமாம்.

அதே போல தோட்டத்தில் வவ்வால்கள் brown bats) இருந்தாலும் கொசுக்களை பிடித்து உண்ணுமாம்

நீர் நிலைகளில் கொசு புழுக்களை பிடித்து உண்ணும் மீன்களான டிலாபிய(tilapia), கேம்பூசியா (gambusia affinis), தங்க மீன் வளர்க்க வேண்டும்.

உயிரி்ல் கொல்லி!

பேசில்லஸ் துரிஞ்செனிஸ் இஸ்ரேலியன் (bacillus thuringinsis israeliensis)என்ற நுண்ணுயிர் கொசுவின் லார்வாவை கொல்லும் தண்மை கொண்டது , இதனை குளம் குட்டைகளில் தெளித்தால் போதும் கொசு வளர்ச்சிக்கட்டுப்படுத்தலாம்.

தாவரவியல் கொசு விரட்டி!

சிட்ரொனெல்லா புல்(லெமன் கிராஸ்), கேட்னிப், ரோஸ்மாரி , மரிகோல்ட்
mari gold flower
,ஹார்ஸ்மின்ட் ஆகிய தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தாலும் கொசுக்கள் குறையும்.இவற்றில் இருந்து பெறப்படும் சாறுகளும் கொசு விரட்டப்பயன்படும்.


கொசு விழுங்கும் தாவரம்:

அகஸ்டாச்சா கானா (agastache cana ) பூக்களில் ஒட்டும் தன்மை கொண்ட பிசின் இருக்கும் .இது கொசுக்கள் , பூச்சிகளை கவர்ந்து அப்படியே சுருட்டி விழுங்கிவிடும்.இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுவைக்கட்டுப்படுத்தலாம்.

கடைசியாக ஒரு சின்ன குறிப்பு,

கொசுக்கள் மனிதனை இருட்டிலும் அடையாளம் பார்த்து கடிப்பது மனிதனின் உடல் வெப்பம் ,மற்றும் நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கரியமில வாயு. நம் உடலில் வேறு வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொண்டாலும் கொசுகடியில் இருந்து தப்பலாம். பூண்டு வாசனை கொசுவிற்கு ஆகாது , நிறைய பூண்டு சாப்பிட்டால் நாற்றம் தாங்காமல் கொசு ஓடிவிடும்!

Wednesday, August 15, 2007

கொசு வி(மி)ரட்டும் வர்த்தி!


இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரணம் கிடைத்தாலும் . அதன் பின் விளைவுகளை யாரும் அறியவில்லை. கொசுவர்த்தியில் மறைந்து இருக்கும் பயங்கரம். என்ன?

கொசுவர்த்திகளில் கொசு விரட்டும் காரணிகளாக செயல்படும் வேதிப்பொருட்கள் என்ன ,

*சிந்தெடிக் D அல்லித்ரின்
*ஆக்டோ குளோரோ - டை- ப்ரோபைல் ஈதர் அல்லது s-2
இவை எரியும் போது ஏற்படும் வேதி வினையால் உருவாகி வெளியிடும் வேதிப்பொருள் பை - குளோரோ மெதைல் ஈதர்

இந்த வேதிப்பொருட்களை தொடர்ந்து மூடிய அறையில் இரவு முழுவதும் சுவாசித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து ,மேற்கொண்ட வேதிப்பொருட்களை கொசுவர்த்தியில் பயன்படுத்த தடை விதிக்க செய்துள்ளார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில்.

ஆனால் இந்தியாவில் இப்ப்டி எந்த தடையும் இது வரை கொண்டு வரவில்லை. நாம் தினசரி கொசுவர்த்தி புகையினை இன்பமாக நுகர்ந்து வருகிறோம்!

இந்த வேதிப்பொருட்கள் ஒரு பக்கம் தீங்கு விளைவிக்கிறது என்றால் , கொசுவர்த்தி சுருளின் அளவுக்கு ஏற்ப ஒரே ஒரு கொசுவர்த்தீ எரியும் போது அது வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் என்பது கீழே கொட்டும் சாம்பல் அல்ல நுண்ணிய காற்றில் மிதக்கும் சாம்பல்(size 2.5 micron). அதனை சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய் and cancer போல நோய்கள் வரலாம்.

மேலும் கொசு வர்த்தி எரிவதனால் ஃபார்மல் டி ஹைட் என்ற வேதிப்பொருளும் பக்க விளைபொருளாக வரும்.

கொசுவை விரட்ட என்று காசு கொடுத்து கொசு வர்த்தி வாங்க போய் என்னவேல்லாம் இலவசமாக கிடைக்கிறது பாருங்கள்.

அப்படி என்றால் கொசுவிடம் இருந்து தப்பிக்க என்ன தான் வழி.

1)கொசு உற்பத்தி ஆகும் இடங்களிலே அழிப்பது,
2)கொசு உருவாகாமல் சுத்தமாக சுற்று புறத்தினை வைத்துக்கொள்வது.
3)கொசு வலை பயன்படுத்துவது.

Tuesday, August 14, 2007

நாற்று நடும் எந்திரம் !

paddy seedling transplanter

இந்தியாவில் நெல் வயலில் நாற்று நடுவதற்கு மனித சக்தியே இதுவரைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் நடவின் போது பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு!

தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!

நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேலை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பெண்களே அதிகம் நடவு வேலைக்கு பயன்படுத்தப்படுவார்கள்.

நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,

  1. மனித சக்தியால் இயங்குவது ,
  2. எந்திர சக்தியால் இயங்குவ்து.
இரண்டும் செயல்படும் தத்துவம் ஒன்றே!

எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.

அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பரப்பி ஒரு மண் படுக்கையை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும். பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.

நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

நாற்று நடும் எந்திரம்:

ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைக்கிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.

ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 - 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.

வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!

டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.
*****

Monday, August 13, 2007

ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி

பொக்காலி நெல் வயல்

ஆழ் நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது , பிலிப்பைன்ஸ், தாய்லாந், பர்மா , போன்ற நாடுகளில் அதிகம் , இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும்(w.bengal,kerala) செய்யப்படுகிறது.கேரளாவில் ஆலப்புழா,எர்ணாக்குளம், திரிசூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு பொக்காலி நெல் என்று பெயர்.

அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.

இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்

எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.

நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.

சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 - 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 - 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொக்காலி நெல்வகை - IR 64,
இறால் வகை - வெள்ளை இறால், டைகர் இறால்

கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.

Sunday, August 12, 2007

இயற்கை விவசாயம் செய்யலாமா?

இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!

தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!

ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.

மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!

பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!


பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.

Friday, August 10, 2007

தீ(வட்டி) நகர்! திரை விமர்சனம்!

எல்லா வகையானப் பதிவுகளையும் போட்டு நாமலும் ஒரு அனைத்து வட்டம்னு(all rounder) காண்பித்துக்கொள்வது என்று முடிவு பண்ணிட்டேன்!

அதனால் இன்றைய சிறப்பு பதிவு திரை விமர்சனம்!

தீநகர்னு ஒரு படம், ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் அல்ல பாடம் , எப்படி எல்லாம் ஒரு படத்தை எடுக்க கூடாது என்பதற்கு அருமையான சாம்பிள்.

கல்லுரியில் ஒரு கலாட்டா ,மாணவர் தலைவனே செய்கிறான் திமிரு நியாபகத்தில் அவனுக்கும் பவானினு பேரு வேற, அப்போ என்ன நடக்கும் சரியா ஹீரோ சார் வந்து சண்டை தான் போடுவார். அப்புறம் அட்வைஸ் வேற தறார். என்ன கொடுமை சார் இது!

இன்னும் எத்தனைக்காலத்திற்கு டைட்டானிக் ஹேங் ஓவர்லவே அலைவாங்க , நிச்சயம் ஆன பொண்ணா பார்த்து இவருக்கும் காதல் கசியுது!

படத்தில் கரனைப் பார்ப்பதே இம்சைனா பாடல் காட்சிகளில் இரட்டிப்பு இம்சை தருகிறார்!

வேலைவாய்ப்பகம் போகிறார் அங்கே வழக்கம் போல வேலை செய்யாம அரட்டை அடிக்கும் அலுவலர்,அது பார்த்து கோபப்படும் ஹீரோ, திருந்துங்கடா , எத்தன தடவை தான் இதையே காட்டுவிங்க!

வித்தியாசமா?!! அங்கேவே ஒரு டீக்கடை போடுறார். சரி அப்புறமாவது புதுசா எதாவது காட்டுவாங்களானு பார்த்தா , தூள் பாதிப்பில் ஒரு இன்ஸ்பெக்டர் கூட மோதிக்கிட்டு அதே போலா செல் போன்ல பேசி சவால் விட்டுனு , கடைசில எப்படி படத்தை முடிக்கிறதுனு தெரியாம மாணவர் சக்தி அது இதுனு சொல்லி வணக்கம் போடுறாங்க!

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு தீநகர் நல்லாப்பயன்படும். இடை இடையே தூங்கிவிட்டேன்.நான் பார்த்த வரைக்கும் தான் விமர்சனம் செய்து இருக்கேன்.மீதிய யாராவது தூங்காம பார்த்தா வந்து பின்னூட்டத்தில் கதை சொல்லிட்டு போங்க!

சென்சார் போர்ட் கவனத்திற்கு!...பதிவுகளை மொக்கை பதிவு என்று லேபில் செய்வது போல படங்களையும் அப்படி லேபில் செய்யும் வசதி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.

Saturday, August 04, 2007

மெதுவாக போகும் நத்தையின் அதிவேக விஷம்!

ஈ - மெயில் வந்த பிறகு... சாதாரண தபால்களை எல்லாம் ஸ்னெயில் மெயில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நத்தை அத்தனை சாதாரணமானது இல்லை. படா கில்லாடி. அதற்கென பல சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டது.இதனை வீட்டு தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் பார்த்து இருக்கலாம்.

மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.

நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.

* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!

*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!

* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்

கூம்பு வடிவ நத்தை

(Conus magus,
Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!

* இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம்.

*நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!

Sunday, July 29, 2007

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!

மேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.
spotted deer
பொதுப்பெயர் - அறிவியல்பெயர்

1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)

2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)

3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)

4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)

5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)

6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)

7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)

8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)

9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)

10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)

11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)

12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)

13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus)

14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)

15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio)

16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas)

17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)

18) புள்ளி மான் - செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)

Thursday, July 26, 2007

ஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...

அன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்றின் விஞ்ஞான பெயர்களை நினைவு கூர்வதில்லை, ஆத்தா வளர்த்த ஆடு ,கோழிக்கு என்ன அறிவியல் பேருனு தெரிஞ்சுக்கலாமா!

பொதுப்பெயர் - அறிவியல்ப்பெயர்

1)கோழி - கால்லஸ் டொமெஸ்டிகஸ் (Gallus domesticus)

2)வான்கோழி - மெல்லெக்ரிஸ் காலோபோவா (Melleagris gallopavo)

3)புறா - கொலம்பியா லிவியா ( Colombia livia)

4)வாத்து - ஆனஸ் பிளாடிரிங்கா(Anas platyrhyncha)

5)ஆடு - ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries)

6) செம்மறி ஆடு - கேப்ரா ஹிர்கஸ் (Capra hircus)

7) முயல் - ஒரிக்டோலாகஸ் க்யுனிகுலஸ ( Oryctolagus cuniculus)

8)பன்றி - சூஸ் க்ரோபா (Sus scrofa)

9) எறுமை - பபலஸ் பபாலிஸ் (Bubalus bubalis)

10)மாடு - போஸ் இன்டிகஸ் ( Bos indicus)

11) எருது - பைசன் பைசன் ((Bison bison)

12)குதிரை - ஈக்கஸ் கேபலஸ் (Equus caballus)

13) கழுதை - ஈக்கஸ் அசினஸ் (Equus asinus)

14) நாய் - கேனிஸ் பேமிலியாரிஸ் ( Canis familiaris)

15) பூனை - பெலிஸ் கேடஸ் (Felis catus)

கடைசியா சிங்கிளா வர சிங்கத்துக்கு பேரு தெரிஞ்சிக்காம போக கூடாதுல,

சிங்கம் - பேந்த்ரா லியோ (Panthera lio)

Wednesday, July 25, 2007

கணினி ஓவியம் - 3- கடல்புறா!

என்னைப்போல பெரிய பெயிண்டர்(பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கேன்ல) எல்லாம் களத்தில் இருக்கேனு தெரிஞ்சபிறகும் பலர் போட்டியில் குதித்து களத்தை சூடு ஏத்திக்கொண்டு இருப்பதால் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒரு படம் காட்டலாம் என்று அடுத்த படைப்பை இறக்கியாச்சு. பார்த்து ரசியுங்கள்! புது புது வண்ணங்கள் படைப்பதால் நானும் பிரம்மனே!


கடல் புறானா வானத்தில் இருக்கும்னு நினைக்காதிங்க தண்ணில மிதக்குதே பாய்மரப்படகு அதான் என்னோட கடல்புறா!

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

(a car travel thru a giant redwood)

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனை எடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.



1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2x22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்.

Tuesday, July 24, 2007

கணினி ஓவியம் - 2

கணினிப்போட்டிக்கு இன்னொரு படம் , கோயில் குளம்!

கணினி ஓவியம்!

சிந்தாநதி கணினிஓவியப்போட்டி நடத்துவதால் நமது கிறுக்களையும் அனுப்ப வாய்ப்பு கிடைத்து விட்டது, கண்ணை பதம்பார்க்கும் படம் இதோ!

The water falls!

Monday, July 23, 2007

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
( low head dam)


பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.

Saturday, July 21, 2007

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!


விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை.

வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஈடுபட்டவர்களை பார்ப்போம்!

1)பறக்கும் எந்திரம் பற்றி முதலில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட ,

2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார்.

3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார்.

4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவி மூலாம் ஒரு விமானத்தை 50 மீட்டர் தூரம் பறக்கவைத்தார்.

5)ஓடோ லிலிந்தால் (german)என்பவர் கிளைடர் மூலம் வானில் பறந்து காட்டினார்.

6)இதன் பின்னரே ரைட் சகோதரர்கள்(america) தங்கள் முயற்சியில் இறங்கினார்கள் , கிட்டி ஹாக் , வடக்கு கரோலினா பகுதியில் முதல் பறக்கும் எந்திரத்தை பறக்க விட்டார்கள். அது பை பிளேன் எனப்படும் , 500 மீட்டர்கள் வரைக்கும் பறந்தது , பின்னர் அரை மணி நேரம் வானில் பறந்து காட்டினார்கள், இதன் பின்னறே விமானங்களின் வளர்ச்சி முழு வீச்சை எட்டியது.

விமானம் பறக்ககாரணம் , ஒரு விமானத்தின் மீது செயல்படும் விசைகள் என்னவெனப்பார்ப்போம்!1) மேல் தூக்கும் விசை(lift),

இந்த விசை விமானத்தின் இறக்கைகளின் வடிமைப்பினால் பெறப்படுகிறது. இறக்கையானது மேல் புறம் வளைந்து காணப்படும் அதனால் காற்றில் ஒரு அழுத்த வித்தியாசம் உருவாக்கப்படும். மேல் புறம் அழுத்தம் குறையும் அதே சமயத்தில் இறக்கையின் கீழ்புறம் அழுத்தம் மிகும். எனவே இறக்கைப்பறப்பு மேல் நோக்கி தூக்கப்படும் அதனால் விமானம் மேல் கிளம்ப்பும் , இது விமான எடையை சமன் செய்ய வேண்டும்.அப்போது தான் தொடர்ந்து விமானம் காற்றில் மிதக்கும்.

2) அதற்கு எதிறாக கீழ் நோக்கி செயல்படும் எடை(weight)

3) முன்னோக்கி செயல்படும் உந்து சக்தி(thrust)
இது விமானத்தின் மூக்கில் உள்ள புரோபெல்லர்கள் சுழல்வதால் கிடைக்கிறது ... ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் எப்படி காற்றை உள் இழுக்கிறதோ அப்படி செயல்படும் அதன் மூலம் விமானம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

4) இதற்கு எதிறாக பின்னோக்கி செயல்படும் இழுவை சக்தி(drag)

காற்றோடு விமானம் உரசுவதால் ஏற்படும் பின்னோக்கிய இழுவை சக்தி இது , இதனை உந்து சக்தி சமன் செய்ய வேண்டும்.

மேல்நோக்கி செயல்படும் விசை விமான இறக்கை மூலம் எப்படி பெறப்படுகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்,

இது இரண்டு விதிகளின் படி விளக்கபடுகிறது ,

1) பெர்னோலி விதி,
2) நியூட்டன் இரண்டாவது இயக்கவியல் விதி!

பெர்னோலி விதிப்படி ...

1)வேகமாக ஒரு திரவம் செல்லும் போது அழுத்தம் குறையும்,

2)ஒரு நீர்மம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரண்டாக பிரிக்கும் போது இரண்டும் சம தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

எனவே பெர்னோலி விதியை செயல்ப்படுத்தும் ஒரு கட்டமைப்பு காற்றில் மிதக்கும்,இதனை காற்றுச்சட்டம் (ஏர் பிரேம்/ஏர் ஃபாயில்) என்பார்கள். இதற்காக விமானத்தின் இறக்கை மேல்புறம் குவிந்து வளைவுடன் இருக்கும் அதனால் மேல்புறம் அதன் பரப்பளவு அதிகமாக இருக்கும்  அதே சமயம் கீழ்புற்ம் சமமாக இருக்கும், எனவே  குறைந்த பறப்பு!

எனவே இறக்கையின் முன்புறம் மோதும் காற்று இரண்டாக பிரிந்து செல்லும் போது மேல் செல்லும் காற்று அதிக தூரத்தை கடக்க நேரிடும் , அதே நேரத்தில்  கீழ் செல்லும் காற்று குறைந்த தூரம் கடக்கும் , ஆனால் இரண்டும் இறக்கையின் பின் புறம் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும்.

எனவே தானகவே மேல் செல்லும் காற்றின் வேகம் அதிகரிக்கும், அதனால் குறைந்த அழுத்தம் உண்டாகும் அதனுடன் ஒப்பிடுகையில் கீழ் செல்லும் காற்று அழுத்தம் அதிகம் இருக்கும் எனவே இறக்கையின் மீது மேல் நோக்கி ஒரு விசையை உண்டாக்கும்.

இந்த விசையை அதிகரிக்க காற்று இறக்கையின் மீது மோதும் கோணத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக விசைய பெற செய்யலாம்.

நியூட்டனின் விதிப்படி ,விசை = முடுக்கம்xநிறை,
கீழ்புறம் செல்லும் காற்றினை கீழ் நோக்கிய கோணத்தில் திசை திருப்பினால் மேலும் லிப்ட் கிடைக்கும்.

எனவே கீழ் செல்லும் காற்றின் அளவை அதிகரித்தும் , அதனை கீழ் நோக்கிய கோணத்தில் இடப்பெயர்ச்சி செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு காற்று கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்றதோ அவ்வளவு எடையை மேல் நோக்கி நகர்த்த முடியும்.

இதனை அதிகரிக்க விமான இறக்கைகளின் பின் விளிம்பில் நகரும் தன்மையுள்ள நீள்ப்பட்டிகள் (எயிலிரான்)இணைக்கபட்டு இருக்கும்.

விமானத்தின் மீது மோதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் லிப்ட் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் விமானம் பறப்பதற்கு முன் வேகமாக ஓட்டப்படுகிறது.

மேல் எழும்பி பறக்க ஆரம்ப்பித்ததும் முன் செலுத்தும் விசை ப்ரொபெல்லர்கள் மூலம் பெறப்படுகிறது.

மேல் எழும்ப ,கீழ் இறக்க .. இறைக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டிகளை மேல்/ கீழ் நோக்கி நகர்த்துவன் மூலம் செய்யலாம்!

இடம், வலமாக திரும்ப வால்ப்பகுதியில் உள்ள செங்குத்தான அமைப்பு, ரட்டர் எனப்படும் அதனுடன் இணைந்த பட்டிகளை இடது வலதாக திருப்புவதன் மூலம் திருப்பலாம்.

மேற்சொன்ன தத்துவத்தின் அடிப்படையிலேயே நவீன விமானங்கள் உட்பட அனைத்தும் வானில் வட்டமிடுகின்றன.வாய்ப்பு கிடைத்தால் வானில் பறந்துப்பாருங்கள்!

----------------

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

சின்ன வயதில் எல்லோரும் பட்டம் பறக்க விட்டு இருப்பீர்கள், அப்படி பறக்க விட்ட எல்லாரும் ஒருவகையில் வானூர்தி பொறியாளர்கள் தான். பட்டம் பறக்க என்ன தத்துவமோ அதன் அடிப்படையில் தான் விமானங்கள் பறக்கிறது. ரைட் சகோதரர்கள் கூட தங்களது விமான மாதிரி செய்வதற்கு முன் பட்டம் பறக்கவிட்டு தான் பறத்தல் குறித்தான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார்கள்!

பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...

பட்டம் என்பது சதுரமான ஒரு காகிதம் அதன் மீது ஒரு புறம் இருந்து வேகமான காற்று மோதுகிறது ... அப்படி மோதும் காற்று தடைப்பட்டு தொடர முடியாது ஆனால் பட்டம் தவிர்த்த பகுதிகளில் காற்று கடந்து செல்லும் எனவே பட்டத்தின் நேர் பின் புறம் காற்றின் அழுத்தம் குறையும் எனவே முன் பகுதியில் உள்ள கூடுதல் காற்ரழுத்தம் காரணமாக ஏற்படும் விசை பட்டத்தினை பின் நோக்கி தள்ளும்...அதே சமயம் பட்டம் தறைக்கு ஒரு கோணத்திலும் இருப்பதால் அதே கோணத்தில் காற்று செல்லும் அதனை தொடர்ந்து பட்டமும் மேல்னோக்கி தூக்கப்படும்.

இப்படியாக பட்டம் பறக்க ஆரம்ப்பிக்கிறது எளிதாக தெரிந்தாலும் இதன் அடிப்படை தான் விமானம் இயங்க காரணம்.

பெர்னோலி என்பவரின் நீர்மவியல் விதி இதில் செயல்படுகிறது
சுருக்கமாக அதனைப் பார்ப்போம்,

அழுத்தம் + இயக்க ஆற்றல்/ பருமன் = மாறிலி

இது தான் பெர்னோலியின் தத்துவத்தின் சூத்திர வடிவம்
{v^2 \over 2}+gh+{p \over \rho}=\mathrm{constant}

where:

v = fluid velocity along the streamline
g = acceleration due to gravity
h = height of the fluid
p = pressure along the streamline
ρ = density of the fluid
எந்த ஒரு பொருள் அதன் எடைக்கு சமமான காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அதனால் பறக்க முடியும் , மனிதனால் அவன் எடைக்கு இணையான காற்றினை இடப்பெயர்ச்சி செய்ய முடியுமானால் பறவை ஆகலாம்.நீரில் நீந்துவதும் இப்படி தான்! பறவைகள் அத்னால் தான் எடைகுறைவாக , குழல் போன்ற எலும்புகளும், கொண்டு உள்ளது எனவே எளிதாக பறக்க முடிகிறது.
விமானம் பறப்பதை பிறகு பார்ப்போம்!

Thursday, July 19, 2007

நினைவிருக்கும் வரை...

என் நினைவுகளின்

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த காலம் ,

நிகழ் காலம்

எதிர்காலம் என

எல்லா திசைகளிலும்

துழாவி என் இருப்பை

நினைவுருத்துகிறது

என் விருப்பமின்றி!

என்னையே தொலைத்த தருணங்களிலும்

நான் என்ற

என் நினைவைத்தொலைத்ததில்லை!

கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே

என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!

என்றாவது என் நினைவுகள்

மரிக்கலாம்

எனவே என் நினைவுத்தடங்களை

விட்டு செல்கிறேன் இவ்விடம்!

சூப்பர் ஸ்டார்களின் நட்சத்திர கூட்டம்!

நட்சத்திரங்களை ஒரு குழுவாக சேர்த்து அதன் வடிவம் ,தூரம், இயல்புக்கு ஏற்றார்போல பிரித்து நட்சத்திர கூட்டங்கள் என பெயரிட்டு அழைக்கிறார்கள், இது வரை 88 நட்சத்திரக்கூட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 12 மட்டுமே ஜாதகவியல் அடிப்படையில் ராசி நட்சத்திர கூட்டங்கள் எனப்படுகிறது.

சோடியாக் என்பது "zoo" அதாவது விலங்குகள் கூட்டம் என்பதிலிருந்து வந்தது "circle of animals "என்பார்கள்
12 இல் 10 பெயர்கள் விலங்கு பெயர்கள் என்பதை நினைவில் கொள்க!

சரி எதற்கு 12 நட்சத்திரக்கூட்டம் மட்டும் ஜோதிடவியல் எடுத்துக்கொண்டது , பூமி சூரியனை சுற்றிவருவதை ஒரு வட்டம் என எடுத்துக்கொண்டால் , வட்டத்தின் மொத்த டிகிரிகள் 360 அதை தலா 30 டிகிரிகள் எனப்பிரித்தால் 12 வரும் , 30 டிகிரி அளவுக்கு வட்டப்பாதையில் பூமி கடக்க ஒரு மாதம் வரும். எனவே 12 மாதம் , 12 ராசி நட்சத்திரக்கூட்டம். எனவே தான் ஜோதிடர்கள் ஒவ்வொரு மாதமும் சூரியன் இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறான் என்பார்கள்.

ராசி நட்சத்திர கூட்டங்கள்!

தமிழ் - ஆங்கிலம்

1)மேஷம் - ஏரிஸ்
2)ரிஷபம் - டாரஸ்
3)மிதுனம் - ஜெமினி
4)கடகம் - கேன்சர்
5)சிம்மம் - லியோ
6)கன்னி - விர்கோ
7)துலாம் - லிப்ரா
8)விருட்சிகம் - ஸ்கார்பியன்
9)தனுஷ் - சாஜிட்டரியஸ்
10)மகரம் - கேப்ரிகார்ன்
11)கும்பம் - அக்குவரிஸ்
12) மீனம் - பிஸ்செஸ்

மூல நட்சத்திரங்கள் மொத்தம் 27 அவற்றின் தமிழ் பெயர்களும், வானவியல் பெயர்களும். சமஸ்கிருதத்தில் சூட்டப்பட்ட பெயர்களை தான் தமிழிலும் பயன்படுத்துகிறோம் ,தமிழில் தனியே பெயர்கள் இருக்கிறதா? தெரிந்தால் கூறுங்கள்.

1)அஷ்வினி - ஷெராடன்(பீட்டா ஏரிட்டிஸ்)

2)பரணி - 35 - ஏரிடிடிஸ்

3)கிரித்திகா - அல்சியோன்

4)ரோகினி - அல்டிப்ரான்

5)மிருக ஷீர்ஷம் - ஹேகா

6)அர்த்ரா - அல்ஹேனா

7)புனர்வாசு - கேஸ்டர் மற்றும் போல்லக்ஸ்

8)புஷ்யா - டெல்டா கேன்ரி

9)ஆஷ்லேஷா - எப்சிலான் ஹைட்ரா

10)மஹா - ரெகுலஸ்

11)பூர்வ பால்குனி - ஸோஸ்மா

12)உத்தர பால்குனி - டேன்போலா

13)ஹஸ்தம் - டெல்டா கார்வி

14)சித்ரா - ஸ்பிகா

15)ஸ்வாதி - ஆர்க்டஸ்

16)விசாகா - ஸூபென் எல்ஜெனுபி

17)அனுராதா - ஸ்சூபா

18)ஜேஷ்தா - அன்டாரெஸ்

19)மூலம் - ஷாவ்லா

20)பூர்வஷதா - டெல்ட்டா சாஜிட்டாரி

21)உத்ர ஷதா - ஸிக்மா சாஜிட்டாரி

22)ஷ்ரவன் - ஆல்டாய்ர்

23)தனிஷ்தா - ரோடனேவ்

24)ஷத தாரகா - லாம்ப்ட அக்வாரி

25)பூர்வ பத்ர பாதம் - மார்காப்

26)உத்ர பத்ர பாதம் - அல்ஜெனிப்

27)ரேவதி - -ஸீடா பிஸ்ஸியம்

Tuesday, July 17, 2007

ஓடு பாதை இல்லாமல் மேலெழும்பும் விமானங்கள்!

( விமானம் தாங்கி கப்பலின் ஓடு தளம்!)


சென்னைக்கு அமெரிக்காவின் USSநிமிட்ஸ் CVN- 68 என்ற அணு ஆற்றல் விமானம் தாங்கி கப்பல் வந்து சென்றதை அனைவரும் அறிவார்கள். சாதாரணமாக நீண்ட ஓடுபாதை தேவைப்படும் விமானங்கள் எப்படி ஒரு கப்பலின் மேல் தளத்தில் உள்ள குறுகிய பறப்பில் இருந்து பறக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். இதற்காக சில சிறப்பு உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

முதல் விமானம் ஒரு கப்பலின் மேல் தளத்தில் இருந்து பறந்தது 1910 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று USS பிர்மிங்காம் என்ற கப்பல் தளத்தில் இருந்தே , விமானத்தை ஓட்டியவர் யூஜென் எலி(eugene ely) என்பவர். கப்பல் மேலிருந்து ( முதல் விமானம் தாங்கி USSபர்மிங்காம் கப்பல்.)

கிளம்பியதும் கிட்டத்தட்ட கடலில் விமானம் விழுந்து பின்னர் திறமையாக தண்ணீர் பறப்பை முத்தமிட்ட விமானத்தை மேலே கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டும் பறந்தாலும் சரித்திரம் படைத்து விட்டார்.

விமானாம் தாங்கி கப்பல்கள் சாத்தியம் என்பதை இதன் பின்னரே உணர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டது.

சாதாரணமாக 3000 - 4000 மீட்டர் ஓடுதளம் தேவை ஆனால் மிகப்பெரிய கப்பல் ஆனா நிமிட்சில் உள்ள ஓடுதளம் 320 மீட்டர் தான் எனில் எப்படி விமானங்கள் குறுகிய தூரத்தில் மேல் கிளம்பும்?( நேரான ஒரு ஓடுபாதை படம்)

ஆரம்ப்பத்தில் இலகுவான போர்விமானங்களை மேலே கிளப்ப சற்றே சாய்வான ஓடு தளம் அமைத்தார்கள், அதன் மூலம் கூடுதல் விசை கிடைக்கப் பெற்றது.
(சாய்வான ஓடுபாதை படம்.)

அதிக ராணுவ தளவாடங்கள் ஏற்றி செல்லும் போது இவ்விசை பற்றவில்லை, எனவே கவன்கல் நுட்பம்(catapult)
எனப்படும் ஒரு உத்தியை பயன்படுத்தி மேலே கிளப்பினார்கள்.

கப்பல் மேற்தளத்தில் உள்புதைந்த வாறு ஒரு பிஸ்டன் போன்ற அமைப்பு இருக்கும் அதனுடன் விமானத்தின் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் ,அந்த பிஸ்டன் மிகவேகமா முன் செல்லும் அதனுடன் இனைந்த விமானமும் முன் எடுத்து செல்லப்படும் , விசையுடன் உந்தி தள்ளிவிட்டு இணைப்பு விடுவித்துக்கொள்ளும்.

இதிலும் நவினமாக லீனியர் மோட்டார் இழுவை என்ற உத்தியும் பயன்படுகிறது ,இதன் அடிப்படையில் தான் புல்லட் டிரெயின்கள் வேகமாக இயங்குகிறது.

இது போன்ற முறைகள் இல்லாமல் சில சிறிய ராக்கெட்டுகளை விமானத்தின் பக்கவாட்டில் பொருத்தி குறைந்த தூரத்திலும் மேல கிளப்புவார்கள்(RATO = rocket assisted take off). இத்தகைய ராக்கெட்டுகளுக்கு பூஸ்டர் ராக்கெட் என்பார்கள்.
(ராக்கெட் உதவியுடன் மேலெழும்பும் விமானம்!)

அப்துல்கலாம் இந்திய விமானப்படைக்காக இந்தியாவிலேயே பூஸ்டர் ராககெட்டுகளை வடிவமைத்ததில் ஈடுபட்டவர். பின்னாளில் அந்த பூஸ்டர் ராக்கெட்டுகள் தான் அக்னி ஏவுகணைகளாக மேம்படுத்தப்பட்டது. அக்னி சிறகுகள் புத்தகத்தில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளார் கலாம்.

இதே போன்று ஜெட் உதவியுடன்


விமாங்கள் மேலே கிளப்புவதும் உண்டு. (JATO = jet assisted take off)

இது சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட போர் விமானங்களை குறைந்த தூரத்தில் மேலே கிளப்புவது . ஆனால் இது போன்று ஓடுபாதையே இல்லாத இடத்திலும் மேலே கிளம்பும் வகையில் வடிமைக்கப்பட்ட சிறப்பு விமானங்களும் உள்ளது அவை வெர்டிகலாக மேலே கிளம்பும் ஹெலிகாப்டர்கள் போன்று, அவற்றின் மூக்கிலும் பெரிய புரொபெல்லர்கள் இருக்கும்.

மின்காந்த சக்தி கொண்டு விமானத்தை செலுத்தும் முறை ஒன்று ஆய்வில் உள்ளது , பரிசோதனைகள் வெற்றி அடைந்தால் அம்முறையில் போர் விமானங்கள் குறைந்த தூரத்தில் மேல் கிளம்பும்!

Thursday, July 12, 2007

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன், கம்பியூட்டர் நு தான் பொறக்குறாங்க இப்போ, எல்லாத்துக்கும் மின்சாரம் வேணுமே, அரசு இலவச மின்சாரம் தருமா? அதுக்கு எங்கே போகும், ஆனால் கடல் தரும் மின்சாரம் அதுவும் இலவசமா, இது ஒரு மின்சார கனவு இல்லை , உண்மை!

பொதுவா மின்சாரம் , அனல் ,புனல்( எண்ணை ஊத்துற புனல் இல்லிங்கோ), அணு மின்சாரம் எனத்தான் தயாரிக்கப்படுகிறது , இவைகளால் பல சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் , தற்போது மரபு சாரா மின் உற்பத்தி பக்கம் அரசாங்கம் திரும்பியுள்ளது.

அப்படி மரபு சார மின்சார தயாரிப்புகளில்,

காற்றாலை,
சூரிய சக்தி ,
புவி வெப்ப சக்தி ,
கடல் அலை மின்சாரம் என தயரிக்கப்படுகிறது.

இப்பொ அலை அடிச்சா ஷாக் அடிக்கும் மின்சாரம் எப்படினு வருதுனு லேசா பார்ப்போம்!

கடலும் ,ஆறும் சந்திக்கும் இடங்கள் , அல்லது கடலை ஒட்டியுள்ள கடல் நீர் ஏரிகள்(லகூன்)
ஆகியவற்றில் ஒரு தடுப்பணைக்கட்டுவார்கள் அதில் ஒரு வாய்க்கால்,அல்லது குழாய்களை அமைத்து அதனுடன் டர்பைன் பொருத்தி அதனைக்கொண்டு மினுற்பத்தி செய்வார்கள்.இதனல் சில சுற்று சூழல் பாதிப்பு உண்டு , கழிமுகஙளில் வரும் பறவைகள் ,மற்றும் அது சார்ந்த உயிர் மண்டலம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க கடலில் அலை மின்சார உற்பத்தி மைங்களை தற்போது அமைக்கிறார்கள்.

நடுக்கடலில் தூண்களை அமைத்து அதனுடன் டர்பைன் மற்றும் ஜெனெரேட்டர்கள் பொருத்தி நீர் அடி நீரோட்டத்தின் விசையை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள், இதிலும் ஒரு மேம்பாடு செய்து நீரில் மூழ்கி இருக்கும் டர்பைன்களும் அமைக்கிறார்கள்.



நல்ல கடல் அடி நீரோட்டம் ,அலையடிக்கும் இடங்களில் மிக பெரிய அளவில் மின்னுற்பத்தி செய்யலாம்.

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தி மாறுபாடுகளினால் அலை உற்பத்தி ஆகிறது எனவே ஒரு முறை அமைத்து விட்டால் காலா காலத்திற்கும் இலவச மின்சாரம் தான்!

என் கடல் நிறைவதில்லை!

மழைக்காலங்களில்

குளங்கள் நிரம்பி வழிகின்றது

ஏரிகள் நிரம்பிவழிகின்றது !

ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன

எல்லா மழைகாலங்களிலும்

கடல் மட்டும்

காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்

பேராவலுடன் பெற்றுக்கொள்ள!

நானும் அப்படித்தான்!

அன்றும் இன்றும்!

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் - அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் - பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் - டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் - சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் - டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் - எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் - உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் - பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் - அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் - முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் - ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் - பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் - ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் - டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் - மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் - வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் - என்.எஸ்.கே சாலை

உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

Wednesday, July 11, 2007

பெயரின் மறுபக்கம்!

1)P.T.உஷா - "பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் ".உஷா

2)S.P.பால சுப்ரமணியம் - " ஷ்ரிபதி பண்டித ராயுல ".பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- "கட்டசேரி ஜோசப்". ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் - "அல்லா ரக்கா. ரஹ்மான்" (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி - மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ - நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் - "பிரதிவாதி பயங்கரம் "ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் - "கோபால ரத்னம்" சுப்ரமணியன்

9)பாரதி ராஜா - P.சின்னசாமி

10)K.பாலசந்தர் - கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி - கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் - "நந்த மூரி தாரக".ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் - "சாமர்லா வெங்கட்ட" ரங்கா ராவ்

14)T.R.பாப்பா - சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி - "லூர்து மாரி" ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா - செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா - மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் - கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் - வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் - சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் - கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

Monday, July 09, 2007

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:

இன்னாள் - முன்னால்

1)பழனி - திருஆவினன் குடி

2)திருசெந்தூர் - திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை - பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை - செருத்தணிகை

5)மதுரை - மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு - செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி - பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் - ஆருக் காடு!

9)சோளிங்கர் - சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை - நாலுகோட்டை

11)சிதம்பரம் - தில்லை

12)தருமபுரி - தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் - நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை - திரு நல்லுர்

15)எக்மோர் - எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை - சின்ன தறிப் பேட்டை .

17) கோடம்பாக்கம் - கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி - திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் - பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் - குண்சீல நல்லுர் (அ) தர்மபுரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

Saturday, July 07, 2007

புறக்கணிப்பின் வலி

வெயிலில் நிற்கும்

மரங்கள் தரும்

நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!

நானோ நிழலை புறக்கணித்து

வெயிலில் நடக்கிறேன்,

எனக்கென துணையாய்

பின் தொடரும்

என் நிழலை புறக்கணிக்க

என்னாலாகாது!

எனக்கு தெரிந்த

புறக்கணிப்பின் வலி

என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!

பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

Friday, July 06, 2007

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.

நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு "பாட்ஷா"னு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!

இப்படி அதிகம் வெளியில் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..

சக்ரவர்த்தி அசோகர்!


சந்திரகுப்த மெளரியர்

மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகாரின் தலை நகரம், பாட்னா என அழைக்கப்படுகிறது.இவர் இடையர் குலம் , அல்லது சூத்திரர் என சிலர் கூறுவர், மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.

சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சிரவண பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் /மானின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).

பிந்து சாரர் திருநெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.

பிந்து சாரருக்கு பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு. திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்ரவர்த்தி அசோகர்!(B.c 271 - 232)

அசோகர் பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.

அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் , சங்கமிதிரையும் ,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.

சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.

கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதையா பிகார்,. கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறி, புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.

அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் ,குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவில்லை எனவே வஞ்சகமாக அவரை வெளினாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்கள் மூலம் கண்களை குருடாக்கி விட்டார் எனவும் ஒரு சில நூல்களில் உள்ளது.

கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்துள்ளார். அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் எளிமையாக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துனபமானதாகவும், தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை மெய்ப்பித்தார் இல்லை எனில் இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திலேயே சாராநாத் ஸ்தூபி போன்றவை அகழ்வராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. அது வரையில் அசோகருக்கான வரலாறே இந்தியாவில் இல்லை, வாய்மொழி தகவல்களும், நாட்டுப்புற பாடல்களும் மட்டுமே இருந்தன.

அசோகருக்கு பினனர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படை வீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் மவுரிய அரசர்கள் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார். அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

பின் குறிப்பு:-

அசோகர் என்றால் சாலை ஓரங்களில் மரம் நட்டார், குளம் வெட்டினார் , சத்திரம் கட்டினார் என்பது வரைதான் பள்ளிகளில் சொல்கிறார்கள் என்பதால் என்னால் முடிந்த ஒரு சுருக்கமான அசோக சரித்திரம். பிழை இருப்பின் திருத்தம் தரலாம்!

Thursday, June 21, 2007

இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!

கேள்விக்குறி!

எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார விகடனில் மீதமிருக்கும் வலி என்ற பெயரில் அவரது கட்டுரை வந்துள்ளது அதிலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதி!

எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பர் கூறியதாக வந்துள்ள பகுதி!

என் நண்பரும் இசை விமர்சகருமான ஷாஜியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சொன்னார்...எம்.எஸ்.விச்வநாதன் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்! தென்னிந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்சம் பேர் அவர் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள்.அவ்வளவு பெரிய இசையமேதைக்கு இது வரை மிகப்பெரிய அங்கீகாரம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. திரையிசை சாதனை மட்டுமின்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை மைத்தது போன்ற எண்ணிக்கையற்ற சாதனைகள் செய்துள்ள மனிதரையே நாம் தொலைவில் வைத்துதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

மக்களின் மனதில் நீங்காத இடம் கிடைத்துள்ள அங்கீகாரம் தவிர வேறு விதங்களில் கெளரவப்படுத்தவோ,சிறப்பு செய்யவோ நாம் மறந்து போனோம். அது சரி அவராக வாய்விட்டுக் கேட்கவா முடியும்? என்றார்.

பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கலாம்.ஆனால செய்த பணிக்காக மரியாதையை எப்படி வாய்விட்டுக் கேட்பது?

நம் வாழ்வுடன் ஒன்றுகலந்து விட்ட கலைஞர்களை,நம் மொழியும் வாழ்வும் உயர்வு பெறப் பாடுபட்ட அறிஞர்களை,வல்லுனர்களை, மூதோர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்த வேண்டியது நமது அடிப்படைச் செயல்பாடு அல்லவா?

எவ்வளவு அலட்சியமாக கடந்த காலத்தையும் , மனிதர்களையும் நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் சற்றே பயமாகவும் , வெறுப்பாகவும் உள்ளது இந்த போக்கு எது வரை செல்லும் நாட்டையும் மறக்கும் வரை செல்லுமோ?

இன்று உலக இசை நாள் , எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ....என்ற பாடல் தான் மனதில் கேட்கிறது.கண்ண தாசன் மற்றும் எம்.எஸ்.வி இணைந்தால் இனிமையான பாடல்கள் தான் , அதை இசை அமைத்தவரோ எங்கேயோ மறக்கடிக்கப்பட்டு விட்டார். எம்.எஸ்.விக்கு பின்னால் வந்த கற்றுக்குட்டி இசையமைப்பளர்கள் எல்லாம் பத்மஷ்ரி விருதுகள் வாங்கியுள்ளார்கள் இவரை மட்டும் கவனிக்காமல் விட்டவர்களை என்ன செய்வது என்பது தான் எனது கேள்விக்குறி?

Friday, June 15, 2007

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!





தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!

-தொடரும்.

சென்னையில் ஒரு மழைக்காலம்!

சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.

ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.

மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)

மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!

மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.

சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, "ஆக்டினோமைசெட்ஸ்" என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)

Wednesday, June 13, 2007

விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.

பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம்!

அப்போதைய தமிழக ஆட்சி முறை பாளையம் அல்லது சமஸ்தானம் என்ற பெயரில் நடைப்பெற்று வந்தது.இந்த பாளையக்காரர் முறை தமிழக முறை அல்ல அதனை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவ ராயர் ஆவார். மூவேந்தர் காலத்திற்கு பிறகு தமிழகம் விஜய நகர பேரரசின் கீழ் வந்தது,அப்போது தமிழகத்தை நிர்வகிக்க கிருஷ்ண தேவ ராயரிடம் மெய்க்காப்பாளர்கள்,மற்றும் அரண்மனை வாயில் காப்போன் என பணிபுரிந்த 3 பேரை நாயக்கர்களாக தமிழகத்திற்கு அனுப்பினர்.அவர்களை மதுரை நாயக்கர்கள்,தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் என்பர், புகழ் பெற்ற திருமலை நாயக்கர், ராணி மங்கம்மா எல்லாம இவர்கள் வழி வந்தோரே. ,அந்த நாயக்கர்களின் கீழ் வரி வசூலிக்கவும் நிர்வாகம் பண்ணவும் உருவாக்கப்பட்டது தான் பாளையம் முறை.

ஒரு பாளையம் என்பது 96 கிராமங்களை உள்ளடக்கியது. அப்படி ஒரு பாளையத்தை தான் வீர பாண்டிய கட்ட பொம்மன் பஞ்சாலம் குறிச்சியை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார்.தந்தை பெயர் ஜக வீர பாண்டியன்.அவர் பால் ராஜு என்ற பாளையக்காரர் வழி வந்தவர் .

வீர பாண்டியனின் இயற் பெயர் கருத்தப் பாண்டி என்பதே. இரண்டு சகோதரர்கள் சிவத்தையா என்கிற ஊமைத்துரை,மற்றும் துரை சிங்கம் ஆகியோர்.இரண்டு சகோதரிகள் ஈஸ்வர வடிவு மற்றும் துரைக்கண்ணு.

தென் மாவட்ட பாளையக்காரர்கள் அனைவரும் மதுரை நாயக்கர்களுக்கு வரி செலுத்த கடமை பட்டவர்கள் பின்னர் முகலாய ஆட்சியின் போது ஆர்க்காடு நவாப்புக்கு வரி செலுதினார்கள்.அப்போதைய ஆர்க்காடு நவாப் முகமது அலி என்பவர் வெள்ளையரிடம் கடன் வாங்கியதால் வரி வசுலிக்கும் உரிமையை தந்து விட்டார்.

வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் ஏன் வரி வசூலிக்கும் உரிமையை வாங்க வேண்டும் , காரணம் வெள்ளையர்களின் அனைத்து வியாபரங்களும் பலத்த நஷ்டம் அடைந்து விட்டது , வெள்ளையர்களின் துணிகளை வாங்க அப்போது யாரும் முன் வர வில்லை நம் மக்கள் மேல் சட்டை அணிவதில்லை , குழாய் மாட்டுவதில்லை பின்னர் அந்த துணிகளை எதற்கு வாங்கப் போகிறார்கள்.இங்கிலாந்தில் இருந்து லாபம் ஈட்ட வில்லை எனில் கம்பெனியை இழுத்து மூடி விட்டு வரவும் என இறுதி ஓலை வந்து விட்டது.எனவே வேறு வழி இல்லாமல் வரி வசூலித்து லாபம் ஈட்ட தலைப்பட்டார்கள்.

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.

இன்னும் சொல்ல போனால் வெள்ளையருடன் இனக்கமனவராக இருந்தவர் தான் கட்ட பொம்மனின் தந்தை ஜக வீரபாண்டியன், பூலித்தேவன் முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்த போது வெள்ளையருக்கு ஆதரவாக படை வீரர்களை கொடுத்து உதவியுள்ளார் மேலும் பூலித்தேவன் போரில் தோற்று தலை மறைவாக இருந்த காலத்தில் அவரை தேட திருவிதாங்கூர் ராஜவுடன் சேர்ந்து வெள்ளயருக்கு உதவியுள்ளார், அதாவது எட்டையப்பன் செய்தது போன்று.

இதனால் அப்போது தேவர்களை தலைவராக கொண்ட பாளையங்களும் , சமஸ்தானங்களும் தெலுங்கு பேசும் நாயக்கர் வழி வந்த கட்ட பொம்மனின் தந்தை மீது வெறுப்புற்றிருந்தர் இதையே பின்னாளில் கட்ட பொம்மன் வெள்ளையரை எதிர்த்த போது பிரித்தாலும் சூழ்சியின் மூலம் பயண்ப்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

அப்போதைய பாளையங்களில் மூன்று வகையான படை வீரர்கள் இருந்தார்கள்,

அமரம் சேவகம் -பரம்பரை நில உரிமை பெர்ற்று அதிலிருந்து வரும் வருமானத்திற்கு பதிலாக படையில் பணிபுரிவர்.

கட்டுபுடி சேவகம் - பரம்பரை உரிமை இல்லாமல் நிலம் பெறு சேவகம் புரிவர்.

கூலி சேவகம் அல்லது படை - போர்க்காலத்தில் மட்டும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்வர், மற்றக் காலங்களில் இவர்கள் வழிப்பறி ,கன்னம் வைத்து கொள்ளை அடித்து வாழ்வார்கள்.இவர்களின் சேவைக்கு பரிசாக கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் விடுவார் பாளையத்தின் தலைவர் (நம்பித்தான் ஆக வேண்டும !) ஆனால் ஒரு நிபந்தனை உண்டு உள்ளூரில் அதாவது அதே பாளையத்தில் கொள்ளை அடிக்காமல் வெளியில் போய் கொள்ளை அடிக்க வேண்டும்.

இந்த மூன்று வகையான போர்ப்படை சேவைகளை செய்தது முக்குலத்தோர் சமூக மக்களே. இப்படிப் பட்ட படைகளை கொண்டிருந்தால் தான் கட்ட பொம்மனை கொள்ளைக்காரன் எனவும் வெள்ளையர்கள் குற்றம் சாட்டினர். திரைப்படத்தில் ஏன் வரிக்கொடுக்க வேண்டும் என்று வசனம் பேசினாலும் உண்மையில் வரி செலுத்த கட்ட பொம்மன் தயாராகவே இருந்தார். அருகாமை பாளையக்காரர்கள் கட்டபொம்மனை வெறுப்பதும், மேல் உதவிக்கு யாரும் வர மாட்டர்கள் என்பதும் தெரிய வந்ததால் ஒரே அடியாக பாஞ்சாலக்குறிச்சியை தங்க்கள் வசம் படுத்த படை எடுத்து சாதித்துக்கொண்டார்கள்.

எட்டையப்பனுடன் எல்லை தகராறு, தேவர் சமூகத்தினை சேர்ந்த பூலித்தேவனை பிடிக்க கட்ட பொம்மனின் தந்தை உதவியதால் ,பூலித்தேவனின் உறவினரான புதுக்கோட்டை சமஸ்தான ராஜா விஜய ரகுனாத தொண்டை மானுக்கும் வெறுப்பு எனவே அனைத்து வகையிலும் கட்ட பொம்மன் தனிமை படுத்தப் பட்டது தோல்விக்கு வழி வகுத்தது.

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.

Tuesday, June 12, 2007

வலைப்பதிவுலகின் விக்கிரமாதித்தன்!



ஹலோ யாரு அது?....

கோன் ஹை?...

மீரு எவரண்டி?...

who are you?...
...

...)))<--)))<--)))<---."வவ்வால்"-->(((-->(((-->((( ...

வவ்வாலா..ஆஆ....ஆஹ்... வந்துடான்யா .....வந்துட்டான்...

பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல .... அதான் வவ்வால்...

(எந்த அதிர்வையும் நீங்கள் உணரவில்லை என்றால் உங்களுக்கு பக்கவாதம் , முடக்கு வாதம் அல்லது அல்ஸீமர் என நினைத்துக்கொள்ள வாய்ப்புண்டு)

போதும் அடங்கு ராசா...!

தலைமறைவா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும் இல்லாமல் இப்போ வந்து ஓவரா பந்தா விட்டா தர்ம அடிதான் ஜாக்கிரதை!

இந்த வலைப்பதிவுகள் பக்கம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டபடியால் மக்கள் அன்புடன் முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை இணைய உலகின் சுற்று சுவர்களில் ஒட்டி வைத்து துக்கம் கொண்டாடி அல்லது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவார்கள் எனவே அப்படி பட்ட ஒரு துன்பியல் சம்பவம் நடக்காமல் தடுக்கும் வண்ணம் மீண்டும் எனது குளிர் மற்றும் கோடை கால உறக்கம் கலைத்து மலை மீது இருந்து இறங்கி வந்து விட்டேன்.

நான் வருகையிலே என்னை வரவேற்க எங்கும் வண்ண பூ மழை பொழியவில்லை ஒரே அனல் காற்று தான் அடித்தது சென்னை மாநகர வீதிகளிலும் வலைபதிவு நெடுஞ்சாலையிலும் எப்போதும் மக்கள் சூடும் சுரணையுமாகவே இருக்கிறார்கள் சந்தோஷம்!

வலைப்பதிவுகளின் உள்ளடக்கதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இந்த இடைப்பட்டக் காலத்தில் ஆனால் பல புற தோற்ற மற்றும் எண்ணிக்கை அளவிலான முன்னேற்றம்/ மாற்றம் கண்கூடாக தெரிகிறது , நிறைய புது பதிவுகள், பல புதிய கூட்டணிகள், மாற்றம் ஒன்றே மாறாதது எனவே மாற்றங்களை வரவேற்போம்!

ஆயிரம் பதிவுகள் போட்ட அபூர்வ சிந்தாமணியாக ஒரு புதிய வலைப்பதிவைக் கண்டு உள்ளம் துணுக்குற்றது அது பொன்ஸ் மற்றும் குழுவினரின் கைங்கர்யம் என்பதை கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன்!

இப்படி சில பல மாற்றங்களுடன் தமிழ்வலைப்பதிவுலகம் தளராது பீடு நடைப்போட்டு வருவதை காணும் பொழுது என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது!

ஊரை விட்டு ஓடிப்போய் திரும்பி வந்த" வெயில் பசுபதி" போல சொக்காய் எல்லாம் கிழித்துக்கொண்டு வந்துள்ளேன் எனவே பாசக்கார வலைப்பதிவு மக்கள் எல்லாம் வழக்கம் போல ஆதரவு தந்து என்னைப் போஷிக்க வேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறேன்!

அன்றாட வாழ்கையின் கோரப்பிடிகள் வேதாளம் போல் என்னை பிடித்து அழுத்திக்கொண்டு இருப்பினும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் வந்து எனது வலைப்பதிவு கடமையை செய்ய தலைப்பட்டுள்ளேன்! உஜ்ஜைனியில் உள்ள காளியிடம் சாகா வரம் பெற்றும் நாடாறு மாதம் காடாறு மாதம் என வாழ நிர்பந்திக்கப்பட்ட விக்கிரமாதித்தன் போல!.

இப்படிக்கு

என்றும் மனம் தளராத
உங்கள் அன்பன்
வவ்வால்.

விக்கிரமாதித்தன் பற்றிய ஒரு வரலாற்று பின் குறிப்பு:-

அம்புலி மாமா புகழ் விக்கிரமாத்தித்தனுக்கு வரலாற்று முகமும் உண்டு அதனையும் பார்ப்போம்.

விக்கிரமாதித்தன் சரித்திர புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் பேரன் ஆவான்.உஜ்ஜைனியை தலை நகராகக்கொண்டு ஆட்சி பரிபாலணம் செய்தவன்!

விக்கிரமாதித்தன் தனது தாத்தா புலிகேசிக்கு பல்லவன் மகேந்திரன் மற்றும் அவனது மகன் நரசிம்மவர்மனால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தமிழகத்தின் மீது படை எடுத்து வந்துள்ளான். போரின் முதல் கட்டத்தில் மணிமங்கலம்(தாம்பரம் அருகேயுள்ளது) , மற்றும் சோலிங்கர் ( சோழசிங்கபுரம் என்பதே சோலிங்கர் என மறுவியது,ஆர்க்காடு அருகேயுள்ளது) அருகே பல்லவர்களை வென்று புறமுதுகிட வைத்தான். மேலும் முழு தமிழகத்தையும் வெல்லும் அவாவில் பாண்டியர்களையும் வெல்ல மதுரை வரை சென்றான்,அக்காலக்கட்டத்தில் சோழ பேரரசு கிடையாது.

அங்கு தான் விதி சிரித்தது விக்கிரமாதித்தனைப் பார்த்து .பாண்டிய மன்னன் கோச்சடை என்பவன(தாய்க்குலங்கள் போடும் இரட்டை ,ஒற்றை சடை அல்ல இது ஒரு பெயர்) நெல்வேலி என்னுமிடத்தில் தீரத்துடன் போரிட்டு விக்கிரமாதித்தனை வென்றான் ,அதனால் கோச்சடைக்கு ரணதீரன் என்ற பட்டம் கிடைத்தது.பின்னர் கோச்சடை ரணதீரன் என்றே அழைக்கப்பட்டான். விக்கிரமாதித்தனுக்கு ரணதீரன்,ரண ரஸிகா என்ற பட்டப்பெயர்கள் உண்டு.

மதுரையிலிருந்து உதைவாங்கி கொண்டு வந்தவனை நரசிம்மன் மீண்டும் பெரும் படை திரட்டிக்கொண்டு வழியில் எதிர்க்கொண்டான் இம்முறை பல்லவனுக்கே ஜெயம்.விக்கிரமாதித்தனை ஓட ஓட விரட்டிக்கொண்டு உஜ்ஜைனி வரை நரசிம்மன் சென்றதாக சரித்திரம் கூறுகிறது.இதனால் நரசிம்மவர்மனுக்கு ரணஜெயன் என்ற பட்டம் கிடைத்தது.

Thursday, October 19, 2006

விடுகதை!

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!
விடை
நாளை மறுநாள்
உயிரோடிருந்தால் தெரியும்!
வாழ்க்கை என்பது
புதுக்கதை!
வாசிக்க வாழ்நாள் தேவை!

இதயம் விடுதலையாகுமோ!

தேன்கூடு அக்டோபர் மாத போட்டிக்கான ஆக்கம்(இப்படிலாம் வேற விளம்பரம் போடனுமா??!!)


மொட்டு மலர்ந்தால்
மறைந்திருக்கும்
மணம் விடுதலையாகும்!
மனம் மலர்ந்தால்
கட்டவிழும்
கவிதை விடுதலையாகும்!
கனவு மலர்ந்தால்
மனக்கவலை விடுதலையாகும்!
ஆனால்
காதல் மலர்ந்தால் மட்டும்
இதயம் சிறைப்படுவதேன்!